நடப்பவை எல்லாம் நல்லவைக்கே என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. ஒரு பதிவைப் போட்டதும் அதை தமிழ்மணத்திற்கு அளித்தால் தான் நட்சத்திரப் பக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பதிவு வரும் என்பதை மறந்து விட்டேன். இரண்டு பதிவை போட்டும், ஒன்றுமே இல்லாமல் நட்சத்திரமே வெறிச்சோடி இருந்தது. அதற்குள் இருவர் எங்கேப்பா இந்த வார நட்சத்திரத்தை காணோம் என்று குழம்பி அதையே ஒரு பதிவாய் போட்டு விட்டனர்! ஒரு வழியாய் தமிழ்மணத்திலிருந்து எனக்கு மடல் வந்த பிறகு தான் நாக்கை கடித்துக் கொண்டு, விஷயத்தை உணர்ந்து பதிவுகளின் இணைப்பை தமிழ்மணத்திற்கு அளித்தேன்! அதற்குள் நான் நட்சத்திரத்திற்கு முன் எழுதிய சில பல பதிவுகள் நட்சத்திரப் பக்கத்தில் தெரிந்தது! அடேடே..என்னது நம்ம இப்போ எழுதின பதிவெல்லாம் கடைசியா போய், முன்னே எழுதின பதிவெல்லாம் முன்னாடி வந்துருச்சே என்று ஒன்றும் புரியாமல் குழம்பி, ஏதோ என் எல்லா பதிவுகளை படித்தால் சரி என்று நினைத்துக் கொண்டேன்!

தமிழ்மணத்திற்கு ஒரு சின்ன வேண்டுகோள்! ஒரு பதிவரை நட்சத்திர வாரத்திற்கு அழைப்பு விடும் போது அவர் என்னன்ன செய்ய வேண்டும் என்பதை இன்னும் சற்று விளக்கமாக சொன்னால் இன்னும் செளகரியமாய் இருக்கும்! என்னை மாதிரி மறதிக்காரர்களுக்கும் அது உதவியாய் இருக்கும்.
யார் வேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று வெகு சுலபமாய் சவால் விடலாம்! அவர்களிடம் சரி எப்போது செய்வாய்? தேதியும், நேரத்தையும் சொல்லு என்று சொல்லிப் பாருங்கள்! அடுத்த நிமிடம் அவன் அந்த இடத்திலிருந்து அப்பீட் ஆயிருப்பான்! அது தான் டெட்லைன் என்பது! இப்போது தான் அதன் மகத்துவம் புரிகிறது! இந்த மாதிரி எந்த கூட்டுக்குள் அடைபடாமல் தான் நானும் இருந்தேன்! எழுதியே ஆகனும் என்று ஒரு கட்டாயம் இருந்தால் அது என்னவோ புரியல, என்ன மாயமோ தெரியல ஒரு மண்ணும் வராது! இதனால் தான் வலையுலக நண்பர்கள் அழைக்கும் சன்கிலிப் பதிவிலும் நான் கலந்து கொள்வதில்லை! :)சென்னையில் தேசிகன் தயவில் எழுத்தாளர் சுஜாதாவை சந்தித்த போது "டெட்லைன் இல்லையென்றால் எழுத முடியாது!" என்று அவர் கூறியது எவ்வளவு உண்மை என்று எனக்கு இன்று புரிகிறது. நான் மட்டும் இந்த வாரத்தின் நட்சத்திரமாக இல்லையென்றால் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பதிவை போட்டிருந்தால் அதிகம்! கிட்டத்தட்ட ஒரு பத்து பதிவுகளை போட்டது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது! டெட்லைன் வேலை செய்யத் தான் செய்கிறது!

நான் இந்த வார நட்சத்திரத்தில் போட்ட அத்தனைப் பதிவுகளும் மிக நல்ல தேர்ந்த பதிவுகள் என்று சொல்ல முடியாது! டெட்லைன் இல்லையென்றால் இன்னும் சிறப்பாய் எழுதியிருப்பேனோ என்று தோன்றினாலும் அதே சமயம், டெட்லைன் இல்லையென்றால் எழுதியிருப்பேனா என்ற சந்தேகம் தான் அதிகம் உள்ளது! ஆனால் வெகு நாட்களாய் சமுதாயத்தில் திருமணத்தையும் அதில் சூழ்ந்துள்ள குழப்பங்களையும் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்! நட்சத்திர வாரத்தின் மூலம் அது வெகு ஆர்ப்பாட்டமாய் நிறைவேறியதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!

இந்த நட்சத்திர வாரத்தில் நான் பங்கெடுத்துக் கொண்டதே ஒரு அற்புதமான அனுபவம்! ஒரு சிறுவனை மேடையில் ஏற்றி விட்டு அனைவரும் வேடிக்கை பார்க்கிறார்களே என்று பயந்தாலும், ராஜாதி ராஜன் வந்தேனே என்ற பதிவின் மூலம் ஒரு சிருங்கார அறிமுகம் செய்து கொண்டு குறையொன்றுமில்லை என்ற பதிவின் மூலம் வலையுலகில் நான் இருந்து வரும் நிலையை விளக்கி என்னுடைய சாந்தத்தை பதிவு செய்தேன்! சமுதாயத்தில் நடக்கும் சிறுமைகளைக் கண்டு இப்படியும் மனிதர்களா என்ற என் அருவருப்பை திருமணமாம் திருமணமாம் பதிவில் ஆரம்பித்து மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்ற பதிவு வரை சிறுமை கண்டு பொங்கும் என் ரெளத்திரத்தை பதிவு செய்தேன்! என்னுடைய இத்தகைய வீரத்தை பாராட்டி நீங்கள் அளித்த பின்னூட்டத்தில் என் உள்ளம் ஆனந்தக் கூத்தாடியது. கடைசியாக, என்னையும் ஒரு நல்ல எழுத்தாளன் [அப்படி தானே நினச்சுருக்கீங்க?] என்று நம்பிய உங்கள் அன்புக்கும்/கருணைக்கு என் நன்றிகள் பல உரித்தாகுக!! [நவராத்திரி திரைப்படத்திற்கு நன்றி]

என்ன ஒரு மண்ணும் புரியலையா? அதாவது, அற்புதம், சிருங்காரம், சாந்தம், பயம், கருணை, அருவருப்பு, கோபம், வீரம் மற்றும் ஆனந்தம் என்ற நவரசங்களையும் அப்படியே கரைச்சி இந்த நட்சத்திர வாரத்தில கலங்கடிச்சுருக்காராமா...நவராத்திரி படத்திலே ஆரம்பிச்சி நவராத்திரி படத்துலையே முடிச்சி வாழ்க்க ஒரு வட்டம்டான்னு புரிய வைக்கிறாராமா.. இந்தப் பக்கியயெல்லாம் ஏத்தி விடாதீங்கன்னா கேக்குறாய்ங்களா? அந்த ஏ.பி. நாகராசனை சொல்லனும்!

மங்களம் சுப மங்களம்!!

இதற்கு முந்தைய பதிவுகள் இங்கே 1, இங்கே 2, இங்கே 3

ச‌மீப‌த்தில் கேள்விப்பட்ட செய்தி ஒன்று. காத‌லித்த‌ இருவ‌ர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திரும‌ண‌ம் செய்து கொண்டு தமிழ்நாட்டிலிருந்து ‍ஹிமாச்ச‌ல‌ப் பிர‌தேச‌த்திற்கு ஓடி விட்ட‌ன‌ர்! கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு வ‌ருட‌ கால‌த்திற்குப் பிறகு அந்தப் பெண்ணின் பெற்றோர் அலைந்து திரிந்து அவர்களை கண்டு பிடித்து ஏன் இப்படி அவசரப்பட்டீர்கள், நாங்களே உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்று தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர்! அந்தப் பெண்ணோ வாயும் வயிறுமாக இருந்திருக்கிறார். மாப்பிள்ளையை ஹாலில் உட்கார வைத்து விட்டு அவளின் தகப்பனும் அண்ணனும் அந்தப் பெண்ணை வீட்டின் அடுத்த அறைக்கு கூட்டிச் சென்று கடப்பாரையால் குத்தி கொன்று விட்டனர்! சத்தம் கேட்டு ஓடி வந்த மாப்பிள்ளையை பார்த்து "ஒழுங்கா ஓடிப் போயிடு, இல்லை உன்னையும் கொன்றுவோம்" என்று மிரட்டி உள்ளனர். அவர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளையின்ட் கொடுத்து விட்டார். போலீஸ் அவரை பிடித்ததும் பத்திரிக்கைக்காரர்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டதற்கு அந்தத் தகப்பன் [இவரை தகப்பன் என்று சொல்லலாமா?] "அவளால் நான் பட்ட அவமானம் கொஞ்ச நஞ்சமா? இப்போது தான் என் சாதி மக்கள் என்னைப் பார்த்து பெருமைபடுகிறார்கள்! இனிமேல் என் சாதியை சேர்ந்த ஒரு பெண்ணும் இத்தகைய காரியத்தை செய்யத் துணிய மாட்டாள்!" என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறார்! இவர்களை ஒரே வரியில் காட்டுமிராண்டிகள் என்று சொல்லிவிடலாம்! ஆனால் அது காட்டிமிராண்டிகளை கேவலப்படுத்துவதாகும்! ஒரு காட்டுமிராண்டி கூட வாயும் வயிறுமாய் இருக்கும் தன் சொந்த மகளை இவ்வளவு கொடூரமாக கொல்ல மாட்டான் என்றே தோன்றுகிறது...

