Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts
ஊர்மிளா உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் ஹிந்தியை வெறுத்தது தெரிந்தும் அவரின் பல படங்கள் தமிழுக்கு டப் செய்யப் பட்டன. அப்படி "Daud" என்ற படமும் வந்தது. படத்தில் உடலை ஒட்டிய ஜீன்ஸ் அணிந்து அவர் குளித்த போது நனைந்தது அவர் மட்டுமல்ல. [யூட்யூபில் இருக்கும் "Daud" படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடுவதற்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு நான் காரணமாய் இருக்க போகிறேன் என்று எனக்குத் தெரியும்!] "Daud" வந்திருந்த போது, என் ஹிந்தி தெரியாத நண்பன் ஒருவன், "தாவுது" வந்திருக்கிறது என்றான். பிறகு தான் புரிந்தது எனக்கு, அது "தாவுது" இல்லடா, "தவுட்", அப்படி என்றால் "ஓட்டம்" என்று அர்த்தம் என்றேன்.இப்போது "தங்கல்" படத்தை டப் செய்திருக்கிறார்கள். ஹிந்தி தெரியாமல் போஸ்ட்டரில் பேரை பார்ப்பவர்கள், அமீர் கான் ஒரு இடத்தில் சில பெண்களுடன் "தங்கி"ப் போவது தான் படத்தின் கதை போல என்று எண்ணிக் கொள்ள வாய்ப்புண்டு. அதனால் முதலில் அதை தெளிவு படுத்தி விடுகிறேன். தங்கல் பெயரை  "தங்கத்தின்" த கொண்டு உச்சரிக்காமல் "தவத்தின்" த கொண்டு உச்சரிக்க வேண்டும். "தங்கல்" [தவத்தின் "த"!!!] என்றால் மல்யுத்த போட்டி என்று அர்த்தம். [டே, படம் வந்து ஒரு மாசம் ஆச்சுடா...விமர்சனம் போடறதே தப்பு, இதுல விளக்கம் வேறயா!!] தமிழில் படத்தை டப் செய்யும்போது அதற்கு தமிழிலும் பெயர் வைக்கலாம்.



அமீர் கான் எனக்கு ஆதர்சம். எனக்குத் தெரிந்து கடைசியில் அவரின் தோல்வி படம் "மங்கள் பாண்டே" (2005) என்று நினைக்கிறேன். அதுவும் அவரின் முந்தைய படங்களின் வசூலை முறியடிக்கத் தான் செய்தது. மனிதர் நல்ல கதையை தேர்ந்தெடுப்பதில் கில்லியாக இருக்கிறார்.

தங்கல் ஒரு உண்மைக் கதை. ஹரியானாவில் வசிக்கும் மகாவீர் சிங் போகத் என்பவர் தன் இரு மகள்களை எப்படி மல்யுத்த வீராங்கனைகளாக்கி இந்தியாவுக்கு தங்கத்தை தருவித்தார் என்பது தான் கதை. அவரின் சொந்த வாழ்வில் இருந்த கஷ்டங்களோடு, சின்ன சின்ன சுவாரஸ்யங்களையும் சேர்த்து மிக அழகான திரை வடிவமாய் அளித்திருக்கிறார்கள்.

படத்தின் முதல் பலம் நடிகர்கள் தேர்வு. அமீர் கான், சாக்ஷி தன்வர், முதல் பாதியில் வரும் சிறுமிகள், வளர்ந்த பிறகு வரும் பெண்கள், அமீரின் மருமகனாக வருபவர்கள், கோச்சாக வருபவர். அத்தனை பேரும் அசத்தல் தேர்வு.

ஆமீர் மிகவும் தன்மையான தந்தையாய் மிக அற்புதமாய் செய்துள்ளார். வயதுக்கேற்ப தன உடல் எடையை கூட்டியது சரியான முடிவு. ஏன் என்றால் அதுவே அவரின் உடலைசைவை, உடல்மொழியை முற்றிலும் மாற்றி விடுகிறது. அதனால் அவர் செய்வதெல்லாம் இன்னும் யதார்த்தமாய், உண்மையாய் திரையில் வெளிப்படுகிறது. சிறிதே சிறிது நேரம் வரும் இள வயது அமீருக்காக உடலை இந்த அளவுக்கு மாற்ற வேண்டுமா என்று ஆச்சர்யமாய் இருந்தது.

சாக்ஷி தன்வரை இது வரை இந்தி சீரியலில் பார்த்திருப்போம். அவர் மிகச் சரியாய் அந்த கதாப்பாத்திரத்துக்கு பொருந்தி உள்ளார்.

இரு குழந்தைகளையும், இரு பெண்களையும் கிட்டத்தட்ட உண்மையான மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றியது போல் இருக்கிறது அவர்களின் நடிப்பு. பெண்ட் எடுத்துள்ளனர். படத்தில் குழந்தைகளிடம் இனி குஸ்தி போட வேண்டும் என்று அமீர் சொன்னவுடன், ஒரு பாடல் வருகிறது. அதன் முதல் வரி...

அப்பா, எங்கள் ஆரோக்கியத்துக்கு நீ ஊறு விளைவிப்பவன்.

இந்த வரி அமீரின் கதாப்பாத்திரத்துக்கு மட்டுமல்ல அமீர் கானுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன் :) இசையும், பாடல் வரிகளும் படத்தில் பிரமாதம்.

படம் முழுவதும் அந்த மருமகனின் வாய்ஸ் ஓவரில் வருவதாக அமைத்தது நல்ல விஷயம். படத்தில் வரும் வசனங்கள் நச். காமெடியாய் இருக்கட்டும், உணர்ச்சிகரமானதாய் இருக்கட்டும்.

முதல் முறையாய் கலந்து கொள்ளும் ஒரு குஸ்தியில் அந்தக் குழந்தை நோஞ்சான் சிறுவனை தேர்ந்தெடுக்காமல் பலமானவனை தேர்ந்தெடுக்கிறாள். அப்போது போட்டியின் நடுவர், தந்தையிடம், "உன் மகள் தவறு செய்து விட்டால், கை கால் உடைந்து தான் ஊர் திரும்பப் போகிறாள்" என்று சொல்கிறார். அதற்கு தந்தை, "சண்டையில் வெல்வதற்கு முன், பயத்தை வெல்ல வேண்டும். என் மகள் அதில் வெற்றி பெற்று விட்டாள்" என்கிறார்.

தன் மகள்களை, மல்யுத்த வீராங்கனைகள் ஆக்குவது என்று முடிவெடுத்த உடன், அவர் சொல்கிறார். "மகன் வாங்கி வந்தால் என்ன, மகள் வாங்கி வந்தால் என்ன, தங்கம் தங்கம் தானே, இதை எப்படி நான் இத்தனை காலம் உணராமல் இருந்தேன்!"

எங்களை எப்படியாவது இந்த ஹிம்சாயிலிருந்து காப்பாற்றும்படி சிறுமிகள் தாயிடம் மன்றாடுகிறார்கள். அதற்கு அவள், "ஒரு வருட காலம், உங்களுக்கு அம்மா இருப்பதை மறந்து விடுங்கள்" என்கிறாள். சிறுமிகள் சட்டென்று எழுந்து செல்கிறார்கள். அதற்கு தாய், "ஹே, அதற்குள் மறந்து விட்டீர்களே" என்கிறாள் :)

கோச்சாக வருபவர் மராத்தி நடிகராம். நல்ல தேர்வு. படத்தில் அவர் வில்லனாய் சித்திகரிக்கப் பட்டிருந்தாலும் அந்த கோச்சின் இடத்தில் இருந்து பார்த்தால் அவர் நியாயம் புரியும். அவரவர்க்கு அவரவர் நியாயம்.

இப்படி படம் நெடுக சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் ஆங்காங்கே படத்தை சிறப்பாக்குகிறது.

இந்தப் படத்தை பார்க்கும்போது எனக்கு தோன்றியது, நம் நாட்டில் ஆண்கள் உலக லெவல் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வாங்கி வருவதே கஷ்டம். பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு பெண்ணை இப்படி ஒரு வீராங்கனை ஆக்க என்ன என்ன பாடு பட வேண்டும். எத்தனை ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் தாங்க வேண்டும். அதிலும் ஒரு பின்தங்கிய கிராமத்தில் இருந்து  இந்த அளவுக்கு வருபவர்கள் எப்படி பட்ட போராட்டங்களை எல்லாம் சந்தித்திருப்பார்கள் என்று யோசிக்கவே பிரமிப்பாக இருக்கிறது. என்னை பொறுத்தவரை, இந்தியாவில் பெண்கள் உலக அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு பதக்கம் வென்றால் அதை இரண்டாக கொடுக்க வேண்டும். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் மாதிரி...அத்தனை போராட்டங்களை சகித்துக் கொண்டு அவர்கள் அந்த மேடைக்கு வருகிறார்கள்.

மேல் உள்ள பத்தி தான் இந்தப் படம் எனக்குள் விளைவித்த எண்ணங்கள். ஒரு நல்ல படைப்பு தீர்வுகளை கொடுக்கத்  தேவையில்லை. கேள்விகளை எழுப்பினால் போதும். அதை தங்கல் சிறப்பாகவே செய்கிறது!!

