வழக்கம் போல் அல்லாமல் இன்று காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்துக்கு கிளம்பினேன். இதில் வழக்கம் போல் என்பது பத்தரை மணி. [இதற்கு பெயர் தான் நான் லீனியர் நரேஷன்!] இன்று என்ன அவ்வளவு சீக்கிரம் என்று உங்கள் மனதில் தோன்றி மறைந்தால் இன்று அலுவலகத்தில் ஒரு ட்ரைனிங்! கண்டிப்பாய் கலந்து கொள்ள வேண்டும் என்று மேலிடத்து உத்தரவு! வாய் கூட காது வரை இல்லாத அடிமை நான், கேள்வியே கிடையாது! அதோடு மட்டுமல்லாமல் எனக்கும், வழக்கமான சலிப்பான வார நாட்களிலிருந்து ஒரு தற்காலிக விடுதலை கிடைத்தால் பிடிக்கும் என்பதால் இப்படிப் பட்ட ட்ரைனிங்கில் கலந்து கொள்வதில் சந்தோஷமே! ட்ரைனிங் ஒன்பதரை மணிக்கு என்று மெயிலில் இருந்தது. நான் ஒன்பதுக்கு கிளம்பினேன்.

நம் நாட்டில் எங்கு போவதென்றாலும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பினால் நல்ல பலன் கிடைக்கும். ஒன்பது மணிக்கு ஜி எஸ் டி சாலையில் அதிக கூட்டமில்லை. யார் இப்போதெல்லாம் அலுவலகத்துக்கு ஒன்பது மணிக்கு கிளம்புகிறார்கள்? மெதுவாய் நிதானமாய் ஹாயாய் வண்டி ஒட்டிக் கொண்டு போனேன். பைக் பார்க்கிங்கில் ஆங்காங்கே ஒரு சில பைக்குகள் மட்டுமே இருந்தது. பக்கத்திலேயே எனக்கு பிடித்த இடத்தில் வண்டியை நிறுத்தேன். மணி ஒன்பது இருபது. இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. நேரத்தோடு ஒரு வேலையை செய்தால் எத்தனை திருப்தி! நிதானமாய் அலுவலகம் நோக்கி நடந்தேன். இப்போதே ட்ரைனிங் ரூமில் சென்று நல்ல இடம் பார்த்து [நல்ல இடம் என்றால் மாப்பிள்ளை பெஞ்சு தான் !] உட்கார்ந்து கொள்ளலாம்!

லிப்டுக்கு அருகில் வந்து நின்றேன். வழக்கமான நேரத்தில் அலுவலகம் வந்தால் குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது லிப்டுக்கு காத்திருப்பது வழக்கம். இன்று பட்டனை அழுத்தியதும் இரண்டு லிப்ட்கள் காலியாய் திறந்து கொண்டன. ஒரு மணி நேரம் முன்னால் வந்ததால் இப்படி ஒரு ராஜ உபச்சாரமா? முடிவு செய்து விட்டேன். இனிமேல் ஒன்பது மணிக்குள் அலுவலகத்தில் இருப்பேன்! மனதுக்குள் ஒரு சத்திய பிரமாணமே எடுத்து விட்டேன். நேராய் ஏழாவது மாடி. மணி ஒன்பது இருபத்தைந்து. ட்ரைனிங் நடக்கவிருக்கும் அறையின்  கதவு மூடி இருந்தது. மெதுவாய் திறக்க முயற்சித்தேன் .

அது இன்னும் பூட்டி இருந்தது!


பெயர்: பெய்யென பெய்யும் மழை [அடாத மழை!]
தொடக்கம்: 19 மார்ச் 2004 [சுபயோக சுபதினம்]
வயது: பத்து வருடங்கள்![எம்மாடி!]
பதிவுகள்: 330 [எண்ணிக்கையா முக்கியம்?]
பின் தொடர்பவர்கள்: 54 [ரொம்ப நன்றி!]
வருகை: 68000த்து சொச்சம் [கூகுள்ள பக் இருக்குமோ?]

