ஞாயிற்றுக் கிழமை. மணி இரவு 1. youtube ல் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தேன். phone வந்தது. மாமா தான். ஒரு வேலையாய் பூந்தமல்லி வரை போக வேண்டி இருந்தது. சட்டையை மாட்டிக் கொண்டு, பாண்ட்டுக்கு மாறினேன். அன்று இரவு தான் முடி வெட்டி இருந்தேன். shampoo போட்டு தலைக் குளித்து இருந்ததால், முடி சொன்ன பேச்சையெல்லாம் கேட்டது. இஷ்டத்துக்கு வகுடு எடுத்து சீவி சீவி கலைத்துக் கொண்டிருந்தேன். கண்ணாடியை பார்த்து தன்னையே ரசித்துக் கொள்ளும் எந்தப் பிள்ளையயும் அம்மாக்களுக்குப் பிடிப்பதில்லை. "டேய், ராத்திரி ஒரு மணிக்கு உனக்கு என்னடா அழகு வேண்டிக் கெடக்கு? லைட்டைப் போட்டு என் தூக்கத்தையும் கெடுத்துட்ட இருக்க? பேசாம பட்றா" என்றாள். "நான் வெளியே போறேன்!" என்றேன். "என் தப்பு தான், நான் புள்ளைய பெத்துருக்கனும், பேய பெத்தா இப்படித் தான். எங்கையாவது போயித் தொலை, லைட்டை அணை!" என்று அங்கலாய்த்தாள். எரிச்சலாய் வந்தது எனக்கு.

சீப்பைத் தூக்கிப் போட்டு, பைக் சாவி, ear phone, cap எடுத்துக் கொண்டு கிளம்பினேன். தாம்பரத்திலிருந்து சென்னை பைபாஸ் பிடித்தால் 20 நிமிடத்தில் பூந்தமல்லி. காதில் head phone ல் "என்றென்றும் புன்னகை", cap ஊடே முடி கோதும் காற்று, ரசித்து பைக்கை முறுக்கினேன். காற்றின் வேகம் தலையில் இருந்த cap ஐ கழட்டப் பார்தது. காற்றுக்கும் எனக்கும் இருந்த அந்தப் போட்டி நன்றாக இருந்தது. சென்னையில் பைக் ஓட்ட சிறந்த நேரம் இரவு தான். அதுவும் நவம்பர், டிசம்பரில் அந்த மெல்லிய பனியில், காதில் ear phone மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டே மெல்ல ஊரைச் சுற்றி வருவது ஒரு சுகம். அதுவும் ரிங் ரோட் என்றால் சும்மா பறக்கலாம். அப்படி ஒரு இன்பத்தை அனுபவித்த படி சென்று கொண்டிருந்தேன்.

அப்போது தூரத்தில் ஒருவன் நடந்து போவதைப் பார்த்தேன். ஒரு மாதிரி லுங்கியை மடித்துக் கட்டி கையில் சில சாமான்களை வைத்திருந்தான். "இந்த இடத்தில் ஏன் நடந்து கொண்டிருக்கிறான்? இப்படியே எவ்வளவு தூரம் நடப்பான்?" என்று தோன்றியது. அவன் அவ்வப்போது திரும்பி வண்டி ஏதும் வருகிறதா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துப் போய்க் கொண்டிருந்தான். என் வண்டியை தூரத்தில் பார்த்ததும், கையை உயர்த்தி லிஃப்ட் கேட்க ஆரம்பித்தான். எனக்கும் இரக்க குணம், உதவும் எண்ணம் எல்லாம் இருந்தாலும், இந்த மாதிரி சமயத்தில், இந்த மாதிரி ரோட்டில், முன் பின் தெரியாத ஒருத்தனுக்கு உதவுவது எல்லாம் வேண்டாத வேலை. அதனால் அவனைக் கண்டு கொள்ளாமல் கடந்தேன். ஆள் கருப்பாய், ஒல்லியாய், கூலி வேலை செய்பவன் போல் இருந்தான். அவன் கையில் வைத்திருந்த சாமானில் ஒரு ரம்பமும், சுத்தியும் இருந்தது. வண்டியை வேகமெடுத்தேன். அவன் ஒரு வித ஏமாற்றத்தில் என் வண்டியைப் பார்த்துக் கொண்டிருந்தது rear view mirror ல் பார்த்தேன். பாவமாய் இருந்தாலும் ஆள் ஒரு மார்க்கமாய் இருப்பதால் பரவாயில்லை என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.

