இரவில் தூங்கப் போகும்போது
தோடுகளையும், வளையல்களையும்
கழற்றி வைப்பதை போல்
உன் சிறகுகளை
எங்கே கழற்றி வைப்பாய்?




புல்லின் மீதிருக்கும் பனித்துளியை
நினைக்காமல் இருக்க முடிவதில்லை
உன் ஈரம் படிந்த இதழ்களை
பார்க்கும்போதெல்லாம்!




கொஞ்ச நேரம்
பேசாமலிரு!
தொடர்ச்சியான சங்கீதத்தை
என் காதுகள் ஏற்பதில்லை!





சத்தமே எழுப்பாமல்
நீ அருகில் செல்லும்போதெல்லாம்
பட்டுப்பூச்சி பறந்து விடுகிறது

மறுபடியும் தவற விட்டதை
நினைத்து நீ முகம் சுளிக்கிறாய்
தோல்வியிலும் நீ எத்தனை அழகு

தொடர்ந்து முயற்சி செய் என்கிறேன்!
பட்டாம்பூச்சிகள் பறந்து விடும்
என்ற நம்பிக்கையில்!

தமிழ் மையமும் தமிழக அரசு சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை இணைந்து நடத்திய சென்னை சங்கமம் இன்று இனிதே நிறைவுற்றது! மிகவும் அற்புதமான விஷயம்! நம் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் பல வகை கிராமியக் கலைகளை சென்னையின் தெருக்களுக்கே கொண்டு வந்து ஒரு திருவிழாவே நடத்தியிருக்கிறார்கள்! அவர்கள் சொல்வது போல் இது நம்ம திருவிழா தான்!

தமிழ் மையத்தின் எம்.டி. திரு. கேஸ்பர் ராஜ், இந்த யோசனை ஆகஸ்ட் மாதத்தில் உதித்ததாகவும், ஆனால் வேலை செய்யத் தொடங்கியது ஜனவரியில் தான் என்று சொன்னார்! உண்மையாகவே வரவேற்கத் தக்க ஒரு விஷயம். இதைப் பற்றி ஹிந்து பேப்பரில் படிக்கும் போது தான் நம் கிராமங்களில் எத்தனை வகையான ஆட்டம் இருக்கிறது என்றே தெரிகிறது!

நான் முதலில் சென்றது நந்தனத்தில் ஒய் எம் சி ஏ பக்ஸ் தியேட்டரில் நடந்த மொஸார்ட் மீட்ஸ் இந்தியா என்ற நிகழ்ச்சிக்கு! இது சிஃம்பொனியுடன் நம் கர்நாடக சங்கீதத்தை கலந்து கொடுக்கும் முயற்சி! ஃப்யுஷன் என்கிறார்களே, அது தான்..[எனக்கு எல்லாம் கேள்வி ஞானம் தான், இதில் பெருசா தப்பு இருக்க வாய்ப்பில்லை, கொஞ்சமாவது சரியா இருந்தா தானே தப்பு கண்டுபுடிக்க முடியும்...] அற்புதமாய் செய்தார்கள்! கிட்டத்தட்ட ஒரு பத்து பேர் வரிசையாக உட்கார்ந்து வயலின் வாசிப்பதையும், கோரஸாய் ஆண்களும் பெண்களும் பாடுவதையும் இது வரை சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன்! சென்னை சங்கமத்தின் உதவியால் ஒரு தர்ம தரிசனம்! சங்கராபரணம், சிந்துபைரவி, பந்துராஹளி ராகங்களை வாசித்துக் காட்டினார்கள்! காதில் தேன் வழிந்து எறும்பு மொய்த்ததென்றால் நம்பவா போகிறீர்கள்! அந்த ஓபன் தியேட்டரில் தொடை தட்டிக் கொண்டே கேட்டதில் ஒரு கொசுவும் சாகவில்லை! இது சங்கீதக் கூட்டம் என்று அறிந்து தொடையைத் தவிர மற்ற எல்லா இடத்திலும் கொசுவாரின் கச்சேரி!மறுநாள் ஃபின்லேண்டில் இருந்து வந்த ஒரு குழு நடனமாடி பாட்டு பாடி மகிழ்வித்தார்கள்!

நேற்றும் இன்றும் பெசன்ட் நகர் பீச்சில் கண்டு களித்தேன்! குடும்பாட்டம், ஜிம்னாஸியம், சத்தியமங்கலத்தில் வாழும் மலை வாழ் மக்களின் ஆட்டம் என்று விதவிதமாய் அமர்க்களப் படுத்தினார்கள்! கடற்கரையே ஆடியது என்றால் மிகையாகாது! அந்த இடத்திலேயே சினிமா இசையமைக்க குடும்பாட்டக் குழுவிற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கப் போவதாக மேடையில் அறிவித்தார்கள்!

அடடா தவற விட்டு விட்டோமே என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. வருடா வருடம் இதை நடத்தப் போவதாகத் திட்டம்! இந்த வருடம் இல்லையென்றால் அடுத்த வருடம்! சென்னை சங்கமத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், [முதலில் கடற்கரையில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளை வையுங்கள் சார்!] அழிந்து வரும் பல கிராமியக் கலைகள் தழைத்தோங்கவும், இருக்கிறானா இல்லையா என்று தெரியாத இறைவனை வேண்டிக் கொள்கிறேன்!!
காதலர் தினத்தை முன்னிட்டு!

ஓவியம் கொஞ்சம் சோகத்தை கக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது! இதற்கும் மேல் சொன்ன கவிதைக்கும் எந்த வித சம்மந்தமுமில்லை!



இந்தக் கவிதை நல்லா இருந்தால், உங்க காதலி வலைப்பதிவுகளை மேயாதவராக இருந்தால், நான் தான் எழுதினேன் என்று தாரளமாய் அள்ளி விடுங்கள்! காதலுக்காக ஏங்கும் அனைத்து இதயங்களுக்கும் ஃபுல் ரைட்ஸ்!

வாழ்க காதல்!
வளர்க கலப்புத் திருமணங்கள்!!
ஒழிக ஜாதி வெறி!!!

[அது வேற ஒன்னுமில்லீங்க...ஹிஹி!! ஊரார் புள்ளய ஊட்டியில வளர்த்த நம்ம புள்ள கொடைக்கானல்ல வளரும்னு ஒரு நப்பாசை தான்!!]

உன் விழிகளின் வீரயத்தில்
விழித்துக் கொண்டது
என் வாலிபம்

உன் புன்னகையின் பூரிப்பில்
புத்தொளி பெற்றது
என் தேகம்

உன் அங்கங்களின் ஆணையில்
கீழ் படிந்தது
என் ஆண்மை

உன் ஈரமான உதடுகளில்
கதகதப்படைந்தது
என் உதடு

உன் கூந்தலின் கருமையில்
இரவாகவே மாறியது
என் உலகம்

உன் பெண்மையின் பேரின்பத்தில்
நல்ல போஷாக்கு பெற்றது
நம் காதல்