சகோதரர்கள் மற்றும் "நண்பிகள்" அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இன்றைய தினத்தில் காலையிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டியோடு  ஒட்டிக் கொண்டு பல சிறப்பு நிகழ்சிகளை பார்த்து நீங்க டயர்ட் ஆகி இருந்தாலும் பரவாயில்லை. பத்தோடு பதினொன்றாய் என் குறும்படத்தையும் பார்த்து விடுங்கள்! என் முதல் குறும்படத்தை பார்த்து விட்டு, "நல்ல முயற்சி, மென்மேலும் தொடருங்கள்!" என்று உங்களில் பலர் ஊக்குவித்திருந்தீர்கள்.  நீங்கள் எதை நினைத்து அப்படி சொன்னீர்களோ, நான் அதை ரொம்ப சீரியசாய் எடுத்துக் கொண்டேன். உங்களுக்குப் பரிசாக [தண்டனையாக?] இதோ என் இரண்டாவது குறும்படம்!

என்னது ரெண்டாவது படமா என்று ஷாக்க் ஆகாதீர்கள். உங்களை மாதிரியே நானும் ஷாக்க் ஆகித் தான் போயிருக்கிறேன். "முன்னேறுவதற்கான முதல் படி, அதற்கான முதல் அடியை எடுத்து வைப்பதில் தான் இருக்கிறது!" என்று சொல்வார்கள் [சொல்லுவாங்கல்ல?] அது எத்தனை உண்மை என்பதை இப்போது நான் புரிந்து கொண்டேன். இங்கே, முக்கியமாக சொல்ல வேண்டிய ஒன்று, எனக்கு குறும்படம் எடுப்பதில் ஆர்வம் இருந்தாலும், என்னுடைய இரண்டாவது படத்தை நான் இத்தனை சீக்கிரம் வெளியிடுவதற்கு உங்களின் உந்துதல் தான் முதன்மையான காரணம்! [அப்பாடா, பழியை போட்டாச்சு!]

இந்தப் படத்தை பொருத்தவரை, நான் நடிகன் மட்டுமே! ஐ டி யின் அந்தஸ்தினால் கொஞ்சம் பணம் போட்டேன்! [நன்றி ஐ டி] எழுதி, இயக்கியது எல்லாம் என் முதல் குறும்படத்தின் காமெராமேன் பிரசன்னா. என்னுடைய அடுத்த படம் வரக்கூடாது என்று சமூக பொறுப்புடன் நீங்கள் சிந்திப்பவர் என்றால் இவரை பிடியுங்கள். இவரிடம் நிறைய கதை இருக்கிறது. என்னிடம் நிறைய  திறமை இருக்கிறது! அவ்வளவு தான் சொல்லுவேன்.

இந்த படத்தில் நான் நன்றாய் நடித்திருந்தால் என்னை பாராட்டுங்கள்; சொதப்பி இருக்கிறேன் என்று உங்களுக்குத் தோன்றினால் இயக்குனரை திட்டுங்கள்! [உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது; உள்ளத்தில் இருக்கும் வார்த்தையை மறைக்கும் கபடம் தெரியாது....]

இந்தப் படம் "விடியல்" போல் இல்லாமல், எல்லோருக்கும் புரியும்படியும், சுவாரஸ்யமாயும் இருக்கும் என நம்புகிறேன். தங்களின் "பூச்செண்டுகளையும்", "செமகாண்டுகளையும்" எதிர்நோக்கி காத்திருக்கும் "காதல் வந்தா கம்முன்னு கெட" குழு!

இனி படம்...

இது சிரிக்க மட்டும் அல்ல; சிந்திக்கவும்!

என் ஃபிளாட்டில் இரண்டு ப்ளாக்குகள். முதல் பிளாக்கில் அந்த இடத்தின் சொந்தக்காரர். அவரின் பெண்டு பிள்ளைகள். பின்னால் பிளாக்கில் என் வீடு. வீடு கட்டும்போது பில்டரிடம் "கார் பார்க் இருக்கிறதா?" என்று கேட்டேன். "உங்ககிட்ட கார் இருக்கா?" என்று அவன் [ஏன் மரியாதை தேய்கிறது என்று போகப் போகத் தெரியும்!] கேட்கவில்லை. "அதனால என்ன சார், நீங்கள் பொது வழியிலேயே நிறுத்திக் கொள்ளலாம், ப்ராப்ளமே இல்லை. என்ன குழந்தைகள் விளையாடும் போது பந்து கார் மேலே படும், பெஸ்ட் உங்கள் வீட்டை கார் பார்கிங்கோடு கட்டி விடுவோம்" என்று உசுப்பேத்தி, என் வீட்டில் கொஞ்சத்தை எடுத்து கார் பார்க் என்று செய்து என் தலையில் நன்றாய் மிளகாய் அரைத்து விட்டான்.  அவன் சொன்ன அந்த பொது வழியில் என் காரை விடுங்கள், என் இரு சக்கர வாகனத்தை உள்ளே கொண்டு வரவே சர்க்கஸ் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. முன்னால் பிளாக்கில் அத்தனை வண்டிகள். அங்கு ஒரு வயசான பாட்டி உண்டு, அதற்கு மட்டும் தான் வண்டி இல்லை!

