இன்று காலை ஏழு இருபது டபுள் டெக்கர் ரயிலில் என் குடும்பம் பெங்களூர் பயணம். ரயிலேற்றிவிட சென்றிருந்தேன். [ஒரு பதிவுக்காச்சு!] சென்ட்ரல் எதிரில் இருக்கும் பாலத்தில் இருந்து கீழே இறங்கும்போதே ஆரம்பித்து விடுகிறது...கார்களின் அணிவகுப்பு. சென்ட்ரல் மாதிரி ஒரு குப்பை ரயில் நிலையம் உலகத்திலேயே எங்கும் இருக்காது. நாளுக்கு லட்சக்கணக்கில் பயணிகள் வந்து போகும் இடம் கந்தரகோலமாய் இருக்கிறது. பாலத்திலிருந்து இறங்கும் கார்கள் சிக்னலில் வலது பக்கம் திரும்பி சிக்னலை தாண்டியதும் இடது புறம் திரும்ப வேண்டும். சென்ட்ரலில் இருந்து கிளம்பும் பஸ்கள் ரோட்டுக்கு வருவதற்கு வலது பக்கம் வருகிறது. அவ்வளவு தான், முட்டி மோதிக் கொண்டு ஒரே இரைச்சல். எதிரில் பார்த்தால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை! இத்தனை பெரிய ரயில் நிலையத்திற்கு எதிரில் இத்தனை பெரிய ஆஸ்பத்திரியை கட்ட எந்த புண்ணியவான் யோசித்தானோ! வெள்ளைக்காரன் காலத்தில் கட்டி இருக்கலாம், அப்போது வாகனங்கள் குறைவு. அவன் தேவையில்லாமல் ஹாரன் அடிக்க மாட்டான். ஆனால் நம் மக்கள்? ஆளே இல்லாத ரோட்டிலேயே தனக்கு பிடித்த பாட்டையே ஹாரனாய் அடித்துக் கொண்டே போவான், இந்த இடத்தில் கேட்கவா வேண்டும். நோயாளிகள் பாவம்!!

எங்கள் கால் டாக்சி ஒரு வழியாய் இடது புறம் திரும்பி நிலையத்தில் நுழைவதற்காக கார்களின் வரிசையில் நின்றது. ஏழு இருபதுக்கு ரயில். மணி ஆறே முக்கால்! என் அப்பா ரயில் ஏறுவதென்றால் முதல் நாளிலிருந்தே டென்ஷன் ஆகிவிடுவார். இப்போது கேட்க வேண்டுமா? அந்த நுழைவாயிலில் நின்று கொண்டு இருந்த ஒரு டிராஃபிக் கான்ஸ்டபிள்  இங்கேயே இறங்கிக்குங்க என்று வரும் வண்டிகளை எல்லாம் கையசைத்து  அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். ஆறு பெரிய லக்கேஜ்கள், இரு வயதானவர்கள், ஒரு பெண், ஒரு குழந்தையோடு எப்படி ஐயா இறங்கி நடப்பது? நல்ல வேலை எங்களிடம் சொல்லவில்லை. எங்கள் ஓட்டுனர் சாமர்த்தியமாய் உள்ளே நுழைந்து படாத பாடு பட்டு ஒரு இடத்தை பிடித்து நிறுத்தினார். வெகு நேரம் நிறுத்தினால் அபராதம் போடுவார்களாம். எளிதாய் காரை நிறுத்த இடம் இருந்து, லக்கேஜ்களை இறக்கி போக முடிந்தால், நான் ஏனைய்யா அங்கே நிற்கப் போகிறேன்? மக்களுக்கு எந்த வித வசதியும் செய்து கொடுக்காமல் அபராதம் வேறு வசூலிக்கும் நாடு நம் நாடு தான்!  கடகடவென இறங்கி லக்கேஜ்களை அடுக்கி விட்டு நான் நடைமேடை டிக்கட் வாங்கச் சென்றேன். இன்னும் இந்த நடைமேடை சீட்டு ஏன் வாங்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. சென்ட்ரலில் இது வரை செக் செய்து நான் பார்த்ததேயில்லை. இருந்தும், கடமை!! சீட்டை வாங்கிக் கொண்டு லக்கேஜ்களுடன் உள்ளே நுழைந்தோம்.

