பெரும்பாலும் பேய் படங்களை தியேட்டரில் பார்த்ததில்லை. [டிவிடியில் பார்த்து தான் பழக்கம்.] என்னமோ அப்படி ஒரு வாய்ப்பு அமைவதில்லை.  இன்று அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன். குரோம்பேட்டை ராகேஷ் 3D ல் அது சாத்தியமாயிற்று.

வழக்கமான ஆள் அரவம் அற்ற பெரிய பங்களாவில் குடியேறும் ஒரு குடும்பம். அந்தக் குடும்பத்தின் குழந்தையுடன் விளையாடும் ஒரு குழந்தை பேய். பேயை பார்த்து குரைக்கும் நாய். இருட்டான பேஸ்மென்ட். மெல்ல திரும்பினால் தெரியும் கோர முகம். ரத்தம் வழியும் கடைவாய். எதுவும் புதிதில்லை. ஆனாலும் கடைசி பதினைந்து நிமிடம் மிரட்டல்.  காமெரா, இசை அற்புதம். எண்ட் டைட்டில் ஓடும்போதும் பின்னணி இசை பயமுறுத்துகிறது. படத்தை இன்னும் நன்றாய் ரசித்திருக்கலாம் தான், அல்லாததற்கு காரணம் கீழே.

படத்தை பற்றிய பதிவு இல்லை இது. படம் பார்த்த அனுபவத்தை பற்றியது. இரண்டரை மணிக்கு ஷோ. நான் போகும்போது மணி இரண்டரை. கவுண்டரில் ஏகத்துக்கு கூட்டம். ஆன்லைனுக்காக ஒரு தனி கவுண்டர் இருக்கும். அது மூடி இருந்தது. எனக்கு எப்போதும் படம் பார்க்கச் சென்றால் [முன்பு ஃ பிலிம் டிவிஷன், இப்போதெல்லாம்] முகேஷின் விளம்பரத்திலிருந்து பார்க்க வேண்டும். வண்டியை ஒருவழியாய் இண்டு இடுக்கில் நிறுத்தி விட்டு [இந்த தியேட்டரின் பார்க்கிங் வசதியை திட்டி தனி பதிவே எழுதலாம்!] ஓடோடி வந்து கவுண்டரில் வரிசையில் நின்றேன். மர்ஃபீஸ் விதியின் படி வரிசை மிக மெதுவாய் நகர்ந்தது. ஒருவழியாய் கவுண்டரை நெருங்கி "ஆன்லைன் புக்கிங்" என்றதும், "அடுத்த கவுண்டர்" என்று டிக்கட் கொடுப்பவர் சர்வ சாதாரணமாய் சொன்னார். எனக்கு எரிச்சலாய் வந்தது. திட்டிக் கொண்டே அடுத்த கவுண்டரில் வரிசையில் நிற்குமுன் "இது ஆன்லைன் கவுண்டரா" என்று கேட்டுக் கொண்டேன். டிக்கட் கொடுப்பவர் கண்டுகொள்ளவேயில்லை. வரிசையில் நின்றவர்கள், "க்யுவுல வந்து நில்லுங்க, இந்த கவுண்டர் தான்" என்று ஒரு சிலர் தங்கள் கையில் உள்ள கை பேசியை காட்டினார்கள். வரிசையில் கிட்டத்தட்ட ஒரு பத்து பதினைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். குறைந்தபட்சம் பத்து  நிமிடமாவது  ஆகும். வரிசையில் எரிச்சலாய் நின்ற நான், கடுப்பாகி நேரே உள்ளே சென்றேன். "ரெண்டு முப்பது படத்துக்கு ஆன்லைன் டிக்கட் வச்சுருக்கேன். இவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள், ஏன் ஒரு தனி கவுண்டர் இல்லை?" என்று ஒருத்தரை கேள்வி கேட்டேன். அவர் இன்னொருத்தரை கூப்பிட்டு விஷயத்தை சொன்னார். "எஸ்.எம்.எஸ். இருக்கா?" என்று கேட்டார் அவர்!  காட்டினேன். "சரி மேலே போய், மோகன் அனுப்பினாருன்னு சொல்லிட்டு உள்ளே போங்க, படம் போட்டாச்சு" என்றார். நான் ரொம்ப நன்றி என்று சொல்லி, "அப்போ அவங்க எல்லாம்" என்று வரிசையில் உள்ளவர்களை காட்டினேன். அவர், "சார், ஒருத்தருக்கு பண்ணலாம் எல்லாருக்கும் பண்ண முடியுமா?" என்றார். "இல்லை சார், தனியா ஒரு கவுண்டர் போடுங்க"  என்று சொன்னேன். "செய்றோம், நீங்க மொதல்ல போங்க சார் படம் போட்டாச்சு" என்று என்னை அனுப்பி விட்டார். நான் கேட்டேன், கிடைத்தது; பாவம் மற்றவர்கள்!