அவனை விட்டு ஒரு நூறு மீட்டர் வந்திருப்பேன், காற்றுக்கும் எனக்கும் நடக்கும் போட்டியில் இந்த முறை காற்று வென்றது. தலையிலிருந்து என் cap சட்டென்று பின்னால் பறந்தது. வண்டியை நிறுத்தி விட்டு cap ஐ எடுக்கத் திரும்பினால் அந்த ஆள் என் cap எடுத்துக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தான். அருகில் வந்ததும், அவன் "cap லூசா இருக்கு போல, காத்துல அடிச்சிருச்சு" என்றான். நான் தலையைசைத்துக் கொண்டே, cap ஐ வாங்கிக் கொண்டு, கொஞ்சம் தர்மசங்கடமாய் உணர்ந்தேன்.

"எங்க போறீங்க?" என்றேன்.

"டோல்கேட் ல விட்டா போதும்." என்றான்.

"சரி வாங்க" என்று நடந்தேன். அவன் பின்னால் நடந்தான். அடுத்த நொடி அவன் கையில் உள்ள சுத்தியால் என் பின் மண்டையில் பலமாய் ஒரு அடி. இல்லை. அப்படி எனக்கு ஒரு பிரமை. திரும்பிப் பார்த்தால் பாவமாய் நடந்து வந்து கொண்டிருந்தான்.

"இந்த நேரத்துல, இந்த ரோட்ல தனியா போறீங்க?" என்றேன்.

"அஹ்..என் கூட்டாளியோட தான் வந்தேன். அவனுக்கு என்னமோ அவசரமா ஜோலி ஒன்னு வஞ்ச்சுன்னு எதுனா வண்டிய புட்ச்சி போன்னுட்டான்."

cap ஐ tight செய்து தலையில் போட்டு அமர்ந்து வண்டியை எடுத்தேன்.

அவன் பின்னால் சற்று தள்ளியே உட்கார்ந்து கொண்டான்.

பாட்டை நிறுத்தி, ear phones ஐ கழுத்தில் போட்டுக் கொண்டேன். அவனிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. பேசினாலும் காற்றில் சரியாய் கேட்காது. அவனும் எதுவும் பேச்சு கொடுக்கவில்லை. கண்ணாடியில் பார்க்கும்போது, எதிர்க்காற்றை அனுபவித்தபடி இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் பார்த்துக் கொண்டே வந்தான். வண்டியை வேகம் எடுத்தேன்.

இந்த ரோடு எப்போதும் காலியாகத் தான் இருக்கும். அன்று ஞாயிற்றுக் கிழமை வேறு. லாரிகளும் இல்லை. அவன் நினைத்தால் என்னை அடித்துக் கொன்று, பொறுமையாய் ரம்பத்தால் துண்டு துண்டாய் அறுத்து போட்டாலும் அங்கே கேட்பாரில்லை. "ஒரு பைக், கொஞ்சம் பணத்துக்காக சுத்தி எடுத்து கொல்லும் அளவுக்கு துணிவார்களா?" என்று ஒரு எண்ணம் தோன்றி, பின் தினமும் பேப்பரில் இதை விட கேவலமான விஷயத்திற்கு எல்லாம் அடித்துக் கொண்டு சாகும் செய்திகள் கண் முன் வந்து மறைந்தன. ஆள் அரவம் இல்லாத இடத்தில் ஒரு மனிதன் கூட இன்னொரு மனிதனுக்கு எதிரி தான் என்ற நினைப்பு மேலும் பயமுறுத்தியது. இப்படி மண்டையில் திகலாய் என்னன்னமோ எண்ணம் எல்லாம் ஓடிக் கொண்டிருந்தது. "எப்படா டோல்கேட் வரும்!" என்று இருந்தது. ஒரு கணம் இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாய் பார்த்துக் கொண்டோம். அப்போது எதிர்காற்று அவனை ஒன்றும் செய்யவில்லை. அவன் தீர்க்கமாய் என்னையே பார்த்துக் கொண்டிருந்த மாதிரி எனக்குத் தோன்றியது. எனக்கு உள்ளே ஏதோ பிசைந்தது. அந்த நொடியில் எதிர்பாராமல் வலது பக்கத்தின் divider ல் இருந்து திடீரென்று ஒரு நாய் ரோட்டில் பாய்ந்தது. என்ன ஏது நடக்கிறது என்று என் மூளைக்கு எட்டுவதற்குள் அனிச்சை செயலாய் வண்டியின் எல்லா ப்ரேக்குகளையும் ஒரே நேரத்தில் அழுத்தினேன். வண்டியில் உள்ள disc break திடுமென்று விழித்து வண்டி balance தவற நான் முன்னால் தூக்கி எறியப்பட்டேன். கைகளிலும் கால்களிலும் சிராய்த்து, இரண்டு முட்டியிலும் செமையாய் வலித்தது. விழுந்த வேகத்துக்கு, நான் இன்னும் சுயநினைவோடு இருப்பதே எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

