சில நாட்களாய் ஒரு யோசனை. நாமும் ஒரு வலைப்பூ ஆரம்பித்தால் என்ன? சத்தியமாய் எனக்கு நானே கேட்டுக் கொண்ட கேள்வி இது! நாம் தான் கதை, கட்டுரை, கவிதை என்று எழுதாத விஷயமே இல்லையே. கரகாட்டக்காரன்ல கவுண்டமணி காரை மைசூர் மகாராஜா முதல் சொப்பன சுந்தரி வரை வச்சிருந்த மாதிரி, நாட்ல எல்லாரும் ஒரு செல்போனையும் வலைப்பூவையும் வச்சிருக்கன்; நாமும் ஏன் ஒரு வலைப்பூவை வச்சிக்க கூடாது என்று ஒரு கேள்வி? ஒரு வலைப்பூ ஆரம்பிச்சி, அதுல வந்தது போனது எல்லாம் எழுதி, கிடைக்கிற எடுத்துள்ள எல்லாம் பின்னூட்டமிட்டு, எல்லா வலைப்பதிவர்களின் சந்திப்பிலும் கலந்துட்டு, புத்தக விழாக்களுக்கு தலை காட்டி, அப்படியே நாலு பதிப்பாளர்களை கையில் போட்டுக் கொண்டு, நாமும் நாலு புஸ்தகம் எழுதி, அப்படியே முதலமைச்சராயிட்டா [இதானே ஒவ்வொரு தமிழனோட லட்சியம்!?] என்ன? அப்படி ஒன்னை ஆரம்பிச்சிட்டா, அப்புறம் கூகுலாரிடம் சென்று "espradeep" என்று டைப் அடித்தால் போதுமே, நம்முடைய வலைப்பதிவு முன்னால் வருமே அது எத்தகைய வளர்ச்சி, எத்தகைய கிளர்ச்சி [சி, சீ] என்று ஒரு எண்ணம். அதெல்லாம் சரி இப்போது கூகுலாரிடம் என் பேரைக்  கேட்டுப் பார்த்தால் என்ன தான் வருகிறது என்று பார்ப்போம் என்று பார்த்ததில் தான் தெரிந்தது, எனக்கு ஏற்கனவே ஒரு வலைப்பூ இருக்கிறது அதை நான் அடிக்கடி மறந்து விடுகிறேன் என்பது! [எப்படி ட்விஸ்ட்டு?]


சத்தியமா, சொல்றதுக்கு ஒன்னுமில்லீங்க! மாசத்துக்கு ஒண்ணுன்னு ஆகிப் போச்சு நம்ம எழுத்து. முந்தி வாரத்துக்கு ஒரு தடவை இதை பத்தி ஒரு பதிவைப் போட்றனும்னு தோணும், அப்படியே அது படிப் படியா குறைந்து மாசத்துக்கு ஒண்ணுனு வந்து நிக்குது. அது என நிக்குது, நானா புடிச்சி இழுக்க வேண்டியிருக்கு. அதான் மேலே சொன்னாப்புல சில பல ட்விஸ்ட்டுகளை எல்லாம் கொடுக்க வேண்டி இருக்கு. இப்போ வரைக்கும் அடுத்த பத்தியில என்ன எழுதப் போறேன்னு தெரியாது! "அண்ணன் எந்த புள்ளையும் பாத்து இப்படி எல்லாம் ஆப் ஆனதில்லைடா..." எத்தனை தடவை பாக்குறீங்க? அதை விடவா இதெல்லாம் ஒரு சோதனை? மேலே...


