வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் ஷாப்பிங் செய்து விட்டு ஞாயிற்றுக் கிழமை இரவு நானும், என் மனைவியும், என் மகள் தருவும் வெளியே வந்தோம். மால் பார்க்கிங் சார்ஜ் ஜாஸ்தி என்பதால் வேளச்சேரி 100 அடி ரோட்டில் ஒரு ஓரத்தில் பைக்கை வைத்திருந்தேன். "ஒரு அம்பது, நூறுக்கு எல்லாம் ஏன் இப்படி பண்றீங்க?" என்ற மனைவியிடம் "அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு என்  எதிர்ப்பை எப்படி தெரிவிப்பது!?" என்று சொல்லி இருக்கலாம், வேண்டாம் கொலை வெறி ஆகி விடுவாள்!

மாலில் இருந்து வெளியே வந்து 100 அடி ரோட்டை நோக்கி நடக்கத் துவங்கினோம். "பைக்கை யாராவது எடுத்துட்டு போயிட்டா என்ன பண்ணுவீங்க?" என்று அவள் கேட்டதெல்லாம் வயிற்றில் லைட்டாய் புளியை கரைத்துக் கொண்டிருந்தது. 100 அடி ரோடில் ஒரு 10 மீட்டர் நடந்தால் போதும், பைக் அங்கு தான் நிறுத்தி இருந்தேன். ஞாயிற்றுக் கிழமை என்பதால் கடைகள் சாத்தி இருந்தார்கள். அதனால் அந்த இடத்தில் வெளிச்சம் வேறு இல்லை. ஏக்கப்பட்ட பைக்குகளும், கார்களும் நின்று கொண்டிருந்தன. இப்படி எல்லாம் கூட்டத்தில் கண்டு பிடிப்பதற்காக தான் நான் சாமர்த்தியமாய் சிவப்பு ஹெல்மட் வாங்கி இருந்தேன். அதை தேடினால் போதும். அந்த கும்மிருட்டில் கருப்பு வண்டி தெரிய வழியில்லை. சிவப்பை எதிர்நோக்கி என் கண்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கும் போது, காலில் வழு வழுவென்று ஏதோ பட்டது. "அட, பரவாயில்லையே, கார்ப்பரேஷன்ல இவ்வளவு வழவழப்பா டைல்ஸ் எல்லாம் போடறாங்களா?" என்று நான் நினைப்பதற்குள் அது என் காலில் இருந்து நழுவி குறைத்துக் கொண்டே ஓடியது. அது ஒரு கருப்பு நாய்! அதன் வயிற்றிலேயே கால் வைத்திருக்கிறேன். நல்ல வேளை அது என் தொடையில் வாய் வைக்கவில்லை. சுற்றி இருந்தவர்களில் ஒருவர், "அது ஒன்னும் கடிக்காது சார்!" என்றார். யாராவது என் வயிற்றில் கால் வைத்தால் நானே கடிப்பேன். அது நாய், எப்படி கடிக்காமல் இருக்கும். ஏதோ என் அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொண்டேன். வயிற்றில் புளி இன்னும் ஜாஸ்தி ஆனது. நாயின் புண்ணியத்தில் நெஞ்சு வேறு அடித்துக் கொண்டது. இது வரை என் சிவப்பு ஹெல்மட்டும் கண்ணில் படவில்லை, கருப்பு வண்டியும் கண்ணில் படவில்லை.

