மதுரைக்குப் போயிருந்தேன். சென்னையில் இருந்து விட்டு மதுரைக்கு சென்றால் ஏதோ எல்லோரும் ஊரை காலி செய்து விட்டு போய் விட்டது போன்றதொரு உணர்வு. அத்தனை காலியாக இருக்கிறது. இதுவா காலி, எவ்வளவு கூட்டம் பார் என்று மதுரை மக்கள் என் வயித்தெரிச்சலை கொட்டிக் கொண்டார்கள்! அவர்களை ஒரு முறை சென்னை வந்து போகச் சொல்லியிருக்கிறேன். அதிகாலையில் பஸ்ஸிலிருந்து தாம்பரத்தில் இறங்கி மின்சார ரயிலில் டிக்கட் எடுக்க வரிசையில் நின்றால் போதும், வந்த வழியே, அப்படியே ஊருக்குக் கிளம்பி விடுவார்கள்! பெங்களூரில் நான் இருந்த போது அலுவலகத்தில் எத்தனை கன்னடக்காரன் இருக்கிறான் என்று எண்ணி (வலை வீசி தேடி) பார்ப்போம்.ஒன்று அல்லது இரண்டு பேர் சிக்குவார்கள்!இன்று அது போல் ஆகிவிட்டது; சென்னையில் பிறந்து வளர்ந்தவனை தேடுவது! மேற்கில் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் வசிப்பவர்கள் எப்படி மும்பையை நோக்கி படையெடுக்கிறார்களோ, அதே போல் தெற்கில் இருப்பவர்கள் சென்னையை நோக்கி படையெடுக்கிறோம். இதனால் கூட்டம் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. பேசாமல் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, கல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் நுழைய விசா வழங்க வேண்டியது தான்! (இதைச் சொன்னா நம்மளை பைத்தியம்னு சொல்றாங்க!) முதல் கட்டமாக வெளியிலிருந்து வந்தவர்களை வெளியேற்ற வேண்டும். அடியேன் அதில் மாட்டுவேன் என்பதால் சென்னைக்கு வந்து ஐந்து வருடம் ஆகியிருந்தால் அவர் அப்படியே இருக்கலாம் என்று ஒரு அட்ஜஸ்மென்ட்டை செய்து கொள்ளலாம்!

உள்ளபடி சொன்னால் நான் பார்க்க விரும்பும் சென்னை பழைய தமிழ் படங்களிலும், ஜெயகாந்தன் நாவல்களிலும் இருக்கிறது. எந்தப் பழைய படத்தின் அவுட்டோர் காட்சிகளில் சென்னையை பார்க்கும் போதெல்லாம், சென்னை எத்தனை காலியா இருக்கு பாரு என்று என்னையும் அறியாமல் புலம்புவேன். எம்ஜியார் காரோட்டிக் கொண்டே ஏதாவது வயல் வெளியை கடந்தால், யாருக்குத் தெரியும் இது வேளச்சேரியா இருக்கலாம் என்றும் புலம்பியிருக்கிறேன். மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்று நாகேஷ் பாடிக் கொண்டே வருவாரே, அந்த மெட்ராஸ்! அதுதான் நான் பார்க்க விரும்பிய சென்னை. அகலமான, விசாலமான சாலைகள்,
ங்கொன்றும் இங்கொன்றுமாய் செல்லும் பேருந்துகள், வாகனங்கள், மாட்டு வண்டிகள்! அந்தக் கூட்டத்திற்கும் ஓட்டத்திற்குமே அவர் அன்று அந்த அலுப்பு காட்டுவார். இன்று மவுண்ட் ரோட்டில் நின்று கொண்டு நாம் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் வேண்டாம், "மெட்" என்று வாய் திறந்தால் போதும் இன்னோவா வந்து இடித்து வீட்டில் உள்ளவர்களை ட்ரைவர் நலம் விசாரிப்பார்! (ஒங்கம்மாகிட்ட சொல்லிட்டு வந்தியா?) ம்ம்ம்...அறுபதில் வாழ வேண்டியவனை 2010ல் நிறுத்தியிருக்கிறது காலம்!

