என் டூ வீலரை ப்ளு மெளன்டைன் முன் நிறுத்தினேன். பட்ஜெட் ஹோட்டல் மாதிரி தான் இருந்தது. ரிஸெப்ஷனில் ஒரு தடியான ஆள் வரவேற்றான்.

நவீன்னு ஒரு ரைட்டர், அவர் ரூம் எது?

103 மேடம், ஸ்டேர்ஸ் அங்கே என்று கை காண்பித்தான்.

என் முதுகில் அவன் பார்வை உறுத்தியது. ஹோட்டலில் தனியாய் இருக்கும் ஒருவனை சந்திக்க வரும் பெண், அவள் அக்கா தங்கையாகவே இருந்தாலும் சமூகத்தின் பார்வை அவளைத் துகிலுரியத்தான் செய்கிறது.

103, கதவைத் தட்டினேன்.

உள்ளே வாங்க என்று அவன் குரல்.

கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். அவன் ஜன்னல் பக்கமாய் திரும்பி அமர்ந்து கொண்டு மேஜையில் வைத்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். திரும்பி என்னைப்
பார்த்தவன் மெலிதாய் அதிர்ந்தான்.

கவி, சாரி கவிதா..வா, வாங்க.. உள்ளே வாங்க.

என்ன மரியாதை எல்லாம் பலமா இருக்கு? என்று சொல்லிக் கொண்டே அங்கு இருந்த
சோஃபாவில் அமர்ந்தேன். அவன் சிரித்துக் கொண்டே சேரை என் பக்கம் திருப்பி அமர்ந்து கொண்டான்.

என்ன சாப்பிட்றீங்க? காபி, டீ?

எதுவும் வேண்டாம் என்று தலையசைத்து விட்டு, அவனிடம்,

என்னை நீ, சாரி நீங்க இங்கே எதிர்பார்க்கலைல்ல?

எதிர்பார்த்திருக்கணுமோ?

கேள்விக்கு கேள்வி பதில் ஆகுமா?

பதிலைத் தெரிஞ்சுகிட்டே கேள்வி கேக்கலாமா?

எனக்குத் தெரிஞ்ச பதில் சரியா தப்பான்னு தான் கேக்குறேன்.

அவன் ஏதோ புரிந்தவன் போல், மெல்ல சிரித்துக் கொண்டே, இந்த, இந்த நிமிஷம், இந்த சூழல், "சரி", "தப்பு"க்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒரு இடமா தான் நான் பாக்குறேன்.

கதவு சாத்தாமல் தான் நான் உள்ளே வந்தேன். நம் மக்களுக்குத் தான் திறந்து கிடக்கும் அறைகளைப் பார்ப்பதில் என்ன ஒரு ஆர்வம், ஆனந்தம். நான் நினைப்பதை அவன் உணர்ந்து, If you don't mind, may i? என்று கதவைக் காட்டினான்.

Sure என்றேன்.

அவன் கதவை சாத்திவிட்டு, அவன் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான். நான் அவனைப் பார்த்து,

சாரி, நீங்க எழுத்து வேலையில பிசியா இருப்பீங்க. I don't want to disturb. நேத்து பாத்ததுல இருந்து ஒரு கேள்வி மனசுல, அதைக் கேட்டுட்டுப் போலாம்னு தான் வந்தேன்.
கேளுங்க என்றான்.

இந்த "ங்க" அவசியம் தானா நவீன்?

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. நான் தொடர்ந்தேன்.

ஒகே. என் மேல கோவமா?

எதுக்கு?

கமான் நவீன்! கொஞ்சம் வெளிப்படையா பேசுவோமா?

உங்களை உயிருக்கு உயிரா காதலிச்சிட்டு, வாழ்க்கைன்னு வரும்போது சேஃபா இன்னொருதரை கல்யாணம் பண்ணிட்டேன்னு என் மேல கோவமா?

சே, சே, கண்டிப்பா இல்லை கவி..

Thanks...for calling me KAVI, அப்புறம் ஏன் இத்தனை வருஷம் கழிச்சி நேத்து என்னைப் பார்த்தப்போ, உன் முகத்துல ஒரு சின்ன சந்தோஷம் கூட இல்ல?

அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.

உன் முகத்தை இப்பத்தான் எனக்கு நீ புதுசா அறிமுகம் செய்யப் போறியா நவீன்? உன்னை எனக்குத் தெரியாதா?

அவன் என்னையே பார்த்தான். நான் தீர்க்கமாய் அவன் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டான்.

கல்யாணத்துக்கு முன்னாடி நான் இருந்த மாதிரி இப்போ அழகா இல்லைன்னு நீ நினைச்சிருப்பே, அதான் நீ ரொம்ப இன்ட்ரஸ்ட் எடுத்துக்கலைன்னு என் ஹஸ்பண்ட் சொல்றார்.

மெல்ல அதிர்ந்து, நம்ம பார்த்ததை அவர்கிட்ட சொன்னியா?

அவருக்கு உன்னைப் பத்தி தெரியும், நம்மைப் பத்தி தெரியும்.

ஓ!

சொல்லு நவீன்! என் ஹஸ்பண்ட் சொன்ன மாதிரி இப்போ என் அழகு போயிடுச்சு, இனிமே என்கிட்ட பேசி என்ன யூஸ் னு நினைக்கிறியா?

சே சே, அப்படி எல்லாம் இல்ல.

வேற எப்படி?

தெரியல..

இது என்ன பதில்?

