ஒரு மழை நாள்!

ஜன்னலின் வழியே மெல்லிய சாரலோடு ஒரு குளிர் காற்று என் முகத்திலறைந்தது..கையில் சூடான coffee! அடிக்கடி பெயர் மறந்து போகும் வடநாட்டுக் கலைஞரின் சிதார் இசை டேப்பிலிருந்து காற்றில் தவழ்ந்தது. மழையின் பேரிரைச்சலுடன் அந்த சிதார் இசை கலந்தது, வெகு நாட்களுக்குப் பிறகு ஒன்று கூடிய இளம் காதலரை எனக்கு ஞாபகப் படுத்தியது. அது அந்த சூழலை மேலும் ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது..நான் நாற்காலியை ஆட்டிக் கொண்டே ஜன்னலின் வழியே மழை நனைக்கும் என் தெருவை ரசித்துக் கொண்டிருந்தேன்! "இங்கே நான் சுத்தம் செய்தால் உண்டு" என்று பொருமிக் கொண்டே வீட்டை சுத்தம் செய்யும் அம்மாவைப் போல் மழை பேரிரைச்சலுடன் தெருவை சுத்தம் செய்து கொண்டிருந்தது.. என் வீட்டுக்கு சற்று தள்ளி ஒரு மார்க்கெட் இருப்பதால் ஜன்னல் வழியே வருவோர் போவோரை வேடிக்கை பார்ப்பதே எனக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு...

எத்தனை விதமான் மனிதர்கள்? ஒருவர் கூட மற்றவரின் சாயலில் இல்லையே..நான் பார்த்த வரை, தனியே செல்லும் பெரும்பாலோர் தனக்குத் தானே பேசிக் கொண்டே போகிறார்கள். ஒரு வேளை அவர்கள் பாடிக் கொண்டே போகிறார்களோ? ஜன்னலிலிருந்து பார்ப்பதால் எனக்கு அப்படித் தெரிகிறதோ என்னவோ? ஜன்னலில் நான் வேடிக்கை பார்க்க உட்கார்ந்து விட்டால் நான் கடவுள் என்று எனக்குத் தோன்றும். ஆண்டவன் நம்மை படைத்து விட்டு மேலே இருந்து நம்மைப் பார்த்துக் கொண்டு இருப்பதைப் போல், அவர்களுக்குத் தெரியாமல் நான் அவர்களைப் பார்த்து கொண்டிருக்கிறேன்..கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு சிலர் மேலே பார்த்து கடவுளே என்பது போல் ஒன்றிரண்டு பேர் நான் பார்ப்பதை பார்ப்பார்கள். அவ்வளவு தான்..இந்த உவமைக்கு மிகப் பொருத்தமான் இடம் மொட்டை மாடி தான்!!

ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் சிரிக்கிறார்கள் என்பது என் தாழ்மையான கருத்து..2 பெண்கள் சேர்ந்து போனால் என் ஜன்னலைக் கடப்பதற்குள் அவர்கள் இரண்டு முறை "கழுக்" கென்று சிரித்து விடுவார்கள்! "இன்னைக்கு என்னடி லேட்டு" என்று கேட்டு விட்டு சிரிப்பார்களோ? எப்படியோ மழை, மழலை, கவிதை, தென்றல், இயற்கை, நிலவு இந்த வரிசையில் வருவது பெண்களின் சிரிப்பு! அது கவித்துவமானது..இந்த சிதார் இசைக்கும் அவர்களின் குறுநகை எழுப்பும் சத்தத்திற்கும் நிறைய வித்தியாசம் இல்லை என்றே நினைக்கிறேன்.

குனிந்து மேலே பார்த்தேன்..வானம் எதிர் வீட்டுக் கண்ணன் வீட்டின் மொட்டை மாடியில் முடிந்து விடுவதைப் போலிருப்பதை நினைத்து எனக்குள் சிரித்துக் கொண்டேன்..அதற்கு வானம் ஒரு இடிச்சிரிப்பு சிரித்து "அடேய் மடையா..நீ ஒரு வட்டத்திற்குள்ளிருந்து என்னைக் காண்கிறாய், நான் விசாலமானவன் என்று உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை" என்றது..மேலும் "கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு" ஸ்டைலில் மேகங்கள் கங்கனம் கட்டிக் கொண்டு மழை ஊற்றிக் கொண்டிருந்தது..

