தற்கொலை எண்ணம் இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. எப்படிச் சாகலாம் என்று தான் அடிக்கடி யோசிக்கிறேன். அந்த யோசனையினால் நான் வாழும் அலுப்பான வாழ்விலிருந்து எனக்கு ஒரு சில நிமிடங்கள் விடுதலை கிடைக்கிறது. மனதுக்கு சுகமாய் இருக்கிறது. பெண்களின் அங்கங்களைக் கற்பனை செய்து சுயஇன்பம் காணும் சுகம். யாருக்கும் தீங்கில்லாத சுகம். சமீபகாலமாய், வாழ்வையும், சாவையும் பற்றி யோசிக்கும்போது, வாழ்க்கை தான் மிகுந்த அச்சத்தை அளிக்கிறது.

நான் இங்கு பிறந்திருந்தாலும், என் சக மனிதர்களிடத்திலிருந்து மிகவும் அந்நியப்பட்டிருக்கிறேன். ஒருபுறம், இந்தப் பேரண்டத்தில் மனிதனின் இடம் மிக மிக மிக மிக சொற்பம், அதில் ஏன் இத்தனை ஓட்டம் என்கிறார்கள். மறுபுறம், செய் அல்லது செத்து மடி என்று உந்தித் தள்ளுகிறார்கள். யானைக்கு வெடிப் பழத்தையும் இவர்களே தருகிறார்கள்; அதன் வேதனையையும் இவர்களே படம் வரைகிறார்கள். போரையும் இவர்களே நிகழ்த்துகிறார்கள்; சமாதானத்தின் பிரசங்கத்தையும் இவர்களே செய்கிறார்கள்.

என் தந்தை தான் ஆண்மையுள்ளவன் என்று நிரூபிக்கவும், என் தாய் தான் மலடி இல்லையென்று நிரூபிக்கவும் என்னைப் பெற்றெடுத்தார்கள். அல்லது அவர்களும் அப்படி நிர்பந்திக்கப்பட்டார்கள். நான் பிறந்ததும் உயிருடன் இருக்கிறேன் என்று அழுது நிரூபித்தேன். நான் சரியாய் வளர்கிறேன் என்று அவர்களைப் பார்த்தும், சிரித்தும், தவழ்ந்தும், நடந்தும், பேசியும், ஓடியும் நிரூபித்தேன். பள்ளியில் படித்தும், பரிட்சை எழுதியும் நிரூபித்தேன். வேலையில் உழைத்து நிரூபித்தேன். திருமணம் செய்தால், குழந்தை பெற்று ஆண்மையுள்ளவன் என்று...ஒரு நாள் தானாய் செத்தும் நிரூபிப்பேன், மனிதன் சாஸ்வதம் இல்லை என்று.

நான் யார், எப்படி இருப்பேன், என்ன படித்தேன், எதில் ஜெயித்தேன், எதில் தோற்றேன், என்ன என் பிரச்சனை..இதையெல்லாம் நான் சொல்லப்போவதில்லை. நான் உங்களுடனேயே இருக்கும் ஒரு வேற்றுகிரகவாசி. இப்படிச் சொல்லலாம், எனக்குத் தற்கொலை எண்ணங்கள் தோல்வியினால் வரவில்லை. இப்படி அலுப்பாய் வாழ்வதினால் வருகிறது. வாழ்வின் ஒவ்வொரு படியிலும் Hence Proved என்று சொல்லிக் கொண்டே ஏற எனக்கு அலுப்பாய் இருக்கிறது.

