நாலு பெட்டி கேஸ்கள் ஒன்று கூடி பெரிய கேஸ் ஒன்றில் முற்படுகிறார்கள். நான்கு பேரில் ஒருவனுடைய நன்றி கெட்ட பணக்கார மாமாவின் வீட்டில் கன்னம் வைக்கிறார்கள். பிறகு நடந்தது என்ன? இது தான் மூடர் கூடம்.

படத்தின் ஹைலைட்ஸ்!

திரைக்கதை. தமிழ் சினிமா இயக்குனர்கள் எல்லா பேட்டிகளிலும் இது வித்தியாசமான படம் என்று காலங்காலமாய் சொல்லி சொல்லி வித்தியாசமான படம் என்றாலே என்னவென்று தெரியாத அளவுக்கு நம்மை மழுங்கடித்து விட்டார்கள். நவீன் பேட்டியில் இதை வித்தியாசமான படம் என்று சொன்னாரா இல்லையா தெரியவில்லை. என்னை பொருத்தவரை இது தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான படம் தான்!

என்ன வித்தியாசம்?

* காலங்காலமாய் தமிழ் சினிமாவில் இரண்டு கேரக்டர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது ஒருவர் முகத்தை திருப்பி ஜன்னல் பக்கமோ, கதவின் இடுக்கிலோ நின்று கொண்டால் அங்கு ஃபிளாஷ்பேக் ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். [எனக்கு ஒரு சந்தேகம், ஒருவரிடம் பேசும்போது அதுவும் முக்கியமான ஒரு தகவலை சொல்லும்போது நம் முகத்தை வேறு பக்கம் வைத்துக் கொண்டு கேட்பவருக்கு முதுகை காட்டிக் கொண்டு நம் அன்றாட வாழ்வில் இப்படி எப்போதாவது பேசி இருப்போமா? இதை எப்படி சினிமாவில் கொண்டு வந்தார்கள்? யார் இதன் முன்னோடி?] அது இந்தப் படத்தில் இல்லை! "-----ன் முன்கதை" என்று ஒவ்வொரு கதாப்பத்திரத்துக்கும் தெள்ளத்தெளிவாய் பேர் போட்டு தான் ஃபிளாஷ்பேக்கை நவீன் ஆரம்பிக்கிறார். அதுவும் எப்படி, ஒரு ஃபிளாஷ்பேக் சாப்ளீன் பட ஸ்டைலில், இன்னொன்று கார்டூன் பட ஸ்டைலில் என்று ஒவ்வொரு ஃபிளாஷ்பேக்கும் ஒவ்வொரு விதம். ஒரு நாய்க்கு இவ்வளவு பெரிய பாட்டா என்று ஓவியா அங்கலாய்க்கும் வகையில் ஒரு சூப்பர் பாட்டு ஃபிளாஷ்பேக்! நாய், பொம்மை என்று படத்தின் ஒரு பிரதான கேரக்டரையும் விடவில்லை.

* அதோடு வழக்காமன் காட்சிகளையும் அவர் காட்சிப்படுத்தி இருக்கும் விதம். ஒரு டீ என்று ரெண்டு ரூபாய் காசு அலைபாய்வதில் ஆரம்பித்து, தாய் நாயிடம் இருந்து பால் குடிக்கும் ஒரு குட்டி நாயை பிரித்தெடுப்பது [என்ன ஒரு துயரமான காட்சி அது!], டைட் க்லோசப்ஸ், வித்தியாசமான காமெரா கோணங்கள் என்று படம் நெடுகிலும் அவரின் ஒவ்வொரு ஃபிரேமும் அசத்தல்.
வசனம். மேலோட்டமாய் பார்த்தால் நகைச்சுவை. உள்ளார்ந்து பார்த்தால் அதில் தெறிக்கும் அவரின் புத்திசாலித்தனம், சமூக அக்கறை, வாழ்க்கையின் புரிதல்.

உதாரணம்: கஞ்சா பொட்டலம் வாங்கும் ஒருவன்:

என்ன ஒரு பொட்டலம் நானூறு ரூவாயா? உங்களை எல்லாம் கேக்க ஆளில்லியா?
செண்ராயன்: ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ரெண்டாருவா வித்த டீ இன்னைக்கி ஆறு ரூவா. அதை கேக்கவே இங்கே ஆளில்லைங்கும்போது இதெல்லாம் கேக்க எந்த பூ-----வும் தேவையில்லை.

