ஒரு பெஞ்சில் இரண்டு சிறுவர்களின் கால்கள் ஆடிக் கொண்டிருக்கின்றன! அவர்கள் இருவரும் ஏதோ ஒரு சம்பாஷணையில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது...

சட்டென்று ஒருவனின் கால்கள் ஆடுவது நிற்கிறது! அதைத் தொடர்ந்து மற்றவனின் காலும் நிற்கிறது....

மணி: காட் ப்ராமிஸ்? [கையை நீட்டுகிறான்!]
சிபி: காட் ப்ராமிஸ் [கையில் அடிக்கிறான்]
மணி: உனக்கு எப்படி தெரியும்?
சிபி: எத்தனை சினிமா பாத்துருக்கேன்!
மணி: நான் நம்பலை...
சிபி: நாளைக்கு என் கூட வா, உன்னை இன்ட்ரொட்யுஸ் பண்ணி வைக்கிறேன்!
மணி: சரி

மறுபடியும் கால்கள் ஆடுகின்றன...

மணி: ஏதுடா இந்த ரோஸ்?
சிபி: எங்க தோட்டத்துல பறிச்சேன்...
மணி: எதுக்கு?
சிபி: அன்னைக்கு நான் கோயிலுக்கு பூ கொண்டு போகும்போது என்கிட்ட ஒரு பூ கேட்டாங்க, நானும் குடுத்தேன்! தலையில வச்சிகிட்டு நல்லா இருக்கான்னு கேட்டாங்க...ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னேன்! என் கன்னத்தை கிள்ளி சிரிச்சாங்க
மணி: நீ பொய் சொல்றே
சிபி: நீ தான் பாக்க போறியே...
விட்டுக்கு வெளியே நின்று...
சிபி: ரோஸி
மணி: இதான் அவங்க பேரா?
சிபி: ஆமா, நல்ல இருக்குல்ல! வாசனையா?
ரோஸி: ஹேய் சிபி! குட் மார்னிங்...
சிபி: இது உங்களுக்காக!
ரோஸி: சோ ஸ்வீட்! சார் யாரு?
சிபி: இவன் மணி, என் ஃப்ரண்ட்.
மணி: என் பேர் ஏ. ஐ. மணிகண்டன். நான் சிக்ஸ்த் ஏ செக்ஷன்.
ரோஸி: என் பேர் ரோஸிலினா, காலேஜ்ல பீ.காம் படிக்கிறேன்.
மணி: நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, சிபியை நீங்க லவ் பண்றீங்களா?
ரோஸி: ஆமா அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்.
[மணி ஓடுகிறான். சிபி துரத்துகிறான், ரோஸி சிரித்துக் கொண்டே உள்ளே போகிறாள்]

சிபி: டேய் மணி, நில்ரா..டேய் நில்லு
இருவரும் நிற்கிறார்கள். மூச்சு வாங்குகிறது..
சிபி: எப்படி?
மணி: இந்த கல்யாணம் நடக்காதுடா
சிபி: ஏன்?
மணி: அவ எவ்வளவு ஹைட்! நீ இத்துனூன்டு இருக்கே...
சிபி: நானும் ஹைட் ஆயிடுவேன்டா
மணி: கிழிப்பே
சிபி: இப்போ என்னடா செய்றது?
மணி: நீ சீக்கிரம் ஹைட் ஆகனும்
சிபி: அதுக்கு என்ன செய்யனும்?
மணி: எங்க அண்ணன் செம ஹைட்டுடா..அவன்கிட்ட கேப்போம்
சிபி: சரிடா.

மறுநாள்...

மணி: ஹைட்டா வளரணும்னா நிறைய ஸ்கிப்பிங் ஆடனுமாம், நிறைய எக்ஸர்சைஸ் பண்ணனுமாம். நிறைய பால் குடிக்கனுமாம்!
சிபி: அது பால் இல்லைடா! காம்ப்ளான், நான் தான் டெய்லி டூ டைம்ஸ் குடிக்கிறேனே!
[சிபி ஒரு முடிவுக்கு வருகிறான்]

சிபியின் கையில் புது ஸ்கிப்பிங் ரோப்! சிபி குதிக்கிறான்..விழுகிறான், எழுகிறான்! மணி உதவி செய்கிறான்.இரண்டு முறை குதித்து விட்டு தன் உடலை ஜான் போட்டு அளக்கிறான். மணி இவனை விட நன்றாய் ஸ்கிப்பிங் ஆட சிபி அவனை தடுத்து நிறுத்துகிறான்! அவனையும் ஜான் போட்டு அளக்கிறான்!

சிபி: வேணாம்! நீ பண்ணாதே
மணி: ஏன்டா?
சிபி: அப்புறம் நீ விட ஹைட் ஆயிட்டா?
[மணி பேயரைந்து நிற்கிறான்]

மறுநாள் ரோஜாவுடன் இருவரும் ரோஸி வீட்டுக்குச் செல்கின்றனர்! வாசலில் ரோஸி யாருடனோ பைக்கில் போகிறாள்! அவளுடைய அம்மா டாட்டா காட்டுகிறாள்!
சிபி: ரோஸி எங்க போறா?
அம்மா: அவ சினிமாக்கு போறா...சிபி, ரோஸி அக்காக்கு கல்யாணம்டா. உங்க அம்மாகிட்ட சொல்லு என்ன?
சிபி: யாரு கூட?
அம்மா: அந்த பைக்ல போறாரே அவர் கூட [உள்ளே போகிறார்]
மணியும் சிபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்!
மணி: நீ ஏன்டா அவங்க அம்மாகிட்ட சொல்லலை?
சிபி: என்னை பாக்கும் போது சிரிச்ச மாதிரி தான்டா அந்த பைக்ல போகும்போது சிரிச்சா!
மணி: இந்த பொண்ணுங்களே இப்படித் தான்டா! அவங்களை நம்பவே கூடாதாம்! எங்க அண்ணன் சொல்வான்!

சிபி கையிலிருக்கும் ரோஜாவை தூக்கி எறிகிறான்!
மணி ஸ்கிப்பிங் ஆடிக் கொண்டே வருகிறான். சிபி எதுவும் சொல்லாமல் நடக்கிறான்...
எனக்கு நிச்சயமாய் தெரியும்
நீ சிரித்திருப்பாய்
மேகம் தான் தூறுகிறதே!
-------------------------------------------------------------------------------------------------
நீ வீட்டில் இல்லாத
ஒரு பொழுதில்
நானிருந்தேன்!
சொன்னால் நம்ப மாட்டாய்...
வீடெங்கும் நீ
நிறைந்து கிடக்கிறாய்!
-------------------------------------------------------------------------------------------------
நீ இல்லாத சமயத்தில்
நீ வளர்க்கும் பூனை
உன் கதகதப்பு வேண்டி
மடித்து வைத்திருக்கும்
உன் புடவையில் துயில்கிறது
பாவம்...பூனைக்கு எப்படித் தெரியும்?
புருஷனுக்குத் தான் முதல் உரிமை என்று?
-------------------------------------------------------------------------------------------------
நீ இல்லாத தருணத்தின் மெளனம்
உன்னை விட அதிகம்
தொனதொனக்கிறது!
-------------------------------------------------------------------------------------------------
எதிர்பாராமல் நம் கண்ணைக் குத்தும்
குழந்தை போல் திடீரென்று
வந்து விடுகிறது மழை

நீ இருந்தால்
மழையை விட சடசடத்துக் கொண்டே
கொள்ளையில் காயும் துணிகளை
அள்ளிக் கொண்டு வருவாய்!

மழை வாசனையோடு
மிகக் கொஞ்சமாய் நனைந்து
என் அருகே வந்து அமர்வாய்

ஜன்னலின் வழியே பார்க்கிறேன்!
கொல்லையில் துணிகள் நனைகின்றன...
நான் உள்ளே நுழையவும் "சரி பவி மீ அவுஸ்" [சரி அண்ணி, நான் கெளம்புறேன்] என்று அவள் கிளம்பவும் சரியாய் இருந்தது...

சாந்திக்கு வயது ஒரு 35 இருக்கலாம். அவள் வறுமைக்கும் வயிருக்கும் சம்மந்தமில்லை...நல்ல புஷ்டி! இருட்டில் பிடித்த கொலக்கட்டை போல் கொச கொசவென்று நான்கைந்து, வீடுகள் என்ற பெயரில் இருக்கும் கூடுகள் எங்கள் காம்பவுண்ட்! அந்த கொச கொச கூடுகளில் எங்கள் பக்கத்துக் கூட்டில் வசிப்பவள் இந்த சாந்தி. எல்லோரும் செளராஷ்ட்ரா சமூகத்தைச் சார்ந்தவர்கள். உங்களை பொறுத்த வரை காய்ரா பூய்ரா ஜாதி!

அவள் புருஷன் மகா யோக்கியன். குடிக்காமல் பெண்டாட்டியை கை நீட்டி அடிக்கவே மாட்டான்! அதே சமயம் குடிக்காமல் இருக்கவே மாட்டான்! இந்த இரண்டு வேலையை கண்ணும் கருத்துமாக செய்து வருபவன், எப்படியோ இன்னொரு வேலையும் பொறுப்பாய் செய்துள்ளான். அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். குடிகாரனின் குழந்தைகளாய் இருந்தாலென்ன, அத்தனை அழகு!

சாந்திக்கு இரண்டு வேலை தெரியும். ஒன்று தைப்பது; இன்னொன்று அழுவது! ஓவியத்தை வரைந்து அதற்குக் கீழ் பெயரை வரைவது போல் சாந்தியும் ஜாக்கட்டை தைத்து தன் பெயரை அதில் வரைந்திருந்தால், மதுரையில் அந்த ஏரியாவில் சந்துக்குச் சந்து இருக்கும் பெண்களின் மேல் அவள் பெயரை பார்க்கலாம்! அவ்வளவு தைத்திருக்கிறாள்! சாதாரண ஜாக்கெட் 30 ரூபாய். பஃப் கை 35! தொட்டி கழுத்து வைத்து பாசி வைக்க 40. ஜன்னல், பால்கனி என்று விதவிதமான டிசைன்கள், விதவிதமான ரேட்டுகள்! எங்கள் கொச கொச காம்பவுண்டில் எங்கள் வீடு ஒரு மாதா கோயில்! மாதா கோயிலின் பாதிரியார் போல் என் அம்மா எல்லோரின் கஷ்ட நஷ்டங்களைக் கேட்டு பாவ மன்னிப்பு கொடுப்பார்! எல்லாவற்றையும் சொல்லி அழுவதில் அவர்களுக்கு ஒரு ஆறுதல்! இன்றும் சாந்தி கண்னைத் துடைத்துக் கொண்டே தான் சென்றாள்!

ககம்பா தூ காய்தி மெல்லே சேத்தே! தெனு சா ரொல்லே ஜாராஸ்! [ஏம்மா நீ ஏதாவது சொல்லிட்டு இருக்கே? பாரு அவங்க அழுதுட்டே போறாங்க] என்று அம்மாவை கலாய்த்தேன்!

ஹாய் மீ தெகோ சசு சா காய்தி மெனத்த..ஜீ பாத் தைலி காரா [ஆமாம், நான் தான் அவ மாமியாரு, ஏதாவது சொல்றதுக்கு! போய் சாப்பிட்றா...]

நான் சாப்பிட ஆரம்பித்ததும், அம்மா ஆரம்பித்து விட்டாள்! சாந்தி சொல்லி அழுததெல்லாம் என்னிடம் சொல்லி அவள் மீது பரிதாபப்பட்டாள்! மாதா கோயிலின் அடுத்த பாதிரியாராக என்னை பாவித்துக் கொண்டேன்! குழந்தைகளுக்கு பள்ளியில் கட்ட வேண்டிய பணத்தை எடுத்து அவன் குடித்து விட்டானாம்! கேட்டதற்கு சிகெரட் நெருப்பை வைத்து கையை சுட்டு விட்டானாம். கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் இப்படி மனம் போன போக்கில் நடந்து கொள்கிறானாம். மூன்று பெண் குழந்தைகளையும் பார்த்து பார்த்து எரிந்து விழுகிறானாம். என் அம்மாவுக்கும் கண் கலங்கித் தான் இருந்தது...மனிதர்கள் ஏன் இத்தனை கேவலமான பிறவிகளாய் இருக்கிறார்கள்? இவர்களுக்கு ஏன் குடும்பம், குழந்தை குட்டி? எப்படி இவ்வளவு நீச்சமாக நடந்து கொள்ள முடிகிறது? எப்படி இருந்தாலும் அந்தப் பெண் பாவம் அவனுடன் தான் காலம் தள்ள வேண்டும் என்பது எத்தனை கொடுமை...எப்படி அவளால் அவனுடன் சிரித்துப் பேச முடியும்? நாள் முழுதும் சண்டை போட்டு விட்டு எப்படி அவன் முகம் பார்த்து வாழப் பிடிக்கும்? என்று ஆயிரம் கேள்விகள் என் மனதில் எழுந்தன...நானும் சாப்பிட்டு விட்டு எழுந்தேன்!

மறுநாள் நான் கல்லூரியிலிருந்து வர நேரமாகிவிட்டது...பாதிரியார் தனியாகத் தான் இருந்தார். எந்தப் பாவியும் மன்னிப்பு கேட்க வரவில்லை போலும். பயங்கர பசி...

காய் அம்பா கெர்ரித்தே ஹிந்தோ? [என்னம்மா செஞ்சிருக்கே இன்னைக்கு?] என்ற என் பார்வையில் அந்த குளோப் ஜாமுன் விழுந்தது! ஒரு அழகான பெண்ணை பார்த்து வழிவதைப் போல் நாக்கு ஜொள்ளு வடித்தது! காய் விஷேஸ் ஹிந்தோ? கோனே எல்லே? [என்ன விஷெசம் இன்னைக்கு? ஏது இது?] என்று வாயில் போட்டேன்!

சாந்தி கெவ்ரார் மெனா! தெனோ அந்திர்தே! [சாந்தி முழுகாம இருக்காளாம், அவ கொடுத்தா!] என்றாள் அம்மா! குளோப் ஜாமூன் நெஞ்சை அடைத்தது!
அலுவலகத்தில் மறுபடியும் கண்டுபிடித்து விட்டார்கள்..."என்ன சொன்னாலும் செய்றான் இவன் ரொம்ப நல்லவன்டா" என்று! எப்படித் தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ? ஆமாம். அலுவல் நிமித்தமாக ஒரு மாதம் கோயம்பத்தூருக்கு டெபுட்டேஷனில் அனுப்பி விட்டார்கள். சரி, சென்னைக்கு வந்து மூன்று வருடம் ஆகிவிட்டது, ஒரு மாதம் கோவைக்குத் தான் சென்று வருவோமே, ஒரு எழுத்தாளன் வாழ்க்கையில் இதெல்லாம் ஜகஜம் தானே என்று நானும் கிளம்பி விட்டேன். [இங்கு எழுத்தாளன் யார் என்பதை சரியாய் கண்டு பிடிப்பவரின் வீடு தேடி வந்து நானே கை குலுக்குவேன்!]

உங்க டெசிக்னேஷனுக்கு நீங்க ஏரோப்ளேன்ல போகலாம், நீங்களே புக் செய்து விட்டு பணத்தை ரீஎம்பர்ஸ் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு, பிறகு பணத்தை தராமல் டேக்கா கொடுத்து விடுவார்களோ என்று பயந்தேன். ஏனென்றல் இத்தகைய அனுபவம் எனக்கு ஏற்கனவே ஏற்பட்டிருக்கிறது...ஐந்து வருடத்திற்கு முன்னால் ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்கு அனுப்பும் போது நீங்கள் ரயிலில் ஏசி கோச்சில் செல்லலாம், புக் செய்து டிக்கட்டைக் காட்டி பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள். நமக்கும் இப்படி ஒரு வழ்வா? என்று நினைத்து ரயிலில் டிக்கட் கிடைக்காததால் வால்வோ பஸில் ஜம்மென்று 700/= கொடுத்து பெங்களூர் போய் பணத்தைக் கேட்டால் உங்க ட்ரான்ஸ்வர் லெட்டர் எங்கே என்று ஏதேதோ சால்ஜாப்பு சொல்லி பணத்தைக் கொடுக்க முடியாது என்று சொல்லி விடார்கள். அது சரி எல்லாம் நல்லா நடக்குதேனு கொஞ்சம் சந்தொஷப்பட்டது என் தப்பு தான்...இவர்கள் சும்மா இருந்திருந்தாலாவது உருளைக் கிழங்கு லாரியைப் பிடித்து போயிருப்பேன். சும்மா இருந்தவனை சொறிஞ்சி விட்டானுங்கடா...ஏதோ நான் பயந்த மாதிரியெல்லம் நடக்காமல் இந்த முறை அவர்களே ரயிலில் புக் செய்து அனுப்பி விட்டார்கள்!