இந்தப் பாடலை பார்க்கும்போது ஏனோ ஒரு குதூகலம் தொற்றிக் கொள்கிறது. அருமையான இசை. குழந்தைகள் பாடும் பாடலை குழந்தைகளை கொண்டே பாட வைத்தது ஒரு காரணமாய் இருக்கலாம். தமிழ் படங்களில் பெரும்பாலும் ஜானகியை பாட வைத்து கொல்வார்கள்.  மேலும் இந்தப் பாடலில் குழந்தைகள் மிக இயல்பாய் இருக்கிறார்கள். அக்ஷன், கட் சொல்லி நடிக்க வைத்ததை போல் எந்த இடத்திலும் தெரியவில்லை. ஒரு விடுமுறை நாளில் மதிய வேளையில் வீடுகளில் குழந்தைகள் எப்படி விளையாடுமோ அப்படி விளையாடுகின்றன. பாடலை பாருங்கள்.



பார்த்தீர்களா? அந்த பெரிய பெண் குழந்தையை அடையாளம் தெரிகிறதா? "ரங்கீலா ஊர்மிளா தெரியாம நீ எல்லாம் எதுக்கு உயிரோட இருக்கே?" என்று காதல் கோட்டையில் மணிவண்ணன் ஒரு வசனம் பேசுவார். அவருடைய குழந்தை பருவத்தில் வந்த படம் இது. மிஞ்சி போனால் பத்து வயது இருக்கும். அந்த வயதிலேயே ஒரு கதாநாயகிக்கு உரிய உடல்மொழி, நடனத்தில் நேர்த்தி, ஒரு நளினம், முகத்தில் எக்ஸ்ப்ரசன்ஸ் என்று பின்னி எடுத்திக்கிறார். 4:11, 4:15 கணங்களில் ரங்கீலா ஊர்மிளாவின் உடல்மொழியை அப்படியே பார்த்தேன். கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இவ்வளவு பெரிய ஆடையை வளர்ந்த பிறகு கூட இவர் போட்டதில்லை :-) மொத்தத்தில் அருமையான ஒரு பாட்டு!
எனக்கு, என் மனைவிக்கு, தருவுக்கு, மூன்று பேருக்கும் இரண்டு நாளாய் ஜலதோஷம். என் மனைவி நேற்று கண், மூக்கு, வாய் எல்லாம் கழண்டு விழும் ரேஞ்சுக்கு பரிதாபமாய் காட்சி அளித்தாள். இரவு ஒரு ஒன்பது மணி அளவில், வெறுத்து போய், "நீ தருவை  பாத்துக்கோ!!!!!" என்று சொல்லி விட்டு தூங்கப் போய் விட்டாள். போகும்போது  "அவளுக்கு ரசம் சாதம் குடு, அதுல நெய் ஊத்திக் கொடு, அதுல இரண்டு தக்காளி போட்டு பிசைஞ்சி கொடு, அப்புறம் ஒரு அரை மணி நேரம் கழிச்சி மிச்ச சாதத்துல பால் ஊத்திக் கொடு என்று ஒரு ஏழெட்டு  "பிட்"டாய் போட்டுப் போனாள். தரு என்னை பார்த்து தெரிந்தோ தெரியாமலோ ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்துக் காண்பித்தாள். எனக்கு குபீல் என்றது.

அவளை தூக்கிக் கொண்டு கிச்சனுக்கு வந்தேன். சாதம் போட்டுக் கொள்ள ஒரு தட்டை வைத்துக் கொண்டு, அவளை கீழே நிறுத்தி விட்டு, குக்கர் விசிலை அவளிடம் கொடுத்து விட்டு, குக்கரை திறந்தேன். நான் பாத்திரத்தில் இருந்து சாதத்தை எடுப்பதற்குள், குக்கருக்குள் இருக்கும் மிச்ச சொச்ச தண்ணீரில் கையை வைத்தாள். அதை தடுத்து கையை எடுப்பதற்குள் சோற்றில் கையை வைத்தாள். "கண் இமைக்கும் நேரத்தில்..." என்று முழு வாசகத்தை எழுத ஆகும் நேரத்துக்கும் முன்னே அவள் கை ரசம் சாதத்தில் இருந்தது. ஒரு கையில் தட்டை வைத்துக் கொண்டு இன்னொரு கையில் அவளை ஏந்திக் கொண்டு, அவள் கை என் சட்டையில் படாமல் பேசினில் சென்று கழுவிட்டு ஹாலுக்கு வந்தேன். முதுகு லேசாய் வலித்தது!

