P K
என் விருப்பத்துக்குரிய நடிகர் ஆமீர் கானின் சமீபத்திய ஹிந்தி படத்தின் பெயர் பீகே! ஹிந்தியில் "பீகே" என்றால் "குடித்திருக்கிறாயா" என்று அர்த்தம் கொள்ளலாம். படத்திற்கும் இந்த பெயருக்கும் என்ன சம்மந்தம்? இருக்கிறது. இந்தப் படத்தில் ஆமீர் கானின் கதாப்பாத்திரம்  குழந்தைத்தனமான பல்வேறு கேள்விகளை எழுப்புவதால் பதிலுக்கு எல்லோரும் "குடித்து விட்டு வந்திருக்கிறாயா?" என்று கேட்கிறார்கள். அதற்காக படத்தின் பெயரையே அப்படி வைத்து விட்டார்கள்.

ஏன் அவர் அப்படி குழந்தைத்தனமான கேள்விகளை கேட்கிறார்? ஏன் என்றால் அவர் வேற்று கிரக ஆசாமி! நம்மை போல் பிற ஜீவராசிகளை தேடி பூமியை அடைகிறார். அதனால் பூமியில் பார்க்கும் எல்லாவற்றையும் கேள்வி எழுப்புகிறார்! வேற்று கிரக ஆசாமி பூமியில் வந்து இறங்கினால் என்னவாகும்? அவன் திரும்பிச் செல்ல உதவும் அவனுடைய கழுத்துப் பட்டை திருடப்பட்டால் என்னவாகும்? இது தான் பீகே!

ராஜ்குமார் ஹிரானி என்னுடைய விருப்பத்துக்குரிய திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனர். அவருடைய முன்னாபாய் சீரிஸ் என்னை மிகவும் கவர்ந்தது. யாரையும் எளிதில் ஒப்புக்கொள்ளாத ஆமிர் இரண்டாம் முறையாக ராஜ்குமார் ஹிரானியுடன் கை கோர்க்கிறார் என்றால் அவரிடம் விஷயம் இல்லாமல் இருக்காது. முன்னாபாய் சீரிஸ், 3 இடியட்ஸ் என்று கடந்த பத்து வருடத்தில் அவர் பாலிவுட்டில் காட்டிய பாய்ச்சல் அசாதாரணமானது. அதே பாய்ச்சல் பீகேவிலும் தொடர்கிறது. அபிஜித் ஜோஷியுடன் ஜோடி சேர்ந்து இவர் எழுதும் ஒவ்வொரு திரைக்கதையும் பட்டாசு கிளப்புகிறது. ஒரு காலத்தில் ஹிந்தி திரை உலகை ஆண்ட சலீம் ஜாவேத் மாதிரி இவர்களும் தொடர வாழ்த்துக்கள்.

ராஜ்குமாரின் திரைக்கதையின் முக்கிய அம்சம் ஒரு சமூகப் பார்வை கொண்ட கதைக் களன். ஒவ்வொரு காட்சியும் பார்வையாளனை நெகிழச் செய்து அவனை/அவளை ஆனந்தக் கண்ணீர் விட வைப்பது! ஒவ்வொரு படத்திலும் என்னை அழ வைப்பதால் அவரை நான் வெறுக்கிறேன்; அதே சமயம் சினிமா என்ற மாய பிம்பத்தின் ஊடே அவர் என் நெஞ்சை தொட்டு என்னை அழ வைப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். அது தானே சினிமாவின் பலம். அதை செய்யத் தெரிந்தவன் தான் சினிமா மொழி தெரிந்தவன். நான் இவருடைய படங்களில் மிகவும் ரசித்தது "லகே ரஹோ முன்னாபாய்". ஒரு லோக்கல் தாத்தா லேசாய் மனம் பிரழ்ந்து காந்தியுடன் சிநேகம் கொண்டால் என்னவாகும்? என்னை ஒரு முரணான கதைக்களன். அதகளப்படுத்தி இருப்பார்!

பீகேவை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஏற்கனவே இணையத்தில் நல்லமுறையில் பல விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டன. சிலர் வெகுவாக நெகிழ்ந்து இது ஒரு வாழ்நாளுக்கான திரைப்படம் என்று போற்றுகிறார்கள்! சந்தேகமே இல்லாமல் நல்ல கதை, நல்ல திரைக்கதை, நல்ல வசனம், நல்ல நடிப்பு. ஆனால் என்னை பொருத்தவரை படம் பல இடங்களில் திசை மாறிச் சென்று விட்டதை போல தோன்றியது. அனுஷ்காவின் காதல் கதை அரைவேக்காடாய் தோன்றியது. அனுஷ்காவின் வாயை [லிப்ஜாப்] ஏன் இப்படி செய்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. வழக்கமான ராஜ்குமாரின் ஆஸ்தான நடிகர்கள் பொமன் இராணி, சௌரப் சுக்லா சலிப்பூட்டுகிறது.  மேலும் சொல்லத் தெரியவில்லை!

நாட்டில் ஒன்றிரண்டு நல்ல இயக்குனர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களையும் குறை சொல்லிக் கொண்டிருந்தால் வேலைக்காகாது. முதல் படத்தில் அன்பு கொள் என்றார்; அடுத்த படத்தில் அகிம்சை வழி நட என்றார்; மூன்றாவது படத்தில் பிடித்ததை செய்யுங்கள் என்றார். இந்தப் படத்தில் மதத்தின் பெயரால் அறிவிழக்காதீர்கள் என்கிறார்!  நல்லதையே சொல்கிறார்; அதையும் சிறப்பாய் சொல்கிறார். கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கட்டுமே!

பீகே அவசியம் பார்க்கலாம்.

"சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு, கண்டதுண்டா?" என்ற ஒரு பாடல். இந்த பாட்டில் தலைவருக்கு சில எக்ஸ்க்ளூசிவ் க்ளோசப் இருக்கும். மனிதர் அள்ளுவார். அமலாவும் அம்சமாய் இருப்பார். பாடலும் நல்ல பாடல் தான். இதை எல்லாம் மீறி, அந்தப் பாடலை பார்ப்பது மனதுக்கு மிகவும் வருத்தம் தரும் செயல். என்ன நினைத்து வைரமுத்து பாட்டின் பல்லவியில் சேலையை கொண்டு வந்தாரோ, பாட்டில் படாத பாடுபடுவது அமலா தான்!

[டூயட் பாடல்களில் அடிக்கடி ஆடைகள் மாறுவதுண்டு. என் சிறு வயதில் இந்த ஆடை மாற்றம் எப்படி நிகழ்கிறது என்று என் மனதில் கேள்வி எழும். சரி, மரத்தை சுற்றி பாடும்போது மரத்துக்கு பின்னால் மாற்றிக் கொள்வார்கள் போல என்று நானே நினைத்துக் கொண்டு சமாதானம் அடைந்து விட்டேன்! இந்தப் பாடலில் தான் உண்மையில் ஆடை மாற்றுவதை கொஞ்சமாவது காட்டி இருக்கிறார்கள்!]

ரஜினியின் அருகில் அமலா வந்தால் போதும், அவருடைய சேலையை மனிதர் சரேலென்று உருவி விடுகிறார். அதுவும் ஸ்டைலாக! என்ன ஒரு கதாநாயகத்தனம்!! உடனே அமலாவுக்கு இன்னொரு சேலை. மறுபடியும் உருவுகிறார். பாவம் அமலா. இதை படம் எடுக்கும்போது ரஜினிக்கோ, பாரதிராஜவுக்கோ, நடன இயக்குனருக்கோ "வெட்டவெளியில் வைத்து நாம் இப்படி ஒரு பெண்ணை அசிங்கப்படுத்துகிறோமே" என்று தோன்றி இருக்காதா? விளையாட்டுக்காகவாவது அமலா ரஜினியிடம், "சார் வைரமுத்து சாரை சட்டை, பேன்ட் வச்சி ஒரு பாட்டு எழுத சொல்லுங்க, அதுல நான் உங்க சட்டை பேண்ட்டை புடிச்சி இழுக்கிறேன்!" என்று சொல்லி இருப்பாரா? குழந்தைகள், பெண்கள் என்று ரஜினியின் படங்களை பார்க்காத ஆள் கிடையாது. இப்படி ஒரு காட்சியை படத்தில் எப்படி வைக்கலாம் என்று ரஜினியும் சரி, பாரதிராஜாவும் சரி, நடன இயக்குனரும் சரி யாருமே சிந்தித்திருக்க மாட்டார்களா? சரி, இது தான் நடன அமைப்பு என்றால், அந்த செயலுக்கு பொருத்தமானவர் படத்தின் வில்லன் தானே? ஒரு வேலை அவர் தான் படத்தில் கதாநாயகியின் அப்பா என்பதால் விட்டுவிட்டார்களா? இதில் கொடுமை என்னவென்றால் இதுவரை இந்தப் பாடலை பார்த்து நமக்கு எதுவுமே உறுத்தாது தான்!. அப்படி என்றால் தமிழ் சினிமா எவ்வளவு தூரம் நம்மை அழுக்காக்கி இருக்கிறது?

சமீபத்தில் பார்த்த சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் கடைசி எபிசோட் "ஆண்மை" பற்றியது. ஒரு குடும்பத்தில் ஆண் என்பவன் எப்படி இருக்க வேண்டும், இப்போது எப்படி இருக்கிறான் போன்றவைகளை அலசினார்கள்.  அதில் ஒரு பகுதியில் ஆண்வர்க்கம் நிறைந்த சினிமாவில் பெண்களை எப்படி காண்பிக்கிறார்கள் என்று அலசினார்கள். பெண்களை போகப் பொருளாய் காட்டுவது, ஐட்டம் டான்ஸ், பாடல் வரிகளில் தந்தூரி சிக்கன், லெக்பீஸ், நாட்டுக்கட்டை என்றெல்லாம் வருவதை சொல்லி ஷாருக், சல்மான், அக்ஷய் என்று எல்லா ஹீரோக்களின் சில படங்களின் வீடியோ கிளிப்ஸ்களை காட்டினார்கள். அதில் நிகழ்ச்சி தொகுப்பாளரான ஆமீர்கானையும் விட்டுவைக்கவில்லை. "என் படமும் இதில் இருக்கிறது, அப்போது தெரியவில்லை, ஆனால் இப்போது அதை நினைத்து வெக்கப்படுகிறேன்" என்று சொன்னார். சினிமா போன்ற மீடியாவில் எதை காண்பிக்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தான் உணர்வதாக சொன்னார்.