எனக்கு என்னமோ ஏசி கோச் பிடிக்கவில்லை. மனிதர்களின் இரைச்சலே இல்லாமல் ஏதோ ஒரு எழவு வீட்டில் இருப்பது போன்ற உணர்வு. கண்ணாடியின் வழியே ஒன்றும் தெரிவதில்லை. ரயில் போகிறதா நிற்கிறதா என்றே புரிவதில்லை. என்ன ஒரு கம்பளி, ஒரு தலையணை, இரண்டு போர்வை கொடுக்கிறார்கள். செல்லும் இடம் வந்ததும் பொறுப்பாய் எழுப்பி விடுகிறார்கள். தமிழ் தெரிந்திருந்தாலும், ஆங்கிலத்திலேயே பேசுபவர்கள் இதில் பயணம் செய்கிறார்கள். அட்டென்டன்ட் போர்வை ஒன்றை கம்மியாய் கொடுத்து விட்டதாக டீடீஈயிடம் [ஏன் எல்லோரும் டீடீஆர் என்கிறோம்?] ஆங்கிலத்தில் கம்ப்ளயன்ட் செய்கிறார்கள்.

கோவையில் அவிநாசி ரோட்டில் ஒரு பெரிய ஃப்ளாட்டில் தங்கியிருக்கிறேன். மிக அற்புதமய் வீட்டை வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு ஃப்ளாட் நிச்சயம் 50 லட்சமாவது இருக்கும். நேபாளத்திலிருந்து இங்கு வந்த நான்கு பேர், காலை, மாலை என்று எங்களுக்காக ரொட்டியை சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால் உங்களுக்கு சேவை செய்வது மகிழ்ச்சி என்று பணிவோடு சொல்கிறார்கள். அங்கு தங்கும் சிலரின் அட்டகாசம் தங்கமுடியவில்லை. நான் டீவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவேன், சாப்பாட்டை இங்கே கொண்டு வா என்று அதிகாரம் செய்கிறார்கள். எனக்குப் பாவமாக இருக்கிறது.
என்ன தான் ராஜ போகம் இருந்தாலும், எனக்கு என்னமோ வசதியான ஒரு ஜெயிலில் அடைத்து வைத்திருப்பது போலவே தோன்றுகிறது. காலை ஆனதும் சாப்பாடெல்லாம் போட்டு ஜெயில் கைதிகளை கோர்ட்டில் ஆஜர் படுத்துவது போல் ஒரு வேனில் ஏற்றி அலுவலகத்திற்கு அனுப்புவதும், இரவு 10 மணிக்கு, 12 மணிக்கு மறுபடியும் வேனில் கொண்டு வந்து வீட்டில் விட்டால் அப்படித் தனே தோன்றும்! இதில் நான் கோவையில் இருந்தாலென்ன கொடைக்கானலில் இருந்தாலென்ன...

ஒரு வேளை சிறையில் இணைய வசதி வந்தால் மறுபடியும் சந்திக்கலாம்!


எல்லோரும் எல்லாமும் சொல்லியாகிவிட்டது. இனி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை

சற்று நேரத்திற்கு மட்டும் என்னை ஒரு மாமுனியாக நினைத்துக் கொண்டு!!!

இதோ பிடி சாபம்....

"அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்கக் கடவாய்!"

புரியாதவர்கள் இந்தக் கற்றதும் பெற்றதை முழுதும் படிக்கவும்!

இது என் நூற்றி ஐம்பதாவது பதிவு! ஆமா, ஆடிக்கொரு தடவை அம்மாவாசைக்கு ஒருதடவை இவர் வலைபதிவாரு, இதுக்கு நாங்க ரெகுலரா வந்து பாத்துட்டு வேற போகனும் என்று நீங்கள் நினைக்கவில்லை என்று எனக்குத் தெரியும்! [பார்ரா...] நான் என்ன செய்வது வலைபதியும் அளவிற்கு மண்டையில் ஒன்றும் ஓட மாட்டேன் என்கிறது...இன்று என்ன கேடு என்று நீங்கள் சொல்வதற்குள் விஷயத்திற்கு வந்து விடுகிறேன்...

இன்று காதலர் தினம்! இன்று நான் அலுவலகம் சென்றவுடன் உள்ளம் பூரித்துப் போகும் அளவிற்கு ஒரு விஷயத்தை கேள்விப்பட்டேன். ரொம்ப சரியாய் தப்பாய் புரிந்து கொண்டீர்கள்! வழக்கம் போல் எந்தப் பெண்ணும் இன்று தங்கள் காதலை என்னிடம் சொல்லவில்லை! "முப்பது வயசுக்கு முன்னாடி கல்யாணம் ஆகவேண்டியவ இன்னும் கோலம் போட்டுட்டு இருக்கா" ரேஞ்சுக்கு நான் இருக்கும் போது, என்னிடமாவது எந்தப் பெண்ணாவது காதலை சொல்வதாவது...இதனால் மனம் வாடித் துன்பமிக உழன்று நானிருப்பதாக யாரும் நினைத்து விட வேண்டாம்.

சரி அதை விடுங்கள், நான் நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். இன்று எங்கள் அலுவலகத்தில் எங்கள் டீமுக்கு மட்டும் காலை 9லிருந்து மாலை 6 மணி வரை (மட்டுமே) வேலை நேரமாய் கடைபிடிக்கப் பட்டது. நேற்றே மெயில் போட்டு எல்லோருக்கும் சொல்லிவிட்ட போதிலும், நேற்று ஒரு அவசர வேலையாக அலுவலகத்திலிருந்து சீக்கிரம் கிளம்பி விட்டதால் எனக்கு இந்த விஷயம் இன்று காலை தான் தெரிந்தது. நான் டான் என்று காலை 10 மணிக்கு போய் நுழைந்ததும் தான் இந்த விஷயத்தை கேள்விப் பட்டேன், அடடா ஒரு மணி நேரம் தாமதமாக வந்து விட்டோமே என்றெல்லாம் மனது உறுத்தாமல் பார்த்துக் கொண்டேன்.

உங்களுக்கே தெரியும், கணினித் துறையில் வேலை பார்க்கும் எல்லோருக்கும் காலையில் 9 மணிக்கு அலுவலகம் போவது தான் நிச்சயம், மாலையில் எத்தனை மணிக்குத் திரும்புவார்கள் என்பது நிச்சயமில்லை. பெண்டெடுத்து விடுவார்கள்! [இதிலும் எப்போது ஓபி அடிக்கும் ஜென்மங்களும் உண்டு!] ஒரு மனிதனால் அதிகம் போனால் 6 மணி நேரம் தான் உருப்படியாய் வேலை செய்ய முடியும் என்று எங்கோ கேள்விப்பட்டிருக்கிறேன். இருந்தும் இன்னும் கணினித் துறையில் இந்த மாதிரி சட்டங்கள், கெடுபிடிகள் எல்லாம் இல்லாததால் சகட்டு மேனிக்கு வேலை பார்த்து, நிறைய சம்பாதித்து, கண்ட நேரங்களில் கண்டதை தின்று விட்டு, வயிறு போச்சு, கண்ணு போச்சு, கை போச்சு, முதுகு போச்சு என்று டாக்டருக்கு சம்பாதித்த பணத்தை எல்லாம் அழுது கொண்டு, எல்லா ஏரியாக்களிலும் வீட்டு வாடகையை ஏற்றி விட்டதற்காக எல்லோரிடமும் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

என் மேலாளர் நான் சேர்ந்த புதிதில் ஒரு மீட்டிங்கில் 9லிருந்து 6 மணி வரை வேலை நேரமாக கடைபிடிக்க வேண்டும் என்றார். இது என்ன நடக்கக் கூடிய காரியமா என்று எல்லோரும் வியந்ததை பார்த்து, சரி ஆரம்பத்தில் இதை மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பிறகு மெல்ல பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும், பிறகு வாரத்திற்கு ஒரு முறையும் என்று கடைபிடித்து முன்னேறலாம் என்றார். அப்படியே முன்னேறி அதை தினக்கடமையாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது அவர் கனவு! நல்ல கனவு தான்...[மீட்டிங் வேறு பகலில் நடந்ததால் நானும் சீரியஸாய் எடுத்துக் கொள்ளவில்லை..] அவர் சொன்னதை இத்தனை சீக்கிரம் செய்வார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சி தான்...

இன்று என் டீமில் உள்ள சில பெண்கள் சேலையில் வந்திருந்தனர். காதலர் தினத்திற்கு இத்தனை முக்கியத்துவம் தரத் துவங்கி விட்டதா தமிழகம் என்று குழம்பிவிட்டேன். பிறகு தான் தெரிந்தது இன்று சீக்கிரம் வீட்டுக்கு போகப் போவதால் அதை கொண்டாடவே அவர்கள் சேலையில் வந்திருந்தார்கள். அட! மாலை ஆறு மணி ஆனதும், பெல் அடிக்காத குறையாய் எல்லோரையும் அவரவர் கணினியை நிறுத்தி விட்டு வீட்டுக்கு போகுமாறு அறிவுறுத்தினார்கள். அதிலும் ஒரு மேனேஜர் [கையில் பிரம்பு ஒன்று தான் இல்லை] ம்ம்..கிளம்புங்க, இடத்தை காலி பண்ணுங்க..இங்கே பாம் செட் பண்ணியிருக்கோம் என்று கலாய்த்தல் வேறு...

எல்லோரும் ஒரே நேரத்தில் வெளியில் வருவது ஒரு புது அனுபவமாகவே இருந்தது. சில பிரம்மச்சாரிகளும், வீட்டுத் தொல்லை தாங்காமல் அலுவலகத்திலே தஞ்சம் கொண்ட சிலரும் தலையை குனிந்து கொண்டு வேண்டா வெறுப்பாக வெளியே வந்தனர்! நான் வெளியே வந்து அந்தி வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். பறவைகள் கூடு தேடிப் பறந்து சென்று கொண்டிருந்தன...நானும் பறவையாய் மாறிவிட்ட உணர்வு! அலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும், ஜனத்திரளை பார்த்து திடுக்கிட்டேன்! இது என்ன இன்று எல்லோருக்கும் 6 மணி வரை தான் வேலையா என்று ஒரு சந்தேகமே வந்து விட்டது. பிறகு தான் புரிந்தது, ஆள் அறவமே இல்லாத எத்தனையோ இரவுகளில் அலுவலகம் விட்டு வந்து பழக்கப்பட்டதால் வந்த உணர்வு அது என்று...

லிப்டில் கீழே இறங்கும் போது அதில் பதிவு செய்யப்பட்ட குரல் ஒலித்தது...
"HAVE A NICE EVENING!"

YES IT IS! என்று நினைத்துக் கொண்டேன் :-)
1. அதிக நெருக்கமில்லை
என்று நான் நினைத்த
நண்பனொருவன்

அவன் சென்ற சுற்றுலாவில்
என் நினைவில்
எனக்காக வாங்கி வந்த
ஏதோ ஒன்றை
எங்கோ தொலைத்து விட்டேன்!

2. நான் இதை
எழுதிக் கொண்டிருக்கும் போது

மாராப்பு விலகிய ஒரு பெண்ணின்
மாரை நீ வெறித்துக் கொண்டிருக்கலாம்

டீ கடையில் ஒரு சிறுவன் கொடுக்கும்
டீயை வாங்கி உறிஞ்சிக் கொண்டிருக்கலாம்

காற்றே இல்லாமல் சில நொடிகள்
தென்னங்கீற்று அசையாமல் இருந்திருக்கலாம்

உன் வாயிலிருந்து ஒரு பருக்கை
கீழே சிந்தியிருக்கலாம்

சுவற்றின் மேலேறிய எறும்பு
காலிடறி விழுந்திருக்கலாம்

இனம்புரியா ஒரு அச்சத்தில்
பறவையின் சிறகுகள் படபடத்திருக்கலாம்

கடல் சற்றே உள் வாங்கியிருக்கலாம்...

எதற்கும் இருக்கட்டும், என்
பேனாவை மூடியே வைக்கிறேன்!
31ம் ஆண்டின் புத்தக கண்காட்சிக்கு நேற்று சென்றிருந்தேன்! புத்தக கண்காட்சிக்குப் புறப்படும் உங்கள் எல்லாருடைய மனதிலும் எழுந்த கேள்வி என் மனதிலும் எழுந்தது! அது தான்..."போன புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை எல்லாம் படித்துக் கிழித்து விட்டாயா?" இதற்கு நீங்கள் செய்ததைத் தான் நானும் செய்தேன்! இந்த வருடமும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். எந்த புத்தகத்தைத் தேடும் நோக்கத்துடனும், வாங்கும் ஆவலுடனும் நான் செல்லவில்லை! இருந்தும் ஒரே ஒரு காந்தி நோட்டு (500) கொடுத்து பல விதமான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் வாங்கி வந்திருக்கிறேன்...

நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்:

1. மணலின் கதை (கவிதை) - மனுஷ்யபுத்திரன் - உயிர்மை
2. கடவுளுடன் பிரார்த்தித்தல் (கவிதை) - மனுஷ்யபுத்திரன் - உயிர்மை
3. எப்போதும் வாழும் கோடை (கட்டுரை) - மனுஷ்யபுத்திரன் - உயிர்மை
4. கடைசி டினோசர் (கவிதை) - தேவதச்சன் - உயிர்மை
5. பனிமுடி மீது கண்ணகி (சிறுகதை, குறுநாவல்) - எம். வீ. வெங்கட்ராம் - காலச்சுவடு
6. வேள்வித் தீ - எம். வீ. வெங்கட்ராம் - காலச்சுவடு

[இவரின் "காதுகள்" நாவல் கிடைக்கவில்லை]

உயிர்மை பதிப்பகத்தில் கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் குவித்திருந்தார்கள்! மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் எனக்கு ஒரு மயக்கம்! பல கவிதைகள் புரிவதில்லை என்றாலும், அவரே சொல்வது போல் புரியாத கவிதைகள் எனக்கான கவிதைகள் அல்ல என்று அடுத்த கவிதைக்குத் தாவி விடுவேன்! "என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்" என்ற அவர் தொகுப்பை வாங்கி விடுவது என்று நினைத்தேன்! என் துரதிருஷ்டம் அது கிடைக்கவில்லை. அது இருந்திருந்தால் அந்த ஒன்றை மட்டும் வாங்கியிருப்பேன். இல்லாததால் நான்கு புத்தகங்களை வாங்கி விட்டேன்.

அதிலும் என் அதிர்ஷ்டம், நான் உயிர்மையில் நுழைந்ததும் மனுஷ்யபுத்திரனும் அங்கு வந்தார். ஏற்கனவே தேசிகனுடன் அவரை அவர் இல்லத்தில் ஒரு முறை சந்தித்திருந்தாலும், அதை அவரிடம் சொல்லி அவர் நினைவுத் திறனை சோதித்து தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று தான் நினைத்தேன்! மறுபடியும் என் அதிர்ஷ்டம், கடையில் இருப்பவர் ஒருவர், அவராய் சமீபத்தில் வெளியான சில புத்தகங்களைப் பற்றி எடுத்துக் கூறி நீங்கள் தேர்ந்தெடுங்கள், இந்த புத்தகத்தில் மனுஷ்ய புத்திரனின் ஆட்டோகிராஃப் வாங்கி வருகிறேன் என்று நான் எடுத்த ஒரு புத்தகத்தை எடுத்துச் சென்று விட்டார். அட, இது நல்லா இருக்கே என்று அவரைப் பின் தொடர்ந்தேன்.

அவர் மனுஷ்யபுத்திரனிடம் என்னைக் காட்டி எனக்கு கையெழுத்திட்டுத் தருமாறு கூறியவுடன், சரி இத்தனை தூரம் வந்து விட்டோம், "என்னைத் தெரியுதா? அன்னைக்கு பஸ்ல கண்டெக்டர் என்னோட இருபத்தைஞ்சு பைசாவையும் சேர்த்து ஐம்பது பைசாவா உங்ககிட்ட கொடுத்து உங்ககிட்ட வாங்கிக்கச் சொல்லிட்டார், ஆக்சுவலி நீங்க எனக்கு கடன் பட்டவர்" என்று ஒரு மறத் தமிழனைப் போல் தேசிகனுடன் அவர் வீட்டுக்கு வந்ததை ஞாபகப்படுத்தி அசடு வழிந்தேன்! நான் எதிர்பார்த்த அளவுக்கு அவர் நெளியாமல் முகம் மலர்ந்தார்! மேலும், எங்கே என் பெயர் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம் என்றெல்லாம் சொல்லி இன்னும் அவரை கொடுமைப்படுத்தாமல் நான் என் பெயரைச் சொன்னதும் அதை எழுதி ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார்!

படுக்கையறையில் ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடித்தாரோ இல்லையோ தெரியவில்லை...அவரின் கவிதைகளில் இரண்டு சாம்பிள்...

இழந்த காதல்

நின்று சலித்த என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது

மரங்கள் நடப்பது சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்

ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்

புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்

அந்த இடம்

போகும்போது
உன்னுடன் கொண்டு
வந்த எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்கிறாய்

ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது

நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்.

[coutesy: andhimazhai]

STAND UP!


[courtesy: http://www.taarezameenpar.com/]

இந்தப் படத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் நான் எந்த அபத்தத்தையும் செய்யப் போவதில்லை. நீங்கள் "ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா" அளவுக்கு இந்தியில் புலமை பெற்றிருந்தாலும் நான் சொல்வது ஒன்றே ஒன்று! "பாருங்கள், தயவுசெய்து கண்டிப்பாய் பாருங்கள்!" உங்கள் பாராட்டுக்களை இங்கே சொல்லுங்கள். [நானும் 4 வருஷமா ப்ளாக் எழுதுறேன், பேசாம அமீர் கானா பொறந்துருக்கலாம், ஸ்வபா, எத்தனை பின்னூட்டங்கள்! ]

இல்லங்களில் பொங்கல் பொங்க
உள்ளங்களில் இன்பம் பொங்க
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

வேளச்சேரி ரயில் நிலையத்தின் முகப்பு!



