இந்தப் பதிவுல நான் சொல்லப் போறது ரெண்டு விஷயம். ஒன்னு உழவர் தினம்! ரெண்டு ஒரு ஹிந்திப் படம்! இதை விட ஒரு பொறுத்தமான தலைப்பு கெடைக்குமா? சொல்லுங்க!

எல்லோருக்கும் பொங்கலோ பொங்கல்!! இந்த நாளில் கிராமப்புறங்களில் பஞ்சாயத்து டீவி, கேபிள் டீவி எல்லாம் வராத காலங்களில் கதிரவனை வணங்கி வழிபடுவார்கள். இப்போது சன் டீவியில் அவர்கள் பொங்கலுக்கு வெளியிடும் படங்களுக்கான டார்சர் ட்ரைலர்களையும், "என்னைய்யா ராஜா என்னை பாத்து இப்படி சொல்லிபுட்ட!" என்று குழையும் பாப்பையாவையும் பார்த்து சிறப்பாய் கொண்டாடுங்கள்! வேறு என்ன சொல்ல?!

என் பக்கம் ஒன்றும் பெரிய விஷயமில்லை. புது வருஷத்துக்கு என் வலைப்பதிவுக்கு புது சட்டை வாங்கிப் போட்டதைத் தவிர! வேலையும் கொஞ்சம் குளிரும் சற்று குறைந்திருக்கிறது! (டச் வுட்!!) சொந்தக் கதை சொத்தைக் கதை எழுதி எழுதி எனக்கே போர் அடித்து விட்டது. நாமும் ஒரு காலத்தில் கதை கவிதை எல்லாம் எழுதிக் கொண்டிருந்தோமே என்று என்னுடைய பழைய வலைப்பதிவுகளை எடுத்து படித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்! இப்போது ஒரு எழவும் தோன்ற மாட்டேன் என்கிறது. இந்த எஸ். ராமகிருஷ்ணன் ப்ளாட்ஃபாரத்தில் நடந்ததை 10 பக்கத்துக்கு எழுதுகிறார். அவர் எழுத்தாளர்!!

சரி இன்றைய பதிவிற்கான விஷயத்திற்கு வருகிறேன். போர் அடிக்கிறதா? வயிறு வெடிக்க சிரித்து வெகு நாட்கள் ஆகிவிட்டதா? தமிழ் படங்களில் வேட்டைக்காரனைத் தவிர எல்லாம் பார்த்தாகிவிட்டதா? அதையும் பார்த்து விடலாமே போன்ற விபரீத எண்ணங்கள் வருகிறதா? வரலாற்றில் [அதாவது இறந்த காலத்தில்!!] உங்கள் வீட்டில் யாரும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதில்லையா? அப்படியென்றால் இந்தப் படத்தைப் பாருங்கள்!


வேலை வெட்டி இல்லாத நாலு வெட்டிப் பசங்க. ஒரு விபத்தில் அடிபட்டவரை காப்பாற்றப் போக அவர் சாகும் தருவாயில் தான் சம்பாதித்த பத்து கோடி பணத்தை கோவாவில் ஒரு இடத்தில் பத்திரமாய் புதைத்து வைத்திருப்பதாகவும் அதை அவர்களையே பங்கிட்டுக் கொள்ளும்படியும் சொல்லிவிட்டு செத்து விடுகிறார். அவர் ஒரு பெரிய கள்ளக் கடத்தல் மன்னர். இதுக்காகவே அவர் பின்னாடியே 10 வருஷமா துரத்திட்டு இருந்த ஒரு போலீஸ்காரர். அவரோட ப்ரமூஷனே இந்தக் கேசை வச்சித் தான்! இந்தப் பசங்களுக்குத் தான் உண்மை தெரியும்னு அவருக்கு புரிஞ்சி போய் இவனுங்களை பின் தொடர்றாரு! அந்தப் பணத்தை யார் எப்படி எடுத்துக்குறாங்கன்றதை நீங்க சின்னத்திரையில் (டிவிடி தானே?) பார்த்து மகிழவும்!

ரிதேஷ் தேஷ்முக், ஹர்சத் வர்ஷி (சர்கெட்!), ஜாவேத் ஜாஃப்ரி, சஞ்சய் தத், அஸ்ரானி எல்லோரும் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள். அந்தப் பணத்தை எடுக்க அவர்கள் மும்பையிலிருந்து கோவா செல்வதற்குள் அதில் ஒவ்வொருத்தனும் படும் பாடு இருக்கிறதே!! சிரித்து சிரித்து கண்களில் நீர் வற்றி விடும்! இதில் இன்னொரு பெரிய விஷயம் என்னவென்றால் படத்தில் கதாநாயகியே இல்லை! இதை விட ஒரு புதுமை என்ன வேண்டியிருக்கு சொல்லுங்க! யூ ட்யூபில் முழு படமும் கிடைக்கிறது என்று நினைக்கிறேன். கூகுலாரை நாடுங்கள்! ஹிந்தி நன்றாய் தெரிந்தால் மிகவும் ரசிக்கலாம்! ஐ ரெக்கமண்ட்!!

அப்பாடா, ஜனவரி மாசத்துக்கு ஒரு பதிவைப் போட்டாச்சு! [எப்படி எல்லாம் ஒப்பேத்த வேண்டியிருக்கு!]