கிட்டத்தட்ட ஒரு வாரமாய் பேப்பரில் அந்த விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது கண்ணையும் கருத்தையும் உறுத்திக் கொண்டே இருந்தது. அந்த விளம்பரமாவது யாதெனில், இன்று மாலை 7:15 க்கு சத்யம் சினிமாவில் லைட்ஸ் ஆன் என்ற நிகழ்ச்சியில் பிரபல தெலுங்கு இயக்குநர் கே. விஸ்வநாத்தின் அவர்களின் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னைக்கு குடி பெயர்ந்ததே இதற்காகத் தானே..போகாமல் இருந்தால் எப்படி? வழக்கத்திற்கு மாறாய் 6:30 மணிக்கே ஆபிஸில் இருந்து ஜூட் [6:30 மணிக்கு ஆபிஸில் இருந்து கிளம்புவது மனதுக்கு எவ்வளவு உறுத்தலாக இருக்கிறது தெரியுமா?] இந்த மாதிரி நேரத்தில் டைடல் பார்க்கில் இருந்து சத்யம் போவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது. வழக்கத்திற்கு மாறாக வெளியே பைக்கிற்கு பதிலாக போலிஸ் ஜீப்பும், பல போலீஸ்காரர்களும் இருந்தார்கள். என் கையிலோ அந்த நிகழ்ச்சிக்கு பாஸ் இல்லை. வெளியே வண்டியை நிறுத்தி விட்டு பாஸ் இருந்தால் வாங்கிக் கொண்டு வண்டியை உள்ளே கொண்டு செல்லலாம் என்று நினைத்தேன். பாஸ் இல்லை என்று சொல்லிவிட்டால் 10 ரூபாய் தண்டம் அழவேண்டும். நிலமை தாறுமாறாக இருந்ததால் எதற்கு வம்பு என்று நேராக வண்டியை உள்ளே கொண்டு போய் விட்டேன், எதற்கு இத்தனை போலீஸ் என்ற கேள்வியுடன்..

கவுண்டரில், ஸ்டூடியோ 5 பாஸ் என்றேன் வழக்கம் போல்...·புல் சார் என்றார் வழக்கம் போல்...இந்த மாதிரி ஏற்கனவே பாஸ் எதுவும் இல்லாமல் நான் பல படங்களை பார்த்திருக்கிறேன், அதனால் தைரியமாக உள்ளே போய் விட்டேன். நல்ல வேளையாக யாரும் பாஸ¤க்காக என்னை வழி மறிக்கவில்லை. கவுண்டரில் ·புல் என்றார், ஆனால் உள்ளே தாரளமாய் இடம் இருந்தது. வராதவர்கள் ஏன் பாஸை மட்டும் அவ்வளவு பொறுப்புடன் வாங்கிச் செல்கிறார்களோ, தெரியவில்லை. பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டேன், ஒரு வாரத்திற்கு முன் பாஸ் வாங்கிக் கொண்டாராம். முதலில் சத்யம் தியேட்டருக்குப் பக்கத்தில் ஒரு வீடு பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்..