அரங்குக்குள் நுழைந்தேன். படம் போட்டிருந்தார்கள். ஒரு காட்டில் ஒரு பெரிய தனி வீடு என்று காட்டிக் கொண்டிருந்தார்கள். யாவரும் நலம் படத்தில் வருவதை போல் "அபார்ட்மெண்ட்டில் பேய்" என்று இவர்கள் எப்போது படம் எடுப்பார்களோ தெரியவில்லை. இடம் பிடித்து உட்கார்ந்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். பேய் படங்களில் வரும் வழக்கமான பின்னணி இசை இல்லாத, அமைதியான மெதுவான காமெரா நகர்வு. அடடா..ஆரம்பிச்சுட்டாங்களே என்று பயப்பட தயாரானால்,  அவ்வளவு தான், அரங்கில் தான் நம் வீர சூரப் புலிகள் இருக்கிறார்களே. "அம்மா, பூச்சாண்டி, பே, போச்சு, ஐயோ போகாதே" என்று ஆளாளுக்கு பின்னணி கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த மாதிரி பேய் படங்களில் அந்த மாதிரி திகில் தருணங்களை ரசிக்க வரும் என் போன்ற ரசிகர்களுக்கு அது எத்தகைய எரிச்சலாய் இருக்கும் என்று அவர்கள் ஏன் கவலைப்படப்போகிறார்கள்!  இந்த அழகில் டிக்கட் சரிபார்த்து உட்கார வைப்பவர் "சத்தம் போடாம படம் பாருங்க" என்று இரு முறை சொல்லி விட்டு போய் விட்டார் [ஒரு முறை அவரே, இரண்டாவது முறை நான் முறையிட்டு!]. இதை விட என்ன செய்ய முடியும்? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்று சொல்வார்கள். மாட்டுக்கே ஒரு சூடு தாண்டா! நீங்க எல்லாம் மனுஷங்க இல்ல?

வீட்டில் குடும்பத்துடன் டிவிடியில் பார்க்க வேண்டியவர்கள் எல்லாம் தியேட்டரில் வந்து மற்றவர்களின் சுவாரஸ்யங்களையும் கெடுக்கிறார்கள். ஒருவன் கமெண்ட் அடித்தால் போதும், தேவையில்லாமல் சிரிப்பது, குசுகுசுப்பது, கத்துவது என்று தொடர்ந்து ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்கள் கத்துவது மட்டுமல்லாமல் கைபேசி தொல்லைகள் வேறு. வித விதமான ரிங் டோன்கள் ஹை டெசிபல் சத்தத்தில் தாங்க முடியவில்லை. நான்  பார்த்த வரை பேய் படம் பார்க்கும்போது நம்மவர்களின் நடத்தையே மாறி விடுகிறது. முன் எப்போதுமில்லாத வீரம் உடனே வந்து ஒட்டிக் கொள்கிறது.  நான் எல்லாம் யாரு, வீரன், தீரன், சூரன், இதெல்லாம் ஒரு சப்பை படம், நான் எல்லாம் இதுக்கு பயப்படுவேனா என்பது போன்ற ஒரு நடத்தை/பீத்தல்! அதிலும் ஒரு பெண் பக்கத்தில் இருந்தால் போதும், அந்த பீத்தல் டபுள் மடங்காகிவிடும். எனக்கு என்னமோ, அந்த மாதிரி அழுச்சாட்டியம் செய்து கொண்டு அங்கு உட்கார்ந்திருந்த ஒவ்வொருத்தனையும் இப்படி ஒரு ஹான்டிங் ஹவுசில் கொண்டு போய் விட்டு விட வேண்டும் என்று தோன்றியது.  இயக்குனர் பாலா ஒரு பேட்டியில், "நான் தியேட்டர் போய் படம் பாக்குறதே இல்லை, படம் பார்க்கும்போது செல்ஃபோன்ல பேசுறவனை பார்த்தால் அங்கேயே அரையனும் போல இருக்கு, அதுக்கு பயந்தே நான் போறதில்லை" என்பது போல் சொல்லி இருந்தார். சரியாய் தான் சொல்லி இருக்கிறார். என்னை பொறுத்தவரை இந்தியர்களை ஒரே வரியில் விமர்சிக்க வேண்டும் என்றால் கவுண்டமணி சொன்ன  "சாகும்போதும் அடுத்தவனுக்கு தொந்தரவு கொடுக்காம சாக மாட்டானுங்கடா"  அந்த ஒரு டயலாக் போதும். பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டிய ஒரு வாசகம்!

