மலையாளப் படங்களைப் பார்க்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை. புரியாதோ என்று ஒரு தயக்கம். அந்தப் படங்கள்ல புரிய என்ன இருக்கு, ஜஸ்ட் என் ஜாய் என்று கண்ணைக் காட்டாதீர்கள். நான் சொல்வது "அந்த" மாதிரி படங்களை அல்ல. மலையாள சினிமாவை சிலாகித்து அடிக்கடி பத்திரிக்கைகளில் படிப்பதுண்டு. இப்போது தமிழ் சினிமாவைப் பார்த்து அவர்களும் கெட்டுப் போய் விட்டார்கள் என்ற போதிலும், சீனிவாசன், ப்ளெஸ்ஸி, ஆடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் நல்ல படங்களை அவ்வப்போது தந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நேற்று தற்செயலாய் கமல் (ஹாசன் அல்ல) இயக்கிய கருத்த பக்க்ஷிகள் பார்த்தேன். அந்நியனுக்குப் பிறகோ என்னமோ, விக்ரம் இந்தப் படத்தை ரீமேக் செய்து நடிக்கப் போகிறார் என்று படித்ததாய் ஞாபகம். அது கடைசியில் நடக்கவே இல்லை. அப்போதிருந்தே இதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேற்று அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது. அதிலும் ஆன்லைனில் சப் டைட்டிலோடு இருந்தது மேலும் வசதியானது.



முருகன் தமிழ்நாட்டிலிருந்து பிழைப்புத் தேடி 15 வயதில் கேரளா வந்து தன் மூன்று குழந்தைகளுடன் வீடுகளில் சென்று இஸ்திரி செய்து கொடுத்து பிழைக்கிறான். அதில் கடைசிக் குழந்தை பிறவியிலேயே கண் பார்வை இழந்தவள். அவன் மனைவி வயிற்று வலியால் இறந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் குடும்பத்தோடு ஒரு ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி உள்ள ஒரு சேரியில் வாழ்கிறான். அவர்களைப் போலவே கஷ்டப்படும் அக்கம் பக்கத்துக்காரர்கள். அங்கே இருக்கும் ஒரு பிச்சைக்காரிக்கு (பூங்கொடி) அந்தக் குழந்தைகளின் மீது ஒரு அலாதிப் பிரியம். ஏழைகளுக்குத் துணை ஏழைகள் தானே! அவன் இஸ்திரி போட்டுக் கொடுக்கும் ஒரு பணக்கார வீட்டில் பம்பாயிலிருந்து சுவர்னா வந்து சேர்கிறாள். அவள் ஒரு தீராத நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள், வாழ்வின் கடைசி காலங்களை தன் சொந்த மண்ணில் கழிப்பதற்காக அங்கு வந்து சேர்கிறாள். அங்கு அவளுக்கு மல்லியின் பரிச்சயம் கிடைக்கிறது. அந்தப் பிஞுக் குழந்தைக்கு இந்த உலகத்தைக் காண வேண்டும் என்ற ஆவலைப் புரிந்து கொண்ட சுவர்னா, தான் இறந்ததும் தன் கண்ணை இவளுக்குக் கொடுக்க வேண்டும் என்று எழுதிக் கொடுக்கிறாள். சுவர்னா சீக்கிரம் செத்துப் போக வேண்டும் என்று மல்லியின் அண்ணன் ஆன்டவனைப் பிரார்த்திக்கிறான். இதற்கிடையில் ஒரு கலவரத்தில், முருகனின் இஸ்திரி பெட்டியையும், தள்ளு வண்டியையும் கும்பல் ஒன்று கொளுத்தி விடுகிறது. வாடிக்கையாய் இஸ்திரி போட்டுக் கொடுக்கும் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெய்ன்ட் செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. மூன்று பிள்ளைகளும் பசியால் துடிப்பது பொறுக்காமல் சலவைத் தொழிலாளியிடம் குறைந்த சம்பளத்தில் வேலைக்குப் போகிறான். பூங்கொடி விளையாட்டாய் மல்லியைக் கூட்டிக் கொண்டு, அவளையும் பிச்சை எடுக்க வைத்து எல்லோருக்கும் உணவு கொண்டு வருகிறாள். இதை அறிந்த முருகன் ஆத்திரம் கொண்டு அவளை அடித்துத் துரத்துகிறான். பூங்கொடி மல்லியை கண் பார்வையற்றவள் என்பதால் தான் பிச்சை எடுக்க அழைத்துச் சென்றாள் என்பதை தாங்க முடியாமல் வருந்துகிறான்.


