சோஃபாவில் சாய்ந்தபடி, இன்ஸ்டாவில் "யோகாபவானி" (தேடாதீர்கள்) யின் ஆசனங்களை வழக்கம் போல் பார்க்க மட்டும் செய்தேன்.

அப்பா, குழந்தை எல்லாம் எப்படிப்பா பொறக்குது? என்றான் encyclopedia புத்தக சகிதம் கீழே உட்கார்ந்திருந்த ஐந்து வயது ரிஷி.

தூக்கி வாரிப் போட்டது.

சூரியன் பீச்சுக்குள்ல மறைஞ்சி போச்சே, அது நனஞ்சிடாது?

நீங்க, அம்மா எல்லாம் ஏன்பா சீக்கிரமே ஸ்கூல் படிச்சி முடிச்சிட்டீங்க? நான் மட்டும் ஏன் இப்போ படிக்கிறேன்?

என் க்ளாஸ் இஷான் செவப்பா இருக்கான்பா, ஆனா, அவங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் கருப்பா இருக்காங்க! அது எப்படிப்பா?

கீழே நிக்கிறத விட, மலை மேல போனா சூரியன் நம்ம கிட்ட தானேப்பா இருக்கும்? அப்புறம் எப்படி அங்கெ சில்லுன்னு இருக்கு?

இப்படி தினம் தினம், பல விதங்களில், பல கோணங்களில், கேள்விகள் கேட்டு ரிஷி என்னையும், அவன் அம்மாவையும் டார்ச்சர் செய்வது வழக்கம். என்ன சார், டார்ச்சர் னு சொல்றீங்க? புள்ள எவ்வளவு அறிவா இருக்கான்? இந்த வயசுல நல்லா ட்ரையின் பண்ணிடுங்க என்று சொல்பவர்களிடம், இந்தாங்க, புடிங்க, நீங்களே ட்ரயின் பண்ணுங்க, நான் ஒரு இருபது வருஷம் கழிச்சி வந்து வாங்கிக்கிறேன் என்று சொல்லத் தோன்றும்.
அங்கே தொட்டு, இங்கே தொட்டு இன்று அடிமடியில் கை வைப்பது மாதிரி இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு விட்டான்.

சொல்லுப்பா, என்றான்.

என்னடா?

பேபி எல்லாம் எப்படி பொறக்குது?

சாமி குடுக்குது என்று மீண்டும் பவானியைப் பார்த்தேன்.

என்னையும் சாமி தான் குடுத்துச்சா?

ஆமா..(பவானி)

அது எப்படி? சாமி மேலே...க்ளவுட்ஸ் மேல இருக்காரு, அங்கே இருந்து எப்படி கரெக்டா இந்த வீடுன்னு அவருக்குத் தெரியும்.

அவர் சாமில்ல, எல்லாம் தெரியும்.

சாமிகிட்ட யார் கேட்டாலும்  baby தருவாரா?

(ஃபோனை லாக் செய்தேன்) பக்தியோட, நம்பிக்கையோட கேட்டா கண்டிப்பாத் தருவாரு.

நீ பொய் சொல்றப்பா..

ஏன்டா, இப்படி சொல்ற?

நான் பல தடவை pray பண்ணி இருக்கேன். எனக்கு சாமி பேபி தரலியே!

உனக்கு கல்யாணம் ஆனாத் தருவாருடா, இப்போ நீயே பேபி ஆச்சே. பேபி வேணும்னா அப்பாகிட்ட, அம்மாகிட்ட கேளு.

நீங்க எப்படி தருவீங்க?

நானும் அம்மாவும் சேர்ந்து உனக்கு ஒரு பேபி தருவோம்.

அப்போ சாமி?

நாங்க சேர்ந்தா சாமி தருவாருடா.

குழப்புறீங்கப்பா! யாரு பேபி குடுப்பா? நீங்களா? சாமியா?

கொதித்து விட்டான். உண்மையை சொல்ல வேண்டியது தான்.

நாங்க தான்டா..நானும் அம்மாவும் சேரணும், god ஒட blessing யும் வேணும். அதுக்காக சொன்னேன். நீ போ, போயி home work பண்ணு.

எனக்கு ஒரு டவுட்டு. சாமிக்கு தான் எல்லாம் தெரியுமே. அவர் blessing இருந்தா போதாதா? நீங்க ஏன் சேரணும்?

ரிஷி, நீ அடி வாங்கப் போற. போயி படி.

சொல்லுப்பா..

எனக்குத் தெரியலடா, சாமி தான் கனவுல வந்து அப்பாவையும்,அம்மாவையும் சேர்ந்து இருங்க, நான் உங்களுக்கு பேபி தர்றேன்னு சொன்னாரு.

அப்போ நானும் ரஷ்மியும் சேர்ந்து இருந்தா சாமி எங்களுக்கும் பேபி தருவாரா?

அடேய்..நீ பெரிய பையன் ஆனதும் தான் பேபி எல்லாம் பொறக்கும் உனக்கு. இப்போ இல்லை. ரஷ்மிகூட எல்லாம் சேரக் கூடாது.

