வெள்ளிக்கிழமை க்யான் விபோத் நடத்திய டெம்டேஷன் என்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அலுவலகத்தில் ஒரு நண்பர் அவருடைய மனைவி வராததால் என்னை அழைத்து சென்றார். மியுசிக் அகாடமியில் நடந்தது. ராஜேஷ் வைத்தியாவின் amplified வீணையுடன், சினிமா பின்னனிப் பாடகர் கார்த்திக்கின் குரல் சேர்ந்து எங்களை எங்கேயோ கொண்டு சென்றது. கர்நாடகம், இந்துஸ்தானி, கஜல் என்று எல்லாம் சேர்ந்த (அப்படித் தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்) ஜுகல்பந்தி (எல்லாம் சேர்ந்து கொடுப்பதற்கு ஜுகல் பந்தி என்று தானே பெயர்?) கார்த்திக்கின் குரல் மிகவும் சாதாரணமாயும், இனிமையாவும் இருந்தது. இது தான் அவருடைய முதல் மேடை நிகழ்ச்சியாம். அடிக்கடி மினரல் வாட்டர் குடித்தார்.சாருகேசி, மதுவந்தி, தர்மாவதி என்று பல பெயர்களைச் சொன்னார்கள், வழக்கம் போல் ஒன்றும் புரியவில்லை. கடைசியில் அந்நியன், ஆதி புகழ் சைந்தவியும் (12வது படிக்கிறார்!) சேர்ந்து கலக்கினார். கர்நாடக இசைக்கே உரிய அற்புதமான சாரீரம். டோரா டும்முன்னு என்ற ஒரு கருத்தாளமிக்க பாடலை பாடி இருக்கிறார். கார்த்திக்குடன் சேர்ந்து சில சினிமா பாடல்களையும் பாடினார்கள். நிகழ்ச்சிக்கு பாலசந்தர், மதன் மற்றும் இசையமைப்பாளர் வித்யாசாகர் வந்திருந்தார்கள். பாலசந்தருக்கு 70 வயதுக்கு மேல் ஆகி விட்டது என்று ஞாபகம், மனிதர் என்னமாய் ஓடுகிறார்.

சனிக்கிழமை ப ட் டி ய ல் பார்த்தேன். ஓகே ரகம். என்னடா ஒரே ரத்தம், அடி, தடி..ஏண்டா இந்த மாதிரி படத்துக்கு எல்லாம் கூட்டிட்டு வர்றே என்று அம்மா திட்டினார். பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன கதை. சீரான திரைக்கதை, திடீர் திருப்பம். தெரிந்த முடிவு! அவ்வளவு தான் பட்டியல். ஆர்யா இன்னும் கொஞ்சம் கம்மியாக தாடி வைத்திருக்கலாம், அசல் பரதேசி மாதிரியே இருக்கிறார். நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் இவருக்கும் பரத்துக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. (அதற்குள் நான் சினிமாவில் நடிக்க வராமல் இருந்தால்!) தமிழ் சினிமாவில் கமர்ஷியல் என்ற பெயரில் கதைக்குத் தேவையில்லாமல் பாடல்கள் புகுத்துவதை நிறுத்த வேண்டும்.

ஞாயிற்றுக் கிழமை. என் வாழ்நாளில் மிக முக்கியமான ஒரு கடமையை முடித்தேன். ஜனநாயகக் கடமை. தேர்தலுக்காக ஃபோட்டோ எடுத்துக் கொண்டேன். காலம் காலமாக சென்னையிலேயே இருப்பவர்களின் பலருடைய பெயர்களே விடுபட்டிருக்கும் நிலையில் என் பெயர் இருந்தது நான் முன் ஜென்மத்தில் செய்த புண்ணியம். என்ன முயன்றாலும், ஞாயிற்றுக் கிழமை காலை என்பது 12 மணிக்குத் தான் தொடங்குகிறது. ஒரு வழியாய் அதற்குள் ஷாம்பு எல்லாம் போட்டு குளித்து ரெடியாகி பக்கத்தில் இருந்த மாநகராட்சிப் பள்ளிக்குச் சென்றேன். 4 வரிசை நிற்கிறது. கிட்டத்தட்ட ஒரு 100 பேர் தங்களுக்குப் பிடித்த வரிசையில் நிற்கிறார்கள். நான் நின்ற வரிசையில் என் முன் இருந்தவர், முதலில் புகைப்பட அடையாள அட்டை ஒன்றை காட்டி பதிவு செய்து கொள்ள வேண்டும், அதற்குப் பிறகு அந்த வரிசையில் நின்று ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்றார். 12 மணி வெயில், கருப்பு சட்டையில் ஜிகு ஜிகு என்று நிற்கிறேன். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நான் வரிசையில் நிற்கும் போது ஒன்றை கவனிப்பதுண்டு. வரிசையின் குறுக்கே புகுந்து போக விரும்புபவர்கள், நேராக என்னைத் தான் தள்ளச் சொல்லி அந்தப் பக்கம் செல்வார்கள். அது எப்படி நேராக என்னிடம் வருகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. நேற்றும் வழக்கம் போல் அதே நடந்தது.