சரி மதுரைக்கு வருகிறேன். மதுரையில் சாலைகள் அகலமாய் தெரிகின்றன. ப்ளாட்பாரங்கள் நன்றாக ஏற்றம் கண்டு விட்டன. சென்னையை கம்பேர் செய்தால் சுற்றுப்புறம் சுத்தமாகவே இருக்கிறது. ஆனால் முன்பு போல் சினிமா போஸ்டர்கள் காணக் கிடைப்பதில்லை. சினிமா ரசிகர்கள் என்றால் அது மதுரையாகத் தான் இருக்க வேண்டும். முன்பு போல் இல்லாமல் மதுரையில் இப்போதெல்லாம் சென்னையில் ரிலீஸ் ஆவதைப் போல் ஒவ்வொரு படமும் 4, 5 தியேட்டர்களில் ஒரு காட்சி, இரு காட்சிகள் என்று வர ஆரம்பித்து விட்டன. என் நினைவுக்குத் தெரிந்து ஒரு படம் இரண்டு தியெட்டர்களுக்கு மேல் ரிலீஸானது "எஜமான்" தான்! அந்தப் படம் தான் முதன் முதலாய் மூன்று தியேட்டர்களில் ரிலீஸானது என்று நினைக்கிறேன்! [மதுரையில் ரஜினி படம் என்ன மொக்கையாக இருந்தாலும் 150 நாட்களுக்கு குறையாமல் ஓடும்] எந்த படமாய் இருந்தாலும் சரி, படம் வந்த அடுத்த வாரத்தில் வெற்றிகரமான இரண்டாவது வாரம் அல்லது பட்டையை கிளப்பும் பத்தாவது நாள் போஸ்டர் ஒட்டி விடுவார்கள். 3 வாரத்தில் படம் படுத்து விட்டால் அதை வேறு தியேட்டரில் ரிலீஸ் செய்து இணைந்த 3வது வாரம் என்று மிரட்டுவார்கள்! அப்படி என்றால் அந்த படம் இன்னும் களத்தில் இருக்கிறது என்று பொருள். இன்று வரை தளபதி படத்தின் பத்தாவது நாள், இருபத்தைந்தாவது நாள், முப்பத்தைந்தாவது நாள் என்று எல்லா நாட்களின் போஸ்டர்களும் எனக்கு நினைவில் இருக்கிறது. (இதை ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேனா என்பது தான் மறந்து விட்டது! ஹிஹி) தமிழ் படத்தை விடுங்கள், கமேண்டோ, ரங்கீலா, தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே போன்ற படத்திற்கே 50வது நாள், நூறாவது நாள் போஸ்டர்கள் ஒட்டினார்கள்! ஹம் ஆப்கே ஹைன் கோன் படம் ஹரிதாஸ் படத்தை போல் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது! சில சமயம் ஷகீலா படத்திற்குக் கூட பத்தாவது நாள் போஸ்டர் பார்த்ததாய் ஞாபகம்! இன்றும் படங்களின் போஸ்டர்கள் இருந்தாலும், ஒரு 2வது வார போஸ்டரை கூட காண முடியவில்லை. திருட்டு விசிடி (டிவிடி?), கேபிள் டீவி, யு ட்யுப் என்று வளர்ந்து விட்ட நிலையில் ஒரு படம் இரண்டு வாரம் ஓடி போஸ்டர் ஒட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதெல்லாம் ஓவர் தான்!