எனக்கு வருத்தம் என்னவென்றால் மிகச் சில நடிகைகளை தவிர மற்றவர்கள் இவ்வாறான காட்சிகளுக்கு கேள்வி எழுப்புவதே இல்லை! பழம்பெரும் நடிகை பானுமதியை பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். ஞாபகத்தில் இருப்பது வரை சொல்கிறேன். ஏதோ ஒரு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி! எம்.ஜி.ஆர் கத்திச் சண்டை இட்டு நம்பியாரிடம் இருந்து பானுமதியை காப்பாற்ற வேண்டும். ஒரு டேக், இரண்டு டேக், மூன்று டேக் என்று போய்க் கொண்டே இருக்கிறது. அலுத்துப் போன பானுமதி எம்ஜிஆரிடம், "மிஸ்டர். ராமச்சந்திரன், நீங்க ரெண்டு பேரும் கத்திச்சண்டை போட்டுட்டே இருக்கீங்க. ஆனா என்னை இன்னும் காப்பாத்த மாட்டேங்கிறீங்க. பேசாம அந்த கத்தியை என்கிட்டே கொடுங்க. நானே என்னை காப்பாத்திக்கிறேன்!" என்றாராம். நம் தமிழ் சினிமாவுக்கு சில பானுமதிக்கள் வேண்டும்.

சமீபத்தில் கமல் நடித்த சத்யா பார்த்தேன். உலக நாயகன் என்ற எந்த வித உபத்திரவமும் மனதில் கொள்ளாமல் மிக அருமையாய் நடித்திருக்கிறார். நாயகனுக்குப் பிறகு வந்த படம் என்று நினைக்கிறேன். சத்யா, எழுபதுகளில் பிரபலமாய் இருந்த திரைக்கதை ஆசிரியர்களான சலீம் ஜாவேத் ஜோடியின் ஜாவேத்தின் திரைக்கதையில் வந்த அர்ஜுன் என்ற ஹிந்தி படத்தின் தழுவல். என்னை பொருத்தவரை ஒரிஜினலை போல் எப்போதும் ரீமேக்குகள் இருப்பதில்லை. [தில்லு முள்ளு ஒரு விதி விலக்கு என்று நினைத்திருந்தேன்; இப்போது சத்யாவையும் சேர்த்துக் கொண்டேன்] ஹிந்தியில் சன்னி தியோல் நடித்திருக்கிறார். தமிழ் தான் முதலில் பார்த்து இருந்ததால் அது பிடித்திருந்தது. சரி ஹிந்தியை பார்ப்போம் என்று பார்த்தேன். கால் படத்தை தாண்ட முடியவில்லை. சன்னி தியோல் இந்த மாதிரி கோபக்கார இளைஞன் [அமிதாப்புக்குப் பிறகு] பாத்திரத்தை சரியாய் செய்பவர் தான். இருந்தாலும் கமல் இதில் ஜொலித்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

வழக்கமான ஒரு மசாலா படம் தான் என்றாலும், சில நல்ல காட்சிகளால், கச்சிதமான வசனங்களால் [வசனம்:அனந்து], கமலின் அருமையான நடிப்பால் [சொல்லப்போனால் படத்தில் நடித்த அனைவரும் நன்றாகவே நடித்திருந்தார்கள்!] பல இடங்களில் சத்யா மிளிர்கிறது. முதலில் கமலின் உருவம். கையில் வராத அளவுக்கு முடி முளைத்த மொட்டை தலை, கூர்மையான கண்கள், அவருடைய செவ்வுதடுகளை மட்டும் கொஞ்சமாய் காட்டும் அடர்த்தியான அவர் தாடி, காலர் இல்லாத சட்டை, பழுப்பான ஜீன்ஸ் என்று தான் உருவத்தில் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கிறார். எனக்கு என்னமோ தசாவதாரம் படத்தின் மேக்கப்பை விட இது தான் பிடித்தது!

இந்தப் படத்திலும் கேட்பாரே இல்லாத அழகான கதாநாயகி, யாரையும் அடித்து துவம்சம் செய்து விடும் ஹீரோயிசம் என்று சினிமாத்தனங்கள் இருந்தாலும் சில நல்ல காட்சிகளுக்காக மன்னிக்கலாம். உதாரணமாய்...

சத்யா ஒரு ஆள் அரவமற்ற ரெஸ்டாரன்ட்டில் தான் தங்கையை அவள் காதலனுடன் பார்க்கிறான். இப்படி ஒரு காட்சியே தமிழ் சினிமாவுக்கு அப்போது புதுசு தான். வழக்கமான தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு ஒன்றுக்கு இரண்டு கதாநாயகிகள் இருப்பார்கள். ஆனால் அவன் தங்கை என்று வந்து விட்டால், மற்ற ஆடவரை ஏறெடுத்து பார்க்காத எட்டு முழ புடவை/தாவணி சுற்றிக் கொண்டு, குணவதியாக, குடும்ப குத்து விளக்காக தான் இருப்பார். அப்படியே தப்பித் தவறி காதலித்தாலும், அவன் ஒரு கல்லூளிமங்கனாய் இருப்பான். கதாநாயகன் தங்கையை அவனிடமிருந்து காப்பாற்றுவான், அல்லது அவனை திருத்துவான். இப்படி எதுவுமே இல்லாமல் காதலுடன் வெளியே சுற்றும் தங்கையை கதாநாயகன் கண்டு கொள்வதை போன்ற ஒரு காட்சியை பார்க்கும்போது ஆனந்தமாய் தான் இருந்தது. [இதே போன்று ஒரு காட்சி பாஷா படத்திலும் வருகிறது. இரண்டையும் ஒப்பிட்டு பாருங்கள்! ரஜினி பெண்ணிய விஷயத்தில் எத்தனை பின்தங்கி இருக்கிறார் என்று புரியும்; சுவாரஸ்யமாய் இருக்கும்]


அவர்கள் இருவரும் ஒரு ஃ பேமிலி ரூமில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தங்கையின் குரலை கேட்ட சத்யா சடாலென்று உள்ளே நுழைகிறான். அவனை அங்கு எதிர்பார்க்காத இருவரும் நிலை தடுமாறி போகிறார்கள். நிலைமையை சமாளிக்க தங்கை, சத்யாவுக்கு அவரை அறிமுகப்படுத்துகிறாள். அவர் ஒரு இன்ஸ்பெக்டர் என்றும், அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் சொல்கிறாள். சத்யா இன்ஸ்பெக்டரை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறான். "ஏன்யா, இன்ஸ்பெக்டர் தானே நீ? அது என்னய்யா ஃபேமிலி ரூம்ல ஒழிஞ்சுட்டு லவ் பண்ற?" என்ன ஒரு கேள்வி பாருங்கள்! சத்யாவுக்கு அவர்கள் ஒழிந்து கொண்டு காதலிப்பது தான் பிடிக்கவில்லை :) பிறகு அவனை தீர்க்கமாய் பார்த்துக் கொண்டே சத்யா அவரிடம் "மை சிஸ்டர், ஆர் யு சீரியஸ்?" என்கிறான். அவரும் அசடு வழிந்து கொண்டே "ஆமா, ரொம்ப சீரியஸா ரெண்டு பேரும்" என்று மென்னு முழுங்கும்போதே, அவரிடம் தான் கையை நீட்டி "ஐ அம் சத்யா" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அண்ணன் சம்மதித்து விட்டான் என்று துருதுருப்பில் "அதெல்லாம் நான் ஏற்கனவே" என்று வாயெடுக்கும் தங்கையை பொய் கோபத்துடன் "நீ சும்மா இரு" என்று சொல்லி அவள் அடங்கியதும் அவளை பார்த்து சிரிக்கிறான். பதிலுக்கு அவளும் சிரிக்கிறாள். இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்று அந்த காதலன் முழிப்பதை உணர்ந்த சத்யா அவரின் தோளை தட்டிக் கொடுத்து "சிரிக்கலாம்" என்கிறான்.  என்ன ஒரு அருமையான காட்சி. கவிதையாய் இருக்கிறது. இதை விட எதார்த்தமாய் அந்த ஒரு தருணத்தை அணுக முடியுமா என்று தெரியவில்லை. ஒரு பாசக்கார, கோபக்கார அண்ணனாக கமலின் நடிப்பு உச்சம்.

பிறகு இன்னொரு காட்சியில் சத்யாவின் நண்பர்கள் கதாநாயகியை அவனுடன் சேர்த்து வைத்து கேலி பேசுவார்கள். அவளை வீட்டுக்கு விடும்போது சத்யா "சாரிங்க, பசங்க கொஞ்சம் அசிங்கமா பேசிட்டாங்க, நீங்க ஒன்னும் தப்பா நெனச்சுக்காதீங்க!" என்கிறான். பதிலுக்கு மலையாளத் தமிழில் அவள், "ஏன் நல்லா தானே பேசினாங்க" என்று புரியாமல் கேட்க, "இல்லைங்க, ரெண்டாவது நாள் தான் சந்திக்கிறோம், அதுக்குள்ளே அண்ணின்னு எல்லாம் பேசக்கூடாது இல்லையா.." அவள் "அப்போ பத்து நாள் கழிச்சி பேசலாமா?" அதற்கு சத்யா "அது கொஞ்சம் கெளரவமா இருக்காது?!" என்று அவளிடமே கேட்டு அவள் சிரிக்கும்போது அவளுக்கும் இஷ்டம் தான் என்று உணர்ந்து "இன்னும் எட்டு நாள் இருக்கு" என்கிறான்! கிளாஸ்!!

அதே போல் தான் தந்தையை மரியாதை குறைவாய் நடத்து முதலாளியை துவம்சம் செய்யும் காட்சி. கமல் மிக அனாயாசமாய் நடித்திருப்பார். செம அடி வாங்கிய பிறகு, அந்த முதலாளி, "அய்யோ அவருக்கு இவ்வளவு பெரிய பையன் இருக்காருன்னு தெரியாம போச்சுங்க,  ரெண்டு பொண்ணுங்க இருக்குன்னு தெரியும்" என்று சொல்லிவிட்டு, மேலும் அடி விழுகும் என்று சுதாரித்துக் கொண்டு "அய்யோ தங்கச்சி மாதிரிங்க நீங்க என் அண்ணன் மாதிரிங்க என்று அவர் அழுவது செம...அதற்கு சத்யா சொல்லும் பதில் "இதை முன்னாடியே ஒத்துட்டு இருந்தா இவ்வளவு பெயிண்ட் செலவு இல்லைல்ல?" தூள்! அவரை அடித்து ஷெல்பில் தொங்கவிட்டு அவர் முகத்தில் பெயிண்ட் பூசிக் கொண்டே சத்யா தான் யார் என்று சொல்லும் விதம் பிரமாதம். ஒரு கட்டத்தில் அவர் அடி தாங்க முடியாமல், "சார் வேற எதுனா ஒடச்சுட்டு போறதா இருந்தா போறீங்களா, என்னால முடியலை" என்று கூறுவார். அதற்கு சத்யா சலிப்புடன், "என்னாலயும் முடியலையா! உத்தரவு குடுய்யா" என்று கிளம்புவான், செம மாஸ் சீன்!