எனக்கு எரிச்சலைத் தரும் ஒரு விஷயம், ரயில்வே ஸ்டேஷன், பாங்க் இந்த இடத்திற்கு பேனா இல்லாமல் வருவது. வரிசையில் இருந்த பலர், அதிகாரியிடமே பேனாவைக் கேட்டு கையெழுத்து இட்டார்கள். அவரும் வழக்கம் போல் எல்லாரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருந்தார். என் முன்னால் இருந்தவர் வரை அடையாள அட்டை காட்டி அதிகாரி வைத்திருந்த நோட்டில் கையெழுத்து இட்டுச் சென்றார். என் ராசியைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நான் போய் நின்று, பாத்தியா இது என் பேனா என்று வீராப்பாய் கையெழுத்து போட்டேன். சொல்லி வைத்தார் போல், அவர் பேனா எழுதாமல் போனது. பேனா கொடுத்துட்டு போங்க. என் பேனா எழுத மாட்டேங்குதுன்னார். என் நெத்தியில இளிச்சவாயன்னு ஏதாவது ஒட்டி இருக்கா சார்? என்று அவரிடம் கேட்கவா முடியும். தர்மசீலன் போல் கொடுத்து விட்டு நகர்ந்தேன். ஆனால் உண்மையில் சொல்கிறேன் 50 கிலோ பொன்னை வேண்டுமென்றாலும் பாதுகாப்பாய் வைத்திருக்கலாம் போலிருக்கிறது, இந்தப் பேனாக்களை வைத்துக் கொள்வது இருக்கிறதே...அப்படி பல பேரிடம் காப்பாற்றி கடைசியில் இவரிடமா என் பேனாவை பறி கொடுக்க வேண்டும் என்று அடுத்த வரிசையில் நின்று வெயிலின் குளுமையை உணர்ந்த படி சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

LKG C Section ல் ஃபோட்டோ எடுக்கிறார்கள். வரிசை LKG C Sectionஐ நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. மணி 1; வரிசை அப்படியே நிற்கிறது, மணி 2; வரிசை அப்படியே நிற்கிறது. கேட்டால் சாப்பிடப் போய் விட்டார்களாம். கிட்டத்தட்ட 100 பேர் ஒதுங்க இடம் இல்லாமல் பசியுடன் வெயிலில் நிற்கிறோம். யாரோ ஒரு புண்ணியவதி ஒரு பெரிய பையில் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி வேண்டுபவர்க்கு கொடுத்தார். வாழ்த்த வயதில்லாமல் வணங்கினேன். வழக்கம் போல் எல்லோரும் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். சாப்பிட்டு விட்டு வரிசை கொஞ்சம் நகர்ந்த மாதிரி ஆசை காட்டியது. பிறகு அவ்வளவு தான். தாய்குலங்கள் மட்டும் ஃபோட்டோ எடுத்து வந்து கொண்டிருந்தார்கள். தந்தைக்குலங்கள் அப்படியே நிற்கிறோம். பக்கத்தில் நின்ற ஒரு தாய்குலம் ஏதோ எழுதுவதற்காக பெண்கள் பக்கம் பேனா கேட்டுவிட்டு கிடைக்காமல், ஆண்கள் பக்கம் திரும்பி ஒரு முறை எல்லோரையும் பார்த்து விட்டு, பேனா இருந்தா கொடுங்க என்றார் என்னிடம். நற நற;

அப்போது தான் என் பேனாவை கையாடியவர் அந்த வழியே வந்தார். சார் பேனா என்றேன். அவர் திரும்பி என்னைப் பார்த்து, ஏன்யா? ஒரு 5 ரூபா இருக்குமா? எழுதலைன்னு தானே வாங்கியிருக்கேன்..சொல்லிட்டு போயிட்டே இருக்கார். வரிசையில் நின்றவர்கள் என்னை பார்த்த பார்வை இருக்கே. அவர் போய்விட்டாரா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு நான், 5 ரூபா தானே, வாங்கியிருக்க வேண்டியது தானே என்றேன். நானும் ஹீரோ மாதிரி ஏதாவது பண்ணிடம்னு பாக்குறேன்; ஆனா காமெடியா பூடுதுப்பா! ஒரு வழியாய் அந்த வகுப்புக்குள் நுழைந்து அங்கு தொங்க விடப்பட்டிருகும் கரடியும், இரு நண்பர்களும் கதையை பல தடவை படித்தேன். ஒரு அம்மா தன் குழந்தைக்கு அந்தக் கதையை சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு காட்ல 2 அண்ணங்க நடந்து வந்தாங்களாம்; அப்போ பியர் வந்துடுத்தாம்; ஒரு அண்ணா மரத்துல ஏறிட்டாராம், இன்னொரு அண்ணாக்கு ஏறத் தெரியலையாம். கீழே செத்த மாதிரி படுத்துண்டானாம். கரடி கிட்ட வந்து மோந்து பாத்துட்டு போயிடுச்சாம். அந்த அண்ணா கீழே வந்து கரடி உன்கிட்ட என்னடா சொல்லிச்சுன்னு கேட்டானாம். இனிமே உன்னை மாதிரி selfish கூட சேராதேன்னு சொல்லிச்சுன்னானாம். என்று கதையை முடித்தார். நல்லவேளை, அந்த அண்ணாவை கரடி ஏன்மா சாப்பிடலை என்று குழந்தை கேட்கவில்லை.

நம் கதைக்கு வருவோம்; 100, 150 பேருக்கு ஃபோட்டோ புடிக்க அங்கு இருந்தது மூன்றே பேர். அவர்களும் அதிகாரிகள் கிடையாது. ஏதோ ஒரு க்ரவுண்டில் கிரிக்கெட் விளையாடும் செம்பட்டைத்தலையுடன் இருந்த 3 வாலிபர்களை கொண்டு வந்து இங்கு உட்கார வைத்து விட்டார்கள் போலிருக்கிறது. ஒருத்தர் ஃபோட்டொ புடிக்கிறார். ஒருத்தர் கம்ப்யுட்டரில் அதைப் பதிவு செய்கிறார். ஒருத்தர் வெட்டி ஒட்டி லாமினேட் செய்கிறார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் சாப்பிடாமல் கொள்ளாமல் நின்று நின்று எனக்கு, இல்லை அங்கு எல்லோருக்கும் பெண்டு கழன்டுட்டது. ஐய்யய்யோ மணி 3 ஆயிடுச்சே, இப்போ டீ குடிக்க போயிடுவாங்களே என்று சொன்னேன். வரிசையில் முன்னால் இருந்தவர் என்னை திரும்பிப் பார்த்து முறைத்த மாதிரி இருந்தது. பேசாமல் இருந்து விட்டேன். ஒரு வழியாய் என் முறை வந்தது. நான் சரியாய் உட்கார்வதற்குள் டிஜிட்டல் காமெராவினால் என்னை க்ளிக்கியிருந்தான். ஒரு சிட்டை கொடுத்தான், அதைக் காண்பித்து ஃபோட்டோ பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம். அதற்க தனியாய் ஒரு கும்பல். நான் சாப்பிட்டு மறுபடியும் சென்றேன். 4 மணி. பேனா கொடுத்தவரின் பின்னால் நின்றேன். அவர் என்னைப் பார்க்கவில்லை. ஃபோட்டோ வந்தது. வாங்கிப் பார்த்தேன். தேமேயென்று இருந்தது. (இருக்கிறது தானே வரும்னு எங்களுக்குத் தெரியும் நீங்க ஒன்னும் சொல்லாதீங்க!) பார்த்துக் கொண்டே நடந்தேன். என்னிடம் பேனா வாங்கியவர் கூட்டத்தினரிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். ஆமாய்யா? ஒருத்தரும் பேனா கொண்டு வந்துராதீங்க, எல்லாம் இங்கே வந்து என் கிட்ட கேளுங்க! நான் என் புது பேனாவை தடவிக் கொண்டே நடந்தேன்.