I N T E R V A L


ஏற்கனவே வாங்கிய கடன் சுமை கழுத்தை நெறிக்க அந்த சலவைத் தொழிலில் முதலாளியின் ஆலோசனைப் படி இஸ்திரி வண்டி வைத்துக் கொண்டு அதை வைத்து வேலைக்குப் போகாமல் தண்ணி அடித்துக் கொண்டு ஊர் சுற்றும் ஒருவனிடம் சென்று அந்த வண்டியை வாடகை எடுத்துக் கொண்டு வேலையைத் தொடர்கிறான். ஒரு சமயம் சுவர்னாவின் பிறந்த நாளை முன்னிட்டு முருகனின் குடும்பத்தை அழைத்து விருந்து கொடுக்கிறார்கள். அப்போது சுவர்னா முருகனின் மனைவியைப் பற்றி விசாரிக்கிறாள், அவள் வயிற்று வலியால் இறந்ததாகவும், தமிழ்நாட்டில் சிதம்பரம் பக்கத்தில் ஒரு குகை இருப்பதாகவும், அங்கு சென்று வந்தால் தீராத நோயும் தீரும் என்றும், அவள் அங்கு சென்று வர வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறான். அதை நம்பாததால் தான் தன் மனைவியைப் பறி கொடுத்ததாகவும் சொல்கிறான். சுவர்னாவுக்கு அதில் நம்பிக்கை இல்லாத போதும், அவன் கேட்டுக் கொண்டதற்காக அவனையும் அவன் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு அங்கு சென்று வருகிறாள். ஒரு சமயம், முருகனிடம் தன் வண்டியை வாடகைக்கு விட்ட குடிகாரன், முருகன் வாடகையை தன்னிடம் தராமல் தன் மனைவியிடம் தருவதால் அவர்கள் இருவரையும் சந்தேகித்து முருகனிடம் விசாரிக்கும் போது ஆத்திரத்தில் முருகனை கத்தியால் குத்தி விடுகிறான். இதற்கிடையில், சுவர்னாவின் உடல் நலம் தேறி வருவதாயும், இனி பயப்படத் தேவையில்லையென்றும் அவளின் ரிப்போர்ட் பார்த்த டாக்டர் கூறி விடுகிறார். இதைக் கேட்டு அளவில்லா மகிழ்ச்சியடையும் சுவர்னா, சிறிது நேரத்தில் மல்லிக்குத் தான் கொடுத்த வாக்கை நினைத்தும், அவளுக்கு பார்வை கிடைக்கப் போவதாய் ஆசையை உண்டாக்கியதை நினைத்து குற்ற உணர்வு கொள்கிறாள். முருகனின் நிலையை கேள்விப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தாலும், அவள் உள்ளே செல்லாமல் அவன் செலவுக்குப் பணத்தை மட்டும் கொடுத்து அனுப்புகிறாள். விஷயத்தைக் கேள்விப்பட்ட முருகன் குணமானதும், நேராய் சுவர்னாவைப் பார்க்க வீட்டுக்கு வருகிறான். ஆனால் அவள் ஏற்கனவே பம்பாய் சென்று விட்டதால் அவனால் பார்க்க முடியாமல் போய் விடுகிறது. அவளின் குற்ற உணர்வை அறிந்த முருகன் அவள் நன்றாய் இருந்தால் போதும், எங்களுக்கு கண் தேவையில்லை என்று சொல்லிச் சென்று விடுகிறான். இந்தக் கத்திக் குத்து சம்பவத்தால் மனமொடிந்த முருகன், இங்கு குழந்தைகளை வைத்துக் கஷ்டப்படுவதை விட, சொந்த நாட்டுக்கே சென்று விடலாம், தனக்கு ஏதாவது கஷ்டம் வந்தாலும் அங்கு சொந்த பந்தங்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று முடிவெடுத்து தன் சொந்த நாட்டிற்குச் செல்லத் தயாராகிறான். இவர்கள் போவதை காணப் பொறுக்காமல் வாடி நிற்கும் பூங்கொடியிடம், நீயும் என்னுடன் வந்து விடு என்றவுடன் அவளும் துள்ளிக் குதித்துக் கொண்டு புறப்படுகிறாள். பேருந்து நிலையம் சென்றவுடன் சுவர்னா வீட்டில் சொல்லாமல் வந்தது ஞாபகம் வர, அவன் மட்டும் அங்கு போகிறான். அங்கே சுவர்னா இறந்து போயிருப்பதைப் பார்க்கிறான். சுவர்னாவின் கணவன் கீழ் சாதிப் பயலுக்கு சுவர்னாவின் கண்ணை தனமாகத் தர முடியாது என்று கூறிவிட்டதாய் அவன் அறிகிறான். ஒன்றும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டுச் செல்கிறான். பேருந்தில் ஏறி அமர்ந்ததும் மல்லி சுவர்னாவைப் பற்றி விசாரிக்கிறாள். முருகன் அவள் செளக்கியமாய் இருப்பதாய் பொய் சொல்கிறான். மல்லி ஜன்னலின் வழியே காற்றைக் கையில் பிடிக்க முயல்வதுடன் படம் முடிகிறது!!

