பள்ளியிலோ கல்லூரியிலோ வாத்தியார்களுக்குத் தெரிந்திருக்க, ஒன்று நன்றாய் படிக்க வேண்டும், இல்லை தருதலையாய் இருக்க வேண்டும்! நான் பள்ளியில் படிக்கும் போது நன்றாய் படிக்கவும் இல்லை; தருதலையாய் திரியவும் இல்லை. பத்தோடு பதினொன்றாக போய் வந்து கொண்டிருந்தேன். ஆனால் கல்லூரிக்குப் போனதும் கொஞ்சம் மாறி விட்டேன். நன்றாய் படிக்க ஆரம்பித்திருப்பேன் என்று நீங்கள் நினைத்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அதற்காக உள்ளங்கையில் ஹன்சை அரைத்து வாயின் ஓரத்தில் அதை போட்டுக் கொள்ளும் அளவுக்கும் போகவில்லை. அப்படிப் போவதற்கான எல்லா தகுதியும் எனக்கு இருந்தது. என்ன சேர்க்கை சரியில்லை [அட ராமா...] இந்தப் பதிவு கீழுள்ள வரிகளைப் படித்ததனால் வந்த விளைவு:

திருச்சி ரேடியோ, ப்ளாசா தியேட்டருக்கு எதிரே இயங்கி வந்த காலத்தில் நான் ஒரே ஒருமுறை ஸ்ரீரங்கத்திலிருந்து `மணிமலர்நிகழ்ச்சியில் பங்கேற்க பள்ளியின் சார்பாக நாற்பது பிள்ளைகளுடன் சென்று வந்தது ஞாபகமிருக்கிறது. ஏதோ ஒரு வார்த்தை ரேடியோவில் படித்ததற்காக எனக்குப் பள்ளியில் ஒரு கதர் துண்டு கொடுத்தார்கள். நான் பள்ளி நாட்களில் வாங்கிய ஒரே பரிசு அது.

இது யார் எழுதியது என்று உங்களுக்கு உடனே புரிந்திருக்கும். நம்ம வாத்தியார் தான்! அட பரவாயில்லையே தமிழ் உரைநடையையே ஒரு புரட்டு புரட்டினவரு ஒரு கதைப் போட்டி, கட்டுரைப் போட்டின்னு ஒரு பரிசும் வாங்கலையே..நம்மளை மாதிரியே இருந்திருக்கிறாரே என்று ஒரு...அதாங்க தமிழ்ல ஒரு அருமையான வார்த்தை வருமே, வேணும்போது கிடைக்காது....இருங்க...! பீலிங்! அவராவது ஒரு துண்டு வாங்கியிருக்கார். நம்ம என்ன வாங்கியிருக்க்கோம்னு யோசிச்சேன். ஹூஹும்! சின்ன வயசிலிருந்து நான் நன்றாய் வரைவேன். பிள்ளையாரை நேரில் பார்த்தது மாதிரி அப்படி அச்சு அசலா வரைவேன். தசாவதாரத்தையும் பேப்பரில் வரைந்து வெட்டி வீட்டின் சுவற்றில் ஒட்டி வைத்திருந்தேன். சோற்றுப் பருக்கைகள் காய்ந்ததும் பரமாத்மா தானாக கழன்று கொண்டார். அதோட ரஜினி நிக்கிற மாதிரி, மல்லாக்க படுத்துருக்குற மாதிரி, குப்புற படுத்துருக்குற மாதிரின்னு வித விதமா வரைவேன். நானும் எனக்குத் தெரிஞ்சி 4, 5 ஓவியப் போட்டியில கலந்துருக்கேன். முடிஞ்சதும் ஒரு சர்டிஃபிக்கேட் கொடுப்பாங்க.. நான் அப்போ இங்கிலீஷ் மீடியம் படிச்சதால, அது கலந்து கொண்டதற்கான பரிசு என்று சர்ட்டிஃபிக்கேட்டில் எழுதியிருந்ததை புரிந்து கொள்ளத் தவறி விட்டேன். சோ, அது படி பாத்தா எனக்கு நினைவு தெரிஞ்சி பள்ளியில் நான் எந்தப் பரிசும் வாங்கினதில்லை.

