என் படத்தின் டீசரை பார்த்துவிட்டு ஆவலோடு காத்திருப்பவருக்கும் இவனுக்கு என்ன கெரகமோ என்று அங்கலாய்ப்பவருக்கும், இதோ நான் சொன்னபடி என்னுடைய நான்காவது படம். இது என் இயக்கத்தில் வரும் மூன்றாவது படம்.

ஒரு குடும்பஸ்தனுக்கும், சில குசும்பன்களுக்கும் மத்தியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை ஒரு சாமான்யனின் பார்வையில் அணுகி இருக்கிறேன். எப்படி இருக்கிறது என்று பார்த்து விட்டு சொல்லுங்கள். உங்கள் தரத்திற்கு இருந்தால் பகிருங்கள்!


எல்லோரும் அஞ்சானை எதிர்நோக்கி காத்திருக்கும் போது நான் இரா பார்த்தீபனை  சைடா நோக்கிக் கொண்டிருந்தேன். அஞ்சானுக்கு சூர்யா வாயில் குச்சியை வைத்துக் கொண்டு பேசாமல் நிற்கும் ஸ்டில் போதும்; ஆனால் இரா பார்த்தீபனுக்கு வாயில் குசும்பை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அதை தான் மனிதர் செய்து கொண்டிருந்தார்; கிறார். படம் வரப்போகிறது என்று சொன்னதில் இருந்து "தியேட்டருக்கு வந்து பாருங்க", "இது என் படம் இல்லை, உங்க படம்", "உங்க கைதட்டல் தான் பெரும் சன்மானம்".....என்று பேப்பருக்கு பேப்பர் அவரின் பேச்சு விளம்பரங்கள். நேற்று எதேச்சையாய் ஒரு டீக்கடையில் வடையில் உள்ள எண்ணையை பிழிய ஒரு பேப்பரை எடுத்தால் அது அவரின் படத்துக்கு அடித்த பிட் நோட்டிஸ்! அதில் வேறு திருட்டு வீசிடி யில் படம் பார்க்காதீர்கள் என்று மன்றாடி கேட்டிருந்தார்! கண் கலங்கி விட்டது. மனுஷன் என்னமா யோசிக்கிறான்யா! ரொம்ப ஃபீல் ஆகி, சரி கழுதை, நூறு ரூபா தானே [உண்மையில் அறுபது ரூபாய் தான்!], இந்த உழைப்புக்கு, அர்ப்பணிப்புக்குத் தரலாம் என்று, டீயை குடித்து விட்டு, பைக்கில் ஏறும்போது என் மனசு இறங்கி, இன்று பைக்கிலிருந்து இறங்கி படம் பார்க்க தியேட்டரில் நுழைந்தேன். [ஏன் அவர் தான் எதுகை மோனையா பேசுவாரா, எங்களுக்கும் வரும்!]

அவர் சொன்னது போல் கதை இல்லாமல் எடுத்த படமா இது? இல்லை; இதிலும் ஒரு கதை, (ஒன்னா?) இருக்கு! ஒரு "நல்ல வளர்ந்த" பட் சினிமாவில் டைரடக்கராய் வளரத் துடிக்கும் இளைஞன். அவன் படத்திற்காக ஒரு கதை தேடி அலைவது தான் படத்தின் கதை. கடைசியில் அவன் ஜெயித்தானா இல்லையா என்ற ட்விஸ்டை க்ளைமாக்சில் வைத்திருக்கிறார் இயக்குனர். இந்தப் படம் ஒரு கவிதை! உங்களுக்கு கவிதை பற்றி கொஞ்சம் தெரியும் என்றால் [இரவில் வாங்கினோம்; இன்னும் விடியவில்லை! இது கவிதை இல்லை - சுஜாதா] நான் சொல்ல வருவது புரியும்!