நல்ல கதை தான் ஹீரோக்களும் பேட்டி கொடுத்து விட்டு, மாஸ் என்றும், சினிமா ஒரு வியாபாரம் என்றும் தப்பித்துக் கொண்டு கண்ட கன்றாவிகளில் நடிக்கிறார்களே, அவர்கள் பார்க்க வேண்டும் இந்தப் படத்தை. இத்தனை எளிமையான, ஆத்மார்த்தமான கதையை உருவாக்கிய கமலை பாராட்டியே ஆக வேண்டும்.

இஸ்திரி போட்டுக் கொடுத்து மூன்று குழந்தைகளுடன் சேரியில் வாழும் ஒரு சாதாரண கதாப்பாத்திரத்தில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாய் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராய் திகழும் மம்மூட்டி நடிக்கிறார். ஒரு அழுக்கு பிச்சைக்காரியாய் பத்மப்ரியா நடிக்கிறார். நம் ஊரில் ஒரு அருமையான நடிகரை சூப்பர் ஸ்டார் ஆக்கி விட்டு சந்திரமுகியும், சிவாஜியும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதில் குசேலன் படத்தில் கடைசி அரை மணி நேரம் ரஜினி என்ன ஒரு அற்புதமான நடிப்பு என்று சிலாகித்துக் கொள்கிறோம். பூஜாவை பிச்சைக்காரியாய் பால வாழ வைத்திருக்கிறார் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். மலையாள சினிமாவில் அவர்கள் இதையெல்லாம் போகிற போக்கில் செய்கிறார்கள் என்று எனக்குப் படுகிறது.

படத்தில் ஒரு காட்சியில் முருகனின் மகன் பள்ளியில் ஒரு பையனை அடித்து விடுகிறான். வாத்தியாரின் புகாரைக் கேட்ட முருகன் ஏன் அடித்தாய் என்று பையனை கேட்கிறான். அவன் ரஜினியை திட்டிட்டான்பா என்கிறான் ஆவேசமாய். இதைக் கேட்ட முருகன் வாத்தியாரிடம், ஐய்யோ, ரஜினியை எப்படிங்க திட்டலாம், அவர் எங்களுக்கு சாமி மாதிரி, அதான் என் மகன் அடிச்சுருக்கான் என்று சொல்கிறான். தமிழ்நாட்டில் சினிமா என்பது ஒரு கலாச்சாரம் என்று இயக்குநர் நன்றாய் நக்கலடித்திருக்கிறார்.

படத்தில் சின்ன சின்ன விஷயங்கள் அழகாய் இருந்தன. அப்பா, அப்பா என்றூ சதா அழைக்கும் மல்லிக்கு ஏன் கண்ணு என்று வினவும் முருகனின் பாங்கு, நட்சத்திரம் இருக்கா? என்னை பாக்குதா? என்று ஒரு குழந்தைக்குரிய குறுகுறுப்பு, யார் என்ன கொடுத்தாலும், கூப்பிடாலும், "அப்பா" என்று ஒரு முறை அனுமதி கேட்கும் விதம், சந்திரமுகி படத்திற்குச் சென்று பார்க்க முடியாமல் ரஜினி வேஷ்டியா பேண்டா? ஜோதிகா சேலையா? அழகா இருக்காங்களா என்ற எல்லா அசட்டுக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் முருகனின் வேடத்தில் ஒரு பாசமுள்ள தந்தையை மம்மூட்டி நம் கண் முன் நிறுத்துகிறார். ஆனால் கண் தெரியாத பெண் என்பதற்காக அவள் எதை தொட்டாலும் புன்னகை புரிந்து கொண்டே இருப்பது உறுத்துகிறது.