காதல் திருமணங்கள்/கலப்புத் திருமணங்களைப் பொறுத்தவரையில் பெற்றோர்களின் புரிதலும் அதைத் எதிர்த்து அவர்கள் புரியும் வாதங்களும் வலுவற்றதாகவே இருக்கின்றன! [பெண்ணைப் பெற்றவர்கள் பையன் நல்லவனாய் இருக்க வேண்டுமே என்று அஞ்சி அழுவதைத் தவிர!]
ஒரு பையன் தன் காதலை பெற்றோரிடம் சொன்னவுடன் அவர்கள் எடுத்தாளும் முதல் விஷயம் பாசம்! அவர்களின் பாசம் அந்தப் பையனுக்குப் புரிகிறது என்றாலும் அவனுக்கு இப்போது கிடைத்திருப்பது காதல் என்னும் ஒரு புதிய அனுபவம். என்ன தான் ஒரு பெற்றோர் பாசத்தைக் கொட்டி தன் பிள்ளையை/பெண்ணை வளர்த்தாலும், காதல் என்ற உணர்ச்சியை அவர்களால் கொடுக்க முடியாது! அதனால் பாசத்தை காதலுடன் ஒப்பிடுவது செல்லாது!

பெற்றோர்: நம் சாதி சனம் நம்மை ஒதுக்கி வைத்து விடும், நாம் தெருவில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது, யாரும் நம்மை மதிக்க மாட்டார்கள் என்று ஒரு வாதம்.

காதலிப்போர்: இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் நாம் யாருக்காக வாழ்கிறோம்? என் வாழ்க்கையை என் இஷ்டப்படி வாழ எனக்கு உரிமையில்லையா? நான் ஏன் எப்போதும் அந்த நான்கு பேர் என்ன சொல்வார்கள் என்று அஞ்சி அஞ்சி வாழ வேண்டும்? அந்த நான்கு பேருக்கு வேறு வேலையே இல்லையா? நான் வேறு சாதி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன் என்று எப்போதும் பேசிக் கொண்டிருப்பது தான் வேலையா? அப்படியே கேட்டாலும் பெற்றவர்கள் என் பிள்ளையின் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் என்றால் அதற்கு மேல் அவர்கள் என்ன செய்ய முடியும்? பிழைப்பின் காரணமாக ஏற்கனவே ஊர் மாறி, பேர் மாறி ஒதுங்கிப் போய்த் தான் திரிகிறோம், இதில் இவர்கள் சாதியை விட்டு ஒதுக்கி வைப்பதில் என்ன பெரிய வித்தியாசம்?

பெற்றோர்: நீ இப்படியெல்லாம் செய்தால் உன் பின்னால் இருப்பவர்களுக்கு எப்படித் திருமணம் நடக்கும்? உன் தங்கைக்கும் தம்பிக்கும் வேற்று சாதியிலேயே பார்க்க முடியுமா?

காதலிப்போர்: ஓ! பேஷா!! ஏற்கனவே வேற்று சாதியில் காதலிக்கும் பையனிடமும், பெண்ணிடமும் இப்படி ஒரு கேள்வி கேட்பதே தவறு! அவர்கள் அப்படித் தான் பதில் சொல்வார்கள்!

பெற்றோர்: உனக்கு வயசு பத்தாது. நீ இப்போ ஆசைப்பட்டு கட்டிக்கிறே, இதெல்லாம் நிலைக்காது. இதெல்லாம் சரிப்படாது. உனக்கு ஒரு நல்ல பெண்ணா/பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம்!

காதலிப்போர்: நீங்கள் எனக்கு பார்த்து கட்டி வைக்கும் பெண்ணுடன் நான் சந்தோஷமாய் வாழ்வேன் என்று என்ன நிச்சயம்? அவள் எந்தப் பிரச்சனையும் செய்யாமல் குடும்பத்திற்கு அடங்கி ஒடுங்கி இருப்பாள் என்று உங்களால் உத்தரவாதம் தர முடியுமா? நீங்கள் சொல்வது போல் நாளை இவளாலும் எனக்குப் பிரச்சனை வரலாம், ஆனால் அது நான் எடுத்த முடிவு என்ற திருப்தியாவது எனக்கு மிஞ்சும்! யார் மேலும் பழியை சுமத்தாமல் நானாக என் தலை விதியை நொந்து கொள்வேன்! [இதில் என்ன பிரச்சனை? அவன் இஷ்டம்; அவன் பாடு!]

பெற்றோர்கள் : சரி நாளைக்கு உன் பிள்ளைகளை எந்த சாதிப்படி வளர்ப்பாய்? யாருக்குக் கட்டிக் கொடுப்பாய்?

காதலிப்போர்: என் பிள்ளை யாரை விரும்புகிறதோ அவருக்கு!

சாதி தோன்றி மதம் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்த நெறி காதல்!


ஒரு பையனோ பெண்ணோ, காதலில் விழும் வரை தான் [ஏன் விழும் வரை...எழும் வரை என்று வைத்துக் கொள்ளலாமே] அவர்கள் அவர்களுக்கு பூரணமாய் சொந்தம்! பிறகு ஃபிப்டி ஃபிப்டி தான்! அந்தக் காதலுக்கு அத்தனை சக்தி இருக்கிறது! என்ன செய்வது? ஊர்ல என்ன வேணா நடக்கலாம் என் மகன்/மகள் அப்படியில்லை, நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டான்/ள் என்று நினைப்பதை பெற்றோர்கள் முதலில் நிறுத்த வேண்டும்!

என்னைப் பொறுத்தவரை பெற்றோர்கள் தோளுக்கு மேல் வளர்ந்த பிறகு தோழன் என்று வெறும் வாய்ச்சொல்லுடன் நிற்காமல் செயலில் இறங்க வேண்டும். முக்கியமாக பெண்ணை பெற்றவர்கள்! வீட்டில் எத்தனை பெற்றோர் வயதுக்கு வந்த பெண்ணிடம் காதலைப் பற்றி ஆரோக்கியமான விவாதங்களை நடத்துகிறார்கள்? முதலில் உங்கள் மகள் உங்களிடம் எதையும் மறைக்காத வண்ணம் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். ஏமாற்றுப் பேர்வழிகளைப் பற்றி டீ.வியிலோ, செய்தியிலோ பார்த்தால் அதைக் காட்டி அவளை எச்சரிக்க வேண்டும். தகுந்த நேரத்தில் ஒரு நல்ல வரனை அவள் அழைத்து வந்தால் சாதி மதம் என்ற பேதங்களை தகர்த்தெறிந்து அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துத் தர வேண்டும்!

ஒரு காலத்தில் பெண்கள் அடுப்படியை விட்டு வெளியே வர முடியாத நிலையில், அப்படி வந்த ஒரு பெண்ணை தூற்றியவர்கள் எண்ணற்ற பேராய் இருந்திருப்பார்கள்! பெண்கள் படிக்கக் கூடாது என்ற காலத்தில் புத்தகத்தைத் தூக்கிய பெண்கள் பல அவமானங்களை சந்திருத்திருப்பார்கள்! பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது என்ற காலத்தில் முதலில் வேலைக்குப் போன பெண்கள் கூனிக் குறுகித் தான் போயிருப்பார்கள்! முதன் முதலாய் தன் துணையை தானே தேடிக் கொண்ட பெண்ணை எல்லோரும் வேசி என்று தான் சொல்லியிருப்பார்கள்! இன்றும் அப்படிச் செய்யும் பெண்களை சில பெற்றோர் அப்படித் தான் சொல்கிறார்கள்! எத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் உடைக்கப் பட வேண்டிய நேரத்தில் உடைபட்டே தீரும்!

"புதிய வார்ப்புகள்" என்ற கதையில் ஜெயகாந்தன் கதையின் முடிவில் இதை அருமையாகச் சொல்லி முடிக்கிறார்!

மனிதனே ரொம்பப் பழமையான உலோகம் தான். காலம் தான் அவனப் புதிது புதிதாக வார்க்கிறது. வாழ்க்கையின் அந்த நிர்பந்தத்துக்கு முடிந்தவர்கள் வளைகிறார்கள். வளைய முடியாதவர்கள் உடைந்து நொறுங்குகிறார்கள்.

வளைந்தாலும் சரி, உடைந்தாலும் சரி, காலம் புதிது புதிதாய் மனிதனை வார்த்துச் செல்கிறது. அந்தக் குடும்பம் வாழ்க்கையின் வார்ப்புக்கேற்ப வளைந்திருக்கிறதா, உடைந்திருக்கிறதா அல்லது இரண்டுமே நிகழ்ந்திருக்கிறதா?

டாக்டர் வந்தபின் தெரியும்!

