கொல வெறி பாடல் உலகம் முழுதும் கொல வெறியை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இது வரை நானூறு விதமாய் அதை பாடி விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். கண்ணதாசன், வாலி போன்றோர்கள் பல பாடல்களை எழுதி தமிழகத்தில் காலத்துக்கும் அழியாத பாடலை படைத்தததை, தனுஷ் ஒரே பாட்டில் உலகம் முழுதுக்குமாய் படைத்து விட்டார். ரஜினியின் மருகமன் தனுஷ் என்பது போய், தனுஷின் மாமனார் ரஜினி என்று ஆகிவிட்டது...

மருமகன் மாமனார்(க்)கு ஆற்றும் உதவிஇவன் மாமன்
எந்நோற்றான் கொல்எனும் சொல்!!"

உலகமே சரியென்று ஒப்புக்கொள்ளும் விஷயத்தை நான் எதிர்க்கவில்லை என்றால் அப்புறம் நான் உண்மையான வலைப்பதிவானாய் இருக்க முடியாது! அதன் விதிகளுக்கேற்ப, இந்தப் பாடலில் பெண்களை திட்டுவதால், பசங்களுக்கு பிடிப்பதில் ஆச்சரியமில்லை, பெண்களுக்கு ஏன் பிடிக்கிறது என்று நானே என்னை கேட்டுக் கொண்டேன். ஏதோ பெண்கள் தான் பசங்களை ஏமாற்றி விடுவது போலும், பசங்க ஒண்ணுமே தெரியாத அப்பாவிகள் போலவும், பாட்டு வருகிறது. பசங்களுக்காவது காதல் தோல்வி அடைந்தால் தம்மு, தண்ணி இருக்கிறது...பெண்கள் கர்சீப் வைத்துக் கொண்டு கப்சிப் ஆகிவிடுகிறார்கள்! பெண்களை பூமிக்கு ஒப்பிட்டதில் தப்பே இல்லை. ரொம்ப பெரிய மனசு...நம்மை திட்டுகிறார்களே என்று கூட உணராமல் தினமும் முகப்புத்தகத்தில் இந்தப் பாட்டை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்! 

சரி, என்னை போன்ற பெண்ணியவாதி எங்கே இருக்க போகிறார்கள், வழக்கம் போல் நாமே இதற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். பெண்கள் பார்வையில் ஒரு கொல வெறி பாடல் சமூகத் தேவை என்று உணர்ந்தேன். இது வரை அப்படி ஒரு வெர்ஷன் வந்திருக்கிறதா என்று சில நண்பர்களை கேட்டேன், இல்லை என்றார்கள். [ஆனால், வந்திருக்கிறது!] சரி அப்படி ஒரு உன்னதமான பாடலை எழுதி இதை கல் வெட்டில் பொறித்தால் நாளை வரும் சந்ததிகள் இதை படித்து புரிந்து நடந்துப்பாங்கல்ல! பெண்களின் சமூகத்துக்காக இத்தனை பாடு படும் எனக்கு இதற்காகவாவது நோபல் பரிசு தர வேண்டும்! ஒரு அழகான பாடத் தெரிந்த பெண் [white skin gal :-)] இதை பாடி வீடியோ எடுக்க முன் வந்தால் சொல்லுங்க...நானும் தனுஷ் மாதிரி அந்த வீடியோல ஒரு பங்கெடுத்துக்குறேன். இனி பாட்டு...

Why this Kolaveri Kolaveri Kolaveri da..
Why this Kolaveri Kolaveri Kolaveri da..
Why this Kolaveri Kolaveri  a da..

distance la god-u god-u
god-u made-u boys-u
boys-u follow gals-u gals-u
gals life-u gone-u

black-u skinu boy-e boy-e
boy heartum black-u
eyes-u eyes-u meet-u meet-u
i am future mom-u

hey, notes eduthukko, appadiye kerchief eduthukko

super di..ready 1, 2, 3, 4

what a change over di!

ok di, now tune change-u

kanla glassu...

only english

eye la glassu 
glass la coolu
looku fulla terroru
this love-u
if it fails-u
looksu next figure-u

1. 
loveu loveu they will tellu
its all-u for sexu
sexu sexu that is nextu
always love is firstu!

2. 
love-u love-u they will tell-u
its all-u to cheat-u
how-u how-u we will tellu-u
that is boys-u thougt-u

1 வது வரிகளில் சொல்லியிருப்பது அப்பட்டமான பெண்ணின் மனநிலை. இருந்தாலும் "செக்ஸ்" என்றெல்லாம் வரக் கூடாது என்று நினைத்தால் 2 வது வரிகளை எடுத்துக் கொள்ளலாம்.


godu why you made bad boysu
where are good guys-u?
this songu for poor galsu
we have less choice-u

Why this Kolaveri Kolaveri Kolaveri da..
Why this Kolaveri Kolaveri Kolaveri da..
Why this Kolaveri Kolaveri  a da..


நன்றும் இன்றே செய் என்பது சான்றோர் வாக்கு! நாட்குறிப்புகளை எழுதலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். பார்க்கலாம்..இது எத்தனை நாட்கள் என்று...

நேற்று இரவு தாமதமாய் தூங்கியதால் இன்று காலை தாமதமாய் எழுந்தேன். அதற்காக எட்டு மணிக்கு எழுந்தேன் என்று என்னை தவறாய் நினைத்து விடாதீர்கள். பத்து பத்தரைக்கு தான் எழுந்தேன்! அலுவலகம் போகவில்லை. சில நாட்கள் விடுப்பில் இருந்ததால், டீமிலிருந்து விடுவித்து விட்டார்கள். அடுத்த ப்ராஜக்ட் கிடைக்கும் வரை கொஞ்சம் வெட்டி தான்! வீட்டிலிருந்தே மெயில் பார்த்தேன். மதியம் ஒரு மணி வாக்கில் அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்றேன். இப்படி வெட்டியாய் இருப்பதால், இதெல்லாம் சாத்தியமாகிறது! மகிழ்ச்சி! 

கி. ராஜநாராயணின் "கதவு" சிறுகதை படித்தேன். அருமை! அவரின் புகைப்படங்களுடன் கூடிய அவரின் சரிதம் ஒன்றை படித்தேன், நடிகர் சிவக்குமாரின் டைரிக் குறிப்புகளை படித்தேன் [இது நினைவுக்கு வர நான் படாத பாடு பட்டேன்!], அட இப்படி எல்லாம் எழுதினால் எழுத்தாளர் ஆகி விடலாம் போலிருக்கிறதே என்று ஒரு யோசனை முளைத்தது. [சிவக்குமார் பாவம், அவரை திட்டாதீர்கள்]

பிறகு....

.....

......

...... [பொறுங்கள், யோசிக்கிறேன்!]

மறந்து விட்டது! ஆ! ஐந்து மணிக்கு வீடு வந்தேன். தேநீர் குடித்தேன். ரசம் வைத்தேன்! [இன்றிலிருந்து நான் நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை தொடங்கி இருக்க வேண்டாம்!] சப்பென்று இருந்தது. கலைஞர் டீவியில் அருந்ததி பார்த்தேன். அனுஷ்கா இருக்கும் காலத்தில் நாம் இருப்பது நமக்கு எவ்வளவு பெருமை! திடீரென்று படம் வரைய வேண்டும் போலிருந்தது. கொஞ்சம் கிறுக்கினேன். பிகாசோ அளவுக்கு இல்லையென்றாலும் பிரதீப் அளவுக்கு வந்தது! என்ன ஒன்று பல்லைக் காட்டி சிரிக்கும் போட்ரேட்டுகள் வரைந்தால் பிசாசுகள் போல் ஆகி விடுகிறது! பசித்தது. நான் செய்த ரசத்தை நானே சாப்பிட்டேன். தாஸ்தாவெஸ்கியின் "குற்றமும் தண்டனையும்" டைட்டில் ஞாபகம் வந்தது!

கடைசியாய் என் மனைவி எடுத்த என்னுடைய அருமையான புகைப்படம் ஒன்றை முகப்புத்தகத்தில் ஓட்டினேன். இன்றைய நாள் இனிய நாள்!

பின் குறிப்பு:

இது எழுதி முடித்ததும் ஒன்று விளங்கியது. இரவில் நாட்குறிப்பு எழுத பகலில் நடந்தவைகளை எல்லாம் புரட்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது. அப்படி என் மூளையை வறுத்த எனக்கு இஷ்டமில்லை [பல்லிருக்குறவன் பக்கோடா சாப்பிடுவான்!] அதனால், இனிமேல் நாட்குறிப்புகள் எழுதுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்!! 
சாருவின் EXILE நாவல் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். காமராஜர் அரங்கம் விசாலமாய் ஜம்மென்று இருக்கிறது. என் டூ வீலரை பார்க் பண்ணும்போது பார்க்கிங் ஏரியாவை பார்த்தேன். அங்கே ஏற்கனவே பார்க் பண்ணியிருந்த இன்னோவா கார்கள் சின்ன நாய்க்குட்டி சைசில் தெரிகின்றன! அத்தனை விசாலமான ஏரியா. என் வீட்டு பார்க்கிங்கில் என் சான்ட்ரோவை நிறுத்துவது ஏதோ தண்ணி லாரியை நிறுத்துவது போலிருக்கிறது! காமராஜர் அரங்கம் கலைஞர் ஆட்சியில் கட்டப்படவில்லையோ என்னமோ, இன்னும் அம்மாவின் கண்களை உறுத்தாமல் அது காமராஜர் அரங்கமாகவே இருக்கிறது!

வழக்கம் போல் இந்திய நேரந்தவறாமை விதியின் படி விழா சற்று தாமதமாய் தொடங்கியது. நான் போய் அமர்ந்தவுடன், கொலைவெறி பாட்டு ஒலித்தது. பிறகு இச்சு இச்சு இச்சு குடு பாடல். விழாவில் யாரும் யாருக்கும் பொன்னாடை போர்த்தவில்லை. ஒரு கூட்டமே சென்று மேடையில் அமரவில்லை. மேடையில் இருப்பதால் பேசி முடித்ததும் தான் போகவேண்டும் என்று இல்லை என்று சாரு மேடையில் அமர்ந்திருப்பவருக்கு சொல்லி விட்டார். இப்படி ஒரு இலக்கிய விழாவுக்கான எந்த வித மேடைச் சம்பிரதாயமுமில்லாமல் இருந்தது மிகப் பெரிய ஆறுதலாயிருந்தது. விதிமுறைகளை உடைப்பதில் எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தான்!

விழாவை சாருவே தொகுத்து வழங்கினார். வாழ்த்துரை வழங்க வாலி அவர்களும், நாவல் திறனாய்வு செய்ய இந்திரா பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்தனர். இருவரையும் சாரு எந்த வித முன் பின் அணிந்துரைகள் சேர்க்காமல் வெறும் அவர்களின் பெயரை சொல்லியே பேசியது வித்தியாசமாய் இருந்தது. அப்படி எந்த ஒரு மேடை அலங்காரமும் இல்லாமல் அவர் சாதரணமாய் பேசியது நன்றாகவே இருந்தது. ஆனால் அவரே சொன்னது போல், அவருக்கு சரியாய், கோர்வையாய் பேச வரவில்லை. அவர் ஒரு பேச்சாளர் இல்லை என்பதால் மன்னிக்கலாம்! வாலி வாழ்த்துரை வழங்கினார். எண்பது வயதிலும் அவரின் குரல் வளம் அருமை! இதை ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால் அதே அளவு வயதுள்ள இந்திரா பேசும்போது எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு பேசியது போல் குளறிப் போயிருந்தது. ஆனால் வாலியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவரின் பாடல் வரிகள் போல் இளமையாய் இருந்தது. வாலி சுவாரஸ்யமான பேச்சாளர். அபாரமான ஞாபக சக்தி அவருக்கு. அவரின் வாழ்க்கையில் நடந்த இரு நிகழ்ச்சிகளை சொன்னால் போதும், அந்த விழா சூடு பிடித்து விடும். சாருவை பற்றி நிறைய விமர்சனங்கள் இருப்பதை பற்றி பேசும்போது எவன் ஒருவன் விமர்சனத்துக்கு உள்ளாகிறானோ, அவனே அறிவாளி என்றார். மரவட்டையையும், மண்புழுவையும் எவனும் விமர்சிக்க மாட்டான். நல்ல பாம்பை தான் விமர்சிப்பான் என்றார்!

இந்திரா பார்த்தசாரதி பேசும்போது தனக்கு இத்தனை பெரிய கூட்டத்தில் பேசி பழக்கமில்லை. எப்போதும் தான் பேசும் இலக்கிய விழாக்களில் இருபது, முப்பது பேர் தான் இருப்பார்கள் என்றார். நாவலைப் பற்றி சொல்லும்போது சுருக்கமாய் இது ஒரு சாப்ஃட் போர்ன் என்று சொல்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை. இது ஹாட் போர்ன் என்றார். படிக்க இஷ்டமிருந்தால் படியுங்கள், இல்லையென்றால் விட்டு விடுங்கள் என்றார். 

மதன் சிறிது நேரம் பேசினாலும் மிக நன்றாய் பேசினார். இப்படி ஒரு நாவல் வெளியீட்டு விழாவுக்கு காமராஜர் அரங்கத்தில் வைக்க ஒரு தைரியம் வேண்டும் என்றார். இப்படிப் பட்ட நாவல்கள் பத்திரிக்கையில் தொடராக வருவது சாத்தியமில்லை. ஏனென்றால் ரசனை அல்லாத, தைரியம் அல்லாதவர்களே எந்த ஒரு துறையிலும் உயர்பதவியில் இருக்கிறார்கள். அவர்களால் இத்தகைய நாவல்களை எல்லாம் கொண்டு வர முடியாது என்றார். இந்த நாவலில் ஒரு இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் இருப்பதாக சொன்னார். 

இவர்களை தவிர வெற்றி மாறன், ஞானி போன்றோரும் வந்திருந்தார்கள். சாரு சிறப்புரை என்ற பெயரில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னார்.  பெரும்பாலும் அவரின் வலைதளத்தில் இருக்கும் சுய புலம்பல்களாய் இருந்தது. ஒன்று கவனித்தேன். சாருவை யார் புகழ்கிறார்களோ அவர்களை தான் அவர் புகழ்வார் போலிருக்கிறது! வாலி ஒரு முறை அவரைப் பற்றி விகடனில் எழுதியவுடன் அவரிடம் நட்பு வைத்துக் கொண்டார். ஆனால் அவரை அறிமுகம் செய்கிறேன் என்று அவர் பேசியதிலிருந்தே, வாலியை பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. இச்சு இச்சு குடு படலை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். ஆனால் வாலியின் வேறு எந்த நல்ல பாடலையும் அவரால் மேற்கோள் காட்ட முடியவில்லை. தளபதியில் எதோ ஒரு பாட்டு என்று பாதியில் விட்டு விட்டார். ஞானியை அவ்வளவு திட்டியவர், இன்று அவர் வந்தார் என்றதும் தனக்கும் அவருக்கும் கருத்து முரண்பாடு இருந்தது உண்மை, ஆனால் அவரை போல் எழுத்தாளர் இல்லை என்று பேசுகிறார். ஜெயமோகன் வந்திருந்தால் அவரையும் பாராட்டி இருப்பாரோ என்று தோன்றியது! 

