கடந்த ஒரு வாரமாக சென்னையில் மழையுடன் உலக இலக்கியத்திலும் நனைந்தேன். ரஷ்யன் கல்சுரல் சென்டரும், ஜெயகாந்தன்/புஷ்கின் மற்றும் உயிர்மை இணைந்து நடத்திய இலக்கிய கொண்டாட்டத்தை பற்றி சொல்கிறேன். கடந்த 21 ம் தேதி தொடங்கி நேற்று வரை வெகு விமர்சையாக, அரங்கு நிறைந்த நிகழ்வாகவும் மிக நெகிழ்வாகவும் நடந்தது. 7 நாட்களில் 7 சிறந்த உலக இலக்கியங்களை நாளொன்ராக அறிமுகம் செய்து வைத்து அதைப் பற்றி மிக விரிவாக எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார்கள்.


1. லியோ டால்ஸ்டாயின் அன்னா கரனீனா

2. தாச்தாவேய்ச்கியின் குற்றமும் தண்டனையும்

3. பாஷோவின் ஜென் கவிதைகள்

4. ஷேக்ஸ்பியரின் மேக்பெத்

5. ஹோமரின் இலியட்

6. 1001 அரேபிய இரவுகள்

7. ஹெமிங்வேயின் கிழவனும் கடலும்


முதலில் இப்படி ஒரு நிகழ்வை பற்றி அவரின் வலைதளத்தில் படித்ததும் என்னைப் போன்ற இலக்கிய உபாசகனுக்கு [அல்லது அப்படி சொல்லிக் கொண்டு திரிகிறவனுக்கு] ஒரு நல்ல அறிமுக நிகழ்ச்சியே இருக்கும் என்று பட்டது. மேலும் இது ஒரு புது வித அனுபவமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நிகழ்ச்சி சரியாய் திங்கள் [கவனிக்க MONDAY] மாலை 6 மணிக்குத் தொடங்கி ஞாயிறு வரை நீள்கிறது. ஏன் இந்த மாதிரி நிகழ்வை வார இறுதிகளில் வைக்காமல் வார நாட்களில், சென்னையின் மையத்தில், அதுவும் 6 மணிக்குத் தொடங்குகிறார்கள்? எத்தனை பேர் அலுவலகத்தை முடித்து இதில் கலந்து கொள்ள முடியும் என்று ஒரு வித எரிச்சல் வந்தது. அதிலும், என்னை போல் ஐ. டி யில் வேலை செய்பவனுக்கு வார நாட்களில் மாலை 6 மணி அலுவலகத்தை விட்டு வெளியே வருவது என்பது கனவில் தான் நடக்கும். அப்படியே நடந்தாலும் நான் வேலை பார்க்கும் இடமான தாம்பரம் சாநிடோரியதிலிருந்து ஆழ்வார்பேட்டை செல்வதற்கு நான் திங்கள் கிளம்பினால் ஞாயிறு வந்து விடும். சரி, ஏதோ முடிந்தவரை முயற்ச்சிப்போம் என்று நினைத்தேன். நல்ல வேளையாக அதிர்ஷ்டம் என் பக்கம் தான். ஏழு நாட்களில் ஒரு நாள் தவிர்த்து அத்தனை நாட்களிலும் அடாத மழையிலும் விடாது சென்று விட்டேன். யாருமே இருக்க மாட்டார்கள் என்று நான், ஏன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களும் நினைத்ததை உடைத்து எல்லா நாளும் அரங்கு நிறைந்த நிகழ்வாக இருந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நிகழ்வை பற்றி நான் இங்கு அப்படியே சொல்ல போவதில்லை, அது முடியாது. நாளுக்கு இரண்டு மணி நேரம் என்று இந்த ஏழு நாட்களுக்கு பதினான்கு மணி நேரம் குறையாமல் பேசி இருக்கிறார் எஸ். ரா. இப்போது தான் அவர் எப்படி இவ்வளவு எழுதுகிறார் என்று எனக்குப் புரிகிறது. மனிதரிடம் பொங்கி வழிகிறது. அவரின் சொற்பொழிவை புத்தக வடிவமாகவும், சீடி, டீவிடீ வடிவமாகவும் கொண்டு வர போவதாக சொன்னார்கள்.