ரயில் நிலையித்திலிருந்து பரங்கிமலை நோக்கி நீளும் பாதை...



ஆள் அரவமற்ற ரயில் நிலையம்!! [அதுவும் சென்னையில்!!]



எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதது...
  • யானை
  • ரயில்


ரயிலினூடே


இரு கோடுகள் அதனுள் பல கோடுகள்...



ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் ஒவ்வொரு விதமான மேற்கூரை அலங்காரகள் அமைப்பதாய் கேள்விப்பட்டேன்! அது ஓரளவுக்கு உண்மையென்றும் அறிந்தேன். பின் வரும் படங்களைப் பார்க்க...


மயிலையின் நிலையத்தின் கூரை


கஸ்தூரிபாய் நகர் நிலையத்தின் கூரை


அடையார் ஆறு! [என்று தான் நினைக்கிறேன்!] நான் தமிழகத்தின் முதல்வர் ஆனால்!!!!, சென்னையை இருக்கும் எல்லா கால்வாய்களிலும் லண்டனின் தேம்ஸ் நதியிலும், வெனீஸ் நகரத்திலும் இருப்பது போல் படகுகள் விடுவேன்! [ஆசையே அலை போலே...]


இதுவும் ஒரு புராதானச் சின்னம் தானோ?



உயர் நீதி மன்றத்தின் தலை



வேறு எந்த நாட்டிலும் காண முடியாது என்று நினைக்கிறேன்! ப்ரவீன் ராஜின் இதயத்தை ரத்தம் சொட்டச் சொட்ட குத்தியது யாரோ?


மறுபடியும் தலை...



வழிகாட்டி [இதை அன்னாந்து பார்க்க யாராவது வழி காட்ட வேண்டும்!!]


என்ன செய்வது? வறுமைக்கு என்றுமே வயதாவதில்லை :-(

ஒரு மாதமாக அம்மா சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்! வாஷிங் மெஷின் லீக் ஆகிறதாம்! கிட்சனில் அதை வைத்திருப்பதால், சமையலறை எங்கும் தண்ணீராகி விடுகிறதாம்! ஒரு வழியாய் கஸ்டமர் கேருக்கு ஃபோன் செய்து வீட்டுக்கு வருவதற்குள் சார் சரியா உங்க வீடு எங்க இருக்கு? என்று அங்கிருந்து ஒரு ஃபோன்! வலிக்காமல் கிள்ளி பார்த்துக் கொண்டு அவரை வீட்டுக்கு கூட்டி வந்து வாஷிங் மெஷினை சாய்த்து அடியில் டார்ச் அடித்து, எதோ கார்க்காம், பேரிங்காம் அதெல்லாம் போய் விட்டதாய் கண்டு பிடித்து அடுத்த வாரம் தகுந்த ஆட்களை கூட்டி வந்து சரி செய்வதாகவும், வாரண்டி எக்ஸ்டென்ஷன் என்ற பேரிலும் கிட்டத்தட்ட 3000 ரூபாய்க்கு வேட்டு வைத்து விட்டுப் போய்விட்டார்!

கையாலயே தொவைச்சி போட்ருக்கலாம் போல இருக்கே....

இரண்டு மாத காலமாக அப்பா சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்! இனிமேல் கேஸ் வாங்க வேண்டுமென்றால் ரேஷன் கார்டு வேண்டுமாம்! இல்லையென்றால் கேஸ் சப்ளை அம்பேல்...அப்பாவின் பேரில் கேஸ் இருக்கிறது! அவருடைய ரேஷன் கார்டை மதுரையிலிருந்து மாற்றி இங்கே கொண்டு வர வேண்டும்? தமிழ்நாட்டில் ஒரு நகரத்திலிருந்து ரேஷன் கார்டை இன்னொரு நகரத்திற்கு மாற்றுவது என்ன அவ்வளவு சுலபமான காரியமா? சரி என் பேரில் புதிதாய் வாங்கலாம் என்றால் [அது மட்டும் என்ன சுலபமா?] திருமணம் ஆகாமல் ரேஷன் கார்டு கொடுக்க மாட்டார்களே என்கிறார்கள்! அப்படியா? என்னை மாதிரி எத்தனை பேர் ஊர் விட்டு ஊர் வந்து கூட்டம் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! அத்தனை பேருக்கும் திடீரென்று கேஸ் தீர்வதற்குள் ரேஷன் கார்டு வாங்கி விட முடியுமா? இதெல்லாம் நடக்கிற காரியமா?

படித்த பெண்களும் அடுப்பூதும் நிலை வெகு தூரமில்லை!

இரண்டு மாதங்கள் ஆகின்றன புது வீட்டுக்கு குடி வந்து...ஃப்ளாட்டில் எல்லோருடைய மீட்டரும் சமத்தாய் ஓடுகிறது! நீங்கள் இந்த வலைப்பதிவின் சீறிய வாசகர் என்றால் உங்களுக்கே புரிந்திருக்கும்! என் மீட்டர் ஓடவில்லை! [அது தானே லாஜிக்கு!] கழட்டிக் கொண்டு போன மின்சார வாரியம் அப்படி என்ன கழட்டுகிறார்களோ தெரியவில்லை...இன்னும் புது மீட்டர் வந்தபாடில்லை! சரி சனிக்கிழமை போய் தான் கேட்டுப் பார்ப்போமே என்று கிளம்பி போனால், A. E. இன்னைக்கு வர மாட்டார் சார்! நீங்க திங்க கிழமை காலையில பத்து மணிக்கு மேல வந்து பாருங்க! அதுக்கு நான் அசமஞ்சமாய், நான் ஆபிஸ் போகனுமே!, அதற்கு அவர், அதுக்கு நான் என்ன பண்ணட்டும்? திங்கள் கிழமை வந்து பாருங்க! அவ்வளவு தான்!!

மாதவன் சார், அந்த கிரிக்கெட் பேட்டை கொஞ்சம் கொடுங்க இப்படி...

என் கணினி எப்படி வேலை செய்யும் என்று உங்களுக்கே தெரியும்! தெரியாதவர்கள் இங்கே பார்க்க...இத்தனை நாட்கள் CD DRIVE வேலை செய்யவில்லை! சரி அது பழகிடும் என்று நான் விட்டு விட்டேன்! இப்போது மானிட்டரில் நாம் பொத்தான் அமுக்கினால் வரும் ப்ரைட், கான்ட்ராஸ்ட் மெனுக்கள் என்னை நினைத்ததோ, நிரந்தரமாய் மானிட்டரிலேயே தங்கி விட்டன! அதை ஒரு ஓரத்தில் நகட்டவா முடிகிறது? சர்வ லட்சணமாய் நட்ட நடு சென்டரில் ஜம்மென்று அதுவாக கான்ட்ராஸ்டையும், ப்ரைட்னஸையும் கூட்டியும் குறைத்துக் கொண்டும் இருக்கிறது!

நானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?

ம்ம்ம்ம்ம்........எதையோ சொல்ல மறந்துட்டேன்....

அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ரொம்ப முக்கியம்! அட போங்கப்பா...

நடப்பவை எல்லாம் நல்லவைக்கே என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. ஒரு பதிவைப் போட்டதும் அதை தமிழ்மணத்திற்கு அளித்தால் தான் நட்சத்திரப் பக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பதிவு வரும் என்பதை மறந்து விட்டேன். இரண்டு பதிவை போட்டும், ஒன்றுமே இல்லாமல் நட்சத்திரமே வெறிச்சோடி இருந்தது. அதற்குள் இருவர் எங்கேப்பா இந்த வார நட்சத்திரத்தை காணோம் என்று குழம்பி அதையே ஒரு பதிவாய் போட்டு விட்டனர்! ஒரு வழியாய் தமிழ்மணத்திலிருந்து எனக்கு மடல் வந்த பிறகு தான் நாக்கை கடித்துக் கொண்டு, விஷயத்தை உணர்ந்து பதிவுகளின் இணைப்பை தமிழ்மணத்திற்கு அளித்தேன்! அதற்குள் நான் நட்சத்திரத்திற்கு முன் எழுதிய சில பல பதிவுகள் நட்சத்திரப் பக்கத்தில் தெரிந்தது! அடேடே..என்னது நம்ம இப்போ எழுதின பதிவெல்லாம் கடைசியா போய், முன்னே எழுதின பதிவெல்லாம் முன்னாடி வந்துருச்சே என்று ஒன்றும் புரியாமல் குழம்பி, ஏதோ என் எல்லா பதிவுகளை படித்தால் சரி என்று நினைத்துக் கொண்டேன்!

தமிழ்மணத்திற்கு ஒரு சின்ன வேண்டுகோள்! ஒரு பதிவரை நட்சத்திர வாரத்திற்கு அழைப்பு விடும் போது அவர் என்னன்ன செய்ய வேண்டும் என்பதை இன்னும் சற்று விளக்கமாக சொன்னால் இன்னும் செளகரியமாய் இருக்கும்! என்னை மாதிரி மறதிக்காரர்களுக்கும் அது உதவியாய் இருக்கும்.
யார் வேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று வெகு சுலபமாய் சவால் விடலாம்! அவர்களிடம் சரி எப்போது செய்வாய்? தேதியும், நேரத்தையும் சொல்லு என்று சொல்லிப் பாருங்கள்! அடுத்த நிமிடம் அவன் அந்த இடத்திலிருந்து அப்பீட் ஆயிருப்பான்! அது தான் டெட்லைன் என்பது! இப்போது தான் அதன் மகத்துவம் புரிகிறது! இந்த மாதிரி எந்த கூட்டுக்குள் அடைபடாமல் தான் நானும் இருந்தேன்! எழுதியே ஆகனும் என்று ஒரு கட்டாயம் இருந்தால் அது என்னவோ புரியல, என்ன மாயமோ தெரியல ஒரு மண்ணும் வராது! இதனால் தான் வலையுலக நண்பர்கள் அழைக்கும் சன்கிலிப் பதிவிலும் நான் கலந்து கொள்வதில்லை! :)சென்னையில் தேசிகன் தயவில் எழுத்தாளர் சுஜாதாவை சந்தித்த போது "டெட்லைன் இல்லையென்றால் எழுத முடியாது!" என்று அவர் கூறியது எவ்வளவு உண்மை என்று எனக்கு இன்று புரிகிறது. நான் மட்டும் இந்த வாரத்தின் நட்சத்திரமாக இல்லையென்றால் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பதிவை போட்டிருந்தால் அதிகம்! கிட்டத்தட்ட ஒரு பத்து பதிவுகளை போட்டது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது! டெட்லைன் வேலை செய்யத் தான் செய்கிறது!

நான் இந்த வார நட்சத்திரத்தில் போட்ட அத்தனைப் பதிவுகளும் மிக நல்ல தேர்ந்த பதிவுகள் என்று சொல்ல முடியாது! டெட்லைன் இல்லையென்றால் இன்னும் சிறப்பாய் எழுதியிருப்பேனோ என்று தோன்றினாலும் அதே சமயம், டெட்லைன் இல்லையென்றால் எழுதியிருப்பேனா என்ற சந்தேகம் தான் அதிகம் உள்ளது! ஆனால் வெகு நாட்களாய் சமுதாயத்தில் திருமணத்தையும் அதில் சூழ்ந்துள்ள குழப்பங்களையும் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்! நட்சத்திர வாரத்தின் மூலம் அது வெகு ஆர்ப்பாட்டமாய் நிறைவேறியதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!

இந்த நட்சத்திர வாரத்தில் நான் பங்கெடுத்துக் கொண்டதே ஒரு அற்புதமான அனுபவம்! ஒரு சிறுவனை மேடையில் ஏற்றி விட்டு அனைவரும் வேடிக்கை பார்க்கிறார்களே என்று பயந்தாலும், ராஜாதி ராஜன் வந்தேனே என்ற பதிவின் மூலம் ஒரு சிருங்கார அறிமுகம் செய்து கொண்டு குறையொன்றுமில்லை என்ற பதிவின் மூலம் வலையுலகில் நான் இருந்து வரும் நிலையை விளக்கி என்னுடைய சாந்தத்தை பதிவு செய்தேன்! சமுதாயத்தில் நடக்கும் சிறுமைகளைக் கண்டு இப்படியும் மனிதர்களா என்ற என் அருவருப்பை திருமணமாம் திருமணமாம் பதிவில் ஆரம்பித்து மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்ற பதிவு வரை சிறுமை கண்டு பொங்கும் என் ரெளத்திரத்தை பதிவு செய்தேன்! என்னுடைய இத்தகைய வீரத்தை பாராட்டி நீங்கள் அளித்த பின்னூட்டத்தில் என் உள்ளம் ஆனந்தக் கூத்தாடியது. கடைசியாக, என்னையும் ஒரு நல்ல எழுத்தாளன் [அப்படி தானே நினச்சுருக்கீங்க?] என்று நம்பிய உங்கள் அன்புக்கும்/கருணைக்கு என் நன்றிகள் பல உரித்தாகுக!! [நவராத்திரி திரைப்படத்திற்கு நன்றி]

என்ன ஒரு மண்ணும் புரியலையா? அதாவது, அற்புதம், சிருங்காரம், சாந்தம், பயம், கருணை, அருவருப்பு, கோபம், வீரம் மற்றும் ஆனந்தம் என்ற நவரசங்களையும் அப்படியே கரைச்சி இந்த நட்சத்திர வாரத்தில கலங்கடிச்சுருக்காராமா...நவராத்திரி படத்திலே ஆரம்பிச்சி நவராத்திரி படத்துலையே முடிச்சி வாழ்க்க ஒரு வட்டம்டான்னு புரிய வைக்கிறாராமா.. இந்தப் பக்கியயெல்லாம் ஏத்தி விடாதீங்கன்னா கேக்குறாய்ங்களா? அந்த ஏ.பி. நாகராசனை சொல்லனும்!

மங்களம் சுப மங்களம்!!

இதற்கு முந்தைய பதிவுகள் இங்கே 1, இங்கே 2, இங்கே 3

ச‌மீப‌த்தில் கேள்விப்பட்ட செய்தி ஒன்று. காத‌லித்த‌ இருவ‌ர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திரும‌ண‌ம் செய்து கொண்டு தமிழ்நாட்டிலிருந்து ‍ஹிமாச்ச‌ல‌ப் பிர‌தேச‌த்திற்கு ஓடி விட்ட‌ன‌ர்! கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு வ‌ருட‌ கால‌த்திற்குப் பிறகு அந்தப் பெண்ணின் பெற்றோர் அலைந்து திரிந்து அவர்களை கண்டு பிடித்து ஏன் இப்படி அவசரப்பட்டீர்கள், நாங்களே உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்று தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர்! அந்தப் பெண்ணோ வாயும் வயிறுமாக இருந்திருக்கிறார். மாப்பிள்ளையை ஹாலில் உட்கார வைத்து விட்டு அவளின் தகப்பனும் அண்ணனும் அந்தப் பெண்ணை வீட்டின் அடுத்த அறைக்கு கூட்டிச் சென்று கடப்பாரையால் குத்தி கொன்று விட்டனர்! சத்தம் கேட்டு ஓடி வந்த மாப்பிள்ளையை பார்த்து "ஒழுங்கா ஓடிப் போயிடு, இல்லை உன்னையும் கொன்றுவோம்" என்று மிரட்டி உள்ளனர். அவர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளையின்ட் கொடுத்து விட்டார். போலீஸ் அவரை பிடித்ததும் பத்திரிக்கைக்காரர்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டதற்கு அந்தத் தகப்பன் [இவரை தகப்பன் என்று சொல்லலாமா?] "அவளால் நான் பட்ட அவமானம் கொஞ்ச நஞ்சமா? இப்போது தான் என் சாதி மக்கள் என்னைப் பார்த்து பெருமைபடுகிறார்கள்! இனிமேல் என் சாதியை சேர்ந்த ஒரு பெண்ணும் இத்தகைய காரியத்தை செய்யத் துணிய மாட்டாள்!" என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறார்! இவர்களை ஒரே வரியில் காட்டுமிராண்டிகள் என்று சொல்லிவிடலாம்! ஆனால் அது காட்டிமிராண்டிகளை கேவலப்படுத்துவதாகும்! ஒரு காட்டுமிராண்டி கூட வாயும் வயிறுமாய் இருக்கும் தன் சொந்த மகளை இவ்வளவு கொடூரமாக கொல்ல மாட்டான் என்றே தோன்றுகிறது...