கண்ணதாசன் காலம் தொட்டு நா. முத்துக்குமார் வரை கால வரையறை இல்லாமல் சில பாடல்களை தரவிறக்கி கேட்டுக் கொண்டிருக்கிறேன். இன்றும் கண்ணதாசன் பேஸ்தடிக்கிறார். கண்ணதாசன், இளையாராஜா போன்றோர்களின் மூளைகளை எல்லாம் ஆராய வேண்டும். எங்கிருந்து இப்படி எல்லாம் இவர்களுக்கு கொட்டுகிறது என்று புரியவில்லை.

உதாரணத்திற்கு

எந்தப் பெண்ணை பார்த்தாலும் அவளை அனுபவிக்க நினைக்கும் ஒரு காமாந்தக்காரன். மது, மாது, சூது என்று அவனுக்கு ஒரு கொண்டாட்டமான வாழ்க்கை. அவன் பாடுவது போல் ஒரு பாடல்.

இப்படி ஒரு சூழ்நிலையை கண்ணதாசனிடம் சொன்னதும் அவர் கொடுத்த பல்லவி...

"ராஜா ராணி ஜாக்கி
வாழ்வில் என்ன பாக்கி"

முடிந்தது. இரண்டு வரியில் அந்தக் கதாப்பாத்திரத்தை விவரித்து விட்டார். ஒரு இயக்குனருக்கு இவரிடம் சூழ்நிலையை சொல்லி பாடல் வாங்குவது எத்தனை இலகுவான, இன்பமான நிகழ்வாய்  இருந்திருக்கும்! இந்த இரண்டு வரிக்கு இவரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்தால் அது ஒரு தடவையில் முடியக் கூடியதா? வரம் வரம்!!

 கமல் அடிக்கடி சொல்வார். "அவர்கூடவே வளரும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கிறது. அவர் பாடல் எழுதும்போது அருகில் இருக்கும் வாய்ப்பு எனக்கு இருந்திருக்கிறது. கவிதை/பாட்டு எழுதுவது எல்லாம் மிக எளிய விஷயம் மாதிரி என்னை ஏமாற்றி விட்டார்." என்று! அவர் சொல்வது சரி தான், கண்ணதாசன் பாடலை சொல்லும்போது [அவர் பாடல்களை எழுதுவதில்லை; அவர் சொல்லச்  சொல்ல உதவியாளர் ஒருவர் எழுதிக் கொள்வது வழக்கம்! அந்த உதவியாளர்களில் பிரதானமானவர் பஞ்சு அருணாச்சலம்] அருகில் இருப்பவருக்கு அப்படித் தான் தோன்றும். சரளமாய் பேசுவதை போலத் தான் அவர் பாடல் வரிகளை சொல்லி இருக்கிறார். 

ஆனால் அப்படி சொன்ன பாடல் ஒவ்வொன்றும், மெட்டுக்கு சரியாகவும், அந்தப் படத்தின் கதையை/சூழலை சரியாய் விவரித்தும், காலம் கடந்த ஒரு அழகும்/கருத்தும் அதில் ஒருங்கே அமையப்பெற்றதாகவும் இருந்தது, இருக்கிறது.

உதாரணத்துக்கு தங்கப்பதக்கம் என்ற படத்தில் வரும் சோதனை மேல் சோதனை பாடல்:

மனைவி இறந்தும் கொள்ளி போட வராத மகனை நினைத்து, மருமகளிடம் பாடும் பாடல், எத்தனை எளிதான வார்த்தைகளால் அந்த சூழ்நிலையை பாடலில் சொல்கிறார், பாருங்கள்.

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல

இதன் அடுத்த சரணத்தையும் கேட்டுப் பாருங்கள், !!க்ளாஸ்!!

---

இருவர் உள்ளம் படத்தில் வரும் இந்தப் பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும். காதல்,  வாழ்வின் ஒரு யதார்த்தமான நிகழ்வு என்பதை எத்தனை அருமையாக விளக்குகிறார்.

நதி எங்கே போகிறது கடலைத் தேடி 
நாளெங்கே போகிறது இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது உறவைத் தேடி

ராகங்கள் நூறு வரும் வீணை ஒன்று
மேகங்கள் ஓடி வரும் வானம் ஒன்று
ராகங்கள் நூறு வரும் வீணை ஒன்று
மேகங்கள் ஓடி வரும் வானம் ஒன்று
என்ணங்கள் கோடி வரும் இதயம் ஒன்று
என்ணங்கள் கோடி வரும் இதயம் ஒன்று
இன்பங்கள் அள்ளி வரும் பெண்மை ஒன்று

--

பழனி படத்தில் வரும் இந்தப் பாடல், வஞ்சிக்கப்பட்ட ஒருவன் தத்துவார்த்தமாய் பாடும் இந்தப் பாடலில் வாழ்வின் பல செய்திகள் அடங்கி இருக்கிறது.

அண்ணன் என்னடா தம்பி என்னடா 
அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா 
காசில்லாதவன் குடும்பத்திலே

பெட்டை கோழிக்கு கட்டுச் சேவலை 
கட்டி வைத்தவன் யாரடா 
(3)அவை எட்டு குஞ்சுகள் பெத்தெடுத்ததும் 
சோறு போட்டவன் யாரடா
சோறு போட்டவன் யாரடா

வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும் 
வருந்தவில்லையே தாயடா
மனித ஜாதியில் துயரம் யாவுமே 
மனதினால் வந்த நோயடா
மனதினால் வந்த நோயடா

வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் 
வந்து சேர்கிறார் பாரடா 
(6)கை வரண்ட வீட்டிலே உடைந்த பானையை 
மதித்து வந்தவர் யாரடா
மதித்து வந்தவர் யாரடா

பணத்தின் மீது தான் பக்தி என்ற பின் 
பந்த பாசமே ஏனடா
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் 
அண்ணன் தம்பிகள் தானடா
அண்ணன் தம்பிகள் தானடா

--

எங்க மாமா படத்தில் வரும்  இந்த தாலாட்டுப் பாடல். அனாதையான நாயகனின் ஆதரவில் வளரும் அனாதைக் குழந்தைகள்.

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்தி பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை?

இந்தப் பாட்டில் அனைத்து வரிகளும் அற்புதமானவை. அதில் குறிப்பாக,

பூவும் பொன்னும் பொருந்தி வாழும் மழலை கேட்டேன் தந்தானவன்
நாளை உலகில் நீயும் நானும் வாழும் வழிகள் செய்வானவன்

என்ற வரிகளை கேட்கும் போது எனக்கு புல்லரிக்கிறது :)

இப்படி எத்தனையோ பாடல்கள்...எல்லாத்தையும் கேட்டுட்டு அடிக்கடி வந்து சென்ட்டிமெண்ட்டை புழியிறேன்... 
"திரும்பி வந்துட்டான்னு சொல்லு...ஏழு மாசத்துக்கு முன்னாடி எப்படி போனானோ, அதே மாதிரி பிளாக் எழுத திரும்பி வந்துட்டான்னு சொல்லு!"

ரஜினியின் அடுத்த படம் ரஞ்சீத்துடன் என்றதும் மெய் சிலிர்த்தேன். ஆஹா, தமிழ் சினிமாவுக்கு நல்லகாலம் வந்துருச்சு போல இருக்கே என்று! டைட்டிலுக்கு, போஸ்ட்டருக்கு என்று கபாலியை பற்றி ஒவ்வொரு செய்திக்கும் தமிழ்நாடே ஆர்ப்பரித்தது..."தளபதி"க்கு பிறகு நான் ரஜினியை அணு அணுவாக ரசித்தது இந்தப் படத்தில் தான். அந்த வெள்ளை தாடி, கோர்ட் சூட்டுடன் மனிதர் அள்ளுகிறார். சிவாஜியை விட, இந்தப் படத்தில் ரஜினியின் உடைகள் ஏ ஒன்! ஏன் சொல்கிறேன் என்றால், படங்களில் பொறுத்தவரை, ரஜினி ஆரம்ப காலங்களில் இருந்தே நம்மை போல் ஒழுங்காய் ஒரு சட்டையை போட மாட்டார். ஒன்று சட்டை பொத்தான்களை போடமாட்டார், அல்லது காலர் தூக்கி வீட்டுக் கொள்வார், சட்டையை டக் இந்த செய்யாமல் அதன் மேல் பெல்ட் போட்டுக் கொள்வார். கோர்ட் போட்டால் குறித்த  கையை போல் மேலே தூக்கி வீட்டுக் கொள்வார். ஏதோ ஒரு கோக்கு மாக்கு இருக்கும். ஒரு பழைய படத்தில் இரண்டு பெல்ட் போட்டிருந்ததை பார்த்தேன்! இந்தப் படத்தில் கூட தலைவர் கோர்ட் சூட் அணிந்து கொண்டு காலரை தூக்கி வீட்டுக் கொண்டு அவர் வந்ததையும் ரஞ்சித் அந்த காலரை மடிக்க பட்ட பாட்டையும் அவரே சொல்லிய விதத்தை மிகவும் ரசித்தேன்.