தினமும் நிகழ்ச்சி முடிந்ததும் பதிவிட்டிருந்தால் நன்றாய் இருந்திருக்கும். அனைத்தையும் சேர்த்து நினைவில் உள்ளவரை எழுதுகிறேன்.

நிகழ்ச்சியில் கிடைத்த சில அறிய தகவல்கள்/முத்துக்கள்: [என் நினைவுப் பெட்டகத்திலிருந்து]

1. இந்தியாவில் ஆங்கில மோகம் இருப்பது போல் அப்போது ரஷ்யாவில் ஃபிரெஞ்ச் மோகம் இருந்தது. ஃபிரெஞ்ச் கலாச்சாரம் நாகரீகம் பிரதானப்படுத்தப்பட்டது.

2. ஆண் வீட்டை கட்டுகிறான். பெண் அதற்கு உயிர் தருகிறாள் என்று ஒரு பழமொழி இருக்கிறது.

3. உங்கள் அறை எப்போதும் ஒரு வீடாகாது. அறையிலிருந்து வீட்டுக்கு எப்போது போகலாம் என்று தான் எல்லோரும் நினைக்கிறோம். வீட்டுக்கு வந்ததும், நமக்கான அறையை தேடி ஒடுங்கி கொள்கிறோம்.

4. அன்னா கடைசியில் ஒரு நீச்சல் குளத்தில் குதிப்பதை போல் ரயிலின் முன் விழுகிறாள்.

5. நான் உங்களை இங்கு பார்த்துக் கொண்டிருப்பதை போல் நீங்கள் இல்லாதிருப்பதை உங்கள் வீட்டில் யாரோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பை போல் இல்லாதிருப்பதையும் உணர முடிகிறது.

6. ஜென் கவிதைகளின் மரபு அதில் ஒரு அக விழிப்பு/தரிசனம் இருக்க வேண்டும்.

7. ஒரு மரமானது ஒரு மெல்லிய பூவினை கொண்டுள்ள அதே சமயத்தில் அதன் வேர்கள் பாறையையும் உடைக்கும் தன்மை கொண்டுள்ளது.

நிகழ்வில் படிக்கப்பட்ட சில ஜென் கவிதைகள்:


திருடன்

விட்டுச் சென்றிருக்கிறான் -

ஜன்னலிலுள்ள

நிலவை


இரண்டு குமிழிகள்

இணையும் தருணத்தில்

காணாமல் போகின்றன

இரண்டுமே, மலர்கிறது

ஒரு தாமரை


திமிங்கலம்!

ஆழ ஆழ அது

செல்கையில்

உயர உயர எழுகிறது

அதன் வால்!


கோவில் மனிமேல்

ஓய்வெடுக்கும்

வண்ணத்துப் பூச்சிக்கு

நல்ல உறக்கம் -

மணி ஒலிக்கும் வரை.


உதிர்ந்த மலர்

திரும்புகிறதோ கிளைக்கு?

அது, வண்ணத்துப் பூச்சி


மட்சுஷிமா -

ஆ, மட்சுஷிமா!

மட்சுஷிமா!

மட்சுஷிமா என்பது ஜப்பானில் சமுத்திரக் கரையோரமுள்ள, மலைகளும், நதிகளும், மரங்களும், மலர்களும் உள்ள ஓர் இடம். அங்கு நின்று கொண்டு பாஷோ இந்த ஜென் கவிதையை பாடுகிறார். முதலில் அந்த இடத்தை பார்த்து பிரமித்து அதன் பெயர் சொல்கிறார். இப்போது அந்த இடம் அவர் கண்களில் நிறைந்து விட்டது. அதன் ஆச்சர்யத்தை பாடுகிறார். இப்போது அவருக்குள்ளும் இன்னொரு மாட்சுஷிமா!

சும்மா உட்கார்ந்

திருக்கிறது அமைதியாய்.

புல்

தானே வளர்கிறது

வசந்தம் வருகிறது


ஒரு வெட்டுக் கிளி இறகசைக்கிறது

ஒரு மலையின் மௌனம் கலைகிறது


ஒரு ஜென் கதை:

குருவே, இந்த வானம், பூமி, கடல், அருவி இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?