3 பதிவு போட்டும் ஒரு கமெண்டும் இல்லை; நான் என்ன கமலஹாசனா, வைரமுத்துவா? பாராட்டுகளைக் கேட்டுக் கேட்டு சலித்துப் போயிருக்க? தூக்கமே இல்லை. என்னடா இது, மகளீர் தினத்திற்காக ஸ்பெஷலாய் ஒரு ஓவியப் பதிவு, தம்பி படத்தைப் பற்றி என்னுடைய நடையில் ஒரு விமர்சனம், CTSல் கொடுத்த i-Pod பற்றி நகைச்சுவையாய் ஒரு பதிவு..பயன் என்ன? ஒரு கமெண்டும் இல்லை! வெறுத்தே போனேன். ஒருத்தரும் சீண்டாத அளவுக்கா நாம் எழுதுகிறோம் என்று எனக்குள் ஒரு சந்தேகம். பார்த்தால் நான் என்றோ என் ப்ளாகர் செட்டிங்கில் கை வைத்த பலன்.

ஒன்னு English தெரியனும், இல்லை கை காலை வச்சுட்டு சும்மா இருக்கனும். Moderate Commentsஆமே, சரிப்பா என்னுடைய பதிவுகளுக்கும் இதை செய்யுங்க என்று தெரியாத்தனமாய் சொல்லி விட்டேன். நீங்கள் இட்ட பின்னூட்டங்களை எல்லாம் ப்ளாகர் பிள்ளை அடக்கமாய் எடுத்து வைத்துக் கொண்டு நான் எப்போது வந்து அதை ஆமோதித்து பதியப் போகிறேன் என்று காத்துக் கொண்டிருக்கிறது. யாராவது பின்னூட்டம் போட்டால் உனக்கு ஒரு மெயில் பண்றோம்பா என்று ப்ளாகரில் அப்போதே சொன்னார்கள். கேட்டால் தானே, எல்லாம் எனக்குத் தெரியும் என்று அந்த பயன்பாட்டை பயன்படுத்தவில்லை. அவஸ்தைப் படு! நான் என்ன செய்யட்டும்னுது ப்ளாகர். இதோ, இன்னைக்கு புலம்பிட்டு இருக்கேன்.

முக்கியமான பதிவாய் இருந்தால் தான் நான் என் நண்பர்களுக்கு மெயில் அனுப்பி, பாத்திரம் தேய்ச்சது தேய்ச்ச வரைக்கும் இருக்கட்டும், உடனே இங்கே வா என்று புருஷன்காரன் அதட்ற மாதிரி, எந்த கோட் அடிச்சிட்டு இருந்தாலும் மொதல்ல என் ப்ளாகை படிங்கப்பா என்று அனுப்புவேன். இல்லையென்றால் அவர்களாகவே திறந்து படித்து பின்னூட்டம் அளித்து விட்டுப் போவார்கள். உங்களுக்குத் தான் தெரியுமே, கடந்த 3 பதிவா பின்னூட்டமே இல்லாம, போஷாக்கு குறைந்து இருந்த கொஞ்ச நஞ்ச தெம்பை வைத்துக் கொண்டு என் நண்பர்களுக்கு மெயில் பண்ணி பாத்திரத்தை போட்டதை போட்டபடி..ஐய்யோ, அடிச்சது அடிச்சபடி இருக்கட்டும் வந்து படிச்சுட்டு போங்கப்பா என்று மெயில் அனுப்பினேன்.

அப்போது தான் என் நண்பன் நான் ஏற்கனவே போட்ட பின்னூட்டம் எல்லாம் ஏன் வர்ல என்று கேட்டான். ஆஹா! அப்போ நம்ம ப்ளாகுக்கு கமெண்ட் வருதுரா, ஏதோ ஒரு தில்லு முல்லு நடக்குதோன்னு இன்னைக்கு வந்து Moderate Comments sectionல் பாக்குறேன். 33 கமெண்ட்ஸ் தேமேன்னு தூங்கிட்ருக்கு! இங்கே பார்றா!! பிறகு என்ன ஒரே குஷி தான். எல்லாத்தையும் சகட்டு மேனிக்கு செலக்ட் செய்து பதிந்ததில் எல்லாம் ஒழுங்காய் தெரிந்தது! அப்பாடா..வீட்டில் சாப்பிடக் கூப்பிடுகிறார்கள். வயிறு என்ன? மனசு வரைக்கும் நெறைஞ்சு கெடக்கே...

