உன் பேர் என்ன?
சொல்லியது குழந்தை.
உன் பேர் என்ன என்றது என்னை பார்த்து!
சொன்னேன்.
வண்டியில வந்தீங்களா கார்ல வந்தீங்களா என்றது!
கார்ல தான் என்றேன்.
பேச்சை வளர்ப்பதற்காக, உனக்கு கார் ஓட்டத் தெரியுமா?
என்று கேட்டேன்.
ஓ! நல்லா தெரியும் என்றது.
உனக்கு காலே எட்டாதே, அப்புறம் எப்படி ஓட்டுவே என்றேன்.
செருப்பு போட்டுட்டு தான் என்றது!

ரைம்ஸ் ஒன்று சொல் என்றேன்...
தெரியாது என்றது குழந்தை!
டீவியில் ரஜினியைக் காட்டி யார் என்று கேட்டேன்,
அதற்கும் தெரியாது என்றது குழந்தை!!
இந்தக் குழந்தை எதைக் கேட்டாலும் தெரியாது
என்று தான் சொல்லும் என்று நான் என்னை
சமாதானம் செய்து கொண்டேன்

முக்கியமான பொருட்களை எங்கே வைக்கிறேன்
என்று மறக்காமல் இருக்க அட்டவணை தயாரிக்கிறேன்
அதை எங்கே வைப்பது?

ஆன் டியூட்டி போட்டு ஒரு அரசு வாகனம் என்னை கடந்து சென்றது...
வண்டியில்(லும்) எல்லோரும்
தூங்கி கொண்டிருந்தார்கள் :-)

காலில் மாவுக் கட்டு போட்டுக் கொண்டு
வண்டியின் பின்னால் அமர்ந்து செல்லும்
அந்தக் குழந்தை - தன் அப்பாவை 
சற்று கூடுதலாய் இறுக்கிப் பிடித்துச் செல்கிறது!

இன்று ஒரு வேலை காரணமாக அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்க வேண்டியிருந்தது. வேலை மதியமே முடிந்து விட்டது. நங்கநல்லூரில் இருக்கும் வெற்றி வேல் தியேட்டரில் எந்திரன் திரையிடப்பட்டிருப்பதை பார்த்து சும்மா பார்த்து வரலாம் என்று கிளம்பினேன். நான் போனது மதியம் 2;40 க்கு. மதிய காட்சிக்கு டிக்கட்டுகள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கீழ் டிக்கட் இருநூறு ரூபாய், பால்கனி இருநூற்றி ஐம்பது; பாக்ஸ் முன்னூறு! திரும்பி பார்க்காமல் (வீட்டுக்கு!) நடையை கட்டினேன்!

அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குச் சென்றிருந்தேன். இன்னும் வேலைகள் நடந்து கொண்டு தானிருக்கின்றன. முதல் தளம் மட்டுமே இயங்குகிறது. ஜனவரியிலிருந்து மெம்பர்ஷிப் ஆரம்பமாகும் என்று சொன்னார்கள். குழந்தைகள் பிரிவில் நுழைந்ததும், இது குழந்தைகளுக்காக மட்டும்! குழந்தைகள் அல்லாது வரும் பெற்றோர்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லி விட்டார்கள்! அடக் கொடுமையே என்று பெரியவர்கள் பக்கம் போனேன்! பீரியாடிகல்ஸ் பிரிவில் for women என்று தனி இடம் ஒதுக்கி இருந்தார்கள். அங்கு தான் எல்லீ, ரிட்ஸ், ஸ்டார் டஸ்ட் எல்லாம் இருந்தது! சரி என்று ஒன்றை எடுத்து பொம்மை படம் பார்க்க ஆரம்பித்தேன். அதற்குள் ஒருவர் வந்து "சார், போர்ட் பாக்கலையா இது பெண்களுக்கு மட்டுமான பிரிவு, உங்களுக்கு அனுமதி இல்லை" என்றார்! நான் சாவகாசமாய் அந்த புத்தகத்தின் அட்டையை அவருக்கு காட்டி, "இந்த புக் ல பொண்ணுங்க மட்டும் தான் படிக்கணும்னு எதுவும் போடலையே சார்!" என்றேன். அதை நீங்க ரிசப்ஷன்ல தான் கேக்கணும் என்று வழிந்தார். கண்டிப்பா கேக்குறேன் என்று சொல்லிவிட்டு எங்கே மேலும் ஏதாவது புக்கை எடுத்து புரட்டினால் அங்கே இன்னொருவர் வந்து "சார் வெள்ளை சட்டை போட்டவங்க எல்லாம் இந்த செக்ஷனில் வர கூடாது!" என்று சொல்லி விடுவாரோ என்று அஞ்சி நடையை கட்டினேன். கீழே வந்ததும் ரிசப்ஷன் சென்று நடந்ததை கூறி, ஒரு புகார் அட்டை எழுதிக் கொடுத்தேன். நூலகத்தைச் சேர்ந்த ஒருவர் விஷயத்தை அறிந்து "அப்படி இல்லை சார், எல்லா செக்ஷன்லையும் எல்லாரும் போகலாம், அது என்னன்னா எல்லாரும் கிட்ஸ் செக்ஷன்ல போனா கூட்டம் அதிகம் ஆயிடுது, அதான் அப்படி சொன்னோம், உள்ளே விட மாட்டோம் என்று அர்த்தமில்லை, தாரளமாக நீங்கள் பார்க்கலாம்" என்றார். மேலே உள்ளவர்கள் குழந்தைகள் இல்லாமல் வருபவர்களை உள்ளேயே அனுப்ப மறுக்கிறார்கள், கொஞ்சம் அவர்களிடம் தெளிவாகச் சொல்லிப் புரிய வையுங்கள் என்று கூறிக் கிளம்பினேன்! நீங்கள் இன்னும் அம்புலிமாமா ரசிகர் என்றால், ஒரு குழந்தையை வாடகைக்காவது எடுத்துச் செல்வது உத்தமம்!