"லுடேரா" படத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்துத் தான் இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன். நேற்று மாலை ஷோ அருகில் எங்கும் தென்படவில்லை. இன்று ஒரு படம் பார்த்தாக வேண்டும் என்று மனது அடித்துக் கொண்டது. அலுவலகம் விட்ட வழியிலேயே தியேட்டர்...டிக்கட்டும் எளிதாய் கிடைத்து விடும். உடனடியாய் படம் பார்க்க வேண்டும் என்றால் அங்கு தான் போயாக வேண்டும். அந்தப் படத்தை தான் பார்த்தாக வேண்டும். வேறு வழியே இல்லை! மனதை திடப்படுத்திக் கொண்டேன். கட் பண்ணா...

வெற்றி தியேட்டர், சிங்கம் II! இந்த மாதிரி படங்களுக்கு எவ்வளவு சீப்பாய் முடியுமோ, அவ்வளவு சீப்பாய் முடித்துக் கொள்வது என் வழக்கம். இருந்தும் என்னமோ நேற்று சொகுசாய் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. 150 ரூபாய் டிக்கட் வாங்கிக் கொண்டேன். வண்டி வைத்து விட்டு டோக்கன் வாங்கும்போது என் முன்னாள் இருந்த பெண்மணி டோக்கன் வாங்கிக் கொண்டே தள்ளி நின்ற கணவரிடம் என்னாச்சு, என்னாச்சு, என்னாச்சு என்று கேட்டுக் கொண்டே சென்றார். என்னையும் அறியாமல், "கிரிக்கெட் வெளயாண்டோம்!" என்று சொல்லி விட்டேன். நல்ல வேளை அவர் காதில் விழவில்லை. டோக்கன் கொடுப்பவர் சிரித்துக் கொண்டார். நான் உள்ளே எஸ்கேப்! நல்ல ஏ. சி. போட்டு, ஃபேன் வேறு  போட்டிருந்தார்கள். ஜில்லென்று இருந்தது. பக்கத்தில் ஒரு குடும்பம் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் வீட்டிலிருந்து ஒரு அரிசி மூட்டையை கொண்டு வந்திருந்தார்கள். படம் ஆரம்பிக்கவேயில்லை, அதற்குள், பப்ஸ், சிப்ஸ் என்று போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். பரவாயில்லையே, வீட்டிலிருந்தெல்லாம் எடுத்துட்டு வர அனுமதிக்கிராங்களே இந்த தியேட்டர்ல என்று நினைத்துக் கொண்டேன். படம் ஆரம்பித்தது!

ஒரு பெரிய சிங்கம் உறும, அது அப்படியே கிராபிக்ஸ்சில் இரண்டாய் பிரிந்து, ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்க அப்படியே சிங்கம் II என்ற லோகோவை போட்டார்கள். எனக்கு பகீர் என்றது. கொஞ்சம் அவசரபட்டுட்டோமோ என்று வடிவேலு மாதிரி ஃபீலிங்கோடு படம் பார்க்க ஆரம்பித்தேன்.

படம் ஆரம்பித்தவுடன் ஹோம் மினிஸ்டர், துரைசிங்கத்தை ரோட்டில் வைத்தே "நம்ம பிளான்படி ராஜினாமா பண்ணிட்டீங்க. இனிமே தூத்துக் குடியில அண்டர் கவர்ல இருங்க!" என்று கட்டளை இடுகிறார். இப்படி ஒரு ஹோம் மினிஸ்டர் நமக்கு இல்லாம போயிட்டாரே என்று இருந்தது. கட் பண்ணா, தூத்துக்குடி கடலை ஜிம்மி ஜிப்பில் அப்படியே ஒரு சுற்று சுற்றி ஒரு கப்பலில் வந்து நின்றால் அஞ்சலி தன்னோட இடுப்பை ஆட்ட [க்ளாப்ஸ் அள்ள] ஒரு பாட்டு. "ஆரம்பிச்சிட்டாங்களே!...உனக்கு வேணும்டா" என்று மனசு திட்டியது. சரி, விடு, கேவலமா திட்டி ஒரு போஸ்ட் போட்டா போவுதுன்னு மனசை தேத்திட்டு படம் பார்த்து முடிச்சேன். இப்போ இந்தா இந்த போஸ்ட்!