பள்ளியில் சீண்ட ஆளில்லாமல் இருந்த எனக்கு கல்லூரியில் சேர்ந்ததும் என்னையும் நம்பி ஒரு கூட்டம் சேர்ந்தது. எப்போ பார்த்தாலும் சினிமா, சினிமா பாடல்கள், சினிமா டயலாக்குகள் என்று சுற்றும் என்னைப் பார்த்த என் சீனியர் ஒரு பாரதிராஜாவின் கையில் பாக்யராஜ் கிடைத்ததைப் போல் என்னை அரவணைத்துக் கொண்டார். தமிழ் சினிமாவினால் உருப்புடாம போன கேஸ்களில் அவனும் ஒருவன் என்று நானும் பின்னாளில் தெரிந்து கொண்டேன். எங்கள் திறமையை காலேஜ் அறிய, ஃபிகர்ஸ் அறியக் காட்ட கல்லூரி விழாவின் மூலம் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நானூற்றி இருபது நொடிகள் நடக்கும் ஆஸ் யு லைக் இட் நிகழ்ச்சியில் எங்கள் பெயரையும் கொடுத்தோம். அதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பே கடுமையாய் உழைக்க அரம்பித்தோம். ரங்கீலா பாடல்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த நேரம். யாயிரே யாரே பாட்டுக்கு ஆட ஒரு சீனியர் ஃபிகரை பிடித்தோம். அந்தப் பாட்டின் இடையில் ஒரு குட்டிப் பையன் வந்து 4 லைன் பாடுவான். அந்த இடத்தில் தான் நீங்கள் எங்கள் க்ரியேட்டிவிட்டியை புரிந்து கொள்ள வேண்டும்! அந்தக் குட்டிப் பையனுக்கு பதிலாக அப்பு கமலை அப்படியே கொண்டு வந்தோம். அப்பு கமல் வேஷத்தை நானே ஏற்றிருக்கலாம். இருந்தாலும் நான் சும்மா நின்னாலே அந்த உயரம் தான் இருப்பேன் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். என்னை வாரியணைத்த சீனியர் தான் அந்த வேஷம் கட்டினார். இப்படியாக பாலிவுட்டையும் கோலிவுட்டையும் இணைத்து பிணைத்து ஒரு புதுமையான விருந்து சீ சீ..எனக்கே ஒவராக இருக்கிறது! பாட்டும் ஆட்டமும் பட்டையை கிளப்பியது!

பிரச்சனை என்னவென்றால் அந்தப் பாடல் போக எங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் இன்னும் மிச்சமிருந்தது. அந்த இடத்தை நிரப்புவதற்கு நாங்கள் பட்ட பாடு தான் மேட்டரே! மற்ற க்ரூப் பசங்க எல்லாம் "தங்கச்சி, சட்டத்தோட கண்ல மண்ணைத் தூவி உன்னை யாரும் கெடுக்க முடியாதும்மா, அதுக்கு முன்னாடி நானே உன்னை...அவ்!" என்று கேப்டன் மாதிரி பேசி கதறடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்க மிமிக்ரி செஞ்சா அதோட சேர்ந்து ஒரு க்விஸ் ப்ரோக்ராமும் வைக்க வேண்டி வரும். நாங்களே பேசிட்டு இது யாருன்னு கேட்டு சரியா சொல்றவங்களுக்கு பரிசு கொடுக்க வேண்டியியது தான். அப்படி ஒரு திறமை நம்மகிட்ட... ரிகர்சலின் போது சரி கழுதை இதெல்லாம் வேலைக்கு ஆவாது என்று எண்ணி சின்ன சின்ன ஜோக்ஸாக செய்வோம் என்று பல ஜோக்குகளை ரிகர்சல் செய்தோம். எடுத்துக்காட்டாக...