இந்தியன் காண்டம்பரரி சினிமா, ஆர்டிஸ்டிக், லிட்ரேச்சர் அப்படி இப்படி என்று ஒன்றும் புரியாத பாஷையில் பேசுகிற கூட்டம். சரி நெல்லுக்கு பாயும் நீர் என்னைப் போன்ற சில புல்லுக்கும் பாய்ந்து விடாதா என்ற ஒரு நப்பாசை. கே. விஸ்வநாத் அவர்களின் சாகர சங்கமம் (சலங்கை ஒலி), ஸ்வாதி முச்யம் (சிப்பிக்குள் முத்து) படங்களைத் தவிர வேறு எந்த படங்களையும் நான் பார்த்ததில்லை. சங்கராபரணம் சிறு வயதில் பார்த்ததாய் ஞாபகம். கே.வி அவர்களுடன் கலந்துரையாட சுஹாசினி மணிரத்னம் வந்திருந்தார்கள். பத்மா சுப்ரமண்யம், கமல்ஹாசன், கே. பாலசந்தர் போன்ற பெருந்தலைகள் கேட்ட கேள்விகளை முதலில் கே. வி அவர்களிடம் சுஹாசினி கேட்டார். பிறகு பார்வையாளர்களை கேட்கச் சொன்னார். ஒருவர் கே.வியை சத்யஜித்ரேயுடன் ஒப்பிட்டு கை தட்டல் பெற்றார். ஒருவர் தான் கேட்ட கேள்வியை விட தன் பெயரை சொல்வதில் மிகுந்த அக்கரை காட்டினார். ஒருவர் தெலுங்கில் நீங்கள் எங்க பாட்டி வீட்ல தான் சங்கராபரணம் ஷ¤ட்டிங் நடத்தினீங்க என்று பெருமிதப்பட்டார். [எனக்கு தெலுங்கு தெரியாது. அதைத் தான் அவர் சொன்னார் என்று நினைக்கிறேன்!] உங்கள் அடுத்த படத்தில் எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க சார் என்று நான் கேட்க நினைத்தேன். அதிகப்பிரசங்கித்தனமாய் ஆகிவிடும் என்ற காரணத்தால் ஸ்டூடியோ 5 குளிரில் நடுங்கிக் கொண்டே கப்சிப் என்று இருந்து விட்டேன்.

எல்லோரும் செய்வதை நான் செய்வதில்லை. நான் அதிகம் படங்களைப் பார்ப்பதில்லை. அதிகம் டி.வி. பார்ப்பதில்லை. புத்தகம் அறவே படிப்பதில்லை. [பெரிய ஆச்சர்யக்குறி] என் படங்கள் எல்லாம் நான் கவனித்த வாழ்வியல் அனுபவங்கள். ஒரு படத்திற்கான கரு எனக்கு எப்படி கிடைக்கிறது என்று நிறைய பேர் கேட்கிறார்கள். ரயிலில் மூன்றாம் வகுப்பு மேல் பெர்த்தில் தூக்கம் வராமல் புரளும் போது ஒரு படத்திற்கான கரு கிடைத்தது, குளிக்கும் போது சில கிடைத்திருக்கிறது, தனியாய் உட்கார்ந்து சற்று அதிகமாக சாப்பிட்டு விட்ட இட்லியை பற்றி யோசிக்கும்போது கிடைத்து விடுகிறது..எனக்கு எப்படிக் கிடைக்கிறது என்று தெரியவில்லை; ஆனால் கிடைத்து விடுகிறது என்றார். இதே போல் தான் மகேந்திரன் தன்னுடைய நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற படத்தின் கரு ஒரு காலை வேளையில் மும்பை கடற்கரையில் ஒரு பெண் ஓடுவதை பார்த்து கிடைத்ததாகச் சொன்னார். கே.வி அவர்கள் அவருடைய பல விதமான பழைய நினைவுகளை தூசி தட்டி எங்களுக்கு ஒரு அருசுவை விருந்து படைத்தார். நிறைவான மாலை எனக்கு..

வெளியே வந்தால் வராந்தாவில் ஏகப்பட்ட கார்கள், இரு பக்கமும் ஒரே கூட்டம். மெஷின் கன்களுடன் பாதுகாப்புப் படையினர். யார் என்று கூட்டத்தில் கேட்டதற்கு தமிழ்நாடு கவர்னர் படம் பார்க்க வந்திருப்பதாகத் தெரிந்தது. மவுண்ட் ரோடில் தொடங்கி கிண்டி ராஜ் பவன் வரை ஆங்காங்கே போலிஸார் நிற்கிறார்கள், இவரின் பாதுகாப்பிற்கு! இவர் படம் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு 100 போலிஸார் தேவைப்படுகிறது. அப்படி என்ன படம் வேண்டிக் கிடக்கு இவருக்கு? சரி, அவரும் மனிதர் தானே பார்க்கட்டுமே என்றாலும், கமுக்கமா சத்யம் தியேட்டருக்கு போனோமா, படம் பாத்தோமா, வந்தோமான்னு இல்லாம இதெல்லாம் ஊரெல்லாம் கூட்டி வச்சுகிட்டு? இல்லை தெரியாம தான் கேட்கிறேன்..யாரு அப்பன் வீட்டு சொத்து? என் வரிப் பணம் எல்லாம் இவர் சத்யம் தியேட்டருக்கு படம் பார்க்க போறதுக்கும் வர்றதுக்கும் சரியா போயிடும் போல இருக்கே..

