*****பொங்கலை முன்னிட்டு அதிரடித் தள்ளுபடி..ஒரு பதிவுக்கு ஒரு பதிவு இலவசம்******

2 வாரத்திற்கு முன் என் நண்பன் ஒருவன் பெங்களூரிலிருந்து வந்திருந்தான். அவனுக்கு ஒரு விபரீத ஆசை. மார்கழி மாதக் கர்நாடக கச்சேரி ஒன்றை பார்க்க வேண்டுமாம். ஆஹா, எனக்கு ஈடு கொடுக்க ஒருவன் சிக்கிக் கொண்டான் என்று பூரித்துப் போய், அன்று காலையில் இருந்தே பேப்பரில் அலசியதில், சுதா ரகுநாதன் எங்கள் கைகளில் வசமாக சிக்கிக் கொண்டார்.

சிந்து பைரவியில் எல்லா பாடல்களும் பிசகாமல் பாடுவேன் என்ற ஒன்றைத் தவிர எனக்கும் கர்நாடக சங்கீதத்துக்கும் சம்மந்தமில்லை. என்னுடன் வந்த நண்பர்களும் அப்படியே..மாலை 4:30 மணிக்கு நாரத கான சபாவில் கச்சேரி. ஒருவழியாய் தேடிப் பிடித்து போய் சேர்ந்தோம். டிக்கட் வாங்க கையை நீட்டினால், சார் எல்லாம் ஃபுல், ஸ்டேஜ் டிக்கட் தான் இருக்கு என்றார் அவர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நாங்கள் எல்லாம் ஸ்டேஜில் உட்கார்ந்து கொண்டால் சுதா ரகுநாதன் எங்கு உட்காருவார்? அதுவும் அந்த டிக்கட் வெறும் ஐம்பது ரூபாய் தான்..முன்ன பின்னே இந்த மாதிரி விழாக்களுக்குப் போய் அனுபவமாவது இருக்க வேண்டும். சரி இருக்குறதை கொடுங்கோ என்று வாங்கிக் கொண்டோம். எனக்கு என்னமோ, எல்லோரும் எங்களையே பார்ப்பது போல் இருந்தது. நான் வேறு சும்மா இருக்காமல் என் சங்கீத அறிவை எல்லாம் கசக்கி பிழிந்து சாரீரம், ஆலாபனை , நாதக் கமலம், ஆரோகனம், அவரோகனம் என்று எடுத்து விட்டுக் கொண்டிருந்தேன்..அப்போது தானே அங்கு இருப்பவர்களுக்கு நாங்கள் சங்கீத கலா பூஷன்கள் என்று நினைத்துக் கொள்வார்கள் என்று நினைத்து.பயல்களுக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை, இதில் ஒருவன், நீ என்கிட்ட இன்னைக்கு காலையிலேயே சொல்லி இருந்தா, குளிச்சுட்டாவது வந்திருப்பேன் என்றான். கருமாந்திரம்.

50 ரூபாய் டிக்கட்டுக்கு நாரத கான சபா மேடையில் ஏறி உட்கார்ந்து விடுவேன் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. அந்தப் பெரிய மேடையில் ஒரு சிறிய மேடை, அதில் சுதா ரகுநாதனும் அவருடைய பக்க வாத்தியங்களும்..அவரைச் சுற்றி நாங்கள் உட்கார்ந்து கொண்டோம். திரை விலகியவுடன் கை தட்டினார்கள். நான் ரசிகர்களை நோக்கி கை ஆட்டலாம் என்று சொன்னேன், நண்பர்கள் என்னை தடுத்து விட்டார்கள். ஒரே தாத்தா பாட்டி கூட்டம் தான்.

ஒரு வழியாய் கச்சேரி ஆரம்பித்தது..சத்தியமாய் சொல்கிறேன், எனக்கு யானை முகனே, அருள் புரிவாய் என்ற ஒரு நான்கு வார்த்தைகளைத் தவிர ஒன்றும் புரியவில்லை. நண்பர்கள், நீ பரவாயில்லை உனக்கு அவ்வளவு புரிந்ததே என்றார்கள். 50 ரூபாய்க்கு அவர் அத்தனை எச்சரிக்கை ஏன் செய்தார் என்று போக போகத் தான் தெரிந்தது. புரியாத சங்கீதம், நட்டநடுவில் சம்மனமிட்டு எவ்வளவு நேரம் உட்கார முடியும் சொல்லுங்கள்? 6 மணிக்கு வெளியே ஓடி வந்து விட்டோம். கச்சேரி 7:30 மணி வரை.