வீழ்ந்தாரைக் கண்டால் வாய் விட்டுச் சிரிக்கும்

வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்

இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்

இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்

அறுபது வருடங்களுக்கு முன் இந்த வரிகளை எழுதிய கா. மு. ஷெரீப்பின் கைகளுக்கு முத்தம் கொடுப்பேன். அறிவுள்ளவர்களாய் இருந்தால், இந்த வரிகளைக் கேட்ட பிறகாவது வாழ்வின் துயர் காரணமாக ஒரு சக மனிதனை சாக விட்டிருக்க மாட்டீர்கள். மளிகைக் கடை அண்ணாச்சி போல் எப்போதும் எதையாவது எடை போட்டுக் கொண்டிருக்க மாட்டீர்கள். உங்கள் மகனையோ, மகளையோ பக்கத்து வீட்டு பிள்ளையுடன் ஒப்பிட்டுப் பேசி இருக்க மாட்டீர்கள். வெற்றி வெற்றி என்று வெறி கொண்டு திரிந்து அறத்தை விற்றிருக்க மாட்டீர்கள். இன்று என்னை இந்தக் கடிதம் எழுத உந்தி இருக்க மாட்டீர்கள்.

"இந்த வழியில் நாங்கள் சென்றோம்" என்று சொல்லுங்கள். "இதில் தான் செல்ல வேண்டும்" என்று சொல்லாதீர்கள். எனக்கு மற்றொரு வழி பிடித்திருந்தால், நான் தோற்றுத் திரும்ப வேண்டும் என்று விரும்பி அங்கேயே எனக்காகக் காத்திருக்காதீர்கள். ஒரு வேளை, நான் தப்பித் தவறி, தோற்காமல் திரும்பினால் என்னைப் பெருமிதம் கொள்ளவும் வைக்காதீர்கள். ஒவ்வொரு படியாய் நானே தட்டுத் தடுமாறி ஏறிக் கொள்கிறேன் Hence proved இல்லாத படிக்கட்டுகள். நீங்கள் எல்லோரும் ஏறிக் கொண்டிருக்கும் படியில் நான் இறங்கி வந்து கொண்டிருக்கலாம். நொண்டி அடித்துக் கொண்டிருக்கலாம். ஒருவேளை, எனக்குப் படிக்கட்டுகள் கூட தேவையில்லாமல் இருக்கலாம். சமதளத்தில் நான் ஆனந்தமாய் என் அறுபது வயது வரை வாழ்ந்து விட்டுப் போகிறேனே. உங்களுக்கு என்ன வருத்தம்? நிரூபணம் இல்லாத ஒரு வாழ்க்கை வேண்டும் எனக்கு.

விசித்திரமாய் இருக்கிறது, "தற்கொலை" என்று ஒரு விளையாட்டில் தான், ஜெயித்தால் அவுட்!

கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன், இந்தக் கடிதத்தை நான் படிக்கிறேனா, அல்லது ஒரு போலீஸ் அதிகாரி படிக்கிறாரா என்ற இடைவெளியில் தான் என் உயிர் இருக்கிறது.

எனக்குத் தெரியும், என் சாவிலும் நீங்கள் என்னை எடை போடுவீர்கள். எதை நிரூபிக்க இவன் இப்படிச் செய்தான் என்று கேட்பீர்கள். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நான் வெற்றியை நோக்கி மட்டுமே ஓட வேண்டும் என்ற உங்களின் நிர்பந்தம் உவப்பாய் இல்லை எனக்கு. தோல்வியை நோக்கித் தலை தெறிக்க ஓட வேண்டும் எனக்கு. அதனால் என்ன? ஒருவேளை, உங்களுக்கு இனி நான் எதையும் நிரூபிக்கப் போவதில்லை என்பதற்கான முடிவாய் இது இருக்கலாம்.

19/08/1998
சென்னை
------------------

24/2/2040

படிக்கப் படிக்கச் சிரிப்பாய் வந்தது. "தாத்தா" என்ற குரல் கேட்டுத் திரும்பினேன்.

2 Responses
  1. bandhu Says:

    வாழ்வின் வெறுமை முகத்தில் அறைகிறது, பலமுறை. இருந்தும் வாழ்ந்து தீர்க்க வேண்டியிருக்கிறது! பகவான் கொடுத்த உயிரை எடுக்க நமக்கு உரிமை இல்லாததால்.