உள்ளே ஒரு நாடே இருந்தது. [கவனிக்க ஊர் இல்லை, நாடு!] இத்தனை பேரா இன்று பிரயாணப்பட்டிருக்கிறார்கள்? இதே நேரம் தான் ஒரு பெரிய கூட்டம் சாலையில் அலை மோதுகிறது, இதே நேரம் தான் ஒரு பெரிய கூட்டம் கவுந்தடித்துத் தூங்குகிறது! இன்னும் எத்தனை பேரடா இருக்கீங்க நாட்ல? டிஸ்ப்ளேயில் வழக்கம் போல் எல்லா ரயிலின் விவரங்களையும் பார்த்த பிறகு, நம் ரயில் இங்கிருந்து தான் கிளம்புகிறதா? இன்று தானா? இந்த நேரம் தானா? என்று அடிப்படை கேள்விகள் எழுந்து டிக்கட்டை சரி பார்த்த பிறகு மெதுவாய் ஒரு ஓரமாய் அதன் விவரம் ஓடியது. ஏழாவது நடைமேடை. அப்பாடா! அந்தக் கூட்டத்தில் முட்டி மோதி, இழுத்துக் கொண்டு செல்லும் சக்கரப் பெட்டி ஒரு புறம் போக, நான் ஒரு புறம் போக, அதையும் தாண்டிச் செல்லும் கூட்டம்! இத்தனை கூட்டம் ரயிலை பிடிக்க முந்தியடித்துக் கொண்டு ஓடும் இடத்தில் நட்ட நடுவில், நடு சென்டரில், ரயிலிலிருந்து இறங்கும் சரக்குகளை வைத்துக் கொண்டு கணக்கு பார்த்து கொண்டிருக்கிறார்கள். அந்த சரக்குகளை ஏற்றும் வண்டி ரயிலை விட பெரிதாய் இருக்கிறது. வண்டி ஒரு இடத்தில் போகிறது, அதை இழுத்துக் கொண்டு போகும் ஆள் எங்கோ இருக்கிறான். அவனுக்கு தான் மட்டும் தான் அந்த நடைமேடையில் இருப்பதாய் ஒரு பிரமை. என்ன ஒரு செளகரியம். முருகா....

ஒரு வழியாய் ஏழாவது நடை மேடை வந்து சேர்ந்தோம். நான் நினைத்தது போல் எங்கள் பெட்டி எஞ்சினுக்கு பக்கத்தில் இருந்தது. எஞ்சின் தான் பெங்களூருக்கு அருகில் இருந்தது! வந்தோம், சிறிது நடந்தோம், ரயிலில் ஏறினோம் என்று எனக்கு இருந்ததேயில்லை. நல்ல பேரு வச்சான், நடை மேடை என்று, நடந்தோம் நடந்தோம்...எல்லா பெட்டிகளையும் கடந்தால் கடைசி பெட்டி நம் பெட்டி! டபுள் டெக்கர் ரயில் [டபுள் டெக்கர் தமிழில் இரண்டடுக்கா?]...அட! வெளித்தோற்றம் அருமை. சிவப்பும் மஞ்சளும் கலந்து கட்டி ஒரு கலரில் பார்க்க ஜோராய் இருக்கிறது. ரயில் முழுவதும் குளு குளு வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் உள்ளே? ஒன்று கீழ் தளம், இன்னொன்று மேல் தளம். உள்ளே நான் ஒருவனாய் போகவே கஷ்டமாய் இருக்கிறது, இதில் லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு...இதில் எதிரில் வரும் ஆட்கள்! இடப்பற்றாக்குறை மிகுந்து அந்த இடமே ஒரே டஞ்சன்! ஒன்லி சீட்டிங். ஐந்தரை அடி உள்ள எங்களுக்கே முன்னால் சீட் முழங்காலில் இடிக்கிறது. ஆறு ஆடி ஆட்கள் ஒழிந்தார்கள். லக்கேஜ்களை வைக்க மேலே ஒரு அடுக்கு. அதில் பெண்களின் ஹாண்ட்பேக் மட்டும் தான் நுழையும். எந்த பெரிய பையும் நுழையாது. அதிலும் சக்கரப் பெட்டி லக்கேஜ்களை வைத்திருந்தால் நீங்கள் காலி! நான் கஷ்டப்பட்டு இரண்டு பைகளை திணித்தேன். பெங்களூர் வருவதற்கு அரை மணி முன்னரே அதை வெளியே எடுக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் இறங்க முடியும். ஒரு ஊருக்கு போவதென்றால் நம் மக்களின் மனநிலை என்ன என்று அரசாங்கத்துக்கு தெரியாதா? எத்தனை பொருள்கள் சேரும் என்பது தெரியாதா? வெள்ளைக்காரனுக்கு செய்ய வேண்டிய ரயிலை எல்லாம் நம் ஊரில் ஏன் செய்கிறார்கள்? "இரண்டடுக்கு வைத்தால் இன்னும் நிறைய காசு சம்பாதிக்கலாம் மற்றபடி வசதியை பற்றி நமக்கென்ன கவலை!" என்பது போல்  இருக்கிறது இவர்களின் யோசனைகள்! நிச்சயம் சொல்வேன், அதில் பெரிய லக்கேஜ்களை வைத்துக் கொண்டு பிரயாணம் செய்பவர்கள் நரக வேதனையை தான் அனுபவிப்பார்கள்.