(அமைதி)

சொல்லு நவீன்...நேத்துல இருந்து தொண்டையில முள் சிக்கின மாதிரி இருக்கு எனக்கு. ஏன் பெண்ணை அழகை வச்சி மட்டும் பார்க்குறீங்க? அன்னைக்கி நான் உன்கூட வர்றேன்னு தானே சொன்னேன். நீ தானே பயந்த. சரி, உன்னைக் கட்டி இருந்தாலும் இன்னைக்கி நான் இப்படித் தானே இருந்திருப்பேன்? அப்போ என்ன பண்ணி இருப்பே? அப்போ உன் காதல் குறைஞ்சுருக்குமா?

அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நிராயுதபாணியாய் நிற்கும் ஒருவனிடம் போர் புரிவதைப் போல் நான் பேசிக் கொண்டிருந்தேன்.

இல்லை எனக்குப் புரியல, அப்போ நமக்கு இருந்த சூழ்நிலையை வச்சித் தானே ரெண்டு பேரும் அப்படி ஒரு முடிவு எடுத்தோம். நம்ம சுமூகமா தானே பிரிஞ்சோம். அப்புறம் ஏன் இத்தனை வருஷம் கழிச்சி பார்த்தும் உன்னால நட்பா கூட சிரிக்க முடியல?

நட்பா சிரிக்கிறதா? ம்ம்....கவி, லைஃபே ஒரு progressive compromises இல்லையா? நம்ம பிரிஞ்ச அந்த நாள்ல இருந்து நீ ரொம்ப தூரம் போயிட்ட. காதல்ல இருந்து நீ நட்புக்கு வந்துட்ட, நான் இன்னும் அந்தக் காதல்லயே தான் நின்னுட்டு இருக்கேன்.
அவன் இப்படி ஒரு பதிலைச் சொல்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவன் மேலும் தொடர்ந்தான்.

ஆமா கவி, ஒருவிதத்துல நீ சொல்ற அந்த அழகான கவியா, இளமை மாறாம நீ இருந்திருந்தா, என் முன்னாடி அப்படி வந்து நீ நின்னுருந்தா நான் உன்கிட்ட நல்லா பேசி இருப்பேனோ என்னமோ. இல்லை என்னை சீப்பா நினைக்காதே. ஏன் அப்படி சொல்றேன் தெரியுமா? ஏன்னா, இன்னைக்கும் கற்பனைல நான் அந்தக் கவி கூடத் தான் வாழ்ந்துட்டு இருக்கேன். எனக்கு அந்தக் கவியைத் தான் தெரியும். இந்தக் கவியைத் தெரியாது. முன்னபின்ன தெரியாதவங்ககிட்ட நட்பா எப்படி சிரிக்கிறது?

உண்மையை சொல்லப் போனா நம்மோட சந்திப்பையே நான் விரும்பல. திடீர்னு நீ என் முன்னாடி வந்து நின்னதும், என் கற்பனைகள் எல்லாம் கனவு போல கலைய ஆரம்பிச்சிருச்சு. நீ ரொம்ப சாதரணமா என்னை ஒரு நட்பா கருதி உன் வீட்டுக்குக் கூப்பிட்ற? உன்னை மாதிரி காதலை நட்பா சட்டுன்னு எனக்கு மாத்தத் தெரியல. இத்தனை வருஷங்கள் ஆயிடுச்சு, நீ இப்போ வேறு ஒருத்தரோட வாழ்றன்ற இந்த உண்மையே எனக்குப் பிடிக்கல. உன் வீட்டுக்கு வந்து நான் உன் குடும்பத்தையும், உன் வாழ்க்கையையும் எப்படி எதிர் கொள்றது? அது எப்படி என்னால முடியும்?... இல்லை கவி, எனக்கு என்னோட எளிமையான, யாருக்கும் தீங்கிழைக்காத கற்பனை போதும். அது பொய்யா இருந்தாலும் அழகா இருக்கு. நீ இருக்கே, நான் இருக்கேன். நம்ம காதல் இருக்கு. அங்கே காலம் உறைஞ்சு இருக்கு. எனக்கு அது போதும்.

நீ கேட்ட கேள்விக்கு உனக்கு பதில் கிடைச்சுதா, உன் தொண்டையில சிக்கின முள் கீழே இறங்கிச்சான்னு எனக்குத் தெரியல...இதையெல்லாம் நீ தெரிஞ்சுக்கணும்னும் நான் நினைக்கல. ஒரு ரிக்வஸ்ட். எனக்காக என் மிச்சக் கற்பனைகளை அப்படியே விட்டுட்டு நீ உன் வாழ்க்கைக்குத் திரும்பிப் போ கவி..சாரி, திரும்பிப் போங்க கவிதா என்றான்.

நான் ஒன்றும் சொல்லாமல், சட்டென்று எழுந்து, Thanks Navin. That helps! என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

-

என்னுடன் தலையணைக்கு உறை போட்டிருந்த அவர் நான் சொன்னதை எல்லாம் உறைந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்தார்.

சொல்லி முடித்துவிட்டு தலையணையை ரெண்டு தட்டு தட்டி அவரைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்து,

சே, என்ன மனுஷன்பா, சூப்பர் ல என்றார்.

ஆமா, சரியான லூசு என்றேன்.

லூசா? என்ன நீ? உனக்காக இப்படி உருகுறான் அந்த மனுஷன்? நீ இப்படி சொல்ற? என்றார்.

லவ் பண்ணா தைரியம் இருக்கணும், வாழ்க்கையில எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டு கதை, கற்பனை, கனவுன்னு இப்படி பேசிட்டு இருந்தா யாருக்கு என்ன லாபம்? இந்த எழுத்தாளனுங்க எல்லாம்  சரியான மென்டல் கேஸுங்க தான் போல! நல்லவேளை நான் தப்பிச்சேன், படுங்க என்று லைட் ஆஃப் செய்தேன்.
0 Responses