வேளச்சேரியிலிருந்து என் ஜாகையை மாற்றிக் கொண்டு மடிப்பாக்கத்திற்கு வந்து விளையாட்டாய் மூன்று மாத காலம் ஆகிவிட்டது! கடந்த ஒரு மாத காலமாய் புது இடத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். சரி எழுத ஒன்றும் கிடைக்காத போது இதைப் பற்றி ஜல்லி அடித்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்!

"பெயர் மறந்து போன" ப்ரோட்டீன்ஸ் [ப்ராய்லருக்கு கடைக்கு புது விதமான பெயர்], படையப்பா சலூன், சுனாமி ஸ்நாக்ஸ் எல்லாம் தாண்டி நடு ரோட்டில் படுத்திருக்கும், மாட்டு மந்தையின் மேல் ஏறாமல் நேராய் வந்தால் பஸ்சே இல்லாத மடிப்பாக்கம் பஸ் ஸ்டாண்டை ஒட்டி ஒரு சிதிலமடைந்த சிமிண்ட் சாலையில் நடந்தால் 5 நிமிடத்தில் என் ஜாகை!

வாழ்க்கை ஒவ்வொருவரையும் எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது! மதுரை திருமலை நாயக்கர் மஹால் 7 வது தெருவில் வசித்து வந்த என்னை ஒரு சுனாமி பேரலை போல் தாக்கி தூக்கி எறிந்ததில் நான் விழுந்தது நியு தில்லி கரோல் பாக். அங்கிருந்து சண்டிகரில் சில பல செக்டார்களை கடந்து பெங்களூர் திப்பசந்திராவில் குடி புகுந்து சென்னை வேளச்சேரியிலிருந்து தற்போதைக்கு மடிப்பாக்கத்தில் என்னை கொண்டு சேர்த்திருக்கிறது வாழ்க்கை! எப்படியோ அடித்துப் பிடித்து ஒரு சராசரி இந்தியனைப் போல் ஒரு பெரிய அபார்ட்மென்டில் ஒரு சிறிய வீட்டை வாங்கியாகிவிட்டது!! இனி மடிப்பாக்கம் தான் நிரந்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்! பார்க்கலாம்...

மடிப்பாக்கத்தில் இருப்பது ஏதோ மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை ஒட்டிய ஒரு அக்ரஹாரத்தில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுகிறது!! எங்கும் மடிசார் மாமிகளும், ஆங்கிலம் பேசும் மாமாக்களும் வியாபித்திருக்கிறார்கள்! எல்லா பிள்ளைகளும் அமேரிக்காவில் செட்டில் ஆகி விட, ஒரு பெரிய வீடு கட்டிக் கொண்டு கிருஷ்ணா ராமா என்று காலம் கழிக்கிறார்கள் பெரும்பாலோர்! ஏன்டா அம்பி, ஆத்துக்கு வரப்படாதா என்று என்னிடம் மாமிகள் யாராவது கேட்டால் ரொம்ப பவ்யமாய் "இல்லை மாமி, நேக்கு நீச்சல் தெரியாது, நான் பாத்ரூம்லையே ஸ்நானம் பண்ணிக்கிறேன்" என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்! என்ன மிஞ்சி மிஞ்சிப் போனால் போடா அசடு என்பார்களா? என்ன ஒன்று இன்னும் இள வயது மாமிகள் யாரும் என் கண்ணுக்கு சிக்கவில்லை...

மடிப்பாக்கம் பஞ்சாயத்தாரின் வசம் இருக்கிறது. அந்த ஆலமரத்தை நான் இன்னும் பார்க்கவில்லை! பார்த்தால் சொல்கிறேன். மடிப்பாக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தது என்றும் கேள்விபட்டேன்! மடிப்பாக்கத்தில் நல்ல சாலைகளே இல்லை. கைவேலி சாலை கொஞ்சம் பரவாயில்லை. நான் இருக்கும் தெருவில் சில நாட்களுக்கு முன் நல்ல மழை நாளில் சாலை போட்டார்கள்! எப்படா என்று காத்திருந்தவர்கள் போல் ஃபோன் லைனுக்காக குழி தோண்டி போட்டார்கள்! சாலை போட்டதற்குப் பிறகும் குழி தோண்டுவதற்கு முன்னும் அது குண்டும் குழியுமாய் தான் இருந்தது என்பது வேறு விஷயம்! மடிப்பாக்கம் மிகவும் தாழ்ந்த இடம் என்றும் மழை நீர் தேங்கும் என்றும் பயமுறுத்துகிறார்கள்! எப்படியோ என் வீட்டில் கார் பார்க்கிங் வசதி இருக்கிறது, அதை தக்க சமயத்தில் போட் பார்க்கிங்காக மாற்றிக் கொள்ள வேண்டியது தான்....நல்ல கட்டுமரம் ஒன்று சீப்பாக எங்கு கிடைக்கும்?

சென்னையில் எங்கே இருக்கே? என்று கேட்பவரிடம் மடிப்பாக்கம் என்றால் அது ரொம்ப தூரம் ஆச்சே என்கிறார்கள்! அவர்களுக்கு நான் அளிக்கும் ஒரே பதில் சென்னையில் எல்லாமே தூரம் தான்! ஒவ்வொரு ஏரியாவும் ஒவ்வொரு ஊர்! மயிலாப்பூரில் இருப்பவருக்கு வேளச்சேரி பிடிக்காது, புரசைவாக்கத்தில் இருப்பவருக்கு தி.நகர் பிடிக்காது! அவரவர் இடம்; அவரவர் வாழ்க்கை!! என்ன சொல்கிறீர்கள்?