ரயிலில் என்ஜினை ஓட்டியதால் லேசாய் அசைந்ததும் நான் வெளியே வந்தேன். கீழ் அடுக்கில் உள்ளவர்களிடம் முழங்கால் இட்டுக் கொண்டு விடை கொடுத்துக் கொண்டிருந்தார்கள் உறவினர்கள். பார்ப்பதற்கு புதுமையாய் இருந்தது. அங்கு உள்ள ஒரு கல் பெஞ்சில் அமர்ந்து கொண்டு ரயில் புறப்படுவதற்காக காத்துக் கொண்டிருந்தேன். உண்மையில் என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது தான் கவனித்தேன், அந்த நடைமேடையில் வலது பக்கத்தில் யாருமே இல்லை. அடப்பாவிகளா, அங்கு நடைமேடைக்கு ஓடும் மக்களின் நடுவில் அத்தனை சரக்குகளையும் கொட்டி வைத்திருக்கிறீர்கள், இங்கு இவ்வளவு பெரிய இடம் சும்மா கிடக்கிறதே என்று! சரக்குப் பெட்டியை இந்த மாதிரி இடங்கள் வருவது போல் நிறுத்தினால் என்ன? எப்படியும் அதையும் ஒரு தள்ளு வண்டியில் தான் வைத்துக் கொண்டு தள்ளிக் கொண்டு போகப் போகிறார்கள். இங்கிருந்தே தள்ளிக் கொண்டு போகலாமே? ஏன் மக்களின் நடமாட்டம் இருக்கும் இடத்தில்? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்களா? மிகவும் சலிப்பாக இருந்தது. ரயில் கிளம்பியதும், இந்து இடுக்கில் உட்கார்ந்திருந்த என் குடும்பத்தை பார்த்து பரிதாபப்பட்டுக் கொண்டே செயற்கையாய் ஒரு டாட்டா காட்டி விட்டு கிளம்பினேன்.

எதிரில் இருக்கும் பறக்கும் ரயிலில் ஏறி வேளச்சேரி சென்று பின்பு அங்கிருந்து மடிப்பாக்கம் செல்ல வேண்டும். அயர்ச்சியாய் இருந்தது. வெயில் வேறு ஆரம்பித்துவிட்டது. அப்போது தான் பையில் ரயில் டிக்கட் எடுக்க சில்லறை இல்லை என்று நினைவுக்கு வந்தது. ஒரு நடை மேடை கடைக்கு போய் நூறு ரூபாய்க்கு சில்லறை கேட்டேன். எதையாவது வாங்கலாம் என்றால் ஒன்றும் பிடிக்கவில்லை. "சில்லறை கொடுக்கிறேன், ஆனால் தொண்ணூறு ரூபாய் தான் கிடைக்கும்" என்றார் கடைக்காரர். "ஏன்" என்றேன்? பத்து ரூவா கமிஷன் சார் என்றார். சில்லறை கொடுப்பதர்க்கெல்லாம் கமிஷன் வாங்க ஆரம்பித்து விட்டார்களா என்று யோசித்தேன். நல்ல வேளை, கடையில் தண்ணீர் போட்டுக் கொண்டிருந்தவர் என்னை பார்த்து சிரித்தார். அப்போது தான் அது தமாசு என்று புரிந்தது. என்னை பார்த்தாலே இப்படி எல்லாம் பேசணும்னு தோணும் போல! எப்படித் தான் கண்டுபிடிக்கிறாங்களோ! ஒரு பிறவிக் கலைஞன் நான், என்கிட்டயே ஆக்டிங்கா என்று நினைத்துக் கொண்டேன். [இதெல்லாம் சொன்னா இருபது ரூபா கேப்பானே!] சரி போனால் போகட்டும் என்று  "ஒரு தண்ணீர் பாட்டில் கொடுங்க" என்றேன். சில்லென்று ஒன்று வாங்கிக் கொண்டேன். "இதுக்கு கமிஷன் கிடையாதுல்ல?" என்றேன். "இல்லை சார்" என்றார், சிரித்துக் கொண்டே. "நல்லா வியாபாரம் பண்றீங்க" என்றேன். "என்னங்க பண்றது, கடைக்கு வாடகை தரனும், அம்மா வேறு வெலய எல்லாம் ஏத்திட்டாங்க, நாங்க பப்ளிக் கிட்ட தானே வாங்கணும்" என்றார். ஆமா எல்லாத்தையும் தாங்க பப்ளிக்னு ஒரு இளிச்சவாயன் இருக்கானே என்று நினைத்துக் கொண்டு நடையை கட்டினேன்.

எதிரில் உள்ள பூங்கா நிலையத்திற்கு சென்று பறக்கும் ரயிலை பிடிக்க வேண்டும். எல்லோரு மாதிரியும் ரோட்டை க்ராஸ் செய்யாமல் சப்வேயில் இறங்கினேன். கொஞ்சம் இங்கே அங்கே பார்த்துக் கொண்டே நீங்க இறங்கினீர்கள் என்றால் அவ்வளவு தான், நேராய் கீழே விரித்திருக்கும் ஒரு வாட்ச் கடையில் உங்கள் காலை கை வைக்க வேண்டி இருக்கும். அடப்பாவிகளா...உங்களை எல்லாம் கேப்பாரே இல்லையா? படி ஏறி மேலே வந்ததும், மலை ஏறத் தொடங்கினேன். ஆமாம் மேம்பாலத்தை தான் சொன்னேன். சென்ட்ரல் எங்கோ இருக்கிறது, பூங்கா ரயில் நிலையம் எங்கோ இருக்கிறது. அந்த பாலத்தின் வழியே எல்லா மக்களும் லக்கேஜ்களுடன் ரயில் பிடிக்க ஓடுகிறார்கள். வெளிநாட்டு ஏர்போர்டில் இருப்பது போல், அங்கிருந்து இங்கு வரை ஒரு கன்வேயர் பெல்ட் போன்று ஒன்றை வைத்தால் எவ்வளவு வசதியாய் இருக்கும். ஏறி நின்றால் அது இங்கு கொண்டு வந்து இறக்கி விட வேண்டும்! எவ்வளவு செலவாகிவிடும்? பக்கத்திலேயே பல கோடிகள் செலவு  செய்து கட்டிய தலைமைச் செயலகம் பாழாய் கிடக்கிறது. மக்களுக்கு என்று வரும்போது இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது! வர வர நம் நாட்டை நினைத்தால், நாற்பது வயதில் நான் போய் சேர்ந்து விடுவேன் போலிருக்கிறது!