இந்தப் படத்தின் ஒரு முக்கியமான சிறப்பு அம்சம், கிட்டிக்கு எஸ் பி பியின் குரல்! அடடா..அந்த ஒரு வில்லத்தனமான பாத்திரத்துக்கு, தேன் தடவி பேசுறார் என்று சொல்வோமே, அத்தனை பொருத்தம். அவரிடம் சத்யா வந்து சேர்ந்தவுடன் அவரின் அன்பில் திக்கு முக்காடிப் போயிருப்பான். அப்போது அவர் "வேற ஏதாவது வேணுமா சத்யா? பணம் ஏதாவது?" கேட்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் சத்யா தடுமாறிக் கொண்டே, "என் தங்கச்சி டவ்ரி, ஒரு இருபது.." என்று சொன்னவுடன் அவர் தான் உதவியாளரிடம் பணம் கேட்க திரும்புவார். அதற்குள் சத்யா ஏது இருபது ரூபாயை எடுத்து கொடுத்து விடப் போகிறாரோ என்று பயந்து, "சார், சார், இருபது...ஆயிரம் சார்" என்று சொல்லும்போது ஒரு சாமானியனுக்கு இருபது ஆயிரம் என்பது எவ்வளவு பெரிய தொகை என்று தான் நடிப்பின் மூலம் சொல்லாமல் சொல்லி இருப்பார் கமல். கையில் பணம் வாங்கிக் கொண்டு நன்றியோடு அழும் சத்யாவை பார்த்து, முதலில் அந்தப் பணத்தை கடனாக தரவில்லை என்று சொன்னவர், "சரி, இது கடன் தான், சத்யாவுக்கு நான் கொடுத்த கடன், இதை திருப்பித் தாங்க திருப்பித் தாங்கன்னு டெய்லி உங்களை தொந்தரவு பண்ண போறேன்; போதுமா? என்னப்பா நீங்க?" எஸ் பி பியின் குரல் அப்படி நடித்திருக்கும்.

பிறகு தன் தங்கையின் புகுந்த வீட்டில் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கும் இடத்தில் கமல் அதகளப்படுத்தி இருப்பார். பணத்தை இறைத்து விட்டு, அந்த முதுகெலும்பில்லாத மாப்பிள்ளையை மிரட்டும் போதும் சரி, பிறகு அவரின் குணம் அறிந்து அவரை பார்த்து பரிதாபப்படும்போதும் சரி, தனிக்குடித்தனம் போங்கள் என்று தைரியம் கொடுக்கும்போதும் சரி, பிறகு தங்கையின் நல்ல குணத்தை பார்த்து பெருமிதப்படும் போதும் சரி! கமல்; கமல்; கமல்!! சான்சே இல்லை...தங்கையை பார்த்துக் கொண்டே அவள் சொல்வதும் சரி தான் என்று தோன்றி, ஒரு "பாஸ்" விட்டு அந்த மாப்பிள்ளையிடம் கை கொடுத்துவிட்டு "பாத்துக்குங்க!" என்று சொல்லி புறப்படுவார். அப்பா...அத்தனையும் தேர்ந்த நடிப்பின் நுணுக்கங்கள்...

இப்படி படம் முழுதும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் தான். வாய்ப்பு கிடைத்தால் மறுபடியும் பாருங்கள்.

"உன் பேர் என்னடா?"
"சத்யா டா!"  
ஒரு புது முயற்சி. தங்கள் ஆதரவு வேண்டி...

நேற்றைய நாளிதழில், மறுபடியும் தீபாவளிக்காக ஒரு சிறப்பு ரயில் விளம்பரம். நாளிதழ் வாங்கியவர்கள் அதில் படித்தார்கள். வாங்காதவர்கள் வாட்ஸ் அப்பில், ஃபேஸ்புக்கில் அந்த செய்தியை படித்தார்கள். நான் இரண்டாவது ரகம். பல வருடம் பசியோடு காத்திருந்த ஒரு விலங்கினை போல் அந்த செய்தியை நான் எதிர் கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் மூன்று மாதம் முன்பு தீபாவளிக்காக முன்பதிவு தொடங்கப்பட்ட அந்த நாளை ஒரு போர்வீரனை போல் எதிர்கொண்டு மோசமாய் தோற்றுப் போயிருந்தேன். நான் Available லின்க்கை க்ளிக்கும்போது கொத்து கொத்தாய் இருந்த சீட்டுக்கள், பணம் கட்டி திரும்ப வரும்போது என்னை காத்திருப்பு பட்டியலுக்கு தள்ளிவிட்ட சோகம் நடந்தேறியது அன்று. சரி மூன்று மாதம் இருக்கிறதே, கிடைத்து விடும் என்று தான் நினைத்தேன். அது என்னமோ சென்னையில் உள்ள அத்தனை பேரும் இந்த முறை மதுரையில் தான் தீபாவளி கொண்டாடுவோம் என்று முடிவெடுத்து விட்டதை போல இன்று வரை அந்த காத்திருப்பு பட்டியிலில் ஒரு முன்னேற்றத்தையும் காணோம். சென்னை திரும்பி வருவதற்கான டிக்கட் என் பூர்வ ஜென்ம புண்ணிய பலனால் கிடைத்து விட்டது. மதுரை போவதற்கு தான் வழி இல்லை. ரெட்பஸ்காரன் வேறு எனக்கு பெர்சனலாய் மெயில் போட்டுஎன்ன உங்களை ஆளையே காணோம், இந்தாங்க டிஸ்கவுண்ட்!” என்றெல்லாம் என்னை ஆசை காட்டி அழைத்தான். சரி என்று நம்பி உள்ளே போய் பார்த்தால் ஏன் அவன் டிஸ்கவுண்ட் கொடுக்கிறான் என்று அப்போது தான் புரிந்தது. தீபாவளி என்பதற்காக பஸ் டிக்கட் எல்லாம் ப்ளேன் டிக்கட் விலை ஆகி இருந்தது! “அட போங்கப்பா டட்காலே சரணம்!” என்று நான் பதுங்கி இருந்த போது வந்த செய்தி அது!

சும்மா போகும் ரயிலுக்கே கொத்து கொத்தாய் வந்து விழுவார்கள். தீபாவளிக்கான சிறப்பு ரயில் வேறு, ப்ரீமியம் ரயில் விட்டதற்கே  "பண்டிகை டயத்துல ப்ரீமியம் ரயிலாடா விடறீங்க?" என்று பயங்கர காண்டில் வேறு இருக்கிறார்கள்கேள்வியே கிடையாது நாளைக்கு சட்டை கிழியுது என்று நினைத்துக் கொண்டேன்நேற்று இரவே அதை எதிர்நோக்குவதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிவிட்டேன். நேரத்திற்கு படுக்கைக்குச் சென்று விட்டேன். அப்பா, அம்மாவிடம் டிக்கட் புக் செய்ய காலையில் எழுப்புமாறு சொல்லிவிட்டேன். பத்தாதற்கு மாமனாரிடமும் ஒரு பிட்டு போட்டு வைத்து விட்டோம். எல்லாம் தயார்! காலையில் ஆறு மணியில் இருந்து அலாரம் வைத்து, அதன் தலையில் தட்டி தட்டி, ஒரு வழியாய் ஏழரைக்கு எழுந்தேன்ஒரு ஏழரையை எதிர்நோக்க ஏழரைக்கு எழுவது எத்தனை பொருத்தம்! பல்லை துலக்கி விட்டு, லேப்டாப்பை திறந்தேன்வீட்டில் உள்ள இணையம் மெதுவாய் இருப்பதாய் மனைவி சொன்ன ஞாபகம் வந்தது. என் கம்ப்யுட்டர் மவுஸ் சில நாட்களாய் படு வேகமாய் வேலை செய்கிறது. நான் சிங்கிள் க்ளிக் செய்தால் அது டபுள் க்ளிக் செய்கிறது. நான் டபுள் க்ளிக் செய்தால் அது ட்ருபுள் க்ளிக் செய்கிறது. அதன் க்ளிக் ஸ்பீடை குறித்தும் பார்த்து விட்டேன். அது கண்டுக்கவே இல்லை. வீட்டில் ஒரு மவுஸ் கூட நம்மை மதிக்க மாட்டேன் என்கிறது. எல்லாம் அகராதி புடிச்சுது!