(போறும்!)
இதற்கு முந்தைய பதிவுகள் இங்கே 1, இங்கே 2

பெற்றோர் சம்மதமில்லாமல் ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்வது எல்லா சமூகங்களிலும் காலம் காலமாய் இருந்து வருகிறது. எல்லோர் வீட்டுப் பரணிலும் யாருக்குமே சொல்லப்படாத ஒரு காதல் திருமணம் தூசு படிந்து கிடக்கத் தான் செய்கிறது! மதுரையில் எங்கள் சமூகத்திலும் அது அதிகரித்திருக்கிறது! அதிலும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் எங்கள் சாதி, மதங்களைச் சேர்ந்தவர்களை விடுத்து, வேற்று சாதியினருடனும், வேற்று மதத்தினருடனும் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்வதாக மதுரையில் இருக்கும் என் நண்பர்கள் நான் அங்கு செல்லும்பொழுதெல்லாம் கண்கள் சிவக்க குற்றம் சாட்டுவார்கள்! அவர்களுக்கு, பதிலாக நான் சிந்துவது ஒரே ஒரு புன்னகை தான்!

கலப்புத் திருமணங்கள் இன்று நேற்று நடப்பவை அல்ல. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே நடந்து கொண்டு தானிருக்கின்றன! பிராமணர்கள், ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் போன்ற வருண பேத கால கட்டத்தில், உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவருடன் உடலுறவு வைத்துக் கொண்டு பிறந்த குழந்தையை சண்டாளர் என்று அழைத்தனர்! வேத காலம், இந்து தர்மத்தை ஒவ்வொருவரும் மனதார கடைபிடித்த காலம், பெண்கள் வீட்டை விட்டே வெளியே வராத காலத்திலேயே அப்படி நடந்திருக்கும் போது இந்தக் காலத்தில் கலப்புத் திருமணங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதும், இல்லாததும் பொல்லாததும் செய்தது போல் புலம்புவதும் சிரிப்பைத் தான் வரவழைக்கின்றன!

ஒன்றை கவனித்தீர்களா? ஒரு பெண் தனக்குப் பிடித்தவனை பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டால் அவள் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டவள் என்கிறார்கள்! ஆனால் கூட ஓடும் அந்தப் பையனை ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டவன் என்று சொல்லாமல் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டான் என்று சொல்கிறார்கள்! ஆணுக்கு ஒரு நியாயம்; பெண்ணுக்கு ஒரு [அ]நியாயம்! அது சரி, ஏன் இப்படி ஓடிப் போகிறார்கள்?

எந்த வீட்டில் பெற்றோர் மகனின்/மகளின் காதலை காது கொடுத்து கேட்கிறார்கள் சொல்லுங்கள்? அப்படியே ஒரு பெண்ணோ பையனோ சொன்ன அடுத்த நிமிடம் அம்மா தாரை தாரையாய் கண்ணீர் வடிப்பதும், அப்பா பூமிக்கும் வானத்திற்கும் குதிப்பதுமாக இருந்தால் எந்த பையனும்/பெண்ணும் இவர்களிடம் சம்மதம் வாங்கிக் கொண்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள்?

பையனின் குடும்பத்தை விடுங்கள், அவனையாவது தலையில் தண்ணீர் தெளித்து விட்டு விடுவார்கள்! பெண்கள் தான் பாவமான பாவம்.! அந்தப் பெண் ஒரு செளராஷ்ட்ரிய பையனை காதலித்தாலும், அது எப்படி நீயாக ஒரு மாப்பிள்ளை தேடிக் கொள்வது? எப்படி நீ ஒரு ஆடவனை தலை நிமிர்ந்து பார்க்கலாம்? நான்கு பேர் நம் குடும்பத்தைப் பற்றி என்ன பேசுவார்கள்? நம் மானம் மரியாதை என்ன ஆவது? என்றெல்லாம் சொல்லி ஏதோ அவளின் கற்பே போய் விட்ட மாதிரி [பெண்களுக்கு மட்டும் தான் கற்பு இருக்கிறதென்றால் அப்படி ஒன்று இல்லவே இல்லை] பெற்றோர்கள் நினைக்கிறார்கள்! அம்பிகாபதி, அமராவதி, தேவதாஸ் காலத்திலிருந்து குடும்பத்துடன் உட்கார்ந்து கொண்டு காதல் படங்களாய் பார்க்க வேண்டியது, பக்கத்து வீட்டில் ஒரு பெண் ஓடி விட்டால் அதைப் பற்றி நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிசு கிசு பேசிக் கொள்வது அதே தங்கள் வீட்டில் நடந்து விட்டால் குய்யோ முறையோ என்று அழுது புலம்புவது!

சரி, இத்தனை வீராப்பு பேசியவர்கள், ஓடிப் போனவர்களை அப்படியே தண்ணீர் தெளித்து விட வேண்டியது தானே? அதையும் செய்ய மாட்டார்கள். அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தவுடன் எல்லா வைராக்கியத்தையும் விட்டு விட்டு மறுபடியும் கொஞ்சிக் குலாவிக் கொள்வது? [இப்போது எங்கே போனார்கள் அந்த நான்கு பேர்?] இதையெல்லாம் அடுத்த செட் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பார்கள் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை! எப்படியும் கொஞ்ச நாள் போக்கு காட்டுவார்கள், ஒரு பேரனோ பேத்தியோ பெற்றுக் கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்து அடுத்த ஓட்டம் தயாராகி விடுகிறது! பிறகு அதே ஐய்யோ, அம்மா...மானம் போச்சு, கெளரவம் போச்சு!! ஏன் தேவையில்லாமல் முதலில் அழுது அரற்ற வேண்டும், பிறகு சேர்த்துக் கொள்ள வேண்டும்? ஏன் இந்த கால தாமதம்? உண்மையில் உங்கள் மகன்/மகள் தனக்குத் தகுந்த வரனை அழைத்து வந்தால் பெருந்தன்மையாய் ஏற்றுக் கொள்ளுங்களேன்! அப்படியே அது தவறானதாக இருந்தாலும் அதை தகுந்த ஆதாரத்துடன் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்!

இது என்ன அவ்வளவு சுலபமா? பெற்றோர்களின் பிரச்சனை தான் என்ன? சரி இதற்கு என்ன தான் செய்வது?

(சீறும்)
தொடரின் முதல் பகுதி இங்கே

பின்னூட்டமிட்டு தங்கள் கருத்துக்களை பதித்த அனைவருக்கும் நன்றி! நான் சொல்லியது போல் வீட்டில் சொன்னால் நிச்சயமாக அம்மா அப்பா திட்டத் தான் செய்வார்கள்! நூற்றில் பத்து பேர் கூட இப்படி பெற்றவர்களிடம் பேசுவது அறிதாக இருக்கும் பட்சத்தில் [இதற்கும் அத்தனையும் படித்து கிழித்ததுகள்!] அந்தப் பத்து பேருக்கும் பெற்றோர்கள் சொல்லும் பதில் என்ன தெரியுமா?

1. நீ இப்படி எல்லாம் பெண் வீட்டுக்காரங்களுக்கு பரிஞ்சி பேசினா நாளைக்கு எல்லாத்துக்கும் உன் தலையில மெளகா அரைச்சிருவாங்க...

2. உன் பேச்சை கேட்டுட்டு நாங்களும் எதுவுமே வேணாம்னு சொன்னா நம்ம சாதி சனம் நம்ம பையனுக்கு என்ன குறைச்ச நீங்க ஏன் இவ்வளவு இறங்கி போறீங்க என்று நம்மை கேட்பார்கள்!

3. சரி எப்படி இருந்தாலும் நீ சொல்வது நியாயம் என்றே வைத்துக் கொண்டு, அப்படியே செய்தாலும் "என்ன பையன் எதுவுமே வேணாங்குறான் ஏதாவது குறை இருக்குமோ என்று பெண் வீட்டுக்காரர்கள் நினைத்து விடுவார்கள்.

எப்படி இருக்கு கதை? பெருந்தன்மையாய் ஒருவன் நடந்து கொண்டால் அவன் தலையில் மிளகாய் அரைப்பதா? எதுவுமே வேண்டாம் என்று சொல்பவனுக்கு ஏதாவது இருக்குமோ என்று தப்பு கணக்கு போடுவதா? அத்தனை சந்தேகம் இருந்தால் பையனுக்கும் பெண்ணுக்கும் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை விட்டு இருவரின் உடலையும் பரிசோதித்து மருத்துவ சான்றிதழ் கொண்டு முடிவு செய்யலாமே...

இந்த திருமண வைபவத்தில் நடக்கும் இன்னொரு பெரிய கூத்து ஜாதகம் பார்ப்பது! இத்தனை காலமாக ஜாதகம் பார்த்து செய்து வைத்த கல்யாணங்கள் யாவும் நிலைத்து நிற்கிறதா? எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்களா? யாரிடமும் பதில் இல்லை. இதில் ஜாதகம் கணிப்பதை ஒரு அறிவியல் என்று சொல்லிக் கொள்வது கொடுமையிலும் கொடுமை! சரி பெற்றோர்களின் திருப்திக்காக அது ஒரு அறிவியல் என்றே வைத்துக் கொள்வோம். அறிவியலில் ஒரே விஷயத்தை எத்தனை பேர் பரிசோதனை செய்தாலும் ஒத்த பதிலே வரும்! அப்போது தான் அதை அறிவியல் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இங்கோ, ஒரு பையனின் ஜாதகத்தையும், ஒரு பெண்ணின் ஜாதகத்தையும் இரண்டு வெவ்வேறு ஜாதகம் கணிப்பவர்களிடம் காட்டினால், ஒருவர் அற்புதமாய் பொருந்துகிறது என்றும் மற்றவர் முற்றிலும் பொருந்த வில்லை என்றும் கூறி ஒரேடியாய் குட்டையை குழப்பி விடுகிறார்கள்!! இதனால் இன்னொரு ஜாதகம் கணிப்பவரிடம் சென்று மூனுக்கு முக்காவாசியாக மெஜாரட்டி தீர்ப்பை எடுத்து முடிவெடுக்கிறார்கள்! !