அரசாங்கம் தான் மக்களை மதிப்பதில்லை. இந்த வெயிலாவது கொஞ்சம் கருணை காட்டலாம்! ஏழரை மணிக்கு சுட்டெரிக்கிறது. நான் நடக்கும்போது அருகில் ஒரு பெண் [சின்க்கி போல் இருந்தார்] வேர்க்க விருவிருக்க வலது கையில் ஒரு சக்கர பெட்டியும், இடது கையில் ஒரு தோல் பையும் மாட்டிக் கொண்டு மலை ஏறிக் கொண்டிருந்தார். பார்க்க பாவமாய் இருந்தது. உதவிக்கரம் நீட்டலாம் என்று யோசிக்கும்போது படி இறங்கும் இடம் வந்தது. துணிந்து கேட்டேன். சற்று நேரம் என்னை திருடனை போல் பார்த்தவள், [பட்டணத்துல பாத்து சூதானமா நடந்துக்கம்மா என்று யாராவது சொல்லி அனுப்பி இருக்கக் கூடும்] திருடினாலும் பரவாயில்லை, இனி நம்மால் இதை தூக்கிக் கொண்டு படி இறங்க முடியாது என்று நினைத்திருப்பாள் போலும், சரி என்று ஒப்புக் கொண்டாள். அந்தப் பெட்டி என் கணம் இருந்தது. தட்டுத் தடுமாறி ஒரு வழியாய் இறங்கி டிக்கட் கவுண்டருக்குள்  டிக்கட் வாங்க முனைந்தோம். "உங்களுக்கும் நான் சேர்த்து வாங்கி விடுகிறேன்!" என்றெல்லாம் அவள் மிகையாய் நடந்து கொள்ளவில்லை. அவள் அவள் டிக்கட்டையும் நான் என் டிக்கட்டையும் வாங்கினோம். மறுபடியும் ஒரு சப்வே. ஏறி இறங்கி அப்பாடா...என்று மூச்சு வாங்குவதற்குள் ரயில் வருவது தெரிந்தது. "மிக்க நன்றி" என்றாள் சம்பிரதாயமாய்! தண்ணீர் குடித்து விட்டு, "வேண்டுமா?" என்று கேட்டேன். வாங்கப்போனவள் "சில் தண்ணி வேண்டாம்" என்று சொல்லிவிட்டாள். சென்னையில் சில் தண்ணி குடித்தால் தான் பானை தண்ணீர் மாதிரி இருக்கும். சாதாரண தண்ணி குடித்தால் சுடு தண்ணீர் தான்! எப்படி சில் தண்ணீர் குடிக்காமல் இருக்கிறார்கள் என்று தோன்றியது.

ரயிலின் முதல் பெட்டி வந்து அருகில் நின்றது. கூட்டம் முண்டி அடித்துக் கொண்டு ஏறியது. சென்ட்ரலில் ஊருக்குச் செல்பவர்கள் எல்லாம் திரும்பி வந்தது போல் கூட்டம். ஏண்டா நீங்க எல்லாம் ஊருக்குப் போலியா? என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. சத்தியமாய் சொல்கிறேன். உத்தரகண்டில் வந்தது போல், ஒரு வெள்ளமோ, சுனாமியோ, பூகம்பமோ வந்து ஒரு பத்து இருபது ஆயிரம் என்று போவதை விட, ஒரு முப்பது, நாற்பது கோடி போய் சேர்ந்தால் நாடு செழிக்கும். அப்படி ஆகும் என்றால் நானும் போகத் தயார்! [நல்லவன்டா, நீ நல்லவன்டா!] என்னா கூட்டம்! அடித்து பிடித்து அவளின் பெட்டியை தூக்கிக் கொண்டு அவளுக்கும் ஒரு இடம் பிடித்தேன். எனக்கே ஆச்சர்யமாய் இருந்தது! அவளுக்குத் தரமணி இறங்க வேண்டும். பெட்டியை தூக்கி வந்ததை காரணம் காட்டி நான் எதுவும் பேச விரும்பவில்லை. நிற்க, நான் அவ்வளவு நல்லவன் எல்லாம் இல்லை. ஃபிகர் சுமார் தான்! அது ஒரு காரணமாய் இருக்கலாம்.