தரு சுட்டி, ஆனால் சமத்து. அவள் சாப்பிட வேண்டும் என்றால் டீவியில் இசையருவி ஓட வேண்டும். அல்லது யு ட்யுபில் ரைம்ஸ் ஓட வேண்டும். நான் இசையருவியை தேர்ந்தெடுத்தேன். என் மகள் ஒரு அற்புதமான பிறவி. எல்லா தற்கால குத்துப்பாட்டும் அவளுக்குப் பிடிக்கும். இனிமேல் "ஏன் இன்னும் தமிழ் சினிமாவில் பாட்டு வைக்கிறார்கள்" என்று நான் கேட்கமாட்டேன். வீட்டில் குழந்தைகள் சாப்பிடத் தான் என்று நான் நன்றாக புரிந்து கொண்டேன். நிலாவை காட்டி சோறூட்டிய காலம் போய், [சினிமா] நட்சத்திரங்களை காட்டி சோறூட்டும் காலம் வந்து விட்டது.

இசையருவி ஒரு அற்புதமான சானல். குத்துப்பாட்டு, காதல் காதல், இசை அரசர்கள் என்று எந்த நிகழ்ச்சி போட்டாலும், எல்லா நிகழ்ச்சியிலும் "பாக்காத பாக்காத", "கண்டாங்கி கண்டாங்கி", "ஏ பாப்பா, ஏ லூசு பாப்பா மேரேஜ் கலீசுன்னு கஜா சொன்னான்", "என் வீட்டுல நான் இருந்தேனே" இந்த பாட்டுக்களே வரும். அந்த பாட்டு முடியும் வரை தான் தரு அமைதியை இருப்பாள். பெரும்பாலான சமயங்கள் மேல் சொன்ன பாட்டுக்கள் அடுத்து அடுத்து வரும் என்பதால், ஒரு பத்து நிமிடத்துக்குள் என்ன சாப்பாடு ஊட்ட முடிகிறதோ அது தான் அவளின் அந்த வேளை சாப்பாடு!

ஒரு வழியாய் மேல் சொன்ன ஒரு பாடலை காட்டி அவளுக்கு சோறூட்ட ஆரம்பித்தேன். இரண்டு வாய் வாங்கினாள். பிறகு என் மடியில் இருந்து இறங்கி விட்டாள். அவளுக்கு அப்பாவுடன் இருந்தால் விளையாட வேண்டும். ஒரு சுவரோரத்தில் நின்று கொண்டு என்னை துரு துருவென்று பார்த்தாள். அப்படி என்றால், வாப்பா வெளையாடுவோம் என்று அர்த்தம். நான் சீரியசாய் சோறூட்ட போனால் அவள் கெக்கே புக்கே என்று சிரித்துக்கொண்டே கிடந்து ஓடினாள்.  சோற்றுக் கையுடன் ஒரு கையால் அவளை பிடித்தால், "எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ" ரேஞ்சுக்கு பாம்பாய் வளைந்தாள்! கை சுளுக்க அவள் விழாமல் பாதுகாத்து தட்டின் அருகில் கடத்தி வந்தேன். ஒரு வாய் ஊட்டினேன். ரசத்தை அதிகம் ஊற்றி விட்டதால் அது அவள் தேகமெங்கும் கொட்டியது. குழந்தைகளுக்கு ஒரு துளி விழுந்தால் போதும், அதை கையில் எடுத்து, துடைத்து, கழுவி, தேய்த்து அதை பரப்புவது என்றால் அதுகளுக்கு கொள்ளை பிரியம்! அதையே அவளும் செய்தாள். "இரும்மா!", என்று நான் துடைத்து விடுவதற்குள் என் முகத்தில் கொஞ்சம் தேய்த்தாள். இதை தவிர்த்து, அவள் நடக்கும்போது நான் ஊட்டி விட்டதால் தரையெங்கும் கொட்டியது, என் கை அவள் வாய்க்குள் நுழையும் சமயம் அவள் திமிரியதால் அவள் கன்னத்தில் ஒட்டியது, திடீரென்று அவளுக்கு ஒரு ஞானோதயம் வந்து, "ச்சே...இந்த கருமத்தையா சாப்பிடறோம்" என்று அவள் துப்பியது என்று எல்லா வகையிலும் எல்லா இடத்திலும் சாதம் கிடந்தது.