ஆ! புடிச்சிட்டேன். படிங்க...."எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்" என்று டீவியில் ஒரு விளம்பரம் பார்த்திருப்பீர்கள்! நீங்களும் என்னை போல் சினிமா விரும்பி, அதிலும் பழைய சினிமா வரலாற்றைப் பற்றி அறிய ஆவலாய் உள்ளவர் என்றால் இந்நேரம் இந்த டீவிடீயை வாங்குவதற்கு கட்டம் கட்டி வைத்திருப்பீர்கள். உங்களுடைய இருநூற்றி ஐம்பது ரூபாயை காத்த பெரும் பேரு எனக்கு கிடைக்கட்டும். தயவு செய்து வாங்காதீர்கள்! "எம்.ஜி.ஆர், சத்தியபாமா என்ற புனிதவதிக்கு கடைசி மகனாகப் பிறந்தார்!" இது செய்தி. உடனே ஒரு பாட்டு, தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை! பாட்டு போடட்டும், இரண்டு வரி போதாதா? பாடல் முழுவதும் வருகிறது. இதற்கு எம்.ஜி.ஆரின் தத்துவப்பாடல் சீடியை வாங்கி இருந்தால் 20 ரூபாயில் முடிந்திருக்கும். கந்தரகோலம்! இப்படி எடுத்ததுக்கெல்லாம் பாட்டாய் போட்டு எம்.ஜி.ஆரின் கலையுலக வாழ்க்கையை முடித்து விட்டார்கள்.  அரசியல் இரண்டாம் பாகம் என்று டைட்டில் போட்டு முடித்து விட்டார்கள். அது இதிலேயே வருகிறதா அல்லது அதற்கு இன்னொரு டீவிடீயை வாங்க வேண்டுமா என்று நான் பார்க்கவில்லை. அடப் பாவிகளா, ஃபிலிம் நியுஸ் ஆனந்தனிடம் சொல்லியிருந்தால் அக்கு வேறு ஆணி வேறாய் எம்.ஜி.ஆரின் சினிமா விஷயங்களை பிரித்துக் கொடுத்திருப்பார். அது ஒரு அற்புதமான கலவையாய் பார்க்க சுவாரஸ்யமாய் இருந்திருக்கும். உண்மையை சொல்லப் போனால் ராஜ் டீவியின் எந்த சீடிக்களும் எனக்கு திருப்தி அளித்ததில்லை. முன்பு ஒரு முறை மகாநதி வாங்கினேன். பிரிண்ட் கூவம் நதியை விட மோசம். க்ளைமேக்ஸ் இல்லை. படமும் ஆங்காங்கே நின்று விடுகிறது. தரமே இல்லை. எல்லாம் தெரிந்திருந்தும் அதையும் மீறி விளம்பரங்களில் எம்.ஜி.ஆரின் மேக்கப்பில்லாத அந்த பொலிவான முகத்தைப் பார்த்து இந்த முறையும் ஏமாந்து விட்டேன். வாத்தியார் சொன்ன மாதிரி  "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?"


நல்ல வெயிலில் செம்மொழிப் பூங்கா சென்று வந்தேன். தேசிகனுடனும், மற்ற வலைபதிவர்களுடனும் 2005 ல் அது வுட்லேண்ட்ஸ் ஆக இருந்த போது சுஜாதாவை சந்தித்தது ஞாபகம் வந்தது. அது ஒரு நிலாக்காலம்! எனக்கு என்னமோ பூங்காவை விட டிரைவின் தான் பசுமையாய் இருந்தது போலத் தோன்றியது! ஒரு வேளை அன்று நான் சென்றது மாலையில் என்ற காரணத்தினால் அப்படித் தெரிந்திருக்க வாய்ப்புண்டு! செம்மொழிப் பூங்காவை விட ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் மிகப் பழமையான மரங்களைப் பார்த்தேன். அது தான் காடு போல் காட்சி அளித்தது என்று சொல்ல வேண்டும். அந்த மாதிரி சில ஏரியாக்களில் தான் பழைய சென்னை காணக் கிடைக்கிறது என்பது என் அபிப்ராயம்!


நீண்ட நாட்களுக்குப் பிறகு மைனா பார்த்தேன். இன்று லோக் சபாவில் "எக் துஜே கே லியே" பார்த்தேன். பின்னதில், க்ளைமேக்ஸ் இயற்கையாய், புதுமையாய் இருந்தது. முன்னதில், க்ளைமேக்ஸ் செயற்கையாய் புகுத்தியது போல் இருந்தது. கமலுக்கு ரதி குட்! விதார்த்துக்கு அமலா பால்!? நான் ஹீரோ ஆகியே தீர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் போலும்! [ஆண்டவா, இந்தியாவை காப்பாத்து! [உபரித்தகவல்: எனக்கு ஹிந்தியும் தெரியும்!]] மந்திரப் புன்னகை [மீனாட்சியை மட்டும்] பார்த்தேன். சமயத்தில் அவரின் எடுப்பான....பல் வரிசை ஸ்ரேயாவை ஞாபகப்படுத்துகிறது.