தரமணி அருகே வந்ததும், அவளே மெதுவாய் பேச்சு கொடுத்தாள். ஹைதிராபாத்தில் படிக்கிறாளாம். இங்கு ப்ராஜக்ட் செய்ய வந்துள்ளாலாம். நான் என்ன செய்கிறேன் என்று கேட்டால். ஐ.டி. என்றதும் கொஞ்சம் உற்சாகம் ஆனாள். பிறகு ஏதோ சொல்ல வந்தால், காற்றில் சரியாய் கேட்கவில்லை. வீடு வரைக்கும் இந்த பெட்டியை தூக்கிட்டு வந்துற்றியா   என்பது போல் தோன்றியது. பிறகு அவள் பாவம் பொழைச்சு போறான் என்று விட்டு விட்டால். நானும் கேட்கவில்லை. ஒருத்தன் சிக்கிட்டா போதுமே!! வேளச்சேரி வந்ததும் இறங்கி வீட்டுக்கு நடந்தேன். தமிழர்கள் எப்போது இப்படி துப்பக் கற்றுக் கொண்டார்கள் என்று ஆராய வேண்டும். படித்தவன், படிக்காதவன் என்று எவனை பார்த்தாலும் துப்பிக் கொண்டே தான் நடக்கிறான். முன்பு ஓரத்தில் துப்பினான், இப்போது நடு ரோட்டில் துப்புகிறான். இதை படிப்பவர்களில் பத்து சதவிகிதம் பேர் இந்தப் பழக்கத்திலிருந்து திருந்தினாலும் எனக்கு மகிழ்ச்சி! [படிக்கிறதே பத்து பேரு தான்! பேராசை] இந்த நாட்டில் எத்தனை விஷயத்தை தான் திருத்துவது? மாற்றம் மெதுவாய் தான் வரும், இப்போது நாம் போராடினால் தான் பேரன் பேத்தி காலத்திலாவது நல்ல சமுதாயம் அமையும் என்ற பேச்சில் எனக்கு நம்பிக்கையே போய் விட்டது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

எல்லோருமே காதலை தூக்கி பிடித்திருக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு காதலே பிடிக்காது. அவனுக்கு அது பிடிக்கும்போது என்ன நடக்கிறது? இது தான் கதை.

தீயா வேலை செய்யணும் குமாரு [தீவேசெகு], "சோட்டி சி பாத்" [ஹிந்தி] படத்தின் மொக்கை தழுவல். அது எனக்கு பிடித்த படம். எழுபதுகளில் அமிதாப் பச்சன் ரத்தம் வழிய வழிய எல்லோரையும் சுட்டுக் கொண்டிருந்த காலத்தில் அழகாய், அமைதியாய் வந்த ஒரு நல்ல படம். அதை அப்படியே எடுத்திருந்தாலும் அருமையாய் வந்திருக்கும். அதை விட்டு விட்டு, அதை தமிழ் படுத்துக்குறேன் என்று சொல்லி படுத்தியிருக்கிறார்கள். அந்தப் படத்தின் கதையை உங்களுக்குச் சொல்கிறேன். சுயநம்பிக்கை இல்லாத, பயந்தாகொல்லி, மிடில் கிளாஸ் ஒருவன் ஒரு அழகான பெண்ணை வளைக்க முயல்கிறான். என்ன முயன்றும் தோற்றுக் கொண்டே இருக்கிறான். இந்த மாதிரி விஷயங்களுக்கு ஆலோசனை வழங்கும் கர்னல் ஒருவரிடம் பாடம் படிக்கிறான். அவரின் ஆலோசனைப்படி, தன் அத்தனை குறைகளையும் தீர்த்துக் கொண்டு அந்தப் பெண்ணை கை பிடிக்கிறான். சிம்பிளான கதை. அழகான திரைக்கதை. சரியான நடிப்பு, வசனம். பாடல்களும் அருமையாய் இருக்கும். அந்த மிடில் கிளாஸ் ஆளாக அமோல் பலேக்கர். கர்னலாக அசோக் குமார். தீவேசெகு வில் அந்த மிடில் கிளாஸ் ஆள் சித்தார்த். அட்வைசராய் சந்தானம். அதில் அசோக் குமாரிடம் ஒரு காட்சியில் அட்வைசுக்காக அமிதாப் வருவார். இதில் விஷால் வருகிறார்! [ஹிந்தியில் அமிதாப்பை வைத்து அதே படத்தை எடுத்த தயாரிப்பாளர் ஒரு படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார், தமிழில் விஷாலை வைத்து அதே இயக்குனர் மற்றொரு படம் எடுக்கிறார்! இதுலையுமாடா  காப்பி!!]

சுந்தர் இப்படி ஒரு ஹிந்தி படத்திலிருந்து சுட்டு விட்டாரே, ஏன் இதற்கு இதெல்லாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இதை எழுதும்போது வின்னர் படம் டீவியில் ஓடிக் கொண்டிருந்தது. அதில் பார்த்தால் பிரசாந்த், கிரண் கட்டிலில் விழும் காட்சி அப்படியே "ஹம் ஆப்கே ஹைன் கௌன்" காட்சியின் காப்பி. சல்மான் கான் மாதுரி தீட்சித் எதிர்பாராத போது, அவர் கையை விடுத்து விடுதலை அளித்து அவரின் கையை அவரே கட்டிக் கொண்டு மாதுரியை இம்ப்ரெஸ் செய்வார். பிரசாந்த் அதையே அசட்டுத்தனமாய் செய்கிறார். சரி தான், ஹிந்தி ஒழிந்ததால் யாருக்கு லாபமோ தெரியவில்லை, நம் கோலிவுட் இயக்குனர்களுக்கு நல்ல லாபம் தான்! சுந்தரின் "கலகலப்பு" எனக்குப் பிடித்தது. அந்த அளவுக்கு கூட இல்லை இந்தப் படம். படத்தில் ஆயிரம் லாஜிக் ஓட்டைகள். படத்தில் எனக்குப் பிடித்தது காஸ்ட்யும்ஸ். குஷ்புவுக்கு நல்ல டிரெஸ்ஸிங் சென்ஸ்! பாட்டும் ஒன்று ரெண்டைத் தவிர தேறவில்லை.ஆமா, அது என்ன சந்தானம் ஹன்சிகாவை அப்படியே சாப்பிடுவது போல் பார்த்தார். நானும் சரி, இவர் அவரிடம் காதலில் விழப் போகிறாரோ என்று நினைத்தேன். திடீரென்று பாசமலர் பாட்டை போட்டு அண்ணன் தங்கச்சின்னு சொல்லிட்டீங்க? டிவிஸ்டா? சரி சரி...