இதன் மூலம் நான் சகல லோகத்திற்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் இன்னைக்கு தான் உங்க கமெண்ட் எல்லாம் படிச்சேனுங்கோ!! கோ!! கோ!!! (எதிரொலிக்குதா?) என்னுடைய ஓவியத்தைப் பார்த்து இத்தனை பேர் கருத்து கூறியிருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ ஒரு மிகப் பெரிய தவறுக்கு அடித்தளம் இட்டு வீட்டீர்கள். இனிமே அடிக்கடி இப்படி ஓவியம் எல்லாம் போட்டு உங்களுக்கு ஏதாவது புரிந்தால் சொல்லுங்கள் என்பேன், எல்லாம் சமத்தா சொல்லனும் தெரியுரதா? இதுல சிவமுருகன் அவர்களுக்கு நான் பதில் சொல்லலைன்னு கோவம் வேற! நிஜமாவே நீங்கள் தான் என் ஓவியத்தை புரிய வைத்தீர்கள்! மிக்க நன்றி! காயத்ரி சந்திரசேகரும் தங்லீஷில் என் ஓவியத்தை அலசியிருக்கிறார். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக! அனுசுயா வேறு ஒரு இன்ப அதிர்ச்சியை எனக்கு அளித்து விட்டுப் போயிருக்கிறார். சென்ற வாரம் என் பதிவு தினமலரில் வந்ததாம். இது எனக்கே தெரியாத விஷயம். இது உண்மை தானா? அப்படி என்றால் தயவு செய்து யாராவது எனக்கு அந்த சுட்டியைத் தந்தால் தன்னியனாவேன்!

போன ஒரு மாதமாய் சுலேகா டாட் காமில் இருந்து எனக்கு மெயில் வந்து கொண்டே இருக்கிறது. என்னுடைய பதிவுகளை அவர்களுடைய வலையில் போட்டுக் கொள்வதாக. எனக்கு வலிக்குமா சொல்லுங்க. இருந்தாலும் ஒரு பிகு இல்லைன்னா எப்படி? சரி உங்க வலையில போட்றதால எனக்கு என்ன பயன்? என்று இப்போது தான் ஞான பீட விருது வாங்கின கையோடு வந்தது போல் மெயில் செய்தேன்..சர் தான் போடா, நீயும் ஆச்சு உன் ப்ளாகும் ஆச்சு என்று என்னை உதைக்காமல், பொறுப்பாய் காரணங்களைச் சொல்லி எனக்கும் ஒரு இடம் கொடுத்திருக்கிறார்கள். என்ன கொஞ்சம் பெயரை திருப்பி போட்டு விட்டார்கள். இங்கு espradeep.blogspot.com அங்கே pradeepes.sulekha.com!

என்னடா இவன் இன்னும் தலைப்புக்கு வரவே மாட்றானேன்னு நினைக்கிறீங்களா? இதோ வந்துட்டேன்...இன்னைக்கு காலையில ஒரு மெயில் வந்தது. நமக்கு கமெண்ட் வரனும்னா இது தான் சரியான வழி என்று நினைத்துக் கொண்டேன். இவரைப் போட்டா உலகம் பூரா வசூல் மழை, நம்ம வலைப்பதிவுக்கு பின்னூட்ட மழை வராதா என்ன? இன்னைக்கு இவரோட பவரை நம்ம டெஸ்ட் பண்ணிட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தேன். உங்களுக்குத் தெரிந்திருக்கும் நான் யாரைப் பற்றி பேசுகிறேன் என்று! சாட்ஷாத் நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் தான். வந்த மெயிலின் தலைப்பு SIVAJI - THE BOSS Stills..ஆஹா, போன தடவை இப்படி தான் ஒரு மெயில் வந்தது ஒரு ஜிப் ஃபைலில்..ஆர்வமாய் டவுன்லோட் செய்து பார்த்தால் நடிகர் திலகம் சிவாஜி அழுவது மாதிரி, சிரிப்பது மாதிரி, அழுது கொண்டே சிரிப்பது மாதிரி..எனக்கு எப்படி இருந்திருக்கும்? அதைப் பார்த்து நானும் அழுது கொண்டே சிரித்தேன்!!

பசங்களின் திருவிளையாடலுக்கு ஒரு அளவே இல்லையா? நான் மட்டும் என்ன சலைத்தவனா..உடனே அதை எல்லோருக்கும் அனுப்பினேன். உடனே ஒருவனிடம் இருந்து ரிப்ளை..மகனே சிவாஜி ஸ்டில்லா அனுப்புற? கைல கெடச்சே தீந்தே!! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், சிவாஜியை பிடித்த எனக்கே அவ்வளவு எரிச்சல் வந்ததே..அவன் இந்தக் காலத்து யுவன்! எப்படி இருந்திருக்கும். அந்த "மகனே சிவாஜி ஸ்டில்லா அனுப்புற? கைல கெடச்சே தீந்தே!!" அப்படியே அவன் இதயத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். சரி அதை விடுங்கள். இன்றைய மெயிலை திறந்தேன். எடுத்தவுடன் எழுதி இருந்தது. Scroll down..சரி நானும் Scrollனேன். கொஞ்ச தூரம் போனதும் Scroll down slowly..ஏண்டா நான் இப்போ வேகமா scroll பண்ணா உங்களால என்னடா பண்ண முடியும்? சூப்பர் ஸ்டாரை விட இவர்களுடைய பில்டப் இருக்கிறதே..தாங்க முடியவில்லை! சரி நீ ஓவரா பில்டப் கொடுக்காதே படத்தைக் காட்டு என்று நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. இனி படம்!

கார்ல இருந்து இறங்கி கண்ணாடியை ஸ்டைலா மாட்றாரு!
Image hosting by Photobucket

ஸ்லோ மோஷன்ல ஸ்டைலா நடந்து வர்றாரு!

அப்படியே மிட் ஷாட்ல முடி ஆட்றதை காட்றோம்!