ஓவியா: கூடவே ஒரு ஆள் இருந்தா எப்படி பாத்ரூம் போறது?
நவீன்: அதுக்காக உன்னை ராக்கெட் ஏத்தி நிலாவுக்கா அனுப்ப முடியும்?

சுபிக்ஷா: பீட்சா ஆர்டர் பண்ணலாம்
செண்ராயன்: அது என்ன ஸ்வீட்டா, காரமா?

மத்தவங்க கிட்ட இருந்து எடுக்குறது மட்டும் இல்லை; மத்தவங்களை எடுக்க விடாம தடுக்குறதும் திருட்டு தான்!

 அந்த மாமர சித்தாந்தம் என்று படம் நெடுகிலும் பல நச்!

* செண்ராயன், ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் தமிழ் சினிமாவுக்கு ஒரு கொடை! நல்ல இயக்குனர்கள் கையில் கிடைத்தால், தமிழ் சினிமாவையும் தலை கீழ் நிற்க வைத்து விடுவார்!!

* சுபிக்ஷா தானே அந்த சின்ன ஹீரோயின்? அடடா...என்ன நடிப்பு. அந்த புன்முறுவல் பூக்கும் கண்களும், அந்த சின்ன ஸ்மைலும், தேவதை...

* அதோடு அந்த தின்னிப்பண்டார குழந்தை...என்ன ஒரு உடல்மொழி...அருமை!
அந்தக் குழந்தையிடம் பேசுவதற்கு முன் கொடுக்கப்பட்ட பில்டப் நச்ச்!

* குபேரனின் வாய் படம் முடிந்ததும் அப்படியே மாறி விட்டிருக்குமோ என்று தோன்றுகிறது. அப்படி ஒரு முட்டாள்தனமான [ஐய்யயோ!] உக்கிரம். இறுதியில் அவரின் மூலம் வெளிப்படும் சோகம் சமூகத்தின் பிரதிபலிப்பு.

* கூத்துப்பட்டறை ஆதிராவுக்கு நிறைய வேலை இல்லை, பாஸ்கர் தக்காளி பாத்திரத்துக்கு உகந்த தேர்வு.

* மற்றும் வொயிட், சேட்டு தாதா, டான், தனி திருடன், லோக்கல் தாதா, ஆட்டோ ரவுடி என்று அனைவரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாய் செய்திருக்கிறார்கள்.

* இசை. படத்தின் இசை மிக முக்கியமான ஒரு பங்களிப்பு. பாடல்கள், பின்னணி இசை என்று பின்னி பெடலெடுத்து இருக்கிறார் நடராஜ் சங்கரன்.

* டோனியின் கமெரா அந்த மூடர் கூடத்தில் நாமும் ஒருவராய் உணரச் செய்கிறது.

* படத்தின் ஒரே அலுப்பு தரும் விஷயம் நவீனின் ஒரே வித முகபாவங்களும் அவருடைய டயலாக் டெலிவரியும் தான்! மனிதர் வாயையே திறக்க மாட்டேன் என்கிறார். பரவாயில்லை, இப்படி ஒரு படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்து என்று இத்தனை சாதனைகளை அவர் ஒருவரே செய்ததால் அவரின் நடிப்பை மன்னித்து விடலாம்!

* நவீன் மூடர் கூடமாய் இருக்கும் தமிழ் சினிமா உங்களை மாதிரி இயக்குனர்களால் தான் தெளிய வேண்டும். உங்களை சிவப்புக் கம்பளம் விரித்து வாழ்த்தி வரவேற்கிறோம்!
எந்த ஜாதி மதம் சார்ந்தவராய் இருந்தாலும்
மல ஜலம் அள்ள வைத்து விடுகிறது குழந்தை

****************************************

என் மகள் நாள் முழுவதும்
இறைத்து விளையாடிய
விளையாட்டு சாமான்களை
இரவில் எடுத்து வைக்க வேண்டிய பொறுப்பு
அவ்வப்போது எனக்கு வாய்க்கும்

காலை நீட்டி அமர்ந்த ஒரு சாந்தமான புலி
காபி கரை படிந்த ஒரு இளஞ்சிவப்பு கரடி
கை காலை தனித் தனியாய் அசைக்கும் ஒரு குட்டிக் குரங்கு
இரு இறக்கைகளையும் இழந்த ஒரு பெரிய வானவூர்தி
துண்டு துண்டான ரயில் பாலங்கள், வெவ்வேறு ரயில் பெட்டிகள்
அந்த இரவிலும் அதன் இயல்பு மாறாமல் -
ஒலியெழுப்பும் ஒரு சின்னஞ்சிறு மணி
இப்படி பல விதமான சாமான்கள் அனைத்தையும்
ஒரு பிளாஸ்டிக் டபராவில் எடுத்து வைப்பது 
கடவுள் எல்லாவற்றையும் பூமிக்குள்
எடுத்து வைத்ததை போலிருக்கிறது!

