சென்ற வார இறுதியில் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்றிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும்போதே (அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள் எல்லோரும் வந்து ஒரு வருடத்திற்கு எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை இழுப்போம். சற்று பொறுத்துக் கொள்ளவும்!) இப்படி ஒன்று தொடங்கப் படவிருக்கிறது என்ற செய்தியை படித்தேன். அதுவும் கோட்டூர்புரத்தில் என்றதும் மகிழ்ச்சியாய் இருந்தது, காரணம் என் வீட்டுக்கு சற்று அருகில்! (சென்னையில் வீட்டிலிருந்து பத்து பதினைந்து கிலோ மீட்டருக்குள் இருக்கும் எல்லா இடங்களும் அருகில் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!) ஏன் சொல்லுகிறேன் என்றால் நான் சென்னை வந்ததற்கு பல காரணங்களில் கன்னிமாரா நூலகமும் ஒரு காரணம். வார இறுதியில் அங்கேயே தவமிருந்து பல விஷயங்களை கற்றுத் தேர்ந்து, ஜோல்னா பை, சோடா புட்டி கண்ணாடி, பத்து நாள் தாடி சகிதமாக என்னை நான் பல முறை கற்பனை செய்திருக்கிறேன். உங்கள் அதிர்ஷடமோ என் துரதிருஷ்டமோ அப்படி எதுவும் நேரவில்லை. இந்த ஐந்து வருடத்தில் இரண்டே முறை தான் அங்கு சென்றிருக்கிறேன். வேளச்சேரியிலிருந்து அங்கு செல்வதற்குள் தாவு தீர்ந்து விடும் என்று நானே முடிவு கட்டிக் கொண்டேன். (படிக்கிற புள்ளைன்னா போயிருக்கும்!) அதனால் என்னையும் சேர்த்து ஐந்து பேர் வந்து போகும் வேளச்சேரி நூலகத்தில் தஞ்சம் புகுந்து கொண்டேன். "வாப்பா பிரதீப்" என்று அங்கு நூலகர் கேட்டதும் மேலும் பிடிப்பு ஏற்பட்டுவிட்டது! இப்போது அந்தக் கனவு மீண்டும் வரத் துவங்கி இருக்கிறது!!!

காந்தி மண்டபம் சாலையில் காந்தியின் எளிமைக்கு எந்த சம்மந்தமுமில்லாமல் ஒரு பெரிய மென்பொருள் அலுவலக கட்டடம் போல் எட்டு ஏக்கருக்கு பரந்து விரிந்து பிரம்மாண்டமாய் பளபளக்கிறது நூலகம்! 3.75 லட்சம் சதுரடிக்கு எட்டு மாடி கட்டிடத்தை எழுப்பி இருக்கிறார்கள். பனிரண்டு லட்சம் புத்தகங்களை கொள்ளும் வசதியுடன் முற்றிலும் குளிரூட்டப்பட்ட உலகத் தரம் வாய்ந்த நூலகம். இதை தவிர்த்து, 1 2 8 ௦ பேர் அமரக்கூடிய அரங்கம், 8 ௦ ௦ பேர் அமரக்கூடிய சுற்று மாளிகையரங்கம் (தமிழ்ல சொல்லனும்னா amphitheatre!) என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சமீபத்தில் தான் திறப்பு விழா முடிந்ததால் இன்னும் அனைத்தும் இயங்க ஆரம்பிக்கவில்லை. தரை தளத்தையும், முதல் தளத்தையும் மட்டுமே மக்கள் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். தரை தளத்தில் பார்வை அற்றவர்களுக்காக ப்ரைலி புத்தகங்கள் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான அத்தனை வசதிகளும் உள்ளன. இது மிகப் பெரிய விஷயம் தான். நம் நாட்டில் தான் அவர்களை கண்டு கொள்வதே இல்லையே?