ஆனா ஒரு சின்ன ட்விஸ்ட்! இந்தப் படத்தை நான் திட்டப் போறதில்லை. ஏனென்றால் படம் பார்த்து முடித்தவுடன் ஹரி என்னை அந்த அளவுக்கு மாற்றி விட்டார். ஒரு வெற்றிப் படத்தை எடுத்து விட்டு, அதை தொடர்ந்து அடுத்த பாகத்தை அதே விதத்தில் எடுப்பது கடினம். ஹரி கனகச்சிதமாய் அதை செய்திருக்கிறார்! உண்மையான சிங்கம் ஹரி தான்! படத்தின் காட்சிகளில் டாடா சுமோக்கள் "எண்பது" கிலோமீட்டர் ஸ்பீடில் பறந்தால், திரைக்கதை ஜெட் ஸ்பீடில் பறக்கிறது. நான் "சி" செண்டருக்குத் தான் படம் எடுக்கிறேன் என்பதில் ஹரி தெளிவாய் இருக்கிறார். அதில் நேர்மையாய் இருக்கிறார், முக்கியமாய் அதை சரியாய் செய்கிறார். வழக்கமான போலீஸ் திருடன் கதை தான் என்றாலும் திரைக்கதையில் நிறைய உழைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

ஹரி சீன்களை  பிடிக்கும் விதம் எப்போதுமே பர பர தான். அது "சாமி"யாய் இருக்கட்டும், "அருளாய்" இருக்கட்டும், "ஐயா"வாய் இருக்கட்டும், சிங்கமாய் இருக்கட்டும்! நானும் திரைக்கதை எல்லாம் எழுதி பார்ப்பதால் சொல்கிறேன், சீன் பிடிப்பது சாதாரண விஷயமே கிடையாது. லைன் பிடித்து விடலாம். ஆனால் அதை படிப்படியாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல, இதுவரை வராத மாதிரி, அதுவும் சுவாரஸ்யமாய் எடுத்துச் செல்லவது மிகக் கடினம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஒரு லவ் சப்ஜக்ட் என்றால் எப்படி காட்சிகளை வைப்பீர்கள்? இதுவரை தமிழ் சினிமாவில் காதலை தவிர்த்து வந்த படங்களை எண்ணி விடலாம். அப்படி இருக்கும்போது இதில் புதிதாய் என்ன செய்வது? எப்படி சுவாரஸ்யம் ஆக்குவது, மண்டை காய்ந்து விடும். காதலுக்கே இப்படி என்றால் திருடன் போலீஸ் கதையில் ஸ்கோப் அதை விட கம்மி. அதனால் தான் சொல்கிறேன் அதிலும், ஹரி தன் படங்களில் கூடிய மட்டும் லாஜிக்குகளை சரியாய் வைப்பார் என்பது என் கருத்து. இந்தப் படத்தையே எடுத்துக் கொள்வோம்.

சிங்கம் பெரிய ஹிட். அதன் அடுத்த பாகம் கொஞ்சம் பெரிய canves ல் இருந்தால் தான் சுவாரஸ்யமாய் இருக்கும். அதற்கு என்ன செய்யலாம்? ஒரு இன்டர்நேஷ னல் கள்ளக்கடத்தல்காரனுக்கும், லோக்கல் தாதாக்களுக்கும் கனெக்ஷன். சென்ற பாகத்தில் துரைசிங்கம் வேலையை விட்டு விட்டார். ஆனால் படம் ஆரம்பித்தவுடன் அவர் அண்டர்கவரில் இருக்கிறார் என்று நம்மை தெளிவு படுத்தி விடுகிறார். ஆயுதக் கடத்தலை பற்றி துப்பு துலக்க ஆரம்பிக்கிறார். ஆனால் அது போதை மருந்து கடத்தலில் சென்று நிற்கிறது. அண்டர்கவரில் இருந்தால், யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி அவர் என்ன வேலை செய்யலாம்? என்.சி.சி. ஆபிசர். முதல் பாகத்தில் சொல்வது போல் பலசரக்குக் கடை வைக்கவில்லை, ஏன் என்றால் அதில் ஸ்கோப் அதிகம் இல்லை. என்.சி.சி. ஆபிசராய் இருக்கும்போது இருக்கும் கெத்து அண்ணாச்சி கடையில் பொட்டலம் மடித்துக் கொண்டிருந்தால் கிடைக்காது. அதோடு போன தடவை அனுஷ்கா மட்டும். இந்த முறை இன்னும் கொஞ்சம் கிளாமர் ஏற்ற வேண்டும், அதற்கு ஹன்சிகா. அவர் வேலை பார்க்கும் பள்ளியில் படிக்கும் மாணவி. அவள் காதலில் விழுவது, அனுஷ்காவுக்கும் இவருக்கும் ஏன் இன்னும் கல்யாணம் ஆகவில்லை, மூன்று லோக்கல் தாதாக்கள், அதில் இருவர் எதிரிகளாய் நடிப்பது, அவர்கள் மூவருக்கும் இன்டர்நேஷனல் தாத்தாவுடன் தொடர்பு. ஒவ்வொன்றாய் துரைசிங்கம் துப்பு துலக்கும் அழகு...ஒவ்வொரு காட்சிக்கும் அப்படி ஒரு முடிச்சு! அப்படி ஒரு வேகம், அப்படி ஒரு சுவாரஸ்யம். என்ன, பிரதீப் இப்படி ஆயிட்டானேன்னு நெனைக்காதீங்க, நான் உலக சினிமாவோடு இதை நிறுத்தி பார்க்கவில்லை. மாஸ் படம் என்று வரும் மரண மொக்கை படங்களுடன் இதை நிறுத்துப் பார்த்தால் இது சூப்பர் படம் தான்!