நிறைய அபிமான நட்சத்திரங்கள். படத்தின் முக்கால்வாசி பேர் புதுமுகங்கள். கதாநாயகன் அடக்கமான அழகு; நடிப்பு. கதாநாயகி சில ஆங்கிள்களில் ஒல்லியான நயன்தாரா போல இருக்கிறார். யாருங்க அவருக்கு பொட்டு வச்சு விட்றது? இன்னொரு கதாநாயகி மொக்க! "தம்பி" ராமையா தான் படத்தில் எல்லோருக்கும் "அண்ணன்"![அய்யோ நானே பார்த்தீபன் சார் அசிஸ்டெண்டா போயிடலாம் போல இருக்கே!] இவருக்கு மட்டும் தான் படத்தில் நல்ல ஸ்கோப்! படத்தின் ப்ளஸ் இயக்குனர் பார்த்தீபனின் நச் நச் ஒரு வரிகள். ஆனால் சில சமயம் அதுவே ஓவர் டோஸ். இவர் ஒருவர் விழாக்களில் பேசினாலே தாங்காது; படத்தின் அத்தனை காரெக்டர்களும் இவர் மாதிரியே பேசினால்! பூமி தாங்காது இல்ல?

அந்த சுனாமி கிராபிக்ஸ் சூப்பர்! வலைதளங்களில் பல படங்களின் விமர்சனங்களை பார்த்து ரொம்பவே பயந்து போயிருக்கிறார் என்று நினைக்கிறேன். படம் பார்த்து விட்டு நாம் சொல்ல வேண்டியதை எல்லாம் படத்திலேயே அவர் சொல்லி விடுகிறார். சீன்கள் ஆங்காங்கே சுவாரஸ்யமாய் இருந்தாலும், மொத்தமாய் ஒரு படமாய் யோசித்து பார்க்கும்போது பேன்ட் பையில் இருந்து எடுக்கும் ஹெட் ஃபோனை போல ஒரே கொச கொசவென்று ஆகி விடுகிறது. இருந்தும், கதாநாயகன் பஞ்ச் பேசிவிட்டு பத்து பேரை பறந்து பறந்து அடிப்பதை அலுக்காமல் பார்க்கும் நாம் இதை பார்ப்பதில் தப்பில்லை.

கடைசி பஞ்ச், எந்த வித்தியாசமும் இல்லாமல் பார்த்தீபன் ஒரு படம் எடுத்தால் ரொம்ப வித்தியாசமாய் இருக்கும்! என்ன சொல்றீங்க?

அந்த பன்ச்சோட விமர்சனம் முடியுது. [இந்த விமர்சனமும் பேன்ட் பையில் இருந்து எடுக்கும் ஹெட் ஃபோனை போல ஒரே கொச கொசவென்று...?!]

கீழே உள்ளது என்னோட நாலாவது குறும்படத்தோட டீசர். பார்த்து விட்டு படம் பார்க்க தயாராகுங்கள். மேலே சொன்னது "கதை திரைக்கதை வசனம் இயக்கம்". கீழே உள்ளதில் அவை எல்லாமே "நான்"! [இந்தப் பதிவின் தலைப்பை எப்படி கொண்டு வந்தேன் பாத்தீங்களா?]


மறுநாள் காலையில் "ராயல் ஜன்னத்தை" காலி செய்து கொண்டு குல்மார்க்கிற்கு கிளம்பினோம். அங்கு போய் சேர மதியம் ஆகி விடும் என்று சன்னி சொல்லி இருந்தான். வழக்கம் போல் தமிழ் பாடலுக்கு ரசித்து தலையாட்டிக் கொண்டே வண்டியை ஓட்டினான். இத்தனை நாள் கழித்து எழுதுவதால் வழியில் என்ன பேசினோம் என்பதை மறந்து விட்டேன் [நல்லவேளைன்னு யாரு சொல்றது?]. வழி நெடுக இயற்கை வனப்பை அள்ளிப் பருகியபடி சென்றோம் என்று சொல்லத் தேவையில்லை.