என்னை பொறுத்தவரை சாரு உடனடியாய் செய்ய வேண்டியது, தான் ஐரோப்பா சென்றது பற்றி, தமிழ்நாட்டில் தமிழ் எழுத்தாளனுக்கு மரியாதை இல்லை என்பது பற்றி, கேரளாவில் அவரை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பது பற்றி, உத்தம தமிழ் எழுத்தாளனைப் பற்றி, சினிமாவில் இவரை யாருமே கண்டு கொள்ளாதது பற்றி இவர் பேசாமல் இருப்பது நலம். இதை செய்தால் போதும் இவர் உலகம் போற்றும் பெரிய எழுத்தாளர் ஆகி விடுவார் என்று எனக்குத் தோன்றுகிறது.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். இரு வாரங்களுக்கு முன் நடந்த எஸ். ரா வின் இலக்கிய சொற்பொழிவுக்கு நான் சென்றேன் என்று உங்களுக்குத் தெரியும். ஒரு நாள், சற்று தாமதமாய் சென்றேன். கடைசி வரிசையில் ஒரு மனிதரின் பக்கத்தில் ஒரு இருக்கை காலியாய் இருந்தது. அமரலாமா என்று கேட்டேன். அவர் தலையாட்டினார். பார்த்தால் அவர் சாரு! அட, இவர் பக்கத்திலா நாம் அமரப் போகிறோம் என்று அமர்ந்தேன். நான் ஒரு வெள்ளை நிற குர்தா அணிந்திருந்தேன். [இலக்கிய விழா என்பதற்காக அல்ல, வெயில் காலத்தில் அதை அவ்வளவாய் போட முடிவதில்லை, அதனால் மழை காலத்தில் அந்த உடையை தேர்ந்தெடுத்தேன்] அவர் என்னை பார்த்தார் என்று நினைக்கிறேன். எஸ். ரா. பேச ஆரம்பித்து விட்டதால் நான் இவரிடம் எதுவும் பேசாமல் அவரின் பேச்சை கேட்க ஆரம்பித்தேன். அன்று விழா முடிந்ததும் இதைப் பற்றி என் மனைவியிடம் சொன்னேன். நீங்கள் அவரிடம் பேசவில்லையா என்று கேட்டாள்! அவரிடம் நான் என்ன பேசினாலும், நாளை வலைதளத்தில் குர்தா அணிந்து கொண்டு ஒருத்தன் வந்தான், என்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டான் என்று பதிவிடுவார். இது எனக்குத் தேவையா என்றேன். இன்று விழாவில் திடீரென்று குர்தா அணிந்து கொண்டு ஒருவன் ரஷ்ய கலாச்சார மையத்திற்கு வந்தார், அது அவருக்கு மிகவும் ஆபாசமாக இருந்தது. ஏன் இந்த உடை என்று கேட்டேன், அதற்கு இலக்கிய விழா என்றார்கள், அதனால் அப்படி வந்தேன் என்று பதில் சொன்னார் என்று கூறி கலாய்த்தார். அன்று அப்படி இன்னொரு ஆள் வந்திருந்தாரா, அல்லது என்னை நினைத்து மற்றதெல்லாம் அவரே இட்டுக் கட்டி சொன்னாரா தெரியவில்லை. ஆஹா, நாம் எதுவுமே பேசாமலேயே இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்தேன்!!


கடந்த ஒரு வாரமாக சென்னையில் மழையுடன் உலக இலக்கியத்திலும் நனைந்தேன். ரஷ்யன் கல்சுரல் சென்டரும், ஜெயகாந்தன்/புஷ்கின் மற்றும் உயிர்மை இணைந்து நடத்திய இலக்கிய கொண்டாட்டத்தை பற்றி சொல்கிறேன். கடந்த 21 ம் தேதி தொடங்கி நேற்று வரை வெகு விமர்சையாக, அரங்கு நிறைந்த நிகழ்வாகவும் மிக நெகிழ்வாகவும் நடந்தது. 7 நாட்களில் 7 சிறந்த உலக இலக்கியங்களை நாளொன்ராக அறிமுகம் செய்து வைத்து அதைப் பற்றி மிக விரிவாக எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார்கள்.


1. லியோ டால்ஸ்டாயின் அன்னா கரனீனா

2. தாச்தாவேய்ச்கியின் குற்றமும் தண்டனையும்

3. பாஷோவின் ஜென் கவிதைகள்

4. ஷேக்ஸ்பியரின் மேக்பெத்

5. ஹோமரின் இலியட்

6. 1001 அரேபிய இரவுகள்

7. ஹெமிங்வேயின் கிழவனும் கடலும்


முதலில் இப்படி ஒரு நிகழ்வை பற்றி அவரின் வலைதளத்தில் படித்ததும் என்னைப் போன்ற இலக்கிய உபாசகனுக்கு [அல்லது அப்படி சொல்லிக் கொண்டு திரிகிறவனுக்கு] ஒரு நல்ல அறிமுக நிகழ்ச்சியே இருக்கும் என்று பட்டது. மேலும் இது ஒரு புது வித அனுபவமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நிகழ்ச்சி சரியாய் திங்கள் [கவனிக்க MONDAY] மாலை 6 மணிக்குத் தொடங்கி ஞாயிறு வரை நீள்கிறது. ஏன் இந்த மாதிரி நிகழ்வை வார இறுதிகளில் வைக்காமல் வார நாட்களில், சென்னையின் மையத்தில், அதுவும் 6 மணிக்குத் தொடங்குகிறார்கள்? எத்தனை பேர் அலுவலகத்தை முடித்து இதில் கலந்து கொள்ள முடியும் என்று ஒரு வித எரிச்சல் வந்தது. அதிலும், என்னை போல் ஐ. டி யில் வேலை செய்பவனுக்கு வார நாட்களில் மாலை 6 மணி அலுவலகத்தை விட்டு வெளியே வருவது என்பது கனவில் தான் நடக்கும். அப்படியே நடந்தாலும் நான் வேலை பார்க்கும் இடமான தாம்பரம் சாநிடோரியதிலிருந்து ஆழ்வார்பேட்டை செல்வதற்கு நான் திங்கள் கிளம்பினால் ஞாயிறு வந்து விடும். சரி, ஏதோ முடிந்தவரை முயற்ச்சிப்போம் என்று நினைத்தேன். நல்ல வேளையாக அதிர்ஷ்டம் என் பக்கம் தான். ஏழு நாட்களில் ஒரு நாள் தவிர்த்து அத்தனை நாட்களிலும் அடாத மழையிலும் விடாது சென்று விட்டேன். யாருமே இருக்க மாட்டார்கள் என்று நான், ஏன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களும் நினைத்ததை உடைத்து எல்லா நாளும் அரங்கு நிறைந்த நிகழ்வாக இருந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நிகழ்வை பற்றி நான் இங்கு அப்படியே சொல்ல போவதில்லை, அது முடியாது. நாளுக்கு இரண்டு மணி நேரம் என்று இந்த ஏழு நாட்களுக்கு பதினான்கு மணி நேரம் குறையாமல் பேசி இருக்கிறார் எஸ். ரா. இப்போது தான் அவர் எப்படி இவ்வளவு எழுதுகிறார் என்று எனக்குப் புரிகிறது. மனிதரிடம் பொங்கி வழிகிறது. அவரின் சொற்பொழிவை புத்தக வடிவமாகவும், சீடி, டீவிடீ வடிவமாகவும் கொண்டு வர போவதாக சொன்னார்கள்.

தினமும் நிகழ்ச்சி முடிந்ததும் பதிவிட்டிருந்தால் நன்றாய் இருந்திருக்கும். அனைத்தையும் சேர்த்து நினைவில் உள்ளவரை எழுதுகிறேன்.

நிகழ்ச்சியில் கிடைத்த சில அறிய தகவல்கள்/முத்துக்கள்: [என் நினைவுப் பெட்டகத்திலிருந்து]

1. இந்தியாவில் ஆங்கில மோகம் இருப்பது போல் அப்போது ரஷ்யாவில் ஃபிரெஞ்ச் மோகம் இருந்தது. ஃபிரெஞ்ச் கலாச்சாரம் நாகரீகம் பிரதானப்படுத்தப்பட்டது.

2. ஆண் வீட்டை கட்டுகிறான். பெண் அதற்கு உயிர் தருகிறாள் என்று ஒரு பழமொழி இருக்கிறது.

3. உங்கள் அறை எப்போதும் ஒரு வீடாகாது. அறையிலிருந்து வீட்டுக்கு எப்போது போகலாம் என்று தான் எல்லோரும் நினைக்கிறோம். வீட்டுக்கு வந்ததும், நமக்கான அறையை தேடி ஒடுங்கி கொள்கிறோம்.

4. அன்னா கடைசியில் ஒரு நீச்சல் குளத்தில் குதிப்பதை போல் ரயிலின் முன் விழுகிறாள்.

5. நான் உங்களை இங்கு பார்த்துக் கொண்டிருப்பதை போல் நீங்கள் இல்லாதிருப்பதை உங்கள் வீட்டில் யாரோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பை போல் இல்லாதிருப்பதையும் உணர முடிகிறது.

6. ஜென் கவிதைகளின் மரபு அதில் ஒரு அக விழிப்பு/தரிசனம் இருக்க வேண்டும்.

7. ஒரு மரமானது ஒரு மெல்லிய பூவினை கொண்டுள்ள அதே சமயத்தில் அதன் வேர்கள் பாறையையும் உடைக்கும் தன்மை கொண்டுள்ளது.

நிகழ்வில் படிக்கப்பட்ட சில ஜென் கவிதைகள்:


திருடன்

விட்டுச் சென்றிருக்கிறான் -

ஜன்னலிலுள்ள

நிலவை


இரண்டு குமிழிகள்

இணையும் தருணத்தில்

காணாமல் போகின்றன

இரண்டுமே, மலர்கிறது

ஒரு தாமரை


திமிங்கலம்!

ஆழ ஆழ அது

செல்கையில்

உயர உயர எழுகிறது

அதன் வால்!


கோவில் மனிமேல்

ஓய்வெடுக்கும்

வண்ணத்துப் பூச்சிக்கு

நல்ல உறக்கம் -

மணி ஒலிக்கும் வரை.


உதிர்ந்த மலர்

திரும்புகிறதோ கிளைக்கு?

அது, வண்ணத்துப் பூச்சி


மட்சுஷிமா -

ஆ, மட்சுஷிமா!

மட்சுஷிமா!

மட்சுஷிமா என்பது ஜப்பானில் சமுத்திரக் கரையோரமுள்ள, மலைகளும், நதிகளும், மரங்களும், மலர்களும் உள்ள ஓர் இடம். அங்கு நின்று கொண்டு பாஷோ இந்த ஜென் கவிதையை பாடுகிறார். முதலில் அந்த இடத்தை பார்த்து பிரமித்து அதன் பெயர் சொல்கிறார். இப்போது அந்த இடம் அவர் கண்களில் நிறைந்து விட்டது. அதன் ஆச்சர்யத்தை பாடுகிறார். இப்போது அவருக்குள்ளும் இன்னொரு மாட்சுஷிமா!

சும்மா உட்கார்ந்

திருக்கிறது அமைதியாய்.

புல்

தானே வளர்கிறது

வசந்தம் வருகிறது


ஒரு வெட்டுக் கிளி இறகசைக்கிறது

ஒரு மலையின் மௌனம் கலைகிறது


ஒரு ஜென் கதை:

குருவே, இந்த வானம், பூமி, கடல், அருவி இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?

"உன் வாயிலிருந்து வந்தன! வானம், பூமி எல்லாம் சொற்கள், அது அவைகள் அல்ல"

1. ஜப்பானில் இன்றும் ஒருவிதமான யானை பொம்மை பிரசித்தம். ஏனென்றால் ஜப்பானில் அப்போது யானைகள் இல்லை. யானையை பார்க்காதவன் ஒருவன் வடித்த பொம்மை அது.

2. எழுதும்போது ஏதேனும் சொற்கள் கிடைக்காமல் நீங்கள் தவித்தால் உங்கள் பால்ய காலத்திற்குச் செல்லுங்கள், அங்கு உங்களுக்கு அது நிச்சயமாய் கிடைக்கும்.

3. சொற்கூட்டங்கள் மேகத்தை போல என்னை கடந்து செல்கின்றன, அதிலிருந்து எனக்குத் தேவையான சொல்லை நான் எடுத்துக் கொள்கிறேன் - தேவதச்சன்

4. ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்திற்காக இரண்டாயிரம் சொச்ச வார்த்தைகளை கொடுத்திருக்கிறார். Advertisement, Accomodation போன்றவை அவைகளுள் அடக்கம்.

5. ஒரு எழுத்தாளரிடம் உலகத்தில் ஒருவர் மட்டும் உயிருடன் இருக்கலாம் என்றால் யாரை சொல்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அவர் "ஷேக்ஸ்பியர்", ஏனென்றால் அவர் ஒருவர் இருந்தால் அவரே மற்ற அனைவரையும் கதாப்பாத்திரங்களாக உருவாக்கி விடுவார்! என்று சொன்னார்.

6. ஷேக்ஸ்பியர் வரலாறு கூறாமல் ஒரு விஷயத்தையும் சொல்வதில்லை.

7. ஷேக்ஸ்பியரின் மேக்பெத், அதை தழுவி ரோமன் போலன்ஸ்கி, விஷால் பரத்வாஜ் [மக்பூல்] போன்றோர்களால் திரைப்படமாய் எடுக்கப் பட்டது.

8. ஹோமரின் இலியட் நம் மகாபாரதம்/இராமாயணத்தை ஒத்திருக்கிறது, அதன் சம்பவங்கள் உட்பட...

9. மகாபாரத்ததிலிருந்து எந்த கதாபாத்திரத்தை எடுக்க முடியும், எதை எடுக்க முடியாது? என்ற ஒரு கேள்வி நான் எதிர்கொண்ட கேள்விகளில் மிகச் சிறந்த கேள்வியாகும். அதற்கு நான் சொன்ன பதில், மகாபாரதத்திலிருந்து பீஷ்மரை எடுக்க முடியாது. பாஞ்சாலியை எடுத்தாலும் கதைக்கு எந்த பங்கமும் வராது! பாஞ்சாலி இல்லையென்றாலும் பாரதம் இருக்கும். பாஞ்சாலி வெறும் பகடைக் காய் தான்.

10. "சப்தமே இல்லாத நடை என்றால் அது சகுனி தான்" என்பார் திருதிராஷ்ட்ரர்!

11. உங்களுக்கு வேண்டியது கிடைத்து விட்டால் எதிரியின் கூடாரத்தில் கூட நீங்கள் நிம்மதியாய் உறங்குவீர்கள், ப்ரியம் அகிலஸின் கூடாரத்தில் உறங்குவதை போல...

12. இலியட் அகிலஸின் புகழ் பாடுகிறது. ஒடிஸ்ஸி யுலிசிஸின் புகழ் பாடுகிறது.

13. அலிபாபாவும், அலாவுதீனும் எல்லோரும் கேட்டும், படித்தும் இருக்கிறோம், அனால் அவைகள் 1001 இரவுகள் கதைகளில் வருகிறது என்பது நமக்குத் தெரிவதில்லை.