அங்கு வந்து கச்சேரியை ரசிப்பவர்கள் நான் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். எத்தனை விதமான தலை ஆட்டல்கள்? ஒருவர், தலையை ரசித்து தலை ஆட்டுகிறாரா? அல்லது தூங்கி வழிகிறாரா என்று என்னால் கண்டு புடிக்க முடியவில்லை. ஒருவருடைய, தலையாட்டல்..ஓஹோ, அப்படியா, சரி மேட்டருக்கு வா என்பது போல் வெடுக் வெடுக்கென்று ஆடியது? சிலர் கண் மூடி தூங்கி விட்டார்கள். ஆனால் தான் தூங்கவில்லை என்பதை கையை ஆட்டி ஆட்டி காட்டிக் கொள்கிறார்கள். ஒன்று புரிந்தது, "சரிகமபதநி" (வார்த்தைகளே வராமல் இது மட்டும் பாடுவதற்கு என்ன சொல்வார்கள்? ஸ்வர சஞ்சாரமா?) என்பது உச்சத்தில் போய், மறுபடியும் கீழே வந்தவுடன் கண்டிப்பாக கை தட்ட வேண்டும்!

கர்நாடக சங்கீதம் முழுதும் தெய்வங்களை துதிப்பது தானா? வேறு விஷயங்களே இதில் இல்லையா? சமூகக் கருத்துக்களை ஏன் இதில் கொண்டு வரவில்லை? என்று என் நண்பனிடம் கேட்டேன். (வேறு கருத்துக்கள் இல்லாமல் இருக்காது என்றே நினைக்கிறேன்!) இசையின் மூலம் இறைவனை அடைவதற்கான ஒரு வழி தான் சங்கீதமும் என்றான் அவன். எத்தனை நதிகள் இருந்தாலும், அனைத்தும் கடலில் சென்று கலப்பதைப் போல எத்தனை விஷயம் இருந்தாலும், மனிதன் கடைசியில் இறைவனிடம் கலந்து விடுகிறான்.

சங்கீத ஞானமு..பக்தி விநா...சன்மார்க்கமு தரனே

போன வாரம் சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் நடக்கும் 29வது புத்தக (கண்காட்சியா அல்லது சந்தையா?) சந்தைக்குச் சென்றிருந்தேன். அதற்காக பெங்களூரில் இருந்து இரு நண்பர்களும் வந்திருந்தார்கள். இதற்காக சென்னை வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் பலருக்கு வியப்பாக இருக்கிறது. இதுக்காகவா பெங்களூர்ல இருந்து வர்றாங்க? என்று கேட்கிறார்கள். இதில் வியக்க என்ன இருக்கிறது? நல்ல புத்தகங்களை தேடிப் பிடித்து வாங்கிப் படிக்க வேண்டும் என்பது நல்ல விஷயம் தானே..ஒருவர் சும்மா வேண்டுமென்றாலும் வேறு ஊருக்கு போகலாம், ஆனால் புத்தகம் வாங்குவதை மட்டும் காரணம் கொண்டு அந்த ஊருக்குப் போகக்கூடாதாம்..

இத்தனை பதிப்பகங்கள் இருக்கின்றன என்று எனக்கு அன்று தான் தெரிந்தது. கடற்கரையில் நின்று கடலின் விஸ்தரீனத்தையும், பிரம்மாண்டத்தையும் பார்த்து, பிரமித்து சே! நான் எத்தனை சின்னவன் என்ற அதே எண்ணம் இங்கும் வந்தது! எத்தனை விதமான புத்தகங்கள்? எத்தனை விதமான சிந்தனைகள்? உலகில் நமக்குத் தெரியாமல் இன்னும் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன? பல நாட்கள் வீணடித்து விட்டோமோ என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும், இப்போதாவது தெளிந்தோமே என்ற சந்தோஷத்துடன் அந்த இடத்தில் சுற்றி வந்தேன்.

நாங்கள் பிற்பகலில் அங்கு சென்றதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஒவ்வொரு கடையும் ஏறி இறங்கி, புத்தம்புது புத்தகங்களின் வாசம் நுகர்ந்து, புத்தகத்தை அலசித் தான் வாங்குவேன் என்ற சாக்கில் பாதி புத்தகத்தை புரட்டி அங்கேயே படிப்பது சுவாரஸ்யம் தான்..யாரும் எதுவும் சொல்ல முடியாது. இளம் பெண்கள் தான் அதிகமாகப் படிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். லேண்ட் மார்க்கில் பார்த்திருக்கிறேன். ஒரு கருப்பு ·ப்ரேம் போட்ட சின்ன கண்ணாடி, தோளில் அலைபாயும் கூந்தல், உட்கார்ந்தால் முதுகு தெரியும் டி-சர்ட், உடம்போடு ஒட்டிய ஜீன்ஸ், ஒரு ஜோடி ஸ்டூல் (உபயம் : சின்ன கலைவாணர்) கையில் ஒரு கூடை, அலமாரியை பார்த்துக் கொண்டே, படக்கென்று ஒரு பெரிய ஆங்கில புத்தகத்தை (புரட்டிக் கூட பார்க்காமல்) அநாயாசமாய் அந்தக் கூடையில் போட்டுக் கொண்டு அடுத்த அலமாரியில் தேடிக் கொண்டிருப்பார்கள். கத்திரிக்கா கா கிலோ, தக்காளி அரை கிலோ ரேஞ்சுக்கு புத்தகம் வாங்கிக் கொண்டிருப்பார்கள். இவன் புத்தகம் வாங்குவதை தவிர மற்ற எல்லா விஷயத்தையும் செய்கிறான் என்று வாசகர்கள் என்னைப் பற்றி ஒரு தப்பான முடிவுக்கு வரக்கூடாது. இவர்களைப் போல நான் எப்போது இப்படி கூடையுடன் அலையப் போகிறேனோ என்ற ஏக்கம் தான். வேறு ஒன்றும் இல்லை (இல்லையா என்ன? சந்தேகம் தான்..)

