என்ன தலைப்பு பாத்து வந்தீங்களா? ஹிஹி, தெரியுமே...சரி சரி, படிங்க!

நேற்று எனக்கு நிஜமாகவே சனி உச்சத்தில் இருந்திருக்க வேண்டும்! பிரபுதேவா ஏதாவது செய்திருப்பார் என்ற நப்பாசையில் போக்கிரி பார்க்க வேண்டியதாகிவிட்டது. படத்தை விட்டு வரும்போது என் சட்டை முழுதும் ரத்தம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், அத்தனை வன்முறை! கமலின் சண்டியருக்கு போர்க்கொடி தூக்கிய கனவான்கள் இப்போது எங்கப்பா ஒளிந்து கொண்டீர்கள்? போக்கிரி, ஆழ்வார், தாமிரபரணி மூன்றும் சாரமாறியாய் போட்டுத் தள்ளும் படங்கள் தான்! அடுத்த வீட்டுப் பையன் மாதிரி இருக்கான்னு சொல்லி சொல்லி, இன்னைக்கு பெரிய அருவாளை கைல வச்சுட்டு நிக்கிறார் விஷால்!

டிக்கட் எடுத்துக் கொண்டு உள்ளே செல்லும்போது நம்ம லிங்குவிடம் [அதாங்க நம்ம பீமா லிங்குசாமி] பேசிக் கொண்டிருந்தேன்! [என்ன கற்றதும் பெற்றதும் சாயல் அடிக்குதா?] என்ன சார் இந்த படம் எல்லாம் பாக்க வந்துருக்கீங்க? இது நான்! ஏன்பா, இந்த படம் நல்லா இருக்காதா? இது அவர்..இல்லை இது மாஸ் படமாச்சே, நீங்க எப்படி? இந்த மாதிரியும் ஒரு படம் எடுக்கனும்ல..அதான்! ஏன் சார், விக்ரம் வைச்சி இப்படி படம் தான் எடுக்குறீங்களா? இல்லை இல்லை..அதற்குள் தியேட்டரின் இருட்டில் கலந்து விட்டோம்!

படத்திற்கு போக்கிரிலு என்று பெயர் வைத்திருக்கலாம்! அப்பட்டமானலு தெலுங்குலு படம்லு!! முடியலலு!!

எனக்கு ஒன்று (அல்ல ஒன்றுக்கு மேல்) புரியவில்லை! இந்தப் படம் ஏன் தெலுங்கில் ஹிட் ஆனது? தெலுங்கில் இப்படி ரத்தக்களறியாய் இதற்கு முன் ஒரு படம் கூட வந்ததில்லையா?

நிற்க

இன்று அது ஏன் தமிழில் இப்படி ஓடுகிறது? தமிழ் மக்களுக்கு என்ன ஆகிவிட்டது? விஜய் என்ன படம் நடித்தாலும் பார்ப்பார்களா? மாஸ் ஹீரொ, மாஸ் ஹீரோ என்று இப்படிப்பட்ட படங்களாய் எடுத்து இன்னும் தமிழ் சினிமாவை பாழ் படுத்தப் போகிறோமா? கலைஞர்களுக்கு கொஞ்சம் கூட சமூக பொறுப்பு இல்லையா? எம்.ஜி.ஆர் என்றொரு மாஸ் ஹீரோ தன் எல்லா படங்களிலும் உதாரண புருஷனாய் வாழ்ந்து காட்டினார்! ரஜினி என்றொரு மாஸ் ஹீரோ தன் ஸ்டைலாலும், மேனரிஸங்களாலும் மக்களை குஷிபடுத்தினார்! விஜய் என்ற மாஸ் ஹீரோ எல்லா படங்களிலும் அரிவாளுடனும், துப்பாக்கியுடனும் எல்லோரையும் போட்டுத் தள்ளுகிறார்! அதிலும் இந்தப் படத்தில் கடைசியில், தான் ஒரு போலிஸ் அதிகாரி என்று வேறு அடையாளம் காட்டிக் கொள்கிறார்! [என்ன வேணா சொல்லுவீங்களா..ஒரு நியாய தர்மம் வேண்டாம்?]