என் மனைவியிடம், "இங்கே தான் நிறுத்தினேன், காணோம்!" என்றேன். "உங்களுக்கு இது தேவையா, சரி இன்னும் முன்னாடி போயி பாருங்க" என்றாள் பொறுமையாய். இல்லை என்று தெரிந்தும் முன்னால் போனேன். திரும்பி வரும்போது என் மனைவி என்னை அழைத்தாள். "கிடைத்து விட்டதா?" என்று ஆர்வம் போங்க அருகில் சென்றால், "இப்போ தான் போலீஸ் ஒரு 30 பைக்கை எடுத்து போயிருக்காங்களாம், பீனிக்ஸ் மால் பக்கத்துல நிக்கிறாங்களாம், அவங்க சொல்றாங்க!" என்று என் வயிற்றில் கரைந்து கொண்டிருந்த புளியில் கொஞ்சம் பாலை ஊற்றினாள்! நான் அவர்களிடம் "ஏன் சார், ஏன் வண்டியை எடுத்தாங்க?" என்று கேட்டேன். அவர்கள், "இது நோ பார்க்கிங் சார்" என்றார். அந்த இருட்டில் அப்படி எந்த போர்டும் என் கண்ணுக்கு தெரியவில்லை. மாலையில் நான் நிறுத்தும் போது கூட ஒரு தடவை பார்த்து விட்டு தான் நிறுத்தினேன். அந்த நேரத்திலும் அங்கு 100 வண்டி நின்று கொண்டிருந்தது. "என்ன சார், இத்தனை வண்டி நிக்குது" என்றேன். "அவங்க எடுத்து எடுத்துட்டு தான் போறாங்க, அதுக்குள்ளே மறுபடியும் மக்கள் நிறுத்திடறாங்க. அவங்க எத்தனை வண்டிய தான் தூக்கிட்டு போவாங்க பாவம்!" என்றார். நான் என் மனைவியிடம் "இரு" என்று கிளம்பும்போது, "நானும் வர்றேன், குழந்தையோட பாத்தா விட்ருவாங்க!" என்றாள். என்ன ஒரு சாமர்த்தியம்.! "சரி வா" என்று மறுபடியும் அவர்களை மால் வரை நடத்திப் போனேன். வழியெங்கும், "இது உனக்கு தேவையா?" என்ற ஒரே சொல் எனக்குள்ளே ரீங்காரமாய் ஒலித்தது.

பீனிக்ஸ் மால் அருகில் ஒரு காலி இடத்தில் ஒரு பெரிய டோயிங் வேன் நின்றது. அங்கு இரண்டு வெள்ளை சட்டை போலீஸ்கள் இருந்தார்கள். என் வண்டி சிவப்பு தொப்பியுடன் ஜம்மென்று நின்று கொண்டிருந்தது. இரு இளைஞர்கள்  "ஏன் சார் வண்டிய கொண்டு வந்தீங்க" என்று கேட்டு ஒரு போலீஸ் அதிகாரியின் ஈகோவை கிளப்பி விட்டுக் கொண்டிருந்தார்கள். நான் பின்னால் குழந்தையுடன் நிற்பதை பார்த்ததும் இன்னொரு போலீசிடம், "இங்கே பாரு, ஏன் எடுத்தீங்கன்னு கேக்குறாங்க, தம்பி நீங்க இந்த பக்கம் வாங்க, பாவம் குழந்தையோட நிக்கிறாங்க, முன்னாடி வாங்க சார்" என்று அவர்களை தனியாய் ராடு எடுப்பதற்காக ஓரம் கட்டி விட்டு என்னை அழைத்தார்.

கார்ப்பரேட் உலகில் "கஸ்டமர் இஸ் காட்" என்று ஒரு சொல்லாடல் உண்டு. அதை போல் நம்மூரில் "அதிகார வர்க்கம் இஸ் காட்". போலீஸ்களிடம் இந்த மாதிரி நேரடியான கேள்விகளை எல்லாம் கேட்கக் கூடாது. அவர்கள் பதில் சொல்லக் கடமைபட்டிருந்தாலும், அவர்களின் ஈகோ தான் முதலில் தலை எடுக்கும். அவர்களை அடக்க ஒரே வழி அவருக்கு மேலான ஒரு அதிகாரம். அது நம்மிடம் இல்லை. இன்னொன்று பணம். நான் அந்த இளைஞர்களை போல் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. "நோ பார்க்கிங்க்னு தெரியாது சார், தெரியாம நிறுத்திட்டேன். இது தான் சார் என் வண்டி" என்றேன். "ஒருத்தன் சிக்கிட்டாண்டா" என்பது போல், அந்த இளைஞர்களை புறம் தள்ளி விட்டு அந்த மற்ற போலீஸ் வந்தார். எங்களை ஓரம் கட்டினார்.

கையில் ஃபைன் மெஷினுடன்  "260 ஃபைன் கட்டும்மா" என்றார். பரவாயில்லையே, நேர்மையாய் ஃ பைன் தான் கேட்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டேன்.  அதற்குள் என் மகள் ஏதோ பேச "என்ன வயசும்மா ஆகுது?" என்று என் மகளிடம் சகஜமாக பேச ஆரம்பித்தார். நான் "நோ பார்க்கிங் 260 ஃபைனா சார் என்றேன். [பருத்தி வீரன் மாதிரி கேட்கக்கூடாது, பாலக்காட்டு மாதவன் மாதிரி அடக்கமாய், அப்பாவியாய் கேட்கணும். அப்போது தான் பதில் வரும்.] "டோயிங் சார்ஜ் போடுவோம்மா" என்றார்.