காதல் திருமணங்கள்/கலப்புத் திருமணங்களைப் பொறுத்தவரையில் பெற்றோர்களின் புரிதலும் அதைத் எதிர்த்து அவர்கள் புரியும் வாதங்களும் வலுவற்றதாகவே இருக்கின்றன! [பெண்ணைப் பெற்றவர்கள் பையன் நல்லவனாய் இருக்க வேண்டுமே என்று அஞ்சி அழுவதைத் தவிர!]
ஒரு பையன் தன் காதலை பெற்றோரிடம் சொன்னவுடன் அவர்கள் எடுத்தாளும் முதல் விஷயம் பாசம்! அவர்களின் பாசம் அந்தப் பையனுக்குப் புரிகிறது என்றாலும் அவனுக்கு இப்போது கிடைத்திருப்பது காதல் என்னும் ஒரு புதிய அனுபவம். என்ன தான் ஒரு பெற்றோர் பாசத்தைக் கொட்டி தன் பிள்ளையை/பெண்ணை வளர்த்தாலும், காதல் என்ற உணர்ச்சியை அவர்களால் கொடுக்க முடியாது! அதனால் பாசத்தை காதலுடன் ஒப்பிடுவது செல்லாது!

பெற்றோர்: நம் சாதி சனம் நம்மை ஒதுக்கி வைத்து விடும், நாம் தெருவில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது, யாரும் நம்மை மதிக்க மாட்டார்கள் என்று ஒரு வாதம்.

காதலிப்போர்: இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் நாம் யாருக்காக வாழ்கிறோம்? என் வாழ்க்கையை என் இஷ்டப்படி வாழ எனக்கு உரிமையில்லையா? நான் ஏன் எப்போதும் அந்த நான்கு பேர் என்ன சொல்வார்கள் என்று அஞ்சி அஞ்சி வாழ வேண்டும்? அந்த நான்கு பேருக்கு வேறு வேலையே இல்லையா? நான் வேறு சாதி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன் என்று எப்போதும் பேசிக் கொண்டிருப்பது தான் வேலையா? அப்படியே கேட்டாலும் பெற்றவர்கள் என் பிள்ளையின் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் என்றால் அதற்கு மேல் அவர்கள் என்ன செய்ய முடியும்? பிழைப்பின் காரணமாக ஏற்கனவே ஊர் மாறி, பேர் மாறி ஒதுங்கிப் போய்த் தான் திரிகிறோம், இதில் இவர்கள் சாதியை விட்டு ஒதுக்கி வைப்பதில் என்ன பெரிய வித்தியாசம்?

பெற்றோர்: நீ இப்படியெல்லாம் செய்தால் உன் பின்னால் இருப்பவர்களுக்கு எப்படித் திருமணம் நடக்கும்? உன் தங்கைக்கும் தம்பிக்கும் வேற்று சாதியிலேயே பார்க்க முடியுமா?

காதலிப்போர்: ஓ! பேஷா!! ஏற்கனவே வேற்று சாதியில் காதலிக்கும் பையனிடமும், பெண்ணிடமும் இப்படி ஒரு கேள்வி கேட்பதே தவறு! அவர்கள் அப்படித் தான் பதில் சொல்வார்கள்!

பெற்றோர்: உனக்கு வயசு பத்தாது. நீ இப்போ ஆசைப்பட்டு கட்டிக்கிறே, இதெல்லாம் நிலைக்காது. இதெல்லாம் சரிப்படாது. உனக்கு ஒரு நல்ல பெண்ணா/பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம்!

காதலிப்போர்: நீங்கள் எனக்கு பார்த்து கட்டி வைக்கும் பெண்ணுடன் நான் சந்தோஷமாய் வாழ்வேன் என்று என்ன நிச்சயம்? அவள் எந்தப் பிரச்சனையும் செய்யாமல் குடும்பத்திற்கு அடங்கி ஒடுங்கி இருப்பாள் என்று உங்களால் உத்தரவாதம் தர முடியுமா? நீங்கள் சொல்வது போல் நாளை இவளாலும் எனக்குப் பிரச்சனை வரலாம், ஆனால் அது நான் எடுத்த முடிவு என்ற திருப்தியாவது எனக்கு மிஞ்சும்! யார் மேலும் பழியை சுமத்தாமல் நானாக என் தலை விதியை நொந்து கொள்வேன்! [இதில் என்ன பிரச்சனை? அவன் இஷ்டம்; அவன் பாடு!]

பெற்றோர்கள் : சரி நாளைக்கு உன் பிள்ளைகளை எந்த சாதிப்படி வளர்ப்பாய்? யாருக்குக் கட்டிக் கொடுப்பாய்?

காதலிப்போர்: என் பிள்ளை யாரை விரும்புகிறதோ அவருக்கு!

சாதி தோன்றி மதம் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்த நெறி காதல்!


ஒரு பையனோ பெண்ணோ, காதலில் விழும் வரை தான் [ஏன் விழும் வரை...எழும் வரை என்று வைத்துக் கொள்ளலாமே] அவர்கள் அவர்களுக்கு பூரணமாய் சொந்தம்! பிறகு ஃபிப்டி ஃபிப்டி தான்! அந்தக் காதலுக்கு அத்தனை சக்தி இருக்கிறது! என்ன செய்வது? ஊர்ல என்ன வேணா நடக்கலாம் என் மகன்/மகள் அப்படியில்லை, நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டான்/ள் என்று நினைப்பதை பெற்றோர்கள் முதலில் நிறுத்த வேண்டும்!

என்னைப் பொறுத்தவரை பெற்றோர்கள் தோளுக்கு மேல் வளர்ந்த பிறகு தோழன் என்று வெறும் வாய்ச்சொல்லுடன் நிற்காமல் செயலில் இறங்க வேண்டும். முக்கியமாக பெண்ணை பெற்றவர்கள்! வீட்டில் எத்தனை பெற்றோர் வயதுக்கு வந்த பெண்ணிடம் காதலைப் பற்றி ஆரோக்கியமான விவாதங்களை நடத்துகிறார்கள்? முதலில் உங்கள் மகள் உங்களிடம் எதையும் மறைக்காத வண்ணம் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். ஏமாற்றுப் பேர்வழிகளைப் பற்றி டீ.வியிலோ, செய்தியிலோ பார்த்தால் அதைக் காட்டி அவளை எச்சரிக்க வேண்டும். தகுந்த நேரத்தில் ஒரு நல்ல வரனை அவள் அழைத்து வந்தால் சாதி மதம் என்ற பேதங்களை தகர்த்தெறிந்து அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துத் தர வேண்டும்!

ஒரு காலத்தில் பெண்கள் அடுப்படியை விட்டு வெளியே வர முடியாத நிலையில், அப்படி வந்த ஒரு பெண்ணை தூற்றியவர்கள் எண்ணற்ற பேராய் இருந்திருப்பார்கள்! பெண்கள் படிக்கக் கூடாது என்ற காலத்தில் புத்தகத்தைத் தூக்கிய பெண்கள் பல அவமானங்களை சந்திருத்திருப்பார்கள்! பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது என்ற காலத்தில் முதலில் வேலைக்குப் போன பெண்கள் கூனிக் குறுகித் தான் போயிருப்பார்கள்! முதன் முதலாய் தன் துணையை தானே தேடிக் கொண்ட பெண்ணை எல்லோரும் வேசி என்று தான் சொல்லியிருப்பார்கள்! இன்றும் அப்படிச் செய்யும் பெண்களை சில பெற்றோர் அப்படித் தான் சொல்கிறார்கள்! எத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் உடைக்கப் பட வேண்டிய நேரத்தில் உடைபட்டே தீரும்!

"புதிய வார்ப்புகள்" என்ற கதையில் ஜெயகாந்தன் கதையின் முடிவில் இதை அருமையாகச் சொல்லி முடிக்கிறார்!

மனிதனே ரொம்பப் பழமையான உலோகம் தான். காலம் தான் அவனப் புதிது புதிதாக வார்க்கிறது. வாழ்க்கையின் அந்த நிர்பந்தத்துக்கு முடிந்தவர்கள் வளைகிறார்கள். வளைய முடியாதவர்கள் உடைந்து நொறுங்குகிறார்கள்.

வளைந்தாலும் சரி, உடைந்தாலும் சரி, காலம் புதிது புதிதாய் மனிதனை வார்த்துச் செல்கிறது. அந்தக் குடும்பம் வாழ்க்கையின் வார்ப்புக்கேற்ப வளைந்திருக்கிறதா, உடைந்திருக்கிறதா அல்லது இரண்டுமே நிகழ்ந்திருக்கிறதா?

டாக்டர் வந்தபின் தெரியும்!

(போறும்!)
இதற்கு முந்தைய பதிவுகள் இங்கே 1, இங்கே 2

பெற்றோர் சம்மதமில்லாமல் ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்வது எல்லா சமூகங்களிலும் காலம் காலமாய் இருந்து வருகிறது. எல்லோர் வீட்டுப் பரணிலும் யாருக்குமே சொல்லப்படாத ஒரு காதல் திருமணம் தூசு படிந்து கிடக்கத் தான் செய்கிறது! மதுரையில் எங்கள் சமூகத்திலும் அது அதிகரித்திருக்கிறது! அதிலும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் எங்கள் சாதி, மதங்களைச் சேர்ந்தவர்களை விடுத்து, வேற்று சாதியினருடனும், வேற்று மதத்தினருடனும் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்வதாக மதுரையில் இருக்கும் என் நண்பர்கள் நான் அங்கு செல்லும்பொழுதெல்லாம் கண்கள் சிவக்க குற்றம் சாட்டுவார்கள்! அவர்களுக்கு, பதிலாக நான் சிந்துவது ஒரே ஒரு புன்னகை தான்!

கலப்புத் திருமணங்கள் இன்று நேற்று நடப்பவை அல்ல. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே நடந்து கொண்டு தானிருக்கின்றன! பிராமணர்கள், ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் போன்ற வருண பேத கால கட்டத்தில், உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவருடன் உடலுறவு வைத்துக் கொண்டு பிறந்த குழந்தையை சண்டாளர் என்று அழைத்தனர்! வேத காலம், இந்து தர்மத்தை ஒவ்வொருவரும் மனதார கடைபிடித்த காலம், பெண்கள் வீட்டை விட்டே வெளியே வராத காலத்திலேயே அப்படி நடந்திருக்கும் போது இந்தக் காலத்தில் கலப்புத் திருமணங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதும், இல்லாததும் பொல்லாததும் செய்தது போல் புலம்புவதும் சிரிப்பைத் தான் வரவழைக்கின்றன!

ஒன்றை கவனித்தீர்களா? ஒரு பெண் தனக்குப் பிடித்தவனை பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டால் அவள் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டவள் என்கிறார்கள்! ஆனால் கூட ஓடும் அந்தப் பையனை ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டவன் என்று சொல்லாமல் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டான் என்று சொல்கிறார்கள்! ஆணுக்கு ஒரு நியாயம்; பெண்ணுக்கு ஒரு [அ]நியாயம்! அது சரி, ஏன் இப்படி ஓடிப் போகிறார்கள்?

எந்த வீட்டில் பெற்றோர் மகனின்/மகளின் காதலை காது கொடுத்து கேட்கிறார்கள் சொல்லுங்கள்? அப்படியே ஒரு பெண்ணோ பையனோ சொன்ன அடுத்த நிமிடம் அம்மா தாரை தாரையாய் கண்ணீர் வடிப்பதும், அப்பா பூமிக்கும் வானத்திற்கும் குதிப்பதுமாக இருந்தால் எந்த பையனும்/பெண்ணும் இவர்களிடம் சம்மதம் வாங்கிக் கொண்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள்?

பையனின் குடும்பத்தை விடுங்கள், அவனையாவது தலையில் தண்ணீர் தெளித்து விட்டு விடுவார்கள்! பெண்கள் தான் பாவமான பாவம்.! அந்தப் பெண் ஒரு செளராஷ்ட்ரிய பையனை காதலித்தாலும், அது எப்படி நீயாக ஒரு மாப்பிள்ளை தேடிக் கொள்வது? எப்படி நீ ஒரு ஆடவனை தலை நிமிர்ந்து பார்க்கலாம்? நான்கு பேர் நம் குடும்பத்தைப் பற்றி என்ன பேசுவார்கள்? நம் மானம் மரியாதை என்ன ஆவது? என்றெல்லாம் சொல்லி ஏதோ அவளின் கற்பே போய் விட்ட மாதிரி [பெண்களுக்கு மட்டும் தான் கற்பு இருக்கிறதென்றால் அப்படி ஒன்று இல்லவே இல்லை] பெற்றோர்கள் நினைக்கிறார்கள்! அம்பிகாபதி, அமராவதி, தேவதாஸ் காலத்திலிருந்து குடும்பத்துடன் உட்கார்ந்து கொண்டு காதல் படங்களாய் பார்க்க வேண்டியது, பக்கத்து வீட்டில் ஒரு பெண் ஓடி விட்டால் அதைப் பற்றி நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிசு கிசு பேசிக் கொள்வது அதே தங்கள் வீட்டில் நடந்து விட்டால் குய்யோ முறையோ என்று அழுது புலம்புவது!

சரி, இத்தனை வீராப்பு பேசியவர்கள், ஓடிப் போனவர்களை அப்படியே தண்ணீர் தெளித்து விட வேண்டியது தானே? அதையும் செய்ய மாட்டார்கள். அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தவுடன் எல்லா வைராக்கியத்தையும் விட்டு விட்டு மறுபடியும் கொஞ்சிக் குலாவிக் கொள்வது? [இப்போது எங்கே போனார்கள் அந்த நான்கு பேர்?] இதையெல்லாம் அடுத்த செட் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பார்கள் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை! எப்படியும் கொஞ்ச நாள் போக்கு காட்டுவார்கள், ஒரு பேரனோ பேத்தியோ பெற்றுக் கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்து அடுத்த ஓட்டம் தயாராகி விடுகிறது! பிறகு அதே ஐய்யோ, அம்மா...மானம் போச்சு, கெளரவம் போச்சு!! ஏன் தேவையில்லாமல் முதலில் அழுது அரற்ற வேண்டும், பிறகு சேர்த்துக் கொள்ள வேண்டும்? ஏன் இந்த கால தாமதம்? உண்மையில் உங்கள் மகன்/மகள் தனக்குத் தகுந்த வரனை அழைத்து வந்தால் பெருந்தன்மையாய் ஏற்றுக் கொள்ளுங்களேன்! அப்படியே அது தவறானதாக இருந்தாலும் அதை தகுந்த ஆதாரத்துடன் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்!

இது என்ன அவ்வளவு சுலபமா? பெற்றோர்களின் பிரச்சனை தான் என்ன? சரி இதற்கு என்ன தான் செய்வது?

(சீறும்)
தொடரின் முதல் பகுதி இங்கே

பின்னூட்டமிட்டு தங்கள் கருத்துக்களை பதித்த அனைவருக்கும் நன்றி! நான் சொல்லியது போல் வீட்டில் சொன்னால் நிச்சயமாக அம்மா அப்பா திட்டத் தான் செய்வார்கள்! நூற்றில் பத்து பேர் கூட இப்படி பெற்றவர்களிடம் பேசுவது அறிதாக இருக்கும் பட்சத்தில் [இதற்கும் அத்தனையும் படித்து கிழித்ததுகள்!] அந்தப் பத்து பேருக்கும் பெற்றோர்கள் சொல்லும் பதில் என்ன தெரியுமா?

1. நீ இப்படி எல்லாம் பெண் வீட்டுக்காரங்களுக்கு பரிஞ்சி பேசினா நாளைக்கு எல்லாத்துக்கும் உன் தலையில மெளகா அரைச்சிருவாங்க...

2. உன் பேச்சை கேட்டுட்டு நாங்களும் எதுவுமே வேணாம்னு சொன்னா நம்ம சாதி சனம் நம்ம பையனுக்கு என்ன குறைச்ச நீங்க ஏன் இவ்வளவு இறங்கி போறீங்க என்று நம்மை கேட்பார்கள்!

3. சரி எப்படி இருந்தாலும் நீ சொல்வது நியாயம் என்றே வைத்துக் கொண்டு, அப்படியே செய்தாலும் "என்ன பையன் எதுவுமே வேணாங்குறான் ஏதாவது குறை இருக்குமோ என்று பெண் வீட்டுக்காரர்கள் நினைத்து விடுவார்கள்.

எப்படி இருக்கு கதை? பெருந்தன்மையாய் ஒருவன் நடந்து கொண்டால் அவன் தலையில் மிளகாய் அரைப்பதா? எதுவுமே வேண்டாம் என்று சொல்பவனுக்கு ஏதாவது இருக்குமோ என்று தப்பு கணக்கு போடுவதா? அத்தனை சந்தேகம் இருந்தால் பையனுக்கும் பெண்ணுக்கும் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை விட்டு இருவரின் உடலையும் பரிசோதித்து மருத்துவ சான்றிதழ் கொண்டு முடிவு செய்யலாமே...

இந்த திருமண வைபவத்தில் நடக்கும் இன்னொரு பெரிய கூத்து ஜாதகம் பார்ப்பது! இத்தனை காலமாக ஜாதகம் பார்த்து செய்து வைத்த கல்யாணங்கள் யாவும் நிலைத்து நிற்கிறதா? எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்களா? யாரிடமும் பதில் இல்லை. இதில் ஜாதகம் கணிப்பதை ஒரு அறிவியல் என்று சொல்லிக் கொள்வது கொடுமையிலும் கொடுமை! சரி பெற்றோர்களின் திருப்திக்காக அது ஒரு அறிவியல் என்றே வைத்துக் கொள்வோம். அறிவியலில் ஒரே விஷயத்தை எத்தனை பேர் பரிசோதனை செய்தாலும் ஒத்த பதிலே வரும்! அப்போது தான் அதை அறிவியல் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இங்கோ, ஒரு பையனின் ஜாதகத்தையும், ஒரு பெண்ணின் ஜாதகத்தையும் இரண்டு வெவ்வேறு ஜாதகம் கணிப்பவர்களிடம் காட்டினால், ஒருவர் அற்புதமாய் பொருந்துகிறது என்றும் மற்றவர் முற்றிலும் பொருந்த வில்லை என்றும் கூறி ஒரேடியாய் குட்டையை குழப்பி விடுகிறார்கள்!! இதனால் இன்னொரு ஜாதகம் கணிப்பவரிடம் சென்று மூனுக்கு முக்காவாசியாக மெஜாரட்டி தீர்ப்பை எடுத்து முடிவெடுக்கிறார்கள்! !