பத்மப்ரியாவுக்கு சுட்டித் தனமான பிச்சைக்காரி வேடம். பொருத்தமாய் இருக்கிறார். அடிக்கடி குறும்பாய் சிரிக்கிறார். முருகனை அண்ணா என்று அழைக்கிறார். அவர் கூப்பிட்டதும் வெட்கப்பட்டுக் கொண்டே அவருடன் செல்கிறார். அந்த வெட்கத்திற்கும், அண்ணா என்று அழைத்ததற்கும் சம்மந்தம்மில்லை. அது தான் புரியவில்லை. இருந்தாலும் முருகனின் மேல் பூங்கொடி ஒருதலை காதல் கொள்கிறாள் போன்ற அசட்டுத்தனம் இல்லாதது ஆறுதல்.

சுவர்னாவாய் வரும் மீனா அதிக மிகையில்லாமல் சொன்னதை ஒழுங்காய் செய்திருக்கிறார். நோய்வாய்பட்ட தெளிவில்லாத முகம் சரியாய் இருந்தது. மேக்கப்பா அல்லது இயற்கை அழகா? அவருக்கு என்ன வியாதி என்று சொல்லாமல் விட்டது நன்றாகவே இருந்தது. அவர் கேட்கும் லதா மங்கேஷ்கரின் பாடல்கள் அருமையாய் இருந்தது.

படத்தில் இசையும் ஒளிப்பதிவும் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த மாதிரி படங்களுக்கு அவைகளின் இருப்பு தெரியவேண்டியதில்லை. அப்படியென்றால் சரியாய் தான் இருக்கிறது.


இந்தப் படம் 2006ம் ஆண்டின் சிறந்த குடும்பப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறது. மம்மூட்டி, பத்மப்ரியாவுக்கு இதற்காக 2007ம் ஆண்டு ஃப்லிம் ஃபேர் அவார்டும் கிடைத்தது.


ஒரு நிறைவான படம்!



இனிமே நான் ரஜினி கட்சி இல்லை. ப்ரூஸ்லீ கட்சி என்று புரியாத ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் என் அண்ணன். நான் ஆடிப்போய்விட்டேன். இத்தனைக்கும் அவர் வீட்டில் போன வருடத்து பைண்டிங் பண்ணிய புத்தகத்தின் ஒரு பக்க அட்டையின் நடுவில் நீளச் சதுரமாய் வெட்டித் துளை போட்டு, அதில் பல விதமான ரஜினி படங்களின் ஃப்லிம்களைச் சொருகி வெயில் விழும் இடத்தில் ஒரு கண்ணாடியை வைத்து (கண்ணாடிய வெயில்ல காட்டினா அதோட பாதரசம் போயிடும் ஏன்டா இப்படி பண்றீங்க...அம்மாவை பொருட்படுத்தாது)அந்த ஃப்லிம் அட்டையை கண்ணாடி முன்பு காட்டி அதற்கு முன் ஒரு 15 பைசா லென்ஸை வைத்தால் எதிரில் இருக்கும் சுவரில் மங்கலாய் ஜெகஜ்ஜோதியாய் ரஜினி தெரிவார். இனிமேல் அந்த படங்களை எல்லாம் ஓட்ட முடியாதா? அவர் வீட்டில் இருக்கும் மூன்று முகம் வசனத்தை டேப்பில் போட்டுக் கேட்க முடியாதா? ரஜினி படம் போட்ட பலவித பொங்கல் வாழ்த்துக்கள் என்ன ஆகும்? ரஜினி போடுவது போலவே அதே டிசைனில் சட்டை போடுவாரே..இனிமேல் அவ்வளவு தானா? இவருக்கு அப்புறம் அந்த சொத்தெல்லாம் எனக்குத் தான் என்று நினைத்தேனே இப்படி அதில் மண்ணள்ளி போட்டு விட்டாரே என்று ஒரே கவலை எனக்கு. இனிமேல் நீயும் உன் தம்பியும் ரஜினி கட்சி இல்லை;ப்ரூஸ்லீ கட்சி தான்! என்ன? என்றார் என்னை பார்த்து. ப்ரூஸ்லீன்னா யாருண்ணே என்றேன். அப்போது அவர் பீரோவின் மேல் ஒட்டியிருந்த ஒரு படத்தை காட்டினார். அதில் ஒருவர் தன் காலைத் தூக்கி நெஞ்சு பூரா முடி உள்ள ஒருவரின் கழுத்தை நோக்கி நீட்டியிருந்தார். அவர் கண்ணில் ஒரு குரூரம். அப்படித் தான் ப்ரூஸ்லீ எனக்கு அறிமுகமானார்.