எல்லா எரிச்சலையும் தாண்டி ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், படத்தில் அதிகாலை சரியாய் 3:07 மணிக்கு வீட்டில் உள்ள அனைத்து கடிகாரங்களும் நின்று விடும். காரணம், அந்த நேரத்தில் தான் அந்த வீட்டில் இருந்த பெண்மணி தூக்கு மாட்டி இறந்திருப்பார். படத்தின் இடைவேளையில் என் மனைவி தன் கைபேசியை எடுத்து பார்த்தார். அதில் மணி சரியாய் 2:33 ல் நின்றிருந்தது!

தேசப்பற்று என்றெல்லாம் ஒன்றும் பெரிதாய் இல்லை. சும்மா "கிம்ப்"பில் வரைந்து பழகிக் கொண்டிருந்தேன். எத்தனை நாள் தான் பெண்களையே வரைவது... ஒரு மாற்றத்துக்கு இன்றைய நாளை நினைத்து  வரைந்தது. சுதந்திர தினம் என்பது ஒரு நாள் விடுமுறையும், தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சிகளுடனும் இன்று நீர்த்து போயிருக்கலாம்! ஆனால், தங்களின் வேலைகளை விட்டுவிட்டு, குழந்தை குட்டிகளை பற்றி கவலைப்படாமல்  இன்று நாம் ஜம்பமாய் உட்கார்ந்து கொண்டு யாரை பற்றி வேண்டுமென்றாலும் முகநூலில் தைரியமாய் நிலைத்தகவல்களை அளிக்கக் காரணமாய் இருந்த அந்த வீரர்களை இன்று ஒரு கனம் நினைத்துக் கொள்ளலாம்! வாழ்க சுதந்திரம்.
அமீர் கான் ஒரு படத்தை பற்றி சொல்கிறார் என்றால் அதை நான் பார்த்து விடுவேன். அவரின் ரசனை மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை. அவரின் பரிந்துரைகள் என்னை இதுவரை ஏமாற்றியதில்லை. இந்தப் படமும் அப்படித் தான்.


ஷிப் ஆஃப் தீசிஸ் என்பது தீசிஸ் என்பவரின் பாரடாக்ஸ் என்கிறது விக்கி. அதாவது தமிழில் "முரண்பாடு போலத் தோன்றும் மெய்யுரை". [முற்றிலும் தமிழில் சொன்னால் கொஞ்சம் புரிஞ்சதும் குழம்பிடுதுல்ல?] அது யாதெனில், ஒரு பொருளில் உள்ள அனைத்து பாகங்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றி அமைத்து விட்டால் எஞ்சுவது அதே பொருளா வேறு பொருளா? எடுத்துக்காட்டாக, ஒரு கப்பலில் உள்ள அனைத்து பாகங்களையும் மாற்றி விட்டால் இறுதியில் இருப்பது அதே கப்பலா? இல்லை வேறு கப்பலா? [எவ்வளவு வேலையத்து இருந்திருக்காய்ங்க பாருங்க!] இது உலகத்தையே உலுக்கிய [இது என்னோட பில்டப்பு!] ஒரு பெரிய தத்துவார்த்த கேள்வி! இப்படியாக நீங்கள் பிரபஞ்சத்திலுள்ள எந்தப் பொருளையும் எடுத்துக் கொண்டும் இதற்கான விடையை கண்டுபிடிக்க முயலலாம். அந்த முரண்பாட்டு மெய்யுரையின் அடிப்படையில் அமைந்த படம் தான் ஷிப் ஆஃப் தீசிஸ். [நம்ம படத்துலயும் கதைன்னு ஒன்னு இருக்கே!]

இந்தப் படத்தில் ஆனந்த் காந்தி [இயக்குனர்] எடுத்துக் கொண்டிருக்கும் பொருள் மனித உடல். உடல்கள்! இறந்த ஒருவரின் கண், கல்லீரல், சிறுநீரகத்தை எடுத்து மூவருக்கு வைக்கிறார்கள். அந்த மூவர்,


கண் பார்வையற்ற புகைப்பட நிபுணியான ஒரு பெண்.