வச்சுக்க நீ ன்னு பூ கொடுத்து ப்ரபோஸ் பண்றார்!
[இங்கே ஒன்னு கவனிச்சேளா, ஷ்ரேயா கொழந்தைக்கு சத்த வயசானாப்ல இல்ல?
தலைவருக்கு அக்கா மாறின்னா இருக்கா?]

தோ பார் கண்ணு..நம்ம பெர்சனாலிட்டி, ஸ்டைல் பாத்து நம்ம பின்னாடி நெறைய..நெறைய பப்ளீஸ் வந்தாங்க..ஆனா நம்மள யாரும் டச் பண்ண முடியலை! நமக்கு இந்த ரோஜா கொடுத்து தாஜா பண்றது எல்லாம் வராது கண்ணா..ஆனாலும் கொடுக்கிறேன். டக்குன்னு ஒன்னு சொல்றேன், நெஞ்சுல வச்சுக்க..இதுல பூவும் இருக்கு;முள்ளும் இருக்கு. ஒரு ஆம்பளைக்கு வேண்டியது வாழ்க்கை பூரா நிம்மதி. ஒரு பொம்பளைக்கு வேண்டியது ஒரு நல்ல புருஷனோட அன்பும் பாதுகாப்பும்! நீ இந்த பூ மாதிரி என் வாழ்க்கையில சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரனும். நான் இந்த முள்ளு மாதிரி உன் வாழ்நாள் பூரா பாதுகாப்பா இருப்பேன்! இது எப்படி இருக்கு?

நான் கடந்த ஒரு வருடமாய் என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பக் (BUG) போட்டும், இன்று Cognizant Technology Solutions (இனி சிடிஎஸ்) பில்லியன் டாலர் கம்பெனி ஆகியிருக்கிறது. இத்தைகய சந்தோஷ தருணத்தைக் கொண்டாட கிட்டத்தட்ட 18,000 ஊழியர்களுக்கு (மொத்தம் 24 ஆயிரத்து சொச்சம்) ஐபாட் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறது. சாஃப்ட்வேர் உலகில் இன்றைக்கு சூடான செய்தி இது தான் என்று நினைக்கிறேன். நான் பெங்களூரில் டெல்லில் டெபுடேஷனில் இருந்த போது, சிடிஎஸ்ஸில் இருந்து ஒருவர் டெல்லில் சேர்ந்தார். அவர் சிடிஎஸ்ஸில் ஒவ்வொரு வருடமும் பரிசு வழங்குவார்கள் என்பதை என்னிடம் சொன்ன அடுத்த நிமிடம் என்னுடைய ரெஸ்யுமை அவருக்கு அனுப்பி வைத்தேன். அப்போது சத்தியத்தில் ஒழுங்காய் சம்பள உயர்வே கிடைக்காத நிலை! (அடங்குடா..உனக்கு எல்லாம் வேலை கிடைத்ததே அதிகம் என்று உள்மனது சொல்கிறது!) அதன் விளைவு இன்று நான் சிடிஎஸ்ஸில்...

உங்களுக்குத் தெரியுமோ, இல்லையோ, சிடிஎஸ் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய ஊழியர்களுக்கு ஒரு பரிசு கொடுப்பதை வழக்கமாய் கொண்டிருக்கிறது. மூன்று பரிசுப் பொருட்களில் தங்களுக்குப் பிடித்ததை தேர்வு செய்து கொள்ளலாம். போனவருடம் செல்ஃபோன், மைக்ரோவேவ் ஓவன், விஐபி சூட்கேஸ், இந்த மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொன்னதாக கேள்விப்பட்டேன். இந்த முறை ஜூன் 31ம் தேதிக்கு முன் சேர்ந்தவர்களுக்கு ஐபாடும், அதற்கு பிறகு சேர்ந்தவர்களுக்கு
சாம்சொனைட் ஸ்ட்ரோலியும் போன மார்ச்சில் இருந்தே நான் சிடிஎஸ்ஸின் வளர்ச்சியில் பங்கு கொண்டதால் (அப்படி அவர்கள் நினைப்பதால்) அடியேனுக்கும் ஐபாட்!

பில்லியன் டாலர் கொண்டாட்டங்கள் ஏகபோகமாய் நடந்தன. Thanks a Billion என்று screen server சில நாட்கள் எல்லோருடைய கனினியிலும் ஓடியது. அதே மாதிரி இன்னொரு முறை நன்றி தெரிவித்து இரு சிறு அட்டைகளில் ஒரு photo standம், calendarம் ஒவ்வொரு டெஸ்க்கிலும் வைத்தார்கள். இதைக் கொடுக்க வந்தவரிடம் இது தான் இந்த வருட கிஃப்டா என்று கலாய்த்தோம், நான் என் பங்குக்கு இந்த photo standல் நமிதா படம் ஒட்டி வச்சுக்கலாமா என்று கேட்டேன்.