படம் முடியும் தருவாயில் விஜய் துப்பாக்கியால் ஒருவரை துளைத்து கொண்டிருந்தார். தியேட்டரில் மயான அமைதி. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு குழந்தை திடீரென்று சத்தம் போட்டுக் கை கொட்டி தன் விஜய் மாமாவை பார்த்து சிரித்தது! படம் முடிந்தவுடன் அந்தக் குழந்தையின் தந்தையிடம், நான், குழந்தைகளை இந்த மாதிரி படத்துக்கெல்லாம் கூட்டிட்டு வராதீங்க என்றேன்! அவர் ஆமோதித்து தலையில் அடித்துக் கொண்டார்!

வெளியே வரும்போது லிங்குசாமி கண்ணில் படவில்லை. அவர் வேறு இப்படி ஒரு படத்தை எடுத்து தொலைத்து விடப் போகிறார் என்று அடி வயிற்றைக் கலக்குகிறது! உங்கள் யாருக்காவது அவரைத் தெரிந்தால் கொஞ்சம் சொல்லி வையுங்கள்!

அமேரிக்காவில் என்ன வியாபாரம் செய்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும் என்று எனக்குப் புரிகிறது! இல்லையென்றால் நீங்கள் சூ செய்யப்படுவீர்கள். அதாவது, பாதிக்கப்பட்டவர் உங்கள் வியாபாரத்தின் மீது வழக்கு தொடர்ந்து பல மில்லியன் டாலர்கள் வரை நஷ்ட ஈடு கேட்கலாம். மேலோட்டமாக, இங்கு மோட்டல் வைத்திருந்த ஒரு இந்தியரைப் பற்றி கேள்விப்பட்டேன். அவருடைய மோட்டலில் ஒரு நாள் தங்க வந்தவர், கால் தடுக்கி விழுந்து விட்டார். மோட்டல் ஓனரின் அறியாமையாலும், அஜாக்கிரதையாலும் தான் நான் தடுக்கி விழுந்தேன். இவர் எனக்கு இத்தனை மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று வாதாடி கடைசியில் அந்த இந்தியர் தன்னுடைய மோட்டல் சாவியை அவர் கையில் கொடுத்து விட்டு வெறும் கையுடன் நடையைக் கட்டினாராம். பார்த்தீர்களா கொடுமையை..

ஸ்டார் பக்ஸில் [இது ஒரு மில்லியன் டாலர் கம்பேனியாமே அப்படியா?] ஒரு காபி குடிக்கும்போது அந்த கப்பில் கவனித்தேன். நீங்கள் குடிக்கப் போவது மிகவும் சூடானது என்று ஒரு எச்சரிக்கை, நானும் மெதுவாக வாய் வைத்து மெல்லமாய் உறிஞ்சினேன், காபி ஆறிப் போய் பல மணி நேரம் ஆகியிருந்தது..அதே போல் காபி கப்பில் ஏதாவது பொன் மொழி இருப்பதுண்டு. பொன்மொழி 1 வரி இருந்தால், அது எங்கள் கருத்தல்ல, எழுதியவரின் கருத்து..இதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்ற எஸ்கேப்பிஸம் 10 வரியில் இருக்கும். [சரிடா, இப்போ உங்களை என்ன சொல்லிட்டோம்] நானும் சரி இப்படி ஏதாவது நொள்ள சொல்லி ஒரு மில்லியன் டாலர் வாங்கிட்டு இந்தியா போய் செட்டில் ஆகிடலாம் என்றால் ஒரு குறையும் கண்ணுக்கு தெரிய மாட்டேன் என்கிறது..[குறை சொல்லியே பேர் வாங்கும் புலவர்கள் மத்தியில் அடியேனை பார்த்தீர்களா?]ஒரே வழி, நான் இங்கு ஒரு குறையும் பார்க்க முடியவில்லை என்று வழக்கு தொடர்வது தான்!