அப்புறம், திருமலை நாயக்கர் மகாலை நல்ல முறையில் பராமரித்து வருகிறார்கள் போலிருக்கிறது. அதோ, அந்த மகால்ல தான் ஐஸ்வர்யா ராய் ஆடினார் என்று தான் இன்றைய இளவட்டங்கள் அந்த மகாலை அடையாளம் காட்டுகிறார்கள்! சிம்ரன், மனீஷா கொய்ராலா, ஐஸ்வர்யா, அனுஷ்கா என்று அந்த மகால் பாரம்பரியம் மிக்கதாய் தான் ஆகி விட்டது! ஆனால் என்னை மிகவும் உறுத்திய ஒன்று, அரண்மனை மதில் சுவரில் "இங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது, இலவசக் கழிப்பறை அருகில் உள்ளது" என்று அம்புக்குறியுடன் ஒரு பலகை தொங்குகிறது. அந்த பலகையின் அடியில் ஈரப்பட்டுக் கிடக்கிறது. என்ன தான் இலவசம் என்றாலும் அரண்மனை மதில் சுவற்றில் சிறுநீர் கழிக்கிற பெருமை வருமா என்று அந்த பிரகஸ்பதி நினைத்திருப்பானோ என்னமோ? அதே போல் பெரியார் பஸ் ஸ்டாண்டில் ஆம்னி பஸ் நிறுத்தத்தில் அநியாயம் செய்கிறார்கள். அந்த தம்மாத்துண்டு இடத்தில் வெளியூர் போகும் பேருந்தும் நிற்கிறது, உள்ளூர் பேருந்தும் வந்து செல்கிறது. பக்கத்திலேயே கழிவறை இருந்தாலும் வெளியூர் பேருந்து ஒன்றை ஒன்று ஒட்டி நிற்கும் இடத்தில் அந்த பேருந்துகளை மறைவாய் வைத்துக் கொண்டு சிறுநீர் கழிக்கிறார்கள். அந்த பேருந்தில் ஏற வேண்டியவன் அந்த இடைபட்ட இடத்தில் கால் வைத்துத் தான் ஏற வேண்டியிருக்கிறது. ஆடு மாடுகளுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஐந்து ரூபாயை சிகிரெட்டுக்காக பொத்திக் கொண்டு கொடுக்கும் ஜனம் (ஜடம்!!) சிறுநீர் கழிக்க ஒரு ரூபாய் செலவழிக்க மறுக்கிறது!! இப்படி பொறுப்பில்லாமல் பெய்பவர்களை கண்டால் கண்ட இடத்தில் இழுத்து வைத்து அறுக்க வேண்டும். [சிம்ரன் சொல்வது போல் நாக்கை அல்ல!]

இந்திய வலையுலகில் முதன் முறையாக
திரைக்கே இன்னும் வரவே வராத...!!!
(இன்னும் சன் டீவியில் ட்ரைலர் டார்ச்சரே ஆரம்பிக்காத!!)
சூப்பர் ஹிட் திரைப்படம்
எந்திரன் விமர்சனம்
உங்கள் பெய்யெனப் பெய்யும் மழையில்...



விஞ்ஞானி (குறுந்தாடி மஸ்ட்!) ரஜினி (வசீகரன்) தன் பத்து வருட அயராத உழைப்பால் (நிறைய்ய தாடி = அயராத உழைப்பு!) மனிதனைப் போலவே சிட்டி என்ற பொய் பித்தலாட்டம் தவிர்த்த ஒரு அருமையான மனித ரோபோவை உருவாக்குகிறார். அதற்கு உணர்ச்சிகளை முடுக்கி விட்டதும் தொடங்குகிறது அழிச்சாட்டியம். ஐஸ்வர்யா ராயை கண்டதும் காதல் கொள்கிறது. அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யத் துணிகிறது. அதனால், வேண்டாத சில சமூக விரோதிகளிடம் சிக்கி உலகையே அழிக்கப் புறப்படுகிறது. சிட்டியை வசீகரன் எப்படி அடக்கினார்? அவர் எப்படி இந்த உலகத்தை காப்பாற்றினார்? சிட்டியின் காதல் கை கூடியதா? அதை அவரவர் வசதிக்கேற்ப வெள்ளித் திரையிலோ, திருட்டு டிவிடியிலோ (சொன்னா கேக்கவா போறீங்க!) பார்த்துக் கொள்ளவும்.

