நான் சென்னையிலிருந்து மதுரை செல்லும் ரயிலைப் பற்றி எழுதப் போவதில்லை. நான் மும்பை எக்ஸ்பிரஸ் பார்த்ததன் விளைவாக இந்தப் பதிவு! இது அதைப் பற்றிய விமர்சனப் பதிவுமல்ல. சமிபகாலங்களில் கமல் நடிக்கும் அனைத்துப் படங்களும் சர்ச்சைக்குள்ளானது நாம் எல்லோரும் அறிந்ததே..அதைப் பற்றிய என் எண்ணங்களும், கேள்விகளும் தான் இந்தப் பதிவு!

படத்திற்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று சில அரசியல்வாதிகள் கூச்சலிடுவதும், இந்தக் கதைக்கு இப்படித் தான் பெயர் வைக்க முடியும் என்று சினிமாக்காரர்கள் மல்லுக்கு நிற்பதும் இன்று சகஜமாகிவிட்டது. நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன, அதை விட்டு விட்டு, அரசியல்வாதிகள் இதை ஒரு பிரச்சனை என்று பொழுது கழிப்பது சரியாகப் படவில்லை தான்..ஆனால்...

இவர்கள் சொல்வதற்கேற்ப வீம்புக்கென்றே கலைஞர்கள் படத்தின் தலைப்பை தேர்ந்தெடுக்கிறார்களோ என்றும் சில சமயம் தோன்றுகிறது. அரசியலை விட மக்களுக்கு சினிமாவும், சினிமாக் கலைஞர்களையும் பிடிப்பதால் எல்லோரும் சினிமாப் பக்கம் சேர்ந்து விடுகிறார்கள் என்பது என் எண்ணம்.

விருமாண்டி!

சண்டியர் என்ற பெயர் ரவுடியைக் குறிப்பதாகவும், ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்களை வீரமாகக் காட்டி, மற்றவரை கோழையாகச் சித்தரிப்பதாகவும், வன்முறை மேலோங்கி இருப்பதாகவும் பல குற்றங்கள் சாட்டப்பட்டு கமல் ஒரு வழியாக விருமாண்டி என்று மாற்றினார்! இந்தச் சண்டையே அந்தப் படத்திற்குத் தேவையான விளம்பரத்தைத் தேடித் தந்தது. கமல் அந்த அரசியல்வாதிக்கு எதிராகப் பேசும் பொழுது இது தூக்கு தண்டனை தடை செய்ய வேண்டும் என்ற ஒரு நல்ல கருத்தை வலியுருத்தும் படம், இதில் வன்முறை அறவே இல்லை என்று மார்தட்டிச் சொன்னார்! ஆனால் படத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்துருக்கும் அது எத்தனை பொய் என்று..அந்தப் படத்தில் வன்முறை இல்லை என்றால், கமலுக்கு வன்முறை என்றால் என்னவென்றே தெரியவில்லை என்று அர்த்தம்! அது எனக்குப் பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. நான் பெரிய கமல் ரசிகனாக இருந்தாலும், என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை. எந்த ஒரு பத்திரிக்கை விமர்சனத்திலும் படத்தில் வன்முறை அதிகம் என்று சொன்னதாய் எனக்கு ஞாபகமில்லை!! தேவர் மகனை விட, ஹேராமை விட இதில் தான் எனக்கு வன்முறை அதிகமாய் பட்டது..

மும்பை எக்ஸ்பிரஸ்!

இப்பொழுது இந்தப் படம்! கமல் வீம்பாக இது கதைக்கேற்ற பெயர், இதை மாற்ற முடியாது என்று படத்தை வெளியிட்டு அதுவும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் என் கேள்வி..

ஒரு குழந்தையைக் கடத்தும் கதைக்கு ஏன் அவர் மும்பையை தேர்ந்தெடுக்க வேண்டும்? அந்தக் கதையை சென்னையில் சொல்ல முடியாதா? கேட்டால், அந்தக் காரெக்டரின் பெயர் மும்பை எக்ஸ்பிரஸாம், ஏன் சென்னையில் இந்தக் காரெக்டர் இருந்து அதற்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ், பாண்டியன் விரைவுவண்டி என்று வைத்தால் என்ன? முதலில் அந்தக் காரெக்டரின் பெயர் மும்பை எக்ஸ்பிரஸ் என்று ஏன் வந்தது? அதைப் பற்றி கமல் படத்தில் ஒன்றும் சொல்லவில்லையே..

என் கேள்வி படத்திற்கு தமிழில் தலைப்பு வைப்பதைப் பற்றி அல்ல, அந்தப் படத்தை மும்பையில் தான் எடுக்க முடியும் என்று அவர் ஏன் தீர்மானித்தார் என்று எனக்கு விளங்கவில்லை..சென்ற வார விகடனில் சுஜாதா அவர்கள் இந்தப் படத்திற்கு சரியான தலைப்பே வைக்கப் பட்டிருக்கிறது என்று சான்றிதழ் தருகிறார்.