சில சமயங்களில் மிக அற்புதமாக பொருந்தி இருக்கிறது என்று சொல்லி திருமணம் நடந்து மணமகனோ மணமகளோ வாழக் கொடுத்து வைக்காமல் அல்பாய்சில் போய் சேர்ந்து விட்டால், ஏன் இப்படி நடந்தது என்று ஜாதகப் பொருத்தம் பார்த்தவரை உலுக்கினால், அது தான் விதி, தெய்வ சங்கல்பங்கள் அற்ப மனிதனின் கண்ணுக்குத் தென்படாது...சில சமயங்களில் ஜாதகத்தில் அத்தகைய விஷயங்கள் இருந்தாலும் எங்கள் கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்து கொள்ளும் என்கிறார்கள்! அதாவது இதற்கு மேல் நீ கேள்வி கேட்கக்கூடாது என்று அர்த்தம்!

இதில் செளராஷ்ட்ரியர்களுக்கு கோத்திரம் என்ற ஒரு விஷயம் வேறு இருக்கிறது. அதாவது பையனுடைய குடும்பப் பெயரும் [ராமியா, தொப்பே, கொண்டா] பெண்ணுடைய குடும்பப் பெயரும் ஒரே கோத்திரத்தில் இருக்கக் கூடாது, அப்படி என்றால் அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை ஆவார்கள் என்று ஒரு கணக்கு! அடடா...ஒரு நல்ல காரியம் நடப்பதற்கு எப்படி எப்படியெல்லாம் தடைகள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்! பள்ளியில் உறுதிமொழி எடுக்கும் போது "ஆல் இன்டியன்ஸ் ஆர் மை பிரதர்ஸ் என்பதோடு நிறுத்திக் கொண்டு அடுத்த வரியான "அன்ட் சிஸ்டர்ஸ்" என்ற வாசகத்தை பள்ளியிலேயே சொல்லாதவன் நான்! எனக்கு ரத்தம் கொதிக்குமா கொதிக்காதா? சரி, அப்படியே ஒரே கோத்திரத்தில் உள்ள ஒரு பையனும் பெண்ணும் இதெல்லாம் தெரியாமல் காதலித்து விட்டனர்? கல்யாணம் பண்ணித் தொலைக்க வேண்டியிருக்கிறது! அப்போது என்ன செய்வார்கள்? இருக்கவே இருக்கிறது பரிகாரங்கள்! பையனையோ பெண்ணையோ தாய் வழி உறவில் தத்து கொடுத்தது போல் ஒரு சடங்கு நடத்தி இருவருக்கும் ஹோமமும் வயிரும் எறிய திருமணம் நடத்துகிறார்கள்! என்னுடைய கேள்வியெல்லாம் இவை தான்...

1. சின்ன வயதிலிருந்தே பார்த்து பழக்கப்பட்ட ஒரு நல்ல குடும்பத்து பெண்ணை ஜாதகம் சேரவில்லை என்ற ஒரே காரணத்தால் அவளை விட்டு முன் பின் தெரியாத பெண்ணை திருமணம் செய்து வைத்து, அவர்கள் சந்தோஷமாய் இருந்தால் நல்ல விஷயம்! அந்தப் பெண்ணே மாமனாருக்கும், மாமியாருக்கும் எமனாகி விடும் நிலையில் என்ன செய்வது? இப்போது உங்கள் ஜாதகம் என்ன செய்தது?

2. எதற்காக நமக்கு நாமே தேவையில்லாத நம்பிக்கைகளை வைத்துக் கொண்டும், அது மீறும் போது தேவையில்லாத பரிகாரங்களையும் செய்ய வேண்டும்?

3. நீங்கள் ஓடி ஓடி பொருத்தம் பார்த்து சேர்த்து வைத்த அனைவரும் சந்தோஷமாக உள்ளார்களா?

(சீறும்)
செளராஷ்ட்ரியர் குலத்தில் நடக்கும் திருமணங்களைப் பற்றிய பதிவு இது. எல்லா சாதி, மதங்களில் உள்ள சாஸ்திரிய சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் எங்களிடமும் கொட்டிக் கிடக்கின்றன. பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி என்றே நம்பிக் கொண்டு வந்தவர்கள். பெருமாளா? அவரென்ன சொன்னார்? எப்போ சொன்னார் என்று கேள்வி கேட்காதவர்கள். ஊரைக் கூட்டி அருசுவை விருந்திட்டு தம் புத்திரன்/புத்திரியின் திருமண வைபவத்தை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் சுற்றமும் நட்பும் சூழ பெற்றோர்கள் நடத்துகிறார்கள்! ஆனால் அது இறுதியில் எத்தனை பேருக்கு உண்மையில் சந்தோஷம் அளிக்கிறது என்பது மாபெரும் கேள்வி!

பொதுவாக எங்கள் சமூகத்தில் பையனுக்கு 26, 27லும் பெண்ணுக்கு 21, 22லும் வரன் தேடத் தொடங்குகிறார்கள்! [அதுவரை ஓடிப் போகாமல் இருந்தால் :-) ]சமீப காலமாக பெண்களும் கனினித் துறையில் நுழைந்து கொஞ்சம் அல்ல நிறையவே சம்பாதிக்க தொடங்கிவிட்டதைத் தொடர்ந்து அவர்களின் வரன் தேடும் படலம் 24, 25க்குத் தள்ளப்பட்டிருக்கிறது! வரன் தேடத் தொடங்கியதும் பையனின் ஜாதகத்தை உற்றார் உறவினரிடமும், கல்யாண புரோக்கர்களிடமும் கொடுத்து வைத்து பையனைப் பெற்றோர் தம் தேவைகள் அனைத்தையும் ஒப்பித்து விடுகின்றனர்! அதாவது,

1. பெண் நல்ல குடும்பத்தை சேர்ந்தவளாக இருக்க வேண்டும்.
2. என் மகனுக்கு இணையாக படித்திருக்க வேண்டும். அவளும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது என் மகனின் விருப்பம்.
3. வைரத்தோடு சேர்த்தோ (அல்லது) சேர்க்காமலோ [it depends on the demand]ஒரு நாற்பது பவுன் பெண்ணுக்குப் போட வேண்டும்! அதை தவிர்த்து, மாப்பிள்ளைக்கும் ஐந்தோ பத்தோ போட வேண்டும்! [மற்ற சமூகங்களை ஒப்பிட்டால் இது கால் தூசுக்குச் சமம் என்று நினைக்கிறேன்]

எனக்கு ஒன்று புரியவில்லை! ஒரு அம்மா, அப்பா பாசமோடு ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரே பையன்! அதே போல் ஒரு அம்மா, அப்பா அதை விட பாசத்தோடு ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரு பெண்! திருமணம் என்று சொல்லி அவள் கழுத்தில் ஒரு தாலி விழுந்ததும் அவள் அப்பா, அம்மா, உற்றார், உறவினர், சுற்றம், நட்பு, நாய்க்குட்டி வரை அனைத்தையும் அம்போவென்று விட்டு விட்டு அவன் நல்லவனா, கெட்டவனா, குடிகாரனா, பெண்லோலனா இப்படி ஒன்றும் தெரியாமல் அவன் பின்னால் செல்ல வேண்டும்! அப்படி முன் பின் தெரியாத ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட ஒருவள் அன்றிலிருந்து அந்தக் குடும்பத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து அந்தக் குடும்பத்தில் சம்பளம் வாங்காத ஒரு வேலைக்காரியாய் வாழ்வதற்கு தன் வீட்டிலிருந்து பணத்தையும், நகையையும் சீர் செனத்தி என்ற பெயரில் அள்ளிக் கொண்டு வர வேண்டும். இது என்ன பழக்கம்? பெரியவர்கள் செய்தால் ஏதாவது நியாயம் இல்லாமல் செய்ய மாட்டார்கள் என்றால் இது என்ன நியாயம்? தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்!

சரி, தன் செல்ல மகளுக்கு பெருமையோடு பல சவுரன்களைப் பூட்டி அந்தப் பெண்ணின் பெற்றோர் அழகு பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள்..அவர்களால் முடிகிறது அவர்கள் செய்கிறார்கள் அதைத் தடுக்க உனக்கு என்ன உரிமை என்று கேட்பீர்கள்! அவர்களால் முடிந்து செய்கிறார்கள் என்றால் நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை, ஆனால், எங்கே இதனால் தன் மகளின் திருமணம் தள்ளிப்போய் விடுமோ என்று கேட்டதற்கெல்லாம் தலையாட்டி கடன் பட்டு, மரியாதை செய்து, கடைசியில் அவமானப்பட்டு, வாழும் வழியற்று திக்கற்றுத் திரியும் அந்தப் பெண்ணைப் பெற்ற பெற்றோர்களை என்ன செய்வது?

பாசத்தைக் கொட்டி எங்கள் பிள்ளையை வளர்க்கிறோம், என் மகன் கை நிறைய சம்பாதிக்கிறான் கொடுப்பதிற்கு என்ன கசக்குதா என்று மார் தட்டும் பிள்ளையைப் பெற்ற பெற்றோரை பார்த்து எனக்கு ஆச்சரியம்! பையனைப் பெற்றால் ஒரு மாதிரியும், பெண்ணைப் பெற்றால் ஒரு மாதிரியும் பெற்றோர்களால் எப்படி நடந்து கொள்ள முடிகிறது? அப்படியென்றால் பாசத்தைக் காட்டிலும் பணம் தானே முன்னிற்கிறது? அதே இவர்களும் ஒரு பெண்ணைப் பெற்றிருந்தால் தெரியும் என்று நீங்கள் நினைப்பீர்கள். அது தவறு! நாங்கள் எங்கள் பெண்ணுக்கு இத்தனை செய்தோம், எங்களுக்கு வருகிற மருமகள் அதே அளவுக்கு கொண்டு வரத்தானே செய்யனும் என்று பேரம் பேசுவார்கள்! ஏன் இவர்களுக்கு பெண்ணைப் பெற்றவர் படும் அவஸ்தை கண்ணுக்குத் தெரிவதில்லை? அதிலும் பெண்ணைப் பெற்றவர் ஒரு பெண்ணை பெற்றிருந்தால் பரவாயில்லை, அடுத்ததும் பெண்ணாய் இருந்தால் இந்தப் பெண்ணுக்கு என்ன செய்தாரோ அதே மாதிரி தானே அவளுக்கும் செய்ய வேண்டும்? அதை யார் நினைத்துப் பார்க்கிறார்கள்? [சும்மாவா கள்ளிப்பால் உபயோகப்படுத்தப்படுகிறது!]

என்னைப் பொறுத்தவரை பிள்ளையைப் பெற்ற பெற்றோர்களை குறை சொல்லிப் பயனில்லை! அவர்கள் இன்றைய உலகம் அறியாதவர்கள்! இன்னும் பழைய மூட பழக்க வழக்கங்களையும், முகம் தெரியாத அந்த நாலு பேர் என்ன சொல்வார்கள் என்றும் வாழ்ந்து பழகிவிட்டவர்கள்! அவர்கள் ஐந்தில் வளைந்து பழகாதவர்கள்! ஐம்பதில் வளைந்தால் ஒடிந்து விடுவார்கள்! நான் சாடுவது பிள்ளைகளைத் தான்! வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும், தம் பெற்றோர் செய்யும் தவறை ஏன் சுட்டிக் காட்ட மறுக்கிறார்கள்! "என் கல்யாணத்திற்கு நீ பெண் வீட்டில் இத்தனை பவுன் போட்டால் தான் ஆச்சு என்றெல்லாம் கேட்கக்கூடாது, எனக்குப் பெண்ணை பிடிப்பது தான் முக்கியம்! அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடட்டும். என் மனைவியைக் காப்பாற்ற எனக்குத் தெரியும்" என்று எத்தனை பிள்ளைகள் தன் தாய் தந்தையிடம் சொல்கிறார்கள்? அப்படிச் சொல்லாத பிள்ளைகள் என்ன படித்து என்ன சம்பாதித்து என்ன பயன்?

இந்தக் கேள்விகள் செளராஷ்ட்ரிய மாப்பிள்ளைகளுக்கு மட்டுமல்ல...

(சீறும்)
சத்தியமாக இது பெரியாருக்கு சம்மந்தப்பட்ட பதிவல்ல! இணையத்தின் தற்போதைய பெரியோரைப் பற்றியது! இது வலைப்பதிவாளர்களை பொறுத்த வரை ஒரு உருப்படியான பதிவாய் இருக்குமென்று நம்புகிறேன்! இதைப் பற்றி வேறு யாராவது பதிவிட்டிருக்கிறார்களா என்று கொஞ்சம் தேடிப் பார்த்து ஒன்றும் கிடைக்காமல் நானே கோதாவில் இறங்குகிறேன்!

அலுவலகத்தில் சில வால் பையன்கள் இருக்கிறார்கள்! நானும் டெக்னாலஜி தெரிந்த மாதிரியே எவ்வளவு தான் நடிக்க முயன்றாலும் எப்படியோ கண்டுபிடித்து விடுதுகள். இப்படித் தான் ஒரு நா, "தல, இது வொர்க் பண்ண மாட்டேங்குது, கொஞ்சம் பாருங்க" என்றது ஒரு வால்! [மவனே தலன்னு கூப்டா கவுக்க பாக்குற, இருடி உனக்கு இருக்கு...!] கொஞ்ச நேரம் இல்லாத மூளையை கசக்கி பிழிகிற மாதிரி ஆக்ட் குடுத்துட்டு "உன் பக்கத்துல இருக்கே அந்த சிஸ்டத்தை ரீ-ஸ்டார்ட் பண்ணு!" என்றேன். [தலன்னு கூப்டா, தல அமர்க்களம் படத்துல கண்ணாடிய திருப்புன மாதிரி தானே வழி சொல்ல முடியும்!] என் கெட்ட நேரம் அந்த வாலும் அந்த படத்தை பார்த்து தொலைத்திருந்தது! நான் எதிர்பார்த்த மாதிரியே அந்த வாலும், "என்ன தல, அன்னைக்கு பிரச்சனைன்னு சொன்னேன், என் சிஸ்டத்தை ரீ ஸ்டார்ட் பண்ண சொன்னீங்க அதுல ஒரு லாஜிக் இருந்தது! இன்னைக்கு பக்கத்துல இருக்குற சிஸ்டத்தை ரீ-ஸ்டார்ட் பண்ணா என் சிஸ்டம் எப்படி வொர்க் ஆகும்?" என்றது! "அப்போ ஒன்னு பண்ணு IE ஓபன் பண்ணி கூகுளார் கால்ல விழுன்னுட்டு, ஓ ஹாய் கமிங் யா என்று குரு சிஷ்யனில் ரஜினி கவுதமியிடம் எஸ்கேப் ஆவுற மாதிரி நான் அப்பீட் ஆகுறதுக்குள்ள...ஸ்வபா...அப்பவே கண்ண கட்டிருச்சே! சே! சே!!

சரி, மொத பாராவுல சொன்ன மேட்டரே இன்னும் வர்லியேன்னு நீங்க நெனைக்கிறது புரியுது! கம்ப ராமாயணமே படமா எடுத்தாலும் மாளவிகாவோட ஐட்டம் சாங் இல்லைன்னா யாரு படம் பாக்க வருவா? அதோட, இந்த வாரம் நான் யாரு? ஸ்டாரு! சூப்பர் ஸ்டாரு! நம்ம சூப்பர் ஸ்டார் ஃபார்முலா என்ன? காமெடி கலந்த ஆக்ஷன்! அதானே....அந்த மாதிரி என்ன தான் இந்தப் பதிவுல மேட்டர் இருந்தாலும், காமெடி இல்லைன்னா பதிவு எடுபடுமா! அதான் இரண்டாவது பாரா பூரா காமெடி ட்ராகை ஓட விட்டோம்!..இனி ஃபுல்லா மேட்டர் தான்! என்ன தான் காமெடி பண்ணாலும் நாங்கள்லாம் சப்டில்லா மெசேஜ் வப்போம்ல...அந்த காமெடி ட்ராக்ல மெசேஜ் என்னன்னா...... உங்க பேனாவோ, உங்க புள்ளகுட்டியோ, உங்க வாழ்க்கையோ எது தொலஞ்சாலும் கூகுள்ல தேடுங்கோ கோ கோ![ஹய்யோ ஹய்யோ!]