ரஜினிக்கு சரியான பெயரை தான் ஷங்கர் வைத்திருக்கிறார். வசீகரன்! 60 வயதிலும் மனிதர் பின்னிப் பெடலெடுக்கிறார். அவரின் வசீகரம் துளியும் குறையவில்லை. ஷங்கர் இந்த வயதிலேயே ரஜினியை இந்த அளவுக்கு காட்டுகிறார், இன்னும் ரஜினி பரட்டைத் தலையுடன் இளமையாய் இருக்கும் காலத்தில் ஷங்கர் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணி ஏங்க வைத்து விடுகிறார். விஞ்ஞானியாய் உறைவதும், ஐஸ்வர்யாவிடம் காதலில் உருகுவதும் என்று ரஜினி பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். வழக்கமாய் ரஜினி படங்களில் கதாநாயகி தான் ரஜினியிடம் உருகுவார். இவர் பாவம் பார்த்து காதலிப்பார். படையப்பாவில் செளந்தர்யாவிடம் உருகும் ரஜினியை பார்க்க எனக்கு பாவமாய் இருந்தது. குஷ்புவே தலைவர் பின்னாடி சுத்தும், இந்த பொண்ணுகிட்ட போய் தலைவரை உருக வச்சிட்டாங்களே என்று! அந்த மாதிரி எந்த ஏக்கமும் இந்தப் படத்தில் வரவில்லை. அழகின் உட்சபட்சம் ஐஸ்வர்யா ராய் என்று ஆகி விட்ட நிலையில் தலைவர் அவர் பின்னாலே அலைவது ஒன்றும் பெரிதாய் இடரவில்லை. ஐஸ்வர்யாவிடம் ரஜினியின் நெருக்கத்தை பார்க்கும் போது, ரஜினியே சொன்னது போல் "அமிதாப் நிலையில் இருந்து "கபர்தார்!" என்று சொல்லத் தோன்றுகிறது.

சிட்டி! பாடலில் வருவதை போல் இனி இது தான் பட்டி தொட்டி எல்லாம் பட்டயை கிளப்பப் போகிறது. ஆறறிவு ரஜினியே இத்தனை ஸ்பீடுடன் இருக்கும்போது நூறறிவு ரஜினி எத்தனை ஸ்பீடாய் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். சும்மா இல்லை, நிஜமாகவே அதிருகிறது! எந்திரனின் காதலில் வசீகரனின் காதல் தொலைந்தே போய் விடுகிறது. ஐஸ்வர்யா ராயை கவர அது பண்ணும் ஜிமிக்ஸ் வேலைகள் அற்புதம். இப்படி நிஜமாகவே ஒரு ரோபோ காதலன் வந்து விட்டால் பெண்கள் நம்மளை எல்லாம் மதிப்பார்களா என்பது சந்தேகம் தான்! ஆனால் ஐஸ்வர்யா தான் "இரவில், நடுவில் பாட்டரி தான் தீரும்!" (என்ன கவலை பாருங்கள்!) என்று ஒதுங்கி விடுகிறார். நிஜமாகவே ஏதோ ஒரு ஆக்ஸிலரேட்டரை உள்ளே வைத்து தைத்ததைப் போல் ரோபோ ரஜினியிடம் அத்தனை வேகம். 60 வயதில் இப்படி ஒரு அதகளம், அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்! ரஜினி தன்னுடைய 35 வருட சினிமா வாழ்க்கையில் இந்த அளவுக்கு எந்த படத்திலும் உழைத்திருக்க மாட்டார் என்பது நிச்சயம். ஷங்கர் பெண்டு எடுத்திருக்கிறார். ரஜினியே சொன்னது போல் ஷங்கர் என்ற குதிரையை கெட்டியாய் தான் பிடித்து உட்கார்ந்திருக்கிறார். சிட்டியின் ஜொள்ளு மனிதர்கள் புரிந்து கொள்ள இது மனித ஜொள்ளு அல்ல என்ற ரேஞ்சுக்கு பன்மடங்காய் இருக்கிறது. சிட்டி ஐஸ்வர்யாவை பார்க்கும்போதெல்லாம் தியேட்டர் அல்லோல கல்லோலப் படுகிறது. தூள் பறத்துகிறார் ரஜினி.

சனாவாக ஐஸ்வர்யா. ஷங்கர் என்ன வீடு படமா எடுக்கிறார், ஐஸ்வர்யா ராய்க்கு நிறைய்ய வேலை கொடுக்க! நல்ல வித விதமா ட்ரெஸ் போட்டுக்கோ, ரகுமான் 6 பாட்டு போட்டுக் கொடுத்திருக்காரு, யாருமே பாக்காத இடத்துக்கு கூட்டிட்டு போறேன் (யூனிட் பூராவும் தாம்மா! நல்லா வேலைய கெடுத்த போ!), நல்லா பாடி, ஆடு...அப்புறம் அப்போ அப்போ இந்த பக்கம் அந்த பக்கம் வந்து போம்மா என்று விட்டு விட்டார். அதை அவரும் செவ்வனே செய்திருக்கிறார். எனக்குத் தெரிந்து, ரஜினி ஐஸ்வர்யாவை படையப்பாவில் நீலாம்பரி கேரக்டரில் நடிக்க வைக்க நினைத்தார். நல்ல வேலை அது கை கூடவில்லை. ரம்யா தான் அதற்கு சரியானவர் என்பது என் அபிப்ராயம். ஐஸ்வர்யா என்ன தான் நடித்தாலும் அவரின் அழகும் பொலிவும் அதை மறைத்து விடும் என்றே தோன்றுகிறது! ஆனால் என்ன தான் மேக்கப் போட்டாலும், ஆணின் 60 வயது எளிதாய் மறைந்து விடுகிறது, ஆனால் பெண்ணின் 35 வயதை மறைப்பது கொஞ்சம் கஷ்டம் தான் போலும்!

