மறுநாள் காலையில் "ராயல் ஜன்னத்தை" காலி செய்து கொண்டு குல்மார்க்கிற்கு கிளம்பினோம். அங்கு போய் சேர மதியம் ஆகி விடும் என்று சன்னி சொல்லி இருந்தான். வழக்கம் போல் தமிழ் பாடலுக்கு ரசித்து தலையாட்டிக் கொண்டே வண்டியை ஓட்டினான். இத்தனை நாள் கழித்து எழுதுவதால் வழியில் என்ன பேசினோம் என்பதை மறந்து விட்டேன் [நல்லவேளைன்னு யாரு சொல்றது?]. வழி நெடுக இயற்கை வனப்பை அள்ளிப் பருகியபடி சென்றோம் என்று சொல்லத் தேவையில்லை.

குல்மார்க்கில் நாங்கள் தங்க வேண்டிய இடம் ஆப்பிள் ட்ரீ ரிசார்ட். செக் இன் செய்ய வேண்டிய நேரத்திற்கு முன்பே வந்து விட்டதால், வரவேற்பு பானத்தை [வெல்கம் ட்ரிங்க்!] கொடுத்து, "லக்கேஜ்களை இறக்கி வைத்து விட்டு கொஞ்சம் பொறுங்கள்" என்று சொல்லி விட்டார்கள். சரி இங்கு இருந்து என்ன செய்வது பார்க்க வேண்டிய இடத்தை பார்த்து வருவோம் என்று நாங்கள் சன்னியிடம் சரணடைந்தோம். அவன், " நம் பாக்கேஜில் நாளை தான் ப்ளான் படி செல்ல வேண்டும். இன்று செல்லவேண்டும் என்றால் அது உங்கள் செலவு என்று தலைப்பாகையை [அவனுக்கு ஏது தலை?!] சொறிந்தான். உண்மையில், "ஏன்டா இவர்களை அதற்குள் கூட்டி வந்தோம்?" என்ற அவனுக்குத் தோன்றியது போல் இருந்தது. பணம் கிடைக்குமே என்று வேண்டா வெறுப்பாய் ஒத்துக் கொண்டான். பெரிய பெட்டிகளை இறக்கி வைத்து விட்டு பொடிசுகளின் லக்கேஜ்களை மட்டும் எடுத்துக் கொண்டு வண்டி ஏறினோம். ஓட்டல்காரரிடம் "அங்கு நல்ல சாப்பாடு கிடைக்குமா?" என்று கேட்டோம். அவர் "டைட் க்ளோசப்பில்" [இந்த இடத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்] ஒரு ஹோட்டல் பேரை சொல்லி அது தான் அங்கு பிரபலம், அங்கே சாப்பிடுங்கள் என்றார். வண்டி புறப்பட்டது.




ஆஹா, என்ன ஒரு அற்புதமான இடம் அது. பரந்து விரிந்த பசுமை போர்த்திய புல்வெளி. அதன் பின்னே கம்பீரமான பனி போர்த்திய மலைகள். [இதையே நான் இன்னும் எத்தனை தடவை எழுதுவது?] அந்த புல்வெளியில் ஒரு சிறு கோவில். வண்டியிலிருந்து இறக்கி விட்டதும் குதிரைக்காரர்கள் எங்களை சூழ்ந்து கொண்டார்கள். சன்னி ஒதுங்கிக் கொண்டான். அந்த பெரும் புல்வெளியை குதிரையில் சுற்றி வரலாம். ஒருவருக்கு வாடகை அறுநூறு ரூபாய் [பேரம் பேசி வந்தது, இன்னும் அதிகம் சொன்னார்கள்]. வரும் வழியில் இருக்கும் இடங்களை அவர்கள் காட்டிக் கொண்டே வருவார்கள். சரி எந்த அற்புதமான இடத்திற்கு வந்தாலும், நாங்கள் முதலில் செய்யும் வேலை சாப்பிடுவது தான். பிறகு வருகிறோம் என்று அந்த ஹோட்டல்காரர் சொன்ன ஹோட்டலுக்கு போனோம். [ஹோட்டல் ஜூம் ஷாட்!] மூடி இருந்தது. கதவை திறந்து உள்ளே போனால், "எல்லோரும் தொழுக போயிருக்கிறார்கள். கொஞ்சம் நேரம் ஆகும்!" என்றார்கள். சரி என்று கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்தால் அவர்கள் வருவது மாதிரி தெரியவில்லை. பிறகு பக்கத்தில் இருந்த ஒரு தாபாவில் சென்று வயித்துக்கு போட்டுக் கொண்டு முதலில் கோயிலுக்கு போனோம். அது ஒரு சிறிய கோயில். ஒன்றும் பெரிதாய் இல்லை. பிறகு வந்து குதிரைக்காரனிடம் ஒரு மணி நேரம் பேசி ஒரு குதிரைக்கு அறுநூறு ரூபாய் வீதம் ஆறு குதிரைகளை எடுத்துக் கொண்டோம்.