"உன் வாயிலிருந்து வந்தன! வானம், பூமி எல்லாம் சொற்கள், அது அவைகள் அல்ல"

1. ஜப்பானில் இன்றும் ஒருவிதமான யானை பொம்மை பிரசித்தம். ஏனென்றால் ஜப்பானில் அப்போது யானைகள் இல்லை. யானையை பார்க்காதவன் ஒருவன் வடித்த பொம்மை அது.

2. எழுதும்போது ஏதேனும் சொற்கள் கிடைக்காமல் நீங்கள் தவித்தால் உங்கள் பால்ய காலத்திற்குச் செல்லுங்கள், அங்கு உங்களுக்கு அது நிச்சயமாய் கிடைக்கும்.

3. சொற்கூட்டங்கள் மேகத்தை போல என்னை கடந்து செல்கின்றன, அதிலிருந்து எனக்குத் தேவையான சொல்லை நான் எடுத்துக் கொள்கிறேன் - தேவதச்சன்

4. ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்திற்காக இரண்டாயிரம் சொச்ச வார்த்தைகளை கொடுத்திருக்கிறார். Advertisement, Accomodation போன்றவை அவைகளுள் அடக்கம்.

5. ஒரு எழுத்தாளரிடம் உலகத்தில் ஒருவர் மட்டும் உயிருடன் இருக்கலாம் என்றால் யாரை சொல்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அவர் "ஷேக்ஸ்பியர்", ஏனென்றால் அவர் ஒருவர் இருந்தால் அவரே மற்ற அனைவரையும் கதாப்பாத்திரங்களாக உருவாக்கி விடுவார்! என்று சொன்னார்.

6. ஷேக்ஸ்பியர் வரலாறு கூறாமல் ஒரு விஷயத்தையும் சொல்வதில்லை.

7. ஷேக்ஸ்பியரின் மேக்பெத், அதை தழுவி ரோமன் போலன்ஸ்கி, விஷால் பரத்வாஜ் [மக்பூல்] போன்றோர்களால் திரைப்படமாய் எடுக்கப் பட்டது.

8. ஹோமரின் இலியட் நம் மகாபாரதம்/இராமாயணத்தை ஒத்திருக்கிறது, அதன் சம்பவங்கள் உட்பட...

9. மகாபாரத்ததிலிருந்து எந்த கதாபாத்திரத்தை எடுக்க முடியும், எதை எடுக்க முடியாது? என்ற ஒரு கேள்வி நான் எதிர்கொண்ட கேள்விகளில் மிகச் சிறந்த கேள்வியாகும். அதற்கு நான் சொன்ன பதில், மகாபாரதத்திலிருந்து பீஷ்மரை எடுக்க முடியாது. பாஞ்சாலியை எடுத்தாலும் கதைக்கு எந்த பங்கமும் வராது! பாஞ்சாலி இல்லையென்றாலும் பாரதம் இருக்கும். பாஞ்சாலி வெறும் பகடைக் காய் தான்.

10. "சப்தமே இல்லாத நடை என்றால் அது சகுனி தான்" என்பார் திருதிராஷ்ட்ரர்!

11. உங்களுக்கு வேண்டியது கிடைத்து விட்டால் எதிரியின் கூடாரத்தில் கூட நீங்கள் நிம்மதியாய் உறங்குவீர்கள், ப்ரியம் அகிலஸின் கூடாரத்தில் உறங்குவதை போல...

12. இலியட் அகிலஸின் புகழ் பாடுகிறது. ஒடிஸ்ஸி யுலிசிஸின் புகழ் பாடுகிறது.

13. அலிபாபாவும், அலாவுதீனும் எல்லோரும் கேட்டும், படித்தும் இருக்கிறோம், அனால் அவைகள் 1001 இரவுகள் கதைகளில் வருகிறது என்பது நமக்குத் தெரிவதில்லை.

14. ஷெஹெரஷா, ராஜா சாரியாருக்கு 1001 இரவுகளை கதை சொல்லியே நகர்த்துகிறாள். அதன் மூலம் சாவை தள்ளிப் போடுகிறாள். கதை சொல்லி நாமும் சாவைத் தள்ளிப் போடுவோம்.

15. கடவுள் மனிதனை படைத்தான், பின்பு மனிதன் கடவுளை படைத்தான்! - புதுமைப்பித்தன்

16. Army is Men without Women - Hemingway

17. ஹெமிங்க்வே ஒரு மிகச் சிறந்த வேட்டைக்காரர் [சிங்கம் ஒன்றை தனி ஆளாய் வேட்டையாடியவர்], உல்லாசி, சல்லாபி, பெரிய குடிகாரர், ஊர் சுற்றி, வாழ்வை கொண்டாடியவர். 127 முறை விபத்தில் அகப்பட்டு பிழைத்தவர்.