அப்போது என் அண்ணன் வீட்டில் தான் டீவியும், டெக்கும் இருந்தது. (படம் பார்க்கும் போது அடிக்கடி கோடு வரும், ஹெட்டைத் திறந்து க்ளீன் செய்து செய்து பார்க்க வேண்டும்) மேலுள்ள சம்பவத்திற்குப் பிறகு அவர் பார்த்ததெல்லாம் ப்ரூஸ்லீ படங்கள் தான். ப்ரூஸ்லீ ஒரு கருப்பண்ணசாமி போல் என் அண்ணனுக்குள் வந்து சாமியாடினார். கராத்தே க்ளாஸில் சேர்ந்தார். அந்த கருப்பண்ணசாமியை கொஞ்சம் கொஞ்சமாய் எனக்கும் என் தம்பிக்கும் ஏற்றி விட்டார். ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன் நான் முதலில் பார்த்த ப்ரூஸ்லி படம். அவருடைய ஒவ்வொரு மிரட்டல் அடியில் ரஜினி கொஞ்சம் தள்ளித் தான் போய் விட்டார். அதன் பிறகு நானும் என் தம்பியும் போடும் டிஷ்யும் டிஷ்யும் சண்டைகள் மறைந்து ஊஊஊஊஊஊஊ....ஈஈஈஈஈஈஈ என்று ஊளைச் சத்தம் சேர்ந்தது. அம்மா என் அண்ணனைத் திட்டினாள்.



ப்ரூஸ்லி 1940ம் ஆண்டில் சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார். இருந்தும் அவரின் தந்தையார் சைனீஸ் ஒபேராவில் ஒரு பாடகராய் இருந்தார். அவர் அப்போது ஹாங்காங்கில் சுற்றுப் பயணம் கொண்டதால், அவருடைய வளர்ப்பு அங்கு தொடங்கியது. ப்ரூஸ்லீ ஐந்து வயதிலிருந்தே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தன்னுடைய 13 வது வயதில் முறையாய் தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். அவருடைய கோபமும், வேகமும் பல வித தெருச் சண்டைகளுக்கு காரணமாய் அமைந்தன. இதனால் பயந்த அவர் பெற்றோர் அவருடைய 18 வயதில் அமேரிக்காவில் வாழும் உறவினரின் உணவு விடுதியில் வேலைக்காக அவரை அனுப்பி வைத்தனர். ப்ரூஸ்லீ சியாடிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம் படித்தார். அதே பல்கலைக்கழகத்தில் லின்டாவைச் சந்தித்து காதலித்து மணந்தார். அப்போதே அவர் தனியாய் ஒரு பள்ளி அமைத்து அங்கிருக்கும் மாணவர்களுக்கு தற்காப்புக் கலைகளின் ஒன்றான குங்ஃபு வை கற்றுத் தர ஆரம்பித்தார். சீனாவில் இவையெல்லாம் சீனாவைச் சேர்ந்தவனுக்குத் தான் கற்றுக் கொடுப்பார்கள். ஆனால் ப்ரூஸ்லீ எந்த வித பாரபட்சமும் இல்லாமல் எல்லோருக்கும் சொல்லித் தந்தார். இதனால் அமேரிக்காவில் இருக்கும் பிற தற்காப்புக் கலை நிபுணர்களிடம் ப்ரூஸ்லீ பிரபலமானார். தற்காப்புக் கலைகளுக்கான ஒரு விழாவில் ப்ரூஸ்லி சிறப்பு விருந்தினராய் கலந்து கொண்ட இடத்தில் ஹாலிவுட்டின் ஹேர்ஸ்டைலிஸ்ட் ஜேயின் தொடர்பு கிடைத்தது. அவர் ப்ரூஸ்லீயை ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக சிபாரிசு செய்தார். தி க்ரீன் கார்னெட் என்ற அந்த ஷோவில் ஸ்கிரீன் டெஸ்டில் ப்ரூஸ்லீ தேர்வாகி அந்தத் தொடரில் நடிக்க ஆரம்பித்தார்.

சில பல காரணங்களால் அந்த நிகழ்ச்சி பாதியிலேயே நின்று விட்டது. இதனிடையில் ப்ரூஸ்லீ தன்னுடைய அனுபவத்தைக் கொண்டும், இடைவிடாத பயிற்ச்சியினாலும் பல வித உக்திகளை புகுத்தி ஜீட் குன் டோ என்ற ஒரு புது விதமான யுக்தியை உண்டாக்கினார். அவருக்கு ஹாலிவுட் படங்களில் அவ்வப்போது சிறு சிறு வேடங்களே கிடைத்தன.