சடாரென்று ஒரு யோசனை! தம்பி உடையான் படைக்கு அஞ்சான் [இது மொத்த வித்தையும் எறக்குன அஞ்சான் இல்லை!]! "என்னையாடா கலாய்கிறீங்க, என் தம்பி ஒருத்தன் இருக்கான்டா!" என்று அவனுக்கு ஃபோனை போட்டேன். பெங்களூர் குளிரில் சுகமாய் தூங்கிக் கொண்டிருந்தான். எந்த பேட் வேர்ட்சும் யூஸ் பண்ணாமல் பரதன் ராமனின் பாதுகையை சுமந்து சென்றதை போல் கடமையே கண்ணாக எழுந்து கொண்டான்! “இப்போ வாங்கடா!” என்று இறுமாந்து அந்த எட்டு மணி ராகு காலத்துக்கு காத்திருந்தேன். அந்த சிறப்பு ரயிலின் நேர் உள்ள SL என்ற லின்க்கில் கையை வைத்துக் காத்திருந்தேன்..பெங்களூரில் என் தம்பி அதே போல் காத்திருந்தான்மணி ஏழு அம்பத்தொம்போது, நான் கிளிக்கே செய்யாமல் என் மவுஸ் க்ளிக் செய்து கொண்டிருந்தது. ராஸ்கல்! பிறகு தான் என் கை நடுக்கம் அது என்று புரிந்தது. மணி எட்டு. பதமாய் க்ளிக்கினேன். “441 Available” என்று சொன்னது. எனக்கு பேராசை இல்லை; இரண்டு டிக்கட் கிடைத்தால் போதும். க்ளிக்கினேன். என் பெயர், என் மனைவி பெயர், என் மகள் பெயர் என்று எல்லாவற்றையும் ஏற்கனவே சேமித்து வைத்த லிஸ்டில் இருந்து காலி டப்பாவில் நிரப்பினேன். சரி பார்த்துக் கொண்டேன். பேங்க்கை தேர்ந்தெடுத்தேன். பணத்தை கட்டினேன். அந்தச் சுட்டி பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பி எங்கு தொடங்கினோமோ அதே இடத்திற்கு வந்து சேர்ந்தது. கண்ணை விரித்து பார்த்தேன். S6 பெட்டியில் முத்து முத்தாக இரண்டு டிக்கட்டுகள் பதிவாகி இருந்தது. அதற்குள் ஜீடாக்கில் டாக்கிய என் தம்பி S9 கோச்சில் இரண்டு டிக்கட்டுகளை பதிவு செய்து விட்டேன் என்று சொன்னான். வேண்டியது இரண்டு, கிடைத்தது நான்கு! என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. உழைப்பு வீண் போகவில்லை என்று பெருமிதம் அடைந்தேன். என் தம்பி ஃபோன் செய்தான். எதை கான்சல் செய்வது என்று யோசித்தோம். "தாம்பரம் ஸ்டேஷனில் S9 முதலில் வருமா இல்லை S6 முதலில் வருமா?" என்று என்  தம்பியை கேட்டேன். அவன் இப்போது பேட் வேர்ட்ஸ் உபயோகிக்கத் தொடங்கினான். அதற்குள் என் மனைவி, "இரண்டையும் கான்சல் செய்து விடாதீர்கள்!" என்று சீரியசாய் அறிவுரை கூறினாள். ["நான் என்னமோ கிறுக்கன் மாதிரியே பேசுறது"] “சரி நீயே கான்சல் செய்!” என்று என் தம்பியிடம் சொல்லிவிட்டு நிமிர்ந்தேன். அப்போது ஒரு யோசனை, வியர்வை சிந்தி ரத்தம் சிந்தி, காப்பி சிந்தி இந்த டிக்கட்டை வாங்கிய பெருமிதத்தில் இப்போது வெயிட்டிங் லிஸ்ட் நம்பர் என்ன இருக்கிறது என்று பார்ப்போம் என்று அதே ரயிலின் புக்கிங் லிக்கை க்ளிக் செய்தேன்.

128 Available என்றது!

இதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. கடந்த இரு நாட்களாக மிகுந்த மன உளைச்சலாய் இருக்கிறது. அதை பற்றி சிந்திக்கவே வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், நம்மை சுற்றி உள்ளவர்கள் விட மாட்டேன் என்கிறார்கள். டில்லி உயிரியல் பூங்காவில் நடந்ததை தான் சொல்கிறேன். முதலில் ஒரு செய்தியாய் அதை வாசித்ததாய் ஞாபகம். அதை கற்பனை செய்யவே என்னால் முடியவில்லை. பிறகு அந்த குரூர நிமிடங்களில் அங்கிருந்தவர்கள் கைபேசியில் எடுத்த புகைப்படத்தை இணையம் எங்கும் வெளியிட்டார்கள். அதோடு நின்றால் பரவாயில்லை. இப்போது அந்தப் படத்தை எடிட் செய்து அதோடு சேர்த்து, தாய்லாந்தில் புலிகள் சரணாலயத்தில் வாழும் சாதுப் புலிகளுடன் தாங்கள் எடுத்த செல்பீக்களை  போட்டு, "நான்னா புலியே மிரளும்!" என்று பஞ்ச் ஜோக் அடிக்கிறார்கள். இதில் நம் மீடியாவின் சேவை இருக்கிறதே!!! "பையனை அடித்துக் கொன்ற புலியை காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது!" என்று ஒரு செய்தி!! அடப்பாவிகளா! உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? எல்லாமே உங்களுக்கு ஜோக், நியுஸ் தானா?

முதலில், ஒரு சக மனிதன் சாகும் தருவாயில் இருக்கும்போது எப்படி கைபேசியில் அதை படம் பிடிக்க முடிகிறது என்று யோசித்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.  சரி, ஒரு வெள்ளை புலியை பார்க்கும்போது அங்கிருப்பவர்கள் கையில் கைபேசியை வைத்து படம் பிடித்துக் கொண்டிருந்திருப்பார்கள் அப்போது இந்த சம்பவம் நடந்தவுடன் அதையும் படம் பிடித்திருப்பார்கள் என்று நானே என்னை தேற்றிக் கொண்டேன். ஆனால் நேற்று தான் நான் என்னைத் தேற்றிக் கொண்டது முற்றிலும் தவறு என்று புரிந்து கொண்டேன். மனிதர்கள் நான் நினைத்ததை விட கொடூரமானவர்களாகவே இருக்கிறார்கள். நேற்றிலிருந்து இணையத்தில் அதன் வீடியோ உலா வரத் தொடங்கி இருக்கிறது. அதை ஏதோ புது ரஜினி படம் போல் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் அந்தப் பையனை அடித்துக் கொன்ற புலி கொடூரமானதா, அதை வீடியோ எடுத்தவர்கள் கொடூரமானவர்களா, அல்லது அதையும் பார்த்து விட்டு எல்லோருக்கும் பகிர்பவர்கள்  கொடூரமானவர்களா?

வீடியோ எடுக்கும்போதும், அதை பகிரும்போதும், அத்தகையை தருணத்தில் நாம் அவன் இடத்தில் இருந்தால் நம்முடைய மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று யாருக்கும் தோன்றாதா? பத்து நிமிடம் அந்தப் புலி அந்தப் பையனின் அருகில் நின்று அவனை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. பிறகு அங்கிருப்பவர்கள் சத்தம் எழுப்பியதை தொடர்ந்து அது ஆவேசமாகி அந்தப் பையனை கொன்றது என்று படித்தேன். அந்த கொடிய தருணத்தை எப்படி இவர்களால் படம் பிடிக்க முடிகிறது என்று எனக்கு புரியவேயில்லை. சரி இப்போது அதை பகிர்வதால் யாருக்கு என்ன நன்மை, அதில் என்ன கிடைத்து விடப் போகிறது? அப்படி என்ன ஒரு குரூர சந்தோசம்? என் மனதில் ஆயிரம் கேள்விகள். ஒரு வேளை இது ஒரு உப்பு பெறாத  விஷயம், நான் தான் ஓவர் ரியாக்ட் செய்கிறேனா, ஒன்றுமே புரியவில்லை. அணுகுண்டுக்கு வழி சொன்ன ஐன்ஸ்டீன் கூட அன்பையும் மனிதத்தையும் தான் பேசினார். Great Dictator ல் வரும் சாப்ளினின் கடைசி காட்சி நினைவுக்கு வருகிறது.

"I’m sorry, but I don’t want to be an emperor. That’s not my business. I don’t want to rule or conquer anyone. I should like to help everyone - if possible - Jew, Gentile - black man - white. We all want to help one another. Human beings are like that. We want to live by each other’s happiness - not by each other’s misery. We don’t want to hate and despise one another. In this world there is room for everyone. And the good earth is rich and can provide for everyone. The way of life can be free and beautiful, but we have lost the way.

Greed has poisoned men’s souls, has barricaded the world with hate, has goose-stepped us into misery and bloodshed. We have developed speed, but we have shut ourselves in. Machinery that gives abundance has left us in want. Our knowledge has made us cynical. Our cleverness, hard and unkind. We think too much and feel too little. More than machinery we need humanity. More than cleverness we need kindness and gentleness. Without these qualities, life will be violent and all will be lost...."
என் படத்தின் டீசரை பார்த்துவிட்டு ஆவலோடு காத்திருப்பவருக்கும் இவனுக்கு என்ன கெரகமோ என்று அங்கலாய்ப்பவருக்கும், இதோ நான் சொன்னபடி என்னுடைய நான்காவது படம். இது என் இயக்கத்தில் வரும் மூன்றாவது படம்.

ஒரு குடும்பஸ்தனுக்கும், சில குசும்பன்களுக்கும் மத்தியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை ஒரு சாமான்யனின் பார்வையில் அணுகி இருக்கிறேன். எப்படி இருக்கிறது என்று பார்த்து விட்டு சொல்லுங்கள். உங்கள் தரத்திற்கு இருந்தால் பகிருங்கள்!


எல்லோரும் அஞ்சானை எதிர்நோக்கி காத்திருக்கும் போது நான் இரா பார்த்தீபனை  சைடா நோக்கிக் கொண்டிருந்தேன். அஞ்சானுக்கு சூர்யா வாயில் குச்சியை வைத்துக் கொண்டு பேசாமல் நிற்கும் ஸ்டில் போதும்; ஆனால் இரா பார்த்தீபனுக்கு வாயில் குசும்பை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அதை தான் மனிதர் செய்து கொண்டிருந்தார்; கிறார். படம் வரப்போகிறது என்று சொன்னதில் இருந்து "தியேட்டருக்கு வந்து பாருங்க", "இது என் படம் இல்லை, உங்க படம்", "உங்க கைதட்டல் தான் பெரும் சன்மானம்".....என்று பேப்பருக்கு பேப்பர் அவரின் பேச்சு விளம்பரங்கள். நேற்று எதேச்சையாய் ஒரு டீக்கடையில் வடையில் உள்ள எண்ணையை பிழிய ஒரு பேப்பரை எடுத்தால் அது அவரின் படத்துக்கு அடித்த பிட் நோட்டிஸ்! அதில் வேறு திருட்டு வீசிடி யில் படம் பார்க்காதீர்கள் என்று மன்றாடி கேட்டிருந்தார்! கண் கலங்கி விட்டது. மனுஷன் என்னமா யோசிக்கிறான்யா! ரொம்ப ஃபீல் ஆகி, சரி கழுதை, நூறு ரூபா தானே [உண்மையில் அறுபது ரூபாய் தான்!], இந்த உழைப்புக்கு, அர்ப்பணிப்புக்குத் தரலாம் என்று, டீயை குடித்து விட்டு, பைக்கில் ஏறும்போது என் மனசு இறங்கி, இன்று பைக்கிலிருந்து இறங்கி படம் பார்க்க தியேட்டரில் நுழைந்தேன். [ஏன் அவர் தான் எதுகை மோனையா பேசுவாரா, எங்களுக்கும் வரும்!]