தெருவில் செல்வோரில் பாதிக்கு மேற்பட்டோருக்கு மழையை பிடிக்கவில்லை..சிலர் புலம்பிக் கொண்டும், சிலர் முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொண்டும் சென்று கொண்டிருந்தனர்..குழந்தைகள் மட்டும் தான் மழையை அனுபவிப்பதாகத் தோன்றியது. அவர்களின் முகத்தில் தான் மழையைக் கண்டதும் உற்சாகம் தெரிகிறது. மனிதன் தான் வளர்ந்ததும் எவ்வளவு மாறி விடுகிறான்!! எத்தனை தேவை இல்லாத பயங்கள் அவனைத் தொற்றிக் கொள்கிறது..மழையைக் கண்டதும் இவர்கள் நினைவுக்கு முதலில் வருவது VICKS, D-COLD தானோ? இந்தக் கவலையால் குழந்தைகளையும் இவர்கள் நனைய விடுவதில்லை.."டேய் வாடா இங்கே..தலை துவட்டு, அப்புறம் சளி புடுச்சுடும்" குழந்தைகளைக் கண்டால் எல்லோருக்கும் பிடிக்கும்..சளிக்கும் பிடிக்கிறது! எனக்குத் தெரிந்து மழையில் நனைந்ததால் இதுவரை எனக்கு சளி பிடித்ததில்லை..இன்றும் வழக்கம் போல மழையில் தொப்பலாய் நனைந்து தான் வந்தேன்..அம்மாவும் வழக்கம் போல அர்ச்சனை செய்தாள்! வாழ்வில் இப்படி எத்தனையோ எழுதாத சட்டங்கள் எல்லா வீட்டிலும் இருக்கத் தான் செய்கிறது.

மழையைப் பிடிக்காதவர்கள் அதனுடன் சமாதானம் பேசாமல் ஒரு கருப்புக் குடையுடன் மழையை எதிர்த்தால், மழை எப்படி சமாதானமடையும் சொல்லுங்கள்? "மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம், ஒரு கருப்புக் கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்!" என்ற வைரமுத்துவின் கவிதை நினைவுக்கு வந்தது.. மனுஷன் ஒன்னு புதுசா யோசிக்க விட மாட்றாரே..எல்லாத்தையும் இப்படி யோசிச்சி எழுதி வச்சுட்டாரேன்னு அழுத்துக் கொண்டேன்! அட சிதார் இசை நின்னுருச்சே..அதுக்குள்ள "A" side முடிஞ்சுருச்சா என்ன? சரி நான் போய் "B" side வச்சுட்டு வந்த்ர்றேன்! no no..நான் வர்றதுக்குள்ள நீங்க இந்த நாற்காலியிலே உட்கார்ந்துட்டா? idea!! இங்க என்னைத் தவிர யாராவது உட்கார்ந்தா ஆயிரம் பாவம்!! டஸ் புஸ்...[க்ராஸ் போட்டுக் கொண்டே!!]

இளவரசியாரின் blog பார்த்தேன்..அட நம்மளும் படம் வரைவோமே, அதை ஏன் இவங்களை மாதிரி நாமளும் போடக்கூடாதுன்னு தோனுச்சு, அதன் விளைவு தான் இது...நான் எழுதியவைகளிலிருந்து என் கையெழுத்து நன்றாய் இருந்ததை நீங்கள் பார்த்தீர்கள்! [டேய்
[computer ல எல்லார் கையெழுத்தும் நல்லா தா ன்டா இருக்கும்..இந்த dialogeம் friend கிட்ட இருந்து சுட்டது தான்..ஹிஹி] இன்று இங்கே நான் வரைந்த படங்களில் சிலவற்றைப் பாருங்கள்!

குறிப்பு: இது அத்தனையும் computer ல் Flash, Photoshop ல் வரைந்த படங்கள்..DIGITAL ART ம்பாங்களே அதே தான்..