மெல்ல எழுந்து உட்கார்ந்து கைகளில் உள்ள சிராய்ப்புகளைப் பார்த்தேன். மண் படிந்த தோல் பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. எரிச்சல் அதிகமாய் இருந்தது. முட்டியில் பேன்ட் கிழிந்து ரத்தம் தோய்ந்திருந்தது. மெல்ல எழுந்தேன். வலிக்கிறது, ஆனால் நிற்க முடிகிறது. வண்டி எங்கோ ஓரமாய் கிடந்தது. Cap எங்கே விழுந்ததோ தெரியவில்லை. அந்த ஆள் தூக்கி வந்த பை, சுத்தி, ரம்பம், மற்ற சாமான்கள் சிதறிக் கிடந்தன. அவன் மல்லாக்கக் கிடந்தான். அவன் அருகில் சென்றேன். அவன் உடம்பில் ஒரு அடியும் இல்லை. அவன் பின் மண்டை தான் பிளந்து கொலகொலவென்று இருந்தது.

 தினகர் என்றாலே எல்லோருக்கும் இளக்காரம் தான். தினகர் என்ற அந்தப் பெயரில் இருக்கும் 'ர்' தான் அவனுக்குக் கடைசியாய் கிடைத்த மரியாதை. வீட்டில் அவனை பெண்டாட்டி பிள்ளைகள் மதிப்பதில்லை. (இது ஆண்களுக்கு உலகப் பிரச்சனை என்றாலும்..) ஆஃபிஸிலும் அவனை உப்புக்குச் சப்பாணியாய் வைத்து ஆடிக் கொண்டிருந்தார்கள். குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண் விதியே என்று வாழ்வது போல் தான் தினகரும் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஐப்பசி வந்தால், (வரும்) தினகருக்கு நாற்பது வயது. அதற்குள் அவன் தலை முடிகளுக்கு, நரைக்கலாமா, கொட்டலாமா என்று போட்டி. நல்ல சிவப்பு என்றோ, கரு கரு கருப்பு என்றோ சொல்ல முடியாது. Asian Paints color palette ல் நாலைந்து color mix செய்தது போல் ஒரு நிறம். முட்டைக் கண்கள். ஒரு சோம்ப்ளாங்கி கண்ணாடி. மூச்சு விடுவதற்கும், அந்த கண்ணாடியை தாங்குவதற்கும் அன்றி அந்த மூக்குக்கு வேறு ஒன்றும் விஷேஷமில்லை. அவ்வளவு வாய் திறந்து பேசாத ஆளுக்கு அத்தனை பெரிய வாய். பகவானின் லீலையே லீலை. அளவான உயரம் + ஷூவில் கொஞ்சம் ஹீல்ஸ். மிதமான உடல்வாகு. இவ்வளவு தூரம் அவனை அவன் மனைவி கூட வர்ணித்ததில்லை. கதைக்கு வருவோம்.