அவர் சொன்னது போல் கதை இல்லாமல் எடுத்த படமா இது? இல்லை; இதிலும் ஒரு கதை, (ஒன்னா?) இருக்கு! ஒரு "நல்ல வளர்ந்த" பட் சினிமாவில் டைரடக்கராய் வளரத் துடிக்கும் இளைஞன். அவன் படத்திற்காக ஒரு கதை தேடி அலைவது தான் படத்தின் கதை. கடைசியில் அவன் ஜெயித்தானா இல்லையா என்ற ட்விஸ்டை க்ளைமாக்சில் வைத்திருக்கிறார் இயக்குனர். இந்தப் படம் ஒரு கவிதை! உங்களுக்கு கவிதை பற்றி கொஞ்சம் தெரியும் என்றால் [இரவில் வாங்கினோம்; இன்னும் விடியவில்லை! இது கவிதை இல்லை - சுஜாதா] நான் சொல்ல வருவது புரியும்!

நிறைய அபிமான நட்சத்திரங்கள். படத்தின் முக்கால்வாசி பேர் புதுமுகங்கள். கதாநாயகன் அடக்கமான அழகு; நடிப்பு. கதாநாயகி சில ஆங்கிள்களில் ஒல்லியான நயன்தாரா போல இருக்கிறார். யாருங்க அவருக்கு பொட்டு வச்சு விட்றது? இன்னொரு கதாநாயகி மொக்க! "தம்பி" ராமையா தான் படத்தில் எல்லோருக்கும் "அண்ணன்"![அய்யோ நானே பார்த்தீபன் சார் அசிஸ்டெண்டா போயிடலாம் போல இருக்கே!] இவருக்கு மட்டும் தான் படத்தில் நல்ல ஸ்கோப்! படத்தின் ப்ளஸ் இயக்குனர் பார்த்தீபனின் நச் நச் ஒரு வரிகள். ஆனால் சில சமயம் அதுவே ஓவர் டோஸ். இவர் ஒருவர் விழாக்களில் பேசினாலே தாங்காது; படத்தின் அத்தனை காரெக்டர்களும் இவர் மாதிரியே பேசினால்! பூமி தாங்காது இல்ல?

அந்த சுனாமி கிராபிக்ஸ் சூப்பர்! வலைதளங்களில் பல படங்களின் விமர்சனங்களை பார்த்து ரொம்பவே பயந்து போயிருக்கிறார் என்று நினைக்கிறேன். படம் பார்த்து விட்டு நாம் சொல்ல வேண்டியதை எல்லாம் படத்திலேயே அவர் சொல்லி விடுகிறார். சீன்கள் ஆங்காங்கே சுவாரஸ்யமாய் இருந்தாலும், மொத்தமாய் ஒரு படமாய் யோசித்து பார்க்கும்போது பேன்ட் பையில் இருந்து எடுக்கும் ஹெட் ஃபோனை போல ஒரே கொச கொசவென்று ஆகி விடுகிறது. இருந்தும், கதாநாயகன் பஞ்ச் பேசிவிட்டு பத்து பேரை பறந்து பறந்து அடிப்பதை அலுக்காமல் பார்க்கும் நாம் இதை பார்ப்பதில் தப்பில்லை.

கடைசி பஞ்ச், எந்த வித்தியாசமும் இல்லாமல் பார்த்தீபன் ஒரு படம் எடுத்தால் ரொம்ப வித்தியாசமாய் இருக்கும்! என்ன சொல்றீங்க?

அந்த பன்ச்சோட விமர்சனம் முடியுது. [இந்த விமர்சனமும் பேன்ட் பையில் இருந்து எடுக்கும் ஹெட் ஃபோனை போல ஒரே கொச கொசவென்று...?!]

கீழே உள்ளது என்னோட நாலாவது குறும்படத்தோட டீசர். பார்த்து விட்டு படம் பார்க்க தயாராகுங்கள். மேலே சொன்னது "கதை திரைக்கதை வசனம் இயக்கம்". கீழே உள்ளதில் அவை எல்லாமே "நான்"! [இந்தப் பதிவின் தலைப்பை எப்படி கொண்டு வந்தேன் பாத்தீங்களா?]


மறுநாள் காலையில் "ராயல் ஜன்னத்தை" காலி செய்து கொண்டு குல்மார்க்கிற்கு கிளம்பினோம். அங்கு போய் சேர மதியம் ஆகி விடும் என்று சன்னி சொல்லி இருந்தான். வழக்கம் போல் தமிழ் பாடலுக்கு ரசித்து தலையாட்டிக் கொண்டே வண்டியை ஓட்டினான். இத்தனை நாள் கழித்து எழுதுவதால் வழியில் என்ன பேசினோம் என்பதை மறந்து விட்டேன் [நல்லவேளைன்னு யாரு சொல்றது?]. வழி நெடுக இயற்கை வனப்பை அள்ளிப் பருகியபடி சென்றோம் என்று சொல்லத் தேவையில்லை.

குல்மார்க்கில் நாங்கள் தங்க வேண்டிய இடம் ஆப்பிள் ட்ரீ ரிசார்ட். செக் இன் செய்ய வேண்டிய நேரத்திற்கு முன்பே வந்து விட்டதால், வரவேற்பு பானத்தை [வெல்கம் ட்ரிங்க்!] கொடுத்து, "லக்கேஜ்களை இறக்கி வைத்து விட்டு கொஞ்சம் பொறுங்கள்" என்று சொல்லி விட்டார்கள். சரி இங்கு இருந்து என்ன செய்வது பார்க்க வேண்டிய இடத்தை பார்த்து வருவோம் என்று நாங்கள் சன்னியிடம் சரணடைந்தோம். அவன், " நம் பாக்கேஜில் நாளை தான் ப்ளான் படி செல்ல வேண்டும். இன்று செல்லவேண்டும் என்றால் அது உங்கள் செலவு என்று தலைப்பாகையை [அவனுக்கு ஏது தலை?!] சொறிந்தான். உண்மையில், "ஏன்டா இவர்களை அதற்குள் கூட்டி வந்தோம்?" என்ற அவனுக்குத் தோன்றியது போல் இருந்தது. பணம் கிடைக்குமே என்று வேண்டா வெறுப்பாய் ஒத்துக் கொண்டான். பெரிய பெட்டிகளை இறக்கி வைத்து விட்டு பொடிசுகளின் லக்கேஜ்களை மட்டும் எடுத்துக் கொண்டு வண்டி ஏறினோம். ஓட்டல்காரரிடம் "அங்கு நல்ல சாப்பாடு கிடைக்குமா?" என்று கேட்டோம். அவர் "டைட் க்ளோசப்பில்" [இந்த இடத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்] ஒரு ஹோட்டல் பேரை சொல்லி அது தான் அங்கு பிரபலம், அங்கே சாப்பிடுங்கள் என்றார். வண்டி புறப்பட்டது.




ஆஹா, என்ன ஒரு அற்புதமான இடம் அது. பரந்து விரிந்த பசுமை போர்த்திய புல்வெளி. அதன் பின்னே கம்பீரமான பனி போர்த்திய மலைகள். [இதையே நான் இன்னும் எத்தனை தடவை எழுதுவது?] அந்த புல்வெளியில் ஒரு சிறு கோவில். வண்டியிலிருந்து இறக்கி விட்டதும் குதிரைக்காரர்கள் எங்களை சூழ்ந்து கொண்டார்கள். சன்னி ஒதுங்கிக் கொண்டான். அந்த பெரும் புல்வெளியை குதிரையில் சுற்றி வரலாம். ஒருவருக்கு வாடகை அறுநூறு ரூபாய் [பேரம் பேசி வந்தது, இன்னும் அதிகம் சொன்னார்கள்]. வரும் வழியில் இருக்கும் இடங்களை அவர்கள் காட்டிக் கொண்டே வருவார்கள். சரி எந்த அற்புதமான இடத்திற்கு வந்தாலும், நாங்கள் முதலில் செய்யும் வேலை சாப்பிடுவது தான். பிறகு வருகிறோம் என்று அந்த ஹோட்டல்காரர் சொன்ன ஹோட்டலுக்கு போனோம். [ஹோட்டல் ஜூம் ஷாட்!] மூடி இருந்தது. கதவை திறந்து உள்ளே போனால், "எல்லோரும் தொழுக போயிருக்கிறார்கள். கொஞ்சம் நேரம் ஆகும்!" என்றார்கள். சரி என்று கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்தால் அவர்கள் வருவது மாதிரி தெரியவில்லை. பிறகு பக்கத்தில் இருந்த ஒரு தாபாவில் சென்று வயித்துக்கு போட்டுக் கொண்டு முதலில் கோயிலுக்கு போனோம். அது ஒரு சிறிய கோயில். ஒன்றும் பெரிதாய் இல்லை. பிறகு வந்து குதிரைக்காரனிடம் ஒரு மணி நேரம் பேசி ஒரு குதிரைக்கு அறுநூறு ரூபாய் வீதம் ஆறு குதிரைகளை எடுத்துக் கொண்டோம்.



அரபுக் குதிரை கொடுப்பார்கள் என்று பார்த்தால் அழுக்கு குதிரை தான் இருந்தது அவர்களிடம். சரி என்று ஏறி உட்கார்ந்து படையை கிளப்பினோம். மகதீரா படத்தில்  வருவது மாதிரி "நம்ம ஆள் வந்துட்டான்! என்று குதிரை தறி கெட்டு ஓடினால் என்ன செய்வது?" என்றெல்லாம் குதிரைக்காரனிடம் கேட்டேன். அவன் அந்தப் படத்தை பார்க்கவில்லை போலிருக்கிறது. அவன் கண்டு கொள்ளவே இல்லை. குதிரை மெதுவாய் நடை போட்டது.  ஆஹா,  இது வடிவேலு மெரினா பீச்சுல ஏறின குதிரை போல இருக்கே என்று நினைத்து நொந்தேன். குதிரை நடக்கும் போது நம் அங்கமெல்லாம் இந்தக் குலுங்கு குலுங்குகிறது. அதை ஓட விட்டு எப்படி போர் எல்லாம் புரிந்தார்கள் என்று வியப்பாய் இருந்தது.  குதிரைக்காரன் திடீர் திடீர் என்று ஏதோ ஒரு இடத்தை காட்டி "இங்கு தான் பாபியின் "ஹம் தும் எக் கம்ரே மே" பாட்டு எடுத்தார்கள், இங்கு தான் இந்தப் படத்தின் பிட்டு எடுத்தார்கள்" என்பது போன்ற சரித்திரக் குறிப்புக்களை அள்ளித் தெளித்துக் கொண்டே வந்தான். எனக்கு டிம்பிள் கபாடியாவின் ஞாபகம் வந்தது! பனிக்காலத்தில் அந்த இடம் முழுதும் பனி உறைந்து வெள்ளையாய் மாறி விடுமாம். அங்கு பனிச்சறுக்கு சொல்லிக் கொடுக்கும் ஒரு பள்ளியும் இருந்தது. அருகில் ஒரு ஆர்மி கேம்ப்பும் இருந்தது. அங்கு ஒரு பெரிய பார்க்கில் இறக்கி விட்டு "போய் சுற்றி பார்த்து விட்டு வாருங்கள்" என்று அனுப்பி விட்டார்கள். அங்கு பல வண்ணத்தில் காஷ்மீரி உடைகள் தொங்கிக் கொண்டிருந்தது. அதை அணிந்து கொண்டு போட்டோ எடுக்க ஐம்பது ரூபாய். காஷ்மீர் வந்ததில் இருந்து, இப்போது தான் ஒரு விஷயம் நூறு ரூபாய்க்கு கீழ் சொல்லி இருக்கிறார்கள். "ரொம்ப சந்தோஷம்" என்று ஆளுக்கு ஒரு உடையை போட்டுக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தோம். பின்னால் பனி மலை சூழ, பச்சைப் புல்வெளியில், கண்ணை பறிக்கும் ஆடையில் தக தகன்னு மின்னினோம். அங்கிருந்து மறுபடியும் குதிரை ஏற்றம்.  காஷ்மீர் டூரின் சிறப்பான ஒரு நாளாய் அன்று மாறிப் போனது. எல்லோரும் மிகவும் குஷியாய் அனுபவித்தோம். தரு தான் மாலையின் எதிர் வெயிலில் வாடி விட்டாள். தியா குதிரையில் தூங்கியே விட்டாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு தொடங்கிய இடத்திற்கு வந்தடைந்தோம்.