ஒரு பெண் பாடுகிறாள்: காலையும் நீயே மாலையும் நீயே...நான் கோபமாய் அவளிடம் போய், அப்படியா, "அப்போ மத்தியானம் யாருடீ?" என்று சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டும்! அதற்கு அந்தப் பெண் கண்ணாம்பா ரேஞ்சுக்கு தன் வலது கையை தன் வாயில் குப்புற வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்புறம் ஒரு நேர்முகத் தேர்வில் தேர்வுக்கு வந்தவரிடம் ஃபைலை வாங்கி ஃபைலை மேலாகப் பார்த்து, இந்த மாதிரி 4 பைலை நம்ம ஆபீஸ்லயும் வாங்கி போடுங்க என்று குமாஸ்தாவிடம் சொல்வது! [இதே சீனை ஒரு படத்தில் பின்னாளில் பார்த்தேன்!]

எப்படி ஜோக்ஸ்!

இன்னும் என்னன்னமோ ரிகர்சல் செய்தோம். மறந்து விட்டேன். கடைசியில் ஒரு மொக்கை நாடகம் ஒன்றை போட்டு ஈடு கட்டினோம். அதில் என் நடிப்பை பாத்திருந்தீங்கன்னா சின்ன வயசு சிவாஜி உங்க கண்ல ஒரு நிமிஷம் வந்து போயிருப்பாரு!!! எங்க மொக்கை தாங்காம பசங்க போட்ட கூச்சல்ல முதல் வரிசை தவிர வேற யாருக்கும் நாங்க என்ன செய்றோம்னு புரியலை. நல்ல வேலையா ஜட்ஜஸ் எல்லாம் முன் வரிசைல இருந்ததால எங்களுக்கு 2ம் பரிசு கிடைச்சது! அந்தப் பரிசு கண்டிப்பா அந்த அப்பு வேஷத்துக்குத் தான்! மனுஷன் இன்னைக்கும் அதே வேஷத்தை போட்டு பரிசை அள்ளிட்டு இருக்காரு! என் வாழ்நாள்ல நான் வாங்கின முதல் பரிசே இரண்டாம் பரிசு, அடேடே!!

3 Responses
  1. Sivakumar Says:

    அகிலா அக்கா வீணை... அட ஹிந்தியில சித்தாரு வாசிச்சத மறந்துட்ட. அந்த கிடார் தான் நமக்கு பரிசு கிடைக்கிறதுக்கு வழி வகுத்தது.

    இன்னொரு ஜோக்... கீழே கிடக்கும் மாட்டு சாணியை என்னன்னு பாத்து அத எடுத்து நக்கி பாத்து... "சீ....சாணி... நல்ல வேளை நான் மிதிக்கல்ல" ன்னு சொல்றது.


  2. Anonymous Says:

    "முதல் பரிசே ரெண்டாம் பரிசு" டைட்டில் ஆரம்பிச்சு கடைசி வரைக்கும், கலக்கல் பதிவு; காலேஜுக்கு மறுபடியும் போயிட்டு வந்த மாதிரி இருந்துச்சு; என் வொய்ஃப்கிட்ட அந்த நாடகத்தில நான் சொன்ன டயலாக் வச்சிதான் செகண்ட் பிரைஸ் குடுத்ததா சொல்லி வச்சிருக்கேன். அவ்வ்வ்!

    >> அகிலா அக்கா வீணை... அட ஹிந்தியில சித்தாரு வாசிச்சத மறந்துட்ட. அந்த கிடார் தான் நமக்கு பரிசு கிடைக்கிறதுக்கு வழி வகுத்தது.
    ஆமா ஆமா! "புல்வெளி புல்வெளி தன்னில்..." வாசிச்சங்களே!

    -
    வெங்கடேஷ்


  3. venkatesh,

    thanks da, enna flow okva? hehehe...

    ya siva, akilavai orediya maranthutten.

    pradeep