18. காளைச் சண்டை பார்க்கச் சென்ற ஹெமிங்க்வே அங்கு ஒருவன் நாள் முழுதும் ஓவியம் தீட்டிக் கொண்டிருப்பதை பார்த்து, அவரின் ஓவியத்தை வாங்கிப் பார்த்தார். அந்தக் காளையின் மூர்க்கம்/வலிமை அத்தனையும் உன் கோடுகளில் இருக்கிறது! நீ யார் என்று கேட்டார், அதற்கு அவர் நான் தான் பாப்லோ பிகாசோ என்றார்.

19. கிழவனும் கடலும் நாவல் வெறும் நூறு பக்கங்களே கொண்ட நோபல் பரிசு பெற்ற நாவல். அதில் இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள் தான் வருகின்றன. பெண்களே இல்லாத நாவல் இது.

20. வெற்றி தோல்வி என்பதை வெற்றி, சிறிய வெற்றி என்று வைத்துக் கொள்ளலாம். விளையாட்டில் கலந்து கொள்ளாதவர்களே தோற்றவர்கள்!

இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். எனக்கு நினைவு தெரிந்து என் கூடவே ஒட்டி உறவாடி, கட்டி உருண்டு சண்டையிட்டு, சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் ஒருவருக்கொருவர் கோள் மூட்டிக் கொண்டு, போட்டியிட்டுக் கொண்டு திரிந்த என் தம்பி, தந்தை ஆன நாள்! உருவத்தில் சிறிதாய் இருந்தாலும் நான் பெரிய்ய அப்பா ஆன நாள்! ஆம், எனக்கொரு மகள் பிறந்து விட்டாள்!

பெரியப்பா என்பது அண்ணன் ஆவது போலோ, மாமா ஆவது போலோ சாதாரணமானது அல்ல! அது இளம் வயதிலேயே எப்படியோ, யார் மூலமாகவோ கிடைத்து விடுகிறது. ஆனால் பெரியப்பா என்று சொல்லும்போதே ஒரு வித மரியாதை வந்து விடுகிறது! அப்பா என்ற சொல்லோடு ஒரு வித பொறுப்பு வந்து விடுகிறது.  உலகத்தில் ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் ஒவ்வொரு மனிதனின் நிலையை, அவனின் அடையாளத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. ஒரு கணவன் மனைவி தாய், தந்தை ஆகிறார்கள். ஒரு தாய் தந்தை தாத்தா, பாட்டி ஆகிறார்கள். இப்படி எத்தனையோ பேரின் அடையாளங்களை மாற்றி விட்டு அதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் தன் சிவந்த பிஞ்சு கைகளை மடக்கி சமர்த்தாய் தூங்குகிறது குழந்தை!

குழந்தை பிறப்பில் ஆண்களின் பங்கில் எனக்கு உடன்பாடு கிடையாது. வெறும் சுகத்தை மட்டும் ஆணுக்கு கொடுத்து விட்டு அத்தனை கஷ்டங்களையும் பெண்ணுக்கு கொடுத்ததில் என்ன நியாயம். ஐந்து மாதம் அவளிடம் ஐந்து மாதம் அவனிடம் என்றால் எத்தனை ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முன் வருவார்கள் என்று யோசிக்கிறேன்! ஆஹா, அப்படி நடந்தால் மக்கள் தொகை பிரச்சனையே கிடையாது! விஞ்ஞானிகள் யோசிக்க வேண்டும்! அதை விட கொடுமை, குழந்தை பெற்றுக் கொள்ள பெண்ணை தயார்படுத்துகிறேன் என்று அவர்களின் பதினோரு, பனிரெண்டு வயதிலிருந்து மாதவிடாய் தொல்லை, அது அவளின் ஐம்பது வயது வரை நீள்கிறது! என்ன அக்கிரமம்? இதற்கு பதிலாக, ஒரு பெண் திருமணமாகி உறவு கொள்ளத் தொடங்கியதும் அல்லது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பியதும், உடலில் சில ஹார்மோன்கள் உயிர்ப்பித்து கருவை உண்டாக்கியிருக்கலாம்! குழந்தைகள் பெற்றதும், அந்த நினைவு மங்கி விடும், அப்போது அந்த ஹார்மோன்கள் ஒதுங்கி கொள்ளலாம்!  கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் தான் பெண்ணை இப்படி படைத்தார் என்றால், அவர் நிச்சயம் ஆணாய் தான் இருக்க வேண்டும் :-)