ஒரு காஷ்மீரி டீயை [உப்பு டீ] அருந்துவோம் என்று மறுபடியும் அந்த பிரபலமான ஹோட்டல் கதவை தட்டினோம். அப்போதும் ஏதோ ஒரு காரணத்தை சொன்னார்கள். "அட போங்கப்பா" என்று அதே தாபாவில் தஞ்சம் புகுந்தோம். அருமையாய் சுடச் சுட பக்கோடா எல்லாம் போட்டுக் கொடுத்து எங்களை குஷி படுத்தினார்கள். காஷ்மீரி டீ ஒன்றும் எனக்கு சிலாக்கியமாய் படவில்லை. சரி என்று பக்கோடாவை நன்றாய் ஒரு மொக்கு மொக்கிவிட்டு சன்னியை கண்டுபிடித்து வண்டியில் ஏறினோம். வழியில் அழகான இடத்தில் போட்டோ எடுக்க சன்னி வண்டியை நிறுத்தினான். நாங்கள் அப்போது மலையில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தோம். அங்கு ஒரு அழகான பள்ளத்தாக்கு. தூரத்தில் ஒரு மிக பிரம்மாண்டமான பனி மலை. அருமையாய் இருந்தது. குடும்பத்துடன் போட்டோக்களை எடுத்துக் கொண்டு, சன்னியையும் ஒரு போட்டோ க்ளிக்கினோம். [கேட்டுக் கொண்டதிற்கிணங்க]



ஆப்பிள் ட்ரீ ரிசார்ட்டுக்கு வந்து சேர்ந்தோம். அறைகள் தயாராய், தாராளமாய், விஸ்தாரமாய் இருந்தது. ஆளுக்கு ஒரு அறையை பிரித்துக் கொண்டு கீழே இரவுச் சாப்பாட்டுக்குச் சென்றோம். நல்ல உணவு. உணவை முடித்துக் கொண்டு, புல்வெளியில் வந்தோம். என் மாமா மகன் செட்டில்கார்க் ஆடுவோம் என்று சொல்லி அதை எடுத்து வந்தான். நானும் அவனும் விளையாடுவதை தருவால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. எங்கள் கையில் இருந்த மட்டையை அவள் கையில் எடுத்துக் கொண்டு கார்க்கை அதில் வைத்து அவள் எம்பி எம்பி குதித்தாள். ஏதோ அவளுக்கு ஷாக் அடிப்பது போல் அவள் எம்பிக் குதித்தது பார்க்க ஒரே வேடிக்கையாய் இருந்தது. ஒரு அரை மணி நேர போராட்டத்திற்கு பின் அவளிடம் இருந்து வாங்கி நாங்கள் விளையாடுவதற்குள் நன்றாய் இருட்டி விட்டது. சரி காலையில் சீக்கிரம் வந்து விளையாடுவோம் என்று சொல்லி உறங்கப் போனோம்.

சுற்றுவோம்...
வேலையில்லா பட்டதாரி

தனுஷை சொல்லிக் குற்றமில்லை. சமீபத்திய படங்களில் தனுஷின் நடிப்பை எல்லோரும் புகழும்போது அவருக்கு நன்றாய் இருந்தாலும், அதே சமயம், இந்த படத்தை விற்கும்போது, விநியோகஸ்தர்கள் அவரிடம் "படம் நல்லா இருக்கு, ஆனா  நீங்க சிவகார்த்திகேயனை வச்சி எடுக்குற அடுத்த படத்தையும் எங்களுக்கே கொடுத்தீங்கன்னா உங்க படத்தை வாங்கிக்கிறோம்!" என்று கொளுத்திப் போட்டதாய் கேள்வி. அது உண்மை என்றால், தனுஷ் தொடர்ந்து "வேலையில்லா பட்டதாரி" மாதிரி படத்தை தான் எடுக்க வேண்டி இருக்கும். "புகழ்" காதுக்கும், கருத்துக்கும் நல்லது தான்!  வயித்துக்கு பணம் தானே நல்லது?!

தனுஷ் இந்தப் படத்தை எல்லாம் இடது கையால் ஊதித் தள்ளி விடுவார். "கறியில கை வை, கொன்னுர்றேன்" என்று அவர் வேண்டா வெறுப்பாய் கறி வாங்க போகும்போது ஏதோ நம் பக்கத்துக்கு வீட்டை எட்டிப் பார்ப்பது போல் இருக்கிறது. அத்தனை இயல்பு, யதார்த்தம். தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே ஒரு அம்மா இருப்பதால், சரண்யாவை "தமிழ்த் தாய்" என்று அழைக்கலாம். ஒரு கை வைத்த பனியனை போட்டு, வேஷ்டியை கட்டி,  கொஞ்சம் தலையை நரைக்க வைத்து, கண்ணாடி போட்டால்  தமிழ்த் தந்தை ரெடி. சமுத்ரகனி கச்சிதம். அந்தத் தம்பி தான் அந்தக் குடும்பத்துடன் ஒட்டாமல் இருந்தான். தனுஷ் பக்கத்து வீட்டு ஃபிகரை சைட் அடிக்க உடனே ஒரு டெலஸ்கோப் செய்கிறார். வீட்டின் எல்லா வேலையும் செய்கிறார். பக்கத்து வீட்டில் குடி வந்திருப்பவர்களுக்கு பால், கேஸ் என்று எல்லாம் ஏற்பாடு செய்கிறார். முப்பது செகண்ட் டைம் கொடுத்து பொறுக்கிகளை பின்னி எடுக்கிறார். இப்படி எல்லாவற்றிலும் கில்லியாக இருப்பவருக்கு வேலை தான் கிடைக்க மாட்டேன் என்கிறது!

இப்படி இன்னும் படத்தை பற்றி குறைகளை எழுதலாம். படத்தை விட அது போர் அடிக்கும் அபாயம் இருப்பதால், இந்தப் படம் தனுஷின் வயித்துக்கு என்று சொல்லி முடித்துக் கொள்கிறேன்!

சதுரங்க வேட்டை

விகடன் ஐம்பத்தி இரண்டு மார்க் போட்டு அரை மாமாங்கம் கடந்து விட்டது. ஜிகர்தண்டா வந்த பிறகும் கூட இது சில  தியேட்டர்களில் இன்னும் ஓடிக் கொண்டிருப்பதை வைத்தே படத்தின் தரத்தை சொல்லி விடலாம். கதை விறு விறு; திரைக்கதை பர பர; வசனம் சுருக் சுருக்; இயக்கம் பட பட! ஒரே குறையாக என்று எனக்குப் பட்டது, ஹீரோ ராங் காஸ்டிங்! சவ சவ! என்ன செய்வது, இயக்குனரே  சொல்லிவிட்டாரே, குற்ற உணர்ச்சியில்லாமல் செய்யும் தப்பு தப்பு ஆகாது என்று. ஏனோ படம் நெடுக விஜய் சேதுபதியின் ஞாபகம் வந்து அது ஏக்கமாகவே மாறி விட்டது எனக்கு. அவர் நடித்திருந்தால் இன்னொரு சூது கவ்வும்!  இயக்குனருக்கு ஒரு வேண்டுகோள். இத்தனை ஐடியா வச்சுருக்கீங்க, அதை ஏன் படம் எடுத்து வேஸ்ட் பண்றீங்க..ஒரு முன்னூறு கோடிக்கு ஐடியாவை ரெடி பண்ணி செட்டில் ஆவுங்க பாஸ்! எப்பவுமே ஏமாற எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க :-)

 ஜில் ஜில்...

சேதுவுக்கு அவனை பார்த்து யாராவது சிரித்தால் பிடிக்காது! அப்படி பட்ட ஒருவனை எனக்கு ரொம்ப பிடித்தது [டிரையிலர், படத்தின் முதல் பாதி], பிறகு அவனை பார்த்து ஊரே கை கொட்டி சிரித்தது என்று கதையை மாற்றி விட்டீர்கள் [பின் பாதி]. அது எனக்குப் பிடிக்கவில்லை. "என்னடா சேதுவை பாத்து சிரிக்கிறீங்க?" என்று அவனை போல நானும் ரவுடி ஆகிவிடலாமா என்று தோன்றியது!

சேதுவுக்குப் பிறகு கருணாவும், சங்கிலி முருகனும் கிளாஸ்!

அப்புறம் செளராஷ்ட்ரா மக்களாய் வரும் அம்பிகாவும், லக்ஷ்மியும் சேலை திருடுகிறார்கள் என்று காட்டி இருக்கிறீர்கள்.  எனக்குத் தெரிந்து எங்கள் சமூக மக்கள் கையில் உள்ள தங்கள் சேலையை பறி கொடுத்துவிட்டு வருவார்களே தவிர, இப்படி திருடுவதை நான் கேள்விப்படவில்லை. சரி, சினிமாவில் வரும் அத்தனை கதாப்பாத்திரங்களையும், அவர்களின் சமூகத்தோடு நிறுத்திப் பார்த்தால், ரஜினி பத்து பேரை பறந்து பறந்து அடிக்கும்போது, மராட்டியர்கள் [ரஜினி மராட்டியர் தானே?] யார் இப்படி பத்து பேரை பறந்து பறந்து அடிக்கிறார்கள்? என்று கேட்க வேண்டி இருக்கும் என்பதால் இதை படம் என்று கருதி விட்டு விடுவோம்.