இது உண்மையில் ஒரு புது அனுபவம் தான். ரஜினி தன்  கெரியரை ஆரம்பிக்கும்போது ரஞ்சித் பிறந்திருப்பாரா என்பதே சந்தேகம். அப்படி ஒருவருக்கு ரஜினி தன் அடுத்த படத்தை கொடுக்கிறார் என்றால் ரஜினிக்கும், ரஞ்சித்துக்கு எவ்வளவு பிரஷர் இருந்திருக்கும். கபாலி படக் குழுவினரின் பேட்டியை பார்த்தால் உங்களுக்குத் புரிந்திருக்கும். ஏதோ கடவுளையே நேரில் கண்டவர்களை போல் ஒவ்வொருவரும் அவரிடம் பணியாற்றியதை பற்றி சொன்னார்கள். படம் தான் எத்தனை பரபரப்பு, எதிர்பார்ப்பு. இதற்கெல்லாம் கபாலி ஈடு கொடுத்ததா என்றால் "இல்லை" என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.

ரஜினி படத்தின் வழக்கமான பார்முலா கதை தான் இதிலும். நல்லவன், கெட்டவன், அவன் ஒரு முறை, இவன் ஒரு முறை என்று மாறி மாறி ஜெயித்து கடைசியில் நல்லவன் வெற்றி கொடி நாட்ட படம் முடியும். ஆனால் ரஞ்சித் மாஸோடு மட்டும் போகாமல் கொஞ்சம் எமோஷனையும் கையில் எடுத்திருக்கிறார். ரஜினியை நடிக்க வைத்தே தீருவேன் என்று அவர் கங்கணம் கட்டி இறங்கி இருக்கிறார். அதில் அவர் ஜெயித்தாரா என்றால் மறுபடியும் "இல்லை" என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

ரஜினியை "நடிக்க" வைப்பதில் அவர் காட்டிய விருப்பம், தான் எழுதிய கதையில் ரஜினி என்ற மாஸ் ஹீரோவை புகுத்திய லாவகம், பலவித கதாப்பாத்திரங்கள் என்று மெனக்கெடல் எல்லாவற்றையும் பாராட்டினாலும், கதையிலும், கபாலி உட்பட, மற்ற எல்லா கதாப்பாத்திரங்களிலும், வசனங்களிலும் எந்த ஆழமும் இல்லாமல் இருப்பதால் படம் அம்போ என்று ஆகிவிடுகிறது.

உதாரணத்துக்கு இந்த வசனம்...இது ஒன்னு தான் கொஞ்சம் தேறுச்சு !

கபாலி:நல்லா பறக்க வேண்டியதை கொண்டு வந்து இப்படி கூண்டுல அடைச்சு வச்சுருக்கானே...கூண்டுல அடைபட்டு கெடக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?
வெளிய விட்டா செத்து போயிடும்ணே, மத்த பறவைங்க இதை கொத்திபோட்டுரும்!
கபாலி:பறக்கிறது பறவையோட இயல்பு. அதை பறக்க விடு; வாழ்வா சாவான்னு அது முடிவு பண்ணட்டும். உன்னோட கருணை அதோட சாவைவிட கொடூரமானது!

ஒரு சில தோற்றுப் போன காதல்களை வைத்தும், ஒரே ஒரு சுவற்றை மட்டும் வைத்தும் கதை சொன்ன ரஞ்சித்தா இப்படி என்று தான் தோன்றுகிறது.  ட்ரைலரில் மட்டும் மாஸை காட்டிவிட்டு படம் பொறி பறக்க போகுது என்று எதிர்பார்த்து சென்ற ரசிகனை படம் ஆரம்பித்த பத்து நிமிடத்தில் பொடனியில் அடித்து உட்கார வைத்து விடுகிறார் ரஞ்சித். சரி ரஜினி ரசிகனுக்குத் தான் ஒன்றுமில்லை, ஒரு நல்ல சினிமா ரசிகனுக்கு ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தால், அதிலும் ஏமாற்றமே. இந்தப் படத்தில் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது, மூன்று அருமையான பெண் கதாப்பாத்திரங்கள் இருக்கிறார்கள் என்று கலர் கலராய் ரீல் விட்டார்கள். எதுவுமே மனதை ஈர்க்கவில்லை.

ஜான் விஜய் கபாலியின் ஆஸ்தான தொண்டன் என்றால், அவரின் காதல் வாழ்க்கையை அருகில் இருந்து கண்டவர் என்றால், அவர் சிறையில் இருக்கும்போது ஏன் அவர் ஒரு முறை கூட கபாலியின் மனைவியையோ, மகளையோ தேடவேயில்லை?

ஜீவா [தினேஷ்] "43" கேங்கில் என்ன செய்து கொண்டிருந்தான்? திடீரென்று ரஜினியின் அடிமையாக மாறுவது எதனால்?

ஆயிரம் பிரச்சனை இருக்கும், நமக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு, டோனி லீ, வீரசேகரன் வளரவிடக்கூடாது என்று பயங்கர வசனம் எல்லாம் பேசிவிட்டு பொண்டாட்டி புள்ளையை தேடத் தொடங்கிவிடுகிறாரே மனிதர்?!

அவர் நடத்தும் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் இவரின் கதையை கேட்டு "நானும் வர்றேன், ஒருத்தனையும் விடக் கூடாது, போட்டுத் தள்ளுவோம்" என்று ஆவேசம் கொள்பவர்களை இவர் ஏன்  தடுக்கவே இல்லை? கடைசியில் அவர்களையும் ஏன் ஆயுதம் ஏந்த வைத்தார்?

கடைசியில், தங்கள் பிரச்சனை எல்லாம் சொல்லும் மாணவர்களிடம், "என்னிடம் ஏன் இதெல்லாம் சொல்றீங்க?" என்று சொல்பவன் என்ன மாதிரியான தலைவன்?

ரஜினியை தாண்டி கதையை யோசித்தால் கேள்விகளே மிஞ்சுகிறது.

முதல் பத்து நிமிடத்தில் கபாலி கதாப்பாத்திரத்தை அவர் நிலை நிறுத்திய விதம் பார்த்ததும் பாட்ஷா படத்தின் குழாயை பிய்த்து அடிக்கும் காட்சிக்கான தருணத்தை இந்தப் படத்தில் எல்லோரும் எதிர்நோக்கி இருக்க, கடைசி வரை அவர் குழாயை பிய்த்து எறியவே இல்லை என்பதே சோகம். சரி ரஞ்சித் சொன்னது போல் முள்ளும் மலரும் காளியாவது காணக்கிடைக்கிறாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ரஞ்ஜீத் இப்படி ஏமாத்திட்டீங்களே!

இப்போது எனக்கு இருக்கும் ஒரே பயம், இந்தப் படத்தில் நிறை குறைகள் இருந்தாலும், இதை நாம் ஆதரிக்கவில்லை என்றால் ரஜினி மறுபடியும் "பொண்ணுன்னா இப்படித் தான் இருக்கணும்" என்று பன்ச் வசங்கள் பேசிவிட்டு, நாற்பது பேரை பறந்து பறந்து அடித்து விட்டு, தன் மகள்களை விட குறைந்த வயதுடைய பெண்ணுடன் மரத்தை சுற்றி டூயட் பாட ஆரம்பித்து விடுவாரே என்று தான்!

அதை மட்டும் மனசுல வச்சுக்குங்க...

ஆ! கடைசியா ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.

மகிழ்ச்சி !

இதையே தான் இங்கேயும் சொல்லி இருக்கோம். ஒரு புது முயற்சி. உங்கள் மேலான கருத்தை எதிர்நோக்கி..

டைட்டிலே வழக்கமான மணிரத்னம் பாணியில், அழுது வடியாமல் இளமை கொப்பளிக்க, ஒரு ரகளையான அனிமேஷனில் ஆரம்பிக்கிறது. Refreshing!

முதல் சீனிலேயே ஹீரோ ஹீரோயின் அறிமுகம். பிறகு வழக்காமான க்ளிஷேடான மணிரத்ன அசட்டு வசனங்கள் [அந்த சர்ச்சில் இருவரும் பேசுவது! ஸ்வபா..] பிரகாஷ் ராஜ் ஒப்பனை அருமை. ஒரு வேளை இது தான் நிஜ பிரகாஷ் ராஜா? யார் இந்த லீலா சாம்சன்? என்ன ஒரு அருமையான பாத்திரம், என்ன ஒரு அற்புதமான நடிப்பு!

துல்கர் முகத்தில் என்னமோ ஒன்று சரி இல்லை, மூக்கா, முழியா தெரியவில்லை. மனிதரை எல்லா பெண்களுக்கும் பிடிக்கிறது. அவர் மாதிரி நான் ஹேர் ஸ்டையில் வைத்துக் கொண்டால், "ஏன்டா தலைய குருவிக் கூடு மாதிரி வச்சுருக்கே?" என்று கேட்பார்கள். அச்சு அசல் அப்படி தான் இருக்கிறது. அவருக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயம். நடிப்பதற்கு பெரிதாய் ஒன்றும் ஸ்கோப் இல்லை. "பெங்களூர் டேஸ்" படத்தில் எப்படி கேர்ஃப்ரீயாய் இருந்தாரோ அதே போல் தான் இதிலும் இருக்கிறார்.

நித்யா அழகாய் இருக்கிறார். கிடைமட்டமாய் [தமிழில் horizontal] வளர்ந்திருக்கிறார். அவருக்கும் துல்கருக்கும் கெமிஸ்ட்ரி செம! ஃபிசிகலாய் எதுனா இருக்குமோ? [கிசு கிசு]. நெருங்கி வரும் ஆதியிடம் "ஆதி, நோ சொல்லு, நோ சொல்லு" என்னும் தாரா பதிலுக்கு ஆதி, "நோ" என்றவுடன், "அப்போ கிட்ட வராதே!"  என்று குதூகலிக்கும் இடம் சோ ஸ்வீட்! பிறகு போர்வை போர்த்திக் கொண்டு துல்கரை அழ வைக்கும் அந்த இண்டர்வல் ப்ளாக், வழிய வழிய காதல் :) மணிரத்னம் என்னமாய் கொஞ்சுகிறார்! மணிரத்தினம், the lover returns!