குல்மார்க்கில் நாங்கள் தங்க வேண்டிய இடம் ஆப்பிள் ட்ரீ ரிசார்ட். செக் இன் செய்ய வேண்டிய நேரத்திற்கு முன்பே வந்து விட்டதால், வரவேற்பு பானத்தை [வெல்கம் ட்ரிங்க்!] கொடுத்து, "லக்கேஜ்களை இறக்கி வைத்து விட்டு கொஞ்சம் பொறுங்கள்" என்று சொல்லி விட்டார்கள். சரி இங்கு இருந்து என்ன செய்வது பார்க்க வேண்டிய இடத்தை பார்த்து வருவோம் என்று நாங்கள் சன்னியிடம் சரணடைந்தோம். அவன், " நம் பாக்கேஜில் நாளை தான் ப்ளான் படி செல்ல வேண்டும். இன்று செல்லவேண்டும் என்றால் அது உங்கள் செலவு என்று தலைப்பாகையை [அவனுக்கு ஏது தலை?!] சொறிந்தான். உண்மையில், "ஏன்டா இவர்களை அதற்குள் கூட்டி வந்தோம்?" என்ற அவனுக்குத் தோன்றியது போல் இருந்தது. பணம் கிடைக்குமே என்று வேண்டா வெறுப்பாய் ஒத்துக் கொண்டான். பெரிய பெட்டிகளை இறக்கி வைத்து விட்டு பொடிசுகளின் லக்கேஜ்களை மட்டும் எடுத்துக் கொண்டு வண்டி ஏறினோம். ஓட்டல்காரரிடம் "அங்கு நல்ல சாப்பாடு கிடைக்குமா?" என்று கேட்டோம். அவர் "டைட் க்ளோசப்பில்" [இந்த இடத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்] ஒரு ஹோட்டல் பேரை சொல்லி அது தான் அங்கு பிரபலம், அங்கே சாப்பிடுங்கள் என்றார். வண்டி புறப்பட்டது.




ஆஹா, என்ன ஒரு அற்புதமான இடம் அது. பரந்து விரிந்த பசுமை போர்த்திய புல்வெளி. அதன் பின்னே கம்பீரமான பனி போர்த்திய மலைகள். [இதையே நான் இன்னும் எத்தனை தடவை எழுதுவது?] அந்த புல்வெளியில் ஒரு சிறு கோவில். வண்டியிலிருந்து இறக்கி விட்டதும் குதிரைக்காரர்கள் எங்களை சூழ்ந்து கொண்டார்கள். சன்னி ஒதுங்கிக் கொண்டான். அந்த பெரும் புல்வெளியை குதிரையில் சுற்றி வரலாம். ஒருவருக்கு வாடகை அறுநூறு ரூபாய் [பேரம் பேசி வந்தது, இன்னும் அதிகம் சொன்னார்கள்]. வரும் வழியில் இருக்கும் இடங்களை அவர்கள் காட்டிக் கொண்டே வருவார்கள். சரி எந்த அற்புதமான இடத்திற்கு வந்தாலும், நாங்கள் முதலில் செய்யும் வேலை சாப்பிடுவது தான். பிறகு வருகிறோம் என்று அந்த ஹோட்டல்காரர் சொன்ன ஹோட்டலுக்கு போனோம். [ஹோட்டல் ஜூம் ஷாட்!] மூடி இருந்தது. கதவை திறந்து உள்ளே போனால், "எல்லோரும் தொழுக போயிருக்கிறார்கள். கொஞ்சம் நேரம் ஆகும்!" என்றார்கள். சரி என்று கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்தால் அவர்கள் வருவது மாதிரி தெரியவில்லை. பிறகு பக்கத்தில் இருந்த ஒரு தாபாவில் சென்று வயித்துக்கு போட்டுக் கொண்டு முதலில் கோயிலுக்கு போனோம். அது ஒரு சிறிய கோயில். ஒன்றும் பெரிதாய் இல்லை. பிறகு வந்து குதிரைக்காரனிடம் ஒரு மணி நேரம் பேசி ஒரு குதிரைக்கு அறுநூறு ரூபாய் வீதம் ஆறு குதிரைகளை எடுத்துக் கொண்டோம்.



