வானம் மேகமூட்டமாய் இருக்கிறதென்று
நல்ல மழை பெய்கிறது என்று
சுடும் வெயிலில் ஒதுங்க மர நிழல் கிடைத்தது என்று
வேலைப் பளு அதிகம் என்று
பொழுதே போகவில்லை என்று
வீட்டில் பிரச்சனை என்று
வயிறு பசிக்கிறது என்று
பசிக்கவேயில்லை என்று
துக்கம் தாளவில்லை என்று
சந்தோஷம் சம்பவித்ததென்று
நண்பன் அழைத்தான் என்று
நல்ல அசைவச் சாப்பாடு என்று
மென்தொஸ் ஒன்று உபரி என்று
மனைவி வெளியூர் போய் விட்டாள் என்று,
புகை பிடிப்பவர்களுக்கு - எப்படியோ
கிடைத்து விடுகிறது புகை பிடிப்பதற்கான ஒரு தருணம்!

இது விமர்சனம் அல்ல! அவன் இவன் படத்தைப் பற்றி என்னுடைய ஒரு (ஒன்றரை!) பார்வை!

என்ன தான் சைக்கோத் தனமாக பாலாவின் முந்தைய படங்கள் இருந்தாலும், அவரின் படங்களில் வரும் அவருக்கே உரிய அக்மார்க் நக்கல்/எள்ளல் எனக்கு மிகவும் பிடிக்கும். உதாரணமாக:

சேது: மாமி, உங்க மயில் குட்டி போட்டா நேக்கும் ஒண்ணு தர்றேளா?
நந்தா: ந்தா, நீ எல்லாம் ஒரு டவுசர்/கிவுசர்னு மாட்டிட்டு வந்தா என்ன? அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்?
பிதாமகன்: எதுக்குடி ஃபைவ் ஹண்ட்ரட்? ம்ம்...நீ கக்கூசுக்கு போனதுக்கு!
நான் கடவுள்: [வாக்கி டாக்கியை காட்டி] பந்த் கர்!

அதே போல் இதிலும் சில நக்கல்கள் ஆங்காங்கே [அதாவது எங்கோ ஒரு ஆங்காங்கே!] தெறிக்கின்றன...

அப்பாவின் திருவளையாடல்களை பக்தர்களிடம் வைத்துக் கொள்ளக் கூடாதா? என்னிடமும் காட்ட வேண்டுமா?
ஏன்டா பக்தர்கள் மட்டும் என்ன இளிச்சவாயங்களா?

பக்தா உன் தவத்தை கண்டு மெச்சினோம்! வேண்டிய வரத்தை கேள்!
ஏன்டா, அவனுக்கு என்ன வரம் வேணும்னு தெரியலை, நீ என்ன சாமி?

ஹி இஸ் எ லையர்!
என்ன லாயரா? இவன் எப்போ படிச்சி லாயர் ஆனான்?

அவ்வளவு தான்! அவ்வளவே தான் அவன்-இவன்!

பத்திரிக்கையாளர்கள், பாலு மகேந்திரா போன்றோர்கள் தொடர்ந்து விமர்சித்து பாலாவை ஒரு வழியாய் அவருடைய அரக்கத்தனமான சினிமாவிலிருந்து மீட்டு விட்டார்கள் என்று நினைத்து சந்தோஷப்பட்டேன். அனால் அதுவே வினையாய் போய் விட்டது! இனிமேல் நான் சினிமாக்காரர்களை நம்பப் போவதில்லை!! படம் எடுக்க ஆரம்பிக்கும்போது முழு நீள காமெடி என்றார்கள். படம் எடுத்து முடிய முடிய கடைசி பதினைந்து நிமிடம் வரை காமெடி தான் என்றார்கள். விஷால் வேறு பேட்டிகளில் எல்லாம் நீங்கள் எதிர்ப்பார்க்கும் பாலா படம் போல் இது இருக்காது, உங்களுக்கு பாலா ஒரு ஷாக் கொடுக்க போகிறார்! நான் ஒன்றரை கண் வைத்தது [மனிதர் அநியாயத்துக்கு உழைத்திருக்கிறார்! ஆனால்....] எல்லாம் சும்மா கெட்டப் சேஞ் என்பதற்காக அல்ல, அது எதற்கு என்று கிளைமேக்சில் தெரியும் என்று ஏகத்துக்கு அள்ளி விட்டார்! அக்மார்க் சினிமா பொய்! 