அன்று காலையிலேயே மனைவியின் சுப்ரபாதம் தொடங்கியது. அவன் பையன் பள்ளியில் பரிட்சையில் கோட்டடித்து நிற்பதற்கும், சேராதவரோடு சேர்ந்து கெட்டுப் போவதற்க்கும், ஸ்கூல் ஃபீஸ் காரணம் காட்டி அவனை இந்தப் பள்ளியில் சேர்த்ததற்கும், அவன் எதிர்காலம் நாசமாய் போகப் போவதற்கும் தினகர் தான் முழு முதற் காரணம் என்று சொல்லி அவன் மனைவி அவனை அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள். பூசாரியின் அர்ச்சனையை காதில் போட்டுக் கொண்டு கடவுள் காலங்காலமாய் கல்லாய் அமர்ந்து இருக்கும் போது, அவன் படைத்த ஜென்மம், மனிதன், அதுவும் புத்திசாலி ஜீவராசி, இதைக் கூடவா கற்றுக் கொள்ள மாட்டான்.

இன்று அவன் கவலையே வேறு. கடந்த இரண்டு வாரங்களாக உயிரை உருவி எடுத்துக் கொண்டு, நேற்று இரவும் 3 மணி வரை (இரவா?) வேலை பார்த்த Business proposal presentation இன்று இருந்தது. அது வேறு வயிற்றில் புளியைக் கரைத்து, ரெண்டு தக்காளி போட்டு, குழம்பு பொடி போட்டு, கடுகு தாளிப்பது வரை வந்து விட்டது.
இவனைப் போலவே அப்பாவியாய் இருந்த அந்த wagon R ல் ஆபிஸ் செல்லும் வழியில் சாலையே தெரியாத அளவுக்கு வாகனங்கள். ஏதோ ஒரு பெரிய நோய் வந்து மக்கள் எல்லாம் இத்தனை காலம் வீட்டில் அடைபட்டுக் கிடந்து இன்று திறந்து விட்டது போல் அப்படி ஒரு கூட்டம். அந்த presentation ppt மனதில் ஓட கொஞ்சமாய் எரிச்சல் பட்டான்.

அன்று மாலை, சீக்கிரமே ஆபிஸில் இருந்து கிளம்பிவிட்டான்.

வாசகர்களுக்கு ஒரு குறிப்பு: இது non linear கதை என்பதால், presentation என்ன ஆனது என்று அவன் வீட்டுக்குப் போகும் வழியில் நினைத்துப் பார்ப்பதாய் சொல்லப்படும். இதோ, நினைக்கிறான்.

அவன் அடித்த ஹாரனில் அவன் wagon R யே கொஞ்சம் மிரண்டது என்று தான் சொல்ல வேண்டும். "2 வாரமா ராப்பகலா வேலை பார்த்துருக்கேன். ஒரு Details "மண்ணும்" ('ம' வில் ஆரம்பிக்கும் கெட்ட வார்த்தை) இல்லாம இத்தனை டீமோட co-ordinate பண்ணி இவ்வளவு தூரம் பண்ணதுக்கு ஒரு சின்ன appreciation கூட இல்லாம, that bloddy rascal is firing me in front of all. Bloody mother fisher (புரிந்திருக்கும், 'f' கெட்ட வார்த்தை) GODDAMIT!" மறுபடியும் அவன் wagon R குலுங்க ஒரு horn. சில நொடிகளுக்குப் பிறகு தான் அது ஹாரனால் வந்த குலுங்கல் அல்ல பின்னால் வந்தவன் அவன் வண்டியில் இடித்த சத்தம் என்று புரிந்தது. இந்தத் தருணம், This moment, யுவராணி "தலைவர்" தோளில் சாய்ந்து அவர் அவளின் உதட்டில் உள்ள ரத்தத்தை பார்க்கும் தருணம். மாணிக்கம் பாட்ஷாவாக மாறும் தருணம். என்ன தான் இடித்தாலும், காரை நடு ரோட்டில் நிறுத்தி பஞ்சாயத்து பண்ணுவது எல்லாம் தினகரின் கனவில் கூட நடந்ததில்லை. ஆனால் இன்று...காரை அப்படியே நிறுத்தி விட்டு இறங்கினான். பின்னால் வந்து இடித்த மினி ட்ரக் ஆள் கொஞ்சம் apologetic ஆக இறங்கி வந்தான்.

