எனக்கு 58 வயது ஆகிறது. நான் என்னைக் கண்ணாடியில் பார்க்கும்போதெல்லாம், என் பால்யத்தில் இதே வயதில் இருந்த என் அப்பாவை பார்த்த நினைவு வருகிறது. என் அப்பாவின் வயதை ஒத்த நண்பர்கள், அண்டை வீட்டார்கள், "அப்படியே, உன் அப்பனை உரிச்சி வச்சுருக்கே!" என்று சொல்லாத நாளில்லை.  அது பெரிய பெருமை இல்லை தான். கரிய நிறம், குழி விழுந்த கண்கள், ஒடுங்கிப் போன கன்னமுமாய்த் தான் என் அப்பா இருந்தார். இப்போது நான் இருக்கிறேன்.

என்னோடு சேர்த்து அவரின் ஐந்து வாரிசுகளை பார்த்தால், அவரின் ஆண்மையை நினைத்து அவர் பூரிப்பு கொண்டிருக்க முடியுமே தவிற, வேறு ஒன்றும் பெரிதாய் அவரால் செய்ய முடியவில்லை. அவரும் என்ன செய்வார்? படிப்பு வாசனை கிடையாது. ஒரு பொரிகடலை கடையில் தான் வேலை பார்த்தார். அம்மா, வீட்டு வேலைக்குப் போவாள். அவர்களின் வருமானத்தில் ஏழு பேர் வாழ்வதே கஷ்டம். எங்கிருந்து படிப்பது. அவரால் படிக்க வைக்க முடியவில்லை என்றோ, எனக்கு படிப்பு வரவில்லை என்றோ ஏதோ ஒரு காரணத்துக்காக நானும் அதிகம் படிக்கவில்லை. பள்ளி என்றாலே பனிமூட்டமாய் தூரத்தில் ஒரு கனவு மாதிரி ஒரு நினைவு வருகிறது. எது வரை படித்தேன் என்று கூட நினைவில்லை.

படித்தவனுக்கு சில வேலை, படிக்காதவனுக்கு பல வேலை என்று சொல்வது போல், இங்கு தொட்டு, அங்கு தொட்டு, இதைச் செய்து, அதைச் செய்து, இதோ வாழ்க்கை, அதோ சந்தோஷம் என்று இல்லாத ஒன்றை தேடி எட்டி எட்டி ஓடி இன்று இந்த யுனிஃவார்ம் சட்டைக்குள் என் உடல் தேடும்படியான தோற்றத்துடன் ஒரு செக்யுரிட்டியாய் ஒரு அபார்ட்மென்ட்டில் உட்கார்ந்திருக்கிறேன்.

நான் அந்த அபார்ட்மென்டில் செக்யுரிட்டியாக வேலைக்குச் சேர்ந்து இன்றோடு ஆறு மாதமாகிறது. வேலை ஒன்றும் பெரிதாய் இல்லை. அபார்ட்மென்டின் இறுதியில் திருப்பத்தில் ஒரு ஸ்டூலைப் போட்டுக் கொண்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் வண்டிகளை எதிர்நோக்கி உட்கார்ந்திருக்க வேண்டியது. டெலிவரி செய்ய வரும் பசங்களிடம் எந்த ப்ளாக் எங்கே இருக்கிறது என்று சொல்ல வேண்டியது. மெயின் செக்யுரிட்டியில் இருந்து மோட்டார் போடச் சொன்னால் போட வேண்டியது. குழந்தைகள் தாறுமாறாய் ஓடும் போது பணிவாய் "வண்டி வரும், வீட்டுக்கு ஒடுங்க" என்று விரட்ட வேண்டியது. வாரத்துக்கு ஏழு நாள் தான் வேலை. சம்பளம் பிடித்தம் போக ஏழாயிரத்து அறுநூறு. எங்களை பாதுகாப்பதாகச் சொல்லி, நீ உன்னை பாதுகாத்துக்கொள் என்று ஒரு வேலை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