பேச்சு வேறு எங்கோ சென்று விட்டது! என் தம்பி அமெரிக்காவில் குழந்தை பெற்றுள்ளான். ஆஸ்பத்திரியில் சேர்ததிலிருந்து நாங்கள் ஸ்கைப்பில் ஆன்லைனில் இருந்தோம். கிரிக்கெட் கமெண்ட்ரி சொல்வது போல் அங்கு நடப்பதை எல்லாம் எங்களுக்கு அவன் மெசெஜித்து கொண்டிருந்தான். இரவு ஒரு மணிக்கு மேல் தூக்கம் வந்து தூங்கி விட்டோம். காலையில் எழுந்து கணினியை திறந்தால், Where are you guys? Its baby time என்று அவன் ஆஃப்லைன் மெசேஜ் இருந்தது. அதோடு, Now we are going to push...push...push....baby is going to come out...push...oh! இந்திய நேரப்படி சரியாய் 6:36 மணிக்கு baby has come out என்று மெசஜ். ஆஹா! பிறகு அவனை தொடர்பு கொண்டு பேசினோம். உடனே ஒரு படம் எடுத்து அனுப்பி விட்டான். முன்பெல்லாம் படம் எடுத்தால் ஆயுள் குறைந்து விடும் என்று நம்பினார்கள். இப்போது குழந்தை பூமியில் விழுந்ததும் அடுத்தது போட்டோவில் தான் விழுகிறது :-)  எங்கோ கடல் கடந்து பிறந்த ஒரு குழந்தையை சில நிமிஷங்களில் பார்க்க முடிகிறது என்று நினைக்கும்போது உடல் சிலிர்த்தது.

உலகின் எந்த ஒரு நல்லது கெட்டது தெரியாமல், சுகமாய் உறங்கி கொண்டிருக்கும் குழந்தையை சிறிது நேரம் வீடியோவில் பார்த்தோம். அத்தனை நெகிழ்ச்சியான தருணம் அது! டெக்சாசில் இருக்கும் தன்னை பெரியப்பா சென்னையிலிருந்து பார்க்கிறார் என்பது தெரியாமல் குழந்தை உறங்கி கொண்டிருந்தது. ஒரு குழந்தையை பார்த்ததும் யாரும் அதை மட்டும் பார்ப்பதில்லை. அந்தக் குழந்தையில் யாரெல்லாம் தெரிகிறார்கள் என்று தான் பார்க்கிறோம். அம்மா மாதிரியா, அப்பா மாதிரியா, பாட்டி மாதிரியா, தாத்தா மாதிரியா...அது பிறந்தவுடன் தெரிவது கடினம் என்றாலும் அதை பற்றி பேசி விடுவதில் எல்லோருக்கும் ஒரு ஆர்வம். இவையெல்லாம் கேட்டுக்கொண்டே உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு என்ன தோன்றும்? கருவறையில் கிடைத்த அல்லது பழக்கப்பட்ட சௌரியங்கள் குறைந்து போயிருக்குமோ? அதனால் தான் அது அடிக்கடி அழுகிறதோ?  இத்தனை காலம் நம்மை சுற்றி ஈரமாய் இருந்ததே, இப்போது ஏன் காய்ந்து போயிருக்கிறது என்று நினைக்குமா?

கையை நீட்டி கன்னம் தொடும் போது தான் நாம் கணினியின் வழியே பார்க்கிறோம் என்ற நினைப்பு வருகிறது. ம்ம்ம்...ஒருவேளை வருங்காலத்தில் நான் என் கொள்ளுப் பேரன்களை இப்படிப் பார்க்கும்போது மானிட்டரின் ஊடே அவர்களின் கன்னத்தை கிள்ள முடியுமோ என்னமோ?