அப்போது குனிந்த தலை...இனி(?)ய காந்தி ஜெயந்தி!


யார் சொன்னது நகைச்சுவை செய்வது தான் கஷ்டம் என்று? யார் சொல்வது ஒருவனை அழுக வைப்பது எளிது, சிரிக்க வைப்பது தான் கஷ்டம் என்று? அப்படி சொல்பவர்களை, தமிழ்நாட்டுக்கு வரச் சொல்லுங்கள். தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி போன்ற படங்களுக்கு அவர்களை அழைத்துப் போவோம். அப்போது புரிந்து கொள்வார்கள் மக்களை சிரிக்க வைப்பது எத்தனை எளிதென்று! [கவனிக்க: மக்களை மட்டும் கவனியுங்கள், அருகில் அமர்ந்திருக்கும் என்னை கவனிக்காதீர்கள். அப்போது என் முகம் ரண கொடூரமாய் இருக்கும்!!] ராஜா ராணி! படத்தில் இரு நாயகர்கள், இரு நாயகிகள். "ராஜாக்கள் ராணிகள்" என்று தான் பேர் வைக்க வேண்டும்? அய்யோ, மொக்கை என்று சொன்னால் காண்டாகி விடுவேன். இப்படி தான் சந்தானமும் பேசுகிறார். அப்போது மட்டும் ஏன் சிரிக்கிறீர்கள்?