அவருடயை நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி தன்னுடைய திறமையை நிரூபிக்கும் விதமாக ஒரு படத்தை எடுத்து வர அவர் ஹாங்காங் சென்றார். அங்கே ப்ரூஸ்லியின் திறமையை பார்த்து வியந்த தயாரிப்பாளர் ஒருவர், அவரை கதாநாயகனாக்கி "பிக் பாஸ்" படத்தை எடுத்தார். மிகச் சிறிய பொருட் செலவில் தாய்லாந்தில் ஒரு கிராமத்தில் அதன் படப்பிடிப்பு நடந்தது. அந்தப் படம் வெளி வந்து அது வரை ஓடிய அனைத்து சீன படங்களின் வசூலையும் முறியடித்தது. ஒரே நாளில் ப்ரூஸ்லீ நட்சத்திர அந்தஸ்தை எய்தினார். அதன் பிறகு வந்த ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி, ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன் ப்ரூஸ்லீயை வெற்றியை பறை சாற்றின. அதன் சத்தம் ஹாலிவுட்டின் காதிலும் லேசாய் விழுந்ததில், ப்ரூஸ்லீயை வைத்து என்டர் தி ட்ராகன் என்ற படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படம் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷனில் இரவு பகலாய் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது ப்ரூஸ்லீயின் உடல்நிலை மோசமானது. ஜூலை 20, 1973ம் நாள் தலை வலிக்காக ஒரு மாத்திரை போட்டுக் கொண்டு தூங்கச் சென்றவர், மாத்திரையினால் மூளையில் ஏற்பட்ட அலர்ஜியின் காரணமாக செரிப்ரல் எடீமா உண்டாகி இறந்து போனார். நேதாஜியின் இருப்பைப் பற்றியும், இறப்பைப் பற்றியும் இன்றும் உலவும் வதந்திகளைப் போல் இவருடைய மரணமும் பல விதமான வதந்தைகளைக் கொண்டது. ப்ரூஸ்லியின் மரணத்திற்குப் பிறகு வெளி வந்த என்டர் தி ட்ராகன் ஹாலிவுட்டிலும் பெரும் வெற்றி பெற்றது.

ப்ரூஸ்லியைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்:

ப்ரூஸ்லீயின் உயரம் 5.7, ஆனால் அவர் இறந்த போது அவரின் எடை 58 கிலோ தான்.

ஒரு பயிற்சியின் போது அவருடைய முதுகுத் தண்டில் பயங்கரமான அடி விழுந்தது. இனிமேல் அவர் எழுந்து நடக்க முடியாது என்றும் தற்காப்புக் கலைப் பயிற்சிகளை செய்ய முடியாது என்றும் டாக்டர்கள் சொல்லியும் அதை ஒரு துளி கூட நம்பாமல் தன் சுய முயற்சியாலும், பயிற்சியாலும் மீண்டு வந்து காட்டினார்.

ப்ரூஸ்லீயின் வீட்டில் இருந்த நூலகத்தில் அனைத்து வகையான தற்காப்புக் கலைகளைப் பற்றியும், தத்துவங்களைப் பற்றியும் கிட்டத்தட்ட 2,500 புத்தகங்களை வைத்திருந்தார்.

ப்ரூஸ்லீ ஒற்றைக் கையில் இரண்டே விரல்களை (கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் உபயோகித்து) வைத்து தண்டால் எடுப்பார்.

ப்ரூஸ்லீ அவரின் வேகத்தை மற்றவருக்கு செய்து காட்ட சில யுக்திகளை கையாண்டார். அவரால் எதிராளியின் கையில் இருந்த நாணயத்தை அவர் கையை மூடுவதற்குள் எடுத்து விட முடியும்.

ப்ரூஸ்லீ ஒரு இன்ச் தூரத்தில் இருந்து குத்தும் ஒரு குத்து கூட எதிராளியை நிலை குழையச் செய்யும். (படம் பார்க்க) இத்தனை குறைந்த தூரத்தில் அத்தனை வேகம் ஒரு துப்பாக்கியிலிருந்து புறப்படும் ஒரு குண்டுக்குத் தான் இருக்க முடியும்.

ப்ரூஸ்லீயின் வேகத்தை காமெராவின் 24 ஃப்ரேம்களில் அடக்க முடியாமல் 32 ஃப்ரேம்களைக் கொண்டு படம் பிடித்தனர்.

ப்ரூஸ்லீயின் பிரபலமான தத்துவம்.

Be formless... shapeless, like water. If you put water into a cup, it becomes the cup. You put water into a bottle; it becomes the bottle. You put it into a teapot; it becomes the teapot. Water can flow, or it can crash. Be water, my friend...