என்ன தான் சினிமா என்ற மாய உலகில் நாம் மயங்கிக் கிடந்தாலும், கூச்சலிடும் அரசியல்வாதிகளை விடுங்கள், நியாயம் என்று ஒன்று இருக்கிறதே..ஒரு justification வேண்டாம்?

என்னடா இவன், ரஜினியையும் குறை சொல்றான், கமலையும் குறை சொல்றான், இவன் உண்மையில் யார் ரசிகன் என்றால்; உண்மையில் நான் சினிமாவின் ரசிகன்!

ராஜனுக்கு 42 வயதிருக்கும். அவன் மனைவி கற்பகத்திற்கு 39. அவர்களுக்குத் திருமணமாகி 14 வருடங்களில் அவருக்கு அவள் குழந்தை, அவளுக்கு அவர் குழந்தை! ஆம், இருவரும் குழலினிது யாழினிது என்னும் கட்சி! என்னமோ அவர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. கற்பகத்தின் கண்களில் அந்த சோகம் நிரந்தரமாய் குடி கொண்டிருந்தது! என்றாவது அதைப் பற்றிய துக்கம் தொண்டை அடைக்கும்பொழுது, "நாம யாருக்கு என்ன துரோகம் செய்தோம், ஏன் நமக்கு ஒரு புள்ள பாக்கியம் கிடைக்க மாட்டேங்கிறது?" என்று கற்பகம் கதறியதுண்டு, ஏன் இன்றும் கதறுவதுண்டு. கதறலின் வீரியம் கொஞ்சம் குறைந்திருந்தது..அவ்வளவுதான்! அவள் இப்படிக் கேட்கும் பொழுதெல்லாம் அவர் அவளுக்குச் செய்யும் பாவமானது, துரோகமானது ராஜனைத் துரத்தும்..

எல்லா பெண்களுமே அழகாய் தெரியும் வயதில் ஏற்பட்ட தொடர்பு அது..இன்று வரை தொடர்கிறது. ராஜி! அவரை விட 3 வயது மூத்தவள். அன்பான கணவன், அழகான குழந்தைகள்..ஒரு ரயில் பிரயாணத்தின் சந்திப்பு, இத்தனை ஆண்டுகள், இத்தனை அந்நியோன்யமாய் மாறி விடும் என்று அவர்களுக்கு அப்போது தெரியாது. மனசாட்சிக்கு பயந்தவர்கள் இருவரும், ஆனால் பயந்து கொண்டே தப்பு செய்தவர்கள், செய்கிறவர்கள் இருவரும்!! ஊருக்கு அது தப்பு; அவர்களுக்கு அது நட்பு!

பல நாட்களுக்குப் பிறகு அவளின் அழைப்பு வந்திருக்கிறது இன்று! காலையில் எழுந்ததிலிருந்து அவளின் நினைவு. இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. இன்று காலையில் அலுவலகத்திற்கு ·போன் செய்து விடுப்பை சொல்லி இருந்தார். கற்பகத்திடம் தன் சினேகிதன் வெளியூரிலிருந்து வந்திருப்பதாகவும், அவனைப் பார்த்து விட்டு சாயங்காலம் வருவதாகவும் சொல்லி ஆகிவிட்டது. அவள் ஏன் எதற்கு என்று அவரை நச்சரிப்பதே இல்லை. வெளியிலே கண்டதை சாப்பிடாதீங்க! உங்களுக்கு ஒத்துக்காது என்கிறாள். ஆண்களுக்கு உலகம் தான் வீடு; பெண்களுக்கு வீடு தான் உலகம்! இவளையா நாம் துரோகம் செய்கிறோம் என்று அவர் நினைக்கவே இல்லை; அது "எல்லாம்" முடிந்த பிறகு இன்று இரவு வர வேண்டிய சிந்தனை. அப்போது இதைப் பற்றி நினைத்து வருந்திக் கொள்ளலாம் என்று ஒத்தி வைத்துக் கொண்டார்! அனுபவிக்கும் வரை சதையே அண்டம்; முடிந்தபின் சதையானது பிண்டம்!