புது வருடத்தில் எல்லோருக்கும் என் புது வணக்கம். வழக்கமாய் புது வருடத்தின் முதல் செய்தியே முந்தைய இரவு டாஸ் மார்க்கின் வியாபாரம் என்ன என்பது தான்! ["குடி உயர அரசுயரும்" என்று வள்ளுவர் சரியாய் தான் சொல்லியிருக்கிறார்!!] அப்புறம், எல்லோரும் முறிப்பதற்காகவே ஒரு தீர்மானம் மேற்கொண்டிருப்பீர்கள். இல்லை, தீர்மானமே இனி எடுப்பதில்லை என்ற ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறேன் என்று அதிமேதாவி ரேஞ்சுக்கு ஃ பீல் செய்திருப்பீர்கள்! [நாங்க எவ்வளவு பண்ணியிருப்போம்!] வருடத்தின் முதல் நாள் என்ன செய்கிறோமோ, அதையே வருடம் முழுவதும் செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது! அந்த நம்பிக்கை உண்மையா பொய்யா, பலிக்குமா, பலிக்காதா என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது, அது நம்பிக்கை! அவ்வளவு தான். அந்த முடிவோடு நேற்றே ஒரு பதிவை எழுதினாலாவது வருடம் முழுதும் பல பதிவுகள் எழுதுவோமோ என்னமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நேற்று முடியவில்லை. அதனால் நீங்கள் எல்லோரும் என்னுடைய தொடர் மொக்கைகளிளிருந்து தப்பித்து விட்டீர்கள் என்று வழக்கமான ஒரு மொக்கையை போட நான் விரும்பவில்லை. 

சத்தியமாய் இப்போது வரை என்ன எழுதப் போகிறேன் என்று எனக்கே தெரியாது. இப்படியெல்லாம் இவன் எழுதுவான், இதை நான் படிக்கணும், எனக்கு என்ன தலையெழுத்தா என்றெல்லாம் நினைக்காதீர்கள். நீங்கள் சாருவை படிப்பவர் என்றால் அப்படி எல்லாம் நினைக்க மாட்டீர்கள் என்று எனக்கே தெரியும். அதனால் தொடருங்கள்!

உறவினர் ஒருவரின் குழந்தை (கிட்டத்தட்ட 3 வயது) அதனுடைய உயரம் அளவிற்கு ஒரு மெடல் சுமந்து வந்து காட்டியது. சில்வர் கலரில் இருந்தது. அவன் அம்மா ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்தான் என்றார்கள். இத்துனூண்டு குழந்தைக்கு ஒரு ஓட்டப்பந்தயம் அதற்கு ஆள் உயரத்துக்கு ஒரு மெடல் வேறா என்று நான் வியந்து கொண்டிருந்தேன். அதற்கு அவர்கள், அதை என் கேட்கிறீர்கள், ஃ பஸ்ட் ப்ரைஸ் வாங்க வேண்டியது, செகண்ட் தான் கிடைத்தது என்றார்கள். ஏன் வேகமா ஓடலையா என்றேன். இல்லை இல்லை, நல்லா ஓட்டிட்டு இருந்தான், கிட்ட வந்ததும் எல்லாரும் கை தட்றதை பார்த்து அவனும் நின்னு கை தட்ட ஆரம்பிச்சுட்டான் என்றார்கள். சோ க்யுட்!

ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு சுவாரஸ்யமான ஆசாமி. ஒன்வேயில் செல்லும்போது போலீஸ் உங்களை பார்த்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினார். போலீசின் கண்களும் உங்கள் கண்களும் மோதியதும் (என்ன கவித்துமான தருணம்!) அவர் உங்களை அழைக்க கை ஓங்குவதற்கு முன் நீங்கள் உங்கள் கையை காட்டி நான் உங்களிடம் தான் வருகிறேன் என்று அவரை நோக்கி செல்ல வேண்டும். அவர் உங்களை கேள்வி கேட்பதற்கு முன் சார், இந்த ரோட்டுக்கு எப்படி போகணும்? இந்த தெருவுக்கு எப்படி போகணும் என்று ஒரு பிட்டை போட வேண்டும். அவர் டென்ஷன் ஆகி "யோவ், அது அந்த பக்கம் போகணும்யா, போய்யா அட்ரஸ் தெரியாம ஒன்வேல வந்துட்டு..." என்று சத்தம் போட்டு அனுப்பி விடுவார், விடுவாராம்! முயற்சித்து பாருங்கள். அவர் சைடில் ஏதாவது கேட்டால் நீங்கள் நேராய் கமெண்ட்டில் வந்து என்னை கேட்காதீர்கள்!

ஆமாம், இந்த சென்னைக்கு என்ன ஆகிவிட்டது? எப்போது பார்த்தாலும் மேக மூட்டமாய், குளிர் காற்றுமாய், சாரலைத் தூவிக் கொண்டு கண்றாவியாய் அல்லவா காட்சி தருகிறது! ஒரு வேளை அடுத்த கிருஸ்த்துமசுக்கு பனி பெய்யுமோ? க்ளோபல் வார்மிங்கானால், சென்னை கூளிங்காமோ?  புது வருடமும் அதுவுமாய் இப்படி ஒரு மொக்கையை நான் இதுவரை போட்டதே இல்லை! என்னாலேயே தாங்க முடியவில்லை! வருகிறேன்.