சந்தோஷ் நாராயணனை பற்றி சொல்ல ஒன்றும் அதிகமில்லை. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி இளையராஜா; ஏ ஆர் ரகுமான்; சந்தோஷ் நாராயணன்!

மற்றபடி ஜிகர்தண்டா எல்லோரும் ருசிக்க வேண்டிய பட(பான)ம்!


மறுநாள் ஸ்ரீ நகரை சுற்றிப் பார்க்கத் திட்டம். ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரம். ஜம்மு, ஜம்மு காஷ்மீரின் குளிர் கால தலைநகரம். இப்படியாக இந்த மாநிலத்துக்கு மட்டும் இரண்டு தலை நகரங்கள். ஏன் என்று தெரியவில்லை. நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து ஒரு குன்று தெரிந்தது. அதன் மேல் ஒரு கோவில். அதை தான் முதலில் பார்க்கப் போகிறோம் என்று சன்னி முன் தினமே சொல்லி வைத்திருந்தான். அது சங்கராச்சாரியார் கோவில். ஆதி சங்கரர் ஒரு காலத்தில் அங்கு தவம் செய்த போது உருவான கோவில். கோவில் செல்லும் வழி குறுகலாய் இருந்ததால் சன்னி எங்களை முக்கால் தூரத்தில் இறக்கி விட்டு தரிசித்து வரச் சொன்னான். கையில் காமெரா, உணவு பொருட்கள் என்று எதுவும் கொண்டு செல்ல முடியாது. குழந்தைகளுக்காக மட்டும் கொஞ்சம் எடுத்துக் கொண்டு மலையேறினோம். குன்றின் மேல் இருக்கிறோம் என்று தான் பெயர், வெயில் கொளுத்திக் கொண்டு தான் இருந்தது. இன்னும் கோவில் எவ்வளவு தூரம் என்று வருவோரிடம் கேட்டதும், "இதற்கே இப்படி என்றால் கோவிலுக்கு முன்னூறு படி ஏறனும் என்ன செய்வீர்கள்?" என்று குண்டை தூக்கிப் போட்டார்கள். ஆதி சங்கரர் மேல் எனக்கு கொலை வெறி உண்டானது! கீழே அவ்வளவு இடம் இருக்கு?! இந்த மலை மேல வந்து தான் தவம் பண்ணனுமா? என்று நற நறத்துக் கொண்டே படியேறினேன்.



[விக்கி]
மலையின் உச்சியில் உள்ள அந்தக் கோவிலில் இருந்து ஸ்ரீநகர் மிக அழகாய் தெரிந்தது. எந்த ஒரு இன்பமும் கொஞ்சம் கஷ்டப்பட்டால் தான் கிடைக்கும் போலும்?! அங்கு ஒரு மரத்தடியில் இளைப்பாறிவிட்டு எங்கள் வண்டி உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அடுத்து காஷ்மீர் அரண்மனை ஒன்று பார்ப்பதாக இருந்தது. அந்த வழியில் டிராப்பிக் ஆகி விட்டதால் சன்னி எஸ்கேப் ஆகி எங்களை கீழே கடத்தி வந்து விட்டான். வண்டி அடுத்ததாய் முகல் கார்டனுக்கு சென்றது. நான் முன்னமேயே சொன்னது போல் இந்த மாதிரி கார்டன்களை பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. இருந்தும் குடும்பத்துடன் சென்று விட்டு அதிரடி முடிவகள் எதையும் எடுக்க முடியாது. சன்னி கடிவாளம் கட்டிய குதிரை போல் எங்கு எல்லோரும் வழக்கமாய் போவார்களோ அங்கே தான் போனான். கேட்டதற்கு, "நீங்கள் பல கார்டன்களை பார்த்திருக்கலாம், எங்கள் காஷ்மீரில் கார்டன் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்!!" என்று மார் தட்டினான். அவனை சொல்லி குற்றமில்லை.





சரி என்று முகல் கார்டனுக்குள் நுழைந்தேன். விடுமுறை மற்றும் கோடை காலம் ஆதலால் செம கூட்டம். பல வித இயற்கை வனப்பை ரசித்த பிறகு, இந்த கார்டனில் சரியாய் இலைகள் வெட்டப்பட்ட செடிகள், சமன்படுத்தப்பட்ட புல்தரைகள், நீருற்றுக்கள் என்று எல்லாம் செயற்கை அழகு! இருந்தும் அழகு தானே...அங்கு ஒரு ஊற்று இருந்தது. எல்லோரும் அங்கு வரும் தண்ணீரை பிடித்து குடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் அந்தத் தண்ணீரை தான் ஜவஹர்லால் நேரு குடி தண்ணீராக பயன்படுத்தினாராம். கொஞ்ச நேரம் அங்கே இளைப்பாறிவிட்டு, நிஷாத் கார்டன் என்று இன்னொரு இடத்திற்கு சென்றோம். அதற்குள் மதியம் ஆகிவிட, எல்லோருக்கும் பசித்தது. காஷ்மீரின் ஸ்பெஷல் உணவான மட்டன் ஷோர்பா சாப்பிட்டு பார்க்க வேண்டும், பிறகு நம்கீன் சாய் [அதாவது உப்பு போட்ட டீ!] குடிக்க வேண்டும்  என்று ஆசை. ஆனால் சன்னி, அது கிடைக்கும் ஹோட்டல்  வேறு வழியில் இருப்பதாலும், அவன் கட்டிய கடிவாளத்தில் அந்தப் பாதை தெரியாது என்பதாலும் நாளை கூட்டி செல்கிறேன் என்று கவிழ்த்து விட்டான். எதோ ஒரு தாபாவில் உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டோம்.



பிறகு பொட்டானிக்கல் கார்டன். என் மாமா மகன்  நிறைய பூங்காக்களுக்கு செல்ல இருப்பதால் எதற்கும் இருக்கட்டும் என்று கிரிக்கெட் பேட் கொண்டு வந்திருந்தான். நல்ல புல் தரையில் ஒரு விறுவிறுப்பான ஆட்டத்தை போட்டோம். ரிசார்ட்டில் கிடைத்த அதே அனுபவம், இரண்டு பேர் பால், பேட் வைத்துக் கொண்டு நின்றால் போதும், எங்கிருந்து தான் வருவார்களோ, ஒரு குட்டி கூட்டமே சேர்ந்து விட்டது.  அதில் ஒரு சுள்ளான் பயங்கரமாய் விளையாடினான். இழுத்து இழுத்து அடித்து எங்களை நாக்கு தள்ளி ஓட விட்டான். நாங்கள் போதும் என்று புறப்பட்டதும் அவன் முகம் வாடி விட்டது.


அதை முடித்துக் கொண்டு கிளம்பிய போது வழியில் ஒரு பெரிய பலூன் உயர பறந்து கொண்டிருந்தது. தருவை அதில் ஏற்றினால் சந்தோஷப்படுவாள் என்று நினைத்து உள்ளே போனோம். தரையில் இருந்து கிளம்பி ஒரு இருபது அடி மேலே போய், அங்கே ஒரு நிமிஷம் நின்று விட்டு மறுபடியும் கீழே இறங்கி விடும்.இதற்கு ஒரு ஆளுக்கு ஐநூறு ரூபாய்! இரண்டு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் தான் செல்ல முடியும். சரி வந்தது வந்து விட்டோம், நாமாவது செல்வோம் என்றால் அதற்கும் பெரிய வரிசை. அட போங்கப்பா என்று கிளம்பிவிட்டோம். அந்த பலூன் இருக்கும் இடத்துக்கு அருகில் செல்ல ஆளுக்கு இருபது ரூபாய் டிக்கட் வேறு! இருநூறு ரூபாய் தண்டம்...வெளியே வந்ததும் ஒரு பலூன்காரனிடம் தருவுக்கு ஒரு பலூன் வாங்கிக் கொடுத்தேன். அவளுக்கு அவ்வளவு சந்தோஷம்! பத்து ரூபாயில் முடிந்திருக்க வேண்டியது...ம்ம்ம்ம்!

அங்கிருந்து கிளம்பி ஷாப்பிங் சென்றோம். காஷ்மீர் புகழ் கம்பளங்கள், குர்தாக்கள், புடவைகள், ஸ்வட்டர்கள், பாஷ்மினா ஷால்கள் என்று நிரப்பி வைத்திருந்தான். விளையும் கம்மியாய் தான் தெரிந்தது. நாங்கள் பாஷியான ஷால், புடவை, ஸ்வட்டர், மரத்தால் ஆனா படகு வீடுகள், கீ செயின்கள் என்று முடிந்த வரை அள்ளிக் கொண்டோம். [இந்த வரியை எழுத ஒரு நிமிடம் ஆகவில்லை, ஆனால் அந்த வேலை முடிய...ஷபா!] பாங்க் பாலன்ஸ் இளைத்தது; நெஞ்சு வலித்தது! பட், பேமிலி ஹாப்பி அண்ணாச்சி! அன்றைய நாளை மகிழ்ச்சியோடு முடித்துக் கொண்டோம், தங்கி இருந்த இடத்துக்கு திரும்பினோம். மறுநாள் இடத்தை காலி செய்து விட்டு குல்மார்க் புறப்பட வேண்டும்.

சுற்றுவோம்...
சோன்மார்க்! எங்கும் பசுமை போர்த்திய புல்வெளி; சுற்றிலும் பனி மலை. இதற்கு "தங்கத்தினால் ஆன பசுமை வெளி" என்ற பெயரும் உண்டு. காலை எழுந்து குளித்து முழுகி, காலை உணவை கடித்து முழுங்கி, குழந்தைகளை தயார் செய்து கிளம்ப பத்து மணி ஆகி விட்டது. வழி நெடுக இனிமையான சீதோஷணம். அருமையான இயற்கை வனப்பு. ஓடையின் அருகே சுற்றுலா வந்தவர்கள் ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து தங்கி இருந்தார்கள். அவர்களை பார்க்கவே பொறாமையாய் இருந்தது. சோன்மார்கை, பஹல்காம், குல்மார்க் போல எல்லா காலங்களிலும் பார்க்க முடியாது. குளிர் காலங்களில் இதன் பாதையே அடைபட்டு போய் விடும் என்கிறார்கள்.


