முருகன் வீட்டுக்கு வரும்போது ஹரீஷ் தூங்கி இருந்தான். அன்று கடை மூட நேரமாகிவிட்டது. காலையில் ஒரு பல்சரை டெலிவரி கொடுக்க வேண்டி இருந்தது. திடீரென்று இடையில் வழக்கமான ஓட்டை ஸ்கூட்டியுடன் வந்த முதலாளி நண்பரால் பல்சர் ரெடி செய்வதில் லேட் ஆகிவிட்டது. நாளை காலை கஸ்டமர் வந்து திட்டினால், அவர் எதிரில், ஒன்றுமே தெரியாத மாதிரி ஓனர் என்னைத் தான் கத்துவார். "உங்க ஃப்ரெண்டு வண்டி சரி பண்ணதால தானே இது சரி பண்ண முடியல" என்று சொல்லவா முடியும்?

உடம்பெல்லாம் நச நசவென்று இருந்தது. க்ரீஸை என்ன தேய்த்துக் கழுவினாலும், ரேகையோடு ஒட்டிக் கொண்ட மாதிரி கையோடு ஒட்டிக் கொண்டு விட்டது. அந்த பதினோரு மணி இரவிலும் தண்ணீர் வெந்நீர் போல் சுட்டது. உடம்பெல்லாம் நன்றாய்த் தேய்த்துக் குளித்தான். "தனம்" என்றதும், துண்டை நீட்டினாள். நன்றாகத் துவட்டிக் கொண்டு கைலிக்கு மாறினான். வாழ்க்கையில் என்ன கஷ்டம் இருந்தாலும், குளித்து விட்டு, வெறும் கைலியில் சாப்பாட்டுக்கு அமரும் போது அந்த சொற்ப நேரம் மனதுக்கு இதமாய்த் தான் இருக்கிறது. ஒரு நாள் முடிந்த ஆசுவாசம். வயித்துப்பாட்டுக்கு ஒரு பதில்.

இம்புட்டு நேரம் அப்பா எப்போம்மா வருவாரு? எப்போம்மா வருவாரு னு கேட்டுக் கேட்டு களைச்சி போயித் தூங்கிட்டான்.

ம்ம்...சாப்டானா?

எங்க? நாலு வாய் வாங்குறான். எல்லாம் விளையாட்டு புத்தி...நீங்க ஏன் இவ்வளவு நேரம்?

ஒரு வண்டி நாளைக்குக் காலையில குடுக்கனும். நடுவுல ஓனர் ஃப்ரெண்டு குடைச்சல்.

ஓனர் பணம் கொடுத்தாரா?

அவர் தானே, புள்ளைக்குப் பொறந்தாள்னதும் குடுத்துட்டுத் தான் மறுவேலை பார்ப்பாரு. நீ வேற!

ஐய்யோ, அப்புறம் என்ன பண்ணப் போறீங்க? அவன் பெர்த்டே, கேக் னு 24 மணி நேரமும் அதே பேச்சாத் தானே இருக்கான்?

ம்ம்..நீ சாரதா அம்மாகிட்ட கேக்கலையா?

நான் தான் சொன்னேன்ல? ஏற்கனவே அவங்களுக்கு ரெண்டாயிரம் ரூவா பாக்கி. ஐநூறு ஐநூறா கழிச்சிட்டுத் தான் சம்பளமே வாங்குறேன். இதுல புதுக் கடன எங்க கேக்க? அப்படியே போயிடும்மான்றுவாங்க.

ம்ம்ம்ம்..

காலையில அவனுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? பாவம் அவன்.

முருகன் சாதம் தொண்டைக்குழியில் இறங்க மகனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று இரவு நெடுநேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். கனவில் ஒரு ஓட்டை ஸ்கூட்டி ஒரு கேக்கின் மேல் ஏறிச் சென்றது.

காலையில் ஹரீஷ் பாயை விட்டு எழுந்திருக்கும்போதே, அப்பாவைப் பார்த்து, "அப்பா, கேக் சொல்லிட்டியாப்பா?" என்றான். முருகன் அவனைப் பார்த்து சிரித்தான். அவனை
ஆசையாய் தூக்கி மடியில் வைத்துக் கொண்டான்.

அப்பா சொல்லுப்பா, லயன் கிங் போட்டோ கேக் தானே சொல்லி இருக்கே?

லயன் எல்லாம் வேணாம்டா, அப்புறம் வீட்டுக்கு கொண்டு வந்து பாத்தா, எல்லா கேக்கையும் லயனே சாப்ட்டுருக்கும்.

அப்பா போப்பா...லயன் எல்லாம் மானைத் தான் சாப்பிடும். கேக் எல்லாம் சாப்பிடாது?

அம்மா, பாரும்மா அப்பாவை...

சரி சரி, லயன் கிங் கேக் சொல்லிடுவோம். அப்புறம்?

அப்புறம் அதுல HAPPY BIRTHDAY HARISH M, I J ன்னு எழுதி இருக்கணும்.