நம் ஊர் போல் இங்கு ரயிலை அதிகமாக உபயோகிப்பதில்லை. எல்லாம் சாலை வழி தான்! ஒவ்வொரு ஃப்ரீ வேயிலும் [நம் ஊரில் இது ஹைவே!] ஒவ்வொரு காரும் 80, 90, 100 மைலில் பறக்கிறது. அந்த ரோட்டில் அழகை என்னவென்று சொல்வேன். நீங்கள் செல்ல வேண்டிய லேனில் இருந்து சற்று விலகி எதிர் லேனில் சென்று விட்டால் டயரில் கிரீச் சத்தமிட்டு நீ தவறான பாதையில் செல்கிறாய் என்று எச்சரிக்கிறது! அட அட அடா...அனுமதிக்கப்பட்டிருக்கும் வேகத்தை மீறி செல்லும் வண்டிகளை கண்காணிக்க அங்கங்கு ரேடார் பொறுத்தப்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு அத்துவானக் காட்டில் உள்ள ரோட்டில் கூட ஒரு குப்பை இல்லை. அமேரிக்க மக்களின் சுய ஒழுக்கம் அந்தச் சாலைகளில் பிரதிபலிக்கிறது! நான் பார்த்த வரை நம் ஊர்களில் இருப்பதைப் போல் சாலை ஓரங்களில் அதிக மரங்கள் இல்லை. எல்லாம் பரந்து விரிந்த வெறும் நிலமாகத் தான் இருக்கிறது. ஒரு வேளை சாலை ஓரங்களில் கண்ட இடங்களில் நம் மக்களைப் போல் சிறு நீர் கழிக்க முடியாததாலோ என்னவோ! [புரியலை? மரம் வளர உரம் வேணாமா ஹிஹி] போர் காலங்களில் ஆகாய விமானங்கள் இறங்க ஓடு தளங்களாகவும் இந்த சாலைகளை உபயோகிப்பார்களாம்! அப்படி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எத்தனை விசாலமான, தூய்மையான சாலைகள் என்று!

நிற்க

மோன்டனா [ஹெலினா, வேலைக்கு வந்த இடம்]
நெவேடா [லாஸ் வேகஸ்]
அரிசோனா [கிராண்ட் கேன்யன்]
செளத் டகோடா [மெளன்ட் ரஷ் மோர்]
வையோமிங் [யெல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க்]
நியு யார்க் [நியுயார்க் நகரம்]
மேரி லேன்ட் [பால்டிமோர்]
கலிஃபோர்னியா [லாஸ் ஏஞ்சல்ஸ்]

வந்து மூன்று மாதங்களில் அமேரிக்காவின் 8 மாநிலங்களை பார்த்து விட்டேன்! இது நானே எதிர்பார்க்காத ஒன்று! என் நண்பர்கள் வட்டத்தில் யார் அமேரிக்கா சென்றாலும் பணம் சேமிக்கனும்னு நினைக்காதே, நல்லா ஊர் சுத்தி பார் என்பது தான் என்னுடைய வேண்டுகோளாக இருக்கும்! அதை என் விஷயத்தில் அச்சரம் பிசகாமல் செய்திருக்கிறேன் என்பதில் எனக்கு பரம திருப்தி! ஏக சந்தோஷம்! எத்தனை விதவிதமான ஊர்கள், மனிதர்கள், கலாச்சாரங்கள், நாகரீகங்கள், பழக்க வழக்கங்கள்! அடேயப்பா..வெறும் 2 அல்லது 3 லகரங்களை சேர்த்து வைப்பதற்காக இத்தனை அனுபவங்களை இழப்பதா?

அடுத்த வார இறுதியில் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு இந்தியாவுக்குப் புறப்படுகிறேன்! அமேரிக்காவில் முக்கியமான அனைத்து பெரு நகரங்களையும் பார்த்தாயிற்று! ஒரே குறை நயாகாராவை பார்க்க முடியவில்லை..குளிர் காலத்தில் அது உறைந்து விடுவதால் அனுமதி கிடையாதாம். உறைந்து போன அருவி, கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்...ம்ம்ம்ம் நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்! அடுத்த டார்கெட் ஐரோப்பா தான்!

உலகம்..அழகு கலைகளின் சுரங்கம்!
பருவச் சிலைகளின் அரங்கம்!!

முன்னாலேயே போட்டிருக்க வேண்டிய பின்குறிப்பு: அமேரிக்காவைப் பற்றிய என் பதிவுகள் அத்தனையும், நான் பார்த்தவைகளையும், கேள்விப்பட்டவைகளையும் கொண்டு முழுக்க முழுக்க என் பார்வையில் எழுதப்பட்டது..இதில் தவறிருக்கவும் வாய்ப்புண்டு!

- பயணங்கள் முடிவதில்லை!