அழைப்பு மணி அழுத்தி விட்டு காத்திருந்தார். அந்த ·ப்ளாட்டின் மயான அமைதி அவரையே கூர்ந்து கவனிப்பதாகப் பட்டது. அது அவரை மேலும் உறுத்தியது. ராஜியை நினைத்துக் கொண்டு மறுபடி மணி அழுத்தக் கை எடுத்த போது, கதவு திறக்கப்பட்டது; ராஜி! தும்பை நிற பூ போட்ட புடவையில் உள்ள பூக்களுடன் அவளும் இன்று தான் மலர்ந்ததைப் போலிருந்தாள்! அவர் வரும்பொழுதெல்லாம் அவள் புடவை அணிவது வழக்கம்! உள்ளே அழைத்து கதவடைத்தாள்! அதற்குப் பிறகு நடந்தது அவர்களுடைய அந்தரங்கம்!

ராஜனின் முகத்தில் தேஜஸ் கூடியிருந்தது..ஆனால் அவர் ஒத்தி வைத்திருந்த கவலை அவரைச் சூழ்ந்தது. கற்பகத்தை நினைத்து வழி நெடுக கண் கலங்கினார். இனி அவர் ராஜியை அடுத்த முறை சந்திக்கும் வரை அந்தக் கவலை அவரை வாட்டும்..அவருக்கு இத்தனை வருஷத்தில் அது பழகி விட்டிருந்தது. அந்தச் சிற்றின்பத்தில் அப்படி என்ன இருக்கிறது? கேவலம் அதற்காக என்னையே நம்பி இருப்பவளை துரோகம் செய்வது..சே! நான் எத்தனை இழிவானவன்! அவருக்கே அவரை நினைத்து அருவருப்பாய் இருந்தது..ஆனால், வாழ்வு முழுவதும் இந்தச் சுமையை அவர் சுமக்கத் தயாராய் இருந்தார்!

நினைவுகளுடன் போராடிக் கொண்டே வீட்டு வாசலில் வந்து நின்றார். சத்தம் செய்யாத கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவர், கண்ணில் பட்டது; அங்கே தன் தம்பி முறை கொண்ட ஒருவனுடன் உதடுடன் உதடு சேர்த்து தன்னை முழுவதுமாய் அவனுக்கு அர்ப்பணிக்க எத்தனிக்கும் கற்பகம்! ராஜி, தான் உள்ளே நுழைந்தவுடன் கதவடைத்தது ஏனோ ஞாபகம் வந்தது.

பதட்டப்படாமல் வெளியே வந்தவர், கதவைத் திறந்தால் சத்தம் வருமாரு ஒரு சிறு பலகையை சத்தம் வராமல் வைத்து விட்டு, இந்தச் சுமையையும் தன் வாழ்வு முழுவதும் சுமக்கத் தயாராகி நடந்தார்! குளிர்ந்த காற்று அடித்தது; இதமாக இருந்தது!!

புத்தாண்டு பிறந்து 2வது நாளில் புத்தாண்டு பிறந்ததன் பயனடைந்தேன். நீங்கள் யூகிப்பது சரி தான்..சந்திரமுகி பார்த்தாகிவிட்டது! பிறவிப் பயன் இந்த முறையும் எய்தியாகிவிட்டது!

எல்லோரும் படம் பார்த்தால் விமர்சனம் எழுதுகிறார்கள். பிரதம ரஜினி ரசிகனான நான் எழுதா விட்டால் எப்படிஎன்று நீங்கள் வருத்தப்படும் முன்..இதோ!

பி வாசு கதை எழுதி ரஜினிக்கு சொல்வதற்கு முன்னரே தமிழ்நாட்டில் அனைவருக்கும் கதை தெரிந்து விடுகிறது. [ரஜினிக்குத் தெரிகிறதோ இல்லையோ!] இப்படி இருக்கும்போது, படம் வந்து 5 நாள் ஆன பிறகு படத்தின் கதையை சொல்வது சிறுபிள்ளைத்தனம்! இருந்தாலும் அந்த சிறுபிள்ளைத்தனத்தை ஒரு சிறு வரியில் செய்து விடுகிறேன்!

ஜோதிகா மீது வரும் சந்திரமுகி என்ற பேயை சைக்கியாட்ரிஸ்ட் ரஜினி விரட்டுகிறார்!

ஜோதிகா யாரு? ரஜினி ஏன் அவளை பேய்கிட்ட இருந்து காப்பாத்துறார் என்றெல்லாம் நீங்கள் கேட்டால், நீங்க இப்பொவே ஆட்டையில இருந்து விலகிக்கலாம்!

சரி, சரி..விமர்சனத்துக்கு வர்றேன்! முதலில் படத்தின் நிறையை பார்ப்போமா?

ரஜினி, ரஜினி & ரஜினி :

3 வருடங்களுக்குப் பிறகு இளமையாய் திரும்பி இருக்கிறார் ரஜினி. அவருடைய பழைய படங்களின் பாணியில் காலை மட்டும் முதலில் காட்டி சண்டைக் காட்சியில் அறிமுகமாகிறார். மனிதன் படத்தில் முதலில் செந்தில் காலைக் காட்டுவார்கள். ரசிகர்கள் ரஜினி தான் என்று நினைத்து உற்சாக மிகுதியில் கையைத் தட்டுவார்கள், பார்த்தால் செந்தில் வருவார்!! அந்த ஞாபகம் தான் வந்தது..