Mickey

colorfulla இருக்கா?

Scenery

எனக்கு மிகவும் பிடித்த ஓவியம்..

Mummy

என்ன ஒன்னும் புரியலையா? ஒருத்தி தன் கைல குழந்தை வச்சுட்டு நிக்கிறா, நான் வரைஞ்ச லட்சணம் அப்படி!

SadLady

online ல் picasso ஓவியங்களைப் பார்த்து copy அடித்தேன்..ஏதோ ஒரு சின்ன குழந்தை கிறுக்கியதைப் போலிருக்கிறது அந்த ஓவியம்! picasso இப்படிப் பட்ட
ஓவியங்களையும் வரைந்திருக்கிறார்!

Head-Picasso

இது எனக்கு மிகவும் பிடித்த ஓவியம்..ofcourse copy தான்..

SisterWood


எப்படி? படம் காட்டிட்டோம்ல?


சமீபத்தில் அழகிய தீயே என்று ஒரு கவிதை பார்த்தேன்! ஆமாம், அது படம் அல்ல, கவிதை தான்..இயல்பான கவிதை.

காதல் எப்படி நமக்குத் தெரியாமல் உள்ளே சென்று ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ அதே போல் தான் இந்தப் படமும் என்னுள் எனக்கே தெரியாமல் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது!

நான் இங்கு படத்தைப் பற்றி பேசப் போவதில்லை..அதனால் எனக்கு விளைந்த விளைவுகளால் நீங்கள் படத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்!

Disclaimers: இதே போன்று உங்களுக்கும் ஆகுமென்று கட்டாயமில்லை..நான் கொஞ்சம் over தான்..

படம் பார்த்த மறுநாள் வண்டியில் office சென்று கொண்டிருந்தேன்..என் தம்பியை bus stop ல் விட்டுச் செல்வது வழக்கம். படத்தைப் பற்றி யோசித்துக் கொண்டே stop ஐ கடந்து போய்க் கொண்டிருந்தேன்..அவன் பின்னால் உட்கார்ந்து கதறிக் கொண்டிருந்தான்!! சுய நினைவு திரும்பி அவனை இறக்கி விட்டதும், என்னை கை நீட்டி ஏதோ சொன்னான்..நல்லவேளை helmet மாட்டி இருந்ததால் சரியாய் காதில் விழவில்லை!

இன்னொருமுறை வேறு வண்டியில் உட்கார்ந்து கொண்டு சாவி ஏன் உள்ளே போக மாட்டேங்குது என்று முழிக்கும் போது, டேய் நம்ம வண்டி அங்கே இருக்கு, யாராவது பாத்துரப் போறான் எறங்குடா என்றான்.................வேறு யார் சாட்சாத் என் தம்பி தான்..

தம்பியுடையான் படைக்கஞ்சான்!

அந்தப் படம் என்னுள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்திற்கு இந்த இரண்டு உதாரணம் போதுமென்று நினைக்கிறேன்! இனி நீங்களே படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன் போல்..மீண்டும் ஒரு sudden fiction கதை..

சூலமங்களம் சகோதரிகள் பக்கத்து கோயிலிலிருந்து தலையில் தட்டி எழுப்பினார்கள்! விடிந்து விட்டதா? அதற்குள்ளா? இப்போ தானே படுத்தேன்..திடீரென்று
நேத்து ராத்திரி நடந்தது ஞாபகம் வந்தது!! நினைக்கவே குஜாலா இருக்கே..எப்படி நான் இப்படி எல்லாம் பண்ணேன்? நான் சாதுவாச்சே..நேத்து ராத்திரி நீ
பண்ண கூத்தைப் பாத்தா உன்னை யாராவது சாதுன்னு சொல்வாங்களாடா? என்று மனசாட்சி திட்டியது..

மனசாட்சி அன்னாத்தே, இதெல்லாம் உன்னை பக்கத்துல வச்சுட்டு செய்ய முடியாது..நீ கொஞ்சம் ஓரங்கட்டிரு, ஆமாம் என்றேன்!

