ஒரு வழியாய் அமெரிக்காவிற்கு ஒரு தற்காலிக (கவனிக்க) கும்பிடு போட்டு விட்டு வந்தாகி விட்டது! முப்பது வருடங்கள் வாழ்ந்த இந்தியாவை ஒரு வருடம் வாழ்ந்த அமெரிக்கா வெறுக்கச் சொல்கிறது! இது தான் நம் இடம் என்று மனதை தேற்றிக் கொண்டிருக்கிறேன். அது அப்படி ஒன்றும் கடினமாக இல்லை. அமெரிக்காவிலிருந்து வந்ததும் தண்ணீரினால் வரும் எந்த வித உபத்திரவங்களும் எனக்கு நேராததை வைத்துப் பார்க்கும் போது நான் இன்னும் அமெரிக்கா வாழ் இந்தியன் ஆகிவிடவில்லை என்று தோன்றுகிறது. ஒரு வருடத்தில் நிறைய காம்ப்ளான் குடித்து வளர்ந்திருப்பது விலைவாசி தான்! ஒரு செவ்வெழனி 28 ரூபாயா என்று வாய் பிளந்து கேட்டேன். இத்தனை நாள் உள்ள இருந்தியா என்று கேட்காமல் விட்டானே அது வரை சந்தோஷம்!

அலுவலகத்தில் இப்போ தான் வந்திருக்கான், கொஞ்சம் விட்டு புடிப்போம் என்று வைத்திருக்கிறார்கள். அலுவலகத்தில் ஆர்குட், ட்விட்டர் என்று எதுவுமே வருவதில்லை. ட்விட் செய்து பழகி விட்டதால் கை அரிக்கிறது! கடந்த சில தினங்களில் என் சென்னை அனுபவங்களை இங்கேயே ட்விட்டுகிறேன். 140 எல்லை இங்கு இல்லை!

சென்னையில் மழை காலத்தில் சாலையில் வண்டியை பார்த்து ஓட்ட வேண்டும்!நீங்கள் அதிர்ஷ்டசாலியாய் இருந்தால் சாலையில் மேடும் இருக்கும்!

நேற்று மழையில் நனைந்ததால் இன்று காலை மழை சட்டை (செம்மொழியான தமிழ் மொழியாம்!) போட்டுக் கொண்டேன்.கதையில் ஒரு ட்விஸ்ட்? மழை பெய்தது!

நண்பன் வீட்டிலிருந்து கிளம்பும்போது எல்லாம் எடுத்துக் கொண்டேனா என்று சரிபார்த்துக் கொண்டேன். பாதி வழியிலேயே மழை சட்டையை மறந்தது ஞாபகம் வந்தது! பாதி தூரத்திலயே!!! ஆஹா என்னே என் ஞாபக சக்தி!!

பறக்கும் ரயிலில் பயணிக்கும்போது சென்னையில் பல இடங்கள் அற்புதமாய் தெரிகிறது! உடனே இறங்கி அந்த இடத்திற்குப் போக வேண்டும் என்று தோன்றுகிறது. உங்களுக்கு?

நான் உனக்கு முன்னால் சென்று கோணலானவைகளை செவ்வையாக்குவேன் - ஏயாசா
எனக்கு முன்னால் கோணலாக சென்று நின்ற ஆட்டோவில் இருந்த வாசகம்!

"என்ன வர்றீங்களா?" ஒரு மாமி, ஆட்டோகாரரிடம்! அரைகுறையாய் காதில் விழுந்தால் எத்தனை ஆபாசம்!