அது ஏன்? இப்போ பொறந்தா என்ன?

பேபிய எப்படிடா வளர்ப்ப? உன்கிட்ட பணம் இல்லையே...

அதான் உன்கிட்ட இருக்கே.

கடவுளே..படுத்துற ரிஷி.

போப்பா, உனக்கு ஒன்னுமே தெரியல..! எனக்கு இந்த birthday க்கு என் பேபி வேணும்.

அடம் பிடித்தான்.

சரி சரி, நானும் அம்மாவும் ட்ரை பண்றோம்டா..அடம் பிடிக்கக் கூடாது.

எனக்கு உங்க பேபி வேணாம், என் பேபி தான் வேணும்.

முருகா, படுத்துறானே..

ஏங்க கொஞ்ச நேரம் விட்டுட்டுக் கடைக்குப் போனா, என்னங்க இது? ஏன் அவனை அழ விட்றீங்க? கையில் பையுடன் என் மனைவி உள்ளே நுழைந்தாள்.

யாருடி அவனை அழ விட்றா? அவன் தான்டி என்னை அழ விட்றான். நீயே கேளு.

என்ன ரிஷி, என் பேபி சமத்துல்ல, ஏன் அழற?

பாரும்மா, அப்பாகிட்ட இந்த பெர்த்டேக்கு ஒரு பேபி கேட்டேன்மா..முடியாதுன்னு சொல்றாரு...

எல்லாம் என் வேலை தான் என்பது போல் என்னைப் பார்த்தாள்.

பேபின்னா? பேபி டாயா மா?

வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, நான் அவளின் ரியாக்‌ஷனை கவனித்துக் கொண்டே இருந்தேன்.

இல்லம்மா, நிஜ பேபி. நிவி வீட்ல இருக்கே, அந்த மாதிரி...

என் மனைவி பொய்யாய் என்னை முறைத்தாள்.

இல்லம்மா, உனக்கு பெர்த்டேக்கு ரெண்டு மாசம் தானே இருக்கு? அதுக்குள்ள எப்படி பேபி பொறக்கும். பேபி பொறக்க பத்து மாசம் வேணுமே..அம்மா வேற வீக்கா இருக்கேன்ல.
இப்போ பேபி பொறந்தா அம்மா இன்னும் வீக் ஆயிடுவேன்ல.

ஐய்யோ...உன் பேபி இல்ல, ரஷ்மியும் நானும் சேர்ந்து, சாமி blessing ல பேபி பொறக்கப் போறோம்.

இப்போது என் மனைவி என்னை நிஜமாய் முறைத்தாள்.

என்னை ஏன்டி முறைக்கிற? ரஷ்மிகூட சேர்ந்து அவனுக்கு உடனே பேபி வேணுமாம்.

அதான் ஒரே அடம்.

நீங்க ஏதாவது உளறி இருப்பீங்க!

ஆமா, என்னையே சொல்லு. எங்கே நீ சமாளி பார்ப்போம்.

ரஷ்மி கூடயா? அவ தான் உன்கூட சண்டை போட்டுட்டே இருப்பாளேடா?

நீயும் அப்பாவும் தான் சண்டை போட்டுக்குறீங்க.

இருவரும் Mission Failed என்கிற range ல் பார்த்துக் கொண்டோம். தன் முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்தன் போல, என் மனைவி...

சரி, ரிஷி கண்ணாக்கு என்ன பேபி வேணும்? பாயா? கேர்ளா?

பாய்.

அச்சோ, ரஷ்மி கூட நீ சேர்ந்தா கேர்ள் பேபி தான் பொறக்கும். ரிஷிக்கு கேர்ள் பேபி பிடிக்காதுல்ல?

ம்ம்ம் என்று ஏமாற்றமாய் தலையசைத்தான்.

அப்போ நீ கொஞ்சம் வெயிட் பண்ணனும், இப்போ உனக்கு பேபி வேணுமா? சாக்லேட் வேணுமா? என்று பையிலிருந்து டைரி மில்க் எடுத்துக் காட்டினாள்.

அவன் குதூகலத்துடன் சாக்லேட் என்று சொல்லிப் பறித்துக் கொண்டு ஓடினான்.

என் மனைவி பெருமையாய் என்னைப் பார்த்தாள்.

அம்மான்னா அம்மா தான் என்று கன்னத்தைக் கிள்ளி, சரி, பையன்கிட்ட வெயிட் பண்ண சொல்லிட்ட, இன்னொரு பையனுக்கு ரெடி பண்ணுவோமா? என்றதும், என்னை அவள் பொய்யாய்த் தள்ளி விட,

ரிஷி திரும்பி வந்து..

அம்மா, நான் ரஷ்மி கூட சேர்ந்தா தானே கேர்ள் பேபி பொறக்கும். நான் வேணா ரியான் கூட சேர்ந்துடவா? என்றான்.

0 Responses