எல்லாம் அவன் பண்ண வேலை, அவனுக்கு அது தான் வேலையே..தெய்வாதீனமா எனக்கு இப்படி ஒரு friend..திடீர்னு நேத்து evening phone பண்ணி டேய்,
ரொம்ப நாளா ஏங்கிகினு கிடந்தியே, இன்னைக்கு night ஒரு 12:30 க்கு அப்பால அத்தெ ஓட்டிட்டு வர்றேன்..உன்னோட தாகம் எல்லாம் இன்னைக்கோட close
இன்னா? என்றான்..அவனும் அவன் தமிழும்!! எனக்கு தலை கால் புரியவில்லை...office இருந்து சீக்கிரமே கிளம்பி, எல்லாம் ரெடி பண்ணனும்ல? ஹிஹி..

அவனுக்காக wait பண்ணி பண்ணி தூங்கி போயிட்டேன்..கதவு தட்டும் சத்தம்..தூக்கி வாரி போட்டது..அவன் தான்..என்னைப் பார்த்து குறும்பாய் சிரித்தான்..கீழே
தான் நிக்குது..ஜமாய்னான்!!! அப்பாடா, ஒரு 1 மணி நேரம் பெண்டு கழண்ட்ருச்சுப்பா....

சிகெரட் கையை சுட்டது, oh flashback முடிஞ்சுட்டதா என்று பாத்ரூம் நோக்கிப் போனேன்! மனசில் இன்னும் பட்டாம்பூச்சி பறந்தது!!

பாத்ரூமைத் திறந்தேன்..எல்லாவற்றிலும் தண்ணீர் நிரம்பி வழிந்தது!! அந்த ஆண்டவானாப் பாத்து தான் எனக்கு தண்ணி லாரி ஓட்றவனை friend ஆ
அனுப்சிருக்காரு என்று ஒரு கும்பிடு போட்டு, "குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா?" ஹிஹி..குஷி வந்துட்டா நான் பாடுவேன்.ஹிஹிஹி...

ஒரு நல்ல கவிதை எழுத
முயற்சிக்கிறேன் - நான்
ஒன்பதாவது படிக்கும் போதிலிருந்து!

கவிதை எழுத சிறந்த களங்கள்
நிலவும், பெண்ணும்!

கவிதையும் பெண்ணும் ஒன்று!
நாம் கேட்கும் போது
அலட்டிக் கொள்வதும்
நாம் கேட்காத போது
அள்ளித் தருவதும்!

நல்ல கவிதை இல்லை என்று
நான் கிழித்துப் போட்டவைகளை
சேர்த்து வைத்திருந்தால்...

எப்படி கவிதை எழுதக் கூடாது
என்று எட்டாங்கிளாஸ்
பாடமாக்கியிருக்கலாம்!

என்னுடைய கவிதைகளை
படித்த தோழிகள், நான்
யாரையோ காதலிக்கிறேனென்றார்கள்!

இல்லை என்று மறுத்தும்...
என்னை யாரும்
காதலிக்கவில்லை!

சரியான வார்த்தைகள்
புணர்வதில் உருவாவது
ஒரு நல்ல கவிதை

நல்ல கவிதைகளை
படிக்கும் போது
வார்த்தைகள் மீது
எனக்கு கோபம் வரும்

வார்த்தைகள் எல்லோர்
பேச்சையும் கேட்பதில்லை
அது மகுடி ஊதும் பாம்பாட்டியிடம்
ஆடும் நாகம் போல் நல்ல கவிஞனிடமே
இசைந்து கொடுக்கிறது!

ஒரு நல்ல கவிதை எழுத
முயற்சிக்கிறேன் - நான்
ஒன்பதாவது படிக்கும் போதிலிருந்து!