14. ஷெஹெரஷா, ராஜா சாரியாருக்கு 1001 இரவுகளை கதை சொல்லியே நகர்த்துகிறாள். அதன் மூலம் சாவை தள்ளிப் போடுகிறாள். கதை சொல்லி நாமும் சாவைத் தள்ளிப் போடுவோம்.

15. கடவுள் மனிதனை படைத்தான், பின்பு மனிதன் கடவுளை படைத்தான்! - புதுமைப்பித்தன்

16. Army is Men without Women - Hemingway

17. ஹெமிங்க்வே ஒரு மிகச் சிறந்த வேட்டைக்காரர் [சிங்கம் ஒன்றை தனி ஆளாய் வேட்டையாடியவர்], உல்லாசி, சல்லாபி, பெரிய குடிகாரர், ஊர் சுற்றி, வாழ்வை கொண்டாடியவர். 127 முறை விபத்தில் அகப்பட்டு பிழைத்தவர்.

18. காளைச் சண்டை பார்க்கச் சென்ற ஹெமிங்க்வே அங்கு ஒருவன் நாள் முழுதும் ஓவியம் தீட்டிக் கொண்டிருப்பதை பார்த்து, அவரின் ஓவியத்தை வாங்கிப் பார்த்தார். அந்தக் காளையின் மூர்க்கம்/வலிமை அத்தனையும் உன் கோடுகளில் இருக்கிறது! நீ யார் என்று கேட்டார், அதற்கு அவர் நான் தான் பாப்லோ பிகாசோ என்றார்.

19. கிழவனும் கடலும் நாவல் வெறும் நூறு பக்கங்களே கொண்ட நோபல் பரிசு பெற்ற நாவல். அதில் இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள் தான் வருகின்றன. பெண்களே இல்லாத நாவல் இது.

20. வெற்றி தோல்வி என்பதை வெற்றி, சிறிய வெற்றி என்று வைத்துக் கொள்ளலாம். விளையாட்டில் கலந்து கொள்ளாதவர்களே தோற்றவர்கள்!

இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். எனக்கு நினைவு தெரிந்து என் கூடவே ஒட்டி உறவாடி, கட்டி உருண்டு சண்டையிட்டு, சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் ஒருவருக்கொருவர் கோள் மூட்டிக் கொண்டு, போட்டியிட்டுக் கொண்டு திரிந்த என் தம்பி, தந்தை ஆன நாள்! உருவத்தில் சிறிதாய் இருந்தாலும் நான் பெரிய்ய அப்பா ஆன நாள்! ஆம், எனக்கொரு மகள் பிறந்து விட்டாள்!

பெரியப்பா என்பது அண்ணன் ஆவது போலோ, மாமா ஆவது போலோ சாதாரணமானது அல்ல! அது இளம் வயதிலேயே எப்படியோ, யார் மூலமாகவோ கிடைத்து விடுகிறது. ஆனால் பெரியப்பா என்று சொல்லும்போதே ஒரு வித மரியாதை வந்து விடுகிறது! அப்பா என்ற சொல்லோடு ஒரு வித பொறுப்பு வந்து விடுகிறது.  உலகத்தில் ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் ஒவ்வொரு மனிதனின் நிலையை, அவனின் அடையாளத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. ஒரு கணவன் மனைவி தாய், தந்தை ஆகிறார்கள். ஒரு தாய் தந்தை தாத்தா, பாட்டி ஆகிறார்கள். இப்படி எத்தனையோ பேரின் அடையாளங்களை மாற்றி விட்டு அதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் தன் சிவந்த பிஞ்சு கைகளை மடக்கி சமர்த்தாய் தூங்குகிறது குழந்தை!

குழந்தை பிறப்பில் ஆண்களின் பங்கில் எனக்கு உடன்பாடு கிடையாது. வெறும் சுகத்தை மட்டும் ஆணுக்கு கொடுத்து விட்டு அத்தனை கஷ்டங்களையும் பெண்ணுக்கு கொடுத்ததில் என்ன நியாயம். ஐந்து மாதம் அவளிடம் ஐந்து மாதம் அவனிடம் என்றால் எத்தனை ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முன் வருவார்கள் என்று யோசிக்கிறேன்! ஆஹா, அப்படி நடந்தால் மக்கள் தொகை பிரச்சனையே கிடையாது! விஞ்ஞானிகள் யோசிக்க வேண்டும்! அதை விட கொடுமை, குழந்தை பெற்றுக் கொள்ள பெண்ணை தயார்படுத்துகிறேன் என்று அவர்களின் பதினோரு, பனிரெண்டு வயதிலிருந்து மாதவிடாய் தொல்லை, அது அவளின் ஐம்பது வயது வரை நீள்கிறது! என்ன அக்கிரமம்? இதற்கு பதிலாக, ஒரு பெண் திருமணமாகி உறவு கொள்ளத் தொடங்கியதும் அல்லது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பியதும், உடலில் சில ஹார்மோன்கள் உயிர்ப்பித்து கருவை உண்டாக்கியிருக்கலாம்! குழந்தைகள் பெற்றதும், அந்த நினைவு மங்கி விடும், அப்போது அந்த ஹார்மோன்கள் ஒதுங்கி கொள்ளலாம்!  கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் தான் பெண்ணை இப்படி படைத்தார் என்றால், அவர் நிச்சயம் ஆணாய் தான் இருக்க வேண்டும் :-)

பேச்சு வேறு எங்கோ சென்று விட்டது! என் தம்பி அமெரிக்காவில் குழந்தை பெற்றுள்ளான். ஆஸ்பத்திரியில் சேர்ததிலிருந்து நாங்கள் ஸ்கைப்பில் ஆன்லைனில் இருந்தோம். கிரிக்கெட் கமெண்ட்ரி சொல்வது போல் அங்கு நடப்பதை எல்லாம் எங்களுக்கு அவன் மெசெஜித்து கொண்டிருந்தான். இரவு ஒரு மணிக்கு மேல் தூக்கம் வந்து தூங்கி விட்டோம். காலையில் எழுந்து கணினியை திறந்தால், Where are you guys? Its baby time என்று அவன் ஆஃப்லைன் மெசேஜ் இருந்தது. அதோடு, Now we are going to push...push...push....baby is going to come out...push...oh! இந்திய நேரப்படி சரியாய் 6:36 மணிக்கு baby has come out என்று மெசஜ். ஆஹா! பிறகு அவனை தொடர்பு கொண்டு பேசினோம். உடனே ஒரு படம் எடுத்து அனுப்பி விட்டான். முன்பெல்லாம் படம் எடுத்தால் ஆயுள் குறைந்து விடும் என்று நம்பினார்கள். இப்போது குழந்தை பூமியில் விழுந்ததும் அடுத்தது போட்டோவில் தான் விழுகிறது :-)  எங்கோ கடல் கடந்து பிறந்த ஒரு குழந்தையை சில நிமிஷங்களில் பார்க்க முடிகிறது என்று நினைக்கும்போது உடல் சிலிர்த்தது.

உலகின் எந்த ஒரு நல்லது கெட்டது தெரியாமல், சுகமாய் உறங்கி கொண்டிருக்கும் குழந்தையை சிறிது நேரம் வீடியோவில் பார்த்தோம். அத்தனை நெகிழ்ச்சியான தருணம் அது! டெக்சாசில் இருக்கும் தன்னை பெரியப்பா சென்னையிலிருந்து பார்க்கிறார் என்பது தெரியாமல் குழந்தை உறங்கி கொண்டிருந்தது. ஒரு குழந்தையை பார்த்ததும் யாரும் அதை மட்டும் பார்ப்பதில்லை. அந்தக் குழந்தையில் யாரெல்லாம் தெரிகிறார்கள் என்று தான் பார்க்கிறோம். அம்மா மாதிரியா, அப்பா மாதிரியா, பாட்டி மாதிரியா, தாத்தா மாதிரியா...அது பிறந்தவுடன் தெரிவது கடினம் என்றாலும் அதை பற்றி பேசி விடுவதில் எல்லோருக்கும் ஒரு ஆர்வம். இவையெல்லாம் கேட்டுக்கொண்டே உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு என்ன தோன்றும்? கருவறையில் கிடைத்த அல்லது பழக்கப்பட்ட சௌரியங்கள் குறைந்து போயிருக்குமோ? அதனால் தான் அது அடிக்கடி அழுகிறதோ?  இத்தனை காலம் நம்மை சுற்றி ஈரமாய் இருந்ததே, இப்போது ஏன் காய்ந்து போயிருக்கிறது என்று நினைக்குமா?

கையை நீட்டி கன்னம் தொடும் போது தான் நாம் கணினியின் வழியே பார்க்கிறோம் என்ற நினைப்பு வருகிறது. ம்ம்ம்...ஒருவேளை வருங்காலத்தில் நான் என் கொள்ளுப் பேரன்களை இப்படிப் பார்க்கும்போது மானிட்டரின் ஊடே அவர்களின் கன்னத்தை கிள்ள முடியுமோ என்னமோ?

தினமும் அதிகாலை எட்டு மணிக்கெல்லாம் எழுந்து விடும் பழக்கம் எனக்கு! திடீரென்று நேற்று ஒரு ஞானோதயம். நாளைக்கு ஐந்து மணிக்கு எழுந்து பார்த்தால் என்ன? என்று! எழுந்து என்ன செய்வது என்று தெரியவில்லை. எழுந்து தான் பார்ப்போமே என்று நினைத்துக் கொண்டு நாலரை மணிக்கு அலாரம் வைத்தேன். அப்போது தானே அதை Snooze செய்து செய்து ஒரு ஐந்து மணிக்கு எழுவதற்கு வசதியாய் இருக்கும். அதற்கெல்லாம் அவசியம் இல்லாமல், கொசு வலைக்குள்ளே வசதியாய் கடித்துக் கொண்டிருந்த கொசுக்கள் நாலே முக்காலுக்கு எல்லாம் குத்தி குத்தி எழுப்பி விட்டன. எழுந்து பல் விளக்கி நானே சமையல் அறைக்குள் சென்று தட்டுத்தடுமாறி விளக்கை போட்டு [விளக்கை போட்டதும் பார்வை போய் விட்டது போல் அலறி ஓடுகிறது கரப்பான்!] எங்கே எது என்று தேடி ஒரு காப்பி போட்டு சாப்பிட்டேன். சக்கரை போட்டு கலக்கிய கலக்கில் சூடு கொஞ்சம் ஆறி இருந்தது. இருந்தாலும் சுவை பரவாயில்லை.

காப்பியை குடித்து விட்டு, அதற்கு நேர் எதிராக ஒரு சட்டையை மாட்டிக் கொண்டு, அதாங்க டீ சர்ட்! [ஸ்வபா...] மாட்டிக் கொண்டு வாக்கிங் கிளம்பினேன். இன்னும் இருட்டாய் இருந்தது. மெதுவாய் இடப்பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.காகங்கள் ஒன்றிரண்டு கரைந்து கொண்டிருந்தன. பகல் பொழுதில் நாடு ரோட்டில் நின்று அழிச்சாட்டியம் செய்யும் மாடுகள், இந்த சமயத்தில் அடைபட்ட கடையின் வாசலில் ஏகாந்தமாய் அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்றிரண்டு நாய்கள் "இவன் யாருடா புதுசா" என்பது போல் பார்க்கின்றன. மடிப்பாக்கத்து நாய்கள் பெங்களூர் நாய்கள் போல் அல்ல. மிகவும் சாதுவானவை. மற்ற ஏரியா நாய்களை பார்த்து தான் குறைக்கிறதே அன்றி மனிதர்களை பார்த்தல்ல! திடீரென்று இவைகள் எல்லாம் எப்போது தூங்கும் என்று ஒரு கேள்வி எழுந்தது! லேசாய் பனி மூட்டமாய் இருந்தது. வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் கண்ணாடிகளில் பனி உறைந்து போயிருந்தது. அதைப் பார்க்கும்போது தில்லியில் இருந்த நாட்கள் ஞாபகம் வந்தது.  மணி ஒரு ஐந்தே கால் இருக்கும். காலை நாலரையிலிருந்து ஐந்தரை வரை பிரம்ம முகூர்த்தம் என்கிறார்கள். கரை படியாத காற்று. அதிக வாகன இரைச்சல் இல்லையென்றாலும், அந்த நேரத்திலும் ஒரு கால் டாக்சியோ, இரு சக்கர வாகனமோ, பால் வண்டியோ, செங்கல் லாரியோ அம்பேத்கர் சாலையை கடந்து கொண்டு தான் இருக்கிறது!  பக்கத்து தெருவில் வீடு கட்ட செங்கல் இறங்கிக் கொண்டிருந்த லாரியிலிருந்து "கடவுள் அமைத்து வைத்த மேடை" பாடல் கேட்கிறது! அதை கடந்து நடந்தேன். சாக்கடையில் கழிவு நீர் ஓடும் சத்தம் காட்டில் ஒரு ஓடையை கடக்கும் அனுபவத்தை கொடுக்கிறது! 

விசேஷத்திற்கு ஆடர் எடுத்து ரெடிமேட் சாப்பாடு செய்பவர்கள் நால்வர் எதையோ கிண்டி கொண்டிருந்தார்கள். மிச்ச மீதி ஏதாவது தேறாதா என்று இரண்டு நாய்கள் காத்திருக்கின்றன. இருள் கொடுத்த சுதந்திரத்திலும், ஆள் நடமாட்டம் கம்மி என்பதாலும் முந்தானை ஒதுங்க குனிந்து கூட்டிப் பெருக்கி வாசல் மொழுகுகிறாள் ஒருத்தி. அவள் வயதானவள் தான் என்றாலும், என்னைப் பார்த்ததும் அவள் கை ஆடையை சரிசெய்கிறது! Intuition! அவளை கடந்ததும், ஹெல்மட் மாட்டிக் கொண்டு வண்டியை எடுத்து வெளியே வரும் கணவனுக்கு கேட்டை திறந்து விடுகிறாள் ஒரு இல்லத்தரசி. என் இடத்தில் ஒரு பொறுக்கியோ, கொள்ளைக்காரனோ இருந்திருந்தால் அவனுக்கு இந்த சந்தர்ப்பம் வசதியாய் அமைந்திருக்கும் என்று ஏனோ பட்டது! சிறிது தூரம் சென்று திரும்பி வந்த வழியே நடந்தேன். மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். அம்பேத்கர் சாலை விசாலமாய் தான் இருக்கிறது.  சாலையில் விளக்குகள் ஜோராய் எரிகிறது! மரங்களே இல்லாத வெறுமை! வெளியூரிலிருந்து வருபவர்கள், வெளியூர் செல்வபர்கள் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக என்னை கடந்து செல்கிறார்கள். நகரத்தின் அடுத்த பக்கத்தில் வேலைக்கோ, படிக்கவோ செல்பவர்கள் கிளம்பிவிட்டார்கள். பால் பாக்கெட்டுகளை ஒரு கூட்டம் அடுக்கிக் கொண்டிருக்கிறது. நம் ஊரில் தேநீர் கடைகளில் எந்த நேரத்திலும் ஒருவராவது நின்று தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் சற்று நேரத்திற்கு முன் அள்ளிப் பூசிய திருநீற்றுப் பட்டையுடன் பலசரக்குக் கடையை திறக்கிறார் அண்ணாச்சி ஒருவர். அவர் கடை திறக்க இரண்டு வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள்! பேருந்து நிலையத்தில் M45A வருகிறது. இது தான் முதல் பஸ்ஸாக இருக்க வேண்டும். அந்த நேரத்திலும் பத்து பேர் அந்த பாழடைந்த பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறார்கள்! இதில் ஏறினால் ஆறு, ஆறரை மணிக்குள் மெரீனா போய் விடலாம் என்று தோன்றியது. காசு கொண்டு போயிருந்தால் நிச்சயம் ஏறி இருப்பேன். அது மேலும் ஒரு புது அனுபவமாய் இருந்திருக்கும். இலக்கில்லாமல் பயணம் போவது சுவாரஸ்யமாய் தான் இருக்க வேண்டும். சென்னை வந்ததிலிருந்து ஒரு தடவை கூட சூரிய உதயத்தை கடற்கரையில் பார்த்ததில்லை. பொழுது புலர்வதை பார்ப்பதில் ஒரு தனி இன்பம் இருக்கிறது. அதிலும் கடற்கரையிலோ, மலையடிவாரத்திலோ பார்ப்பது அருமை. 