சித்தார்த்துக்கு 34 வயதா? நம்பவே முடியவில்லை. இன்னும் சின்ன பையனை போலவே இருக்கிறார். தாடி மீசை சரியாய் வளரவில்லை என்றால் கொஞ்சம் இளமையாய் தான் தெரிவார்கள் போல! ஒன்று பல்லைக் காட்டி சிரிக்கிறார், இல்லை பாவமாய் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்கிறார். அவ்வளவுதான் இவரின் நடிப்பு! இவரின் ஒரே மாதிரியான ரியாக்ஷன்ஸ் அலுப்பூட்டுகிறது. இவரை வைத்து ஒரு படம் வரப் போகிறது என்றாலே, இவரை ஏன் போடுகிறார்கள் என்று தான் தோன்றுகிறது! விடை தெரியவில்லை...சாரி!

ஹன்சிகா, சின்ன குஷ்புவா இவர்? இப்போதே பெரிய குஷ்பு மாதிரி இருக்கிறார்! நல்ல காஸ்ட்லி விர்டிஃபைட் டைல்ஸ் மாதிரி மொழு மொழு என்று இருக்கிறார். [நானும் கொஞ்சம் சந்தானம் மாதிரி லைன் பிடிக்க ஆசைப்பட்டு எழுதினேன்!] தொப்புள் குலுங்க அந்த பரந்து விரிந்த வயிற்றுடன் அவர் ஆடும்போது ஜெயமாலினி  ஞபாகம் வருகிறார். என்னமோ வாயசைக்கிறார், என்னமோ வார்த்தை வருகிறது. என்ன டாஷுக்கு மொழியே தெரியாத நமக்கு கொஞ்சமும் சம்மந்தமே இல்லாத ஒரு பெண்ணை நடிக்க வைக்க வேண்டும் என்று புரியவில்லை. இதை சொன்னால் எனக்கு வயசாயிருச்சுன்னு சொல்லுவீங்க! அதனால் நான் எதுவும் சொல்லாமல் உங்களோடு சேர்ந்து ஜொள்ளுகிறேன்!

சந்தானத்துக்கு லவ் குரு கதாப்பாத்திரம். சிவ கார்த்திகேயன் முதல் ஆர் ஜே பாலாஜி என்று வாயால் வாலிபால் விளையாடும் பலர் வந்தாலும் இவரின் இடம் இன்னும் இவரிடமே இருப்பதிலேயே தெரிகிறது இவரின் பலம்! எங்கிருந்து தான் அந்த ஒன் லைனர்ஸ் பிடிப்பாரோ! டீவியில் போடுவதையும் சேர்த்து, மனோபாலாவை பார்த்து, "ஹே நடராஜ் பென்சில்", "ஒடம்ப மூட்றா, பச்சரிசின்னு எறும்பு இழுத்துட்டு போயிற போகுது!" என்பதிலும் சரி, "தட்டுல அல்வா விழுந்தாலும், ஐஸ்க்ரீம் விழுந்தாலும் உடனே நக்கிடனும்", "தும்பிக்கை தான் குறை, இருந்தா கும்கி யானை மாதிரியே இருப்பான்!" "இவன் யாரு, பலூன் விக்கிறவன் மாதிரியே இருக்கிறான்", "இது வீடு இல்லை விக்ரமன் சார் படம்!" என்று படம் பூராவும் அவரின் கலாய் தான்! காற்று அவர் பக்கம் அடிக்கிறது, தூற்றிக் கொள்ள வேண்டியது தான்!

என் ஃபேவரைட் [யாருக்கு பிடிக்காது இவரை!] ஆர் ஜே பாலாஜியின் குரலில் படம் ஆரம்பிக்கிறது. இவரின் பேச்சுத் திறமையை கண்டிப்பாய் தமிழ் சினிமா உபயோகப்படுத்திக் கொள்ளலாம். சந்தானம் ஒன் லைனர்ஸுக்காக இவரை இப்போதே சேர்த்துக் கொள்வது நல்லது, இல்லையென்றால் பின்னால் வருத்தப்பட வாய்ப்புண்டு! நடிப்பு என்று பார்த்தால் பரவாயில்லை, காமெரா இருக்கிறது என்ற முதல் குறுகுறுப்பு ஆங்காங்கே தெரிந்தாலும், பேசியே ஆளை காலி செய்து விடுகிறார். உதாரணமாய் "பெய்ன்ட் டப்பா அட்வர்டைஸ்மெண்ட்ல வீடு மாதிரி இருக்குன்னு பாக்குறீங்களா", "மொட்டை மாமா, மூக்கு மாமா", "சுல்தானே வெயில்ல காயிராறு, ஒட்டகத்துக்கு குலாப் ஜாமூனா?" "ஆம்பள ஏர் ஹோஸ்டஸ் மாதிரி இருக்கீங்க", "துப்பாக்கி பட தீவிரவாதி மாதிரி தொரத்தாதேடா!" என்று கேப்பில் கல்லா கட்டுகிறார். டேக் இட் ஈசி வித் பாலாஜியில் இந்தப் படத்தையும் கிண்டல் அடிப்பாரா என்று பார்க்க வேண்டும்!