சில சமயங்களில் மிக அற்புதமாக பொருந்தி இருக்கிறது என்று சொல்லி திருமணம் நடந்து மணமகனோ மணமகளோ வாழக் கொடுத்து வைக்காமல் அல்பாய்சில் போய் சேர்ந்து விட்டால், ஏன் இப்படி நடந்தது என்று ஜாதகப் பொருத்தம் பார்த்தவரை உலுக்கினால், அது தான் விதி, தெய்வ சங்கல்பங்கள் அற்ப மனிதனின் கண்ணுக்குத் தென்படாது...சில சமயங்களில் ஜாதகத்தில் அத்தகைய விஷயங்கள் இருந்தாலும் எங்கள் கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்து கொள்ளும் என்கிறார்கள்! அதாவது இதற்கு மேல் நீ கேள்வி கேட்கக்கூடாது என்று அர்த்தம்!

இதில் செளராஷ்ட்ரியர்களுக்கு கோத்திரம் என்ற ஒரு விஷயம் வேறு இருக்கிறது. அதாவது பையனுடைய குடும்பப் பெயரும் [ராமியா, தொப்பே, கொண்டா] பெண்ணுடைய குடும்பப் பெயரும் ஒரே கோத்திரத்தில் இருக்கக் கூடாது, அப்படி என்றால் அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை ஆவார்கள் என்று ஒரு கணக்கு! அடடா...ஒரு நல்ல காரியம் நடப்பதற்கு எப்படி எப்படியெல்லாம் தடைகள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்! பள்ளியில் உறுதிமொழி எடுக்கும் போது "ஆல் இன்டியன்ஸ் ஆர் மை பிரதர்ஸ் என்பதோடு நிறுத்திக் கொண்டு அடுத்த வரியான "அன்ட் சிஸ்டர்ஸ்" என்ற வாசகத்தை பள்ளியிலேயே சொல்லாதவன் நான்! எனக்கு ரத்தம் கொதிக்குமா கொதிக்காதா? சரி, அப்படியே ஒரே கோத்திரத்தில் உள்ள ஒரு பையனும் பெண்ணும் இதெல்லாம் தெரியாமல் காதலித்து விட்டனர்? கல்யாணம் பண்ணித் தொலைக்க வேண்டியிருக்கிறது! அப்போது என்ன செய்வார்கள்? இருக்கவே இருக்கிறது பரிகாரங்கள்! பையனையோ பெண்ணையோ தாய் வழி உறவில் தத்து கொடுத்தது போல் ஒரு சடங்கு நடத்தி இருவருக்கும் ஹோமமும் வயிரும் எறிய திருமணம் நடத்துகிறார்கள்! என்னுடைய கேள்வியெல்லாம் இவை தான்...

1. சின்ன வயதிலிருந்தே பார்த்து பழக்கப்பட்ட ஒரு நல்ல குடும்பத்து பெண்ணை ஜாதகம் சேரவில்லை என்ற ஒரே காரணத்தால் அவளை விட்டு முன் பின் தெரியாத பெண்ணை திருமணம் செய்து வைத்து, அவர்கள் சந்தோஷமாய் இருந்தால் நல்ல விஷயம்! அந்தப் பெண்ணே மாமனாருக்கும், மாமியாருக்கும் எமனாகி விடும் நிலையில் என்ன செய்வது? இப்போது உங்கள் ஜாதகம் என்ன செய்தது?

2. எதற்காக நமக்கு நாமே தேவையில்லாத நம்பிக்கைகளை வைத்துக் கொண்டும், அது மீறும் போது தேவையில்லாத பரிகாரங்களையும் செய்ய வேண்டும்?

3. நீங்கள் ஓடி ஓடி பொருத்தம் பார்த்து சேர்த்து வைத்த அனைவரும் சந்தோஷமாக உள்ளார்களா?

(சீறும்)
செளராஷ்ட்ரியர் குலத்தில் நடக்கும் திருமணங்களைப் பற்றிய பதிவு இது. எல்லா சாதி, மதங்களில் உள்ள சாஸ்திரிய சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் எங்களிடமும் கொட்டிக் கிடக்கின்றன. பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி என்றே நம்பிக் கொண்டு வந்தவர்கள். பெருமாளா? அவரென்ன சொன்னார்? எப்போ சொன்னார் என்று கேள்வி கேட்காதவர்கள். ஊரைக் கூட்டி அருசுவை விருந்திட்டு தம் புத்திரன்/புத்திரியின் திருமண வைபவத்தை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் சுற்றமும் நட்பும் சூழ பெற்றோர்கள் நடத்துகிறார்கள்! ஆனால் அது இறுதியில் எத்தனை பேருக்கு உண்மையில் சந்தோஷம் அளிக்கிறது என்பது மாபெரும் கேள்வி!

பொதுவாக எங்கள் சமூகத்தில் பையனுக்கு 26, 27லும் பெண்ணுக்கு 21, 22லும் வரன் தேடத் தொடங்குகிறார்கள்! [அதுவரை ஓடிப் போகாமல் இருந்தால் :-) ]சமீப காலமாக பெண்களும் கனினித் துறையில் நுழைந்து கொஞ்சம் அல்ல நிறையவே சம்பாதிக்க தொடங்கிவிட்டதைத் தொடர்ந்து அவர்களின் வரன் தேடும் படலம் 24, 25க்குத் தள்ளப்பட்டிருக்கிறது! வரன் தேடத் தொடங்கியதும் பையனின் ஜாதகத்தை உற்றார் உறவினரிடமும், கல்யாண புரோக்கர்களிடமும் கொடுத்து வைத்து பையனைப் பெற்றோர் தம் தேவைகள் அனைத்தையும் ஒப்பித்து விடுகின்றனர்! அதாவது,

1. பெண் நல்ல குடும்பத்தை சேர்ந்தவளாக இருக்க வேண்டும்.
2. என் மகனுக்கு இணையாக படித்திருக்க வேண்டும். அவளும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது என் மகனின் விருப்பம்.
3. வைரத்தோடு சேர்த்தோ (அல்லது) சேர்க்காமலோ [it depends on the demand]ஒரு நாற்பது பவுன் பெண்ணுக்குப் போட வேண்டும்! அதை தவிர்த்து, மாப்பிள்ளைக்கும் ஐந்தோ பத்தோ போட வேண்டும்! [மற்ற சமூகங்களை ஒப்பிட்டால் இது கால் தூசுக்குச் சமம் என்று நினைக்கிறேன்]

எனக்கு ஒன்று புரியவில்லை! ஒரு அம்மா, அப்பா பாசமோடு ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரே பையன்! அதே போல் ஒரு அம்மா, அப்பா அதை விட பாசத்தோடு ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரு பெண்! திருமணம் என்று சொல்லி அவள் கழுத்தில் ஒரு தாலி விழுந்ததும் அவள் அப்பா, அம்மா, உற்றார், உறவினர், சுற்றம், நட்பு, நாய்க்குட்டி வரை அனைத்தையும் அம்போவென்று விட்டு விட்டு அவன் நல்லவனா, கெட்டவனா, குடிகாரனா, பெண்லோலனா இப்படி ஒன்றும் தெரியாமல் அவன் பின்னால் செல்ல வேண்டும்! அப்படி முன் பின் தெரியாத ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட ஒருவள் அன்றிலிருந்து அந்தக் குடும்பத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து அந்தக் குடும்பத்தில் சம்பளம் வாங்காத ஒரு வேலைக்காரியாய் வாழ்வதற்கு தன் வீட்டிலிருந்து பணத்தையும், நகையையும் சீர் செனத்தி என்ற பெயரில் அள்ளிக் கொண்டு வர வேண்டும். இது என்ன பழக்கம்? பெரியவர்கள் செய்தால் ஏதாவது நியாயம் இல்லாமல் செய்ய மாட்டார்கள் என்றால் இது என்ன நியாயம்? தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்!

சரி, தன் செல்ல மகளுக்கு பெருமையோடு பல சவுரன்களைப் பூட்டி அந்தப் பெண்ணின் பெற்றோர் அழகு பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள்..அவர்களால் முடிகிறது அவர்கள் செய்கிறார்கள் அதைத் தடுக்க உனக்கு என்ன உரிமை என்று கேட்பீர்கள்! அவர்களால் முடிந்து செய்கிறார்கள் என்றால் நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை, ஆனால், எங்கே இதனால் தன் மகளின் திருமணம் தள்ளிப்போய் விடுமோ என்று கேட்டதற்கெல்லாம் தலையாட்டி கடன் பட்டு, மரியாதை செய்து, கடைசியில் அவமானப்பட்டு, வாழும் வழியற்று திக்கற்றுத் திரியும் அந்தப் பெண்ணைப் பெற்ற பெற்றோர்களை என்ன செய்வது?