அலுவலகத்தில் ஒரு நண்பரின் மூலம் கூகுளாரின் அனலிடிக்ஸ் அறிமுகம் எனக்குக் கிடைத்தது! இதில் சென்று உங்கள் வலைப்பதிவின் உரலை கொடுத்து அவர்கள் கொடுக்கும் இரண்டு வரிகளை உங்கள் வலைப்பதிவில் இட்டுக் கொண்டால் போதும்! அதற்குப் பிறகு அது கூகுளாரின் பாடு! அடடா...பிரித்து மேய்வது என்று கேள்விப் பட்டிருக்கிறேன், அதை அங்கு தான் பார்த்தேன்! உங்கள் வலைப்பதிவை இஞ்ச் இஞ்சாக அளந்து, ஆய்ந்து, உங்கள் பதிவிற்கு தினமும் எத்தனை பேர் வந்தார்கள், எந்த நாட்டிலிருந்து வந்தார்கள், எந்த வழியாய் வந்தார்கள், எவ்வளவு நேரம் படித்தார்கள், உட்கார்ந்து படித்தார்களா, நின்று படித்தார்களா...அட போங்கப்பா...இனிமே நீங்களே படிச்சித் தெரிஞ்சுக்குங்க!

நீங்கள் செய்ய வேண்டியது

1. What is Google analytics? மொதல்ல படிக்க வேண்டியது!
2. Login @ Google Analytics



3. உங்கள் வலைப்பதிவின் உரலை கொடுக்க வேண்டியது.
4. அவர்கள் கொடுக்கும் இரண்டு வரியை உங்கள் வலைப்பக்கத்தில் அவர்கள் சொல்லும் இடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டியது.
5. பிறகு நேரம் கிடைக்கும்போது லாகின் செய்து உங்களின் வலைப்பதிவின் நிலை என்ன? யாருமே இல்லாத கடையில் நாம் மட்டும் தான் டீ ஆத்திக் கொண்டிருக்கிறோமா அல்லது நாலு பேரு வந்து போற இடமா என்று துல்லியமாக கூகுளார் சொல்வதை கேட்டுக்க வேண்டியது!



என்ன தான் நமிதா நடிச்ச படத்தொட கதை கேட்டாலும், நமிதாவை படத்துல பாக்குற மாதிரி ஆகுமா? அதனால.... என் வலைப்பக்கத்தின் சில பிரித்து மேயப்பட்ட பகுதிகள் உங்களின் பார்வைக்கு!

நவம்பர் 11ம் தேதியிலிருந்து டிசம்பர் 11ம் தேதி வரை என் வலைப்பதிவின் நிலவரம்:

தமிழ்மணத்தின் நட்சத்திர அந்தஸ்தால் பார்வையாளர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டி விட்டது! நன்றி தமிழ்மணம்!



அப்படியே மேலாப்ல! [அதாங்க ஓவர்வீய்]



திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் நம் தமிழர்கள்!



புது வரவும்/வழக்கமான வரவும்



வெவ்வேறு மொழிகள்



எத்தனை விதமான ப்ரளசர்களின் மூலம் என் வலைப்பூ படிக்கப் படுகிறது



எந்தெந்த கனெக்ஷனின் மூலம் என் வலைப்பூ பார்வையிடப்பட்டது



எந்தெந்த இணையத்தளங்களில் என் வலைப்பூவின் இணைப்பு



என் வலைப்பூவை அடையும் குறிச்சொற்கள்



என் வலைப்பூவில் எந்தப் பக்கங்கள், எத்தனை முறை பார்க்கப்பட்டது?



இது என்ன பெரிய விஷயமா? இன்டெர்னெட்ல இப்படி எத்தனையோ கெடைக்குது என்று சொல்பவர்களுக்கு...இது வெறும் ட்ரைலர் தாம்மா, மெயின் பிக்சர் நீ இன்னும் பாக்கலை ரேஞ்சுக்கு அதில் ஏராளமாய் இருக்கிறது! ஆங்கில பதிவுகளாய் இருந்தால் ஆட்சென்ஸையும் கோர்த்து விட்டிருக்கலாம்! தமிழுக்கு இன்னும் அது ஆரம்பிக்கப் படவில்லை! என்னாது? ஆட்சென்ஸ்னா என்னவா? ஆத்தி! ஆள விடுங்கப்பூ....

ஸ்டார் பதிவராய் இருந்து கொண்டும், பச்சை [யாரும் என்னை பச்சை நிறத்தில் கற்பனை செய்து பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!] ரஜினி ரசிகனாய் இருந்து கொண்டும் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் அன்று அவரைப் பற்றிய பதிவு போடவில்லை என்றால் எப்படி என்று யோசித்தேன். சரி எழுதலாம் என்று ஆரம்பித்த்வுடன் தான் தெரிந்தது, எப்பவோ அதைப் பற்றி எழுதி ஆகிவிட்டது என்று! அட ரஜினி....

சரி இப்போது என்ன செய்வது என்று வண்டி ஒட்டிக் கொண்டே யோசித்த போது நேராய் ஒரு மடிசார் மாமியின் பேக்கில் இடித்து, கட்டையில போறவனே என்று என்னை அவர் திட்ட, அதைக் கேட்ட நான் ஐய்யோ, இது பைக் மாமி என்று எஸ்கேப் ஆன போது எனக்கு உதித்தது இந்த யோசனை! என்ன யோசனை?

இது ரீமிக்ஸ் காலம்! ஏன் திரைப்படங்களைத் தான் ரீமிக்ஸ் பண்ண வேண்டுமா? பதிவுகளை ரீமிக்ஸ் பண்ணக்கூடாதா? திடீரென்று அப்படி ஒரு 40 வாட்ஸ் பல்ப் என் மூளையில் பளிச்சிட்டதன் விளைவு இந்த ரீமிக்ஸ் பதிவு! அதாவது வலையுலகின் இலக்கணப்படி ஒரு மீள்பதிவு! எப்படி யோசனை? ஒரிஜினல் பதிவு இங்கே!



சூப்பர் ஸ்டாருக்கும் எனக்கும் பால்ய சிநேகிதம்! ஆனால் அந்த சிநேகிதத்தைப் பற்றி அவருக்கோ வேறு யாருக்குமோ தெரியாது! [தூ..இதுக்கு பிச்சை எடுக்கலாம்!] நேத்து பொறந்த வாண்டெல்லாம் மொட்டை ரஜினி மாதிரி மண்டையை தட்டிக் கொண்டிருக்கும் போது, ரஜினியோடவே வளந்தவங்க நாங்க..எங்க அலம்பலை எல்லாம் கேக்கனுமா?

வயித்தைக் கட்டி வாயைக் கட்டி எங்களை படிக்க வைத்த பெற்றோர் எங்கள் [நானும் என் தம்பியும்] கண்ணை மட்டும் கட்டாமல் எப்போது ரஜினி படம் வந்தாலும் மறுக்காமல் கூட்டிச் சென்றனர்! அது ஒரு காலம்!
"கண்ணா அறுலையும் சாவு, நூறுலையும் சாவு அநியாயத்தை கண்டா சும்மா அடிச்சி தூள் பண்ணு" என்று ஒரு வசனம் பேசி விட்டு சும்மா பறந்து பறந்து அடிப்பேன்!



20 வருடத்திற்கு முன் பரட்டைத் தலையுடன், அடிக்கடி தலையைக் கோதிக் கொண்டு, சட்டை பட்டன் போடாமல், பாதி டக் இன் செய்து கொண்டு, சாக்ஸுக்குள் பேண்ட் விட்டுக்கொண்டு தெருவில் விளையாடும் ஒரு பையனைப் பார்த்திருந்தால் அது சாட்சாத் நானே தான்! என்ன ஒரு சின்ன கஷ்டம், நான் எம்.ஜி.ஆர் கலர்! [அட்றா..அட்றா..]

ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஏதோ ரைம்ஸ் சொல்வது போல் மூன்று முகம் வசனம் அத்தனையும் பேசிக் கொன்டிருப்பேன்! சாம்பிள் பாக்குறீங்களா?

சங்கிலி முருகன்: அலெக்ஸ்!
அலெக்ஸ்: யேய், பேரை சொல்லிக் கூப்ட நாக்க இழுத்து வச்சு அறுத்திடுவேன்!
சமு: போலீஸ் படையே உன் பக்கம் இருக்குன்ற தைரியத்துல தானே எங்களை எல்லாம் தூக்கி உள்ளே போட்ட?
: போலீஸ் படையா? உங்களைப் புடிக்க போலீஸ் படை எதுக்குடா இந்த அலெக்ஸ் பாண்டியனோட நாய் போதும்!
சமு: எங்க பாஸ் பத்தி உனக்கு தெரியாது?
: என்னடா பூச்சாண்டி காட்றியா? யாருடா உங்க பாஸ்? அவன் என்ன பெரிய கொம்பனா?
செந்தாமரை: இல்லீங்க! அவன் அப்படிச் சொல்லலீங்க!
: [கதவருகில் வந்து நின்று] யார் நீங்க?
செ: என்னை பாத்து யார் நீன்னு கேட்ட மொத ஆள் நீங்க தான்!
: பாத்தவுடனே புரிஞ்சிக்கிறதுக்கு நீங்க என்ன அவ்வளவு பெரிய புள்ளியா?செ: நீங்க இந்த டிவிஷனுக்குப் புதுசு, இந்த ஏகாம்பரத்தோட பேரைக் கேட்ட அழுகுற கொழந்தை கூட வாய மூடும்!
: ம்...[பூமை சுற்றிக் கொண்டே] அதே கொழந்த கிட்ட போய் இந்த அலெக்ஸ் பாண்டியன் பேரைச் சொல்லி பாருங்க..இன்னொரு கையால தன் அம்மா வாயையும் மூடும்! [முறைப்பு!]

சரி விடுங்க...பூரா படத்தையுமா எழுத முடியும்! சாவகாசமா வீட்டுக்கு வாங்க...நடிச்சே காட்டிருவோம்! :) [அங்கே யார்ரா அது நியுட்டன் மூன்றாவது விதி என்னன்னு கேக்குறது? என்ன சின்ன புள்ளத் தனமா இருக்கு ரேஸ்கல்ஸ்!]



பழநி சென்ற போது ராகவேந்திரா காப்பு தான் வேண்டும் என்று அடம் பிடித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது! என்று தலைவர் நடு உச்சி எடுக்க ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து நானும் நடு உச்சி எடுத்து தான் சீவுவேன்! அம்மாவுக்கு எரிச்சலாய் வரும்...என்டா இப்படி உச்சி எடுக்குற என்று கேட்பார்...தெரிந்தால் திட்டு விழும் என்று நான் என்னம்மா பண்றது..அதுவா வருது என்று ஓடி விடுவேன்! தலைவரின் படப் பாடல்கள் எப்படி எனக்கு மனப்பாடம் ஆகிறது அது எப்படி இன்று வரை நினைவிலிருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை! ஒவ்வொரு படத்திலும் எல்லா பாடல்களும் அத்துப்படியாய் இருக்கும்! தளபதி சரியாக நவம்பர் 5ம் தேதி 1991ல் தீபாவளிக்கு வந்தது [கஷ்டம்!] . அன்று எண்ணெய் வைத்து தலை குளித்து வந்ததும் டீவியில் ஒளியும் ஒலியுமில் ராக்கம்மா கையத் தட்டு பாடல் ஒளிபரப்பினார்கள். தலைவர் லாங்க் ஷாட்டில் ஒரு மதில் சுவர் மேல் நின்று கொண்டு கையைத் தூக்கி "வக்கிர வானம் அந்த வானையே தைக்கனும் தம்பி விடு ஜோராக" என்றது தாம் தீபாவளி பிறந்த மாதிரி இருந்தது. அதை நான் நவம்பர் 14ம் தேதி 8 மணி ஷோ பார்த்தேன் [ரொம்பக் கஷ்டம்] ! என்ன இவ்வளவு டிலே என்கிறீர்களா, 9ம் தேதியே பார்க்கப் போனேன், டிக்கட் கிடைக்காமல் பக்கத்து தியேட்டரில் ஓடும் ஒரு பாடாவதி படம் [குணா!!!!] பார்க்க நேர்ந்தது! [நிற்க: அப்போது எனக்கு அது பாடாவதி படம் தான்!!]



என்னிடம் யாராவது ரஜினி மென்டல் என்று சொன்னால் போதும், அந்த இடத்தில் உடனடியாய் நான் மென்டல் ஆகி விடுவேன்! அப்புறம் என்ன...இப்புடு சூடு என்று பறந்து பறந்து அடிக்க வேண்டியது தான்! நான் குழந்தையாய் ரசித்த ரஜினி, இன்றைய குழந்தைகளும் ரசிக்கும் போது இப்படியும் ஒரு வாழ்க்கை யாருக்காவது கிடைக்குமா என்று தோன்றும்? சிவாஜி வந்த புதிதில் என் மேனஜர் ஒருவர், ரஜினிக்கு 57 வயசு! எங்க அம்மாவை விட வயசானவர்! என்றார்...அந்த ஒரு கணம் நான் பிரமித்துத் தான் போய் விட்டேன்!

ரஜினியின் சில நச் வசனங்கள்! [இதை யார் சொல்லியிருந்தாலும் இந்த அளவுக்கு பிரபலமாயிருக்குமா என்பது சந்தேகம் தான்!]

டீக் ஹை [மூன்று முடுச்சு]
குருவம்மாக்கு பாவாடை போட்டா கூட நல்லா தான்டா இருக்கும்! இது எப்படி இருக்கு? [16 வயதினிலே]
வச்சுக்க நீ! [போக்கிரி ராஜா]
ஓ! இப்டி ஒன்னு இருக்கோ? [தம்பிக்கு எந்த ஊரு]
கெட்ட பய சார் இவன்! [முள்ளும் மலரும்]

இந்த உலகத்திலே யாரும் உன்னை விட பெரியவன் இல்லை, அதனால நீ யாருக்கும் பயப்படாதே, இந்த உலகத்திலே உன்னை விட யாரும் சின்னவன் இல்லை, அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே! [தில்லு முல்லு]
தீப்பட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினா தான் தீப்புடிக்கும், ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீப் புடிக்கும்!ஜெகஜ் ஜாலக் கில்லாடிட மச்சான்![மூன்று முகம்]
மிஸ்டர். கோபிநாத்! இந்த உலகத்துல தான் தான் பெரியவன்னு யாரும் நெனச்சிடக்கூடாது! அவனுக்கு அப்பனும் பொறந்து இருப்பான்! [மிஸ்டர். பாரத்]
பாஸ், நான் படிச்சா உருப்படமாட்டேன்னு எங்க அப்பா படிக்க வைக்கல, எஸ் கிஸ் மீ! [குரு சிஷ்யன்]

ஒரு மொட்ட, ஒரு மீசை, நாலு ஸ்கூல் பசங்க! இதுக்கு ஒரு தலைவன்!டேய் கந்தசாமி இங்கே வாடா...[ராஜாதி ராஜா]
டேய் தூ! [ராஜா சின்ன ரோஜா, ரஜினி மாதிரி யாரலயும் துப்ப முடியாது!]
இந்த பீடி முடியிறதுக்குள்ள உங்க தலைவன் கதய முடிச்சிட்றேன்! [பணக்காரன்]
ஏன்னா நீ என் நண்பன்! [தளபதி]
உங்களை மாதிரி அகங்காரமும், அகம்பாவமும் புடிச்ச பொண்ணுங்களைக் கண்டா என்ன விட்டுடுங்க, என் தல முடி கூட ஆடாது![மன்னன்]
மலைடா அண்ணாமலை![அண்ணாமலை]
நம்ம ஆளுங்க கிட்ட நம்ம மொழியில பேசுங்க! அதான் நமக்கும் மரியாதை நம்ம மொழிக்கும் மரியாதை [எஜமான்]
ஹவ் இஸ் இட்?[வீரா]
இனிமே உன்னை இந்த இடத்துல பாத்தேன், பாத்த இடத்துலயே குழி தோண்டி பொதச்சுடுவேன்! நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி! [பாட்ஷா]
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது! கிடைக்காம இருக்கிறது கிடைக்காது! [முத்து]
பாத்து வேலை செய்! பாத்தவுடனே வேலை செய்யாதே![அருணாச்சலம்]
என் வழி தனி வழி! [படையப்பா]
இல்ல முருகேஷா...[சந்திரமுகி!]
பேரைக் கேட்டவுடனே சும்மா அதிருதுல்ல![சிவாஜி]



நான் ரஜினி ரசிகன் என்று மார் தட்டியதில் மேல் சொன்னதில் ஏதேனும் பிழை இருந்தால்...எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவுக்கு பரிசை குறைத்துக் கொள்ளுங்கள்![ஐய்யயோ இந்த டயலாக் சிவாஜி பிறந்தநாளுக்கு வேணுமே!]

last but not least....




தலைவா, என் பேரக் குழந்தையும் உங்களை ரசிக்கனும்! அதுவரைக்கும் நீங்க நடிக்கனும்! அம்புட்டுதேன்! லேட் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தலை நிறைய எண்ணெய் வைத்து, அழுத்தி தலை வாரி கழுத்திலும், கையிலும் கருப்பு கயிருடன் வலம் வரும் ஹீரோ! கடுகளவு கூட இடுப்போ, தொப்புளோ தெரியாத ஹீரோயின், பூ விழுந்த கண்ணோடு கூட படிக்கும் ஒரு பெண், எங்க தாத்தாக்கு மேலுக்கு முடியல, அதான் எனக்கு கண்ணாலம் என்று வெகுளியாய் ஒரு பையன், வாழ்வின் கஷ்ட நஷ்டங்களினால் வயதுக்கு மீறிய அனுபவ அறிவுடன் மற்றொரு பெண், கல்லுடைக்கும் வயதான அப்பா, அண்ணன் படிக்கட்டும் என்று தன் படிப்பை தியாகம் செய்து கல்லுடைக்கும் அருமை தங்கை, க்ளாஸில் கைட் விற்கும் புரஃபசர்....இப்படி சினிமாவின் எந்த சாயலும் இல்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது பாலாஜி சக்திவேலின் கல்லூரி!