கணேஷ் வெங்கட்ராம் - சீரியசாய், என்ன இல்லை இவரிடம்! தமிழே தெரியாது, தமிழ்நாட்டின் கலர் கிடையாது, நடிக்க வராது...இருந்தாலும் நமக்கு ஹன்சிகா  வேண்டும். எல்லாம் தெரியும் ஆனால் அமேரிக்கா மாப்பிள்ளையாய் கூட வாய்ப்பு தர மாட்டோம்! பாவம்,  ஐம்பதுகளில் பிறந்திருந்தால் எம்.ஜி.ஆர், ஜெமினி போல் தமிழ் சினிமாவில் வலம் வந்திருப்பார். தனுஷ், விஜய் சேதுபதி காலத்தில் பிறந்து இவர் படும் அவஸ்தை, ஐய்யோ பாவம். இவரை கலாய்த்து படத்தில் வரும் ஒன் லைனர்ஸ் ஸ்பான்சர் யார்? சந்தானமா, பாலாஜியா? உதாரணம்: ஜிம்முக்கு போன ஜெமினி கணேசன், பனியன் விளம்பரத்துல வர்ற மாதிரி இருக்கான்!


என்னடா விமர்சனம்னு ஒன் லைனர்ஸ் போட்டே கடத்திட்டேன்னு நெனைக்கிறீங்க!? அட படமே அதானே பாஸ்!
தமிழ் திரைப்பட இயக்குனர் திரு மணிவண்ணன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார். நான் அவரைப் பற்றி பேசப் போவதில்லை. இந்நேரம் அவரைப் பற்றி நம் தொலைக்காட்சிகளில் நிறைய பேசி இருப்பார்கள். என்னுடைய ஒரு நண்பருக்கு அவர் நல்ல பழக்கம். என்னையும் அஞ்சலி செலுத்த  அழைத்துச் சென்றார்.  அந்த தெருவே கூட்டத்தில் அடைந்து கிடந்தது. பைக்கை அந்த தெருவின் முனையிலேயே விட்டு விட்டு நடந்து சென்றேன். உள்ளே கண்ணாடி பெட்டகத்தில் அமைதிபடை எடுத்தவர் அமைதியாய் கண்ணயர்ந்திருந்தார். பக்கத்தில் சீமான், சத்யராஜ், மனோபாலா ஆகியோர் அமர்ந்து வணக்கம் செலுத்துபவர்க்கு பதில் வணக்கம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். இரண்டு நிமிடத்தில் நான் வெளியே வந்தேன். தில்லு முள்ளு சிவாவை சுற்றி ஒரு பெரும் கூட்டமே இருந்தது. அவர் மீடியாவுக்கு தன இரங்கலை தெரிவித்துக் கொண்டிருந்தார். மக்கள் அவரை சுற்றி கொண்டாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். நான் திரும்பும்போது சிவா கார்த்திகேயன் வந்தார். விட்டால் காரில் வீட்டுக்குள்ளே சென்று விடுவார் போலிருக்கிறது. அவரைச் சொல்லி குற்றமில்லை. எல்லா கலைஞர்களும் அப்படித் தான் நடந்து கொள்கிறார்கள். இன்னோவா காரில் பத்து அல்லக்கைகளுடன் வந்து இறங்குகிறார்கள். டிரைவர் பாவம், காரை திருப்புவதற்குள் படாத பாடு படுகிறார்.

மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று யார் சொல்வது? எல்லோரின் கையிலும் ஒரு கேமெரா ஃபோன். ஒரு நடிகரை விடாமல் சுட்டுத் தள்ளுகிறார்கள். எனக்கு எரிச்சலாய் வந்தது. நடிகர்கள் என்றால் வானில் இருந்து குதித்தவர்களா? அவர்களும் நம்மை போல் மனிதர்கள் தானே? அவரை பார்த்து விட்டதிலும், அவரை படம் பிடித்து விட்டதிலும் அப்படி என்ன பெருமை? அதுவும் ஒரு சாவு வீட்டில்! நேற்று வரை மணிவண்ணன் அங்கு தான் வசித்தார் என்று தெரியாமல் இருந்தவர்கள் இன்று முந்திக் கொண்டு குழந்தை குட்டிகளோடு அவரை அஞ்சலி செலுத்த வேண்டிய காரணம், நடிகர்களை பார்க்க வேண்டும் என்று ஒரே காரணம்! நம் தாய்மார்கள் சாவு வீட்டின் முன்னாள் நின்று கொண்டு, இவர் வர்றாரு, அவர் வர்றாரு, என்ன அவசரம், எல்லா நடிகருங்க வருவாங்க, பாத்துட்டு போவோமே என்று ஒரே கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்! நான் அந்த தெருமுனையில் வந்து வண்டி எடுக்கும்போது என் நண்பருக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.