நான் போகும்போது படம் போட்டு விட்டார்கள். "அடடா" என்று நினைத்தது, படம் போகப் போக "அப்பாடாவாய்" மாறிப் போனது. ஆர்யாவுக்கும், நயனுக்கும் கல்யாணம். இருவருக்கும் விருப்பமில்லை. திடீரென்று ஒரு நாள் நயனுக்கு வலிப்பு வருகிறது. ஆஸ்பத்திரியில் நயன் தன்னுடைய முன்னால் காதலை ஆர்யாவுக்கு விளக்குகிறார். [தனக்கு, முன்னமேயே ஒரு காதலன் இருந்தான் என்று ஒரு பெண் தன்னுடைய புதுப் புருஷனிடம் சொல்லும் அளவுக்கு நம் நாகரீகம் வளர்ந்து விட்டது என்பது ஒரு ஆறுதல்!!] ஜெய் வருகிறார். அழுகிறார். கெஞ்சுகிறார். கொஞ்சுகிறார். "எங்கேயும் எப்போதும்" படத்தின் "அப்க்ரேடட் வெர்ஷன்" போல் இருக்கிறது. ஒரு வேளை, எதிர்காலத்தில், இவருக்கு கல்யாணமாகி, "இவர் என்னை கொடுமைபடுத்துகிறார்" என்று இவர் மனைவி புகார் கொடுத்தால், தமிழ்நாட்டு மக்கள் "ஜெய் பயந்த சுபாவம் உள்ள பைய்யனாச்சே" என்று சப்போர்ட் செய்தாலும் செய்வார்கள். [சாரி ஜெய், ஒரு கற்பனை தான்! அப்படி எல்லாம் நடக்காது!] தமிழ் சினிமாவில் பெண் காதலில் விழ இரண்டு விதி. நாயகன் ஒன்று வெகுளியாய் இருக்க வேண்டும், இல்லை ரவுடி! அதுவே ஆன் காதலில் விழ ஒரே விதி - பெண் லூசாய் இருக்க வேண்டும். இதில் ஜெய் வெகுளி. நஸ்ரியா லூசு. [எவ்வளவு அழகான லூசு!] கதைக்கு வருகிறேன். அப்பாவின் பயத்தில் நயனை கழட்டி விட்டு விட்டு அமெரிக்க ஓடி விடுகிறார் ஜெய். அங்கு போய் தற்கொலை செய்து கொண்டு விட்டதாக நயனுக்கு செய்தி வருகிறது. கண்களில் நீர் வழிய, நயனின் காதலில் உருகிப் போன ஆர்யா, அவருடன் நட்புக்கரம் நீட்டுகிறார். நயன், நீட்டிய கையை அங்கேயே உடைக்கிறார். ஆர்யா சோகமாய் சந்தானம் கூட தண்ணி அடித்து மட்டையாகிறார். சந்தானம் நயனிடம் ஆர்யாவின் லவ்வை ஒப்பன் செய்கிறார். [அந்த இரவிலும், போதையிலும் செக்ஸி நயனை பார்த்து சந்தானம் தடுமாறவில்லை என்று ஒரு விஷயத்தை நான் எடுத்துக் கொண்டேன்!] நஸ்ரியா அனாதை!! [அடப்பாவிகளா! அட்டு ஃபிகருக்கே ஆறு அண்ணன் தம்பி இருக்கான்டா...எப்பிட்றா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க!! நான் இருக்கேண்டா அவளுக்கு!] ஆர்யா அம்மா, அப்பா இருந்தும் அனாதை. அவர்களை படத்தில் காட்டவேயில்லை. அதோடு, யாருக்கும் அண்ணன் தம்பி இல்லை. ஆர்யா ஒரே பையன். நயன் ஒரே பெண். நஸ்ரியா ஒரே பெண். ஜெய் ஒரே பையன். சந்தானம் ஒரே பையன். ஏன் இப்படி படம் எடுக்கிறார்கள்? கதைக்கு வருகிறேன். நஸ்ரியா ஆர்யா லவ் பண்ணும்போது ஒரு நாள், ஹைவேயில் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டு லூசு மாதிரி ஓடி வருகையில் ஒரு காரில் அடிபட்டு ஷாருக்கான் இந்தி படங்களில் க்ளைமேக்ஸ் காட்சியில் வாயில் ரத்தம் கக்கி சாவது போல் செத்துப் போகிறார். அதை வேகமாய் ஒரு தடவை, மெதுவாய் ஒரு தடவை காட்டி என் கண்ணில் ரத்தம் வர வைத்து விட்டார்கள் [ரேஸ்கல்ஸ்!] இந்தக் கதையை கேட்டு உருகி, ஆர்யா சொன்ன அதே டயலாக்கை சொல்லி நயனும் அவருக்கு நட்புக் கரம் நீட்டுகிறார். முடிவில் ஒரு ட்விஸ்ட். இது தான் ராஜா ராணி படம்.

நான் சிரித்த இரண்டே இடங்கள்.

1. சத்யன் கால் சென்டரில் கஸ்டமர் கேரில் பேசிக் கொண்டிருப்பார். உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு மேடம் என்று ஜொள்ளு விடுவார். அதற்கு பதில் சொல்பவர், "நான் ஆம்பளைங்க" என்பார்.!

2. ஆர்யா தன் வாயை திறந்து பல்லைக் காட்டி நஸ்ரியாவை பார்ப்பதை பார்த்த சந்தானம், "ஏண்டா இப்படி வெளம்பரத்துல வர்ற பால் மாடு பல்லை காட்ற மாதிரி "ஆ" ன்னு பாக்குறே என்பார்.

அவ்வளவு தான். ஜெய் அழுகும்போதேல்லாம் தியேட்டர் அல்லோலகல்லோலபடுகிறது. என்னால் தாங்க முடியவில்லை. எனக்கு கொஞ்சம் நகைச்சுவை உணர்வு கம்மி தானோ என்று நினைத்துக் கொண்டேன். நான் எல்லா படங்களுக்கும் விமர்சனம் எழுதுவதில்லை. [இது விமர்சனமா என்றே ஒரு கேள்வி எனக்கு உண்டு!] ஒன்னு நல்ல படங்களை பாராட்டி எப்போவாவது எழுதுவேன். இல்லை கெட்ட படங்களை திட்டி அடிக்கடி எழுதுவேன். பல படங்களை திட்டக் கூடத் தகுதி இல்லை என்று எழுதாமல் விட்டிருக்கிறேன். இந்தப் படம் கடைசி ரகம் தான். இருந்தாலும், இந்தப் படத்தை பற்றி நான் இங்கு எழுத ஒரு காரணம் இருக்கிறது. அது என்னன்னா...அப்புறம் நான் எதைத் தான் என் ப்ளாக்ல போஸ்டா போடறது!