என் அழகு காணாமல்
இன்னும் தூங்குகிறார்களே
என்று முகம் சிவந்த வானம்

இதோ இதோ என் வாழ்வு
முடியப் போகிறது என்று
ஏங்கும் பனித்துளி

இதோ பூக்கப் போகிறேன்
என்று கண்ணாமூச்சி
காட்டும் சாலையோர பூக்கள்

carbon monoxide கலக்காத
கற்பு நெறி மாறாத காற்று

சோம்பல் சுருக்கி
சிறகு விரித்து
கூட்டம் கூட்டமாய்
விதவிதமான கோணங்களில்
இரை தேடிப்
பறக்கும் பறவைகள்

ஈரத்தலையை துணியால்
சுற்றி, முகமெலாம் மஞ்சள் பூசி
நெற்றி நிறைய பொட்டிட்டு
மாக்கோலமிடும் என்குலப் பெண்கள்

இத்தனை சுகங்களையும்
ஈடு கட்டிக் கொள்கிறது
இந்த சண்டாளத் தூக்கம்!


silsila என்று ஒரு ஹிந்தி படம்..அமிதாப் பச்சன் நடித்தது!

அதில் ஒரு அற்புதமான பாடலை ஜாவேத் அக்தர் இயற்றியுள்ளார்! அந்த பாடலின் இடையில் அமிதாப்பின் குரலில் கீழ்கண்ட கவிதை ஒலிக்கும்! Just Beautiful!!ஹிந்தியிலிருந்ததை எனக்குத் தெரிந்த வரை மொழி பெயர்த்துள்ளேன்! தவறிருந்தால், நீங்கள் எடுத்துரைத்தால் திருத்திக் கொள்வேன்!!

இதோ அந்தக் கவிதை...

நானும் என் தனிமை அடிக்கடி
இப்படி பேசிக் கொள்வதுண்டு!

நீ இங்கிருந்தால் எப்படி இருக்கும்
நீ இதைச் சொல்வாய்
நீ அதைச் சொல்வாய்

நீ இந்தப் பேச்சைக் கேட்டு ஆச்சிரியப்படுவாய்
நீ அந்தப் பேச்சைக் கேட்டு எவ்வளவு சிரிப்பாய்

நீ இங்கிருந்தால் இது நடந்திருக்கலாம்
நீ இங்கிருந்தால் அது நடந்திருக்கலாம்

நானும் என் தனிமையும் அடிக்கடி
இப்படி பேசிக் கொள்வதுண்டு

இது இரவா - அல்லது
உன் கூந்தல் விரிந்து கிடக்கிறதா?

இது நிலாவெளிச்சமா - அல்லது
உன் பார்வைகளால்
என் இரவு சலவை
செய்யப்பட்டுள்ளதா?

இது நிலவா - அல்லது
உன் வளையலா?

இது நட்சத்திரங்களா - அல்லது
உன் முந்தானையா?

காற்றின் அலையா - அல்லது
உன் மேனியின் நறுமணமா?

இது சருகுகளின் ஓசையானது
நீ ஏதாவது முனுமுனுத்ததுபோலுள்ளது

எத்தனை நாட்களாய் நான்
இதைப் பற்றி யோசிக்கிறேன்
யாருக்கும் தெரியாமல்

எனக்கும் தெரியும் - நீ இல்லை
நீ எங்கும் இல்லை என்று!

ஆனால் இந்த இதயம் சொல்கிறது
நீ இங்கு தான் இருக்கிறாய்
இங்கு எங்கோ தான் இருக்கிறாய்

இதே நிலை இங்கும் உள்ளது
அங்கும் உள்ளது

தனிமையான இரவு - இங்கும் உள்ளது
அங்கும் உள்ளது

சொல்வதற்கு நிறைய உள்ளது - ஆனால்
யாரிடம் சொல்வேன்!

எத்தனை காலம் தான் - இப்படி
அமைதியாய் இருப்பது
இல்லை, இந்த அமைதியை சகிப்பது

இதயம் சொல்கிறது - உலகத்தின்
அத்தனை தடைகளையும்
கலைவோம்

உனக்கும் எனக்கும் இடையில்
உள்ள சுவரை இன்று உடைப்போம்

ஏன் இதயத்தில் வைத்து வெம்ப
வேண்டும்..

எல்லோருக்கும் சொல்வோம் - ஆம்
நாம் காதல் வசப்பட்டுள்ளோம்..
காதல் வசப்பட்டுள்ளோம்
காதல்...!

இப்போது இதே விஷயம் - இங்கும்
உள்ளது அங்கும் உள்ளது!