கொசுறு: பெங்களூரில் ஏர்போர்ட் ரோடில் அந்த அரைகுறை மேம்பாலம் காரணமாக அந்த சிக்னலை தாண்ட குறைந்த பட்சம் ஒரு அரை மணி நேரம் ஆகும். ஒரு நாள் அப்துல் கலாம் வருகிறார் என்று எல்லோரையும் ஓரமாக நிறுத்தி வைத்து விட்டார்கள். உங்களுக்கே புரிந்திருக்கும் அதற்குப் பிறகு நான் வீடு போய் சேர எவ்வளவு நேரம் ஆகி இருக்கும் என்று..இப்படி எல்லோரையும் நிறுத்தி வைத்து விட்டு அவர் ஜம்மென்று போய் விட்டால், அவருக்கு இந்த இடத்தில் பல வருடங்களாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இன்னும் முடியவில்லை என்ற உண்மை அவருக்கு எப்படித் தெரியும்? நீங்களே சொல்லுங்கள்?

அம்மாவின் குரல் லேசாய் என் காதில் விழுந்தது. இப்போது தான் விளையாட வந்தேன்..அதற்குள் என்ன அவசரமோ, போம்மா..விளையாடிட்டு வர்றேன் என்று ஓடுகிறேன். அம்மாவின் கைகள் என் கன்னத்தில் பட்டது..நான் ஓடிவிட்டேனே, அதற்குள் என்னை பிடித்து விட்டாளா? இப்போது கொஞ்சம் பக்கத்தில் அவள் குரல் கேட்டது..கன்னத்தில் தட்டுகிறாள், ராஜா டேய், அவள் குரல் உடைகிறது..என்னால் கண்களை திறக்க முடியவில்லை..எந்திரிப்பா..டேய், இங்கே பாருடா..ஐயோ, தாத்தாடா..

கஷ்டப்பட்டு கண்கள் திறந்தேன். ஒன்றும் புரியவில்லை. நான் விளையாடிக் கொண்டிருந்தேனே..எல்லாம் கனவா? மங்கலாக ஒருவர் அங்கே அப்பாவுடன் பேசிக் கொண்டே நிற்கிறார். யாரிவர்? கண்கள் தோய்த்து பார்த்தேன். மாமா..அவர் என்னை பார்த்து வழக்கமாய் சிரிக்கும் சிரிப்பு மட்டும் இல்லை. அம்மாவின் உடைந்த குரல். ராஜா, தாத்தா இறந்து போயிட்டாங்கப்பா..அழுகிறாள். அதே உடைந்த குரலில் பேசுகிறாள், எந்திரி..பாட்டி வீட்டுக்கு போகனும்..சீக்கிரம்..அழுகை..அம்மாவை தட்டி கேட்டேன், அப்போ ஸ்கூல்?

பாட்டி வீடு. ஆமா..தாத்தா செத்து போயிட்ட பாட்டி வீடு! செத்துப் போயிட்டா சாமி ஆயிடுவாங்கன்னு அம்மா சொல்லி இருக்கா? சாமி ஆனா ஏன் அழறாங்க? புரியலை..எனக்கு அழ வரலை. பாட்டி வீட்ல எல்லாரும் அழறாங்க..தாத்தாவை ஒரு சேர்ல உட்கார வச்சு மாலை எல்லாம் போட்ருந்தாங்க. அம்மா கூட போய் தாத்தாவை பக்கத்துல பாத்தேன். மூக்குல பஞ்சு. வாய் ஆன்னு இருந்தது..சாப்புடும் போது செத்துப் போயிட்டாரோ? கொஞ்சம் பயம்மா இருக்கு..