அந்த ஆள் உயரம் கம்மியாய், தொத்தலான உடம்போடு, பார்க்கப் பரிதாபமாய் இருந்தான். தினகர் மனதில் பாட்ஷா உக்கிரமானார். அவன் முகத்தில் "தெரியாம இடிச்சிட்டேன் சார்" என்று எழுதி ஒட்டி இருந்தது. தினகர் தான் பாட்ஷாவாய் மாறி ஐந்து நிமிடம் ஆயிற்றே. இடிபட்ட காரை பார்த்துக் கொண்டே, அதே உக்கிரத்துடன் அவன் மேல் பாய்ந்தான். அவன் சட்டையை பிடித்துக் கொண்டு, அவன் கன்னத்தில் பொளேர் என்று ஒன்று விட்டான். அதை அந்த ஆள் எதிர்ப்பார்க்கவில்லை. அதோடு, தான் சின்ன வயதில் இருந்து கேள்விப்பட்ட அத்தனை கெட்ட வார்த்தைகளையும் சொன்னான். அந்த ஆள் மிரண்டு போனான். ரோட்டில் சிலர் பஞ்சாயத்துக்கு வந்தால் அவர்களையும் துவம்சம் செய்தான். அந்த கணத்தில் தினகர், அவன் பாஸை, அவன் மனைவியை, அவன் மகனை, அவன் பக்கத்து வீட்டுக்காரனை, மோடியை, டோனால்ட் ட்ரம்ப்பை, அவன் அறியாமையை, அவன் தோல்வியை, அவன் கையாலாகாத்தனத்தை என்று எல்லாவற்றையும் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான். அந்த ஆள் எவ்வளவு கெஞ்சியும் தினகர் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான். தினகரைத் தெரிந்தவர்கள் அவனை அப்போது பார்த்தால் அவன் தானா என்று சந்தேகம் வரும். அப்படி ஒரு உக்கிரம். அப்போது, யாரும் எதிர்பார்க்காமல், திடீரென்று அவன் கன்னத்திலும், முகத்திலும் தலையிலும், முதுகிலும் சாரமாரியாக சில அடிகள் விழுந்தது. அவன் சுதாரிப்பதற்குள் அவன் சட்டை எல்லாம் கிழிந்து தொங்கியது. முகத்தில் விழும் அடியை தடுக்க கையைக் கொண்டு தடுத்துக் கொண்டே தினகர் பார்த்தது, அந்த பரிதாபமான மினி ட்ரக் ட்ரைவர் அல்ல. அவன் வேறு விதமாய் மாறிப் போயிருந்தான். அவன் முகத்தில் எழுதியிருந்த "தெரியாம இடிச்சுட்டேன் சார்" மறைந்து, "விட்டுடுங்க சார், நான் புள்ளைகுட்டிக்காரன் சார்" போய், "ஆமாடா தே மவனே, நான் தான்டா இடிச்சேன், இப்போ என்னடா அதுக்கு" என்று மாறிப் போயிருந்தது. கூடி இருந்தவர்கள் இருவரையும் விலக்குவதற்குள் போதும் போதும் என்று ஆனது. அவன் தன்னை கொஞ்சம் ஆசுவாசம் செய்து கொண்டு "போடா, வண்டியை எடு" என்று அவன் ஆக்ரோஷமாகக் கத்த கூடி இருந்தவர்கள் இருவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தினகர் தனக்கு நடந்ததை நம்ப முடியாமல், வண்டியில் ஏறி அமர்ந்தான். Rear view mirror லும் அந்த ஆளின் பூத்துப் போன கண்கள் இவனை மிரட்டியது. சுய இரக்கம் பிய்த்துத் தின்ன கண்கள் கலங்க யாரையும் இடிக்காமல் வண்டியை எடுத்தான். அந்த மினி ட்ரக் அவனைக் கடந்து போனது.

"மினி ட்ரக் டிரைவர்" திருச்செல்வன் என்றாலே எல்லோருக்கும் இளக்காரம் தான். திருச்செல்வன் என்ற அந்தப் பெயரில் இருக்கும் 'திரு' தான் அவனுக்குக் கடைசியாய் கிடைத்த மரியாதை. வீட்டில் அவனை பெண்டாட்டி பிள்ளைகள் மதிப்பதில்லை. (இது ஆண்களுக்கு உலகப் பிரச்சனை என்றாலும்..) அலுவலகத்திலும் அவனை உப்புக்குச் சப்பாணியாய் வைத்து ஆடிக் கொண்டிருந்தார்கள். குடித்து விட்டு தினமும் அடிக்கும் குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண் விதியே என்று வாழ்வது போல் தான் திருச்செல்வன் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான்.