பசுத்தோல் போர்த்திய புலி போல் காமெடி தடவிய (என்று சொன்னா) வழக்கமான பாலா படம் தான் அவன்-இவன்! நான் நினைக்கிறேன், பாலா மட்டும் பாலுமகேந்திராவிடம் சேர்ந்து ஒரு இயக்குனர் ஆகியிருக்காவிட்டால், நிச்சயமாய் ஆட்டோ ஷங்கர் மாதிரி ஒரு சீரியல் கில்லர் ஆகியிருப்பார்! அவனை போல் இல்லாமல் இவர் அநியாயம் செய்பவர்களை அடித்தே கொன்று ஒரு பெரிய பரபரப்பை உண்டு பண்ணியிருக்கக்கூடும்! மனதில் அத்தனை கொலை வெறி இருக்கிறது! அதனால் தான் படத்தின் கலைஞர்களையும் படாத பாடு படுத்துகிறார் என்று தோன்றுகிறது! சினிமா ஃபைட் எல்லாம் கிடையாது! அடி ஒவ்வொன்னும் நிஜம்மா விழனும்!! ஆமா...அப்படி செய்யும் போது அவருக்கு ஒரு மகிழ்ச்சி, திருப்தி ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறேன். குழந்தைகளை பாலா படத்திற்கு கூட்டிப் போகக் கூடாது! எப்போது யாரை அம்மணமாய் காட்டுவார், யார் தலையில் யார் கல்லை போட்டு கொல்வார்கள் என்று ஒன்றும் சொல்ல முடிவதில்லை! பாலிவுட்டில் அமீர் கான் என்று ஒரு மனிதர், இல்லை கலைஞன்! நிஜமான கலைஞன்!! ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், அமீர் கான் தயாரிப்பில் லகானில் தொடங்கி தோபி கட் வரை எல்லாமே நல்ல தரமான குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படங்கள்! அவர் தற்போது "டெல்லி பெல்லி" என்று ஒரு படத்தை தயாரித்திருக்கிறார்! அதனுடைய Tag line என்ன தெரியுமா? "SHIT HAPPENS!"
இது ஒரு காமெடி படம்! ஆனாலும், படத்தில் பல பச்சை பச்சையான மோசமான வசனங்கள் வருகிறது! தயாரிப்பாளராய் அவர் இந்தப் படத்தை விளம்பரப்படுத்த செல்லும் இடமெல்லாம் இது குழந்தைகளுக்கான, குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமல்ல என்று விடாமல் கூறிக் கொண்டே இருக்கிறார்! நல்ல சுத்தமான படத்தை விரும்புபவர்கள் இதை பார்க்க முடியாது என்று எச்சரிக்கிறார்! பாலா எங்கே இப்படி எல்லாம் சொல்றது, அவர் பேசுறதே, நன்றி வணக்கம் தான்! சரி விடுங்க...எனக்கு அமீர் கான் நேர்மை புடிச்சுருக்கு!

படத்தை பொறுத்தவரை நான் மேல் சொன்னா படி பாலாவின் கிளிஷேக்கள் நிரம்பிய வழக்கமான ஒரு தமிழ் சினிமா தான்! அதாவது கீழ் வரும் கிளிஷேக்கள்:

ஒரு முரட்டு ஹீரோ
ஒரு அழுக்கான பெண் [நாம் நினைத்தே பார்க்க முடியாத ஒரு நல்ல அழகான நடிகையை தேர்ந்தெடுத்து அவளை அழுக்காக்கி, பீடி குடிக்க, பீடா போட, தண்ணி அடிக்க விடுவார்!]
ஒரு சிவப்பான ஒல்லிபிச்சான் லூசு ஹீரோயின் [என்ன கேரக்டராய் இருந்தாலும் ஹீரோவை காதலிக்கும் இந்த லூசு!]
ஒரு வாட்டசாட்டமான அல்லது அழுக்கான வில்லன்
அசிங்க அசிங்கமாய் பேச வேண்டியது! [யதார்த்தம்?]
கடைசியில் காட்டில், மேட்டில், சாணியில், சகதியில் என்று முட்டி மோதி ஒரு ஃபைட்!

அவ்வளவு தான்...

அப்புறம், மிகவும் நெருங்கிய நட்பு/உறவுள்ளவரை வில்லன் கொன்று விடுவான். பாலாவின் வழக்கப் படி, ஹீரோ மிருகமாய் மாறி அவரை அடித்தோ, கடித்தோ, தலையில் கல்லை போட்டோ, உயிருடன் கொளுத்தியோ கொன்று விட்டு ஸ்லோ மோஷனில் நடந்து வருவான்! பாலா படம் என்று டைட்டில் போட்டு படத்தை முடித்து விடுவார்கள்! அதே கதை தான் இதுவும்.

ஏதோ ஒரு பேட்டியில் படித்தேன். பாலா அடிக்கடி இரவு நேரங்களில் வாழ்க்கையை உணர [?] சுடு காட்டுக்குச் சென்று வருவாராம்! இப்போது அவருக்கு மகள் பிறந்த பிறகு அங்கு போவதில்லையாம்! இனிமேலாவது அவருக்கு வாழ்க்கையில், அதன் அழகியல்களில் நம்பிக்கை வரும் என்றும் அதுவே, அவரின் படைப்புகளில் பிரதிபலிக்கும் என்றும் நம்புவோமாக!