கதையை பொருத்தவரை Old wine in new bottle. இளமை வழிய வழிய ஒரு காதல், பிரத்தியாரால் அவர்களுக்குள் பிரச்சனை, இளமை கடந்த மற்றொரு காதல் தம்பதிகள், அவர்களிடமிருந்து ஒரு வாழ்க்கை பாடம். சுபம். படத்தின் பெயரை அலைபாயுதே 2 என்று வைத்திருக்கலாம்.

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் காதலர்கள் பற்றிய கதை. கடைசியில் அவர்களும் கல்யாணம் தான் செய்து கொண்டார்கள் என்று ஏன் முடிக்க வேண்டும்? சேர்ந்து வாழ்பவர்கள் காதலில் விழுந்து விட்டால் கல்யாணம் செய்து கொள்ளத் தான் வேணுமா? அவர்கள் விருப்பப்படியே அவன் அமெரிக்க போகட்டும், அவள் பாரீஸ் போகட்டும். திரும்பி வந்து மீண்டும் சேர்ந்து வாழலாமே? இந்த காலத்தில் டச் சில் இருப்பாதா கஷ்டம்? எதற்கு ஒரு கல்யாணம்? தாலி? லைசன்சா? ஒழுங்கா திரும்பி என்கிட்டே வந்துரணும் என்று சொல்ற மாதிரியா, புரியவில்லை. முடிவில் உடன்பாடு இல்லை என்றாலும், படம் எனக்கு பிடித்துத் தான் இருந்தது. அலைபாயுதேவை விட எனக்கு இந்தப் படம் பிடித்தது!

படத்தின் மற்ற பலங்கள், இசை, கலை மற்றும் ஒளிப்பதிவு. என்ன ஒரு இளமை துள்ளும் இசை, அந்த பிரகாஷ் ராஜின் வீடு, அகமதாபாத் ஹோட்டல், நித்யாவின் ஹாஸ்டல் அருமையான ரசனை. நகரத்தில் இருக்கும் எல்லா அசிங்கங்களையும் மறைத்து அதை ஒரு சொர்க்கமாய் காட்ட மணிரத்னம், ஸ்ரீராமால் தான் முடியும் :) மும்பை போக ஆசையாய் இருக்கிறது!

முன்னாலேயே எழுதி இருக்க வேண்டிய பின்குறிப்பு: இந்த விமர்சனத்துக்கு மெளஸ் உபயோகப்படுத்தப்படவில்லை!
கதை இந்நேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் சொல்லி விடுகிறேன். அப்போது தான் கமலிடம் உள்ள பிரச்சனைகளை பற்றி ஆராய முடியும். [எதுக்கும், மௌஸ் நகத்தாம...]

மனோரஞ்சன் ஒரு ஸ்டார். தோளுக்கு வளர்ந்த மகன் இருக்கும்போதும், தன் மாமனார் [கே. விஸ்வநாத்] தயாரிப்பில் பல மசாலா படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவன் வாழ்வை புரட்டிப் போடும் இரண்டு செய்திகள் அவனுக்கு கிடைக்கிறது.

ஒன்று, மூளையில் உண்டான கட்டியால் அவன் சீக்கிரமே இறக்கப் போகிறான்.
இரண்டு, அவனுடைய முன்னாள் காதலியின் மூலம் தனக்கு ஒரு மகள் இருப்பது தெரிய வருகிறது.

தன் மகளுடன் சமாதானம் செய்து கொண்டு, சாகும் தருவாயில் தன் குருநாதர் மார்கதரிசியுடன் [பாலசந்தர்] ஒரு நல்ல படத்தில் நடித்து விட வேண்டும் என்று முடிவு செய்கிறான். தன் சோகம் தன்னோடு போகட்டும், மக்கள் சிரித்துச் சிரித்து தன் கடைசி படத்தை ரசிக்க வேண்டும் என்று ஒரு காமடி படத்தை பண்ணலாம் என்று தன் குருநாதருக்கு வேண்டுகோள் விடுக்கிறார். அதன்படி உத்தம வில்லன் என்ற ஒரு சாகாவரம் பெற்ற ஒரு கூத்துக் கலைஞன் கதையை படம் எடுக்கிறார்கள்.

உலகத்தில் சாகாவரம் பெற்று வாழ ஒன்று முனிவனாய் இருக்க வேண்டும்; அல்லது, நல்ல ஒரு எழுத்தாளனாய் இருக்க வேண்டும், அல்லது, நல்ல ஒரு கலைஞனாய் இருக்க வேண்டும். நல்ல ஒரு கலைஞனுக்கு  என்றுமே சாவில்லை என்ற செய்தியுடன் படம் முடிகிறது.

படத்தில் +

  • கமலிடம் எப்போதும் இருக்கும், அள்ள அள்ள குறையாத பல்வேறுபட்ட கதைக் களன்கள். சாவு என்றால் என்ன? ஒரு நல்ல கலைஞனை அது என்ன செய்து விடும்? இந்தக் கேள்விகளுக்கு விடையாக, தன்னை நெருங்கி வரும் சாவிடம் செத்துக் கொண்டிருக்கும் ஒரு கலைஞன் சாகாவரம் கொண்ட கதாப்பாத்திரம் ஒன்றை ஏற்று நடிப்பது சாவையே எள்ளி நகையாடுவது போல் தானே? அத்தகைய பரந்துபட்ட விஷயங்களை திரைக்கதையில் லாவகமாய் புகுத்துவது. கமலுக்கு கை வந்த கலை!!
  • கமலுடைய commanding knowledge on various things & his observation skills! இவருக்கு புராணம் தெரிகிறது; சரித்திரம் தெரிகிறது; தெய்யம், கூத்து என்று பல்வேறு கலைகள் பற்றிய அறிவு இருக்கிறது; பல மனிதர்களையும், அவர்களின்  உடல்மொழியும் தெரிகிறது. இவ்வளவு பெரிய நடிகராக ஒரு கூட்டுக்குள் அடைபட்டுக் கொண்டே இத்தனை கதாபாத்திரங்களை எப்படி இவரால் படைக்க முடிகிறது என்று ஆச்சர்யமாய் இருக்கிறது. உதாரணத்திற்கு இந்தப் படத்தில் வரும் தெலுங்குக் குடும்பத்திற்கும் பல்ராம் நாய்டுவுக்கும் துளியும் சம்மந்தமில்லை.
  • ரஜினி லிங்காவில் தன் மகள் வயதில் உள்ள பெண்ணிடம் டூயட் ஆடுவார். கமல் எண்பதுகளில் தன்னுடன் ஆடிய ஊர்வசியை தனக்கு ஜோடியாகவும், தன் தோள் தொடும் உயரத்தில் ஒரு பையனை தன் மகனாகவும்,  பார்வதி மேனனை [கிழங்கு மாதிரி இருக்கிறார், அப்படி நடிக்கிறார்!] தன் மகளாகவும் கதை அமைக்கிறார். அதற்கு ஒரு சபாஷ்! [இதில் ஒரு உள்குத்து என்னவென்றால், ஊர்வசியை ஜோடியாய் போடும்அதே நேரத்தில் பூஜா குமார், ஆன்ட்ரியாவை எப்படி ஆதரிப்பது அது நமக்கு உறுத்தாமல் எப்படி பார்த்துக் கொள்வது என்றும் அவருக்குத் தெரியும். "கள்ளனைய்யா நீர்!"] 
  • என்ன தான் தன்னை முன்னிறுத்தி திரைக்கதை அமைத்தாலும், கதாநாயகனுக்கே உரிய நல்லத்தனத்தால் அவன் தன் முன்னாள் காதலி, தன் மனைவி என்று எல்லோரையும் நேசிக்கிறான் என்று காட்டினாலும், அவனுக்கும் பலவீனங்கள் உண்டு என்பது போல், அவனுக்கு வைத்தியம் செய்யும் அந்த இளம் டாக்டரிடம் ஒரு கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறான் என்று அமைத்த அந்த திரைக்கதையின் நேர்மை :)
  • படத்தின் வசனம். வசனம் என்று தனியாக டைட்டிலில் போட்ட மாதிரி தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாய் கமலின் வசனம் தான் என்று தோன்றுகிறது. உதாரணத்திற்கு மனோ மார்கதரிசியிடம் ஒரு படம் பண்ணித் தரச் சொல்லிக் கேட்கும் இடம்.
  • தன் குருநாதரை இந்தக் கதையில் அழகாய் நுழைத்து, அதில் அவரை அவராகவே இருக்க விட்டது. பிற்காலத்து எம்ஜியார்  படங்களிலும் சரி இப்போதைய ரஜினி படங்களிலும் சரி, படத்தில் வரும் எந்தக் கதாப்பாத்திரமும் அவர்களை "டா" போட்டு கூப்பிட முடியாது. கமலும் அத்தகைய இடத்தில் இருப்பவர் தான். இருந்தாலும், தன்னை ஆரம்ப காலங்களில் அவர் எப்படி கூப்பிட்டாரோ, அப்படியே படத்திலும் அவரை "டேய்", "ராஸ்கல்" என்றெல்லாம் கூப்பிட வைத்தது நல்ல விஷயம். குருவுக்கு தன் சிஷ்யன் எவ்வளவு உயரம் சென்றாலும் அவருக்கு அவன் சிஷ்யன் தானே? அது தானே யதார்த்தம்.
  • நாம் நடிகையர் திலகம் என்று சாவித்ரியை கொண்டாடிவிட்டு, அதற்கு இணையான ஊர்வசிக்கு தமிழில் எப்போதும் அசட்டு கதாப்பாத்திரங்களாய் கொடுத்து வீணடித்துவிட்டோம். புருஷனை விட்டால், எந்த உலக அறிவும் இல்லாத ஒரு வசதியான தெலுங்கு அம்மாவை அப்படியே அச்சு அசலாக கண் முன் நிறுத்துகிறார்.
  • சொக்குவாக வரும் எம் எஸ் பாஸ்கர் மற்றொரு பலம். சிவாஜியின் காலத்தில் எதற்கு அலட்டிக் கொள்ளாமல் நடித்த வீ. கே. ராமசாமியை கண்டுகொள்ளாதது போல், கமல் காலத்தில் எம் எஸ் பாஸ்கர், இளவரசு போன்றவர்களை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது. அத்தனை அற்புதமான நடிகர்கள்.