பாசத்தைக் கொட்டி எங்கள் பிள்ளையை வளர்க்கிறோம், என் மகன் கை நிறைய சம்பாதிக்கிறான் கொடுப்பதிற்கு என்ன கசக்குதா என்று மார் தட்டும் பிள்ளையைப் பெற்ற பெற்றோரை பார்த்து எனக்கு ஆச்சரியம்! பையனைப் பெற்றால் ஒரு மாதிரியும், பெண்ணைப் பெற்றால் ஒரு மாதிரியும் பெற்றோர்களால் எப்படி நடந்து கொள்ள முடிகிறது? அப்படியென்றால் பாசத்தைக் காட்டிலும் பணம் தானே முன்னிற்கிறது? அதே இவர்களும் ஒரு பெண்ணைப் பெற்றிருந்தால் தெரியும் என்று நீங்கள் நினைப்பீர்கள். அது தவறு! நாங்கள் எங்கள் பெண்ணுக்கு இத்தனை செய்தோம், எங்களுக்கு வருகிற மருமகள் அதே அளவுக்கு கொண்டு வரத்தானே செய்யனும் என்று பேரம் பேசுவார்கள்! ஏன் இவர்களுக்கு பெண்ணைப் பெற்றவர் படும் அவஸ்தை கண்ணுக்குத் தெரிவதில்லை? அதிலும் பெண்ணைப் பெற்றவர் ஒரு பெண்ணை பெற்றிருந்தால் பரவாயில்லை, அடுத்ததும் பெண்ணாய் இருந்தால் இந்தப் பெண்ணுக்கு என்ன செய்தாரோ அதே மாதிரி தானே அவளுக்கும் செய்ய வேண்டும்? அதை யார் நினைத்துப் பார்க்கிறார்கள்? [சும்மாவா கள்ளிப்பால் உபயோகப்படுத்தப்படுகிறது!]

என்னைப் பொறுத்தவரை பிள்ளையைப் பெற்ற பெற்றோர்களை குறை சொல்லிப் பயனில்லை! அவர்கள் இன்றைய உலகம் அறியாதவர்கள்! இன்னும் பழைய மூட பழக்க வழக்கங்களையும், முகம் தெரியாத அந்த நாலு பேர் என்ன சொல்வார்கள் என்றும் வாழ்ந்து பழகிவிட்டவர்கள்! அவர்கள் ஐந்தில் வளைந்து பழகாதவர்கள்! ஐம்பதில் வளைந்தால் ஒடிந்து விடுவார்கள்! நான் சாடுவது பிள்ளைகளைத் தான்! வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும், தம் பெற்றோர் செய்யும் தவறை ஏன் சுட்டிக் காட்ட மறுக்கிறார்கள்! "என் கல்யாணத்திற்கு நீ பெண் வீட்டில் இத்தனை பவுன் போட்டால் தான் ஆச்சு என்றெல்லாம் கேட்கக்கூடாது, எனக்குப் பெண்ணை பிடிப்பது தான் முக்கியம்! அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடட்டும். என் மனைவியைக் காப்பாற்ற எனக்குத் தெரியும்" என்று எத்தனை பிள்ளைகள் தன் தாய் தந்தையிடம் சொல்கிறார்கள்? அப்படிச் சொல்லாத பிள்ளைகள் என்ன படித்து என்ன சம்பாதித்து என்ன பயன்?

இந்தக் கேள்விகள் செளராஷ்ட்ரிய மாப்பிள்ளைகளுக்கு மட்டுமல்ல...

(சீறும்)
சத்தியமாக இது பெரியாருக்கு சம்மந்தப்பட்ட பதிவல்ல! இணையத்தின் தற்போதைய பெரியோரைப் பற்றியது! இது வலைப்பதிவாளர்களை பொறுத்த வரை ஒரு உருப்படியான பதிவாய் இருக்குமென்று நம்புகிறேன்! இதைப் பற்றி வேறு யாராவது பதிவிட்டிருக்கிறார்களா என்று கொஞ்சம் தேடிப் பார்த்து ஒன்றும் கிடைக்காமல் நானே கோதாவில் இறங்குகிறேன்!

அலுவலகத்தில் சில வால் பையன்கள் இருக்கிறார்கள்! நானும் டெக்னாலஜி தெரிந்த மாதிரியே எவ்வளவு தான் நடிக்க முயன்றாலும் எப்படியோ கண்டுபிடித்து விடுதுகள். இப்படித் தான் ஒரு நா, "தல, இது வொர்க் பண்ண மாட்டேங்குது, கொஞ்சம் பாருங்க" என்றது ஒரு வால்! [மவனே தலன்னு கூப்டா கவுக்க பாக்குற, இருடி உனக்கு இருக்கு...!] கொஞ்ச நேரம் இல்லாத மூளையை கசக்கி பிழிகிற மாதிரி ஆக்ட் குடுத்துட்டு "உன் பக்கத்துல இருக்கே அந்த சிஸ்டத்தை ரீ-ஸ்டார்ட் பண்ணு!" என்றேன். [தலன்னு கூப்டா, தல அமர்க்களம் படத்துல கண்ணாடிய திருப்புன மாதிரி தானே வழி சொல்ல முடியும்!] என் கெட்ட நேரம் அந்த வாலும் அந்த படத்தை பார்த்து தொலைத்திருந்தது! நான் எதிர்பார்த்த மாதிரியே அந்த வாலும், "என்ன தல, அன்னைக்கு பிரச்சனைன்னு சொன்னேன், என் சிஸ்டத்தை ரீ ஸ்டார்ட் பண்ண சொன்னீங்க அதுல ஒரு லாஜிக் இருந்தது! இன்னைக்கு பக்கத்துல இருக்குற சிஸ்டத்தை ரீ-ஸ்டார்ட் பண்ணா என் சிஸ்டம் எப்படி வொர்க் ஆகும்?" என்றது! "அப்போ ஒன்னு பண்ணு IE ஓபன் பண்ணி கூகுளார் கால்ல விழுன்னுட்டு, ஓ ஹாய் கமிங் யா என்று குரு சிஷ்யனில் ரஜினி கவுதமியிடம் எஸ்கேப் ஆவுற மாதிரி நான் அப்பீட் ஆகுறதுக்குள்ள...ஸ்வபா...அப்பவே கண்ண கட்டிருச்சே! சே! சே!!

சரி, மொத பாராவுல சொன்ன மேட்டரே இன்னும் வர்லியேன்னு நீங்க நெனைக்கிறது புரியுது! கம்ப ராமாயணமே படமா எடுத்தாலும் மாளவிகாவோட ஐட்டம் சாங் இல்லைன்னா யாரு படம் பாக்க வருவா? அதோட, இந்த வாரம் நான் யாரு? ஸ்டாரு! சூப்பர் ஸ்டாரு! நம்ம சூப்பர் ஸ்டார் ஃபார்முலா என்ன? காமெடி கலந்த ஆக்ஷன்! அதானே....அந்த மாதிரி என்ன தான் இந்தப் பதிவுல மேட்டர் இருந்தாலும், காமெடி இல்லைன்னா பதிவு எடுபடுமா! அதான் இரண்டாவது பாரா பூரா காமெடி ட்ராகை ஓட விட்டோம்!..இனி ஃபுல்லா மேட்டர் தான்! என்ன தான் காமெடி பண்ணாலும் நாங்கள்லாம் சப்டில்லா மெசேஜ் வப்போம்ல...அந்த காமெடி ட்ராக்ல மெசேஜ் என்னன்னா...... உங்க பேனாவோ, உங்க புள்ளகுட்டியோ, உங்க வாழ்க்கையோ எது தொலஞ்சாலும் கூகுள்ல தேடுங்கோ கோ கோ![ஹய்யோ ஹய்யோ!]

அலுவலகத்தில் ஒரு நண்பரின் மூலம் கூகுளாரின் அனலிடிக்ஸ் அறிமுகம் எனக்குக் கிடைத்தது! இதில் சென்று உங்கள் வலைப்பதிவின் உரலை கொடுத்து அவர்கள் கொடுக்கும் இரண்டு வரிகளை உங்கள் வலைப்பதிவில் இட்டுக் கொண்டால் போதும்! அதற்குப் பிறகு அது கூகுளாரின் பாடு! அடடா...பிரித்து மேய்வது என்று கேள்விப் பட்டிருக்கிறேன், அதை அங்கு தான் பார்த்தேன்! உங்கள் வலைப்பதிவை இஞ்ச் இஞ்சாக அளந்து, ஆய்ந்து, உங்கள் பதிவிற்கு தினமும் எத்தனை பேர் வந்தார்கள், எந்த நாட்டிலிருந்து வந்தார்கள், எந்த வழியாய் வந்தார்கள், எவ்வளவு நேரம் படித்தார்கள், உட்கார்ந்து படித்தார்களா, நின்று படித்தார்களா...அட போங்கப்பா...இனிமே நீங்களே படிச்சித் தெரிஞ்சுக்குங்க!

நீங்கள் செய்ய வேண்டியது

1. What is Google analytics? மொதல்ல படிக்க வேண்டியது!
2. Login @ Google Analytics



3. உங்கள் வலைப்பதிவின் உரலை கொடுக்க வேண்டியது.
4. அவர்கள் கொடுக்கும் இரண்டு வரியை உங்கள் வலைப்பக்கத்தில் அவர்கள் சொல்லும் இடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டியது.
5. பிறகு நேரம் கிடைக்கும்போது லாகின் செய்து உங்களின் வலைப்பதிவின் நிலை என்ன? யாருமே இல்லாத கடையில் நாம் மட்டும் தான் டீ ஆத்திக் கொண்டிருக்கிறோமா அல்லது நாலு பேரு வந்து போற இடமா என்று துல்லியமாக கூகுளார் சொல்வதை கேட்டுக்க வேண்டியது!