ப்ரூஸ்லீ இறந்து இத்தனை ஆண்டுகள் கழிந்தும், உலகின் எந்த மூலையில் இருக்கும் குழந்தைக்கும் அதனுடைய பத்து வயதிற்குள் அவரின் அறிமுகம் எப்படியோ கிடைத்து விடும் என்று தோன்றுகிறது. அந்த வயதில் அவர் ஏற்படுத்தும் தாக்கம் வாழ்க்கை முழுவது தங்கி விடுகிறது. பிறவிக் கலைஞர்களுக்கு நீண்ட ஆயுள் தேவையில்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் ஒரு புயலென வந்து இந்த உலகுக்குத் தம் பங்கைச் செலுத்தி விட்டு சென்று விடுகிறார்கள். இன்னும் சில காலம் அவர்கள் வாழ்ந்திருக்கலாமே என்று நம்மை ஏங்க விட்டுச் சென்று விடுகிறார்கள். சார்லி சாப்ளீன் 88 ஆண்டுகள் வரை உயிர் வாழாமல், இளம் வயதில் இறந்திருந்தால் அவருடைய பேரும் புகழும் குறைந்திருக்குமா என்ன?

தலைப்பே சொல்லிவிட்டது.

சாலைக் குறிகளைப் பற்றி 10 கேள்விகள். கண்டிப்பாய் 10 கேள்விக்கும் சரியான விடை கொடுக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால், அடுத்த பரிட்சை, சாலை விதிகளைப் பற்றியது. 35 மைல் வேகத்தில் செல்லும் வண்டியை ப்ரேக் பிடித்தால் எத்தனை அடிகள் தள்ளி நிற்கும்? விர்ஜினியாவில் காரோட்டும் போது அனுமதிக்கப்பட்ட மதுவின் அளவு என்ன? இப்படியாக ஒரு 26 கேள்விகள். இதில் 80 சதவிகிதம் தேர்ச்சி பெற வேண்டும். பள்ளியில் படிக்கும் போது ஆங்கிலத்தில் வொர்க் புக் என்று ஒன்று கொடுப்பார்களே, அதைப் போல் ஒன்று கொடுத்து படிச்சு பாஸ் பண்ணிட்டு வா, அப்புறம் ட்ரைவிங் கத்துத் தர்றேன் என்று அனுப்பி விட்டார்கள். நானும் இதெல்லாம் சப்பை மேட்டர் என்று நினைத்து, அந்த புக்கை அப்படியே சில முறை புரட்டி விட்டு, இணையத்தில் உள்ள மாதிரி தேர்வில் ஒவ்வொரு முறையும் அநாயசமாய் நூற்றுக்கு நூறு வாங்கி அதே கெத்துடன் போன வாரம் தேர்வெழுதி, அநியாயமாய் ஃபெயில் ஆனேன்!

விடுங்க சகா, இதெல்லாம் இங்கே சகஜம்...அப்படியே தட்டி விட்டுட்டு போயிட்டே இருக்கணும் என்று இங்கு அனுபவம் உள்ளவர்கள் அறிவுரை கூறினார்கள். நான் சென்னையிலிருந்து வரும்போது காருக்கான லைசன்சை எடுத்துக் கொண்டு தான் வந்தேன். எல்.எல்.ஆர். எடுக்க இப்படித் தான் ஒரு தேர்வு எழுத வேண்டியிருந்தது. நானும் தலையில் எண்ணையெல்லாம் தடவி உச்சி எடுத்து நெத்தியில் விபூதி குங்குமம் எல்லாம் இட்டுக் கொண்டு தேர்வெழுத போய் சேர்ந்தேன். என்னை ஒரு கணினிக்கு முன்னால் உட்கார வைத்தார்கள். திக் திக் என்றது. 10 பேருக்கு பதில் சொல்லிக் கொண்டே ஒருவர் கணினியில் என்னவோ செய்து எல்லா கேள்விகளையும் கொண்டு வந்தார். நான் முதல் கேள்வி படித்து நான்கில் எது விடை என்று தேடிக் கொண்டிருந்த போது வேறு பத்து பேருக்கு பதில் சொல்லிக் கொண்டே அவர் எல்லா கேள்விகளுக்கும் பதில் தட்டிக் கொண்டே போனார். 5 நிமிடத்தில் கணினி பச்சைக் கலரில் நான் தேர்வில் வெற்றி பெற்றதாக முட்டாள்தனமாய் என்னை வாழ்த்தியது. அந்த பத்து பேருடன் நானும் சேர்ந்து கொண்டு, சார் நான்ல எழுதனும், நீங்க என்று இழுத்தேன். நீங்க எழுதுவீங்க, அப்புறம் ஃபெயில் ஆவீங்க, அப்புறம் மறுபடியும் வரணும்? எதுக்கு சார்? டைம் வேஸ்ட் தானே என்றார். நீங்களே சொல்லுங்கள்? நம் இந்தியர்களைப் போல் அமேரிக்கர்கள் எப்போது நேரத்தின் மதிப்பை உணரப் போகிறார்கள்? ஹைய்யோ ஹைய்யோ!!