ஆனால் அந்த லேண்ட் மார்க் பெண்களை இங்கு பார்க்க முடியவில்லை. ஒரு வேளை இந்த முறை நான் நிஜமாகவே புத்தகங்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தேனோ என்னமோ? சரி நான் வாங்க நினைத்ததும் வாங்கியதும்!

1. ஜெயகாந்தன் சிறுகதை தொகுப்பு - 2வது பகுதி
(2வது பகுதி மட்டும் தர மாட்டோம் சார் என்று கடைக்காரர் மறுத்து விட்டார்! நான் என்ன நாவலின் 2வது பகுதி மட்டுமா கேட்டேன், சிறுகதை தானே?)
2. நாலு மூலை (கட்டுரை தொகுப்பு) - ரா.கி. ரங்கராஜன்
3. காகங்கள் (சிறுகதை தொகுப்பு) - சு. ராமசாமி
4. ஒரு புளியமரத்தின் கதை (நாவல்) - சு. ராமசாமி
5. ஜே. ஜே. சில குறிப்புகள் (நாவல்) - சு. ராமசாமி
6. சிறகுகள் முறியும் (சிறுகதை தொகுப்பு) - அம்பை

சு. ராமசாமிக்கு என் சார்பில் அஞ்சலி செலுத்தியாகிவிட்டது. என்னடா இவ்வளவு பேசினான், வெறும் ஐந்து புத்தகங்கள் தான் வாங்கி இருக்கிறான் என்று நினைக்க வேண்டாம். இன்று வரை, நாலு மூலை ஒரு 30 பக்கமும் (நூலகத்திலிருந்து வாங்கி இதை நான் ஏற்கனவே படித்து விட்டேன்) , ஒரு புளிய மரத்தின் கதை ஒரு 50 பக்கமும், காகங்களிலும், சிமு யிலும் தலா இரண்டு சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். இதை படித்து முடிப்பதற்குள் 30 வது புத்தக சந்தை வந்து விடும் என்ற ஒரு நம்பிக்கை தான். (என் நண்பன் வாங்கியது பெரிய லிஸ்ட்! வழக்கம் போல மறந்துட்டேன்.ஹிஹி..)

புத்தகக கண்காட்சியின் நிறை என்னவென்றால், இப்படி ஒன்று நடப்பதே மிகப் பெரிய நிறை தான். இப்படி எல்லாம் சந்தைகளை வைத்து மக்களின் படிக்கும் திறனை ஊக்குவித்து தொல்லைக் காட்சியில் இருந்து விடுதலை கிடைத்தால் அபாரம் தான். குறைகள் : எதிர்பார்த்தது போல் இல்லை என்று நண்பர்கள் நொந்து கொண்டார்கள். இதனால் தான் நான் எதிர்பார்ப்பதே இல்லை.கார்ட் வசதிகள் அன்று மிகவும் குறைவாக இருந்தது. பணம் பத்தாமல் மறுபடியும் சென்று பணம் எடுத்ததில் பாதி வேளை கழிந்தது. அந்த டிக்கட்டிலேயே பதிப்பகங்களை.யும் ஸ்டால் நம்பர்களையும் ஒரு அட்டவனையாய் போட்டுக் கொடுத்திருந்தால், எல்லோருக்கும் அது மிக உபயோகமாய் இருந்திருக்கும் என்பது என் அபிப்பிராயம். அப்புறம் வாங்கிக் கொள்ளலாம் என்று மறுபடியும் அதே பதிப்பகத்தை தேடுவதற்குள், வேறு பதிப்பகம் கண்ணில் பட்டு, அங்கு நுழைந்து 4 புத்தகம் வாங்க வேண்டி இருக்கிறது. ஒரு வேளை இதை நடத்துபவர் இதை எல்லாம் எதிர்பார்த்து தான் அப்படி செய்யாமல் விட்டாரோ என்னவோ?

அன்று நா. முத்துக்குமாரையும், சின்னக் கலைவாணரையும் தூரத்திலிருந்து பார்த்து, டேய் விவேக் என்னா கலர்டா? அட, பாருடா..அவரும் நடந்து தாண்டா போறாரு என்று இல்லாத அதிசயத்தைப் பார்த்து அசந்து போய் வீடு திரும்பினோம். ஹ¤ம்...புத்தகங்களைப் பார்க்கும் போது கற்றது கை அளவு கூட இல்லை என்று படுகிறது!!

எல்லோருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்! இப்போ நீங்க எல்லாரும் எனக்கு இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்லுவீங்களே? எனக்கு தெரியுமே..