படத்தில் -


  • கமலிடம் எப்போதும் இருக்கும், அள்ள அள்ள குறையாத பல்வேறுபட்ட கதைக் களன்கள்! தனக்கு தெரிந்ததை எல்லாம் ஒரே படமாய் எடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறார். மனோரஞ்சனின் கதையை எடுத்துக் கொள்வோம். சாகப் போகும் ஒரு ஸ்டார். அவன் திரும்பி பார்க்கும் தருணம். சரி செய்ய நினைக்கும் விஷயங்கள். தான் புதிதாய் கண்டெடுத்த மகள், அவர்களுக்கான உறவு, புரிதல் என்று அதை மட்டுமே ஒரு உணர்ச்சிகரமான படமாய் எடுக்க முடியும். இதற்குள் தேவையே இல்லாமல் ஒரு காமெடி கதை என்று ஒரு பீரியட் கதையை நுழைத்து, நிறைய்ய தமிழ் கலந்து, தெய்யத்தையும் , கூத்தையும் கலந்து பியுஷன் என்ற பெயரில் ஒரு கூத்தடித்து...அடடா...
  • வழக்கம் போல படம் பூராவும் வியாபித்து இருப்பது. மற்றவர்களுக்கும் கொஞ்சம் ஸ்கோர் செய்ய விட வேண்டும். நான் பார்த்த வரை, ஊர்வசிக்கு கொஞ்சம் தருகிறார். இருந்தாலும் பத்தவில்லை.
  • அந்த பீரியட் கதை. நான் இதுவரை பார்த்த கமல் படங்களில் இப்படி ஒரு மொக்கையை பார்த்ததில்லை. கமலுக்கா  இப்படி காமடிக்கு பஞ்சம் வந்து விட்டது என்று தோன்றியது. ஒவ்வொரு காட்சியும் பொறுமையை மிகவும் சோதித்தது.
  • பீரியட் கதையின் ஒப்பனை. இன்று குறும்படங்கள் எடுக்கும் சுண்டான்களே முழு நீள படங்களை போல் அவ்வளவு சிரத்தையாய் மெனக்கெட்டு ஒவ்வொன்றாய் பார்த்து பிரமாதமாக அழகாக எடுக்கிறார்கள். பல வருடங்களாக பழம் தின்று கொட்டை போட்ட கமலுக்கு ஒரு நல்ல விக், ஒட்டு மீசை கூடவா கிடைக்கவில்லை? இல்லை, அப்படி இருந்தால் தான் அது பார்ப்பதற்கு காமடியாக இருக்கிறது என்று படக் குழுவினர் நினைத்திருந்தால் எனக்கு அழுகை தான் வருகிறது!!! டைரக்டர் சார், இதையாவது பார்த்திருக்கலாமே?
  • பீரியட் கதையின் கிராபிக்ஸ். படத்தின் ஆரம்பத்தில் "இந்தப் படத்தில் எந்த மிருகத்தையும் துன்புறுத்தவில்லை" என்று போட்டார்கள். அப்போதே நான் யோசித்திருக்க வேண்டும். எலி முதல் புலி வரை எல்லாவற்றையும் கிராபிக்ஸில் வன்கொடுமை செய்து பார்வையாளர்களான நம்மை தான் துன்புறுத்திவிட்டார்கள் !
  • பூஜா குமார். அமெரிக்க வனப்பு. அமச்சூர் நடிப்பு. விலங்கிட்டு பைத்தியமாய் இருப்பவர் நல்ல பாய்கட்/ஸ்பைக் கட் எல்லாம் வைத்து, நல்ல உடை உடுத்தி நல்ல கும்மென்று இருக்கிறார். அவர் என்ன செய்வார் பாவம். ஆட்டையிலேயே  சேர்த்துக் கொள்ள முடியாது.
  • படத்தின் வசனம் பெர்சனலாய் எனக்குப் பிடித்தது. ஆனால் ஜில்லா, வீரம் போன்ற காவியங்களை போற்றி வாழும் நம் தமிழ் மக்களுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர். 

உதாரணத்திற்கு அதே "மனோ மார்கதரிசியிடம் ஒரு படம் பண்ணித் தரச் சொல்லிக் கேட்கும் இடம்."

"உனக்கு நான் எதற்கு படம் பண்ண வேண்டும்?" என்று மார்கதரிசி கேட்கும் இடத்தில் மனோ பேச வேண்டிய வசனம், "எனக்கு மூளையில கட்டி, செத்து போயிடுவேன் சார், கடைசியா உங்களோட ஒரு படம்.!"இந்த மாதிரி ஒரு ரெண்டு வரி தான். ஆனால், கமல் அந்த இடத்தில் இப்படி ஒரு வசனம் வைத்திருக்கிறார்!

"என்னை மாதிரி திமிரான ஆளு சார்.
நாளைக்குகிறது future ல  எங்கேயோ தூரத்துல இருக்குன்னு                                       நெனைக்கிறவன். திடீர்னு எல்லாத்தையும் பொரட்டி போட்ற மாதிரி ஒரு             நியுஸ் வருது. well, actually ரெண்டு news வருது! காதல், பாசம், thank you,                     sorry இதெல்லாம் சொல்றதுக்கே நேரம் இல்லைன்னு புரிய                                         ஆரம்பிக்குது."

கமல் புத்திசாலியாய் இருக்கலாம். எல்லோரும் கமல்கள் இல்லையே!

மற்றபடி ஜிப்ரான் இசையில் "காதலால்", "இரணியன்" பாட்டு மிளிர்கிறது.

என்னை பொறுத்தவரை கமல் பேசாமல் சில காலம், "வேட்டையாடு விளையாடு" மாதிரி பிறர் கதையில் நடிப்பை மட்டும் தரக்கூடிய வேலையை செய்யலாம்! கொஞ்சம் ஆசுவாசமாய் இருக்கும்!        


ஜிகர்தண்டா புகழ் இயக்குனர் "கார்த்திக் சுப்பாராஜ்" தொடங்கி இருக்கும் "ஸ்டோன் பெஞ்ச்" நிறுவனத்தின் மூலம் ஆறு குறும்படங்களை தேர்ந்தெடுத்து ஒரு திரைப்படமாக நேற்று சில திரை அரங்கில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதன் வரவேற்பை பொறுத்து அடுத்து அடுத்து 2வது பெஞ்சு, 3வது பெஞ்சு என்று வெவ்வேறு குறும்படங்களை திரையிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு புதுமை. 2003 லேயே நான் இத்தகையை முயற்சிகளை ஹிந்தி சினிமாவில் பார்த்திருக்கிறேன். தமிழுக்கு புதுசு! இந்தக் காலத்தில் யாருக்கும் நேரமில்லை. எல்லோரும் அவசரமாய் ஓடிக் கொண்டிருக்கிறோம். டெஸ்ட் மேட்ச் பார்த்து, ஒன்டே பார்த்து இன்று "டீ ட்வென்டி" பார்த்துக் கொண்டிருக்கிறோம். சினிமா மட்டும் ஏன் மூன்று மணி நேரம்? அதுவும் அந்தப் படம் மொக்கை என்றால்? அதற்கு பதிலாக சின்ன சின்ன படங்களாய்  ஒரு ஐந்து, ஆறு படங்களை பார்த்தால் வித்தியாசமான அனுபவமாய் இருக்காது?

இது ஒரு நல்ல முயற்சி. சினிமாவில் பிரபல இயக்குனர் ஆகவிட்ட போதிலும், தன் தாய் வீடான குறும்படத்தை மறக்காமல், மேலும் முன்னேற விரும்பும் அமச்சூர் குறும்பட இயக்குனர்களுக்கு இத்தகைய ஒரு மேடையை அமைத்துக் கொடுப்பதற்கும், கார்த்திக்கை தாராளமாய்  பாராட்டலாம்.

இன்று பார்த்த படத்தில் ஆறு படங்கள். ஆறு இயக்குனர்கள். ஆறு கதைகள்.