பேருந்து நிலையத்தை சுற்றியும் குப்பை கூளமாய் இருக்கிறது! மழை பெய்து தண்ணீர் தேங்கி இருக்கிறது. அதில் பிளாஸ்டிக் பைகள் நிரம்பி காணச் சகிக்கவில்லை. திரும்பி வீடு நோக்கி நடந்தேன். "நான் குணாலம்மன் கோயிலாண்டே தான் நிற்கிறேன், சரி வாங்கோ" என்று மொபைலில் ஆபிசர் ஒருவர் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார். பட்டுப்புடவையுடன் வாசலில் நின்று கொண்டு ஆட்டோவுக்காக ஒருவர் காத்திருக்கிறார்.

அதிகாலையில் வாக்கிங் போவதில் ஆயிரம் நல்ல விஷயம் இருந்தாலும், என்னைப் போன்று மாதம் ஒரு பதிவிடும் வலைப்பதிவாளனுக்கு அது ஒரு பதிவுக்காகிறது! அதற்காவது தினமும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்!


"நீங்க எவ்வளவு எவ்வளவு எவ்வளவு எதிர்பார்க்கிறீங்களோ, அவ்வளவு மேல, மேல, மேல இருக்கும்!" என்று சொல்வதற்கு நிச்சயம் தன் ஸ்க்ரிப்டில் அசகாய நம்பிக்கை வேண்டும். அப்படிப்பட்ட எக்கச்சக்க எதிர்ப்பார்ப்புகளுடன் களம் இறங்கி இருக்கிறது ஏழாம் அறிவு!

கதை:

ஆறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த ஒரு மாபெரும் யோகி போதிதர்மன். அவர் தற்காப்புக் கலையிலும், மருத்துவத்திலும் மிகவும் தேர்ச்சி பெற்றவர். பல்லவ மன்னனின் கட்டளைப்படி கால் நடையாக சீனாவுக்கு சென்று அங்கு தன் திறமைகளை சீனர்களை கற்றுக் கொடுத்து அங்கே உயிர் துறக்கிறார். அன்று ஒரு தமிழனிடம் கற்ற வித்தையை இன்று இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த திட்டம் தீட்டுகிறது சீனா. அந்த திட்டத்தை அழிக்க, போதிதர்மனின் திறமைகளை அவரின் வம்சாவழியில் வந்த அரவிந்தனிடம் [சூர்யா] உயிர்ப்பிக்கிறார் சுபா! [ஸ்ருதி].

கார சாரமான அக்மார்க் மசாலா கதை. வழக்கம் போல் முருகதாஸ் மிக புத்திசாலித்தனமாய் திரைக்கதை அமைத்திருக்கிறார். இரண்டு வருடம் ஸ்க்ரிப்டில் உழைத்ததாக கேள்விபட்டேன். போதிதர்மன் என்ற ஒருவரை மட்டும் தெரிந்து கொண்டு அவரை சுற்றி இப்படி ஒரு விறுவிறுப்பான கதையை பின்ன நிச்சயம் திறமை வேண்டும். அது முருகதாஸிடம் நிறைய இருக்கிறது. என்ன அருமையான கதையாக இருந்தாலும், திரைக்கதை சுவாரஸ்யமாய் இல்லாவிட்டால் படம் சலித்து விடும். அதை மிக அருமையாய் புரிந்து கொண்டிருப்பவர் முருகதாஸ். ரமணாவாகட்டும், கஜினியாகட்டும், ஏழாம் அறிவு ஆகட்டும், எல்லாவற்றிலும் சீனுக்கு சீன் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இல்லை. அதே போல், முருகதாஸின் கதாநாயகிகள் டூயட் பாட மட்டுமில்லாமல், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாய் இருப்பது ஒரு ஆறுதல்! இந்தப் படத்தில் ஆங்காங்கே சில தொய்வுகள் இருக்கத் தான் செய்கிறது. போதிதர்மன் சம்மந்தப்பட்ட காட்சிகள், வாய்ஸ் ஓவரில் கதை சொல்வது ஏதோ ஒரு டாக்குமெண்டரி ரேஞ்சுக்கு ஆகிவிடுகிறது. அதை தவிர்த்து காட்சிகளின் வழியே கன்வே செய்திருக்கலாம் என்று தோன்றியது. அதே போல், இந்த மாதிரி படங்களில் காதல் பகுதிகளை இரக்கமில்லாமல் தவிர்க்கலாம்! கதாநாயகன், கதாநாயகி என்றால் அவர்கள் காதலித்தே ஆக வேண்டும், அதற்காக ஃபாரின் லொகேஷன் டூயட்டுகள் பாடியே ஆகவேண்டும் என்பதை தமிழ் சினிமா இயக்குனர்கள் நிறுத்தியே ஆக வேண்டும்! இந்தப் படத்தில் அறிமுக பாடலும், காதல் காட்சிகளும், டூயட் பாடல்களும் மிகப் பெரிய தொய்வை உண்டாக்குகின்றன. "எம்மா எம்மா காதல் பொன்னம்மா, நீ என்ன விட்டு போனதென்னம்மா?" வரிகளே சரியில்லை. கதைப்படி, சுபா அரவிந்தனை காதலிக்கவே இல்லை, அதற்குள் எப்படி "நீ என்ன விட்டு போனதென்னம்மா?" என்று பாட முடியும்? அப்புறம் டையலாக் ரொம்ப ரொம்ப சுமார் ரகம். மற்ற இயக்குனர்களை போல், இவரும் யாராவது எழுத்தாளரை துணைக்கு அழைத்திருக்கலாம்! போதிதர்மன் கதையில் தமிழ், வீரம், ஈழம் என்று லேசாய் தொட்டுச் சென்றிருக்கிறார். இப்படி ஒரு கமர்சியல் படத்தில் ஈழத்தை பற்றி போகிற போக்கில் பேசுவதை விட, அதைப் பற்றி ஆழமான பார்வையுடன் ஒரு படைப்பை முன் வைப்பது நல்லதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சூர்யா, ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால் தன்னால் இயன்ற அளவு உழைப்பை கொடுப்பதில் அமீர் கானை நினைவுபடுத்துகிறார். சூர்யாவின் கண்கள் அவருக்கு மிகப் பெரிய ப்ளஸ்! ராம் கோபால் வர்மா சொல்வதை போல், Mr. Eyes தான்! ஒரு யோகி என்று அவரை கட்டும்போது அவர் கண்கள் அதை நம்ப வைக்கிறது! ஆனால் இந்த படத்தில் இவருடைய உழைப்பு வீணாக்கப்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது! சர்க்கஸ் கலைஞரை வருவதால் சர்க்கஸ் சாகசங்களை கற்கிறார், வியட்நாம் சென்று மார்சியல் ஆர்ட்ஸ் கற்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள். படத்தில் சர்க்கஸ் வருவது ஏதோ உப்புக்கு சப்பாணி போல் தான். எதற்கு இந்தப் படத்தில் நாயகன் சர்க்கஸ் கலைஞனாய் வரவேண்டும் என்ற கேள்விக்கு பதில் இல்லை! 

ஸ்ருதி, அழகாய் இருக்கிறார். உயரம் தான் கொஞ்சம் உறுத்துகிறது. பொட்டு வைத்துக் கொண்டு, பல காட்சிகளில் சுடிதாரில் வருவது ஆறுதல் அளிக்கிறது. கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். அவருடைய தமிழ் எனக்குப் பிடித்தது. 

படத்தின் வில்லன், ப்ரூஸ் லீ சாயலில் இருக்கிறார். அவர் கழுத்தை ஒடித்துப் பார்ப்பது போலவே பார்க்கிறார். அனன்யாவை என்னை சொல்லி படத்தில் போட்டார்களோ! இத்தனை சீன் என்று சொல்லி, இப்படி கட் பண்ணிட்டீங்களே என்பது போல் ஒரு ரியாக்ஷன்! மற்றபடி படத்தில் யாரை பற்றியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. 

ரவி. கே. சந்திரனின் ஒளிப்பதிவு போதிதர்மனின் சீன பயணத்திலும், பாடல்களிலும் ஒளிர்கிறது. பிறகு அதற்கு பெரிய வேலை இல்லை. ஹாரிஸின் பாடல்கள் கஜினி அளவுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். "முன்னந்திச் சாலையில்" பரவாயில்லை. பின்னணி இசை பல இடத்தில் நன்றாய் இருந்ததாய் எனது அபிப்ராயம்.

காதல், பாடல்கள் என்று ஒரு ஒரு மணி நேரத்தை இரக்கமில்லாமல் "கட்" டிருந்தால் படம் செம விறு விருப்பாய் இருந்திருக்கும்.


தீபாவளி குழந்தைகளுக்குத் தான் என்றே தோன்றுகிறது. வயது ஆக ஆக நம்மோடு சேர்ந்து தீபாவளிக்கும் வயதாகிவிடுகிறது! பள்ளியில் படிக்கும்போது தீபாவளியை நினைத்தால் ஏற்படும் குதூகலம் இல்லை இப்போது! ஏன் அப்படி? அதே தீபாவளி, அதே புத்தாடை, அதே இனிப்புகள், அதே பட்டாசுகள், அதே புது சினிமாக்கள்! அதே சிறப்பு நிகழ்த்திசிகள்! ஆனால் அப்போதிருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை. ஏதோ ஒரு நாள் விடுமுறை என்கிற அளவிற்கு அது நீர்த்துப் போய் விட்டது! ஒரு வேளை இந்த அத்தனையும் அப்பா வாங்கிகொடுத்த போது இருந்த சந்தோஷம் நாமே சம்பாதித்து வாங்கும்போது குறைந்து விட்டதோ? தெரியவில்லை...

பள்ளியில் படிக்கும்போது தீபாவளியை பற்றிய கனவு, புது வருஷ காலெண்டரில் தொடங்கும்! காலேண்டர் கைக்கு கிடைத்ததும், முதலில் பார்ப்பது தீபாவளி எப்போது என்று தான்! கிட்டத் தட்ட ஒரு வருடத்திற்கு முன்னே...அது அருகே வர வர, நெஞ்சில் ஒரு வித குறு குறுப்பு  தோன்றும். புது துணிகளுக்காக கடை ஏற ஆரம்பித்ததும் அது மேலும் சூடு பிடிக்கும். புது துணி எடுத்ததும், வீட்டில் வருவோம் போவோரிடமெல்லாம் புதுத் துணியை காட்டுவது ஒரு சடங்காகும்! அது அப்படி ஒரு பரவசமான அனுபவம். என் நண்பன் ஒருவன் சொன்னான், விடிந்தால் தீபாவளி என்கிற பரவசம், நமக்கு விடிந்தால் கல்யாணம் என்பதிலும் இருப்பதில்லை! எத்தனை உண்மை!  பட்டாசுகள் என்னை அவ்வளவு பாதித்ததில்லை. சாஸ்திரத்துக்கு வாங்கி வெடித்துக் கொண்டிருந்தேன். இத்தனை பட்டாசு வேண்டும் என்று அப்பாவிடம் அடம்பிடித்ததாய் ஞாபகம் இல்லை. என்னை பொறுத்தவரை, தீபாவளியை விட தீபாவளியை எதிர்பார்ப்பதே அருமையான த்ரில்! பள்ளியில் படிக்கும்போது கிளாசில் எழுதும்போது, தேதி போட்டு எழுதுவதுண்டு! தீபாவளி நெருங்க நெருங்க, அந்த தேதிகளும் எனக்குள் ஒரு குறுகுறுப்பை உண்டாக்கும். தீபாவளி எந்த நாள் என்பது வருஷத்தின் முதல் நாளே மனப்பாடம் ஆகி விடுவதால், இதே, அடுத்த மாதம், இந்த தேதியில் தீபாவளி என்று மனது அலைபாயும். தேதி ஒத்துப் போகவில்லைஎன்றால் கிழமை...எப்படியோ எல்லா தேதிகளும் தீபாவளியையே சென்றடையும்! எல்லா மதமும் கடவுளை சென்றடைவதைப் போல்...ஆனால் அதே தேதிகள் தீபாவளி முடிந்ததும் சோகத்தை அள்ளிப் பூசும். தீபாவளி முடிந்து முதல் நாள் பள்ளி சென்று எழுத ஆரம்பத்ததும், என் கை தன்னையுமறியாமல் தீபாவளிக்கு முந்தின தேதிகள் குறிப்பிட்ட பக்கங்களை நோக்கிச் செல்லும்! சே, இந்த நாட்களில் தீபாவளியை எதிர்நோக்கி நாம் எத்தனை மகிழ்ச்சியாக இருந்தோம் என்று ஏங்குவேன்! அந்த ஏக்கம் அடுத்த புது வருஷ காலெண்டரை பார்க்கும் வரை நீடிக்கும். பிறகு அதே எதிர்பார்ப்பு தொடங்கி விடும்...

இதோ மற்றொரு தீபாவளி, ஒரு சர வெடி முடிவுக்கு வருவதைப் போல் முடிந்து கொண்டிருக்கிறது! புது வருஷ காலண்டருக்காக காத்திருக்கத் தொடங்குகிறது ஒரு குழந்தை மனது!

தீபாவளி நல் வாழ்த்துக்கள்!



தலையின் 50 வது படம். அதில் வெங்கட் பிரபு கேம் விளையாடி இருக்கிறார்.

மங்காத்தா!


ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தை ஒழிக்க (நல்ல) போலீஸ் அதிகாரி ப்ரித்வி (அர்ஜுன்) நியமிக்கப்படுகிறார். அந்த சூதாட்டத்தில் புழங்கும் ஐந்நூறு கூடி ரூபாய் பணத்தை நான்கு பேர் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார்கள். அதில் ஒருவராய் சேர்ந்து கொள்கிறார் சஷ்பென்ஷனில் இருக்கும் (கெட்ட) போலீஸ் அதிகாரி விநாயக் (அஜீத்). ஆட்டம் ஆரம்பிக்கிறது! கடைசியில் பணம் யாருக்குக் கிடைத்தது என்பதில் ஒரு ட்விஸ்ட்!!