கல்லூரி என்றாலே ஜீன்ஸ், டீ சர்ட், மினி, மைக்ரோ ஸ்கர்ட் என்று படம் காட்டிக் கொண்டிருந்த கோலிவுட் சற்று மிரண்டு தான் போயிருக்க வேண்டும்! ஆணும் பெண்ணும் கடைசி வரை நட்பாய் பழகவே முடியாதா என்ற கேள்விக்கு கல்லூரியை களமாக்கி அரிதாரம் பூசாத நிஜ மனிதர்களாய் உலவ விட்டிருக்கிறார் பாலாஜி சக்திவேல்!

உள்ளே காலியாக இருந்தாலும் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே வருவது...வீட்டுக்கு போனா அப்பன் தொல்லை, பஸ்ஸுக்கு வந்தா கண்டக்டர் தொல்லை என்று கானா எடுத்து விடுவது, நம்ம க்ளாஸ்லயும் இப்படி ஒரு ஜாரியா என்று பல்லிளிப்பது, வட்டமாக உட்கார்ந்து அனைவரும் உணவை பரிமாறிக் கொள்வது, உள்ளூர் கலவரத்தில் உடைபட்ட பாதையை சாக்கடையில் இறங்கி சரி செய்வது, தம் கூடப் படிக்கும் பெண்டு பிள்ளைகளை ஜாக்கிரதையாக வீட்டில் விட்டுச் செல்வது, நண்பர்கள் புடை சூழ சினிமாவிற்குச் செல்வது, நண்பனின் கல்யாணத்திற்குச் சென்று க்ரூப் ஃபோட்டொ எடுத்துக் கொள்வது, ஒட்டப் பந்தயம் தொடங்கும்போது நண்பன் வெற்றி பெற வேண்டுமே என்று ஓடிச் சென்று திருநீறு பூசி விடுவது, அடுத்த கல்லூரியின் கல்ச்சுரல்ஸ் சென்று பிரச்சனை ஆவது, கல்லூரிச் சுற்றுலாவில் சங்கில் எல்லாருடைய பேரும் எழுதிக் கொள்வது என்று ஒவ்வொரு காட்சியிலும் நம் ஒவ்வொருவரின் கல்லூரி நாட்களையும் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்!

ஜோஷ்வாவின் இசையில் நா முத்துக்குமாரின் வரிகள் கொஞ்சம் காதிலும் விழுகின்றன! படத்தில் பாடல்கள் உறுத்தாத அளவுக்கு அளவாகவும், அழகாகவும் செழியனின் விழியினூடே படம் பிடித்திருக்கிறார் இயக்குநர். வெண்ணீராடை மூர்த்தி மற்றும் வழக்கமாய் கல்லூரி படங்களில் வரும் ப்ரொபசர்கள் இல்லாதது மிகப் பெரிய ஆறுதல். உணர்ச்சிகரமான கட்டங்களை இன்னும் கொஞ்சம் லைட்டாக சொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது, ஏனென்றால் அத்தகைய கட்டங்கள் தியேட்டரில் காமெடி ஆகிவிடுகிறது...

காதல் வெற்றியை தொடர்ந்து இந்தப் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாகி எங்கே இது தோல்வியைத் தழுவி விடுமோ என்பதற்காக அதை தவிர்க்கும் வண்ணம் வரும் பத்திரிக்கை விளம்பரங்கள் தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டம்! இந்தப் படத்தை நீங்கள் பார்த்தே ஆக வேண்டும் என்று நான் சொல்லவில்லை! நீங்கள், "என்ன இப்படி நெஞ்சை நக்குறாய்ங்க" ரகத்தினரானால் கொஞ்சம் கஷ்டம் தான்! ஆனால் அது பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு இல்லை! நட்பையும், காதலையும் சொல்லும்போது அதுவும் கல்லூரி காலங்களில் நடப்பவை என்பதால் அத்தகைய உணர்ச்சி மிகுந்த காட்சிகள் தவிர்க்க முடியாது என்றே நான் நினைக்கிறேன்!

சங்கர் ஒரு நல்ல இயக்குநர் என்பதை விட நல்ல தயாரிப்பாளர் என்ற என் எண்ணம் மேலும் வலுவுற்றிருக்கிறது!
நான் வலையுலகில் என் வலது கையை எடுத்து எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் அகி விட்டன! எதுவுமே வெகு சீக்கிரத்தில் சலித்து விடும் எனக்கு இது ஒரு ஆனந்தம் கலந்த ஆச்சர்யத்தை தருகிறது! ஏனென்றால் எத்தனையோ உருப்படியான காரியங்களை [அவரவர் மனதிற்கு எது சந்தோஷத்தையும் ஆத்ம திருப்தியையும் அளிக்கிறதோ!] எனக்குள் நானே சலித்துக் கொண்டு பல முறை கை விட்டிருக்கிறேன்! அத்தகைய ஒரு உருப்படியான காரியத்தை இவ்வளவு நாட்கள் என்னால் தொடர்ந்து செய்ய முடிந்ததை நினைத்து மிக்க மகிழ்ச்சி!

வலையுலகிற்கும் எனக்குமான உறவு ஒரு தாமரை இலை நீர் போல் ஆரம்பத்திலிருந்தே ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது! நான் வலையுலகில் இருக்கிறேனே தவிர இங்கு நடக்கும் எந்த விதமான விவாதங்களிலும், சம்பவங்களிலும், சம்பிரதாய பேச்சுக்களிலும், ஏச்சுக்களிலும் கலந்து கொள்வதில்லை! என் மனதை மிகவும் பாதித்தாலன்றி எந்த வலைப்பதிவுக்கும் சென்று பின்னூட்ட முதலீடு இடுவதில்லை! [முதல் போட்டால் தானே லாபம் கிடைக்கும்!] அதனால் தான் "இன்று நான் பல் விளக்கவில்லை" என்பது மாதிரியான பதிவிற்கு 105 பின்னூட்டங்கள் வருவதைப் போல் என் பதிவுகளுக்கு அத்தனை பின்னூட்டங்கள் வருவதில்லை! அதைப் பற்றி நான் கவலைப்படுவதுமில்லை! [டோனைப் பார்த்தா கவலைப்படாத மாதிரி தெரியலையே!]

நிறைய வலைபதிவுகளில் பார்த்திருக்கிறேன்! முதல் பின்னூட்டம் "இன்று நான் தான் ஃபஸ்ட்", "நான் வந்துட்டேன்", "அப்பாடா மொதோ கமெண்ட் போட்டாச்சு" என்று நிறைய பின்னூட்டங்களை பார்த்திருக்கிறேன். அது என்ன விளையாட்டு என்று எனக்கு இன்றும் விளங்கவில்லை! அப்படி என்ன சொல்லி வைத்துக் கொண்டு பின்னூட்டமிடுவது என்று எனக்கு புரியவில்லை! அதே போல் போலி டோண்டு யாரை திட்டினார், அனானி கமெண்ட் போடுவது யார்? இட்லி வடை ஆணா பெண்ணா என்பது போன்ற வலையுலக சரித்திர நிகழ்வுகளில் நான் கலந்து கொண்டதே இல்லை! யார் வம்பு தும்புக்கும் போகாமல், யார் மனதையும் புண்படுத்தாமல் ரொம்பவே சமத்து பையனாக நானுன்டு என் வலைப்பூ உண்டு என்று இருந்திருக்கிறேன்! ஒருவேளை அதனால் தான் என்னால் இவ்வளவு நாட்கள் இங்கு தாக்கு பிடிக்க முடிந்ததோ என்னவோ என்றும் தோன்றுகிறது!

இந்த மூன்றரை வருடங்களில் நான் பதித்த வலைகளின் எண்ணிக்கை வெறும் 132 மட்டுமே! இதில் பாதியாவது தேர்ந்த பதிவாய் இருந்தால் சந்தோஷம். சில வலையுலக நண்பர்கள் என் பதிவுகள் படித்து ரசித்து பல சங்கிலிப் பதிவிற்கு என்னை கோர்த்து விட்டிருக்கிறார்கள்! அது பெரும்பாலும் சுயத்தைப் பற்றிய பதிவாகவே இருக்கும். அது எழுத அமரும் போதெல்லாம் மனதுக்குள் கவுண்டமணியின் குரல் "நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இது தேவைதானா" என்று ஒலிக்கும். என் வலைப்பதிவு என்பதால் எனக்கு இது பிடிக்கும், அது பிடிக்காது என்று எழுதுவதால் யாருக்கு என்ன லாபம் என்று ஒரு கேள்வி மனதுக்குள் எழும். அத்தோடு அந்தப் பதிவின் கதை முடிந்து போகும். என்னைப் பொறுத்த வரை ஊர் உலகத்திலுள்ள எதைப் பற்றி வேண்டுமென்றாலும் வெகு சுலபமாய் ஒரு மொக்கை பதிவை எழுதிவிடலாம். ஆனால் உன்னை பற்றி நான்கு வரி சொல் என்றால் போதும்....ஐய்யோ சாமி, மண்டை காய்ந்து விடுகிறது....அதனால் தான் கூடியமட்டும் என் சுய புராணங்களை விட்டு என் மனதை பாதித்த விஷயங்களில் என் பார்வையை செலுத்தி ஒரு நல்ல வலைபதிவராய் என்னை முன்னிருத்த ஆசைப்படுகிறேன்! [என்ன மெசேஜா?]

யாழ்.நெட் காலத்திலிருந்து நட்சத்திர வாரத்தை அறிந்திருந்தாலும், இப்பொது தான் எனக்கு இந்த அந்தஸ்து கிடைத்திருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கமலஹாசன், "என்னை எல்லோரும் சகலகலா வல்லவனாக சொல்கிறார்கள், பரவாயில்லை சொல்லிவிட்டு போகட்டும், மார்க்கெட்டுக்கு உதவும்...நான் சகலகலா மாணவன் என்பது தான் உண்மை!" என்று சொன்னதைப் போல் இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த அந்தஸ்து கிடைத்தாலும் சரி இப்போதாவது கிடைத்ததே, மார்க்கெட்டுக்கு உதவும் என்று நினைத்து, சகலகலா மாணவனாக முன்னேறுகிறேன்....வழக்கம்போல் உங்களின் ஆசிர்வாதங்களுடன்!
ராஜாதி ராஜ மகா ராஜ வீர பிரதாப
ராஜாதி ராஜ மகா ராஜ வீர பிரதாப
ராஜாதி ராஜன் வந்தேனே...வந்தேனய்யா....

வந்தனம் தந்தேனைய்யா!
வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனைய்யா!!
சாமி...
வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனைய்யா!!
தத்தோம் தரிகிட..தித்தோம் திரிகிட தா!!

பெரியோர்களே! சபையோர்களே...

இன்று தொடங்கும் என் நட்சத்திர வாரத்திலே சொற்குற்றம் பொருட்குற்றம் எக்குற்றம் இருப்பினும் குற்றத்தை மறந்து குணத்தை மட்டும் கொள்ளும்படியாக தாழ்மையுடன் தண்டியிட்டும் மண்டியிட்டும் கேட்டுக் கொள்கிறேன்!!

டேய் மூடா சோடா!!

க்ளுக் க்ளக்....

ஆ! வர சொல்லு வர சொல்லு....
சமீபத்தில் விகடனில் வந்த சாப்ளீனின் தொடர் என்னை மிகவும் கவர்ந்தது. அதன் உந்துதலால் சாப்ளீனின் படங்களாய் பார்க்க ஆரம்பித்தேன். நான் வாங்கும் டிவிடி கடையில் ஆரம்ப காலங்களில் அவர் இயக்கி நடித்த குறும்படங்களே கிடைத்தன. வெகு காலமாய் சாப்ளீன் ஹிட்லரை கேலி செய்து நடித்த படத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அது சமீபத்தில் நிறைவேறியது...

"க்ரேட் டிக்டேட்டர்" - இது சாப்ளீன் பேசிய முதல் படம்.

இந்தப் படத்தில் ஒரு யூத சவரத் தொழிலாளியாகவும், ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரியாகவும் இரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் என்னமாய் நடித்திருக்கிறார். இந்தப் படம் அவர் வழக்கமாய் நடிக்கும் கேலிச் சித்திரம் அல்ல...சர்வாதிகாரிகளையும், போலியான மனித வாழ்வையும் அத்தனை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இதற்கு மேல் நான் படத்தைப் பற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை. என்னால் சொல்லவும் முடியாது...இந்தப் படத்தின் இறுதியில் சாப்ளீன் தன்னுடைய கதாபாத்திரதிலிருந்து விலகி அசல் சாப்ளீனாகவே மாறி மனிதம் மறந்து போன மனிதர்களை தன் பேச்சு வன்மையால் விளாசித் தள்ளுகிறார்.அந்த உரையை தான் கீழே திரையிட்டுருக்கிறேன்!



பிற்காலத்தில் அந்த சொற்பொழிவின் உன்னதத்தை உணர்ந்து அமேரிக்க அரசாங்கமே அதை வானொலியில் வாசிக்குமாறு அவரை பணித்தது. நியுயார்க் டைம்ஸில் அந்த ஆண்டின் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக "க்ரேட் டிக்டேட்டர்" தேர்வு பெற்றது.

எனக்கு இரண்டு வருத்தங்கள்!

1. மார்டின் லூதர் கிங் ஆற்றிய பிரபலமான சொற்பொழிவு "ஐ ஹேவ் அ ட்ரீமை" போல் ஏன் இது அத்தனை பிரபலம் அடையவில்லை!
2. பேசும் படங்கள் இன்னும் சற்று முன்னதாகவே வந்திருக்கலாம்!
யாரும் பார்க்காத
வேளையில் - அதைப் பற்றி
எந்தக் கவலையுமில்லாமல்
மொட்டு ஒன்று
மெல்ல பூக்கிறது!

நின்ற நிலை கடந்து
அமர்ந்த நிலை அற்று
தவழ்ந்து வரவும் தெம்பின்றி
தனியே - பசியில்
சாகிறது ஒரு ஜீவன்

ஜாதியின் பெயராலோ
மதத்தின் பெயராலோ
ஒரு அழகிய காதலை
தீயிட்டுக் கொளுத்துகிறது
ஒரு கூட்டம்

எங்கோ ஒரு இடத்தில்
யாரோ ஒரு பெண்ணை வன்புணர
துரத்திக் கொண்டு
ஓடுகிறது ஒரு கூட்டம்!
அவளின் மரண ஓலம்
செவிட்டில் அறைகிறது!!

முந்தானையை பிடித்துக் கதறும்
குழந்தையின் கையை விலக்கிவிட்டு
சத்தமில்லாமல் அழுது கொண்டே
போகிறாள் ஒரு தாய்

கிழக்கே இரவை நோக்கியும்
மேற்கே பகலை நோக்கியும்
நாட்கள் உருண்டோடுகின்றன

தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும்
குழந்தை ஒன்று - சிறிதாக
ஒரு புன்னகை பூக்கிறது...
பாண்டி அந்த போலீஸ் ஸ்டேஷனையே வைத்த கண் வாங்காமல் ஒரு பீலிங்கோடு பார்த்துக் கொண்டு இருக்கிறார். ஒரு கேஸை கூட உருப்படியா பிடிக்காததால் வேலைய விட்டே தூக்கிட்டாங்க! அதே ஸ்டேஷனில் அவர் ராஜ நடை போட்டது அவர் கண் முன் விரிகிறது...

டக் டக் என்று கம்பீரமான ஒரு பூட்ஸ் சத்தம் கேட்கிறது...ஒரு கருப்பு கூளிங் கிளாஸில் ஸ்டேஷனுக்குள் நுழைகிறார். வாசல் படி
தடுக்கி கீழே விழுகிறார்.