முதல் தளம் முழுவதும் குழந்தைகளுக்காக ஒதுக்கியிருக்கிறார்கள். ஜே ஜே என்று கூட்டம். எப்போதும் பீச், கோயில், சினிமா போய் போரடித்து இங்கு வந்த கூட்டமோ என்று நினைத்தேன். "லைப்ரரி இஸ் வெரி குட்!" என்று ஒரு குழந்தை தன் தந்தையிடம் சொல்லி என் வயிற்றில் ஜிகர் தண்டாவை ஊற்றியது! (நமக்கு மதுரை பக்கம் ஹிஹி...) குழந்தைகளுக்கான புத்தகங்கள், ரைம்ஸ் சீடீக்கள், விளையாட்டுக்கள்! அடுத்த செக்க்ஷனில் பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஆங்கில ஜெர்னல்கள் இருந்தன. வண்ணத் திரையும், திரை விருந்தும், சினிக் கூத்தும் இருந்தது, இது என்னடா கூத்து என்று அதுகளை எடுத்து புரட்டினேன். முழுவதும் படித்து விட்டு, பச்சை தமிழனாய், "கருமம், கருமம், நாடு உருப்படுமா" என்று நினைத்துக் கொண்டேன்! 1௦௦ எம்பி பீ எஸ் வேகம் கொண்ட இணையக் கணிப்பொறிகள் வேறு! அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட சலவை கற்கள், முதியவர்களுக்காக சாய்வு நாற்காலி, மாணவர்களுக்காக பெரிய மேஜை நாற்காலிகள் என்று மொத்தமாய் நூலகத்தை பார்த்தால் அமெரிக்காவில் (ஆரம்பிச்சிட்டான்யா!) இருப்பது போலவே உணரவே, கழிவறைக்குச் சென்றேன். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது போல், கழிவறையின் நிலையில் இந்தியாவை கண்டேன்!

வெளியே வந்ததும் பறவைகளுக்காக ஒரு புத்தம் புதிய விசேஷ கழிப்பிடம் பார்த்தேன்! அறிஞர் அண்ணாவின் சிலையை தான் சொல்கிறேன். இந்த நாட்டில் தலைவராய் மட்டும் ஆகி விடக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன்! அந்த சிலையின் அடியில் அண்ணாவின் வாசகம்:

"வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், புத்தகச் சாலைக்கு தரப்பட வேண்டும்!"

எத்தனை சரியான வாசகம்!

போன வார விடுமுறையில் (இந்த வாரம் என்ன செய்தேன் என்று அடுத்த வாரம் வரும், ஓகே? நான் ரொம்ப பிசி....) நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்கை வாக் மாலுக்குச் சென்றிருந்தேன். நுங்கம்பாக்கம் ரயிலடியில் இறங்கி கொஞ்சம் நடந்து ஷேர் ஆட்டோவில் ஏறினால் ஐந்து ரூபாயில் மால். பார்த்தவுடன் பெங்களூர் ஃபாரம் மால் நினைவுக்கு வந்தது. மாலுக்குள் நுழைந்து யாரை நிறுத்தி கேட்டாலும் ஐடியில் பணி புரிவதாகத் தான் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் வரி கட்டுவதற்கு நல்ல ரோடு போடுகிறார்களோ இல்லையோ நிறைய்ய மாலை திறக்கிறார்கள். அங்கும் கொள்ளை கொள்ளையாய் விலை வைத்து ஒட்டு மொத்தமாய் ஐடிகாரர்களிடமிருந்து கொள்ளை அடிக்கிறார்கள்! பைக் பார்க்கிங் இருபது ரூபாய்! நிறைய்ய குழி உள்ள ஒரு தட்டில் காக்காய்க்கு வைப்பதை போல் பல வித பதார்த்தங்களை படைத்து இருநூறு ரூபாய்! ஒரு சினிமா நூற்றி இருபது ரூபாய். ஆனால் நூற்றி இருபது ரூபாய்க்கு எந்த வஞ்சனையுமில்லாமல் அப்படியே அமெரிக்காவில் உள்ள தியேட்டர்களை போலவே வடிவமைத்திருக்கிறார்கள். பாப்கார்ன்களின் சைஸ் உட்பட.

நான் மகான் அல்ல

கார்த்தி இருந்தால் போதும், காமெடிக்கு தனியாய் ஆள் எடுக்கத் தேவையில்லை. அவர் வந்தாலே தியேட்டரில் சிரிக்கிறார்கள். மனிதர் சிரிப்பிலும் முறைப்பிலும் பிரமாதப்படுத்துகிறார். இவர் அடியாட்களின் கால்களை பிடித்து சுழற்றி அடித்தால் நம்ப முடிகிறது. என்னை பொறுத்துவரை அவர் பேட்டியில் எப்படி பேசுகிறாரோ அப்படியே தான் படங்களிலும் இருக்கிறார். அதனால் அவரின் நடிப்பு மிக இயல்பாய் தெரிகிறது என்று தோன்றுகிறது. அவருக்கு சம்மந்தமேயில்லாத ஒரு குணநலன் கொண்ட கேரக்டரில் அவர் நடிக்க வேண்டும். எப்படியோ தமிழ் சினிமாவிற்கு ஒரு மாஸ் ஹீரோ கிடைத்து விட்டார்.