அந்த போலீஸ் கட், சால்ட் பெப்பர் லுக், ரே பன் கிளாஸ்...அந்த வசீகரம் குறையாத சிரிப்பு! எம்.ஜி.ஆர், ரஜினிக்குப் பிறகு அஜீத்துக்கு தான் அப்படி ஒரு ஸ்க்ரீன் ப்ரிசென்ஸ்! பிக்கினி போட்டு நாலு வெள்ளைத் தோள் பெண்கள் உடம்பை வளைத்து நெளித்து ஆடினாலும் நம் பார்வை அஜீத்தை தாண்ட மறுக்கிறது. மே வந்தால் 40 வயதாகிறது என்று அவரே சொல்கிறார், அத்தனை அழகாய் வயதாகிறது அவருக்கு! ஆக் ஷன் கிங் என்று அர்ஜுனை நக்கல் விடுவதும், "நீ எங்கே சுட்டியோ அங்கே தாண்டா நானும் சுட்டேன்" என்பதும் கிளாஸ்! அத்தனை ஹை ஃபையாய் இருக்கும் ஒருவர் கெட்ட வார்த்தைகள் பேசுவதும் ஒரு கிக் :)  ஃபிரேம் பை ஃபிரேம் அஜீத் இருக்க வேண்டும் என்று பிரபு முடிவு கட்டி விட்டார் போல்!! தலை ரசிகர்களுக்கு அவரின் 50 வது படத்தில் இதை விட வேறென்ன வேண்டும்! படத்தை அஜீத் தான் தாங்கு தாங்கு என்று தாங்குகிறார். தன் 50 வது படத்தில் இப்படி ஒரு நெகடிவ் ஷேட் காரக்டர் எடுத்ததே பெரிய விஷயம் தான்! அவரே சொல்வது போல், இத்தனை நாள் நல்லவனாகவே நடித்துப் பார்த்தார், ஒன்றும் விளங்கவில்லை. அதனால் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டார் போலும்! அதுவும் நல்லதுக்கு தான் என்று சொல்ல வேண்டும்!

அழுது கொண்டே "நிஜமாத் தான் சொல்றியா?" என்று அஞ்சலி கேட்கும் போது பிரபுவின் ட்ரேட் மார்க் குறும்பு தெரிகிறது. அது சீரியஸ் சீனாய் இல்லாவிட்டால் "கற்றது தமிழ்" படத்திலிருந்து அஞ்சலியின் ஷாட்டை எடுத்து அப்படியே போட்டிருப்பார் என்று பட்டது! மற்றபடி சென்னை 28, சரோஜாவில் இருந்த திரைக்கதை நேர்த்தி ஒன்றும் இதில் இல்லை. படம் பார்த்த நாங்கள் தான் குண்டடி படாமல் தப்பித்தோம்; படம் முழுதும் யாரோ யாரையோ சுட்டுக் கொண்டே இருந்தார்கள்! அதோடு பல இடங்களில் லாஜிக் சொதப்பல்கள்!  படம் எடுத்துக் கொண்டே கதை எழுதியிருக்கிறார் என்று தெளிவாய் தெரிகிறது! ஆனால், என்ன கதை எழுதினாலும் அதில் சாமர்த்தியமாய் அவரின் கூட்டாளிகளை புகுத்தி விடுகிறார். மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை. பிரேம்ஜி என்ன செய்தாலும் சிரிக்கிறார்கள். இந்தப் படத்தில் அவர் வழி மொழியும் டயலாக், வானம் படத்தில் சிம்பு சொல்லும் டயலாக் "என்ன வாழ்க்கை டா?" மற்றவர் சொன்ன டயலாக்கை அப்படியே இவர் திரும்பி சொல்வதற்கு இவருக்கு இத்தனை பெயரா? "என்ன வாழ்க்கை டா?!"

ஆக் ஷன் கிங் நெற்றியில் விழும் முடியை ஊதி விட்டுக் கொண்டு படம் முழுதும் சுட்டுக் கொண்டே இருக்கிறார். "மை டியர் தலை" என்று கடைசியில் மெய் சிலிர்க்கிறார். ரஜினி மீனாவின் மகளோடு டூயட் பாடும் காலத்திலும் இவர் துப்பாக்கியுடன் திருடர்களை சுட்டுக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்! [சார் அந்த துப்பாக்கியை கொஞ்சம் குடுங்க!!!] அஞ்சலிக்கு ஒரு பாட்டு, நாளு சீன். லட்சுமி ராய்க்கு 2 பாட்டு, நாலு சீன். ஆண்ட்ரியாக்கு எண்ணி மூணு சீன்! தயிர் சாதத்துக்கு ஊறுகாய் போல்! யாரு த்ரிஷாவா? அவங்க வேற இருக்காங்களா என்ன? என்னது அவங்க தான் ஹீரோயினா? [சத்தியமா இதை எழுதிக் கொண்டிருக்கும்போது சன் ம்யுசிக்கில் "விண்ணைத்தாண்டி வருவாயா" பாடல் போகிறது. அதை பார்த்து தான் த்ரிஷா இந்தப் படத்தில் இருக்கிறாரே என்று ஞாபகம் வந்தது!] அந்த லட்சணம் தான் அவங்க ரோல்! யுவன் ஒவ்வொரு ட்யூன் போட்டு விட்டு ட்விட்டிக் கொண்டிருந்தார். அது தான் மிச்சம். பாடல்கள் ஒன்றும் அத்தனை பிரமாதமில்லை..

மங்காத்தாவில் தலை இருக்கிறது! தலை மட்டும் தான் இருக்கிறது!!
வெகு நாட்களுக்குப் பிறகு என்னுடைய சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு...அனைத்தும் போட்டோஷாப்பில் வரைந்தது!


இன்றைய வலைப்பதிவை பார்க்கும் முன், என் முந்தைய வலைப்பதிவை பற்றி ஒரு updated கருத்து:

தெய்வத்திருமகள் படத்தை நான் ஆஹா ஹோஹோ என்று புகழ்ந்து எழுதிவிட்டேன். அது ஒரு ஆங்கில படத்தின் அப்பட்டமான காப்பி என்ற உண்மை தெரியாமல்! ராம் பின்னூட்டம்ல சொன்னதும் தான் வலையில் தேடி பார்த்தேன். விக்ரம் சிகை அலங்காரத்திலிருந்து அவர் சிரிப்பு வரை அப்படியே இருக்கிறது! ஏன் இதில் ஒரிஜினல் இல்லையா என்று நீங்கள் கேட்டால் இருக்கிறது, ஆனாலும் மூலம் நகல் தானே! வெறுத்து விட்டேன். படத்தில் ஒரு வரி கூட இதை போடவில்லை, தொலைக்காட்சியில் வண்டி வண்டியாய் படத்தை பற்றி பேசுகிறார்கள், இதைப் பற்றி சொல்லவில்லை! மிஷ்கினுக்கு அடுத்து இப்போது இயக்குனர் விஜய்! ஆங்கில படங்கள், உலக படங்கள் பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளட்டும், மற்றவர்களுக்கு இது ஒரு புது படம் தானே என்று நினைப்பது எத்தனை திருட்டுத்தனம்?

திருட்டு வீசிடியில் படத்தை பார்க்காதீர்கள் என்று எனக்கு சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

நிற்க [எந்திரிச்சி நிக்கத் தேவையில்லை!]

கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்! BACK TO THE STORY!! இன்று கொசுக்கடி தாங்க முடியாமல் அதைப் பற்றி நறுக்கென்று ஒரு கடியை பேஸ் புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போடலாம் என்று ஆரம்பித்தேன். அது வலைபதிவு வரை வந்து விட்டது. எனக்கு சந்தோஷம், உங்களுக்கு (சங்கடம்?)

சங்ககாலத்தை போல் இன்றும் வீரனின் இடையில்
வாள் வைக்கும் வழக்கம் இருந்தால்
இடையின் மற்றொரு பாகத்தில் 
இன்னொரு உறை வைக்க வேண்டி இருக்கும்...
கொசு பேட் வைக்க!!

எனக்கும் சங்க கால வீரனுக்கும்
நிறைய வித்தியாசமில்லை!
இரவில் பேட் கொண்டு நான் 
கொசு அடிக்கும் அழகைப் பார்த்தால்
உங்களுக்கு புரியும்!!

பறக்கும் படையில் எதிரிகள்
காலாட்படையின் வீரன் நான்
வாள் வீசிப் பயன் என்ன?
சரண் அடைந்தேன் கொசுவே சரணம்!

எப்படியும் கொசுவை அழிக்க முடியப்போவதில்லை - பதிலாக 
எதாவது ஆராய்ச்சி செய்து அதன் எடையை கூட்டி விட்டால்
அது நம் கை காலில் கடிக்க அமரும் போது அதன் பாரம் தாங்காமல்
தள்ளி விடவாவது ஏதுவாய் இருக்கும்!!

பிள்ளையார் எறும்பும் அசைவமா என்ன?
இறந்த கொசுவை தூக்கிக் கொண்டு ஓடுகிறேதே!

படுக்கையின் மேல் கொசு வலை விரித்து 
விளக்கணைத்துப் படுத்தேன்...காலையில் 
அதிக ரத்தம் குடித்து மயங்கிய நிலையில் 
தப்பிக்க வழியில்லாமல் கொசுக்கள் 
அசந்து தூங்கி கொண்டிருந்தன!
நீண்ட நாட்களாய் அகோரப் பசியோடு இருந்த விக்ரமிற்கு ஒரு ஃபுல் மீல்ஸ் படைத்திருக்கிறார் இயக்குனர் விஜய்! விக்ரம் உயிர்த்தெளிந்து வந்திருக்கிறார். ஆறு வயது மனம் படைத்த வளர்ந்த மனிதனிடமிருந்து அவனது குழந்தையை உரியவர்கள் பறித்துக் கொள்கிறார்கள்.அவளை திரும்பி பெற அவன் நடத்தும் போராட்டமே கதை! கடைசியில் அதில் ஒரு சின்ன ட்விஸ்ட் என்று மிக அழகாய் திரைக்கதை பின்னியிருக்கிறார் விஜய்!

"கிருஷ்ணா, பேர் வைக்காதே! பின்னாடி பிரச்சனை ஆயிடும். எல்லாரும் பேர் சொல்லியே கூப்பிடுவாங்க!" என்ற வசனம் ஜெயகாந்தனின் "குரு பீடம்" கதையில் வரும் "பேரு என்னான்னு ஒரு கேள்வி கேட்டா - ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பதில் சொல்றான் பாத்தியா? ஒரு கேள்விக்கு எம்மாம் பதில்!" வசனம் நினைவுக்கு வந்தது! இப்படி பல "நச்ச்" கள்!

மரம் ஏன்பா உயரமா இருக்கு?
அதோட அப்பா உயரமா இருக்குல்ல அதான்!

காக்கா ஏன்பா கருப்பா இருக்கு?
அது வெயில்ல சுத்துது இல்லை, அதான்!

யானை ஏன்பா குண்டா இருக்கு?
அது நெறைய சாப்பிடுதுல்ல, அதான்!

இதையும் தாண்டி படத்தில் பல இடங்களில் நெகிழ்ச்சியான சம்பவங்கள். ஒரு உணர்ச்சிப்பூர்வமான மலையாள சினிமா பார்த்த உணர்வு! குழந்தை சாரா ஒரு நல்ல அறிமுகம்! கோர்ட் சீனில் விக்ரமுக்கு இணையாக அசத்துகிறது! அனுஷ்காவையும் அமலா பாலையும் வைத்துக் கொண்டு இந்த மாதிரி ஒரு படத்தை கொடுத்ததற்கே இவரை பாராட்ட வேண்டும். அனுஷ்கா இடுப்பு தெரியாமல் நடித்த ஒரே படம் இதுவே தான் இருக்கும்! சி ஜே பாஸ்கர், சந்தானம் காமெடி களை கட்டுகிறது! தமிழர்கள் சிரிக்கத் தெரியாதவர்கள் என்று யாரும் சொல்ல முடியாது! சமயத்தில் மொக்கை ஜோக்குக்கும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்! அவிலாஞ்சியின் அழகு நல்ல ஒரு ஒளிப்பதிவினால் கண்ணை பறிக்கிறது! பப்பப்பா பா பாடல் காதுக்கு இனிமை.

அடேயப்பா தில், தூள், சாமியில் பார்த்த விக்ரமா இது? என்ன ஒரு மாற்றம்! தலை முடியை சுற்றிக் கொண்டே, கையை தூக்கிக் கொண்டே, விரலை தேய்த்துக் கொண்டே, வாயை திறந்து கொண்டே, அசட்டுத்தனமாய் அட்டகாசமாய் சிரித்துக் கொண்டே என்று மனிதர் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் நல்ல ஒரு கதைக்காக, அந்த கதாப்பாத்திரமாய் வார்த்துக் கொண்டு, தன்னையே புதுப்பித்துக் கொள்ளத் துடிக்கும் ஒரு உன்னதமான கலைங்கனுக்கு ஹேட்ஸ் ஆஃப்! 

படத்தில் சில கேள்விகள், சில விமர்சனங்கள்!

படத்தில் வொய். ஜி. மகேந்திரன் கதாப்பாத்திரம் எதற்காக? 
அந்த டாக்டர் அத்தனை ஸ்ட்ரிக்டான ஆசாமி என்றால் விக்ரம் எப்படி ஐ. க்யு டெஸ்டில் தேறினார்?
மூர்த்தி (சீ ஜே பாஸ்கர்) பாஷ்யத்தின் (நாசர்) ஆளாய் இருந்தார், திடீரென்று எப்படி அவர் மனம் மாறினார்?

படம் நன்றாய் இருந்தாலும், சற்று நீளமாய் போய் விட்டது. சில தேவையில்லாத சீன்களை வேட்டி ஒட்டியிருந்தால் க்றிஸ்பாய் இருந்திருக்கும்! அதிலும் கோர்ட்டில் இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டு அடடடா...அப்பப்பா, தாங்க முடியவில்லை!! திடீரென்று அனுஷ்காவை விக்ரம் கட்டிப் பிடித்ததும் ஒரு கனவுப் பாடல்! குபீலென்று ஆகிவிட்டது!  கொடுத்த காசுக்கு மேல் பிரகாஷ் இசை அமைத்ததால் வந்த உபரி பாட்டு போல! நல்ல வேலை பாட்டோடு அந்தக் காதல் நின்று விட்டது!! படம் தப்பித்தது!!

இயக்குனர் விஜய் ஒரு பேட்டியில் சொன்னது போல், எந்த சூது வாதும் தெரியாமல், யாருக்கும் தீங்கு செய்யாமல், அன்பு ஒன்றே வேதமாய், எத்தனை அவசரத்திலும் விதிமுறைகளை தவறாத ஒருவனை மன நலம் இல்லாதவன் என்று சொல்வது எத்தனை விசித்திரம்!

இந்தப் படம் தெய்வத்திருமகள் அல்ல, தெய்வத்திருமகன் தான்!