வேலைக்குச் சேரும்போது மெயின் எண்ட்ரன்ஸில் தான் போடுவார்கள் என்று நினைத்தேன். அங்கு இருந்தால் வருவோர் போவோரிடம் விசாரிப்பது, கூட இருக்கும் செக்யூரிட்டியிடம் பேசுவது என்று நேரம் போவது தெரியாமல் இருந்திருக்கும். இப்படி அபார்ட்மென்டின் ஒரு ஓரத்தில் ஒரு திருப்பத்தில் உட்கார வைத்து விடுவார்கள் என்று நினைக்கவில்லை. எப்போதோ வரப் போகும் வண்டிகளுக்காக, பெரிதும் விபத்து என்று ஒன்று நேர்ந்திட சாத்தியமில்லாத ஒரு இடத்தில், ஒரு மனிதனை நாள் முச்சூடும் ஒரே இடத்தில் சும்மாவே உட்கார வைக்க இந்த மனிதர்களை எது தூண்டுகிறது? பணமா? பதவியா? அதிகாரமா? புரியவில்லை. நான் இப்படி யோசிப்பது பாவம் தான், இவர்கள் இப்படி செய்தால் தான் என்னைப் போல ஒரு மனிதனுக்கு கால் வயிறு கஞ்சியாவது கிடைக்கிறது. இருந்தாலும், சும்மாவே எவ்வளவு நேரம் தான் உட்கார்ந்திருப்பது. அதுவும் அந்த மொட்டை வெயிலில். உச்சி பொழுதுக்கு கார் பார்க்கிங்கில் ஸ்டூலைப் போட்டுக் கொள்வேன். ஒருமுறை, அப்படி தள்ளி உட்கார்ந்து இருந்ததால், நான் ட்யுட்டியில் இல்லை என்று அந்த ப்ளாக்கை சேர்ந்த யாரோ கம்ப்ளைன்ட் செய்து விட்டார்கள். ஃபோனில் மெதுவாய் பாட்டு கேட்டேன், அதற்கும் கம்ப்ளைன்ட். எதற்கு வம்பு என்று அவர்கள் சொன்ன இடத்தில் பேசாமல், அமைதியாய் உட்கார்ந்து கொள்வேன்.

காலை, மாலை அந்த அபார்ட்மென்டை சுற்றி பலர் வாக்கிங், ஜாகிங் போவதுண்டு. அப்போது தான் எனக்கு கொஞ்சம் நிம்மதி. சில முகங்களைப் பார்க்கலாம், சில பேச்சுக்களைக் கேட்கலாம். சில பேரை பார்த்து புன்னகைக்கலாம். வாக்கிங் வரும் பெரிய மனிதர்களை பார்த்து நான் சல்யுட் வைக்க மறப்பதில்லை. யார் பெரிய மனிதர்கள் என்று கேட்டால், என்னைப் பொறுத்தவரை, அங்கு இருக்கும் எல்லோருமே பெரிய மனிதர்கள் தான். அப்படி நான் சல்யுட் செய்யும் போது, பெரும்பாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. வெகு சிலர் மட்டும் மெலிதாய் ஒரு புன்முருவல் பூப்பார்கள். சிலர் கொஞ்சமாய் தலையை ஆட்டி ஆமோதிப்பார்கள், சிலர் என் பார்வையில் படாமல் ஒதுங்கிக் கொள்வார்கள்.