என்ன தான் நமிதா நடிச்ச படத்தொட கதை கேட்டாலும், நமிதாவை படத்துல பாக்குற மாதிரி ஆகுமா? அதனால.... என் வலைப்பக்கத்தின் சில பிரித்து மேயப்பட்ட பகுதிகள் உங்களின் பார்வைக்கு!

நவம்பர் 11ம் தேதியிலிருந்து டிசம்பர் 11ம் தேதி வரை என் வலைப்பதிவின் நிலவரம்:

தமிழ்மணத்தின் நட்சத்திர அந்தஸ்தால் பார்வையாளர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டி விட்டது! நன்றி தமிழ்மணம்!



அப்படியே மேலாப்ல! [அதாங்க ஓவர்வீய்]



திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் நம் தமிழர்கள்!



புது வரவும்/வழக்கமான வரவும்



வெவ்வேறு மொழிகள்



எத்தனை விதமான ப்ரளசர்களின் மூலம் என் வலைப்பூ படிக்கப் படுகிறது



எந்தெந்த கனெக்ஷனின் மூலம் என் வலைப்பூ பார்வையிடப்பட்டது



எந்தெந்த இணையத்தளங்களில் என் வலைப்பூவின் இணைப்பு



என் வலைப்பூவை அடையும் குறிச்சொற்கள்



என் வலைப்பூவில் எந்தப் பக்கங்கள், எத்தனை முறை பார்க்கப்பட்டது?



இது என்ன பெரிய விஷயமா? இன்டெர்னெட்ல இப்படி எத்தனையோ கெடைக்குது என்று சொல்பவர்களுக்கு...இது வெறும் ட்ரைலர் தாம்மா, மெயின் பிக்சர் நீ இன்னும் பாக்கலை ரேஞ்சுக்கு அதில் ஏராளமாய் இருக்கிறது! ஆங்கில பதிவுகளாய் இருந்தால் ஆட்சென்ஸையும் கோர்த்து விட்டிருக்கலாம்! தமிழுக்கு இன்னும் அது ஆரம்பிக்கப் படவில்லை! என்னாது? ஆட்சென்ஸ்னா என்னவா? ஆத்தி! ஆள விடுங்கப்பூ....

ஸ்டார் பதிவராய் இருந்து கொண்டும், பச்சை [யாரும் என்னை பச்சை நிறத்தில் கற்பனை செய்து பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!] ரஜினி ரசிகனாய் இருந்து கொண்டும் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் அன்று அவரைப் பற்றிய பதிவு போடவில்லை என்றால் எப்படி என்று யோசித்தேன். சரி எழுதலாம் என்று ஆரம்பித்த்வுடன் தான் தெரிந்தது, எப்பவோ அதைப் பற்றி எழுதி ஆகிவிட்டது என்று! அட ரஜினி....

சரி இப்போது என்ன செய்வது என்று வண்டி ஒட்டிக் கொண்டே யோசித்த போது நேராய் ஒரு மடிசார் மாமியின் பேக்கில் இடித்து, கட்டையில போறவனே என்று என்னை அவர் திட்ட, அதைக் கேட்ட நான் ஐய்யோ, இது பைக் மாமி என்று எஸ்கேப் ஆன போது எனக்கு உதித்தது இந்த யோசனை! என்ன யோசனை?

இது ரீமிக்ஸ் காலம்! ஏன் திரைப்படங்களைத் தான் ரீமிக்ஸ் பண்ண வேண்டுமா? பதிவுகளை ரீமிக்ஸ் பண்ணக்கூடாதா? திடீரென்று அப்படி ஒரு 40 வாட்ஸ் பல்ப் என் மூளையில் பளிச்சிட்டதன் விளைவு இந்த ரீமிக்ஸ் பதிவு! அதாவது வலையுலகின் இலக்கணப்படி ஒரு மீள்பதிவு! எப்படி யோசனை? ஒரிஜினல் பதிவு இங்கே!



சூப்பர் ஸ்டாருக்கும் எனக்கும் பால்ய சிநேகிதம்! ஆனால் அந்த சிநேகிதத்தைப் பற்றி அவருக்கோ வேறு யாருக்குமோ தெரியாது! [தூ..இதுக்கு பிச்சை எடுக்கலாம்!] நேத்து பொறந்த வாண்டெல்லாம் மொட்டை ரஜினி மாதிரி மண்டையை தட்டிக் கொண்டிருக்கும் போது, ரஜினியோடவே வளந்தவங்க நாங்க..எங்க அலம்பலை எல்லாம் கேக்கனுமா?

வயித்தைக் கட்டி வாயைக் கட்டி எங்களை படிக்க வைத்த பெற்றோர் எங்கள் [நானும் என் தம்பியும்] கண்ணை மட்டும் கட்டாமல் எப்போது ரஜினி படம் வந்தாலும் மறுக்காமல் கூட்டிச் சென்றனர்! அது ஒரு காலம்!
"கண்ணா அறுலையும் சாவு, நூறுலையும் சாவு அநியாயத்தை கண்டா சும்மா அடிச்சி தூள் பண்ணு" என்று ஒரு வசனம் பேசி விட்டு சும்மா பறந்து பறந்து அடிப்பேன்!



20 வருடத்திற்கு முன் பரட்டைத் தலையுடன், அடிக்கடி தலையைக் கோதிக் கொண்டு, சட்டை பட்டன் போடாமல், பாதி டக் இன் செய்து கொண்டு, சாக்ஸுக்குள் பேண்ட் விட்டுக்கொண்டு தெருவில் விளையாடும் ஒரு பையனைப் பார்த்திருந்தால் அது சாட்சாத் நானே தான்! என்ன ஒரு சின்ன கஷ்டம், நான் எம்.ஜி.ஆர் கலர்! [அட்றா..அட்றா..]

ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஏதோ ரைம்ஸ் சொல்வது போல் மூன்று முகம் வசனம் அத்தனையும் பேசிக் கொன்டிருப்பேன்! சாம்பிள் பாக்குறீங்களா?

சங்கிலி முருகன்: அலெக்ஸ்!
அலெக்ஸ்: யேய், பேரை சொல்லிக் கூப்ட நாக்க இழுத்து வச்சு அறுத்திடுவேன்!
சமு: போலீஸ் படையே உன் பக்கம் இருக்குன்ற தைரியத்துல தானே எங்களை எல்லாம் தூக்கி உள்ளே போட்ட?
: போலீஸ் படையா? உங்களைப் புடிக்க போலீஸ் படை எதுக்குடா இந்த அலெக்ஸ் பாண்டியனோட நாய் போதும்!
சமு: எங்க பாஸ் பத்தி உனக்கு தெரியாது?
: என்னடா பூச்சாண்டி காட்றியா? யாருடா உங்க பாஸ்? அவன் என்ன பெரிய கொம்பனா?
செந்தாமரை: இல்லீங்க! அவன் அப்படிச் சொல்லலீங்க!
: [கதவருகில் வந்து நின்று] யார் நீங்க?
செ: என்னை பாத்து யார் நீன்னு கேட்ட மொத ஆள் நீங்க தான்!
: பாத்தவுடனே புரிஞ்சிக்கிறதுக்கு நீங்க என்ன அவ்வளவு பெரிய புள்ளியா?செ: நீங்க இந்த டிவிஷனுக்குப் புதுசு, இந்த ஏகாம்பரத்தோட பேரைக் கேட்ட அழுகுற கொழந்தை கூட வாய மூடும்!
: ம்...[பூமை சுற்றிக் கொண்டே] அதே கொழந்த கிட்ட போய் இந்த அலெக்ஸ் பாண்டியன் பேரைச் சொல்லி பாருங்க..இன்னொரு கையால தன் அம்மா வாயையும் மூடும்! [முறைப்பு!]

சரி விடுங்க...பூரா படத்தையுமா எழுத முடியும்! சாவகாசமா வீட்டுக்கு வாங்க...நடிச்சே காட்டிருவோம்! :) [அங்கே யார்ரா அது நியுட்டன் மூன்றாவது விதி என்னன்னு கேக்குறது? என்ன சின்ன புள்ளத் தனமா இருக்கு ரேஸ்கல்ஸ்!]