மறுபடியும் ஒரு தீவிரவாதத் தாக்குதல்! மும்பையில் மூன்று குண்டு வெடிப்புகள்...ஊரில் உள்ள அத்தனை போலீஸ்களும் அங்கே குடி கொண்டு விட்டனர்.அத்தனை மீடியாவும் கூடாரம் அடித்து தங்கி விட்டது அங்கேயே! மற்றும் அத்தனை சானல்களிலும் கை இழந்து கால் இழந்து கதறும் படங்கள்! ஒருவரையும் விட மாட்டோம்; தீவிரவாதத்தை நூறு சதவிகிதம் ஒழிக்காமல் ஓய மாட்டோம் என்று வாக்குறுதிகள். யார் மீது குற்றம், யாருடைய தோல்வி இது என்று ஏராளமான விடை தெரியா வினாக்கள், நாடெங்கும் இதே செய்தி! உலகெங்கும் வன்மையான கண்டிப்புகள்! பிரதமர் உடனே முதலமைச்சரை தொடர்பு கொள்கிறார், அங்கு உள்ள நிலவரத்தை தனக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டுகிறார். பிறகு அவரே விரைகிறார் சம்பவ இடத்தை பார்வையிட!

நம் அரசாங்கத்திடம் [எல்லா நாட்டு அரசாங்கத்திடமும்!] ஒரே பிரச்சனை, பிரச்சனையின் மூலத்தை விட்டு விட்டு பிரச்சனையை பற்றியே பேசிக் கொண்டிருப்பது! இந்த முறை குண்டை எதனால் செய்திருக்கிறார்கள், எப்படி அதை வெடிக்கச் செய்திருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்தது போக, எப்படி இது இனிமேல் நடக்காமல் செய்வது என்பதை யோசிக்க வேண்டும். இந்த முறை செல்போன் மூலம் வெடிக்கச் செய்தால், அடுத்த முறை காய்கறி கூடையின் வழியே வெடிக்கச் செய்வார்கள். காவலர்கள் என்ன தான் செய்ய முடியும்? எதை என்று சோதனை செய்வது? எத்தனை நாள் செய்வது? யாரை தான் சந்தேகத்தில் பிடிப்பது? காஷ்மீர் பிரச்சனையை கிட்டத்தட்ட 65 ஆண்டுகளாய் வைத்து பேசிக் கொண்டிருக்கிறோம்! நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், நேர்மையான அணுகுமுறையுடன் இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சு வார்த்தைக்கு அமர்ந்தால் இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு மாதத்திற்கு மேல் ஆகுமா?

ஆனால் இதெல்லாம் மக்களுக்கு பழகி விட்டது. அரசியல்வாதிகள் இத்தகைய சம்பவத்தை வைத்து அரசியல் செய்து கொள்ளட்டும், ஊடகங்கள் இதை வைத்து பணம் சம்பாதிக்கட்டும், நம் அன்றாடப் பொழப்பை கவனிப்போம் என்று ஆகி விட்டனர். அவரவர்க்கு தெரிந்த தொழிலை அவரவர் செய்கிறார்கள், நாம் நம் வயிற்றுப்பாட்டிற்கு தெரிந்த தொழிலை செய்து பிழைப்போம் என்று மறத்து விட்டார்கள். மழை, வெயில் போல் குண்டு வெடிப்புகளும் பருவ காலங்களுள் சேர்ந்து விட்டது. அன்றாட வாழ்வில் ஒரு நிகழ்வாய் போய் விட்டது. ஒரே வித்தியாசம் மழை, வெயில் காலங்களை போல் இந்தக் காலம் எப்போது வரும் என்று திட்டவட்டமாய் தெரிவதில்லை!

" தி ஜங்கிள் புக்" படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் மோக்லியை அழைத்துச் சென்று நாகரீகப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சியில் ஒருவன் தன்னிடம் உள்ள பல விதமான ஆயுதங்களையும் அதனுடைய கொடூரத் தன்மையையும் மோக்லிக்கு விளக்குகிறான். இந்த ஒரு ஆயுதத்தை வயிற்றில் குத்தினால் போதும், அது வயிற்றில் உள்ளே மூன்றாக விரிவடையும். அதனால் அந்த மனிதன் உடனடியாக செத்து விடுவான் என்று பெருமையாய் சொல்கிறான். அதற்கு மோக்லி ஆர்வமாய், அவனை கொன்று தின்று விடுவாயா என்று கேட்கிறான். அவன் இல்லை என்கிறான். பிறகு மோக்லி அப்படி என்றால் அவன் உன்னை கொல்ல வந்தானா என்று கேட்கிறான். அவன் அதற்கும் இல்லை என்று பதில் சொல்கிறான். மோக்லி புரியாமல் அப்படியென்றால் ஏன் அவனை கொல்கிறாய் என்று கேட்கிறான். மேலும், "எங்களுடைய காட்டு வாழ்வின் விதிப்படி, ஒரு உயிரை கொல்வதற்கு ஒன்று நீ அதை சாப்பிட வேண்டும், அல்லது அது உன்னை கொல்ல வந்திருக்க வேண்டும். இந்த இரண்டு காரணமுமில்லாமல் எந்த உயிரையும் நாங்கள் கொல்ல மாட்டோம் என்கிறான்."

இதை ஏன் சொல்கிறேன் என்றால் காட்டுவாசியாய் திரிந்த போது இருந்த ஒரு கட்டுக் கோப்பு கூட நாகரீகம் அடைந்த நம்மிடம் இல்லை! ஒன்று புரிகிறது! மனிதன் இயற்கையின் சிறந்த ஜீவன். அவனை இனிமேல் அழிக்க இயற்கையாலேயே முடியாது! [ஒருவேளை பூமி வெப்பமாவதால் உலகம் அழிந்து விடும் என்று வைத்துக் கொண்டாலும் விஞ்ஞானம், பணபலத்தின் மூலம் எப்படியோ சிலராவது தப்பி விடுவார்கள் [2012 படத்தில் வருவதைப் போல] என்றே தோன்றுகிறது!] அதனால் மனிதனை மனிதனால் தான் அழிக்க முடியும்! அதற்கான ஆரம்பம் தான் இது! தீவிரவாதம், அரசியல், அதனால் ஊருக்கு ஊர் சண்டை, நாட்டுக்கு நாடு சண்டை என்று ஆரம்பித்து அது உலகப் போர், அணு ஆயுதம், பேரழிவு என்று முடியும்! இனி எத்தனை இயேசுக்களும், புத்தர்களும், காந்திகளும், தெரசாக்களும் பிறந்தாலும் அவர்கள் என்னதான் நன்னெறியை போதித்தாலும் மனிதன் மாறப் போவதில்லை. அவனின் அழிவு அவனால் தான் என்பதே உலக நியதி போலும்! [அப்படி நடந்தால் மனிதனுக்கு ஆறறிவு என்பது எதற்கு?]

மனித இனம் இனி மெல்லச் சாகும்!


வானம் மேகமூட்டமாய் இருக்கிறதென்று
நல்ல மழை பெய்கிறது என்று
சுடும் வெயிலில் ஒதுங்க மர நிழல் கிடைத்தது என்று
வேலைப் பளு அதிகம் என்று
பொழுதே போகவில்லை என்று
வீட்டில் பிரச்சனை என்று
வயிறு பசிக்கிறது என்று
பசிக்கவேயில்லை என்று
துக்கம் தாளவில்லை என்று
சந்தோஷம் சம்பவித்ததென்று
நண்பன் அழைத்தான் என்று
நல்ல அசைவச் சாப்பாடு என்று
மென்தொஸ் ஒன்று உபரி என்று
மனைவி வெளியூர் போய் விட்டாள் என்று,
புகை பிடிப்பவர்களுக்கு - எப்படியோ
கிடைத்து விடுகிறது புகை பிடிப்பதற்கான ஒரு தருணம்!

இது விமர்சனம் அல்ல! அவன் இவன் படத்தைப் பற்றி என்னுடைய ஒரு (ஒன்றரை!) பார்வை!

என்ன தான் சைக்கோத் தனமாக பாலாவின் முந்தைய படங்கள் இருந்தாலும், அவரின் படங்களில் வரும் அவருக்கே உரிய அக்மார்க் நக்கல்/எள்ளல் எனக்கு மிகவும் பிடிக்கும். உதாரணமாக:

சேது: மாமி, உங்க மயில் குட்டி போட்டா நேக்கும் ஒண்ணு தர்றேளா?
நந்தா: ந்தா, நீ எல்லாம் ஒரு டவுசர்/கிவுசர்னு மாட்டிட்டு வந்தா என்ன? அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்?
பிதாமகன்: எதுக்குடி ஃபைவ் ஹண்ட்ரட்? ம்ம்...நீ கக்கூசுக்கு போனதுக்கு!
நான் கடவுள்: [வாக்கி டாக்கியை காட்டி] பந்த் கர்!

அதே போல் இதிலும் சில நக்கல்கள் ஆங்காங்கே [அதாவது எங்கோ ஒரு ஆங்காங்கே!] தெறிக்கின்றன...

அப்பாவின் திருவளையாடல்களை பக்தர்களிடம் வைத்துக் கொள்ளக் கூடாதா? என்னிடமும் காட்ட வேண்டுமா?
ஏன்டா பக்தர்கள் மட்டும் என்ன இளிச்சவாயங்களா?

பக்தா உன் தவத்தை கண்டு மெச்சினோம்! வேண்டிய வரத்தை கேள்!
ஏன்டா, அவனுக்கு என்ன வரம் வேணும்னு தெரியலை, நீ என்ன சாமி?

ஹி இஸ் எ லையர்!
என்ன லாயரா? இவன் எப்போ படிச்சி லாயர் ஆனான்?

அவ்வளவு தான்! அவ்வளவே தான் அவன்-இவன்!

பத்திரிக்கையாளர்கள், பாலு மகேந்திரா போன்றோர்கள் தொடர்ந்து விமர்சித்து பாலாவை ஒரு வழியாய் அவருடைய அரக்கத்தனமான சினிமாவிலிருந்து மீட்டு விட்டார்கள் என்று நினைத்து சந்தோஷப்பட்டேன். அனால் அதுவே வினையாய் போய் விட்டது! இனிமேல் நான் சினிமாக்காரர்களை நம்பப் போவதில்லை!! படம் எடுக்க ஆரம்பிக்கும்போது முழு நீள காமெடி என்றார்கள். படம் எடுத்து முடிய முடிய கடைசி பதினைந்து நிமிடம் வரை காமெடி தான் என்றார்கள். விஷால் வேறு பேட்டிகளில் எல்லாம் நீங்கள் எதிர்ப்பார்க்கும் பாலா படம் போல் இது இருக்காது, உங்களுக்கு பாலா ஒரு ஷாக் கொடுக்க போகிறார்! நான் ஒன்றரை கண் வைத்தது [மனிதர் அநியாயத்துக்கு உழைத்திருக்கிறார்! ஆனால்....] எல்லாம் சும்மா கெட்டப் சேஞ் என்பதற்காக அல்ல, அது எதற்கு என்று கிளைமேக்சில் தெரியும் என்று ஏகத்துக்கு அள்ளி விட்டார்! அக்மார்க் சினிமா பொய்! 

பசுத்தோல் போர்த்திய புலி போல் காமெடி தடவிய (என்று சொன்னா) வழக்கமான பாலா படம் தான் அவன்-இவன்! நான் நினைக்கிறேன், பாலா மட்டும் பாலுமகேந்திராவிடம் சேர்ந்து ஒரு இயக்குனர் ஆகியிருக்காவிட்டால், நிச்சயமாய் ஆட்டோ ஷங்கர் மாதிரி ஒரு சீரியல் கில்லர் ஆகியிருப்பார்! அவனை போல் இல்லாமல் இவர் அநியாயம் செய்பவர்களை அடித்தே கொன்று ஒரு பெரிய பரபரப்பை உண்டு பண்ணியிருக்கக்கூடும்! மனதில் அத்தனை கொலை வெறி இருக்கிறது! அதனால் தான் படத்தின் கலைஞர்களையும் படாத பாடு படுத்துகிறார் என்று தோன்றுகிறது! சினிமா ஃபைட் எல்லாம் கிடையாது! அடி ஒவ்வொன்னும் நிஜம்மா விழனும்!! ஆமா...அப்படி செய்யும் போது அவருக்கு ஒரு மகிழ்ச்சி, திருப்தி ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறேன். குழந்தைகளை பாலா படத்திற்கு கூட்டிப் போகக் கூடாது! எப்போது யாரை அம்மணமாய் காட்டுவார், யார் தலையில் யார் கல்லை போட்டு கொல்வார்கள் என்று ஒன்றும் சொல்ல முடிவதில்லை! பாலிவுட்டில் அமீர் கான் என்று ஒரு மனிதர், இல்லை கலைஞன்! நிஜமான கலைஞன்!! ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், அமீர் கான் தயாரிப்பில் லகானில் தொடங்கி தோபி கட் வரை எல்லாமே நல்ல தரமான குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படங்கள்! அவர் தற்போது "டெல்லி பெல்லி" என்று ஒரு படத்தை தயாரித்திருக்கிறார்! அதனுடைய Tag line என்ன தெரியுமா? "SHIT HAPPENS!"
இது ஒரு காமெடி படம்! ஆனாலும், படத்தில் பல பச்சை பச்சையான மோசமான வசனங்கள் வருகிறது! தயாரிப்பாளராய் அவர் இந்தப் படத்தை விளம்பரப்படுத்த செல்லும் இடமெல்லாம் இது குழந்தைகளுக்கான, குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமல்ல என்று விடாமல் கூறிக் கொண்டே இருக்கிறார்! நல்ல சுத்தமான படத்தை விரும்புபவர்கள் இதை பார்க்க முடியாது என்று எச்சரிக்கிறார்! பாலா எங்கே இப்படி எல்லாம் சொல்றது, அவர் பேசுறதே, நன்றி வணக்கம் தான்! சரி விடுங்க...எனக்கு அமீர் கான் நேர்மை புடிச்சுருக்கு!

படத்தை பொறுத்தவரை நான் மேல் சொன்னா படி பாலாவின் கிளிஷேக்கள் நிரம்பிய வழக்கமான ஒரு தமிழ் சினிமா தான்! அதாவது கீழ் வரும் கிளிஷேக்கள்:

ஒரு முரட்டு ஹீரோ
ஒரு அழுக்கான பெண் [நாம் நினைத்தே பார்க்க முடியாத ஒரு நல்ல அழகான நடிகையை தேர்ந்தெடுத்து அவளை அழுக்காக்கி, பீடி குடிக்க, பீடா போட, தண்ணி அடிக்க விடுவார்!]
ஒரு சிவப்பான ஒல்லிபிச்சான் லூசு ஹீரோயின் [என்ன கேரக்டராய் இருந்தாலும் ஹீரோவை காதலிக்கும் இந்த லூசு!]
ஒரு வாட்டசாட்டமான அல்லது அழுக்கான வில்லன்
அசிங்க அசிங்கமாய் பேச வேண்டியது! [யதார்த்தம்?]
கடைசியில் காட்டில், மேட்டில், சாணியில், சகதியில் என்று முட்டி மோதி ஒரு ஃபைட்!

அவ்வளவு தான்...

அப்புறம், மிகவும் நெருங்கிய நட்பு/உறவுள்ளவரை வில்லன் கொன்று விடுவான். பாலாவின் வழக்கப் படி, ஹீரோ மிருகமாய் மாறி அவரை அடித்தோ, கடித்தோ, தலையில் கல்லை போட்டோ, உயிருடன் கொளுத்தியோ கொன்று விட்டு ஸ்லோ மோஷனில் நடந்து வருவான்! பாலா படம் என்று டைட்டில் போட்டு படத்தை முடித்து விடுவார்கள்! அதே கதை தான் இதுவும்.