தினமும் அதிகாலை எட்டு மணிக்கெல்லாம் எழுந்து விடும் பழக்கம் எனக்கு! திடீரென்று நேற்று ஒரு ஞானோதயம். நாளைக்கு ஐந்து மணிக்கு எழுந்து பார்த்தால் என்ன? என்று! எழுந்து என்ன செய்வது என்று தெரியவில்லை. எழுந்து தான் பார்ப்போமே என்று நினைத்துக் கொண்டு நாலரை மணிக்கு அலாரம் வைத்தேன். அப்போது தானே அதை Snooze செய்து செய்து ஒரு ஐந்து மணிக்கு எழுவதற்கு வசதியாய் இருக்கும். அதற்கெல்லாம் அவசியம் இல்லாமல், கொசு வலைக்குள்ளே வசதியாய் கடித்துக் கொண்டிருந்த கொசுக்கள் நாலே முக்காலுக்கு எல்லாம் குத்தி குத்தி எழுப்பி விட்டன. எழுந்து பல் விளக்கி நானே சமையல் அறைக்குள் சென்று தட்டுத்தடுமாறி விளக்கை போட்டு [விளக்கை போட்டதும் பார்வை போய் விட்டது போல் அலறி ஓடுகிறது கரப்பான்!] எங்கே எது என்று தேடி ஒரு காப்பி போட்டு சாப்பிட்டேன். சக்கரை போட்டு கலக்கிய கலக்கில் சூடு கொஞ்சம் ஆறி இருந்தது. இருந்தாலும் சுவை பரவாயில்லை.

காப்பியை குடித்து விட்டு, அதற்கு நேர் எதிராக ஒரு சட்டையை மாட்டிக் கொண்டு, அதாங்க டீ சர்ட்! [ஸ்வபா...] மாட்டிக் கொண்டு வாக்கிங் கிளம்பினேன். இன்னும் இருட்டாய் இருந்தது. மெதுவாய் இடப்பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.காகங்கள் ஒன்றிரண்டு கரைந்து கொண்டிருந்தன. பகல் பொழுதில் நாடு ரோட்டில் நின்று அழிச்சாட்டியம் செய்யும் மாடுகள், இந்த சமயத்தில் அடைபட்ட கடையின் வாசலில் ஏகாந்தமாய் அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்றிரண்டு நாய்கள் "இவன் யாருடா புதுசா" என்பது போல் பார்க்கின்றன. மடிப்பாக்கத்து நாய்கள் பெங்களூர் நாய்கள் போல் அல்ல. மிகவும் சாதுவானவை. மற்ற ஏரியா நாய்களை பார்த்து தான் குறைக்கிறதே அன்றி மனிதர்களை பார்த்தல்ல! திடீரென்று இவைகள் எல்லாம் எப்போது தூங்கும் என்று ஒரு கேள்வி எழுந்தது! லேசாய் பனி மூட்டமாய் இருந்தது. வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் கண்ணாடிகளில் பனி உறைந்து போயிருந்தது. அதைப் பார்க்கும்போது தில்லியில் இருந்த நாட்கள் ஞாபகம் வந்தது.  மணி ஒரு ஐந்தே கால் இருக்கும். காலை நாலரையிலிருந்து ஐந்தரை வரை பிரம்ம முகூர்த்தம் என்கிறார்கள். கரை படியாத காற்று. அதிக வாகன இரைச்சல் இல்லையென்றாலும், அந்த நேரத்திலும் ஒரு கால் டாக்சியோ, இரு சக்கர வாகனமோ, பால் வண்டியோ, செங்கல் லாரியோ அம்பேத்கர் சாலையை கடந்து கொண்டு தான் இருக்கிறது!  பக்கத்து தெருவில் வீடு கட்ட செங்கல் இறங்கிக் கொண்டிருந்த லாரியிலிருந்து "கடவுள் அமைத்து வைத்த மேடை" பாடல் கேட்கிறது! அதை கடந்து நடந்தேன். சாக்கடையில் கழிவு நீர் ஓடும் சத்தம் காட்டில் ஒரு ஓடையை கடக்கும் அனுபவத்தை கொடுக்கிறது! 