அரபுக் குதிரை கொடுப்பார்கள் என்று பார்த்தால் அழுக்கு குதிரை தான் இருந்தது அவர்களிடம். சரி என்று ஏறி உட்கார்ந்து படையை கிளப்பினோம். மகதீரா படத்தில்  வருவது மாதிரி "நம்ம ஆள் வந்துட்டான்! என்று குதிரை தறி கெட்டு ஓடினால் என்ன செய்வது?" என்றெல்லாம் குதிரைக்காரனிடம் கேட்டேன். அவன் அந்தப் படத்தை பார்க்கவில்லை போலிருக்கிறது. அவன் கண்டு கொள்ளவே இல்லை. குதிரை மெதுவாய் நடை போட்டது.  ஆஹா,  இது வடிவேலு மெரினா பீச்சுல ஏறின குதிரை போல இருக்கே என்று நினைத்து நொந்தேன். குதிரை நடக்கும் போது நம் அங்கமெல்லாம் இந்தக் குலுங்கு குலுங்குகிறது. அதை ஓட விட்டு எப்படி போர் எல்லாம் புரிந்தார்கள் என்று வியப்பாய் இருந்தது.  குதிரைக்காரன் திடீர் திடீர் என்று ஏதோ ஒரு இடத்தை காட்டி "இங்கு தான் பாபியின் "ஹம் தும் எக் கம்ரே மே" பாட்டு எடுத்தார்கள், இங்கு தான் இந்தப் படத்தின் பிட்டு எடுத்தார்கள்" என்பது போன்ற சரித்திரக் குறிப்புக்களை அள்ளித் தெளித்துக் கொண்டே வந்தான். எனக்கு டிம்பிள் கபாடியாவின் ஞாபகம் வந்தது! பனிக்காலத்தில் அந்த இடம் முழுதும் பனி உறைந்து வெள்ளையாய் மாறி விடுமாம். அங்கு பனிச்சறுக்கு சொல்லிக் கொடுக்கும் ஒரு பள்ளியும் இருந்தது. அருகில் ஒரு ஆர்மி கேம்ப்பும் இருந்தது. அங்கு ஒரு பெரிய பார்க்கில் இறக்கி விட்டு "போய் சுற்றி பார்த்து விட்டு வாருங்கள்" என்று அனுப்பி விட்டார்கள். அங்கு பல வண்ணத்தில் காஷ்மீரி உடைகள் தொங்கிக் கொண்டிருந்தது. அதை அணிந்து கொண்டு போட்டோ எடுக்க ஐம்பது ரூபாய். காஷ்மீர் வந்ததில் இருந்து, இப்போது தான் ஒரு விஷயம் நூறு ரூபாய்க்கு கீழ் சொல்லி இருக்கிறார்கள். "ரொம்ப சந்தோஷம்" என்று ஆளுக்கு ஒரு உடையை போட்டுக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தோம். பின்னால் பனி மலை சூழ, பச்சைப் புல்வெளியில், கண்ணை பறிக்கும் ஆடையில் தக தகன்னு மின்னினோம். அங்கிருந்து மறுபடியும் குதிரை ஏற்றம்.  காஷ்மீர் டூரின் சிறப்பான ஒரு நாளாய் அன்று மாறிப் போனது. எல்லோரும் மிகவும் குஷியாய் அனுபவித்தோம். தரு தான் மாலையின் எதிர் வெயிலில் வாடி விட்டாள். தியா குதிரையில் தூங்கியே விட்டாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு தொடங்கிய இடத்திற்கு வந்தடைந்தோம்.







ஒரு காஷ்மீரி டீயை [உப்பு டீ] அருந்துவோம் என்று மறுபடியும் அந்த பிரபலமான ஹோட்டல் கதவை தட்டினோம். அப்போதும் ஏதோ ஒரு காரணத்தை சொன்னார்கள். "அட போங்கப்பா" என்று அதே தாபாவில் தஞ்சம் புகுந்தோம். அருமையாய் சுடச் சுட பக்கோடா எல்லாம் போட்டுக் கொடுத்து எங்களை குஷி படுத்தினார்கள். காஷ்மீரி டீ ஒன்றும் எனக்கு சிலாக்கியமாய் படவில்லை. சரி என்று பக்கோடாவை நன்றாய் ஒரு மொக்கு மொக்கிவிட்டு சன்னியை கண்டுபிடித்து வண்டியில் ஏறினோம். வழியில் அழகான இடத்தில் போட்டோ எடுக்க சன்னி வண்டியை நிறுத்தினான். நாங்கள் அப்போது மலையில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தோம். அங்கு ஒரு அழகான பள்ளத்தாக்கு. தூரத்தில் ஒரு மிக பிரம்மாண்டமான பனி மலை. அருமையாய் இருந்தது. குடும்பத்துடன் போட்டோக்களை எடுத்துக் கொண்டு, சன்னியையும் ஒரு போட்டோ க்ளிக்கினோம். [கேட்டுக் கொண்டதிற்கிணங்க]