ஏதோ ஒரு பேட்டியில் படித்தேன். பாலா அடிக்கடி இரவு நேரங்களில் வாழ்க்கையை உணர [?] சுடு காட்டுக்குச் சென்று வருவாராம்! இப்போது அவருக்கு மகள் பிறந்த பிறகு அங்கு போவதில்லையாம்! இனிமேலாவது அவருக்கு வாழ்க்கையில், அதன் அழகியல்களில் நம்பிக்கை வரும் என்றும் அதுவே, அவரின் படைப்புகளில் பிரதிபலிக்கும் என்றும் நம்புவோமாக!


சமச்சீர் கல்வியைப் பற்றியும், அதை ஏன் ஒத்தி வைக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் ஒரு சிறந்த அறிக்கை! புராணக் கதையில் பத்மாசுரனுக்கு வரமளித்து விட்டு சிவபெருமான் அவதியுறுவது போல் ஆகிவிட்டது இந்திய ஜனநாயகம்! நாமே ஆட்சியில் அமர்த்திவிட்டு அவதியுற வேண்டியிருக்கிறது! 

"என்று தணியும் இந்த அரசியல் வஞ்சம்!"

இதை எனக்கு அனுப்பிய தோழர் பாண்டியனுக்கு [http://puyarparavai.blogspot.com/] நன்றி!
  
சென்னை,                                                          
மே 24, 2011
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பொதுப் பாடத்திட்டம் என்கிற வடிவில் சமச்சீர்க் கல்வியை இந்தக் கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்த இருந்ததை ஒத்தி வைத்திருப்பதாகப் புதிய அரசு அறிவித்திருப்பது கல்வியில் அக்கறை உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது திட்டமிடப்பட்டுள்ள சமச்சீர்க் கல்விமுறை கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை எனவும் வல்லுனர் குழு ஒன்றை அமைத்துப் பரீசீலித்த பின்பு இதை நடைமுறைப்படுத்தலாம் எனவும் அரசு கூறியுள்ளது.

கோத்தாரி கல்வி ஆணையம் (1964-1966) தொடங்கி ‘பொதுக் கல்விக்கான பொதுப் பள்ளிமுறை’ என்கிற கருத்தாக்கம் இங்கே பேசப்பட்டு வருகிறது. அருகாமைப் பள்ளியுடன் கூடிய பொதுப்பள்ளி முறையே ’ஜி8’ நாடுகள் உட்பட உலகில் பல நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. கல்வி, அதிலும் குறிப்பாக ஆரம்பக் கல்வி எல்லோருக்கும் சமமாகவும், சீராகவும் (தரமாகவும்) கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறையுள்ள அனைவரும் கோத்தாரி ஆணையத்தின் இப்பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை நீண்ட காலமாக வற்புறுத்தி வந்தனர்.

கிட்டத்தட்ட ஐந்து பாடத் திட்டங்கள் வரை நடைமுறையிலிருந்த தமிழகத்திலும் பொதுப் பள்ளி, தாய் மொழியில் பொதுப் பாடத்திட்டம் என்கிற வடிவில் கல்வி அமைய வேண்டும் என்கிற கருத்தைக் கல்வியில் அக்கறையுள்ள பலரும் வற்புறுத்தி வந்தனர். கல்வியாளர்கள் தவிர அடித்தள மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சியினரும் இதை வற்புறுத்தி வந்தனர். இடதுசாரி மாணவர் அமைப்புகள் போராடங்களையும் நடத்தின. கல்வியை வணிகமாக்கி கொள்ளை லாபம் ஈட்டி வந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியினரே இதை எதிர்த்து வந்தனர்.

பொதுக்கல்வியை நடைமுறைப் படுத்த வேண்டுமென மேலெழுந்து வந்த இத்தகைய அழுத்தங்களின் விளைவாக முந்தைய அரசு, கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையில் குழு ஒன்றை 2006ம் ஆண்டில் அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை 2007ல் அளித்தது. அக்கறையுள்ள பலரும் இது தொடர்பாய் விவாதிக்கவும் கருத்துக் கூறவும் தொடங்கினர்.

முந்தைய  அரசு சென்ற ஆகஸ்ட் 26, 2009ல் சமச்சீர்க் கல்விமுறையை அறிவித்தபோது இது குறித்து வற்புறுத்தி வந்த பலரும் ஒருசேர மகிழ்ச்சியையும் ஏமாற்றத்தையும் அடைந்தனர். தாய் மொழி வழிக் கல்வி அடிப்படையிலான அருகாமைப் பொதுப் பள்ளி கைவிடப் பட்டதே வருத்தத்திற்கான காரணம். பல்வேறு பாடத் திட்டங்கள் என்பது போய் பொதுப் பாடத் திட்டம் என்கிற வடிவில் பொதுக்கல்வியை நோக்கி ஓரடி எடுத்து வைக்கப்பட்டது வரவேற்பிற்குக் காரணமாக இருந்தது.
சென்ற கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்குப் பொதுப் பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பாடத் திட்டம் மற்றும் பாட நூல்கள் உருவாக்குவதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டன. இக் குழுக்களில் அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்குபெற்றனர். தேர்வுகள் வைக்கப்பட்டும் உறுப்பினர்கள் தெரிந்து எடுக்கப்பட்டனர். முடிவுகள் அவ்வப்போது இணையத்தளங்களிலும் அறிவிக்கப்பட்டன. பாடத்திட்ட நகல்கள் பள்ளி ஆசிரியர் மாதாந்திரக் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டன. மொத்தத்தில் இந்த அளவு ஜனநாயகபூர்வமாக விவாதிக்கப்பட்டு பாடத் திட்டங்களும், பாட நூற்களும் இதுவரை உருவாக்கப் பட்டதில்லை.

சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புப் பாட நூல்களில் ஒருசில குறைபாடுகள் இருந்தபோதும் மொத்தத்தில் அவை மிகச் சிறப்பாகவே இருந்தன. இன்று இக்குழுவில் பங்கு பெற்றுள்ளவர்களில் சிலருங்கூட இந் நூல்களை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். சில நவீன கல்வி அணுகல்முறைகள் அவற்றில் பயன்படுத்தப் பட்டிருந்தது அனைவராலும் பாராட்டப்பட்டது.

இவ்வகையில் தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரைக்குமான சுமார் ஆறரை கோடி நூல்கள் சுமார் 216 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு மாவட்டங்கள் வாரியாகப் பிரித்து அனுப்பவும் பட்டுவிட்டன. இந்நிலையில் பாடத் திட்டம் தரமாக இல்லை என்கிற ஒரு தரப்புக் கருத்தை ஏற்று அரசு இன்று சமச்சீர்க் கல்வியை நடைமுறைப் படுத்துவதை நிறுத்தி வைத்திருப்பது பெரும் பொருள் இழப்பை மட்டுமல்ல, மாணவர் மத்தியில் பெருங் குழப்பத்தையும்  ஏற்படுத்தும். இதன் மூலம் பயனடையப் போவது மெட்ரிக்லேஷன் ‘லாபி’ மட்டுமே.

பாடத்திட்டத்திலும் படநூல்களிலும் குறைபாடுகள் இருக்கலாம். எவ்வளவு கவனமாகத் தயாரிக்கும்போதும் அத்தகைய குறைபாடுகள் ஏற்பட்டுவிடுவது இயல்பும்கூட. அவை அந்தக் கல்வி ஆண்டிலேயே உரிய ஆணைகள் மூலம் திருத்தப்படலாம். புதிய பாடங்கள் தேவையானால் சேர்க்கப்படலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்வித் திட்டம் மேம்படுத்தப்படலாம். குறைகளைச் சாக்காக வைத்து பலகால விவாதங்கள் மற்றும் கருத்தொருப்பினூடாகக் கொண்டு வந்த ஒரு நடைமுறைக்குத் தடை விதிப்பதை ஏற்க இயலாது.

தவிரவும் இப்பாடத்திட்டமும் நூல்களும் தரமாக இல்லை எனக் கண்டறிய புதிய ஆட்சியாளர்களுக்குப் போதிய அவகாசமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருசில மணி நேரக் கலந்தாய்வில் மூன்று தீர்மானங்களில் ஒன்றாக முடித்துவிடக் கூடிய விஷயமும் இது இல்லை.

முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை மற்றும் அவரது சில எழுத்துக்கள் பாடநூல்களில் இடம் பெற்றிருப்பதே  புதிய அரசின் இம்முடிவுக்குக் காரணம் என இதழ்களில் செய்தி வந்துள்ளன. ஆட்சியாளர்கள் தமது புகழைப் பாடிக்கொள்வதற்கும், தம்மை முன்னிலைப் படுத்திக் கொள்வதற்கும் குழந்தைகளின் பாடநூல்களைப் பயன்படுத்துவதை நாங்களும் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களுக்கும் அதில் உடன்பாடில்லை. தேவையானால் அத்தகைய பகுதிகளை நீக்கி நூல்களை விநியோகிக்கலாம். ஏற்கனவே இவ்வாறு பாடங்களை நீக்கியதற்கான முன்னுதாரணங்கள் தமிழகத்தில் உண்டு.

பழைய பாடத்திட்டத்தைக் கடைபிடிக்கலாம் எனவும் பழைய நூல்களையே பயன்படுத்தலாம் எனவும் அரசு கூறுகிறது. பழைய நூல்கள் இப்போது அச்சில் இல்லை. அச்சிடுவதற்கென பள்ளித் திறப்பு 15 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.  15 நாட்களில் ஆறரை கோடி நூல்கள் அச்சிட்டுவிட முடியுமா எனத் தெரியவில்லை. வசதியுள்ள மாணவர்கள் இணையத்தளங்களிலிருந்து கீழிறக்கம் செய்து கொள்ள முடியும். பாதிக்கப்படப் போவது ஏழை எளிய, கிராமப்புற மாணவர்கள்தான். பயனடையப்போவது பெரு நூல் வெளியீட்டு நிறுவனங்களும் தனியார் பள்ளிகளுந்தான்.

தவிரவும் குறைந்தது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பாடநூல்களை மாற்ற வேண்டுமென்பது கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழுவின் (என்.சி.ஈ.ஆர்.டி) நெறிமுறைகளில் ஒன்று. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்குமான பழைய பாடநூல்கள் என்பன பத்தாண்டுகளுக்குமுன் உருவாக்கப்பட்டவை என்பதையும் இது என்.சி.ஈ.ஆர்.டி நெறிமுறைக்கு எதிரானது என்பதயும் அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.

கல்வித் தரம் குறைந்துவிடும் என அரசு காரணம் சொல்கிறது. கல்வித் தரத்தை நிர்ணயிப்பதில் பாடத்திட்டம் மற்றும் நூல்களின் பங்கு ஒரு குறிப்பிட்ட அளவிலானதே. தவிரவும் கல்வித் தரத்தை உயர்த்துவது ஒரு நீண்ட தொடர்ச்சியான நடைமுறை. பொக்கென ஓர் கணத்தே நடத்திவிடக்கூடிய ஒன்றுமல்ல. காமராசர் காலத்திலிருந்ததைப்போல இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிப்பது, ஆசிரியத் தேர்வு வாரியங்கள் மூலம் தரமான ஆசிரியர்களைத் தேர்வு செய்வது, பள்ளிகளின் அகக் கட்டுமானங்களை உயர்த்துவது எனப் பல கூறுகளை உள்ளடக்கியது இது. கிராமப்புறங்கள் அதிகமாக உள்ள நமது நாட்டில் முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் நடைமுறைப் படுத்தப்பட்டதைப்போல கிராமப்புற  மாணவர்களுக்கு 25 சத ஒதுக்கீடு வழங்குவதும்கூட இதில் உள்ளடங்கும்.
கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள சில விதிமுறைகள் இன்று பல தனியார் பள்ளிகளில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. பள்ளிச் சேர்க்கையில் நுழைவுத் தேர்வுகளை நடத்தாதிருப்பது, 25 சத இடங்களை அருகாமையிலுள்ள மாணவர்களுக்கு கட்டணமின்றி ஒதுக்குவது ஆகியன இதில் அடங்கும். இத்தோடு கட்டாய நன்கொடை வசூலிக்கக் கூடாது என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். கல்வித் தரத்தை உயர்த்த விரும்பும் அரசு இத்தகைய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.

முந்தைய அரசு அறிவித்திருந்த சமச்சீர் கல்வித் திட்டத்தில் பல குறைபாடுகள் இருந்தது  என்பது உண்மையே. அவற்றை நீக்கித் தரத்தை உயர்த்த வல்லுனர் குழு அமைப்பதும் ஏற்கக்கூடியதே. ஆனால் இந்த ஆண்டு பொதுப் பாடத் திட்டத்தைச் செயற்படுத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் அதை நிறுத்தி வைப்பது ஏற்கத்தக்கதல்ல. கல்வி நலனுக்கு உகந்ததுமல்ல. உண்மையான சமச்சீர்க் கல்வியை நோக்கிய பயணத்தை முடக்கும் செயலிது. ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டத்தையே ஒழித்துக் கட்டுவதற்கான முதற் படியோ  என்கிற ஐயத்தையும் இது ஏற்படுத்துகிறது.

நீண்ட விவாதங்களினூடாகப்  பலரும் இணைந்து 216 கோடி ரூ செலவில் உருவாக்கப்பட்டுள்ள பாடநூல்களை ஒரு சில தவறுகளுக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் புறக்கணிப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல. அவசியமானால் தேவையற்ற பகுதிகளை நீக்கியும், தரத்தை உயர்த்தக்கூடிய பகுதிகள் எனக் கருதப் படுபவற்றைச் சேர்த்தும் பயன்படுத்துவதே கல்வி நலனுக்கு உகந்தது.

கல்வித் துறையில் நீண்ட அனுபவமும், கல்விப் பிரச்சினையில் ஆழ்ந்த அக்கறையும் கொண்டுள்ள, கீழே கையெழுத்திட்டுள்ள நாங்கள் நடைமுறைப்படுத்த இருந்த சமச்சீர்க் கல்விமுறையை நிறுத்தி வைத்துள்ளதை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு தமிழக அரசை வற்புறுத்துகிறோம்.