சரி தொலையட்டும் என்று என் காரை வெளியிலேயே நிறுத்தி விட்டேன். நான் இருக்கும் அம்பேத்கர் சாலை இருக்கிறதே, அந்த அம்பேத்கர் இன்று உயிரோடு இருந்தால், அவர் அந்த சாலையில் ஒரு அரை மணி நேரம் நின்றால் போதும், மூச்சு முட்டி இறந்து விடுவார். சிமெண்ட் ரோடு [இதை ரோடு என்றால் அந்த பாவம் என்னை ஏழேழு ஜென்மத்துக்கும் விடாது]! அத்தனை மண்! தூசி!! குப்பை!!!

என் கார் செகண்ட் ஹெண்ட் கார் தான். இருந்தாலும் அந்த முதல் ஆசாமி அதை தங்கமாய் வைத்திருந்தார். நான் வாங்கும்போது அது புத்தம் புதிதாய் இருந்தது. இன்று அதே காரை "விண்டேஜ்" கார் என்று வகைப்படுத்தி அவரிடமே நல்ல விலைக்கு விற்க முடியும். அப்படி ஒரு அவலமான நிலையில் தூசி, துரும்பு படிந்து கிடக்கிறது. காலையில் துடைத்து மாலையில் வந்து பார்த்தால் ஏதோ பாலைவனத்தில் மணல் புயல் அடித்த மாதிரி ஊரில் உள்ள அத்தனை தூசியும் என் காரின் மேல் தான் கிடக்கிறது. இதில் என் காரை கடந்து செல்லும் பொண்டு பொடுசுகள் இது ஏதோ வரலாற்று சின்னம் என்று கருதி இதில் தங்கள் பெயர்களை எல்லாம் வரைந்து விட்டு போகிறார்கள்! அதே கடுப்புடன் வீட்டுக்குள் வந்தால், முன்னால் பிளாக்கில் இருக்கும் ஒரு மாமி, அவர் ஸ்கூட்டிக்கு கவர் எல்லாம் போட்டு வைத்திருக்கிறார்! அடப்பாவிகளா...

சரி என்று நானும் கவர் போட்டேன். அந்த கவர், கார் வாங்கும்போது வாங்கியது. கார் கவர் என்று தான் பெயர், அது என்னமோ நாம் கொஞ்சம் சத்தமாய் தும்மினால் பறந்து விடுகிறது! அதற்கு ஒரு கிளிப் போட்டு, முன்னால் பின்னால் எல்லாம் கயிறு கட்டி கல் வைத்து.....நானோ சாப்ட்வேர், இந்த மாதிரி ஹார்ட்வேர் வேலையெல்லாம் என்னால் செய்ய முடியுமா? முடியல.. அப்புறம் தான் சொன்னார்கள். கார் கவர் ஒரு வருடம் தான் லைஃபாம். சரி என்று புது கார் கவர் வாங்க புறப்பட்டேன். "இந்த லாரிக்கு போடறது மாதிரி நல்ல கனமான தார்பாய் ஏதாவது இருக்கா"ன்னு தான் விசாரிச்சேன். அப்படி எதுவும் சிக்கலை! கார் சம்மந்தப்பட்ட எல்லா சாமானும் வாங்க எக்ஸ்பிரஸ் அவென்யு பக்கத்துல இருக்குற ரோட்டுக்கு போங்க என்று சொன்னார்கள். அங்கு போய் வேறு வழி இல்லாமல் எழுநூற்றி ஐம்பது ரூபாய் போட்டு ஒரு புத்தம் புது கவர் வாங்கினேன். குழந்தைக்கு தீபாவளிக்கு புது சட்டை வாங்கி போட்டு அழகு பார்ப்பது போல் என் காருக்கு கவர் போட்டு அழகு பார்த்தேன். ஜோராய் இருந்தது...

கட் பண்ணா...அடுத்த வாரத்தில் ஒரு காலை நேரம். கார் மீண்டும் அதே தூசி துரும்புடன் மொட்டையாய் நின்று கொண்டிருந்தது. வழக்கம் போல் கவர் காற்றில் பறந்து கீழே விழுந்து விட்டதோ என்று பார்த்தேன். ம்ம்ஹ்ஹூம்! அந்தக் காரில் கவர் இருந்ததற்கான அடையாளமே இல்லை. அருகில் நின்று கொண்டிருந்தவரிடம் விசாரித்தேன். நான் காலையில வரும்போதே கவர் இல்லையே என்றார்! இப்போது எனக்கு சில கேள்விகள்:

1. கை வைத்தால் ஊரையே எழுப்பும்படி அலாரம் அடிக்கும் ஒரு கார் கவர் நம் ஊரில் கிடைக்கிறதா?
2. கார் கவர் தொலைந்து போய் விட்டது என்று போலீஸ் கம்ப்ளைன்ட் செய்ய முடியுமா? அப்படி செய்தால் எழுநூற்றி ஐம்பது ரூபாய் கவருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும்?
3. எனக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கிறதா?