அலுவலகத்தில் இருக்கும் ஒரு புண்ணியவான் மூலம் நூலகம் ஒன்றில் சேர்ந்து விட்டேன். ஒரு ஐடி கார்டையும், அட்ரஸ் ப்ரூஃபையும் கொடுத்தால் அந்த அழகான பெண் சிரித்துக் கொண்டே பைசா செலவில்லாமல் யாரையும் மெம்பர் ஆக்கி விடுகிறார். சொன்னால் நம்ப மாட்டீர்கள். ரயில்வே ஸ்டேஷனில் எடை பார்க்கும் போது வரும் அட்டையை போல் (பார் கோட் இருக்கிறது) அது இருக்கிறது. அந்த அட்டை ஒன்றுக்கு புத்தகமோ, ஒலி புத்தகமோ, பத்திரிக்கையோ, சீடீயோ, டீவிடீயோ இப்படியாக ஐம்பது எண்ணிக்கைகளை அள்ளிக் கொள்ளலாம். புத்தகங்களை நான்கு வாரங்கள் வரையும், டீவிடீக்களை இரண்டு வாரங்கள் வரையும் வைத்துக் கொள்ளலாம். அதோடு, நூலகத்தில் இணைய வசதி இலவசம். கணினி வகுப்புகள் இலவசமாய் நடக்கின்றன. நான் சேர்ந்த நூலகத்திற்கு கிட்டத்தட்ட பத்து கிளைகள் இருக்கின்றன. ஒரு கிளையின் புத்தகத்தை இன்னொரு கிளையிலும் திருப்பிக் கொடுக்கலாம். ரொம்ப அசதியாய் இருந்தால் மொபைல் புத்தக வாகனமும் இருக்கிறது. வாரத்திற்கு ஒரு முறை அது குறிப்பிட்ட இடங்கள் வந்து போகும். நூலகம் சென்று திருப்பிக் கொடுக்க அலுப்பாய் இருந்தால், அதில் திருப்பிக் கொடுத்து விடலாம். இதையெல்லாம் தவிர்த்து இணையத்திலும் நீங்கள் திருப்பிக் கொடுக்கும் தேதியை நீட்டிக் கொள்ளலாம். நீங்கள் தேடும் புத்தகம் அந்த நூலகத்தில் இல்லாமல் வேறு கிளையில் இருந்தால் அதை நீங்கள் விண்ணப்பித்து தருவித்துக் கொள்ளலாம். சரி, நீங்கள் சொல்லும் புத்தகம் எந்தக் கிளையிலும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள், அதை புதிதாய் வாங்கி உங்களுக்குத் தருகிறார்கள். எத்தனை வசதி பாருங்கள்! படிப்பவர்களை கொண்டாடுகிறார்கள்.

ஒரு சின்ன உதவி, தமிழில் இத்தனை நாட்களாய் படித்து வந்ததால் (அதுவும் கொஞ்சம் தான்!) ஆங்கிலத்தில் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. தமிழில் நம்ம வாத்தியார் கையை பிடித்து நடப்பது போல் ஆங்கிலத்தில் விறு விறு வென்று போகும் வாத்தியார்களின் பெயர்கள் வேண்டும். ஆங்கிலத்தில் எனக்கு பிடித்தது என்று சொல்வதை விட எனக்கு புரிந்தது ஆர்.கே. நாராயணன், ரஸ்கின் பாண்ட், சேதன் பகத். எல்லாம் நம்ம ஊர் எழுத்தாளர்கள் தான். சிட்னி ஷெல்டனின் ஒரு நாவல் படித்திருக்கிறேன். எளிதாய் விறு விறுவென்று இருந்தாலும் எனக்கு அவ்வளவாய் ஈர்க்கவில்லை. நிறைய சிறுகதைகள் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆங்கில கவிதைகளும் படிக்க வேண்டும். ஆனால் அது எந்த அளவுக்குப் புரியும் என்று தெரியவில்லை...கொஞ்சம் கோடு போட்டீர்கள் என்றால் நான் ரோடு போட முயற்சிக்கிறேன்.

உரைநடை சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!