பாடல்களை கேட்டதும் உங்களுக்கே புரிந்திருக்கும், எது எங்கு வரும் என்று. எஸ் பி பி பாடி விட்டாலே அது முதல் பாடலாய் தான் இருக்க வேண்டும். புதிய மனிதாவில் படம் தொடங்குகிறது, ரோபோவை கண்டுபிடித்தது போக, வாங்க பழகலாம் டைப்பில் ஐஸ்வர்யாவை லவ்வடிக்கும் போது காதல் அணுக்களும், கிளிமாஞ்ஜாரோ இடைவேளைக்குப் பிறகும் வருகிறது! அரிமாவும், இரும்பிலேயும் ரோபோ ரஜினிக்கு! ஷங்கருக்கு பாடலுக்கு முன் வரும் காட்சியில் ஒரு பானை வந்தால், பாடலில் அதுவே ஒரு 10,000 வேண்டும். ரோபோவை பற்றி கேட்ட்க வேண்டுமா? 1000 ரோபோ ரோபோ ரஜினியுடன் ஆடுகிறது. அந்த வேஷம் கட்டி ஆடுபவர்கள் பாவம் (கருமம் எங்கெங்கெயோ வேர்க்குதே!!)

டானி வில்லன். ரோபோ ரஜினியை தன் சொல்படி எல்லாம் ஆட்டுவிக்க முயற்சிக்கிறார். இறுதியில் ஒரு பெரிய ஹைடெக் குடவுனில் பரிதாபமாய் சாகிறார். மற்றபடி படத்தில் வேறு யாருக்கும் அதிக வேலையில்லை என்றே சொல்ல வேண்டும். சிட்டியிடம் சந்தானமும், கருணாஸும் படும் பாடு சில இடங்களில் கல கல! மற்றபடி நாங்களும் ஷங்கர் படத்தில் நடிச்சிருக்கோம் என்பது போல் வந்து போகிறார்கள்.
ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ஃபுல் மீல்ஸ் ரெடி! மற்றபடி ஷங்கரிடம் இருந்து மற்றொரு பிரம்மாண்ட இரைச்சல்! சங்கர் சார், ஒரு சேஞ்சுக்கு உங்கள் "அழகிய குயில்" ஃபைலை தூசி தட்டி எடுங்களேன்! ஒரு அமைதியான, அடக்கமான, ஆழமான படம் என்றால் எப்படி எடுக்கிறீர்கள் என்று பார்ப்போம்!

டிஸ்க்ளைமர்: கவலைபடாதீங்க, நான் எந்த பிரீமியர் ஷோக்கும் போகலை! ஜக்கு பாய் மாதிரி எந்திரனுக்கு திருட்டு வீசிடியும் வரலை. எல்லாம் ஒரு ஆற்றாமை தான்! பின்ன என்ன? படம் வந்ததும் என்னமோ பண்ணி நீங்க எல்லாம் மொதோ நாள் பாத்துட்டு வந்து கலந்து கட்டி விமர்சனம் போட்ருவீங்க! நான் படம் பாத்துட்டு விமர்சனம் எழுதும்போது ஷங்கரே அடுத்த படம் எடுத்து முடிச்சிடுவாறு! அப்புறம் நான் சிவாஜிக்கு எழுதின மாதிரி தான் விமர்சனம் எழுதணும்! இது தேவையா? அதான் இன்னும் வெளி வராத தலைவர் படத்துக்கு விமர்சனம் எழுதி எஸ்டிடில (எஸ்டிடின்னா? வரலாறு தான்!) இடம் புடிச்சிட்டேன்! உண்மையிலேயே படம் பார்த்த பிறகு நான் மேல் சொன்ன விஷயங்களில் எத்தனை வேறுபட்டு இருக்கின்றன என்று பார்க்க வேண்டும்! அதுவும் இல்லாம ஷங்கர்/ரஜினி படம் எல்லாம் ஒரே மெனு தானே! எதை எவ்வளவு எங்கே போடணும்னு தெரிஞ்சா போதாது! என்ன நான் சொல்றது?