காஜல்

நான் கவனித்த வரை காஜலுக்கு மிகவும் பெரிய்ய.....பற்கள்! சீ, யு பேட் பாய்ஸ்! இடைவேளைக்கப்புறம் ஹீரோயினே வராத ஒரு படம் இது தான் என்றேன், ஒரு கனவு பாட்டு கூட இல்லை என்றேன், அப்புறம் தான் தெரிந்தது நான் பாபகார்னுக்கு க்யூவில் நிற்கும் போது வந்து போய் விட்டார் என்று! வேறு என்ன சொல்ல, வழக்கமாய் நடிகைகள் சொல்லும் மூன்றாம் பிறை ஸ்ரீ தேவி ரோலா? இதைப் பற்றி அரை பக்கத்துக்கு பேச? எப்போ தான் தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் தேவதைகளாய் இல்லாமல் மனிதர்களாய் நடமாடப் போகிறார்களோ!

சுசீந்திரன்

ரெண்டு படம் ஓடி விட்டது. இன்னும் வாங்கவில்லை என்றால் இப்போதே போய் ஒரு புது கூலிங் கிளாஸ் வாங்கிக் போட்டுக் கொள்ளலாம்! அதை கழட்டாமல் பேட்டி தரலாம்! அதற்கான சகல தகுதியும் இருக்கிறது!

படம் முடிந்து விட்டது, சீட்டிலிருந்து வெளியே வரும்போது கவனித்தேன். அரங்கெங்கும் கொட்டிக் கிடக்கும் மிச்ச சொச்ச நொறுக்குத் தீனிகள். நம் மக்கள் வாங்கி சாப்பிடுகிறார்களா அல்லது கீழே கொட்டுகிறார்களா தெரியவில்லை. அடுத்த காட்சிக்குள் அத்தனை பெரிய அரங்கை சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு கஷ்டம் தான்!

படத்தை விட எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அந்த மாலில் இருந்த பெரிய லேண்ட்மார்க்! போய் உட்கார்ந்து ரெண்டு சின்ன புத்தகத்தை முடித்தேன். அதிலே ஒன்று சுஜாதாவின் சினிமா உலக கட்டுரைகள்! அதில் எனக்கு ஞாபகம் (கவனிக்க, என்னுடைய ஞாபகம்!) இருக்கும் சில வாத்தியார் முத்துக்கள்!

"நாடோடித் தென்றலுக்காக பாரதிராஜா ரஞ்சிதா என்ற ஒரு உயரமான பெண்ணை அறிமுகப்படுத்தினார். சரியாய் நடிக்க வராததால் அடித்து விட்டாராம். மேலும் கேட்டால் எனக்கும் ரெண்டு விழும்!"

"நடிகை ஷோபா ஓடி வந்து அங்கிள் என்று பாலுமகேந்திராவின் கழுத்தை கட்டிக் கொண்டாள்! அது அங்கிளுக்கான பழக்கமில்லை என்று என் மனைவி வீட்டுக்கு வந்ததும் சொன்னார். "

"சுந்தரராஜன் என்னிடம் கேட்டார். அது நீங்க எழுதின கதையா, கதை என்னன்னு தெரியாம நடிச்சேன். ஆமா அதுல நான் யார்? கதைப்படி நீங்க செத்த பொணம் என்றேன்!"

"மணிரத்னம் என்னை அந்த சின்ன ஸ்டூடியோவுக்குள் கூட்டிக் கொண்டு போனார். அந்தப் பையனிடம் புகழுக்குத் தயாராகுங்கள் என்று சொன்னேன்" அவர் தான் ஏ. ஆர். ரகுமான்!

இன்னொரு ஆங்கில சுய முன்னேற்ற புத்தகம் ஒன்றையும் படித்தேன். அதிலிருந்து, என் ஞாபகத்திலிருந்து,

................................................................................

(நான் எப்படி முன்னேறுவேன் சொல்லுங்க?!)

ஒரு கேள்வி:

இன்று கேப்டன் டீவியில் முரளியின் பேட்டியை பார்க்கும்போது, அடுத்த மாதம் பெங்களூர் வருவதாக நண்பனிடம் சொன்னது ஞாபகம் வந்தது, எந்த நம்பிக்கையில் அப்படி சொல்கிறோம்? என்று தோன்றியது!


நேற்று எனக்கும் என் மனைவிக்கும் சண்டை...
இருவரில் யார் யாரை அதிகம் நேசிக்கிறோம் என்று!
சண்டையின் விதிப்படி இன்று முழுவதும்
அவளிடம் பேசாமல் மேலும் அதிகமாய் காதலிக்க வேண்டும்!!

அதிகக் கூட்டமில்லாத பேருந்தில்
ஒவ்வொரு இருக்கை தேடி
அமர்கின்றனர் ஒவ்வொருவரும்!