பில்லியன் டாலர் கொண்டாட்டங்களில் ஒன்றாக ஐபாட் தரப்போகிறார்கள் என்று அலுவலகத்தில் ஒரு செய்தி பரவுவதற்கு முன் எனக்கு ஐபாட் என்றால் என்னவென்று சத்தியமாய் தெரியாது. சிலர் ஆப்பிள் வெப்சைட்டில் பார்த்து விட்டு எத்தனையோ டாலர் சொன்னார்கள். எனக்கு டாலரில் விலையை சொன்னால் எரிச்சலாய் வரும். யார் அதை 45 ஆல் பெறுக்கிக் கொண்டிருப்பது? கிட்டத்தட்ட 10,000 ல இருந்து 20,000 வரை வரும்..மெமரி பொறுத்து மாறும் என்றார்கள். சரி அது என்ன பண்ணும் என்று சிலரிடம் கேட்டதில், ஒருவன் ஐபாடில் MP3 songs கேட்கலாம், படம் பார்க்கலாம் அவ்வளவு தான் என்று முடித்துக் கொண்டான். இன்று செல்ஃபோனில் எல்லா கருமமும் வந்து விட்டது. அதுவும் காசு அதிகமா? சரி 75 ரூபாய்க்கு மூர் மார்க்கெட்டில் ஒரு ட்ரான்சிஸ்டர் வாங்கினால் போதும். 24 மணி நேரமும் வித விதமான பாட்டு கேக்கலாம். நாம் சேமித்து வைத்த பாட்டு 2 நாட்களில் போர் அடித்து விடும். ரேடியோ அப்படி இல்லை. அடுத்து என்ன பாடல் வருகிறது என்று தெரியாமல் இருப்பது தான் சுவாரஸ்யமே.. சரி படம் பார்க்கலாம்ல என்றான் ஒருவன். அந்த தம்மாத்துண்டு இடத்தில் நயந்தாரா இடுப்பு கூட சிம்ரன் இடுப்பு மாதிரி தான் தெரியும். நாம் ஒரு நாளைக்கு படம் பார்க்காமல் இருப்பதே ஆபிஸில் இருக்கும்போது தான்..மற்ற எல்லா நேரங்களிலும் வீட்டில் டி.வி. அழுகிறது. இதை தவிர்த்து டிவிடி ப்ளேயர்....எங்கேயாவது ஊருக்கு போகனும்னு கெளம்பினா அந்த பஸ்லயும் படம் போட்றான். எதுக்கு நான் ஐபாட்ல படம் பாக்கனும்? உங்களுக்கு அவ்வளவு நோகுதுன்னா உங்க ஐபாடையும் எனக்கே கொடுத்துடுங்கன்னான் அவன். அவனுக்காவது ஒன்று ஏற்கனவே கிடைத்தது. என் டீமில் சிலரைத் தவிர எல்லோரும் புதிதாய் சேர்ந்தவர்கள். ஐபாட் எனக்கு கிடைத்தும் நான் ஏதோ அதை வெறுப்பது போல் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து கிடைக்காதவர்கள் பொருமிக் கொண்டிருந்தார்கள். அதுவும் நியாயம் தானே? இதில், ஒருவாரத்தில் ஐபாடை கோட்டை விட்டேன் என்று ஒருவன் என்னிடம் அங்கலாய்த்தான். நான் சொல்ற மாதிரி செய் என்று அவனுக்கு நான் ஒரு யோசனை சொன்னேன். Internal discussion forum போ, அங்கே உன்னை மாதிரி ஒரு வாரத்துல ஐபாட் கோட்டை விட்டவங்க எல்லாரும் சேர்ந்து ஒரு discussion ஆரம்பிச்சிருக்காங்க. அவங்ககிட்ட போய் பேசினா, உனக்கு ஆறுதலா இருக்கும்னேன். அவன் என்னை என்ன செஞ்சுருப்பான்னு நினைக்கிறீங்க? 10 நாள் பட்டினியா இருக்குறவன்கிட்ட போய், டேய் வான்கோழி பிரியாணி சாப்ட்ருக்கியா? சூப்பரா இருக்கும்னு சொல்லிப் பாருங்க...அப்புறம் தெரியும் உங்களுக்கு! இப்படி அளவில்லாமல் பேசி, பலரின் சாபத்திற்கு ஆளானேன். ஒருவன் மகாமுனி போல் கண்களை மூடி தன் நெஞ்சில் முஷ்டியை மடக்கி, கண்களைத் திறந்து என்னைப் பார்த்து, கைகளை உதறி உன் ஐபாட் வேலை செய்யாமல் போகக் கடவது என்று சபித்தே விட்டான்.


[image courtesy: TechTree]

ஒரு வழியாய் ஐபாட் கைக்கு வந்தது. கருப்பு நிறத்தில், 30 GB மெமரியுடன், கைக்கு அடக்கமாய், பின்னால் COGNIZANT என்ற எழுத்துக்கள் பொறித்து,
ஆஹா..என்ன அழகு, என்ன அழகு. ஐபாடில் உள்ள தொழில் நுட்பம், அதன் வேலைத்திறனை விட அதை அவர்கள் பேக் செய்திருந்த நேர்த்தி..மிக அற்புதம்.அந்த சிறிய பெட்டிக்குள், அழகிய சின்ன வெள்ளை நிற head phone, அதை USB portல் கனக்டி சார்ஜ் செய்ய ஒரு கனக்டெர், iTUNES என்ற சாப்ஃட்வேர் சிடி, ஒரு சிறு user manual. எல்லாமே சிறிது, பில்லியன் டாலர் சந்தோஷத்தைக் கொண்டாட இதை பலருக்கு அருளிய காக்னிஸண்ட்டின் மனம் பெரிது! (என்னா டயலாக்! சான்ஸே இல்லை!)

ஐபாட் கொடுக்கவில்லை என்றால் நாங்கள் யாரும் நாளை ஸ்ட்ரைக் செய்யப்போவதில்லை. எல்லோரும் அவரவர் வேலையை பொறுப்பாய் பார்க்கத் தான் போகிறோம், இருந்தும் ஊழியர்களின் மகிழ்ச்சியை மனதில் கொண்டு இதைச் செய்த சிடிஎஸ்ஸிற்கு ஒரு ராயல் சல்யுட்! என்ன தான் ஐபாட் ஒன்றை கையில் வைத்துக் கொண்டிருந்தாலும், இது என்ன பெரிய கிஃப்ட் இன்ஃபோசிஸ் பில்லியன் டாலர் ஆனப்போ, எல்லாருக்கும் 1000 டாலர் கொடுத்தான் தெரியுமா? இது என்ன பிஸ்கோது, சாக்லேட்டு என்று சிலர் புலம்பத் தான் செய்கிறார்கள்! ஹும்...(உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு..)

