மழை பெய்து கொண்டிருக்கிறது, உள்ளும் புறமும்! புறத்தில் வான் மழை; உள்ளத்தில் அவள் மழை! குளிர் காற்று முகத்தில் அறைகிறது, அவளுடைய பார்வை அவன் முகத்தில் அறைவதைப் போல் உணர்கிறான். மழையின் மெல்லிய சாரல் கேட்கிறது. அவளுடைய புன்னகையாய் அதை வரித்துக் கொள்கிறான்! இயற்கையின் அத்தனை அசைவுகளையும் அவனுக்கு ஏற்றவாறு அவளை வைத்தே மொழி பெயர்த்துக் கொள்கிறான்! ஏதோ ஒரு காலத்தில் சென்று கொண்டிருந்த ஒருவனை திடீரென்று வாழ்க்கை வசந்த காலத்தில் எதிர்பாராத விதமாய் தள்ளி விட்டதாய் நினைத்துக் கொள்கிறான்! கவிதைகளும், காவியங்களும், அது சொல்லும் காதலும் மெல்லப் புரிவதாய் உணர்ந்து சிரிக்கிறான். வாழ்க்கை இத்தனை அழகா என்று பிரமிக்கிறான். உலகின் சுகங்கள் அத்தனையும் தனக்குப் பிடித்த பெண்ணின் சிரிப்பில் அடக்கமா என்று வியக்கிறான். அவனுடைய காதலால் உலகமே சுபிட்சம் பெற்று விட்டது போல் தோன்றுகிறது. எல்லோரும் சந்தோஷமாய், அழகானவர்களாய், நல்லவர்களாய் தெரிகிறார்கள். வறுமை, சோகம், தீவிரவாதம், கோபம், வஞ்சகம் இப்படி அத்தனையும் தனிக்கை செய்யப்பட்டே அவன் பார்வைகளில் விரிகின்றன! அவனுடைய இதயத்தில் வெள்ளமென பொங்கி வழிகிறாள் அவள்.

அவளுடைய நினைவுகளே அவனை அழுத்துகின்றன. அதில் மிக சுலபமாக, சுகமாக அமிழ்ந்து போகிறான். இரவு வந்தும் அவன் அவளோட கழித்த பகல்களை இன்னும் விட்டு வரவில்லை. வர முயலவில்லை என்பதே உண்மை! நிலவு வந்த பின்னும் அவன் கதிரின் வெம்மையையும், அவள் கை கோர்த்து வேர்த்துப் பிசுபிசுத்த பொழுதுகளையும் எண்ணிப் பார்த்துக் கொள்கிறான். காலம் அவனை மட்டும் அதே இடத்தில் விட்டு விட்டு சென்று விட்டது. யாருமற்ற ரயில் நிலையத்தில் தொலைந்த குழந்தையை போல் தனியே நிற்கிறான், தான் தொலைந்திருப்பது புரியாமல்!

எங்கு இருந்தாலும், எப்படி இருந்தாலும் அவளுடனே இருப்பதாக உணர்கிறான். அவளுடைய வார்த்தைகளே காதுகளைச் சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. யார் எதைக் கேட்டாலும் ஏதோ ஒப்புக்காக பதில் சொல்கிறான். அடிக்கடி தனியாய் சிரித்துக் கொள்கிறான். அடிக்கடி கண்ணாடி பார்க்கிறான். தன்னை மிகவும் அழகாய் உணர்கிறான். அவள் அங்கு இல்லாவிட்டாலும் அவளுடன் பேசிக் கொண்டே இருக்கிறான். யோசனைகள் குறைந்து விட்டது. அறிவின் அளவு சிறுத்து விட்டது. உடலின் அத்தனை பாகங்களும் இதயமாகிவிட்டதைப் போல் உணர்கிறான். உலகில் அவனும், அவளும் மட்டும் இருக்கிறார்கள்! இப்படியே நினைத்துக் கொண்டிருக்கும் சில காதலர்களும் ஆங்காங்கே மயக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். யாரைப் பற்றியும் யாரும் கவலைபடுவதில்லை. அது வேறு உலகம். எங்கும் ஏகாந்தமே சூழ்ந்திருக்கிறது. அந்த நொடியை முழுதாய் அனுபவித்து வாழவே விரும்புகிறான். அவளோடு சேர்ந்தே வானத்தை பார்க்கிறான். கண்களில் மழைத் துளி விழுகிறது!

காதல் என்பது
திறந்த கண்களால்
மழைத்துளி வாங்குவது போன்றது!
அதன் சுகம் கொடுமையானது!!

என்று என்றோ படித்த கவிதை அரைகுறையாய் ஞாபகம் வருகிறது. அப்படியே அதை அனுபவித்துக் கொள்கிறான். தூரத்தில் ஒரு இடி முழங்கி அவர்களை வாழ்த்துகிறது. அப்படி அவன் நினைத்துக் கொள்கிறான். இன்று மண்ணோடும், மனதோடும் ஒரு மழைக்காலம் தொடங்கி விட்டது!

விடுங்கள்.. அவன், அவர்கள் நனையட்டும்!