ஸ்கூல் பேர் எல்லாம் வேணாமா?

நீ சின்ன கேக் தானே வாங்குவ? எடம் பத்தாதே!!

அவன் பேசுவதை ரசித்து முத்தம் கொடுத்தான்.

அப்புறம் கேக் கடையில 6 நம்பர் கேண்டில் ஒன்னு வாங்கு. அது கேக் மேல பொருத்தி வச்சு, நீங்க happy birthday பாடனும், நான் அதை ஹு..ன்னு ஊதி அனைச்சதும், நீங்க ரெண்டு பேரும் க்ளாப் பண்ணனும்.

இதெல்லாம் உனக்கு யாருடா சொல்றது?

பாலு சொன்னான். அவங்க வீட்ல அவனுக்குப் பண்ணாங்க. அப்புறம் படத்துல பாத்துருக்கேன்.

அவங்க அப்பா எங்க வேலை பாக்குறாரு?

அம்மா பாரும்மா...அப்பாவ...

சரி போயி ஸ்கூலுக்கு ரெடி ஆவு. சாய்ந்திரம் கேக் வெட்டலாம்.

இன்னைக்கி சாய்ந்திரம் கரெக்டா கேக் கொண்டு வந்துரனும்? என்ன என்று எழுந்தான்.

முருகன், முகத்தில் மட்டுமே சிரிப்பு இருந்தது.

மெக்கானிக் ஷாப் வரும் வழியில் ஒரு கேக் கடையில் லயன் கிங் போட்டோ கேக் எவ்வளவு என்று கேட்டான். 1 KG 900 ரூபாய் ஆகும் என்று அந்தக் கடைக்காரன் சொன்னான். அவனுக்குத் திக்கென்றது.

அன்று முருகனுக்கு வேலையே ஓடவில்லை. ஓனரிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். ஒரு ஐநூறு ரூபாயாவது கொடுக்கச் சொன்னான். இது வரை வாங்கிய கடனுக்கு நியாயமாய் அவனுக்கு சம்பளமே தரக்கூடாது என்று அவர் வாதாடினார்.

அன்று சாய்ந்திரம் 5 மணிக்கே கிளம்பிவிட்டான். ஹரீஷ் எப்போதும் இது வேண்டும், அது வேண்டும் என்று அடம் பிடிப்பதில்லை. இந்த முறை ஏனோ அவனுக்கு தன் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாட வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. அரசுப் பள்ளியில் படித்தாலும் குழந்தைகள் பள்ளியில் பகிர்ந்து கொள்ளும் சில விஷயங்கள் பெற்றோர்களுக்கு பெரும் பிரச்சனை ஆகி விடுகிறது. சொல்லிப் புரிய வைக்கவும் முடியாமல், அவர்கள் கேட்பதைச் செய்யவும் முடியாமல் நெருப்பில் நிற்கும் வேதனை. அவன் எதையும் இவ்வளவு தூரம் வம்பு செய்து அவன் பார்த்ததில்லை. முருகன் தன் பையை தொட்டுப் பார்த்தான். வெறும் ஐம்பது ரூபாய் தான் இருந்தது. அவன் டீக் கடையில் உட்கார்ந்து அவனுக்குத் தெரிந்த நண்பர்களுக்கு எல்லாம் ஃபோன் போட்டான். பேலன்ஸ் தீர்ந்தது தான் மிச்சம். அவனுக்கு ஹரீஷின் ஏமாந்த முகம் நினைவுக்கு வந்து மேலும் கஷ்டப்படுத்தியது.

சுற்றிலும் வெவ்வேறு மனிதர்கள். பேசிச் சிரித்துக் கொண்டும், செல்லச் சண்டை போட்டுக் கொண்டும், தீர்க்கமாய் வாதாடிக் கொண்டும், வித விதமாய், யாருக்குமே அவன் ஒரு பொருட்டில்லை. அவனுக்கு இருக்கும் பிரச்சனையைப் பற்றி யாருக்கும் அறிதல் இல்லை, கவலை இல்லை. அவன் அவர்கள் உலகத்தில் தான் இருந்தான். ஆனால் இல்லை. உலகம் அவன் ஒருவனை மட்டும் தனியாய் நிறுத்தி விட்டு, சுற்றிக் கொண்டிருப்பது போல் ஒரு பிரமை. அவனுக்குப் பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது.

மணி ஆறு. முருகன் தன் கால் போன போக்கில் நடந்தான். வழியில் ஒரு பெரிய கேக் கடை. உள்ளே நுழைந்தான். ஏசியின் குளுமை எரிச்சலை அதிகரித்தது. வரிசையாய் கேக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பையன் கேட்ட அந்த லயன் கிங் போட்டோ கேக் இருந்தது. அவன் அதை ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தான். கடையில் இருந்த ஒரு வடநாட்டு இளைஞன் என்னா வேனும் சார் என்றான்.
இந்த கேக் எவ்வளவு?

450 சார்.

காலையில ஒரு கடையில 900 சொன்னாங்க?!

அது ஒரு கிலோ சார். இது அரை கிலோ.