அப்புறம் நான் மாமா பசங்களோட விளையாட போயிட்டேன். வீடு பெரிய விடாச்சா..பின்னாடி நிறைய மண்ணு கொட்டி இருக்கும்..அங்கே போயி வீடு கட்டி விளையாடுவோம். எல்லா பேர பசங்களும் வாங்கன்னு கூப்பிட்டு கையில எண்ணய ஊத்தி தாத்தா வழுக்க மண்டையில தடவ சொன்னாங்க..எங்களுக்கு ஒரே சிரிப்பு..நான் தான் பெரிய பையனாம், சிரிக்க கூடாதாம். இந்த சின்ன மடையன் தான் சிரிப்பு காட்டிர்றான்..நான் என்ன செய்யட்டும்? கை எல்லாம் பிசு பிசுன்னு ஒரே எண்ண..

அப்புறம் தாத்தாவ வெளியே படுக்க வச்சு என்னமோ பூஜை பண்ணாங்க..எங்களை எல்லாம் சுத்தி வர சொன்னாங்க..பக்கத்து வீட்ல எல்லாரும் பாக்குறாங்க..கொஞ்சம் அமைதியா இருந்த அம்மாவும் பாட்டியும் மறுபடியும் கத்தி கத்தி அழறாங்க..எனக்கு இப்போ சிரிப்பு வர்ல..சின்ன மடையனும் சிரிக்கல..அவனுக்கு ஒன்னும் புரியாம முழிக்கிறான்..அப்புறம் தாத்தாவ தூக்கிட்டு போயிட்டாங்க ஒரு வொயிட் கலர் வேன்ல வச்சு..அப்பா, அம்மா, மாமா வேன்ல போயிட்டாங்க.

அத்த, சித்தி எங்க எல்லாரையும் குளிப்பாட்டி விட்டுட்டு வீடு பூரா தண்ணியாலே தொடச்சு விட்றாங்க..சின்ன மடையனை வம்புக்கிழுத்து நான் ஓட்றேன், அவனால முடியலை..வழுக்கி வழுக்கி விழுறான். பாவம்! அத்த திட்றாங்க, கத்துறாங்க..யாரு கேக்குறது?

சாய்ந்திரம் ஆச்சு..ஸ்கூலு முடிஞ்சுருக்கும்.அம்மா வந்துட்டா..தாத்தவ காணோம். நாளைக்கு ஸ்கூலுக்கு போனுமாம்மான்றேன்? அவ பதிலே சொல்லல..எனக்கு ஒரு தாத்தா தானாம்மா இருக்காங்கன்னேன்? பாட்டி என் கைய புடிச்சி ஓன்னு அழறா..சின்ன மடையன் அங்கேயிருந்து பாத்து சிரிக்கிறான்!


