சில நாட்களுக்கு முன் யுட்யுபில் ஒரு வீடியோ பார்த்தேன். அமெரிக்காவில் என்று நினைக்கிறேன், முன் பின் தெரியாத ஒரு இருபது பேரை அழைத்து [கவனிக்க, முன் பின் தெரியாதவர்கள்!] முத்தம் கொடுக்கச் சொல்லி அவர்களின் உணர்வுகளை பதிவு செய்தார்கள்! [எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்க!] கம்பீரமான ஆண், அழகிய பெண், வயதான பாட்டி, ஓரினச் சேர்கையாளர்கள் ஆண்கள், பெண்கள் என்று ஒவ்வொரு ஜோடியும் முத்தம் கொடுக்கும் முன்னும், பின்னும் அவர்களின் மன ஓட்டங்களை, முக பாவனைகளை மிக அருமையாய் படம் பிடித்திருந்தார்கள். அதன் வீடியோ இங்கே...



அதை தொடர்ந்து இந்தியாவில் இப்படி ஒன்று நடந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை [கவனிக்க, கற்பனை மட்டும் தான்!] செய்து ஒரு குறும்படத்தை வடநாட்டினர் வெளியிட்டார்கள். நம் நாட்டில் கலாச்சாரம், கருமாந்திரம் என்று ஆயிரத்து எட்டு விஷயங்கள் இருக்கும்போது மென் உணர்வுகளை எங்கே பதிவு செய்வது? ரணகளமான ஒரு கற்பனை தான் அது! நீங்களே பாருங்கள்...


முதல் வீடியோ பார்த்ததும் எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் என்று ரசித்துவிட்டு அப்படியே மறந்து விட்டேன். அடுத்து நம் வடநாட்டினரின் வீடியோவை பார்த்ததும், "அட செமையா இருக்கு? இதே மாதிரி, நம் தமிழ்நாட்டில் நடந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து ஒரு குறும்படத்தை எடுக்கலாமே!" என்று ஒரு விபரீத ஆசை எழுந்தது...கற்பனை செய்ய செய்ய இன்னும் ரணகளமாய் இருந்தது. துணிந்து   விட்டேன்...

கமல் ஸ்டைலில் சொல்வதென்றால் "மன நிறைவு பெரும் தருவாயில்..."
விஜய் ஸ்டைலில் சொல்வதென்றால் "even, i am w.a.i.t.i.n.g..."




இன்று என் முதல் குறும்படம் "விடியல்", "ஐ" டீவியில் "ஐ" தியேட்டர் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. இந்த சேனல் ஆரம்பித்து ஒரு வாரம் தான் ஆகிறதாம். இப்போதைக்கு அரசு கேபிளில் தான் வருகிறதாம். படத்தை பார்த்து விட்டு பார்வையாளர்கள் நிகழ்ச்சிக்கு ஃபோன் செய்து என்னோடு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். [நேயர்கள் தொலைபேசியில் பேசுவார்கள் என்று சத்தியமாய் எனக்குத் தெரியாது!] அதில் ஒருவர் "படம் மிக அருமையாய் இருந்தது, ஆனால் முழுதாய் பார்க்க முடியவில்லை, வீட்டில் கரண்ட் போய் விட்டது!" என்றார்.  க்ளைமேக்ஸ் பார்க்காமல் "விடியல்" படம்  பார்த்தால் எவனோ ஒருவன் ஊர் சுற்றுவதை எடுத்தது போல் தான் இருக்கும். அவருக்கு என்ன புரிந்தது என்று தெரியவில்லை. ஒன்று நிச்சயம் நம் நாட்டில் இனிமேல் க்ளைமேக்ஸ் காட்சியில் ட்விஸ்ட் வைத்து படம் எடுக்கக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்!

அடுத்து பேசியவர் பெயர் "சரவெடி" சாமிநாதன்! படத்தை பாராட்டி பேசினார். இப்படி சிவரஞ்சனி, அம்பத்தூர் திவ்யா, கார்த்திகேயன், தயாநிதி என்று ஐந்து பேர் பேசினார்கள். கணையாழியின் கடைசி பக்கத்தில் சுஜாதா, ரேடியோவில் "நேயர் விருப்பம்" நிகழ்ச்சியில் பாடல்களை விரும்பிக் கேட்பவர்களின் பெயர்களை சொல்வார்கள். அதை உன்னிப்பாய் கவனித்து, சில பெயர்களை குறிப்பிட்டு "இவர்கள் எப்படி இருப்பார்கள்?" என்று எழுதி இருப்பார். அது தான் என் நினைவுக்கு வந்தது! வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி!

எப்படியோ, எதிர்பாராமல் அமைந்த ஒரு புதுமையான அனுபவம். நாளை கலை 10 மணிக்கு மறு ஒளிபரப்பு என்று சொன்னார்கள். வீட்டில் அரசு கேபிள் வைத்திருப்பவர்கள், சேனல் வந்தால், வேறு வேலை எதுவும் இல்லையென்றால் முயற்சி செய்து பாருங்கள். www.interactivetv.tv வழியாகவும் பார்க்கலாம் என்றார்கள். இன்று வீட்டில் உள்ளவர்கள் முயற்சித்து தோல்வி அடைந்தார்கள். நீங்கள் நாளை முயற்சி செய்து பாருங்கள்.

ஹே...எல்லாரும் நல்லா பாருங்க, நான் டீவியில வந்துட்டேன், டீவியில வந்துட்டேன்..நானும் செலிப்ரிட்டி தான்!