ஓ..

பேக் பண்ணவா சார்?

அவன் கேக்கையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சார்...

சில விநாடிகளில், அவன் கண்களில் நீர் திரண்டது. கண்ணீர் மெல்ல கேக்கை மறைத்தது.

அதைப் பார்த்த அவன்...

சார்..என்றான்.

முருகன் அவன் கண்ணாடிக்கு அந்தப் பக்கம் இருப்பதைக் கூட நினைக்காமல், அவன் காலில் விழுந்தான்.

தம்பி, என் புள்ளைக்கு இன்னைக்கிப் பொறந்தநாளு. இந்தக் கேக் வாங்க என்கிட்ட காசு இல்லை. என்று அழுதான்.

அவன் பதறிப் போய், வெளியே வந்தான். முருகன் இன்னும் கீழேயே கிடந்தான்.

சார், சார், எழுந்திருங்க சார், ப்ளீஸ் சார். சார். என்று எழுப்ப முயன்றான்.

"என்கிட்ட வெறும் அம்பது ரூபா தான் தம்பி இருக்கு. கொஞ்சம் உதவி பண்ணுங்க!" என்று அவனிடம் கை கூப்பினான்.

இந்தியாவின் ஏதோ ஒரு முனையில் இருந்து இங்கு வந்து அடிமை வாழ்க்கை வாழும் அவன் காலில் ஒருவன் விழுந்து கிடப்பதை அவனால் தாங்க முடியவில்லை.

அவன் நா தழுதழுக்க, "சார், நான் இங்கே வேல பாக்குறேன். ஓனர் வந்தா என்னைத் திட்டுவாரு, ப்ளீஸ், நீங்க போங்க சார்" என்றான்.

அப்போது கதவு கிரீச்சிட ஃபோன் பேசிக் கொண்டே ஓனர் உள்ளே வந்தார். அங்கு ஒரு வேண்டாத நாடகம் நடப்பதை உணர்ந்தார். சைகையில் பையனிடம் "என்ன?" என்றார்.

இல்ல கேக், காசு இல்ல..என்று திக்கித் திணறிப் பேசினான்.

ஓனர் முருகனை பார்க்காமல், "கெளப்பு, கெளப்பு" என்று சைகையில் சொல்லிவிட்டு உள்ளே போனார். அவன் முடியாமல் முருகனை எழுப்பினான். "சாரி சார்" என்றவனைப் பார்க்காமல், அவன் கேக்கையே பார்த்துக் கொண்டு வெளியே வந்தான்.

வெயில் தாழ்ந்த போதும், அதன் உஷ்ணம் ஏசியில் இருந்து வந்ததும் மேலும் உறைத்தது. தன் நிலை நொந்தபடி காலாற நடந்தான். எப்படி வீட்டுக்குப் போவது என்று அவனுக்குப் புரியவில்லை. அப்படியே எங்காவது தொலைந்து விட மாட்டோமா என்று தோன்றியது. எல்லாவற்றையும் மிக வேகமாய் கற்கும் இந்தக் காலக் குழந்தைகள் வறுமையை ஏன் கற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்? ஆசை பணக்காரர்களுக்கு மட்டும் பிறக்கக் கூடாதா? பிறகு ஏன்?.... அண்ணா, அண்ணா என்ற ஒரு குரல் அவன் சிந்தனையை தடை போட்டது.

அண்ணா...

திரும்பிப் பார்த்தால், அந்த வடநாட்டு இளைஞன் கையில் ஒரு ப்ளாஸ்டிக் பையில் கேக் டப்பாவுடன் நின்று கொண்டிருந்தான்.

முருகன் அவனைப் புரியாமல் பார்த்தான்.

"அண்ணா..இந்தாங்க நீங்க கேட்ட கேக். எங்க ஓனர் கஞ்சூஸ் சாலா..என் வைஃப்க்கு ஒரு சாடி வாங்க காசு வச்சுருந்தேன். பரவாயில்ல, அவளுக்கு பாத் மே. நீங்க இத வச்சிக்குங்க!"..என்று கேக் டப்பாவை அவன் கையில் திணித்தான்.

முருகன் நடப்பதையெல்லாம் நம்ப முடியாமல் அவனை ஒரு தேவதூதனைப் போல் உருவகித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கேக்கை கையில் வாங்கிக் கொண்டு அவனிடம்,

"நான் ஒன்னு செஞ்சா தப்பா நினைக்க மாட்டியே?"

என்று கேட்டுவிட்டு அவனை இறுக்கி அணைத்து ஒரு முத்தமிட்டான். சாலையில் போவோர், வருவோர் ஒரு கணம் நின்று பார்த்து, சிரித்து விட்டுப் போனார்கள். முருகன் கொஞ்ச நேரம் அவனைக் கட்டிக்கொண்டபடியே இருக்க, அந்த வடநாட்டு இளைஞன் அவன் சின்னக் கண்கள் இன்னும் சிறியதாக சிரித்துக் கொண்டிருந்தான்.


0 Responses