ஆப்பிள் ட்ரீ ரிசார்ட்டுக்கு வந்து சேர்ந்தோம். அறைகள் தயாராய், தாராளமாய், விஸ்தாரமாய் இருந்தது. ஆளுக்கு ஒரு அறையை பிரித்துக் கொண்டு கீழே இரவுச் சாப்பாட்டுக்குச் சென்றோம். நல்ல உணவு. உணவை முடித்துக் கொண்டு, புல்வெளியில் வந்தோம். என் மாமா மகன் செட்டில்கார்க் ஆடுவோம் என்று சொல்லி அதை எடுத்து வந்தான். நானும் அவனும் விளையாடுவதை தருவால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. எங்கள் கையில் இருந்த மட்டையை அவள் கையில் எடுத்துக் கொண்டு கார்க்கை அதில் வைத்து அவள் எம்பி எம்பி குதித்தாள். ஏதோ அவளுக்கு ஷாக் அடிப்பது போல் அவள் எம்பிக் குதித்தது பார்க்க ஒரே வேடிக்கையாய் இருந்தது. ஒரு அரை மணி நேர போராட்டத்திற்கு பின் அவளிடம் இருந்து வாங்கி நாங்கள் விளையாடுவதற்குள் நன்றாய் இருட்டி விட்டது. சரி காலையில் சீக்கிரம் வந்து விளையாடுவோம் என்று சொல்லி உறங்கப் போனோம்.

சுற்றுவோம்...
வேலையில்லா பட்டதாரி

தனுஷை சொல்லிக் குற்றமில்லை. சமீபத்திய படங்களில் தனுஷின் நடிப்பை எல்லோரும் புகழும்போது அவருக்கு நன்றாய் இருந்தாலும், அதே சமயம், இந்த படத்தை விற்கும்போது, விநியோகஸ்தர்கள் அவரிடம் "படம் நல்லா இருக்கு, ஆனா  நீங்க சிவகார்த்திகேயனை வச்சி எடுக்குற அடுத்த படத்தையும் எங்களுக்கே கொடுத்தீங்கன்னா உங்க படத்தை வாங்கிக்கிறோம்!" என்று கொளுத்திப் போட்டதாய் கேள்வி. அது உண்மை என்றால், தனுஷ் தொடர்ந்து "வேலையில்லா பட்டதாரி" மாதிரி படத்தை தான் எடுக்க வேண்டி இருக்கும். "புகழ்" காதுக்கும், கருத்துக்கும் நல்லது தான்!  வயித்துக்கு பணம் தானே நல்லது?!

தனுஷ் இந்தப் படத்தை எல்லாம் இடது கையால் ஊதித் தள்ளி விடுவார். "கறியில கை வை, கொன்னுர்றேன்" என்று அவர் வேண்டா வெறுப்பாய் கறி வாங்க போகும்போது ஏதோ நம் பக்கத்துக்கு வீட்டை எட்டிப் பார்ப்பது போல் இருக்கிறது. அத்தனை இயல்பு, யதார்த்தம். தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே ஒரு அம்மா இருப்பதால், சரண்யாவை "தமிழ்த் தாய்" என்று அழைக்கலாம். ஒரு கை வைத்த பனியனை போட்டு, வேஷ்டியை கட்டி,  கொஞ்சம் தலையை நரைக்க வைத்து, கண்ணாடி போட்டால்  தமிழ்த் தந்தை ரெடி. சமுத்ரகனி கச்சிதம். அந்தத் தம்பி தான் அந்தக் குடும்பத்துடன் ஒட்டாமல் இருந்தான். தனுஷ் பக்கத்து வீட்டு ஃபிகரை சைட் அடிக்க உடனே ஒரு டெலஸ்கோப் செய்கிறார். வீட்டின் எல்லா வேலையும் செய்கிறார். பக்கத்து வீட்டில் குடி வந்திருப்பவர்களுக்கு பால், கேஸ் என்று எல்லாம் ஏற்பாடு செய்கிறார். முப்பது செகண்ட் டைம் கொடுத்து பொறுக்கிகளை பின்னி எடுக்கிறார். இப்படி எல்லாவற்றிலும் கில்லியாக இருப்பவருக்கு வேலை தான் கிடைக்க மாட்டேன் என்கிறது!