மிருக வதையை எதிர்க்கும் ஒரு துறவி.

ஒரு கலை சார்ந்த குடும்பத்தில் பிறந்து, சதா பணத்தை கட்டி அழும் ஒரு ஸ்டாக் ப்ரோக்கர்.

இறுதியில் ஷிப் ஆஃப் தீசிஸ் படி அவர்கள் யாராய் வாழ்கிறார்கள் என்ற கேள்வியுடன் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இது போதும், நான் கதையை சொல்லப் போவதில்லை. நீங்களும் அனுபவியுங்கள்!

வீடு, சந்தியா ராகம் எல்லாம் ஆர்ட் பிலிம், நல்ல படம் என்றால் சிங்கம், துப்பாக்கி தான் என்றால் நீங்கள் அப்பீட் ஆகிக் கொள்ளுங்கள்! உங்களால் ஒரு நிமிடம் கூட இந்த படத்தை தாங்க முடியாது. சீரான ஒரு நீரோட்டத்தை உங்களால் பார்த்துக் கொண்டே இருக்க முடியுமா? அப்படி இருக்கிறது இந்தப் படத்தின் திரைக்கதை. எந்த வித அதிபயங்கர திருப்பங்களும் இல்லாமல் [நீரோடையில் இருப்பதுண்டு!] அமைதியாய், சீராய், சாந்தமாய் பயணிக்கிறது. அது மிக அழகாய் நம்மையும் உள் இழுத்துக் கொள்கிறது. படத்தில் நிறைய பேசுகிறார்கள். அமைதியாக, சாந்தமாக, சத்தமாக, அழுத்தமாக, மௌனமாக இப்படி பல வகையில் பேசுகிறார்கள். வாழ்வியல் சார்ந்த, மரணம் சார்ந்த, சுய மதிப்பு சார்ந்த பலவிதமான கேள்விகளை படம் முழுதும் எழுப்பிக் கொண்டே போகிறார்கள். சப் டைட்டில் போட்டும் எனக்கு பல இடங்கள் புரியவில்லை. மறுபடியும் ஒரு தடவை படத்தை பார்க்க வேண்டும்.உண்மையில், இந்த படம் முடிந்தவுடன் தான் தொடங்குகிறது. படம் முடிந்து வீட்டுக்கு வந்தும் அது நம் மனம் எங்கும் வியாபித்து விடுகிறது.



காமெரா வாயில் ஒத்திக் கொள்ளலாம் போலிருக்கிறது [அட அதாங்க உம்மா!]. சில இடங்களில் நடிகரின் முகத்தில் இடித்துக் கொண்டு காமெரா நிற்கிறதோ என்று தோன்றுமளவுக்கு க்ளோசப் வைத்திருக்கிறார்கள். எல்லா காட்சிகளும் பார்வையாளர்களை பார்த்து "என்னப்பா, பாத்தியா, நல்லா பாத்தியா?" மாத்தவா என்பது போல் நிறுத்தி நிதானமாக காட்டுகிறார்கள். [ தற்போதைய தமிழ் சினிமா பாடல்களை நினைத்துக் கொண்டேன். கண் சிமுட்டுவதற்குள் நாலு கட் செய்து விடுகிறார்கள்.] குறிப்பாய் அந்த பனிமலையும், நீரோடையும், அங்கு நிலவும் கனத்த மெளனமும் அந்தப் பெண்ணின் மனநிலையோடு நம்மையும் இணைத்து விடுகிறது. அந்தக் கணத்தில் நானும் அவளோடு அங்கு இருந்ததை போல இருந்தது. அருமை...இப்படி படத்தில் பல கணங்கள் படத்தில் வாய்க்கின்றன. துறவி மண்புழுவை காப்பாற்றுவது, அந்த இளம் வக்கீலிடம் வாக்குவாதம் செய்வது, நோயால் துன்புறுவதை காட்சிபடுத்தியது, புத்தகம் கொடுக்க வரும் அந்த தாத்தாவின் பிரசன்ஸ், ஸ்டாக் ப்ரோக்கரின் நண்பனின் அங்கதங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.படத்தில் பல இடங்கள் மெளனமான கணங்கள் இருப்பதால், இசை ஆங்காங்கே பேசுகிறது.

மொத்தத்தில் ஆனந்த் காந்தியின் படத்தை பார்க்க உங்களுக்கு "காந்தி" யின் பொறுமை வேண்டும். என்றும், பொறுமையின் பலன் அற்புதம் தானே?