ஏதோ ஒரு திருவிழாவுக்குப் போவது போல் பெண்கள் போகிறார்கள். ஒரு பெண் பள்ளியில் இருந்து அப்போது தான் வந்திருந்த அந்த சிறுமியை சீருடை கூட மாற்றாமல் அழைத்து வருகிறாள். "மணிவண்ணனா! யாரும்மா அவரு" என்று அப்பாவியாய் கேட்டுக் கொண்டே வருகிறாள் அந்த சிறுமி! எல்லா பெண்களும்  முகத்திலும் அப்படி ஒரு பூரிப்பு, சிரிப்பு, குதூகலம்!!

பாக்யராஜ் பின்னாலேயே ஓடுகிறார்கள். சத்யராஜை பார்த்து விட்டு, ஏதோ கடவுளையே பார்த்த மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிவாவை சுற்றி நின்று சார், தில்லு முள்ளு சூப்பர் என்கிறார்கள்! சிவா கார்த்திகேயண்டா, பாருடா என்று அலைபாய்கிறார்கள் சிறுவர்கள். இன்னைக்கு மட்டும் நான் பத்து நடிகர்களை பார்த்துட்டேன் தெரியுமா என்று பூரிக்கிறார்கள். சிறுவர்களை விடுங்கள், பெரியவர்களே இந்த லட்சணத்தில் தான் இருக்கிறார்கள். ஒரு பெண்மணி தன் ஸ்கூட்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு, அதில் தன் செருப்பை கழட்டி விட்டு, ஒரு தண்ணி பாட்டிலோடு நாலு குழந்தைகளை கூட்டிக் கொண்டு வருகிறார். [என்னா ஏற்பாடு!] நான் கேட்டவரை, அந்த மக்களில் யாரும் மணிவண்ணனை பற்றி பேசவில்லை. ரஜினி வருவாரா, விஜய் வருவாரா, சூர்யா வருவாரா என்று தான் பேசிக் கொண்டார்கள். இப்படி வேறு எந்த நாட்டிலாவது நடக்குமா? நாம் தான் இத்தனை பைத்தியமா இருக்கிறோமா? தெரியவில்லை.

ஒரு புகழ் பெற்ற கலைஞனுக்கு  சாவு வீட்டை எதிர்கொள்வது மிகப் பெரிய சவால் என்று தான் நினைக்கிறேன். சினிமா நட்சத்திரங்களுக்கு இது ஒரு மிகப் பெரிய சாபக் கேடாகத் தான் இருக்கும். புதுமுக நடிகர்களுக்கே இவ்வளவு கஷ்டம் என்றால், ரஜினி, கமலை பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும்! ரஜினி இன்று கூட ஒரு சாவு வீட்டுக்கு வந்தால், எங்கு ரசிகர்கள் அங்கேயே "தலைவர் வாழ்க, சூப்பர் ஸ்டார் வாழ்க" என்று கத்தி விடுவார்களோ என்ற பயத்தில் தான் வருகிறார்! அப்படி சில சமயங்கள் நடந்தது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்! அந்தக் கணம் எப்படி இருக்கும்? அதிலும் இறந்தவர் தனக்கு நெருக்கமானவராய் இருந்தால், அந்த இடத்தில் அத்தகைய செயல் எத்தனை சங்கடமாய் இருக்கும்! பிறகு இறந்தவரை பற்றி அங்கு என்ன பேச முடியும்? நம் நட்டு மக்களின் அறியாமையை நினைத்தால் சங்கடமாய் இருக்கிறது? அதோடு, வருங்கால சந்ததிகள் இதே பலவீனத்துடன் வளர்வதை பார்க்கும்போது கவலையாய் இருக்கிறது!

அந்தக் கூட்டத்திலிருந்து விலகி நடந்து "சரி, கலைஞன் என்பவன் இறந்தும்  மக்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் மகிழ்ச்சியை அளிக்கிறான்!" என்று வைத்துக் கொள்வோம் என்று நானே என்னை தேற்றிக் கொண்டேன்! வேறு என்ன செய்ய?

மணியின் ஆத்மா சாந்தி அடையட்டும்!

கடற்கரையில்
அலையின் அருகில்
ஒரு சிறுமி சிறு நீர் கழித்து எழுகிறாள்.
அவள் தாய் போல் அந்த இடத்தை
அலம்பி விட்டுச் செல்கிறது ஒரு கடலலை.
அன்று இரவு உப்பின் அளவை கணக்கெடுக்கும்போது
புதிதாய் சேர்ந்த உப்பை கண்டுகொள்ளுமா கடல்?


[photo courtesy: my wife]
ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்
என் மனம் பேசுவதை! அப்போது...
மேல் சொன்னதை சொன்னது என் மனம்!
இதில் நான் யார், என் மனம் எது?
---------------------------------------------------------------------------------------------------------
வாழப் பணம் வேண்டும்
பணத்திற்கு வேலை வேண்டும்
வேலைக்கு திறமை வேண்டும்
திறமைக்கு உழைப்பு வேண்டும்
உழைப்புக்கு சக்தி வேண்டும்
சக்திக்கு உணவு வேண்டும்
உணவுக்கு பணம் வேண்டும்!