இப்படி இன்னும் படத்தை பற்றி குறைகளை எழுதலாம். படத்தை விட அது போர் அடிக்கும் அபாயம் இருப்பதால், இந்தப் படம் தனுஷின் வயித்துக்கு என்று சொல்லி முடித்துக் கொள்கிறேன்!

சதுரங்க வேட்டை

விகடன் ஐம்பத்தி இரண்டு மார்க் போட்டு அரை மாமாங்கம் கடந்து விட்டது. ஜிகர்தண்டா வந்த பிறகும் கூட இது சில  தியேட்டர்களில் இன்னும் ஓடிக் கொண்டிருப்பதை வைத்தே படத்தின் தரத்தை சொல்லி விடலாம். கதை விறு விறு; திரைக்கதை பர பர; வசனம் சுருக் சுருக்; இயக்கம் பட பட! ஒரே குறையாக என்று எனக்குப் பட்டது, ஹீரோ ராங் காஸ்டிங்! சவ சவ! என்ன செய்வது, இயக்குனரே  சொல்லிவிட்டாரே, குற்ற உணர்ச்சியில்லாமல் செய்யும் தப்பு தப்பு ஆகாது என்று. ஏனோ படம் நெடுக விஜய் சேதுபதியின் ஞாபகம் வந்து அது ஏக்கமாகவே மாறி விட்டது எனக்கு. அவர் நடித்திருந்தால் இன்னொரு சூது கவ்வும்!  இயக்குனருக்கு ஒரு வேண்டுகோள். இத்தனை ஐடியா வச்சுருக்கீங்க, அதை ஏன் படம் எடுத்து வேஸ்ட் பண்றீங்க..ஒரு முன்னூறு கோடிக்கு ஐடியாவை ரெடி பண்ணி செட்டில் ஆவுங்க பாஸ்! எப்பவுமே ஏமாற எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க :-)

 ஜில் ஜில்...

சேதுவுக்கு அவனை பார்த்து யாராவது சிரித்தால் பிடிக்காது! அப்படி பட்ட ஒருவனை எனக்கு ரொம்ப பிடித்தது [டிரையிலர், படத்தின் முதல் பாதி], பிறகு அவனை பார்த்து ஊரே கை கொட்டி சிரித்தது என்று கதையை மாற்றி விட்டீர்கள் [பின் பாதி]. அது எனக்குப் பிடிக்கவில்லை. "என்னடா சேதுவை பாத்து சிரிக்கிறீங்க?" என்று அவனை போல நானும் ரவுடி ஆகிவிடலாமா என்று தோன்றியது!

சேதுவுக்குப் பிறகு கருணாவும், சங்கிலி முருகனும் கிளாஸ்!

அப்புறம் செளராஷ்ட்ரா மக்களாய் வரும் அம்பிகாவும், லக்ஷ்மியும் சேலை திருடுகிறார்கள் என்று காட்டி இருக்கிறீர்கள்.  எனக்குத் தெரிந்து எங்கள் சமூக மக்கள் கையில் உள்ள தங்கள் சேலையை பறி கொடுத்துவிட்டு வருவார்களே தவிர, இப்படி திருடுவதை நான் கேள்விப்படவில்லை. சரி, சினிமாவில் வரும் அத்தனை கதாப்பாத்திரங்களையும், அவர்களின் சமூகத்தோடு நிறுத்திப் பார்த்தால், ரஜினி பத்து பேரை பறந்து பறந்து அடிக்கும்போது, மராட்டியர்கள் [ரஜினி மராட்டியர் தானே?] யார் இப்படி பத்து பேரை பறந்து பறந்து அடிக்கிறார்கள்? என்று கேட்க வேண்டி இருக்கும் என்பதால் இதை படம் என்று கருதி விட்டு விடுவோம்.

சந்தோஷ் நாராயணனை பற்றி சொல்ல ஒன்றும் அதிகமில்லை. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி இளையராஜா; ஏ ஆர் ரகுமான்; சந்தோஷ் நாராயணன்!

மற்றபடி ஜிகர்தண்டா எல்லோரும் ருசிக்க வேண்டிய பட(பான)ம்!