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பெய்யெனப் பெய்யும் மழை

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை. தமிழ் சினிமா ஹீரோயின் மாதிரி மழை என்றால் மிகவும் பிடிக்கும். அந்த நாட்களில் நான் படித்த பெய்யெனப் பெய்யும் மழை - வைரமுத்து கவிதைத் தொகுப்பு மிகவும் பிடித்துப் போனதால் இந்தப் பெயரை வைத்தேன்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

என்ன சொல்வது? குஷ்பு திமுகவில் சேர்ந்தது, புவனேஸ்வரி அரசியலில் குதித்தது, டி. ராஜேந்தரை நாம் பொருத்துக் கொள்வது...இவையெல்லாம் நம் கையிலா இருக்கிறது? இப்படி எத்தனையோ டார்ச்சர்களை போல் தான் நான் வலை பதிய ஆரம்பித்தது! விதி வலியது!

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களின் இடையே ஏ.வி.எம். ராஜன், ரவிச்சந்திரன் போன்றவர்களும் காலம் தள்ளியதை போல் தான் நானும் என் வலைப்பதிவும். என் வலைப்பதிவு பிரபலமாக இதுவரை ஒன்றும் செய்யவில்லை. அதனால் அத்தனை பிரபலமும் ஆகவில்லை என்பது என் எண்ணம்.

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

உண்டு! சொந்தச் சரக்கு அல்லாமல் நன்றாக எழுதத் தெரிந்தால் நான் எழுத்தாளன் ஆகியிருப்பேனே! வலைப்பதிவில் ஏன் எழுதிக் கொண்டிருக்க போகிறேன்? "இப்படித்தான்டா அன்னைக்கு நான்" என்று எதெற்கெடுத்தாலும் தன்னைச் சுற்றியே கதை பின்னும் மரபு நம் தமிழ் மரபு! அதிலிருந்து நான் மட்டும் தப்ப முடியுமா?
விளைவு சாதகாமாயும் இல்லை; பாதகமாயும் இல்லை!

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

சம்பாதிக்கும் நோக்கம் அறவே இல்லை. மனதிற்குப் பிடிக்கிறது, செய்கிறேன்.

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?

ஒன்னே ஒன்னு! கண்ணே கண்ணு!

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன் ?

சில மொக்கை பதிவுகளுக்கு ஐம்பது, நூறு என்று கமெண்ட்டை பார்த்தால் பொறாமையாய் இருக்கும். அது உண்மை. பிறகு சாரு போல், தமிழ்நாட்டில் எழுத்தாளனை யார் மதிக்கிறா? என்று என்னை தேற்றிக் கொள்வேன்! (இப்போ சாருவுக்கு எப்படி இருக்கும்?)

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

நான் பெங்களூரில் இருந்த போது ஒருவர் என் பதிவுகளை படித்து விட்டு என்னை சந்திக்க வேண்டும் என்று விரும்பினார். நானும் என் எல்லா எழுத்துப் பணிகளையும் ஒத்தி வைத்து விட்டு (டேய், டேய்!!) அவரை அன்று மாலையே சந்தித்தேன்! என்னுடன் பேசிய அந்த கொஞ்ச நேரத்தில் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஒரு வலைபதிவை ஆரம்பித்தார். அதில் எல்லா உண்மைகளையும் போட்டு உடைப்பேன் என்றார். பாருங்கள்! நீங்களே மிரண்டு விடுவீர்கள்! இங்கே

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.

அப்புறம் என் சுய சரிதை எப்படி விற்கும்? போங்க சார்!

கொசுறு: நான் ஏற்கனவே எழுதிய சில சுய குறிப்புகள் இங்கே!