பாண்டி: [கான்ஸ்டபிளைப் பார்த்து] யு, ஸ்டுப்பிட் அண்ட் நான்சன்ஸ் ஆல்சோ...ஸ்டேஷனை சுத்தமா மெயிண்டைன் பண்ண வேணாம்?
இருளடைஞ்சி போயிருக்கு! கண்ணே தெரியலையே...
கான்: சார் நீங்க கூளிங் க்ளாஸை கழட்டினா...
பாண்டி: ஓ, மை சீ...[கழட்டிக்கொண்டே] ஆல் ரைட் ஆல் ரைட்...[வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது!]
கான்: சார், இவர் தான் நம்ம ஸ்டேஷன்ல புதுசா சேந்துருக்குற கான்ஸ்டபிள்..பேரு சுப்பையா சார்!பாண்டி: சுப்பையாவோ, குப்பைய்யாவோ, நான் கடமை கண்ணியம் காக்கிச்சட்டைன்னு வாழ்றவன்...எனக்கு கடமை தான் முக்கியம்!
சுப்: சார் உங்களைப் பத்தி எனக்கு நெறைய டவுட் இருக்கு சார்..கொஞ்சம் க்ளியர் பண்றீங்களா...
பாண்டி: கோ கோ...[சுப்பையா போகிறார், அவரை அழைத்து...]கேளுன்னு இங்கிலீஷ்ல சொன்னேன்..இங்கிலீஷ் தெரியுமா?
[சுப் முறைக்கிறார். பாண்டி முழிக்கிறார்!]
சுப்: அது கோ அஹெட்டு...
பாண்டி: [மனதுக்குள்] ஆஹா, நம்மகிட்ட வர்றவங்க மட்டும் டான்பாஸ்கோ ஸ்கூல்ல படிச்ச மாதிரி டான் டான்னு இங்கிலீஷ் பேசுறாங்களே...ஒரு வேளை என்கிட்ட அனுப்புறதுக்கு முன்னாடி இங்கிலீஷ்ல ட்ரயின் பண்ணி அனுப்புறாங்களோ?
சுப்: சார்....உங்க நடை உடை தோரணை எல்லாம் பாக்கும்போது ஒரே மிரட்டலா இருக்கு..ஆனா நீங்க ஏன் சார் இந்த சிரிப்பு போலீஸ் மாதிரி சின்னதா மீசை வச்சுருக்கீங்க...
பாண்டி: [சிரிப்பு போலீஸா, இங்கேயும் ஆரம்பிச்சிட்டாங்களா...]குட் கொஸ்டீன்! நானும் ஒரு காலத்துல வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி தான் மீசை வச்சிருந்தேன்! ஆனா ஒரு சங்கிலித் திருடனை துரத்திப் புடிக்கும் போது நான் ஒரு எடத்துல எம்பிக் குதிச்சதுல ஒரு பக்கத்து மீசை என் கண்ணையே குத்திருச்சு! அதனால அன்னைக்கு என்னால அந்தத் திருடனை புடிக்க முடியலை...என் மீசையாலயே என்னோட காக்கிச்சட்டைக்கு களங்கம் வரனுமான்னு யோசிச்சேன்! பாக்க சிரிப்புப் போலீஸா இருந்தாலும், உள்ளே
நெருப்பு போலிஸா இருப்போம்னு முடிவு பண்ணேன்! வெளியே நான் சாப்ளீனா இருந்தாலும் எனக்கு உள்ள ஒரு ஹிட்லர் மல்லாக்கப் படுத்து தூங்கிகிட்டு இருக்கான்றதை நீ மறந்துராதே...
சுப்: சூப்பர் சார்...வெளியே சிரிப்பு போலீஸ்; உள்ளே நெருப்பு போலீஸ்! அள்ளிட்டீங்க சார்...
பாண்டி: யோவ், இது என்ன பெருமாள் கோயிலா அள்றதுக்கு, நெக்ஸ்ட் கொஸ்டீனை ஐ சே!
சுப்: சார் இதுவரைக்கும் நான் வேலை பாத்த ஸ்டேஷன்ல எல்லாம் ரவுடிங்களுக்கு தான் ரவுடி ரங்கன், செயின் ஜெயபால், சைக்கிள் சூசை, ஜேப்படி ஜெகதீஸ்னு பேரு இருக்கும். உங்களுக்கு ஏன் சார் டூமில் பாண்டின்னு பேர் வந்தது...
பாண்டி: கம் டு த பாயிண்ட்! [மனதுக்குள்: எதுக்கு வம்பு தமிழ்லையே பேசுவோம்!] நான் நெனச்ச கேள்விக்கு வந்துட்டே...சொல்றேன்
கேளு...அது 1999ம் வருஷம். அப்போ நான் ஏட்டா இருந்தேன்...
சுப்: அப்பவுமா?
பாண்டி: [முறைத்து விட்டு] காமன் சென்ஸ்! கதைய கேளு மேன். எங்களுக்கு ஒரு பயங்கர கொள்ளைக் கூட்டத்தைப் பத்தின துப்பு கெடச்சது. வீரத்துக்கும் விவேகத்துக்கும் பேர் போன என்னை நம்பி ஒரே ஒரு கான்ஸ்டபிளோட அந்தப் பெரிய கூட்டத்தை பிடிக்க அனுப்சாங்க! அவங்க எல்லாரும் அந்த பாழடஞ்ச கட்டடத்துல இருந்தாங்க...நாங்க ரெண்டு பேரும் அந்த இடத்தை சுத்தி வளைச்சுட்டோம்!
சுப்: ரெண்டு பேர்.....! சுத்தி...அப்புறம்...

[காட்சி விரிகிறது]

பாண்டி: [மைக்கை எடுத்து] ஹாய் ப்ரண்ட்ஸ்! [ஹா ஹா...சற்று கர்ஜித்து விட்டு] நீங்க யாரும் எங்க இரண்டு பேர் கிட்ட இருந்து தப்ப முடியாது. உங்களை சுத்தி வளைச்சுட்டோம்! ஏட்டுப் பாண்டியா கொக்கா! [ஹா ஹா] தப்பிக்க நெனைச்சா என் துப்பாக்கி இரையாயிடுவீங்க...[துப்பாக்கியை எடுத்து வானில் சுடுகிறார். அதில் தோட்டாவே இல்லையென்று அப்போது தான் தெரிகிறது!]

[இண்டெர் கட்]

சுப்: ஐய்யயோ, அப்புறம் என்ன பண்ணீங்க...பாண்டி: இதுக்கு முன்னாடி என் வீரத்தை பாத்தே, இங்கே என் விவேகத்தை பார்...

[மறுபடியும் காட்சி]

கான்1: என்ன சார், தோட்டா இல்லையா...
பாண்டி: அதான் எனக்கு குழப்பமா இருக்கு!
கான்1: இப்போ எப்படி சார் அத்தன பேரையும் புடிக்கிறது?
பாண்டி: நீ ஒன்னும் கவலைப்படாதே..இப்போ பார்!
[உள்ளேயிருந்து ஒருவன், என்னங்க ஏட்டு துப்பாக்கி சத்தமே வர்ல...]
பாண்டி: இப்போ கேளுங்கடா...ஹா ஹா... டுமீல் டுமீல்...டுமீல் டுமீல்...[வாயால் "டுமீல்" "டுமீல்" என்று பாண்டி கத்துகிறார்]
[ஒரே நிசப்தம்!]
பாண்டி: என்னங்கடா சத்தத்தையே காணோம்! எல்லாம் பயத்துல ஒன்னு, ரெண்டுன்னு போயிட்டீங்களா...
[உள்ளேயிருந்த கொள்ளைக் கூட்டம் வெளியே வருகிறது]
பாண்டி: [கான்ஸ்டபிளைப் பார்த்து] பாத்தியா அத்தனை பேரும் சரண்டர்...ஹா ஹா..
தலைவன்: ஆமா, எங்கே இன்னொரு தடவை சுடுங்க..
பாண்டி: [பழக்க தோஷத்தில் டுமீல் டுமீல் என்று சத்தம் போட]
தலைவன்: இவ்வளவு நாள் காக்கிச்சட்டையோட வீரத்தை தான் பாத்துருக்கேன், இன்னைக்கு தான் அதோட அறிவுக் கொழுந்தை
பாக்குறேன்!
[பாண்டி கர்வமாய் கான்ஸ்டபிளை பார்க்கிறார்]
தூத் தேரி...திருடன் போலிஸ் வெளையாட்றவனை எல்லாம் போலிஸ்
ஆக்கிட்டானுங்க! உன் கைல பிடிபட்றதுக்கு நாண்டுட்டு சாவலாம்டா....தூ! துப்பாக்கியில தோட்டா இல்லையாம், அதனால இவர் டுமீல் டுமீல்னு சவுண்ட் விடுவாராம், அதை கேட்டு நாங்க ஒன்னுக்கும், ரெண்டுக்கும் போயிடுவோமாம்! எங்களை இவ்வளவு கேவலப்படுத்திட்டியேடா...உன்னை....[பாண்டிக்கு தரும அடி விழுகிறது]
பாண்டி: [முடிந்ததும்...மனதுக்குள்] ஆரம்பிக்கும்போது நல்லா தான் ஆரம்பிக்கிறாங்க...முடிக்கும் போது தான்...நாம கொஞ்சம் ஓவரா
தான் போயிட்டோமோ?

[காட்சி முடிகிறது]

சுப்: தூ...
பாண்டி: என்ன நீயும் துப்புற?
சுப்: இதெல்லாம் ஒரு கதை...இதுக்கு ஒரு ப்ளாஸ் பேக் வேற...
பாண்டி: [மனதுக்குள்] மொதல்ல பேர் காரணத்துக்கு நல்ல ஒரு கதையா டெவலப் பண்ணனும்! ஆளாளுக்கு துப்புறாங்களே...
வலைபதியாததற்கு அலுவலகத்தில் வேலை என்று இப்போது சாக்கும் சொல்ல முடியாது! ப்ராஜக்ட் முடிந்து விட்டதால், போய் எங்காவது ஒழி என்று இரண்டு வாரம் லீவு கொடுத்து அனுப்பி விட்டார்கள்! சும்மா இருப்பதே சுகம் என்று வீட்டில் தான் இருக்கிறேன்! ஆனாலும் ஒரு வாரம் எப்படி போனதென்றே தெரியவில்லை!!

முதல் நாள் முழுவதும் வீட்டில் இருந்தேன் என்று நினைக்கிறேன்! கொஞ்சம் பயம் வந்து விட்டது. என்னடா அலுவலகத்தில், நாங்கள்ளாம் எப்படியெல்லாம் கோட் அடிச்சோம் தெரியுமா என்று தாம் தூம் என்று குதித்து லீவு வாங்கினோமே, இந்த ஒரு நாளுக்கே பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறதே என்று பகீரென்றது! சரி வீட்டில் இருக்கக் கூடாது, எங்காவது சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஞானம் வந்தவுடன் எல்லாம் சரியாகிவிட்டது!

அந்த ஞானத்தின் விளைவாக என் நண்பன் ஒருவன் செங்குன்றத்தை தாண்டி ஒரு கோயில் இருக்கிறது. அங்கு சென்று வந்தால் சீக்கிரம் திருமண பாக்கியம் கிட்டுவதோடு வீடு, மனை வாங்கும் சுப காரியங்களும் நடைபெறும் என்று சொன்னான்!! அடேய் நான் ஆல்ரெடி வீடு வாங்கியாச்சே அது கைய விட்டு போகாதுல்ல என்று அப்பாவியாய் கேட்ட என்னை பொருட்படுத்தாது அந்தக் கோயிலுக்கு கூட்டிப் போனான்! போகும் வழியெல்லாம் என் சிந்தனைகள் இங்கு சில பத்திகளாக...

அவன் சொன்ன கோயில் செங்குன்றத்தை தாண்டி கொல்கத்தா ஹைவேயிலிருந்து சிறுவாபுரி என்ற இடத்தில் ஒரு டீ கடை சந்தில் திரும்பி வயல் வரப்புகளை கடந்து போனால் வருகிறது. அங்கு சீண்டுவாரேயில்லாமல் அப்பாவியாய் ஒரு முருகன் காட்சியளிக்கிறார்! சரி சிறுவாபுரியின் சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு அந்த டீ கடையில் வேலை பார்க்கும் சிறுவர்கள் இரண்டு பேர் சேர்ந்து அந்தக் கோயிலைப் பற்றி இப்படி ஒரு கதை கட்டி விட்டிருப்பார்கள் என்று தான் நான் நினைக்கிறேன்! நான் போய் இறங்கியதும் என் நண்பர்களை முறைத்து சொன்னது, "நான் ஐ பாட் வச்சிருந்ததாலே நீங்க தப்பிச்சீங்க!!" உடனே என் நண்பன் நீ தான் சாமி கும்பிட மாட்டியே ஹெல்மெட்டை வச்சுக்க என்றான்! எனக்கு அப்போ தான் வெளங்கிச்சு இதுக்கு தான் நம்மள கூட்டிட்டு வந்திருக்காங்கன்னு...ஹைய்யோ...ஹைய்யோ!!

அது ஒரு சின்ன கோயில் தான், சுற்றுலா துறையினரின் [டீ கடை பசங்க] புத்திசாலிதனத்தால் கோயிலை புதுப்பிக்கும் அளவிற்கு பொருள் சேர்ந்திருக்கிறது! பாவம் முருகன் வழக்கம் போல் குபு குபுவென்று கொதிக்க கொதிக்க உஷ்ணத்தில் நிற்கிறார். அய்யர் சற்றே வெளியில் வந்து பக்தர்களுக்கு விபூதி கொடுக்கும் இடத்திற்கு டைல்ஸ் ஒட்டி ஸ்ப்ளிட் ஏசி எல்லாம் பொருத்தியிருப்பது கொஞ்சம் ஓவர்! என் நண்பன் முருகனிடம் உருகி வேண்டிக் கொண்டிருந்தான்! போதும் வாடா, ஒன்னுக்கு ரெண்டு கல்யாணம் ஆயிட போகுது என்றேன்...அதற்கு அவன், இருடா, ஒன்னுக்கு ரெண்டு வீடா கெடச்சுட்டா என்றான்! அடக் கடவுளே....

அப்போது மணி மாலை ஒரு ஆறு இருக்கும். அந்த நேரத்தில் கூட கோயிலில் எங்கள் மூவருடன், அந்தக் கோயில் அய்யர், இன்னும் சிலர், அப்புறம் ரொம்ப கொசு...அவ்வளவு தான்! என் நண்பன் ஒருவனுக்காகவே அய்யர் ஓடி ஓடி எல்லா கடவுளுக்கும் லைட் போட்டு தீபாராதனை காட்டி...என்ன ஒரு ஸ்பெஷல் கவனிப்பு!! அங்கு சுற்றுலா துறையின் ஒரு அதிகாரி நான்கு கற்களை பொறுக்கி வைத்துக் கொண்டு சார், வீடு கட்டுங்க சார் நெனச்சது நடக்கும் என்றார்! எனக்கு தூக்கி வாரிப் போட்டது...ஓஹோ சிச்சுவேஷனை மெயின்டெய்ன் பண்றீங்களா..ஆமா சார் இங்கே கன்ஷ்ட்ரக்ஷன் காஸ்ட் என்ன போகுதுன்னு ஒன்னும் எஸ்கலேஷன் ஆகலையா என்று கேட்டிருக்கலாம்! சரி போனா போகுதுன்னு விட்டுட்டேன்! விட்டுட்டேன்!!

இதையெல்லாம் விட ஒரு கொடுமையை எல்லா கோயில்களிலும் நான் பார்ப்பது; இருபது ரூபாய் பல்பை வாங்கி மாட்டி விட்டு அதற்கு அவன் முழு முகவரியோட உபயம் எழுதுவது!! இந்தக் கோயிலும் அதற்கு விதி விலக்கல்ல! முருகன் முகத்தைத் தவிர அனைத்திலும் உபயம் இருந்தது! ஒரு வேளை ப்ரஹாரம் இருட்டாக இருப்பதால் அங்கு இருக்கும் உபயம் தெரியவில்லையோ என்னமோ! ஒரு அழகான முருகன் படத்தை அய்யர் கொடுத்தார், நன்றாக இருக்கிறதே என்று நம்பி வாங்கிப் பார்த்தால் முக்கால் படம் முருகனுக்கு, மீதி கால் படம் விளம்பரத்திற்கு!!

துக்கம் வரும் சமயத்தில் ஆறுதலாய் இருப்பதற்காக கடவுள் என்ற பாத்திரத்தை மனிதன் படைத்தான்! கஷ்டம் வரும்போதெல்லாம் அதோ கடவுள் வருவார், அவர் நமக்கு எல்லா செல்வங்களும் அள்ளித் தருவார், நம் கஷ்டங்களை எல்லாம் போக்குவார்...இந்த ஜென்மம் இல்லாவிட்டாலும் அடுத்த ஜென்மத்திலாவது நம் வாழ்வு செழிக்கும் என்று நம்பி காலம் தள்ளினான்! இன்று அந்த நம்பிக்கையும் நீர்த்துப் போய் எத்தனை போலியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! கடவுள் கடவுள் என்று இல்லாத கடவுளின் பெயரை சொல்லி இருக்கும் சக மனிதனை ஏமாற்றிப் பிழைப்பது என்ன பிழைப்பு? திருமணமாக ஒரு சாமி, குழந்தை பெற ஒரு சாமி..இப்படியே போனால் அந்தக் கோயிலுக்கு போ, வீட்டு குழாயில் தண்ணீ வரும், அந்தக் கோயிலுக்குப் போ வீட்ல கரண்டே போகாது என்று கூட சொன்னாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை!!

என் நண்பர்களை போல் பலர் இருக்கிறார்கள்! இத்தகைய விஷயங்களில் நான் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதிலில்லை!! ஆனாலும் அவர்கள் அந்த மூட நம்பிக்கைச் சேற்றுக்குள் சுகமாகவே மூழ்கிக் கிடக்கிறார்கள்! என்னுடன் தானே படித்தார்கள் என்று அவர்களின் கல்வியையும், பகுத்தறிவையும் அதே சேற்றில் என் கையால் துழாவுகிறேன்! துழாவிக் கொண்டேயிருக்கிறேன்!!