அரபுக் குதிரை கொடுப்பார்கள் என்று பார்த்தால் அழுக்கு குதிரை தான் இருந்தது அவர்களிடம். சரி என்று ஏறி உட்கார்ந்து படையை கிளப்பினோம். மகதீரா படத்தில்  வருவது மாதிரி "நம்ம ஆள் வந்துட்டான்! என்று குதிரை தறி கெட்டு ஓடினால் என்ன செய்வது?" என்றெல்லாம் குதிரைக்காரனிடம் கேட்டேன். அவன் அந்தப் படத்தை பார்க்கவில்லை போலிருக்கிறது. அவன் கண்டு கொள்ளவே இல்லை. குதிரை மெதுவாய் நடை போட்டது.  ஆஹா,  இது வடிவேலு மெரினா பீச்சுல ஏறின குதிரை போல இருக்கே என்று நினைத்து நொந்தேன். குதிரை நடக்கும் போது நம் அங்கமெல்லாம் இந்தக் குலுங்கு குலுங்குகிறது. அதை ஓட விட்டு எப்படி போர் எல்லாம் புரிந்தார்கள் என்று வியப்பாய் இருந்தது.  குதிரைக்காரன் திடீர் திடீர் என்று ஏதோ ஒரு இடத்தை காட்டி "இங்கு தான் பாபியின் "ஹம் தும் எக் கம்ரே மே" பாட்டு எடுத்தார்கள், இங்கு தான் இந்தப் படத்தின் பிட்டு எடுத்தார்கள்" என்பது போன்ற சரித்திரக் குறிப்புக்களை அள்ளித் தெளித்துக் கொண்டே வந்தான். எனக்கு டிம்பிள் கபாடியாவின் ஞாபகம் வந்தது! பனிக்காலத்தில் அந்த இடம் முழுதும் பனி உறைந்து வெள்ளையாய் மாறி விடுமாம். அங்கு பனிச்சறுக்கு சொல்லிக் கொடுக்கும் ஒரு பள்ளியும் இருந்தது. அருகில் ஒரு ஆர்மி கேம்ப்பும் இருந்தது. அங்கு ஒரு பெரிய பார்க்கில் இறக்கி விட்டு "போய் சுற்றி பார்த்து விட்டு வாருங்கள்" என்று அனுப்பி விட்டார்கள். அங்கு பல வண்ணத்தில் காஷ்மீரி உடைகள் தொங்கிக் கொண்டிருந்தது. அதை அணிந்து கொண்டு போட்டோ எடுக்க ஐம்பது ரூபாய். காஷ்மீர் வந்ததில் இருந்து, இப்போது தான் ஒரு விஷயம் நூறு ரூபாய்க்கு கீழ் சொல்லி இருக்கிறார்கள். "ரொம்ப சந்தோஷம்" என்று ஆளுக்கு ஒரு உடையை போட்டுக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தோம். பின்னால் பனி மலை சூழ, பச்சைப் புல்வெளியில், கண்ணை பறிக்கும் ஆடையில் தக தகன்னு மின்னினோம். அங்கிருந்து மறுபடியும் குதிரை ஏற்றம்.  காஷ்மீர் டூரின் சிறப்பான ஒரு நாளாய் அன்று மாறிப் போனது. எல்லோரும் மிகவும் குஷியாய் அனுபவித்தோம். தரு தான் மாலையின் எதிர் வெயிலில் வாடி விட்டாள். தியா குதிரையில் தூங்கியே விட்டாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு தொடங்கிய இடத்திற்கு வந்தடைந்தோம்.







ஒரு காஷ்மீரி டீயை [உப்பு டீ] அருந்துவோம் என்று மறுபடியும் அந்த பிரபலமான ஹோட்டல் கதவை தட்டினோம். அப்போதும் ஏதோ ஒரு காரணத்தை சொன்னார்கள். "அட போங்கப்பா" என்று அதே தாபாவில் தஞ்சம் புகுந்தோம். அருமையாய் சுடச் சுட பக்கோடா எல்லாம் போட்டுக் கொடுத்து எங்களை குஷி படுத்தினார்கள். காஷ்மீரி டீ ஒன்றும் எனக்கு சிலாக்கியமாய் படவில்லை. சரி என்று பக்கோடாவை நன்றாய் ஒரு மொக்கு மொக்கிவிட்டு சன்னியை கண்டுபிடித்து வண்டியில் ஏறினோம். வழியில் அழகான இடத்தில் போட்டோ எடுக்க சன்னி வண்டியை நிறுத்தினான். நாங்கள் அப்போது மலையில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தோம். அங்கு ஒரு அழகான பள்ளத்தாக்கு. தூரத்தில் ஒரு மிக பிரம்மாண்டமான பனி மலை. அருமையாய் இருந்தது. குடும்பத்துடன் போட்டோக்களை எடுத்துக் கொண்டு, சன்னியையும் ஒரு போட்டோ க்ளிக்கினோம். [கேட்டுக் கொண்டதிற்கிணங்க]



ஆப்பிள் ட்ரீ ரிசார்ட்டுக்கு வந்து சேர்ந்தோம். அறைகள் தயாராய், தாராளமாய், விஸ்தாரமாய் இருந்தது. ஆளுக்கு ஒரு அறையை பிரித்துக் கொண்டு கீழே இரவுச் சாப்பாட்டுக்குச் சென்றோம். நல்ல உணவு. உணவை முடித்துக் கொண்டு, புல்வெளியில் வந்தோம். என் மாமா மகன் செட்டில்கார்க் ஆடுவோம் என்று சொல்லி அதை எடுத்து வந்தான். நானும் அவனும் விளையாடுவதை தருவால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. எங்கள் கையில் இருந்த மட்டையை அவள் கையில் எடுத்துக் கொண்டு கார்க்கை அதில் வைத்து அவள் எம்பி எம்பி குதித்தாள். ஏதோ அவளுக்கு ஷாக் அடிப்பது போல் அவள் எம்பிக் குதித்தது பார்க்க ஒரே வேடிக்கையாய் இருந்தது. ஒரு அரை மணி நேர போராட்டத்திற்கு பின் அவளிடம் இருந்து வாங்கி நாங்கள் விளையாடுவதற்குள் நன்றாய் இருட்டி விட்டது. சரி காலையில் சீக்கிரம் வந்து விளையாடுவோம் என்று சொல்லி உறங்கப் போனோம்.

சுற்றுவோம்...
0 Responses