1.பேரா.அ.மார்க்ஸ், முன்னாள் கல்லூரிப் பேராசிரியர்,
2.முனைவர் ப. சிவகுமார், முன்னாள் கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி ஆசிரியர் அமைப்புத் தலைவர்,
3.பேரா. கல்யாணி, முன்னாள் கல்லூரிப் பேராசிரியர் மற்றும் மக்கள் கல்வி இயக்க நிறுவனர்,
4.திரு. பி.பி. பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர்,பொதுக் கல்விக்கான மாநில மேடை,
5.பேரா. கே. ராஜூ, முன்னாள் கல்லூரிப் பேராசிரியர் மற்றும் மதுரைப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத் தலைவர்,
6.பேரா. மு. திருமாவளவன், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர்,
7.திரு.கி. த. பச்சையப்பன், முன்னாள் தமிழக தமிழாசிரியர் சங்கத் தலைவர்,
8.எஸ். ராமசாமி, ஆசிரியர்,
9.கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி,
10. வழக்குரைஞர் ரஜினி, மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், மதுரை,
11.எஸ். ராமானுஜம், எழுத்தாளர்,

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் எகிப்து அரசை எதிர்த்து நடந்த புரட்சியை போல இருக்கிறது! முடியாட்சியை  எதிர்த்து மக்களாட்சி வந்தது போல் அத்தனை பேருக்கும் அத்தனை மகிழ்ச்சி! குடும்ப அரசியலுக்கு ஆப்பு வைத்ததில் அத்தனை பெருமிதம்! ஜனநாயகத்தின் சக்தியை நினைத்து பூரித்துக் கிடக்கிறோம்! அதிலும் அம்மா பதவி ஏற்ற நாளிலிருந்து அம்மா தான் வரும்போது போக்குவரத்தை நிறுத்தி மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுவிட்டார், அமைச்சர்களுக்கு பவர்பாய்ன்ட் மூலம் பாடம் எடுக்கிறார், மூன்று மணி நேரம் ஆய்வு செய்தார், ஏழு கோப்புகளில் கையெழுத்திட்டார் என்று பல செய்திகள்! ஒரு வேலை நாட்டுக்கு நல்ல காலம் வந்து விடுமோ என்று வழக்கமான ஒரு நம்பிக்கை பிறக்கிறது. ஆனால் இது இன்னும் எத்தனை நாட்கள் என்று உள்ளூர ஒரு பயமும் கலந்தே பிறக்கிறது! ஒரு இருபது ஆண்டுகள் தொடங்கி பின்நோக்கிப் பார்த்தால், 91 ல் அதிமுக, 96 ல் திமுக, 2001 ல் அதிமுக, 2006 ல் மறுபடியும் திமுக, 2011 ல் மறுபடியும் அதிமுக என்று ஒரு அமைப்பு/கோலம் தெரிகிறது! இதே ரீதியில் பார்த்தால் 2016 ல் மறுபடியும் திமுகாவா? இது எத்தனை பரிதாபகரமான விஷயம்! தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவை போல் சக்தி வாய்ந்த வேறு ஏதாவது கட்சி இருந்திருந்தால் மக்கள் ஒரு தடவை அவர்களுக்கு வாய்ப்பளித்துப் பார்த்திருப்பார்கள்! அதற்கு தான் நமக்கு வாய்ப்பே இல்லையே![ஒருவேளை அடுத்த முறை தேமுதிக வந்து விடுமோ?] கலைஞர் கொள்ளை அடிக்கிறாரா, அம்மாவுக்கு போடு; அம்மா கொள்ளை அடிக்கிறாரா கலைஞருக்கு போடு என்று மாற்றி மாற்றி வாக்களித்து ஒவ்வொரு தடவையும் சில நாட்கள் விரலில் கரையுடனும் , வாழ்க்கை முழுதும் முகத்தில் கரியுடனும் வாழப் பழகி விட்டோம்! அரசியல்வாதிகளும் வாக்குறுதிகளை கோடி காட்டி விட்டு அவர்களின் கல்லாக்களில் கோடிகளை கட்டிக் கொள்கிறார்கள்! ஐந்து வருடம் ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் ஆற அமர தீர்த்து விட்டு வருவதற்கும், ம்ம்...என்னப்பா பணம் தீந்து போச்சா, இந்தா ஆட்சி! ஜமாய், இந்தாப்பா நீ நல்ல சாம்பாதிச்சியா, கீழே எறங்கு போய் காலி பண்ணிட்டு வா என்று அனுப்பவது மாதிரி இருக்கிறது! என்ன அநியாயம்! இதற்கு பெயர் ஜனநாயகம்! இதற்குப் பெயரா ஜனநாயகம்? இந்த முறையாவது ஏதாவது நல்லது நடக்குமா பார்ப்போம்!

சென்னையில் வெயில் வாட்டி எடுக்கிறது! கடவுள் ஒருவர் இருப்பதாய் கற்பனை செய்து கொண்டால் அவர் சூரியனை ஒரு கயிற்றில் கட்டி வைத்திருப்பதாக கற்பனை செய்து கொண்டால் ஒவ்வொரு கோடை காலத்திற்கும் அவர் கொஞ்சம் கொஞ்சமாய் கயிற்றை சென்னையை நோக்கி இறக்கி விட்டு விடுகிறாரோ என்று தோன்றுகிறது! கயிர் அந்து சூரியன் சென்னையில் விழாமல் இருந்தால் சரி! சாலையில் பதினோரு மணி வெயிலில் வண்டியை ஓட்டினால் ஏதோ பாலைவனத்தில் போவது போல் இருக்கிறது. வெப்பக் காற்றில் மூச்சு முட்டுகிறது! சூரியனார் ஸ்ட்ரா போட்டு ஒவ்வொருத்தனின் ஆற்றலையும் உறிஞ்சி கொண்டிருக்கிறார்! இதில் நாள் முழுதும் வெட்ட வெளியில் வேலை செய்பவர்கள், பஸ் டிரைவர்கள், மெட்ரோ பணியாளர்கள், கட்டட தொழிலாளர்களின் நிலை....நினைக்கவே பயமாய் இருக்கிறது! தப்பித் தவறி ஒரு மரத்தின் கீழ் நிற்கும் போது தான் மரத்தின் பெருமை புரிகிறது! 2011 ல் இப்படி இருந்தால் 2041 ல் நடந்து செல்லும் ஒவ்வொருத்தனையும் சூரியன் சுட்டுக் கொள்ளும் என்று நினைக்கிறேன். மரம் வைக்கலாம் வாங்கப்பா!

வானம் படம் பார்த்தேன். நல்ல படம் என்றாலும் இதே போன்ற பல படங்களை ஏற்கனவே பார்த்து விட்டதால் ஒன்றும் பிரமிப்பாய் இல்லை. "பாசமலர்" சிலாகித்த தலைமுறையினருக்கு இந்தப் படம் புரியவேயில்லை! இது தான் நான் சிம்பு படத்துக்கே வர்றதில்லை என்கிறார்கள்! சிம்புவே இப்போது தான் திருந்திக் கொண்டிருக்கிறார்; இந்த சமயத்தில் இபப்டி ஒரு பேச்சா அவருக்கு! படத்தின் முதல் பாதி மதுரை பட்டர் பன்னை வாயில் போட்டது போல் வழுக்கிக் கொண்டு சென்றது! தப்புத்தாளங்கள் சரசுவையும் வானத்தின் சரோஜாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி புரியும்! அந்தக் கிழவரும் சரண்யாவும் கண்ணிலேயே நிற்கிறார்கள். ஒரு புறம் ஒரு இரவு விருந்துக்காக 40,000 செலவழிக்கும் கூட்டம், மற்றொரு புறம் அதே அளவு பணம் இருந்தால் வாங்கிய கடனை அடைத்தாவது மகனை படிக்க வைக்க வேண்டுமே என்று போராடும் ஒரு குடும்பம்! என்ன ஒரு கேடு கெட்ட சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது! எப்படியாவது இவர்களுக்கு உதவி கிடைத்து விடாதா என்று மனம் ஏங்குகிறது. படத்திலாவது கடைசியில் அவர்களுக்கு நல்லது நடக்கிறது; ஆனால் நிஜத்தில் கடன் கொடுத்தவன் இப்படி மனம் மாறுவானா? இப்படி நம் நாட்டில் கேட்க நாதி இல்லாமல் இருக்கும் எத்தனை பேரை ஏமாற்றி பிழைக்கிறார்களோ என்று நினைக்கும்போது தொண்டையில் ஏதோ உருள்கிறது! படம் பார்த்த எல்லோருக்குள்ளும் இப்படி ஒரு கேள்வி எழுந்திருந்தால் அது தான் வானத்தின் வெற்றி; சினிமாவின் வெற்றி!

இப்போது தான் செய்தி படித்தேன். தனுஷுக்கு ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகர் விருது கிடைத்திருக்கிறது! அதை மலையாள நடிகர் சலீம் குமாருடன் பகிர்ந்து கொள்கிறார்! சரண்யா, வைரமுத்து, வெற்றி மாறன் போன்றோருக்கும் விருது கிடைத்திருக்கிறது! தனுஷ் நன்றாகவே நடித்திருந்தார். ஆனால் தேசிய விருது கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை; விருது கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்! "ஏதோ அண்ணன் சொல்றான்னு ஒரு படத்துல நடிச்சேன்" என்று காதல் கொண்டேன் படம் ஹிட்டான புதிதில் தன்னுடைய சினிமா பிரவேசம் பற்றி அவர் அளித்த பேட்டிகள் ஞாபகம் வருகின்றன. தேசிய விருது வாங்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார். நல்ல வளர்ச்சி! வாழ்க! [அப்படியே உங்க மாமாவையும் ஒண்ணு வாங்க சொல்லுங்க சார்!]

இத்தனை சொல்லிவிட்டு இந்த விஷயத்தை எப்படி விடுவது? நம் சூப்பர் ஸ்டாருக்கு உடல் நலமில்லையாமே...அவருக்குமா நம்மளை மாதிரி உடம்பு சரியில்லாம போகும்? நம்பவே முடியலை...அது தான் ஸ்டீல் பாடி ஆச்சே! எத்தனை தம்மு; எவ்வளவு தண்ணி! அதுவே அவரை ஒண்ணும் செய்யலை; ஏதோ ஃ புட் பாய்சன் என்று சொல்லி ஐ.சி.யு. வரை கூட்டிக் கொண்டு போய் விட்டார்களே! என்ன கொடுமை இது. தலைவா, வேர்ல்ட் கப் உங்களை பாத்த நாள்ல இருந்து நீங்க சரி இல்லை; உங்க மேல எல்லாரும் கண்ணு வச்சுட்டாங்க! குதிரை மாதிரி சட்டுன்னு எந்திரிக்கனும்! கமான்....


இப்போது பார்த்தால் படம் முழுதும் இவரின் கிளிஷேக்கள் நிரம்பி வழிந்து கண்ணையும் கருத்தையும் உறுத்தினாலும் தமிழ் சினிமாவை சிகரத்திரு ஏற்றிச் சென்ற பெருமை இவருக்கு நிச்சயம் உண்டு! இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்! இவர் பால்கே விருது வாங்கிய நாளில் இருந்து ஒரு பதிவு போட வேண்டும் என்று நினைத்து இன்று தான் அது கை கூடி இருக்கிறது! வாழ்த்துக்கள் சார்! எனக்கு சிறு வயதில் இருந்தே மிகவும் பிடித்த இயக்குனர். சென்னையில் ஏதாவது ஒரு டிராபிக் சிக்னலில் என்னை பார்த்து "உன்னைத் தாண்ட தேடிட்டு இருந்தேன், என் படத்துல நடிக்கிறியா" என்று கூப்பிட்டு சான்ஸ் கொடுப்பார்! எப்படியும் சென்னை போய் விட வேண்டும் என்று நான் நினைத்த காலங்கள் உண்டு! [இன்று வரை ஒரு தடவை கூட இவரை எந்த சிக்னலிலும் பார்க்கவில்லை!]

என்னை பொறுத்தவரை இவர் வருவதற்கு முன் கனமான கதைகள் இருந்ததே தவிர சுவாரஸ்யமான திரைக்கதைகள் இருந்ததில்லை. பாவ மன்னிப்பு, பணமா பாசமா ஹிட் படங்கள் என்றாலும் அதில் ஒரு காட்சி கூட அட! கதையை நகர்த்த இப்படிக் கூட காட்சியை வைக்கலாமா என்று தோன்றியதில்லை!  அது இவரின் படங்களில் தான் எனக்குத் தோன்றியது! பாலச்சந்தரின் எல்லா படங்களின் திரைக்கதையும் ஒரு சாமர்த்தியமான சதுரங்க ஆட்டத்தை ஒத்து இருந்தது என்று சொல்லலாம். மிகச் சரியான காய் நகர்த்தலால் நகரும் கதைகள். தமிழ் படத்தில் பாடல்களிலும் கதை நகர்த்தியவர் இவர் தான் என்று நினைக்கிறேன். எந்த ஒரு காட்சியையும் வீணாக்க மாட்டார்! இவரின் படங்கள் சினிமாக்கள் அல்ல வெறும் நாடகங்கள் என்ற விமர்சனம் இருந்தாலும் அவருக்கு முன் வந்த நாடகத் தனமான சினிமாக்களை காட்டிலும் இவரின் படங்கள் சிறப்பானவை தான் என்று நினைக்கிறேன். 

கேபிள் டீவி வரத் தொடங்கிய காலங்களில் ஒரு நாள் இவரின் படம் ஒன்றை பாதியில் இருந்து பார்த்தேன். கவிஞர் வாலி நடித்திருந்தார். அப்போது வாலியையே எனக்கு அவ்வளவாய் தெரியாது என்று நினைக்கிறேன். ஆனால் இது பாலச்சந்தர் படம் என்று மட்டும் என்னால் உணர முடிந்தது! அந்தப் படம் "பொய்க்கால் குதிரை" என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன். நான் ஏழாவது படிக்கும்போது ஒரு வீடு இரு வாசல் வந்தது. அந்தப் படத்தில் இரண்டு வேறு வேறு கதைகள் என்று பத்திரிகையில் செய்தி படித்து பள்ளியில் நண்பர்களுடன் சிலாகித்துப் பேசியிருக்கிறேன். எப்போது? ஏழாவது படிக்கும்போது! எத்தனை அற்புதமான கருக்கள்!

ஒரு சாதாரண சர்வர் நடிகர் ஆனால்...
ஒற்றுமையான ஒரு குடும்பத்தில் ஒரு நடிகை நுழைந்தால்...
இறந்து போய் விட்டாள் என்று நினைத்த காதலி, தனக்கே மேலதிகாரியாக வந்தால்...
ஒரு தாய்க்கு தன் மகன் வயதுடையவன் மேல் காதல்; ஒரு தந்தைக்கு தன் மகளின் வயதுடையவள் மேல் காதல்!
வறுமையின் காரணமாக ஒரு பிராமண பெண் விபச்சாரி ஆனால்
தான் காதலித்த பெண்ணே தனக்கு சித்தியாக வந்தால்
ஒரு ரவுடியும் ஒரு விபச்சாரியும் திருந்தி வாழ நினைத்தால்
தாய் மொழி வேறு, கலாச்சாரம் வேறு..இருவரும் காதலித்தால்
மனைவி சரியில்லாத கணவனும், கணவன் சரியில்லாத மனைவியும் சந்தித்துக் கொண்டால் [எத்தனை சிம்பிளான ஒன் லைன்!]
சங்கீத வித்வான் சறுக்கி விழுந்தால்

சொல்லிக் கொண்டே போகலாம்! இவரின் படங்களில் எனக்கு இன்றும் பிடித்த படங்கள்:

பாமா விஜயம்
எதிர் நீச்சல்
அபூர்வ ராகங்கள்
மூன்று முடிச்சு
ஏக் துஜே கே லியே
தப்பு தாளங்கள்
வறுமையின் நிறம் சிவப்பு
தில்லு முள்ளு
சிந்து பைரவி
உன்னால் முடியும் தம்பி
புது புது அர்த்தங்கள்

எனக்குப் பிடித்த சில காட்சிகள்..