பழநி சென்ற போது ராகவேந்திரா காப்பு தான் வேண்டும் என்று அடம் பிடித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது! என்று தலைவர் நடு உச்சி எடுக்க ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து நானும் நடு உச்சி எடுத்து தான் சீவுவேன்! அம்மாவுக்கு எரிச்சலாய் வரும்...என்டா இப்படி உச்சி எடுக்குற என்று கேட்பார்...தெரிந்தால் திட்டு விழும் என்று நான் என்னம்மா பண்றது..அதுவா வருது என்று ஓடி விடுவேன்! தலைவரின் படப் பாடல்கள் எப்படி எனக்கு மனப்பாடம் ஆகிறது அது எப்படி இன்று வரை நினைவிலிருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை! ஒவ்வொரு படத்திலும் எல்லா பாடல்களும் அத்துப்படியாய் இருக்கும்! தளபதி சரியாக நவம்பர் 5ம் தேதி 1991ல் தீபாவளிக்கு வந்தது [கஷ்டம்!] . அன்று எண்ணெய் வைத்து தலை குளித்து வந்ததும் டீவியில் ஒளியும் ஒலியுமில் ராக்கம்மா கையத் தட்டு பாடல் ஒளிபரப்பினார்கள். தலைவர் லாங்க் ஷாட்டில் ஒரு மதில் சுவர் மேல் நின்று கொண்டு கையைத் தூக்கி "வக்கிர வானம் அந்த வானையே தைக்கனும் தம்பி விடு ஜோராக" என்றது தாம் தீபாவளி பிறந்த மாதிரி இருந்தது. அதை நான் நவம்பர் 14ம் தேதி 8 மணி ஷோ பார்த்தேன் [ரொம்பக் கஷ்டம்] ! என்ன இவ்வளவு டிலே என்கிறீர்களா, 9ம் தேதியே பார்க்கப் போனேன், டிக்கட் கிடைக்காமல் பக்கத்து தியேட்டரில் ஓடும் ஒரு பாடாவதி படம் [குணா!!!!] பார்க்க நேர்ந்தது! [நிற்க: அப்போது எனக்கு அது பாடாவதி படம் தான்!!]



என்னிடம் யாராவது ரஜினி மென்டல் என்று சொன்னால் போதும், அந்த இடத்தில் உடனடியாய் நான் மென்டல் ஆகி விடுவேன்! அப்புறம் என்ன...இப்புடு சூடு என்று பறந்து பறந்து அடிக்க வேண்டியது தான்! நான் குழந்தையாய் ரசித்த ரஜினி, இன்றைய குழந்தைகளும் ரசிக்கும் போது இப்படியும் ஒரு வாழ்க்கை யாருக்காவது கிடைக்குமா என்று தோன்றும்? சிவாஜி வந்த புதிதில் என் மேனஜர் ஒருவர், ரஜினிக்கு 57 வயசு! எங்க அம்மாவை விட வயசானவர்! என்றார்...அந்த ஒரு கணம் நான் பிரமித்துத் தான் போய் விட்டேன்!

ரஜினியின் சில நச் வசனங்கள்! [இதை யார் சொல்லியிருந்தாலும் இந்த அளவுக்கு பிரபலமாயிருக்குமா என்பது சந்தேகம் தான்!]

டீக் ஹை [மூன்று முடுச்சு]
குருவம்மாக்கு பாவாடை போட்டா கூட நல்லா தான்டா இருக்கும்! இது எப்படி இருக்கு? [16 வயதினிலே]
வச்சுக்க நீ! [போக்கிரி ராஜா]
ஓ! இப்டி ஒன்னு இருக்கோ? [தம்பிக்கு எந்த ஊரு]
கெட்ட பய சார் இவன்! [முள்ளும் மலரும்]

இந்த உலகத்திலே யாரும் உன்னை விட பெரியவன் இல்லை, அதனால நீ யாருக்கும் பயப்படாதே, இந்த உலகத்திலே உன்னை விட யாரும் சின்னவன் இல்லை, அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே! [தில்லு முல்லு]
தீப்பட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினா தான் தீப்புடிக்கும், ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீப் புடிக்கும்!ஜெகஜ் ஜாலக் கில்லாடிட மச்சான்![மூன்று முகம்]
மிஸ்டர். கோபிநாத்! இந்த உலகத்துல தான் தான் பெரியவன்னு யாரும் நெனச்சிடக்கூடாது! அவனுக்கு அப்பனும் பொறந்து இருப்பான்! [மிஸ்டர். பாரத்]
பாஸ், நான் படிச்சா உருப்படமாட்டேன்னு எங்க அப்பா படிக்க வைக்கல, எஸ் கிஸ் மீ! [குரு சிஷ்யன்]

ஒரு மொட்ட, ஒரு மீசை, நாலு ஸ்கூல் பசங்க! இதுக்கு ஒரு தலைவன்!டேய் கந்தசாமி இங்கே வாடா...[ராஜாதி ராஜா]
டேய் தூ! [ராஜா சின்ன ரோஜா, ரஜினி மாதிரி யாரலயும் துப்ப முடியாது!]
இந்த பீடி முடியிறதுக்குள்ள உங்க தலைவன் கதய முடிச்சிட்றேன்! [பணக்காரன்]
ஏன்னா நீ என் நண்பன்! [தளபதி]
உங்களை மாதிரி அகங்காரமும், அகம்பாவமும் புடிச்ச பொண்ணுங்களைக் கண்டா என்ன விட்டுடுங்க, என் தல முடி கூட ஆடாது![மன்னன்]
மலைடா அண்ணாமலை![அண்ணாமலை]
நம்ம ஆளுங்க கிட்ட நம்ம மொழியில பேசுங்க! அதான் நமக்கும் மரியாதை நம்ம மொழிக்கும் மரியாதை [எஜமான்]
ஹவ் இஸ் இட்?[வீரா]
இனிமே உன்னை இந்த இடத்துல பாத்தேன், பாத்த இடத்துலயே குழி தோண்டி பொதச்சுடுவேன்! நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி! [பாட்ஷா]
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது! கிடைக்காம இருக்கிறது கிடைக்காது! [முத்து]
பாத்து வேலை செய்! பாத்தவுடனே வேலை செய்யாதே![அருணாச்சலம்]
என் வழி தனி வழி! [படையப்பா]
இல்ல முருகேஷா...[சந்திரமுகி!]
பேரைக் கேட்டவுடனே சும்மா அதிருதுல்ல![சிவாஜி]



நான் ரஜினி ரசிகன் என்று மார் தட்டியதில் மேல் சொன்னதில் ஏதேனும் பிழை இருந்தால்...எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவுக்கு பரிசை குறைத்துக் கொள்ளுங்கள்![ஐய்யயோ இந்த டயலாக் சிவாஜி பிறந்தநாளுக்கு வேணுமே!]

last but not least....




தலைவா, என் பேரக் குழந்தையும் உங்களை ரசிக்கனும்! அதுவரைக்கும் நீங்க நடிக்கனும்! அம்புட்டுதேன்! லேட் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தலை நிறைய எண்ணெய் வைத்து, அழுத்தி தலை வாரி கழுத்திலும், கையிலும் கருப்பு கயிருடன் வலம் வரும் ஹீரோ! கடுகளவு கூட இடுப்போ, தொப்புளோ தெரியாத ஹீரோயின், பூ விழுந்த கண்ணோடு கூட படிக்கும் ஒரு பெண், எங்க தாத்தாக்கு மேலுக்கு முடியல, அதான் எனக்கு கண்ணாலம் என்று வெகுளியாய் ஒரு பையன், வாழ்வின் கஷ்ட நஷ்டங்களினால் வயதுக்கு மீறிய அனுபவ அறிவுடன் மற்றொரு பெண், கல்லுடைக்கும் வயதான அப்பா, அண்ணன் படிக்கட்டும் என்று தன் படிப்பை தியாகம் செய்து கல்லுடைக்கும் அருமை தங்கை, க்ளாஸில் கைட் விற்கும் புரஃபசர்....இப்படி சினிமாவின் எந்த சாயலும் இல்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது பாலாஜி சக்திவேலின் கல்லூரி!

கல்லூரி என்றாலே ஜீன்ஸ், டீ சர்ட், மினி, மைக்ரோ ஸ்கர்ட் என்று படம் காட்டிக் கொண்டிருந்த கோலிவுட் சற்று மிரண்டு தான் போயிருக்க வேண்டும்! ஆணும் பெண்ணும் கடைசி வரை நட்பாய் பழகவே முடியாதா என்ற கேள்விக்கு கல்லூரியை களமாக்கி அரிதாரம் பூசாத நிஜ மனிதர்களாய் உலவ விட்டிருக்கிறார் பாலாஜி சக்திவேல்!

உள்ளே காலியாக இருந்தாலும் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே வருவது...வீட்டுக்கு போனா அப்பன் தொல்லை, பஸ்ஸுக்கு வந்தா கண்டக்டர் தொல்லை என்று கானா எடுத்து விடுவது, நம்ம க்ளாஸ்லயும் இப்படி ஒரு ஜாரியா என்று பல்லிளிப்பது, வட்டமாக உட்கார்ந்து அனைவரும் உணவை பரிமாறிக் கொள்வது, உள்ளூர் கலவரத்தில் உடைபட்ட பாதையை சாக்கடையில் இறங்கி சரி செய்வது, தம் கூடப் படிக்கும் பெண்டு பிள்ளைகளை ஜாக்கிரதையாக வீட்டில் விட்டுச் செல்வது, நண்பர்கள் புடை சூழ சினிமாவிற்குச் செல்வது, நண்பனின் கல்யாணத்திற்குச் சென்று க்ரூப் ஃபோட்டொ எடுத்துக் கொள்வது, ஒட்டப் பந்தயம் தொடங்கும்போது நண்பன் வெற்றி பெற வேண்டுமே என்று ஓடிச் சென்று திருநீறு பூசி விடுவது, அடுத்த கல்லூரியின் கல்ச்சுரல்ஸ் சென்று பிரச்சனை ஆவது, கல்லூரிச் சுற்றுலாவில் சங்கில் எல்லாருடைய பேரும் எழுதிக் கொள்வது என்று ஒவ்வொரு காட்சியிலும் நம் ஒவ்வொருவரின் கல்லூரி நாட்களையும் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்!