The Lost Paradise - சிறையில் இருந்து திரும்பி வரும் ஒருவன் தன் குடும்பத்தை தேடி வரும் கதை. ஆரண்ய காண்டம் சோமு வின் நடிப்பில் மிளிர்கிறது!
அக விழி - வாழ்வோடு கலந்து விட்ட ஆழ் மனக் கனவுகளின் ஒரு கண்ணாமூச்சி. நல்ல மேக்கிங்! ஆமாம், தமிழ் டைட்டில் நல்ல தானே இருக்கு? அப்புறம் எதுக்கு "An inner eye" என்று ஒரு சப்டைட்டில் :)
புழு - இரண்டு பாவிகள் தங்களை தாங்களே துன்புறுத்திக் கொள்வது. ஒரு கதையை இடையில் தொடங்கலாம் தான், இறுதியில் ஏதாவது இருக்க வேண்டுமே? ம்ம்ம்...கதைக்கும் டைட்டிலுக்கும் சம்மந்தம் புரியவில்லை.!

இடைவேளை.
நண்பன்டா டிரைலர்.

நல்லதோர் வீணை - பாலியல் வன்கொடுமையை பற்றிய ஒரு மெசேஜ் படம். நல்ல நடிப்பு. தேர்ந்த இசை. நல்ல டைட்டில்!
மது - மாது; மது; மசாலா; மாஸ்! ஒரு சாம்பிள்: 1: என்னடா பண்ற? 2 ஃபேன்ல தூக்கு போட்டுக்க போறேன். 1: ஏன் உங்க வீட்ல ஃபேன் இல்லையா? [இங்கேயே சிரிக்காதீங்க, அடுத்து தான் சூப்பர்!] 2: எங்க வீட்ல டேபிள் ஃபேன் தான் இருக்கு! [ஹிஹிஹி..]
நீர் - தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்லும் அவலத்தின் ஒரு குறுகிய பதிவு. விஜய் சேதுபதியின் கடைசி குறும்படம் என்று நினைக்கிறேன் :)

ஆறு படங்களை பார்த்து முடித்த பிறகு, இந்த முதல் முயற்சிக்காக இன்னும் கொஞ்சம் மாஸ் படங்களை போட்டிருக்கலாமோ என்று தோன்றியது. இருந்தாலும் பாராட்டத்தக்க முயற்சி.

என்னுடைய இரண்டு படங்கள் "விடியல்" மற்றும் "தமிழ் கிஸ்" கார்த்திக்கின் "பெஞ்ச் பிளிக்ஸ்" ஆன்லைன் ஒளிபரப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இன்று கார்த்திக்கை பார்த்தேன். என்குறும்படம் இப்படி திரையில் வர என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

எப்படியாவது ஒரு 5வது  பெஞ்சிலாவது நான் ஒரு சீட் போட வேண்டும்!பார்ப்போம்.

ராமானுஜன்

"பாரதி", பெரியாருக்குப் பிறகு ஞான ராஜசேகரனின் மற்றுமொரு வாழ்க்கைச் சரித்திரப் பதிவு. இந்த படத்தின் மூலம் ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ள முடியாது. மிகவும் சொற்ப பட்ஜெட்டில் எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். சில காட்சிகள்/செட்டுகள் அரதப் பழசாய் இருக்கிறது. ஆனால் ஒரு மாமேதையின்  வாழ்க்கை பதிவாய் பார்க்கும்போது இது ஒரு போற்றப்பட வேண்டிய முயற்சி. மனிதர் விடாமல் செய்யும் இப்படிப் பட்ட முயற்சிகளுக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்!

கணக்கில் புலி என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், ராமனுஜம் தான் கணக்கில் சிங்கம், புலி, கரடி, டைனோசர் எல்லாம்! இவர் கண்டுபிடித்த ஒரு தேற்றத்தை [Theorem] 93 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நம்மால் நிருபிக்கவே முடிந்திருக்கிறது. இவர் பாட்டுக்கு கணக்கை போட்டு, விடையை மட்டும் எழுதிக் கொண்டே போயிருக்கிறார். நம் இளையராஜா காட்சிகளை பார்த்துக் கொண்டே பின்னணி இசைக் குறிப்புக்களை எழுதுவது போல :-) [எனக்கு எப்படி கணக்கு வரும் சொல்லுங்க?]

படத்தில் கூட, ஒரு காட்சியில் அவரே இதை பற்றி சொல்கிறார். "ஒரு கணக்கை பார்த்தவுடன் அதன் விடை தான் எனக்குத் தோன்றுகிறது, அதை உடனே எழுதி விடுகிறேன். பிறகு அந்தக் கணக்கில் எனக்கு சுவாரஸ்யம் அற்றுப் போய் விடுகிறது!" என்று! இதையே இப்படி பார்க்கலாம். ஒரு எழுத்தாளனும் இதையே தான் சொல்கிறான். ஒரு கவிஞனும் அதை தான் சொல்கிறான். ஒரு ஓவியனும் அதை தான் சொல்கிறான். இல்லையா? அப்படி என்றால் அந்தக் கணத்தில் ராமானுஜனும், அவர் போடுவது கணக்கு என்பதெல்லாம் தாண்டி அவர் அங்கு ஒரு மேன்மையான படைப்பாளி ஆகி விடுகிறாரோ என்று தான் தோன்றுகிறது. பாரதியின் கவிதையை நாம் இன்றும் கொண்டாடுகிறோம் [இன்று தான் கொண்டாடுகிறோம்!], ஆனால் அது அவருக்கு சுவாரஸ்யம் அற்ற ஒன்றாய் தான் இருக்க முடியும். அவர் அடுத்த அடுத்த கவிதைகளில் தன் சஞ்சாரத்தை நிகழ்த்திக் கொண்டிருப்பார். அதே  போலத் தான் யாரோ கமலிடம், "உங்கள் படத்தில் உங்களுக்கு பிடித்த படம் எது?" என்றதற்கு "அது இன்னும் நான் எடுக்காத படம்!" என்று தான் சொன்னார்.

இந்தப் படத்தில் ராமனுஜன் சிறுவயதில் இரணிய வதம் நாடகம் பார்ப்பார். நரசிம்மர் வந்து இரணியனின் வயிற்றை குத்திக் கிழிக்கும்போது அவர் மயங்கி விழுந்து விடுவார். எழுப்பிக் கேட்டால், தனக்கு பயமாய் இருந்தது என்பார்.

இதே போல, தன் சிறு வயதில் "அரிச்சந்திரா" நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் "இனிமேல் பொய்யே சொல்லக் கூடாது" என்று முடிவெடுத்தான். அவர் பிற்காலத்தில் காந்தி ஆனார்.

பாஞ்சாலி சபதம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் "தப்பு செய்த புருஷன்களை விட்டு விட்டு ஏன் மற்றவரிடம் ஒப்பாரி வைக்கிறாய்", உன் புருஷனுங்க உன்னை வச்சி ஆடி தோத்த மாதிரி நீயும் அவங்களை வச்சி ஆட வேண்டியது தானே?" என்று கேள்வி எழுப்பினான். அவர் பிற்காலத்தில் பாரதி ஆனார்.

மற்றொரு சமயம் கட்டபொம்மன் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் மிகப் பெரிய நடிகன் ஆனான். அவர் சிவாஜி கணேசன். ஒரே சூழ்நிலை, வெவ்வேறு ஆளுமைகள்!

ராமானுஜன் படம் பிடித்தது, பிடிக்கவில்லை என்பதை தாண்டி படத்தை பார்க்கும்போது என்னுள் இத்தகைய கேள்விகளை எழுப்பியது. அதுவே ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

ராமானுஜனின் தாய், தந்தை மிகச் சாதாரண மனிதர்கள். ராமானுஜனின் தம்பி ஒரு சராசரி குழந்தை. திடுதொப்பென்று இவர் மட்டும் எப்படி அந்தக் குடும்பத்தில் இப்படி வந்து பிறந்தார்? இந்த மாதிரி அறிய ஜீவன்கள் எங்கிருந்து, எப்படி, எதனால் பிறக்கிறார்கள்?  கணக்குகளால் பின்னப்பட்ட ஜீனை இவர் எங்கிருந்து பெற்றார்? இதே கதை மேல் சொன்ன பாரதி, காந்தி, சிவாஜிக்கும் பொருந்தும். விடை தெரியா கேள்விகள்!

ஆனால் காந்தியும், சிவாஜியும் ராமானுஜனை போல ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் இருக்கும் காலத்திலேயே மக்கள் அவர்களின் மேன்மையை கண்டு கொண்டார்கள். பாரதி, புதுமைபித்தன் போன்றோர்கள் பட்ட பாடு! படத்தில் ஒரு வசனம் வருகிறது. ராமனுஜன் தன் மனைவியிடம் பேசுகிறார்.

"என்னை எல்லாரும் ஜீனியஸ்னு சொல்றா; ஆனா இந்த உலகம் ஜீனியசை ஜீனியஸா இருக்க விடறதில்ல. அவனையும் எப்படியாவது சராசரி ஆக்கிடனும்னு இந்த உலகத்துல எல்லாரும் கங்கணம் கட்டிண்டு அலையிறா. கல்யாணம் பண்ணி வைப்பா, குடும்ப கஷ்டத்தை எல்லாம் கொடுத்து பாப்பா, அப்படியும் ஒருத்தன் நான் சராசரி ஆக மாட்டேன்னு அடம் புடிச்சா, அவன் பைத்தியமா அலைய வேண்டியது தான்!"