விசேஷத்திற்கு ஆடர் எடுத்து ரெடிமேட் சாப்பாடு செய்பவர்கள் நால்வர் எதையோ கிண்டி கொண்டிருந்தார்கள். மிச்ச மீதி ஏதாவது தேறாதா என்று இரண்டு நாய்கள் காத்திருக்கின்றன. இருள் கொடுத்த சுதந்திரத்திலும், ஆள் நடமாட்டம் கம்மி என்பதாலும் முந்தானை ஒதுங்க குனிந்து கூட்டிப் பெருக்கி வாசல் மொழுகுகிறாள் ஒருத்தி. அவள் வயதானவள் தான் என்றாலும், என்னைப் பார்த்ததும் அவள் கை ஆடையை சரிசெய்கிறது! Intuition! அவளை கடந்ததும், ஹெல்மட் மாட்டிக் கொண்டு வண்டியை எடுத்து வெளியே வரும் கணவனுக்கு கேட்டை திறந்து விடுகிறாள் ஒரு இல்லத்தரசி. என் இடத்தில் ஒரு பொறுக்கியோ, கொள்ளைக்காரனோ இருந்திருந்தால் அவனுக்கு இந்த சந்தர்ப்பம் வசதியாய் அமைந்திருக்கும் என்று ஏனோ பட்டது! சிறிது தூரம் சென்று திரும்பி வந்த வழியே நடந்தேன். மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். அம்பேத்கர் சாலை விசாலமாய் தான் இருக்கிறது.  சாலையில் விளக்குகள் ஜோராய் எரிகிறது! மரங்களே இல்லாத வெறுமை! வெளியூரிலிருந்து வருபவர்கள், வெளியூர் செல்வபர்கள் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக என்னை கடந்து செல்கிறார்கள். நகரத்தின் அடுத்த பக்கத்தில் வேலைக்கோ, படிக்கவோ செல்பவர்கள் கிளம்பிவிட்டார்கள். பால் பாக்கெட்டுகளை ஒரு கூட்டம் அடுக்கிக் கொண்டிருக்கிறது. நம் ஊரில் தேநீர் கடைகளில் எந்த நேரத்திலும் ஒருவராவது நின்று தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் சற்று நேரத்திற்கு முன் அள்ளிப் பூசிய திருநீற்றுப் பட்டையுடன் பலசரக்குக் கடையை திறக்கிறார் அண்ணாச்சி ஒருவர். அவர் கடை திறக்க இரண்டு வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள்! பேருந்து நிலையத்தில் M45A வருகிறது. இது தான் முதல் பஸ்ஸாக இருக்க வேண்டும். அந்த நேரத்திலும் பத்து பேர் அந்த பாழடைந்த பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறார்கள்! இதில் ஏறினால் ஆறு, ஆறரை மணிக்குள் மெரீனா போய் விடலாம் என்று தோன்றியது. காசு கொண்டு போயிருந்தால் நிச்சயம் ஏறி இருப்பேன். அது மேலும் ஒரு புது அனுபவமாய் இருந்திருக்கும். இலக்கில்லாமல் பயணம் போவது சுவாரஸ்யமாய் தான் இருக்க வேண்டும். சென்னை வந்ததிலிருந்து ஒரு தடவை கூட சூரிய உதயத்தை கடற்கரையில் பார்த்ததில்லை. பொழுது புலர்வதை பார்ப்பதில் ஒரு தனி இன்பம் இருக்கிறது. அதிலும் கடற்கரையிலோ, மலையடிவாரத்திலோ பார்ப்பது அருமை. 

பேருந்து நிலையத்தை சுற்றியும் குப்பை கூளமாய் இருக்கிறது! மழை பெய்து தண்ணீர் தேங்கி இருக்கிறது. அதில் பிளாஸ்டிக் பைகள் நிரம்பி காணச் சகிக்கவில்லை. திரும்பி வீடு நோக்கி நடந்தேன். "நான் குணாலம்மன் கோயிலாண்டே தான் நிற்கிறேன், சரி வாங்கோ" என்று மொபைலில் ஆபிசர் ஒருவர் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார். பட்டுப்புடவையுடன் வாசலில் நின்று கொண்டு ஆட்டோவுக்காக ஒருவர் காத்திருக்கிறார்.

அதிகாலையில் வாக்கிங் போவதில் ஆயிரம் நல்ல விஷயம் இருந்தாலும், என்னைப் போன்று மாதம் ஒரு பதிவிடும் வலைப்பதிவாளனுக்கு அது ஒரு பதிவுக்காகிறது! அதற்காவது தினமும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்!