நாங்கள் அங்கு போய் சேர மதியம் பனிரண்டு, பனிரெண்டரை ஆகிவிட்டது. அங்கு உள்ள இடங்களை சுற்றிப் பார்க்க குதிரையிலும் செல்லலாம்; காரிலும் செல்லலாம். பயங்கர குழப்பத்துக்குப் பின் சரி முதலில் சாப்பிட்டு விடுவோம் என்று ஒரு மனதாய் முடிவெடுத்து சாப்பிட்டு முடித்தோம். பிறகு எல்லோரும் குதிரையில் வர முடியாது என்பதாலும், பட்ஜெட் கட்டுப்படி ஆகாது என்பதாலும் ஒரு வண்டி பிடித்தோம். சுமோ என்று ஞாபகம். அடக்கி ஒடுக்கி உட்கார்ந்து கொண்டோம். வண்டி வாடகை ஆறாயிரம். அங்கு பனி மலையில் சறுக்கலாம் என்று கூறி பெரிய சப்பாத்துக்களையும் [முத்துலிங்கத்தை அதிகம் படித்தது தப்பாகிவிட்டது!] கால்களில் அணிந்து கொண்டோம். இரண்டு மணி ஆகி விட்டது. இப்போது கிளம்பி எத்தனை இடங்களை பார்க்க முடியுமோ தெரியவில்லை என்று வருத்தப்பட்டோம். வண்டியை கிளப்பிய டிரைவர் கொஞ்ச தூரத்தில் ஏதோ பேச ஆரம்பித்தார். வழியில் உள்ள சில புல் தரைகளை காட்டி இங்கு தான் அமிதாப் நடித்த "சத்தே பே சத்தா" எடுத்தார்கள் என்றார். அமிதாப் இப்போது தெரிவாரா என்பது போல் அந்த இடத்தை பார்ப்பதற்குள் இந்தப் பக்கம் ஒரு புல் தரையை காட்டி வேறு ஏதோ ஹிந்தி படத்தை சொன்னார். இப்படி நான்கு படத்தை சொல்லி முடிப்பதற்கும் நாங்கள் வந்து சேர வேண்டிய இடம் வந்து விட்டது. வழி நெடுக வண்டிகளின் அணிவரிசை. ஜே ஜே என்று இருந்தது. "வண்டி உள்ளே போக முடியாது என்று அங்கேயே இறக்கி விட்டு விட்டார். நீங்கள் பார்த்து விட்டு இங்கேயே வந்து நில்லுங்கள், நான் இங்கு தான் காத்திருப்பேன். ஒன்றும் அவசரமில்லை, போய் மெதுவாய் வாருங்கள்" என்றார். சரி என்று செங்குத்தான சாலையில் ஏற ஆரம்பித்தோம்.

பெற்றோர்களையும், குழந்தைகளையும் அங்கு உள்ள பல டீ கடைகளில் ஒன்றில் உட்கார வைத்து விட்டு, நான் என் மாமா மகனுடன் மலையை ஏற ஆரம்பித்தேன். சிறுவர்களுடன் எப்போதும் இந்த மாதிரி விஷயத்தில் மோதக் கூடாது. அவன் ஏதோ சமதரையில் நடப்பது போல் அந்த மலையில் அநாயசமாய் ஏறிக் கொண்டிருந்தான். நான் கண்ணு, காத்து, மூக்கு, நாக்கு என்று அனைத்தும் தள்ளி கொண்டு மூச்சு வாங்கிக் கொண்டு அவனுக்கு சரி சமமாய் ஏற முயற்சித்து கொண்டிருந்தேன். எந்த வெயிட்டும் இல்லாமல் இருந்தால் தான் மலை ஏற வசதி என்று என் பர்ஸ், கைபேசியையும் வைத்து விட்டு வந்து விட்டேன். ஒரு வழியாய் முக்கால்வாசி ஏறி விட்டேன். அவன் எனக்கு மேலே நின்று கொண்டிருந்தான். சரி அவன் அருகில் வந்து விட்டோம், சேர்ந்து கீழே போய் விடலாம் என்றால் பயபுள்ள மேலே இருந்து சறுக்க ஆரம்பித்து விட்டான். எனக்கும் மேலே இருந்த சறுக்க விருப்பமிருந்தாலும் ஆடை ஈரமாகிவிட்டால் வண்டியில் தருவை மடியில் வைத்துக் கொள்ள வசதியாய் இருக்காது என்று நினைத்தேன். அதனால் சரி அவன் போகிறான் என்று அதே இடத்தில் சற்று ஆசுவாசமாய் அமர்ந்து கொண்டேன். ஆஹா, என்ன ஒரு அருமையான இடம் அது. அந்த குளிர்ந்த சீதோஷணமும், குளிர் காற்றும், ஏறி வந்த களைப்பும், கண்ணுக்கு இதமான இயற்கையும் ஆஹா...சொன்னால் புரியாது! அப்படியே மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்தேன்.


அப்போது அருகில் ஒரு குடும்பம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஏதோ பிக்னிக் மாதிரி அந்த மலையில் ஏறி வந்திருந்தார்கள். கையில் ஒரு பெரிய பேக். அதில் நிறைய சிப்ஸ், பிஸ்கட் என்று பலவகை ஸ்நாக்ஸ். மொக்கு மொக்கு என்று மொக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்ததும், "ஆஹா, செல்போன் கணம்னு" நாம வச்சுட்டு வந்தோமே என்று என்னை நொந்து கொண்டேன். நான் ஏற்கனவே சொன்னது போல் மலை ஏறுவதற்கு அங்கு கைட் இருக்கிறார்கள். ஒரு சிறிய பலகை போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு மலை ஏற முடியாதவர்களை அதில் அமர வைத்து மேலே இழுத்துக் கொண்டு வருகிறார்கள். என்ன ஒரு கடினமான வேலை பாருங்கள். சரி என்று நான் எழுந்தேன். எங்கு கால் வைத்தாலும் வழுக்கியது. பலகையில் அமர்ந்து சறுக்கிச் செல்ல வேண்டியது தான் என்று முடிவெடுத்தேன். பேரம் பேசத் தொடங்கினேன். அவர்கள் நூற்றி ஐம்பது ரூபாய் சொன்னார்கள். நான் ஐம்பது ரூபாய் கேட்டேன். [என்ன  வேலையை நினைத்து பரிதாபப்பட்டாலும் பேரத்தில் நம்மல மிஞ்ச முடியுமா?] ஒருவன் ஒத்துக் கொண்டான். பலகையில் ஏறி ஜல்லென்று கீழே வந்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது, பல தடைகளை கடந்து, ஆட்களை கடந்து, முட்டி மோதி பாதி தூரம் கீழே சேர்த்தான். அதற்கு மேல் கீழே வர முடியாது என்றான். என்னிடம் பணம் வேறு இல்லை, நல்ல வேளையாய் என் மாமா, என் தம்பி அங்கே இருந்தார்கள்.  இல்லை என்றால் அடுத்த க்ரூப்பை மேலே இழுத்துச் செல்ல என்னை உபயோகப்படுத்தியிருப்பான். அவர்களிடம் பணத்தை வாங்கி கொடுத்து விட்டு கீழே இறங்கினோம்.

சூடாய் டீ குடித்தோம். லேசாய் சூறக்காத்து அடிக்கத் தொடங்கியதும், மேகம் இருண்டது, கொஞ்சம் தூறல் போட்டது. குழந்தைகள் பயந்து அழ ஆரம்பித்தன. எங்கள் வண்டியை தேடினால் கிடைக்கவே இல்லை. நல்ல வேளையாய் வண்டியில் இருந்து இறங்கும்போது என் மாமாவிடம் அந்த டிரைவரின் கை பேசி எண்ணை வாங்கச் சொன்னேன். வாங்கியும் பயன் இல்லை. எத்தனை முறை அடித்தாலும் அவர் எடுக்கவே இல்லை. எடுத்தாலும் இடக்கு மடக்காய் பேசிக் கொண்டிருந்தார். ஒன்றுமே புரியவில்லை. திடீரென்று வேறொருவர் வந்து அவர் தான் என்னை அனுப்பினார்,  இந்த வண்டியில் ஏறுங்கள் என்றார். கடைசியில் தான் தெரிந்தது, அவர் எங்களை இறக்கி விட்டு விட்டு வண்டியுடன் அடுத்த டிரிப்புக்கு போய் விட்டார். வந்தால் அவர்களை அழைத்து வாருங்கள் என்று இன்னொருவரிடம் சொல்லி இருக்கிறார். அந்த வண்டியில் எங்களின் பை வேறு ஒன்று இருந்தது. அதெல்லாம் கீழே போய் எடுத்துக் கொள்ளலாம் என்றார் அந்த டிரைவர். சரி, அடுத்து எங்கே என்றதற்கு, இது தான் கடைசி இடம் என்று குண்டை தூக்கி போட்டார். கேட்டால், வழியில் அவர் காண்பித்த நான்கு புல்தரைகளும் நான்கு இடங்களாம்! முதலில் வண்டியை மலையின் அருகில் வரை கொண்டு செல்லவில்லை. திரும்பி வந்தால் வண்டி இல்லை. குழந்தைகளை வைத்துக் கொண்டு மழையில் கஷ்டப்படுகிறோம், போன் அடித்தால் எடுப்பதில்லை. சரி இன்னும் இடங்கள் இருக்கிறது என்று நினைத்தால், இது தான் கடைசி என்கிறார்கள். இதற்கு ஆறாயிரம். அவர்கள் வண்டியில் நாங்கள் பயணம் செய்தது ஒரு அரைமணி நேரம் கூட இருக்காது! "அட நாதாரிகளா!" என்று எரிச்சலாய் இருந்தது.



எங்கே புறப்பட்டோமோ அங்கே வந்து சேர்ந்ததும், யாரும் அவர்களை எதுவும் கேட்க முடியவில்லை. பணத்தை அழுது விட்டு, சப்பாத்துக்களை கழட்டிக் கொடுத்து விட்டு, அதற்கும் பணத்தை கட்டி விட்டு, சன்னியிடம்  சரண் அடைந்தோம். ஒவ்வொரு தரமும் சன்னி நொந்து போய் திரும்பும் எங்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்! "இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இந்த டயத்தில் இவர்கள் சம்பாதித்தால் தான் உண்டு. வருடம் முழவதுக்கும் சேர்த்து இப்போதே சம்பாதித்து விடுகிறார்கள்!" என்று சன்னி அவர்களுக்கு வக்காலத்து வாங்கினான். ஸ்ரீநகர் நோக்கி வண்டி புறப்பட்டது.

காஷ்மீர் பூமியின் சொர்க்கம் தான், ஆனால் மனிதன் எங்கு இருந்தாலும்...????

சுற்றுவோம்...