இது தான் அந்தப் படத்தின் மற்றும் இந்த மாதிரி மாமேதைகளின் வாழ்க்கைச் சாரம் என்று தோன்றுகிறது. அதை நீங்கள் உணர்ந்து கொண்டால் இந்தப் படமும் ஒரு வெற்றிப் படமே!

மீகாமன்

Gripping Screenplay; Awesome Editing; A Sleek Thriller! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இந்தப் படத்தின் திரைக்கதையை பற்றி சொல்ல ஒரு காட்சி போதும்.

ஆர்யா (சிவா) ஒரு அண்டர் கவர் காப். ஒரு ட்ரக் பிசினஸ் செய்யும் கேங்கில் இருக்கிறார். அந்த கேங்கில் குருவும் ஒரு ரவுடி. சிவாவும், குருவும் தண்ணி அடிக்கிறார்கள். அதை அந்த கேங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. போதை தலைக்கு ஏறியதும் இருவருக்கும்  இடையில் வட்டத்தில் குறி பார்த்து சுடும் போட்டி ஒன்று நடக்கிறது. அது அடிக்கடி நடக்கும் போட்டி, அதில் எப்போதுமே சிவா தோற்றுப் போவான் என்று சுற்றி இருப்பவர்கள் சொல்கிறார்கள்.

இந்த முறை குரு முதலில் சுடுகிறான். நடு சென்டரில் சுடவில்லை என்றாலும் அதற்கு அடுத்த வட்டத்தில் சுடுகிறான். எல்லோரும் கை தட்டுகிறார்கள். ஒரே ஆரவாரம். இப்போது சிவாவின் முறை. வழக்கமான தமிழ் சினிமா பாணியில் மாஸ் ஹீரோ போல் மூஞ்சியை வைத்துக் கொண்டு சிவா குறி பார்க்கிறான். படம் பார்க்கும் நமக்கும் "இப்போ பாருங்கடா ஆர்யாவோட மாசை!" என்று தோன்றுகிறது.  தோட்டா பறக்கிறது. காமெரா பலகையின் வட்டங்களை க்ளோசப்பில் காட்டுகிறது. ஒரு துளையும் இல்லை. அந்தப் பலகையில் உள்ள எந்த வட்டங்களிலும் குண்டு துளைக்கவில்லை. காமெரா இன்னும் கொஞ்சம் மேலே போகிறது, அந்தப் பலகையின் ஓரத்தில் குண்டு துளைத்திருக்கிறது. அவன் குண்டு வட்டத்துக்குள்ளேயே வரவில்லை. எல்லோரும் கை கொட்டி சிரிக்கிறார்கள். இந்த முறையும் சிவா தோற்று விட்டான்! "வாட்ச்சை கழட்டு" என்று குரு பந்தயப் பரிசை வாங்கிக் கொள்கிறான். எல்லோரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றவுடன், மறுபடியும் சிவா தனியாய் தண்ணி அடிக்கிறான். பிறகு வீட்டுக்குக் கிளம்பும்போது அந்தப் பலகையை பார்க்கிறான். துப்பாக்கியை எடுக்கிறான். குறி பார்க்கிறான். அடுத்து என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? படம் பார்க்காதவர்கள் யூகியுங்கள். நான் பார்த்து மெரசலாயிட்டேன்! மாசாய் நடந்து வருவதற்கும், ஸ்டில் கொடுப்பதற்கும் பின்னால் இப்படி ஒரு திரைக்கதை இருந்தால் தான் கொஞ்சமாவது பார்க்க நன்றாய் இருக்கிறது. காமர்சியலை கட்டிக் கொண்டு அழும் மற்ற தமிழ் சினிமா இயக்குனர்கள் மகிழ் திருமேனியிடம் கற்க நிறைய இருக்கிறது!

P K
என் விருப்பத்துக்குரிய நடிகர் ஆமீர் கானின் சமீபத்திய ஹிந்தி படத்தின் பெயர் பீகே! ஹிந்தியில் "பீகே" என்றால் "குடித்திருக்கிறாயா" என்று அர்த்தம் கொள்ளலாம். படத்திற்கும் இந்த பெயருக்கும் என்ன சம்மந்தம்? இருக்கிறது. இந்தப் படத்தில் ஆமீர் கானின் கதாப்பாத்திரம்  குழந்தைத்தனமான பல்வேறு கேள்விகளை எழுப்புவதால் பதிலுக்கு எல்லோரும் "குடித்து விட்டு வந்திருக்கிறாயா?" என்று கேட்கிறார்கள். அதற்காக படத்தின் பெயரையே அப்படி வைத்து விட்டார்கள்.

ஏன் அவர் அப்படி குழந்தைத்தனமான கேள்விகளை கேட்கிறார்? ஏன் என்றால் அவர் வேற்று கிரக ஆசாமி! நம்மை போல் பிற ஜீவராசிகளை தேடி பூமியை அடைகிறார். அதனால் பூமியில் பார்க்கும் எல்லாவற்றையும் கேள்வி எழுப்புகிறார்! வேற்று கிரக ஆசாமி பூமியில் வந்து இறங்கினால் என்னவாகும்? அவன் திரும்பிச் செல்ல உதவும் அவனுடைய கழுத்துப் பட்டை திருடப்பட்டால் என்னவாகும்? இது தான் பீகே!

ராஜ்குமார் ஹிரானி என்னுடைய விருப்பத்துக்குரிய திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனர். அவருடைய முன்னாபாய் சீரிஸ் என்னை மிகவும் கவர்ந்தது. யாரையும் எளிதில் ஒப்புக்கொள்ளாத ஆமிர் இரண்டாம் முறையாக ராஜ்குமார் ஹிரானியுடன் கை கோர்க்கிறார் என்றால் அவரிடம் விஷயம் இல்லாமல் இருக்காது. முன்னாபாய் சீரிஸ், 3 இடியட்ஸ் என்று கடந்த பத்து வருடத்தில் அவர் பாலிவுட்டில் காட்டிய பாய்ச்சல் அசாதாரணமானது. அதே பாய்ச்சல் பீகேவிலும் தொடர்கிறது. அபிஜித் ஜோஷியுடன் ஜோடி சேர்ந்து இவர் எழுதும் ஒவ்வொரு திரைக்கதையும் பட்டாசு கிளப்புகிறது. ஒரு காலத்தில் ஹிந்தி திரை உலகை ஆண்ட சலீம் ஜாவேத் மாதிரி இவர்களும் தொடர வாழ்த்துக்கள்.

ராஜ்குமாரின் திரைக்கதையின் முக்கிய அம்சம் ஒரு சமூகப் பார்வை கொண்ட கதைக் களன். ஒவ்வொரு காட்சியும் பார்வையாளனை நெகிழச் செய்து அவனை/அவளை ஆனந்தக் கண்ணீர் விட வைப்பது! ஒவ்வொரு படத்திலும் என்னை அழ வைப்பதால் அவரை நான் வெறுக்கிறேன்; அதே சமயம் சினிமா என்ற மாய பிம்பத்தின் ஊடே அவர் என் நெஞ்சை தொட்டு என்னை அழ வைப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். அது தானே சினிமாவின் பலம். அதை செய்யத் தெரிந்தவன் தான் சினிமா மொழி தெரிந்தவன். நான் இவருடைய படங்களில் மிகவும் ரசித்தது "லகே ரஹோ முன்னாபாய்". ஒரு லோக்கல் தாத்தா லேசாய் மனம் பிரழ்ந்து காந்தியுடன் சிநேகம் கொண்டால் என்னவாகும்? என்னை ஒரு முரணான கதைக்களன். அதகளப்படுத்தி இருப்பார்!

பீகேவை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஏற்கனவே இணையத்தில் நல்லமுறையில் பல விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டன. சிலர் வெகுவாக நெகிழ்ந்து இது ஒரு வாழ்நாளுக்கான திரைப்படம் என்று போற்றுகிறார்கள்! சந்தேகமே இல்லாமல் நல்ல கதை, நல்ல திரைக்கதை, நல்ல வசனம், நல்ல நடிப்பு. ஆனால் என்னை பொருத்தவரை படம் பல இடங்களில் திசை மாறிச் சென்று விட்டதை போல தோன்றியது. அனுஷ்காவின் காதல் கதை அரைவேக்காடாய் தோன்றியது. அனுஷ்காவின் வாயை [லிப்ஜாப்] ஏன் இப்படி செய்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. வழக்கமான ராஜ்குமாரின் ஆஸ்தான நடிகர்கள் பொமன் இராணி, சௌரப் சுக்லா சலிப்பூட்டுகிறது.  மேலும் சொல்லத் தெரியவில்லை!

நாட்டில் ஒன்றிரண்டு நல்ல இயக்குனர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களையும் குறை சொல்லிக் கொண்டிருந்தால் வேலைக்காகாது. முதல் படத்தில் அன்பு கொள் என்றார்; அடுத்த படத்தில் அகிம்சை வழி நட என்றார்; மூன்றாவது படத்தில் பிடித்ததை செய்யுங்கள் என்றார். இந்தப் படத்தில் மதத்தின் பெயரால் அறிவிழக்காதீர்கள் என்கிறார்!  நல்லதையே சொல்கிறார்; அதையும் சிறப்பாய் சொல்கிறார். கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கட்டுமே!