யாரும் இல்லாத பகல் பொழுதுகளில் அவர்களைப் பற்றி நான் அசைபோட்டபடி யோசித்துக் கொண்டிருப்பேன். வேடிக்கையாக இருக்கும், இந்தக் கடவுள், ஒருவனை நல்ல குடும்பத்தில் பிறக்கச் செய்து, நல்ல படிப்பு கிடைக்க வழி செய்து, நன்றாகச் சம்பாதிக்க அருள் தந்து, இப்படி ஒரு அபார்ட்மென்டில் ஒரு வீட்டை வாங்கச் செய்கிறார். அதே கடவுள், என்னைப் போன்றவனையும் படைத்து, பணமில்லாமல், படிப்பில்லாமல், அறிவில்லாமல், கிடைத்த வேலைகளை செய்து, கை பிடித்து, கால் பிடித்து, தலையைச் சொறிந்து, அதே அபார்ட்மென்டில் ஒரு செக்யுரிட்டி ஆக்கி அவர்களுக்கு சல்யுட் அடிக்கச் செய்கிறார். ஒரே இனத்தைச் சேர்ந்த இருவர், ஒருவன் கும்பிடும் இடத்தில் இருக்கிறான், இன்னொருவன் அதை உதறித் தள்ளும் இடத்தில் இருக்கிறான். மேலும் மேலும் இதைப் பற்றி யோசிக்க யோசிக்க எனக்கு சிரிப்பு தான் வரும். இப்படியாக யாருமற்ற என் பகல் பொழுதுகளில் அந்த அபார்ட்மென்டின் அத்தனை மனிதர்களும் இருந்தார்கள்.

இத்தனை வகையான மனிதர்களில், ஒருவர், நான் அடிக்கும் சல்யுட்டுக்கு என்னையும் மதித்து, ஒரு புன்னகை புரிந்து பதில் சல்யுட் அடிப்பார். அவர் பெயர் தெரியாது. அவர் ஐந்தாவது ப்ளாக்கில் வசிக்கிறார். நரைத்த வழுக்கைத் தலை, நல்ல நிறம், நல்ல உயரம், எப்போதும் ஒரு டீஷர்ட், ஒரு வேஷ்டி. தினமும் மாலை வாக்கிங் வருவார். ஆழ்ந்த யோசனையுடன் நிதானமாய் நடப்பார். அவ்வப்போது என்னிடம் நின்று பொதுவாய் பேசிப் போவதும் உண்டு. என்னைப் பற்றி, என் குடும்பத்தைப் பற்றி, என் வேலையைப் பற்றி எல்லாவற்றையும் கேட்டறிவார். பேரனுக்கு கை வைத்தியம் செய்ய வேப்பங்கொழுந்து வேண்டும் என என்னை விட்டு பறிக்கச் சொல்வார். சில சமயங்களில் சாவியை மறந்து வந்து விட்டதாகவும், மூட்டு வலி இருப்பதால் திரும்பிச் செல்ல முடியாது என்றும் என்னை போய் சாவி எடுத்து வரச் சொல்வார். அவரைப் பற்றி எதுவும் அவர் என்னிடம் சொன்னதில்லை. நானாகக் கேட்டால் தப்பாக எண்ணி விடுவாரோ என்று நானும் கேட்டதில்லை.

அன்று வழக்கம் போல் மாலை வாக்கிங் வந்தவரை நான் பார்க்கவில்லை. வேறு ஏதோ சிந்தனையில் இருந்தேனா தெரியவில்லை. நான் தலையை நிமிர்த்தி பார்க்கும்போது அவர் என்னைத் தாண்டி சென்று கொண்டிருந்தார். "என்ன நினைத்துக் கொண்டாரோ, தெரியவில்லையே! என்னிடம் பேசுபவர் தானே, நான் பார்க்கவில்லை என்றால் என்ன, என்னை அழைத்திருக்கலாமே?" என்று எண்ணினேன். எப்போதையும் விட, வெகு நிதானமாய், கிட்டத்தட்ட நின்று நின்று நடந்து கொண்டிருந்தார். ஏதோ நினைத்தவர் போல் திரும்பி, என்னைப் பார்த்தார். நான் சல்யூட் வைப்பதற்கு முன் அவரே சல்யுட் வைத்தார். நான் பதறிப் போய் எழுந்து சல்யுட் வைத்தேன். திரும்பி என் அருகே வந்தவர், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "கந்தசாமி, உங்கிட்ட ஒரு அம்பது ரூபா இருக்குமா? பசிக்குது" என்றார்.