ரொம்பவும் அடாவடி, ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று வந்து போகிறார்! ரொம்பவே அடக்கி வாசித்திருக்கிறார். தானும் பஞ்ச் டயலாக் பேசினால், எங்கே விஜய் ரசிகர்கள் விஜயை காப்பி அடிப்பதாக சொல்லி விடுவார்களோ என்று நினைத்து விட்டார் போல..

ஜோதிகா :

சாதரண படத்திலேயே முகத்தில் ஏதாவது குறும்புத்தனம் செய்வது ஜோதிகாவின் இயல்பு. இதில் பேய் பிடித்து ஆட்டும் வேடம் என்றால், கேட்கவா வேண்டும்..எல்லோரையும் ஒரு ஆட்டு ஆட்டுகிறார்!

வித்யாசாகர் :

எளிமையான இசையில், ரஜினிக்கே உரிய பாணியில் அற்புதமாய் செய்திருக்கிறார். நிச்சயமாக தேவுடா இவர் பக்கம் சூடுவார்! யாரு எஸ்பிபியா பாடுவது..எத்தனை நாளாச்சு சார்! தத்திந்தோம் பாட்டு பழைய இளையாராஜாவை ஞாபகப்படுத்துகிறது! ரஜினி ரசிகர்கள் இன்னும் இவர் வீட்டை பதம் பார்க்காததிலிருந்தே தெரிகிறதே, பாட்டு சூப்பர்னு!!

ரஜினியின் காஸ்ட்யும்ஸ் : [செளந்தர்யாக்கு ஒரு ஓ போடுங்க!]

குறிப்பாய் யாரும் ரஜினி படத்தில் லாஜிக் பார்ப்பதில்லை..அதேபோல், ஒரு சைக்யாட்ரிஸ்ட் இப்படி எல்லாம் ட்ரஸ் பண்ணுவாரா என்று கேட்காவிட்டால் அமோகமாய் உடை வடிவமைத்திருக்கிறார் செளந்தர்யா!

ரஜினியின் மேக்கப் [லாங், மிட்] :

கவனிக்க! லாங், மிட் ஷாட்டில் ரஜினி அழகாக இருக்கிறார்!

இனி குறைகள் :

ரஜினி வடிவேலு சீப் காமெடி :

காமெடி செய்வதற்கு ரஜினியே போதும், இதில் வடிவேலு வேறு இருக்கிறாரே என்று நினைத்தால், ஒன்றிரன்டு காட்சிகளைத் தவிர மற்ற எல்லாம் கேவலமான இரட்டை அர்த்த வசனங்களாய் இருந்தது பெருத்த ஏமாற்றம்!

அங்கங்கே உதைக்கும் லாஜிக் :

சைக்கியாட்ரிஸ்ட் எப்படி பேய், பிசாசை எல்லாம் நம்புகிறார், நயந்தாராவை எப்போதும் கடுப்படித்திக் கொண்டிருந்தாலும் அவர் ரஜினியை ஏன் விரும்புகிறார், எதற்கு தேவை இல்லாமல் அந்த வில்லி வருகிறார், ஜோதிகாவிற்குத் தான் பேய் பிடித்திருப்பதாக ரஜினி கூறும் போதும் சில காட்சிகள் லேசாக உதைக்கிறது! [யாராவது படத்தைப் பார்த்து விட்டு எனக்கு இந்தக் கேள்விகளுக்கு விடை அளியுங்கள்!]

ரஜினியின் மேக்கப் [க்ளோசப்] :

முகத்தில் பௌடர் பூசலாம், பௌடரிலேயே முகம் இருக்கக் கூடாது. ஜோதிகாவை விட ரஜினிக்குத் தான் அதிகம் லிப்ஸ்டிக் போட்டிருப்பார்களோ என்று தோன்றுகிறது! ரஜினியை க்ளோஸப்பில் காட்டும்போது, மேடைக்கு மேடை [அபிநயா க்ரூப்!] ரஜினி போல் வேடம் போற்று சுற்றுவார்களே, அவர்களைப்போலவே உள்ளது!

படத்தைப் பொறுத்தவரை கடைசி அரை மணி நேரம் தான் விறுவிறுப்பாக இருந்தது! எப்படியோ ரஜினி படம் வந்தால் சரி! என்ன சொல்றீங்க?

தான் யானை இல்லை, குதிரை என்று மறுபடியும் நிரூபித்திருக்கிறார் ரஜினி!! [யானை குதிரை மாட்டர் எல்லாம் உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்!]