Rental Reciept, Medical Bill, Savings proof என்று எல்லா officeகளிலும் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. நான் பணிபுரியும் இடத்திலும் மார்ச் 15க்குள் எல்லாவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். நான் இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனங்களை ஒப்பிட்டால் இது கொஞ்சம் சர்வ ஜாக்கிரதையான நிறுவனம் ஆகத் தான் இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் அத்தாட்சிகளைப் பெறும் முறையையும் ஒழுங்கையும் வைத்துத் தான் சொல்கிறேன். மக்கள் தங்களுக்கு வழங்கப்படும் HRA, Medical Allowanceக்காக ஒரு நயா பைசா வரி கட்டாமல் அனைத்தையும் அடைய நடத்தும் நாடகங்கள் இருக்கிறதே..7 பேர் சேர்ந்து ஒரு வீட்டில் 6,000 வாடகைக்கு தங்கிக் கொண்டு, rent reciept என்றவுடன் ஆளாளுக்கு 6,000 போட்டுக் கொள்வதும், இவனுக்கு அவன் கையெழுத்து இடுவதும், அவனுக்கு இவன் கையெழுத்து இடுவதும் சர்வ சாதாரணம். அப்படி ஒரு 12 மாதத்திற்கான குப்பையையும் அள்ளி ஆபிஸில் சமர்ப்பித்து விட்டால் போதும், கொஞ்சம் வரியை விலக்கி விடலாம். இந்த மாதிரி நாடகங்களில் நடித்த அனுபவம் எனக்கும் உண்டு. ஆனால் அது கமலஹாசனையோ, ஓம்பூரியையோ சிவகாசி, ஆதி போன்ற படங்களில் நடிக்க வைத்தால் அவர்களுக்கு எப்படிக் கசக்குமோ அதே கசப்புணர்ச்சியுடன் தான் நடித்தேன்..அதற்காக இன்றும் வருந்துகிறேன். இன்னும் வருந்துவேன். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது என்று என்னை நீங்கள் வியப்பாய் பார்ப்பது எனக்குப் புரிகிறது...

என் அலுவலகத்தில் அவர்கள் இந்த அத்தாட்சிகளை சமர்ப்பிக்க சொன்ன விதம் இந்த மாதிரி சால்ஜாப்புகளை கொஞ்சம் குறைக்கும் போலிருக்கிறது. HRA விலும், Medical Bill லும் வரி விலக்கு வேண்டுபவர்கள் செய்ய வேண்டியவை:

20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் வாடகை ஒப்பந்தப் பத்திரம்.

2,500 க்கு வாடகை செலுத்தினால் செக்கில் செலுத்தி இருக்க வேண்டும். அந்த செக் நம்பரை வாடகை ரசீதில் குறிப்பிட வேண்டும்.

மருந்து ரசீது 500 ரூபாய்க்கு மேல் தாண்டினால் டாக்டரின் ப்ரிஸ்கிரிப்ஷன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கண்ணாடி, லென்ஸ் போன்ற செலவுகள் 1,500 ரூபாயை தாண்டக்கூடாது.

ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்ற வஸ்துக்கள் மருத்துவச் செலவில் காட்டக் கூடாது.

இந்த கெடுபிடிகளை அனுசரித்து, இந்த முறையாவது நேர்மையாய் நடந்து கொள்வோம் என்று அதற்கேற்ப நான் நடந்து கொண்டேன். உரிய வாடகைக்கு வீட்டுக்காரரிடம் சொல்லி பத்திரம் தயாரித்தேன்.எல்லோரும் இப்படித் தானே மாறி இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் கொஞ்சம் மெதுவாக உங்கள் தலையில் கொட்டிக் கொள்ளுங்கள். கள்ளன் பெருசா, காப்பான் பெருசா என்று ஒரு பழமொழி இருக்கிறது..நீ இவ்வளவு கெடுபிடி பண்றியா, இதோ எனக்கு வேற ரூட் இருக்கு என்று சாதாரண மக்களே அரசாங்கத்தை ஏமாற்றும் போது, சாப்·ட்வேர் இன்சினியர்கள் எந்த விதத்தில் குறைச்சல்னேன்? உள்ள போன அத்தன பேரும் குத்தவாளி இல்லீங்க; வெளியே உள்ள அத்தன பேரும் புத்தன் காந்தி இல்லீங்க என்று தலைவர் பாட்டு சரியாகத் தான் இருக்கிறது..யாரும் எதற்கும் சலைத்தவர்கள் இல்லை. பெங்களூரிலாவது வாடகை விஷ ஜுரம் வந்தது மாதிரி ஏறி கிடக்கிறது. சென்னையில் அவ்வளவு இல்லை தான்..கொடுப்பது 4000 இருந்தும் ஆளாளுக்கு 6,000, 7000 என்று வாடகை போட்டாயிற்று [அதில் 7 பேர் வாழ்வது வேறு விஷயம்!]சரி! இனி போலி பத்திரம் தயாரிக்க வேண்டும். பத்திரத்தில் எழுதிக் கொண்டால் வீட்டுக்காரர் அதை வருமானமாய் காட்டி அதற்கு வேறு வரி கட்ட வேண்டும். அதற்கு அவர் சம்மதிப்பாரா? இதில் கொடுக்கும் பணத்தை செக்கில் வேறு தர வேண்டும், இதெல்லாம் ஆவுறதில்லை. சரி 7 பேர் இருக்கோம், பாங்கில் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒருத்தனை புடி..மாப்ளே நீ தாண்டா ஹவுஸ் ஓனர். பத்திரத்துல கையெழுத்து போட்றா. நான் உனக்கு 7000 ரூபாய்க்கு ஒரு செக் தர்றேன். அவ்வளவு தான். மேட்டர் ஓவர்.