சரி அந்த மாமுனியின் சாபம் என்னவாயிற்று என்று நீங்கள் கேட்பீர்கள்? சொல்கிறேன். அவர் சாபம் விட வேண்டியதே இல்லை. அதுவாகவே வேலை செய்யாமல் போய் விடும். நம் ராசி அப்படி. இதோ வீட்டில் ஒரு கனினி வாங்கினேன். அசெம்பிள் போனால், ப்ராப்ளம் வரலாம் சார்..ப்ராண்டட் போங்க, பிரட்சனையே இல்லை என்றான் கடைக்காரன். நானும் போனேன். 10 நாட்கள் ஒழுங்காய் வேலை செய்தது. ஒரு நாள் கீ போர்டில் a அடித்தால் w விழுந்தது. z அடித்தால் L விழுந்தது. ஐ, இது நல்ல விளையாட்டா இருக்கேன்னு நானும் என்னை மறந்து கொஞ்ச நேரம் விளையாடிட்டு இருந்தேன்னா பாத்துக்குங்க. ஒரு வழியாய் ஒருத்தன் சர்வீஸுக்கு வந்து புது கீபோர்ட் வைத்து விட்டுப் போனான். இன்று வரை a அடித்தால் a தான் விழுகிறது. நாளை என்ன நடக்குமோ!

பிறகு ஃப்ளாப்பி ட்ரைவ், வந்தவன் அதுவும் போச்சு சார், புதுசு மாத்தித் தந்துர்றோம் என்றான். இவ்வளவு பிரச்சனை இருக்கு, அப்புறம் என்ன பெரிய ப்ராண்டு என்றேன். அதற்கு அவன் 1000 பீஸ்ல ஒரு பீஸ் இப்படி ஆயிருது சார்..உங்களுக்குப் பரவாயில்லை, பக்கத்துத் தெருவில் ஒருத்தருக்கு hard disk போயிடுச்சுன்னான். இப்போ நான் வருத்தப்படனுமா, சந்தோஷப்படனுமன்னு எனக்குப் புரியலை..கஷ்டம்! பிறகு திடீரென்று ஒரு நாள் புதிதாய் வீட்டுக்கு வந்திருக்கும் நண்பர்களிடம் புதிதாய் வாங்கியிருக்கும் கம்ப்யுட்டரைக் காட்டினோம். UPS லிருந்து ஒரு மெல்லிய புகை..அதைத் தொடர்ந்து ஒரு தீய்ந்த வாசனை. அதை சரி செய்து விட்டு, internet connection வாங்கினேன். ஒரு சுபயோக சுபதினத்தில் அந்த மினுக் மினுக் லைட் எரியவே இல்லை. பவர் வரவேயில்லை. பார்த்தால் அடாப்டர் காலி. என் நெலமைய கொஞ்சம் யோசிச்சு பாருங்க? ஒரு மனுஷனுக்கு வாழ்க்கையில சோதனை வரலாம், சோதனையே வாழ்க்கையாயிட்டா? எப்படியோ ப்ராண்ட் என்னை பிராண்டி விட்டது தான் மிச்சம். அது எப்படியோ தெரியல, என்ன மாயமோ தெரியல..அந்த 1000த்தில் ஒரு பீஸ் எப்போதும் என்னையே வந்தடைகிறது.

எனக்கு ஐபாட் தரப்போகிறார்கள் என்று நண்பர்களிடம் ஃபோன் போட்டு பீத்தலாம் என்று நினைத்து விஷயத்தை சொன்னவுடன், ஒரு சுவாரஸ்யமும் இன்றி, சரி வாங்குன அடுத்த நாள் புகை தான் வரப்போகுது, நீ ஏன் அவ்வளவு பீத்துறேன்றான் ஒருத்தன்! சரி இன்னும் விஷயத்துக்கு வரலையேன்னு நீங்க சொல்றது எனக்குத் தெரியுது. என்னுடைய ஐபாடில் ஒரு 65 இளையராஜாவின் பாடல்களும், ரகுமானின் ஜனகன மண வீடியோவும், ஒரே ஒரு ஃபோட்டோவும் லோட் செய்திருக்கிறேன். இன்றைய நிலவரத்தின் படி இன்ன நிமிஷம் வரைக்கும் புகை எதுவும் வரவில்லை..(யாரு அங்கே.... இப்படி சப்புன்னு ஆயுடுத்தேன்றது? இதோ வர்றேன்!)

என்ன தான் ஹை ஃபையாக இருந்தாலும், அந்த சின்ன head phoneல் காதில் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்க வேண்டும் என்று நினைத்தாலே எனக்கு காதை வலிக்க ஆரம்பித்து விடுகிறது. இதோ என்னுடைய ஐபாட் full chargeல் ஓரமாய் உரங்கிக் கொண்டிருக்கிறது. ரேடியோ மிர்ச்சி பனியில்லாத மார்கழியா... பாடிக் கொண்டிருக்கிறது..ஐபாடாவது மண்ணாங்கட்டியாவது..ஒரு டிஜிட்டல் காமெரா கொடுத்துருந்தா...(உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு..)

சனிக்கிழமை மதியம் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். தம்பி பட விமர்சனம். மாதவன் விழிகளை உருட்டி மிரட்டிக் கொண்டிருந்தார். மணி பார்த்தேன். 2 அடித்து 5 நிமிடம். சரி என்று கிளம்பி திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டருக்குக் கிளம்பினேன். ஆஹா! என்னே ஒரு தியேட்டர்..நவீனமும், பழமையும் ஒருங்கே அமைந்த தியேட்டர். கொட்டகையை இருட்டாக்குவதற்கு பழங்காலத்தில் கதவை சாத்தி விட்டு ஒரு நீல நிற திரையை மூடுவார்கள். அது இன்றும் அங்கு இருக்கிறது. டிடிஎஸ் சவுண்டுடன்...தம்பி படம்!

நல்ல விஷயங்களாய் எனக்குப் பட்டது, படத்தின் கருவும், மாதவனின் நடிப்பும், இளவரசுவும், ஆங்காங்கே சில நச் வசனங்களும்!