"ஆமா, இவ்வளவு வெயிட்டான பைக்கை தூக்கி போட்டு கொண்டு வந்துருக்கான்களே, நியாயம் தான்!" என்று நினைத்து ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டினேன். அவர் முன்னூறு ரூபாய் திருப்பிக் கொடுத்தார். நானும் வாங்கி வைத்துக் கொண்டேன். இடையில் "எங்க வேலை பாக்குறீங்க?" என்றார், நான் ஒரு நடிகன் சார், குறும்படங்கள் ல, நாடகங்கள் ல நடிக்கிறேன் என்றேன். இப்போதெல்லாம் மாட்டினால் இப்படி தான் சொல்கிறேன். "ஒ, எப்படி போகுது? குடும்பம் நடத்த வருமானம் வருதா? என்றார் அக்கறையாய். நான் "கஷ்டம் தான் சார்" என்றேன். [நமக்கா நடிக்கத் தெரியாது!] "சரி வண்டி எடுத்துக்குங்க" என்றதும் நான், "சார் ரெசிப்ட்" என்றேன். "அப்போ இன்னும் அறுபது ரூபா கொடுங்க!" என்றார். அப்போது தான் அவர் இருநூறு ரூபாயை லஞ்சமாய் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை எனக்கு புரிந்தது! "செய்றதை சரியா செஞ்சுருவோம்" என்று சொல்லிக் கொண்டே ரூபாயை எடுத்தேன். அவரும் ஆமோதித்து "ஆமாம், ஆமாம், நாங்க க்ளோஸ் பண்ணிட்டு இருக்கோம், அதனால தான்" என்று ஏதோ மழுப்பினார்.

நான் ரெசிப்ட் கேட்டதும் தான் என் பெயர், முகவரி, வண்டி என், லைசன்ஸ் என்று எல்லாவற்றையும் கேட்டார். 260 ரூபாய் ஃபைன், அதற்கு பதிலாய் 200 ரூபாய் லஞ்சம். அந்த 200 ரூபாய் லஞ்ச பணத்துக்காக ஏதோ பத்து வருடம்  பழகிய நண்பர் போல எங்களுடன் ஒரு நட்பு கலந்த உரையாடல்! உண்மையில் அங்கு பார்க்கிங் செய்யக் கூடாது என்று இவர்கள் நினைத்தால் நல்ல நடவடிக்கைகளை எடுக்கலாம். பேரிகேட்ஸ் வைக்கலாம், பெரிய நோ பார்கிங் போர்ட் வைக்கலாம். வார இறுதிகளில் அங்கேயே ஒரு போலீஸ்காரரை நிறுத்தி வைக்கலாம். ஆனால் இவர்கள் செய்வது என்ன? செய்யாத ஒரு தப்பு நம்மை சிக்க வைத்து, அதற்கு ஃபைனும் போட்டு, அதிலிருந்து தப்பிக்க லஞ்சம் என்று இன்னொரு தப்பையும் நம்மை செய்ய வைத்து...இது என்ன மாதிரியான தண்டனை? என்ன மாதிரியான சட்டம்?

"நீ தப்பு பண்ணிட்டே! கட்டு ஃபைன்" என்று சிங்கம் போல் சொல்ல வேண்டியவர்கள் அந்த இருநூறு ரூபாய் பணத்துக்காக நம்மிடம் இல்லாதது பொல்லாதது எல்லாம் பேசி ஒரு நாயை போல் குழைகிறார்கள். ஒருபக்கம் அவர்களை பார்த்து எனக்கு பரிதாபமே மிஞ்சியது. பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்?

வண்டியை எடுக்கும்போது பார்த்தேன், நல்ல துணியில் நான் வைத்திருந்த ஹெல்மெட் கேப், நான் வண்டி துடைக்க வைத்திருந்த மஞ்சள் துணியை காணவில்லை. அவர்களிடமே கண்டு பிடித்து தரச் சொல்லி இருக்கலாம். ஏற்கனவே 200 ரூபாய் போன கடுப்பில் ஓவர் ஸ்பீட் என்று ஐநூறு ரூபாய் ஃபைன் போட்டு அதற்கு முன்னூறு ரூபாய் லஞ்சம் கேட்பார்கள். எதற்கு வம்பு!