ஏமாற்றுவது என்பது எவ்வளவு சுலபமாகி விட்டது. தப்பு என்பது எந்த அளவுக்கு நம் உடம்பில் ஊறி விட்டது. நேர்மை என்பதை நாம் மறந்து போய் பல நூற்றாண்டுகள் ஆகி விட்டதோ? அரசியல்வாதிகளை குறை சொல்வதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர்களுக்கும் நமக்கும் என்ன பெரிய வித்தியாசம்? ஒரு சில ஆயிரங்களை காப்பாற்றுவதற்காக சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் எந்த தைரியத்தில் இப்படி செய்கிறோம்? சுய ஒழுக்கம், நேர்மை, ஒழுக்கம் என்பது நம்மிடம் எப்போது வரும்? அது இல்லாமல் நாட்டின் முன்னேற்றத்தை பற்றிய கனவு வெறும் பகல் கனவு தானே? இவ்வளவு தப்புகளை செய்து கொண்டு நம்மால் எப்படி நிம்மதியாய் தூங்க முடிகிறது? இயக்கம், கொள்கை என்று ஆயிரம் பேசுபவர்கள் கூட தங்களுக்கு என்று வரும்போது சந்தர்ப்பவாதிகளாய் மாறி விடும் கொடுமை இந்த நாட்டில் தான் நடக்கிறது. அவன் சரியாக இல்லை, நான் ஏன் இருக்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்?

ஒரு ·பார்வேர்ட் மெயில் வந்தது. அப்துல் கலாமின் உருக்கமான பேச்சு, இந்தியாவின் முன்னேற்றத்தைப் பற்றிய அவர் கனவு என்று..அனுப்பியவனிடம் கேட்டேன்..நீ இந்த முறை சரியான rent reciept submit செய்தியா என்று? பதிலே இல்லை; வேலை அதிகம் போலும்.


வெரும் வெள்ளைத் தாளாகவே
கொடுத்திருப்பேன்

அதில் நிரம்பி இருக்கும் என் காதல்
உனக்கு புரிந்திருக்குமோ என்னமோ?

அந்த வெற்றிடங்களும்,
சொல்லப்படாத சொற்களும்
உணர்த்தாத காதலையா
இந்தக் கவிதைகள்
உணர்த்தி விடப் போகிறது!

உன்னை சொல்லிக் குற்றமில்லை;
சமூகத்தில், காதலுடன் ஒட்டிப் பிறந்த
குழந்தையாய் இருக்கிறது கவிதை

காதலை விட்டு கவிதையையும்
கவிதையை விட்டு காதலையும்
பிரித்தால், உயிருக்கு உத்தரவாதமில்லை!

காதலிப்பவனெல்லாம் கவிஞனா?
அல்லது கவிஞர்கள் தான் காதலர்களா?
எனக்குப் புரியவில்லை

எப்படியோ சமூகச் சம்பிரதாயத்தின் படி
தாளின் இந்தப் பக்கத்தில் என்
தூங்கா இரவின் பிதற்றலும்,

இன்னொரு பக்கத்தில் நானும்
என் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கிறோம்
உனக்காக..வெறுமையாய்!