இதன் நடுவே, தரையில் கிடக்கும் தலையணையில் அவளின் தலையை வைக்காமல் தன் முதுகை வைத்து அப்படியே பின்னால் சாய்ந்து அவளின் தலையில் அடிபடாமல் ஃபீல்டிங் செய்து [ஜாண்டி ரோட்சுக்கு எத்தனை குழந்தைகள்?], "அப்பா கொடுக்குற ரசத்துக்கு இதுவே பரவாயில்லை!" என்று அவளே முடிவெடுத்து, அவளின் மூக்கிலிருந்து டைரக்டாய் வாய்க்குள் போவதை தடுத்து, இங்கும் அங்கும் ஓடி ஆடி, அலுத்து, தரையில் கிடக்கும் தலையணை, விளையாட்டு சாமான் ஆகியவற்றில் சிறுநீர் கழித்து, அவளுக்கு ஜட்டி மாற்றி மறுபடியும் அவள் அதில் கால் வைப்பதுற்குள் அதை துடைத்து [கவனிக்க எல்லாம் ஒரு கையில்]....ஸ்வபா....காஜல் அகர்வால் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். டீவியில் "கண்டாங்கி" என்ற ஒரு சொல் தான் காதில் விழுந்தது...ம்ம்ம்ம்ம்ம்!

இத்தனை களேபரங்களுக்கு நடுவில் வெற்றிகரமாய் அவளுக்கு ரசம் ஊட்டி, அடுத்த அரை மணி நேரத்தில் பால் சாதமும் ஊட்டும்போது தான் ஒரு விஷயம் உரைத்தது! என் மனைவி "தரு" முழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் முக்கால்வாசி நேரம் அவளிடம் கேட்கும் ஒரே  கேள்வி..."பசிக்குதாம்மா? சாப்பிடறியா!!!!!!!!!!!!!! MOTHER!

அப்போது, டீவியில் "வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு" பாட்டு ஓடியது. தரு அசையாமல் அந்த பாடலை ரசித்துக் கொண்டிருந்தாள் [அது எப்படி எல்லா பொண்ணுங்களுக்கும் பொண்ணுங்களை திட்ற பாட்டு புடிக்குதுன்னு புரியலை...]! அதில் ஒரு வரி...

மம்மி சொன்ன பொண்ண கட்டினா டார்ச்சர் இல்லைடா - நீயும்
டாவடிச்ச பொண்ண கட்டினா டவுசர் அவுரும்டா...

நான் நினைத்துக் கொண்டேன்....

"மம்மி சொன்ன பொண்ண கட்டினாலும், டாவடிச்ச பொண்ண கட்டினாலும்..... டவுசர் அவுர்றது உறுதி!
நதிகள் நம்மை கடந்து சென்று விட்டன
இன்று நாம் காண்பது, அதன் சுவடுகளை...
                       ---
பரந்த நீல வானம் - அதில்
கண் இமைத்தபடி கடக்கும் மேகங்கள்
எல்லையற்ற வானத்திலும்
வரிசையாய் பறக்கும் பறவைகளின் ஒழுங்கு
கண்ணுக்கெட்டிய தூரம் மலை முகடுகள்
பசுமை போர்த்திய புல்வெளி
தெளிந்த நீர் தளும்பும் கிணறுகள்
அதன் அருகே நீல நிறத்தில் ஒரு குறுங்குளம்
அதில் பூச்சூடிய குட்டி மஞ்சள் நிற வாத்துக்கள்
சிரித்துக் கொண்டே பால் கறக்கும் பசுமாடு
ஓடி விளையாடும் நாய் குட்டி
இவைகளின் மத்தியில் களைப்பே தெரியாத உழவன்...
நம் வாழ்க்கையும் - நம் குழந்தைகளின்
ரைம்ஸ்களை போல் இருக்கலாம்.
                       ---
இருக்க வேண்டிய நேரத்தில்
இல்லாமல் இருந்ததால்
இருக்கக் கூடாத நேரத்தில்
இருந்து தொலைக்க வேண்டி இருக்கிறது