1. உபதேசம் பண்ணா எவன் கேக்குறான்; ஒதச்சா தான் கேக்குறான்
2. நம்ம நாட்ல சைலன்ஸ் கூட சத்தம் போட்டு தானே சொல்ல வேண்டி இருக்கு
3. வீரன்றவன் அடுத்தவன் உசுர எடுக்குறவன் இல்லை; அடுத்தவனுக்காக உசுரையும் கொடுக்க தயாரா இருக்குறவன்!
4. பஸ்ல பத்து பைசா டிக்கட் விலை ஏத்திட்டா வயிரு பத்திகிட்டு எறியுது; இவன் பஸ்ஸை எறிக்கிறான், வேடிக்கை..வேடிக்கை!

ஒரு நல்ல தரமான படத்தை விறுவிறுப்பாய் கொண்டு செல்லத் தெரியாமல் தொதப்பி இருக்கிறார்கள் என்றே எனக்குப் பட்டது. முன் சீட்டில் கால் வைக்கக் கூடாது என்று தெரிந்தும் என் கால்களால் முதல் பாதி படத்தை அப்படித் தள்ளினேன். அரைகுறையாய் அந்தரங்கத்தில் நிற்கும் பல காட்சிகள்! இடைவேளைக்குப் பிறகு அம்மா, அப்பா, தங்கை பாசம். தாங்கமுடியவில்லை. எந்த வீட்டில் அண்ணன்காரன் தங்கச்சியை தங்கச்சி என்று கூப்பிடுகிறான் என்று எனக்குத் தெரியவில்லை. ஹீரோ தம்பியிடமோ, தங்கையிடமோ ஏதாவது வம்பிழுத்து விட்டு ஓடுவது, குடும்பத்தில் எல்லாரும் ஸ்லோ மோஷனில் துரத்துவது மாதிரி இனிமே யாராவது படம் எடுங்க, துரத்தி துரத்தி அடிப்பேன்! மாதவன் பாஷையில் சொல்லனும்னா ஒதப்பேன்! ஒதப்பேன்! நிறுத்துற வரை ஒதப்பேன்....ஆமா! என்னை பொறுத்தவரை சமீபத்திய படங்களில் கில்லியில் தான் அம்மா, அப்பா, தங்கை பாசம் இயல்பாக இருந்தது!

நான் இந்தப் படத்தை பார்க்கப் போன காரணம், என்னம்மா, தேவி ஜக்கம்மா உலகம் தலைகீழா தொங்குதே ஏனம்மா? என்று மாதவன் கேட்கும் கேள்வியை நான் தினமும் பல முறை எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன். சரி, அதற்கு இந்தப் படம் பார்த்தால் தீர்வு கிடைத்து விடுமா என்று அர்த்தமல்ல, சரி நமக்குள் இருக்கும் கேள்வியே இந்த இயக்குனருக்கும் இருக்கிறதே என்ற ஒரு நட்புணர்வு தான் அன்றி வேறொன்றுமில்லை.

அது படம் என்பதாலும், அவர் படத்தின் நாயகன் என்பதாலும் எங்கு பிரச்சனை நடந்தாலும், அங்கு சென்று ஒரு அடி..ஒரே அடி அடித்து எதிரிகளை விரட்டி விடுகிறார். ஆனால் இது வாழ்க்கை என்பதாலும், இதில் நான் என்பதாலும் என்னால் அப்படி எல்லாம் செய்து உலகைத் திருத்த முடியவில்லை! நானும் கண்ணாடி முன் நின்று என் கண்களை எல்லாம் உருட்டி இப்போ நான் என்ன செய்ய என்று மாதவன் மாதிரி கத்திக் கொண்டிருந்தேன்..வா, வந்து இத பொறுக்கு! என்று பக்கத்து வீட்டில் இருந்து ஒரு குரல்! இதெல்லாம் எனக்குத் தேவையா?

படம் ஓடுதோ இல்லையோ, அந்தப் படம் பாக்குற நேரத்துலயாவது மாதவன் சொல்றது நியாயம் தானே என்று நமக்கு ஒரு கணம் தோன்றினால் அதுவே இயக்குனருக்கு ஒரு பெறும் வெற்றி தான்..

என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம் தலைகீழா தொங்குதே ஏனம்மா?

மகளீர் தினத்தை முன்னிட்டு ஒரு ஓவியப் பதிவு! வெகு நாட்களாக ஒன்றும் புரியாத மாதிரி ஒரு ஓவியம் வரைய வேண்டும் என்று ஆசை. அதை ஃபோட்டோஷாப்பின் மூலமும், ஃப்ளாஷின் மூலமும் தீர்த்துக் கொண்டேன்.

இரண்டு முகங்களைத் தவிர சுற்றி கிறுக்கி வைத்து, அதில் ஃபோட்டோஷாப்பில் என் கை வண்ணத்தைக் காட்டிய போது, தாரளமாய் சாஃப்ட்வேர் கம்பெனிகளில் இதை எல்லாம் விற்கலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது. இந்த ஓவியங்களில் எனக்குத் தெரியாத, புரியாத விஷயம் ஏதாவது உங்களுக்குத் தெரிந்தாலோ புரிந்தாலோ எனக்கும் சொல்லும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஓவியங்களைப் பார்த்தவுடன் தயவு செய்து கண்டிப்பாக வாவ் சொல்லுங்கள்! [யாருப்பா அது கொட்டாவி விட்றது?]

முன்குறிப்பு: பெரிதாக பார்க்க ஓவியங்களின் மேல் கிளிக்கவும்



இது ட்ரை பிரஷ் எஃபெக்ட்!

இது ஜெராக்ஸ் எஃபெக்ட்

இது டாட்டட் எஃபெக்ட்


இது என்ன எஃபெக்ட் என்று மறந்து விட்டேன் [இது பிரதீப் எஃபெக்ட்!]

பெண்ணினமே உங்களுக்கும், உங்களின் தியாகத்திற்கும் என் ஓவியங்களை சமர்ப்பிக்கிறேன்!