ஜோஷ்வாவின் இசையில் நா முத்துக்குமாரின் வரிகள் கொஞ்சம் காதிலும் விழுகின்றன! படத்தில் பாடல்கள் உறுத்தாத அளவுக்கு அளவாகவும், அழகாகவும் செழியனின் விழியினூடே படம் பிடித்திருக்கிறார் இயக்குநர். வெண்ணீராடை மூர்த்தி மற்றும் வழக்கமாய் கல்லூரி படங்களில் வரும் ப்ரொபசர்கள் இல்லாதது மிகப் பெரிய ஆறுதல். உணர்ச்சிகரமான கட்டங்களை இன்னும் கொஞ்சம் லைட்டாக சொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது, ஏனென்றால் அத்தகைய கட்டங்கள் தியேட்டரில் காமெடி ஆகிவிடுகிறது...

காதல் வெற்றியை தொடர்ந்து இந்தப் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாகி எங்கே இது தோல்வியைத் தழுவி விடுமோ என்பதற்காக அதை தவிர்க்கும் வண்ணம் வரும் பத்திரிக்கை விளம்பரங்கள் தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டம்! இந்தப் படத்தை நீங்கள் பார்த்தே ஆக வேண்டும் என்று நான் சொல்லவில்லை! நீங்கள், "என்ன இப்படி நெஞ்சை நக்குறாய்ங்க" ரகத்தினரானால் கொஞ்சம் கஷ்டம் தான்! ஆனால் அது பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு இல்லை! நட்பையும், காதலையும் சொல்லும்போது அதுவும் கல்லூரி காலங்களில் நடப்பவை என்பதால் அத்தகைய உணர்ச்சி மிகுந்த காட்சிகள் தவிர்க்க முடியாது என்றே நான் நினைக்கிறேன்!

சங்கர் ஒரு நல்ல இயக்குநர் என்பதை விட நல்ல தயாரிப்பாளர் என்ற என் எண்ணம் மேலும் வலுவுற்றிருக்கிறது!
நான் வலையுலகில் என் வலது கையை எடுத்து எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் அகி விட்டன! எதுவுமே வெகு சீக்கிரத்தில் சலித்து விடும் எனக்கு இது ஒரு ஆனந்தம் கலந்த ஆச்சர்யத்தை தருகிறது! ஏனென்றால் எத்தனையோ உருப்படியான காரியங்களை [அவரவர் மனதிற்கு எது சந்தோஷத்தையும் ஆத்ம திருப்தியையும் அளிக்கிறதோ!] எனக்குள் நானே சலித்துக் கொண்டு பல முறை கை விட்டிருக்கிறேன்! அத்தகைய ஒரு உருப்படியான காரியத்தை இவ்வளவு நாட்கள் என்னால் தொடர்ந்து செய்ய முடிந்ததை நினைத்து மிக்க மகிழ்ச்சி!

வலையுலகிற்கும் எனக்குமான உறவு ஒரு தாமரை இலை நீர் போல் ஆரம்பத்திலிருந்தே ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது! நான் வலையுலகில் இருக்கிறேனே தவிர இங்கு நடக்கும் எந்த விதமான விவாதங்களிலும், சம்பவங்களிலும், சம்பிரதாய பேச்சுக்களிலும், ஏச்சுக்களிலும் கலந்து கொள்வதில்லை! என் மனதை மிகவும் பாதித்தாலன்றி எந்த வலைப்பதிவுக்கும் சென்று பின்னூட்ட முதலீடு இடுவதில்லை! [முதல் போட்டால் தானே லாபம் கிடைக்கும்!] அதனால் தான் "இன்று நான் பல் விளக்கவில்லை" என்பது மாதிரியான பதிவிற்கு 105 பின்னூட்டங்கள் வருவதைப் போல் என் பதிவுகளுக்கு அத்தனை பின்னூட்டங்கள் வருவதில்லை! அதைப் பற்றி நான் கவலைப்படுவதுமில்லை! [டோனைப் பார்த்தா கவலைப்படாத மாதிரி தெரியலையே!]

நிறைய வலைபதிவுகளில் பார்த்திருக்கிறேன்! முதல் பின்னூட்டம் "இன்று நான் தான் ஃபஸ்ட்", "நான் வந்துட்டேன்", "அப்பாடா மொதோ கமெண்ட் போட்டாச்சு" என்று நிறைய பின்னூட்டங்களை பார்த்திருக்கிறேன். அது என்ன விளையாட்டு என்று எனக்கு இன்றும் விளங்கவில்லை! அப்படி என்ன சொல்லி வைத்துக் கொண்டு பின்னூட்டமிடுவது என்று எனக்கு புரியவில்லை! அதே போல் போலி டோண்டு யாரை திட்டினார், அனானி கமெண்ட் போடுவது யார்? இட்லி வடை ஆணா பெண்ணா என்பது போன்ற வலையுலக சரித்திர நிகழ்வுகளில் நான் கலந்து கொண்டதே இல்லை! யார் வம்பு தும்புக்கும் போகாமல், யார் மனதையும் புண்படுத்தாமல் ரொம்பவே சமத்து பையனாக நானுன்டு என் வலைப்பூ உண்டு என்று இருந்திருக்கிறேன்! ஒருவேளை அதனால் தான் என்னால் இவ்வளவு நாட்கள் இங்கு தாக்கு பிடிக்க முடிந்ததோ என்னவோ என்றும் தோன்றுகிறது!

இந்த மூன்றரை வருடங்களில் நான் பதித்த வலைகளின் எண்ணிக்கை வெறும் 132 மட்டுமே! இதில் பாதியாவது தேர்ந்த பதிவாய் இருந்தால் சந்தோஷம். சில வலையுலக நண்பர்கள் என் பதிவுகள் படித்து ரசித்து பல சங்கிலிப் பதிவிற்கு என்னை கோர்த்து விட்டிருக்கிறார்கள்! அது பெரும்பாலும் சுயத்தைப் பற்றிய பதிவாகவே இருக்கும். அது எழுத அமரும் போதெல்லாம் மனதுக்குள் கவுண்டமணியின் குரல் "நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இது தேவைதானா" என்று ஒலிக்கும். என் வலைப்பதிவு என்பதால் எனக்கு இது பிடிக்கும், அது பிடிக்காது என்று எழுதுவதால் யாருக்கு என்ன லாபம் என்று ஒரு கேள்வி மனதுக்குள் எழும். அத்தோடு அந்தப் பதிவின் கதை முடிந்து போகும். என்னைப் பொறுத்த வரை ஊர் உலகத்திலுள்ள எதைப் பற்றி வேண்டுமென்றாலும் வெகு சுலபமாய் ஒரு மொக்கை பதிவை எழுதிவிடலாம். ஆனால் உன்னை பற்றி நான்கு வரி சொல் என்றால் போதும்....ஐய்யோ சாமி, மண்டை காய்ந்து விடுகிறது....அதனால் தான் கூடியமட்டும் என் சுய புராணங்களை விட்டு என் மனதை பாதித்த விஷயங்களில் என் பார்வையை செலுத்தி ஒரு நல்ல வலைபதிவராய் என்னை முன்னிருத்த ஆசைப்படுகிறேன்! [என்ன மெசேஜா?]

யாழ்.நெட் காலத்திலிருந்து நட்சத்திர வாரத்தை அறிந்திருந்தாலும், இப்பொது தான் எனக்கு இந்த அந்தஸ்து கிடைத்திருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கமலஹாசன், "என்னை எல்லோரும் சகலகலா வல்லவனாக சொல்கிறார்கள், பரவாயில்லை சொல்லிவிட்டு போகட்டும், மார்க்கெட்டுக்கு உதவும்...நான் சகலகலா மாணவன் என்பது தான் உண்மை!" என்று சொன்னதைப் போல் இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த அந்தஸ்து கிடைத்தாலும் சரி இப்போதாவது கிடைத்ததே, மார்க்கெட்டுக்கு உதவும் என்று நினைத்து, சகலகலா மாணவனாக முன்னேறுகிறேன்....வழக்கம்போல் உங்களின் ஆசிர்வாதங்களுடன்!
ராஜாதி ராஜ மகா ராஜ வீர பிரதாப
ராஜாதி ராஜ மகா ராஜ வீர பிரதாப
ராஜாதி ராஜன் வந்தேனே...வந்தேனய்யா....

வந்தனம் தந்தேனைய்யா!
வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனைய்யா!!
சாமி...
வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனைய்யா!!
தத்தோம் தரிகிட..தித்தோம் திரிகிட தா!!

பெரியோர்களே! சபையோர்களே...

இன்று தொடங்கும் என் நட்சத்திர வாரத்திலே சொற்குற்றம் பொருட்குற்றம் எக்குற்றம் இருப்பினும் குற்றத்தை மறந்து குணத்தை மட்டும் கொள்ளும்படியாக தாழ்மையுடன் தண்டியிட்டும் மண்டியிட்டும் கேட்டுக் கொள்கிறேன்!!

டேய் மூடா சோடா!!

க்ளுக் க்ளக்....

ஆ! வர சொல்லு வர சொல்லு....