சூர்யா அபாரமாய் உழைத்திருக்கிறார். துரைசிங்கமாய் விரைப்புடன் அவர் நடப்பது, நடிப்பது கிளாஸ். கிட்டத்தட்ட ஒரு நாற்பது, ஐம்பது பேரை பாய்ந்து பாய்ந்து அடித்து சாய்க்கிறார். ஹன்சிகாவையே தூக்கி விட்டாரே என்று நினைத்தேன், கடைசியில் பார்த்தால் அந்த நைஜீரிய வில்லனையே தூக்கி சுற்றுகிறார்! அடேயப்பா! சாதிக் கலவரத்தின் போது நிலைமை கட்டுக்கடங்காமல் போய் கொண்டிருப்பதை பார்த்து சார்ஜ் எடுத்துக் கொள்ள யுனிஃபார்ம் மாட்டும்போது தியேட்டரில் அத்தனை பேரும் துரைசிங்கமாய் மாறி விடுகிறோம்! இண்டர்வல் ப்ளாக் செம!!

ஹன்சிகா பள்ளி சீருடையில் பாந்தமாய் இருக்கிறார். சூர்யாவை பார்த்து உருகினாலும், கனவில் பாட்டு பாடி உயிரெடுக்கவில்லை. இன்னும் கொஞ்சம் உதட்டசைவில் கவனம் செலுத்தலாம்.

அனுஷ்கா...நான் துரைசிங்கமாய் இருந்தால், அனுஷ்காவை ஓரம்கட்டி விட்டு, ஹன்சிகாவின் காதலை ஏற்றிருப்பேன்! முதல் பாகத்துக்கும் இந்த பாகத்துக்கும் ஏதோ பத்து வருட இடைவெளி மாதிரி இருக்கிறார். பெண்களுக்குத் தான் எவ்வளவு வேகமாக வயதாகிவிடுகிறது. பாவம்!!

சந்தானத்தின் காட்டில் பேய் மழை! "ஒரு வெட்டுக்கு மூன்று துண்டு" என்று இவர் சொல்ல, பதிலுக்கு ஒருவர், " ஒரு வெட்டுக்கு ரெண்டு துண்டு தான்" என்று சொன்னவுடன், சந்தானம் பதிலுக்கு, "நான் வெட்டும்போது அவன் கழுத்துல துண்டு போட்டுருந்தான், அதையும் சேத்து சொன்னேன்!" என்பது கிளாசிக் சந்தானம். "பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே!" என்றால் தியேட்டர் குலுங்குகிறது.

விவேக் இந்தப் பாகத்தில் ரொம்ப அடி வாங்குன செம்பு!

நைஜீரிய வில்லன் நல்ல உடல்மொழி. அவ்வளவு பெரிய வில்லன் துரைசிங்கத்திடம் இவ்வளவு பயப்படுவானா என்று இருந்தது. சிங்கத்திடம் தப்பித்து, கடலுக்குள் செல்லாமல், கரையில் இருந்தே அவர் ஏதாவது செய்திருக்கலாம். இன்னும் சுவாரஸ்யம் கூடி இருக்கும் என்று நினைக்கிறேன்.

மற்றபடி ரகுமான், விஜயகுமார், ராதாரவி, நாசர், அந்த சோப்பு விளம்பரம் ஆண்டி, யுவராணி, சுமித்ரா, நிழல்கள் ரவி ஆல் வெல் பிரசன்ட்!

படத்தில் துரைசிங்கம் டி.எஸ்.பி. படத்தின் இசையும் டி.எஸ்.பி. லெட் சிங்கம் டான்சும், "கண்ணுக்குள்ள கன்னு வச்சி என்னை கொல்லாதே", ஒகே! மற்றபடி இரைச்சல்.

சிங்கம் II எனக்கு ஓகேப்பா!!
2 Responses
  1. Anonymous Says:

    நல்லா எழுதி படம் பார்க்கும் ஆசையை தூண்டி விட்டிங்க. ரிவ்யூ இஸ் டூ குட்.


  2. Prem S Says:

    படம் செம ஸ்பீடு