பீகே அவசியம் பார்க்கலாம்.

"சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு, கண்டதுண்டா?" என்ற ஒரு பாடல். இந்த பாட்டில் தலைவருக்கு சில எக்ஸ்க்ளூசிவ் க்ளோசப் இருக்கும். மனிதர் அள்ளுவார். அமலாவும் அம்சமாய் இருப்பார். பாடலும் நல்ல பாடல் தான். இதை எல்லாம் மீறி, அந்தப் பாடலை பார்ப்பது மனதுக்கு மிகவும் வருத்தம் தரும் செயல். என்ன நினைத்து வைரமுத்து பாட்டின் பல்லவியில் சேலையை கொண்டு வந்தாரோ, பாட்டில் படாத பாடுபடுவது அமலா தான்!

[டூயட் பாடல்களில் அடிக்கடி ஆடைகள் மாறுவதுண்டு. என் சிறு வயதில் இந்த ஆடை மாற்றம் எப்படி நிகழ்கிறது என்று என் மனதில் கேள்வி எழும். சரி, மரத்தை சுற்றி பாடும்போது மரத்துக்கு பின்னால் மாற்றிக் கொள்வார்கள் போல என்று நானே நினைத்துக் கொண்டு சமாதானம் அடைந்து விட்டேன்! இந்தப் பாடலில் தான் உண்மையில் ஆடை மாற்றுவதை கொஞ்சமாவது காட்டி இருக்கிறார்கள்!]

ரஜினியின் அருகில் அமலா வந்தால் போதும், அவருடைய சேலையை மனிதர் சரேலென்று உருவி விடுகிறார். அதுவும் ஸ்டைலாக! என்ன ஒரு கதாநாயகத்தனம்!! உடனே அமலாவுக்கு இன்னொரு சேலை. மறுபடியும் உருவுகிறார். பாவம் அமலா. இதை படம் எடுக்கும்போது ரஜினிக்கோ, பாரதிராஜவுக்கோ, நடன இயக்குனருக்கோ "வெட்டவெளியில் வைத்து நாம் இப்படி ஒரு பெண்ணை அசிங்கப்படுத்துகிறோமே" என்று தோன்றி இருக்காதா? விளையாட்டுக்காகவாவது அமலா ரஜினியிடம், "சார் வைரமுத்து சாரை சட்டை, பேன்ட் வச்சி ஒரு பாட்டு எழுத சொல்லுங்க, அதுல நான் உங்க சட்டை பேண்ட்டை புடிச்சி இழுக்கிறேன்!" என்று சொல்லி இருப்பாரா? குழந்தைகள், பெண்கள் என்று ரஜினியின் படங்களை பார்க்காத ஆள் கிடையாது. இப்படி ஒரு காட்சியை படத்தில் எப்படி வைக்கலாம் என்று ரஜினியும் சரி, பாரதிராஜாவும் சரி, நடன இயக்குனரும் சரி யாருமே சிந்தித்திருக்க மாட்டார்களா? சரி, இது தான் நடன அமைப்பு என்றால், அந்த செயலுக்கு பொருத்தமானவர் படத்தின் வில்லன் தானே? ஒரு வேலை அவர் தான் படத்தில் கதாநாயகியின் அப்பா என்பதால் விட்டுவிட்டார்களா? இதில் கொடுமை என்னவென்றால் இதுவரை இந்தப் பாடலை பார்த்து நமக்கு எதுவுமே உறுத்தாது தான்!. அப்படி என்றால் தமிழ் சினிமா எவ்வளவு தூரம் நம்மை அழுக்காக்கி இருக்கிறது?

சமீபத்தில் பார்த்த சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் கடைசி எபிசோட் "ஆண்மை" பற்றியது. ஒரு குடும்பத்தில் ஆண் என்பவன் எப்படி இருக்க வேண்டும், இப்போது எப்படி இருக்கிறான் போன்றவைகளை அலசினார்கள்.  அதில் ஒரு பகுதியில் ஆண்வர்க்கம் நிறைந்த சினிமாவில் பெண்களை எப்படி காண்பிக்கிறார்கள் என்று அலசினார்கள். பெண்களை போகப் பொருளாய் காட்டுவது, ஐட்டம் டான்ஸ், பாடல் வரிகளில் தந்தூரி சிக்கன், லெக்பீஸ், நாட்டுக்கட்டை என்றெல்லாம் வருவதை சொல்லி ஷாருக், சல்மான், அக்ஷய் என்று எல்லா ஹீரோக்களின் சில படங்களின் வீடியோ கிளிப்ஸ்களை காட்டினார்கள். அதில் நிகழ்ச்சி தொகுப்பாளரான ஆமீர்கானையும் விட்டுவைக்கவில்லை. "என் படமும் இதில் இருக்கிறது, அப்போது தெரியவில்லை, ஆனால் இப்போது அதை நினைத்து வெக்கப்படுகிறேன்" என்று சொன்னார். சினிமா போன்ற மீடியாவில் எதை காண்பிக்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தான் உணர்வதாக சொன்னார்.

எனக்கு வருத்தம் என்னவென்றால் மிகச் சில நடிகைகளை தவிர மற்றவர்கள் இவ்வாறான காட்சிகளுக்கு கேள்வி எழுப்புவதே இல்லை! பழம்பெரும் நடிகை பானுமதியை பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். ஞாபகத்தில் இருப்பது வரை சொல்கிறேன். ஏதோ ஒரு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி! எம்.ஜி.ஆர் கத்திச் சண்டை இட்டு நம்பியாரிடம் இருந்து பானுமதியை காப்பாற்ற வேண்டும். ஒரு டேக், இரண்டு டேக், மூன்று டேக் என்று போய்க் கொண்டே இருக்கிறது. அலுத்துப் போன பானுமதி எம்ஜிஆரிடம், "மிஸ்டர். ராமச்சந்திரன், நீங்க ரெண்டு பேரும் கத்திச்சண்டை போட்டுட்டே இருக்கீங்க. ஆனா என்னை இன்னும் காப்பாத்த மாட்டேங்கிறீங்க. பேசாம அந்த கத்தியை என்கிட்டே கொடுங்க. நானே என்னை காப்பாத்திக்கிறேன்!" என்றாராம். நம் தமிழ் சினிமாவுக்கு சில பானுமதிக்கள் வேண்டும்.

சமீபத்தில் கமல் நடித்த சத்யா பார்த்தேன். உலக நாயகன் என்ற எந்த வித உபத்திரவமும் மனதில் கொள்ளாமல் மிக அருமையாய் நடித்திருக்கிறார். நாயகனுக்குப் பிறகு வந்த படம் என்று நினைக்கிறேன். சத்யா, எழுபதுகளில் பிரபலமாய் இருந்த திரைக்கதை ஆசிரியர்களான சலீம் ஜாவேத் ஜோடியின் ஜாவேத்தின் திரைக்கதையில் வந்த அர்ஜுன் என்ற ஹிந்தி படத்தின் தழுவல். என்னை பொருத்தவரை ஒரிஜினலை போல் எப்போதும் ரீமேக்குகள் இருப்பதில்லை. [தில்லு முள்ளு ஒரு விதி விலக்கு என்று நினைத்திருந்தேன்; இப்போது சத்யாவையும் சேர்த்துக் கொண்டேன்] ஹிந்தியில் சன்னி தியோல் நடித்திருக்கிறார். தமிழ் தான் முதலில் பார்த்து இருந்ததால் அது பிடித்திருந்தது. சரி ஹிந்தியை பார்ப்போம் என்று பார்த்தேன். கால் படத்தை தாண்ட முடியவில்லை. சன்னி தியோல் இந்த மாதிரி கோபக்கார இளைஞன் [அமிதாப்புக்குப் பிறகு] பாத்திரத்தை சரியாய் செய்பவர் தான். இருந்தாலும் கமல் இதில் ஜொலித்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

வழக்கமான ஒரு மசாலா படம் தான் என்றாலும், சில நல்ல காட்சிகளால், கச்சிதமான வசனங்களால் [வசனம்:அனந்து], கமலின் அருமையான நடிப்பால் [சொல்லப்போனால் படத்தில் நடித்த அனைவரும் நன்றாகவே நடித்திருந்தார்கள்!] பல இடங்களில் சத்யா மிளிர்கிறது. முதலில் கமலின் உருவம். கையில் வராத அளவுக்கு முடி முளைத்த மொட்டை தலை, கூர்மையான கண்கள், அவருடைய செவ்வுதடுகளை மட்டும் கொஞ்சமாய் காட்டும் அடர்த்தியான அவர் தாடி, காலர் இல்லாத சட்டை, பழுப்பான ஜீன்ஸ் என்று தான் உருவத்தில் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கிறார். எனக்கு என்னமோ தசாவதாரம் படத்தின் மேக்கப்பை விட இது தான் பிடித்தது!

இந்தப் படத்திலும் கேட்பாரே இல்லாத அழகான கதாநாயகி, யாரையும் அடித்து துவம்சம் செய்து விடும் ஹீரோயிசம் என்று சினிமாத்தனங்கள் இருந்தாலும் சில நல்ல காட்சிகளுக்காக மன்னிக்கலாம். உதாரணமாய்...

சத்யா ஒரு ஆள் அரவமற்ற ரெஸ்டாரன்ட்டில் தான் தங்கையை அவள் காதலனுடன் பார்க்கிறான். இப்படி ஒரு காட்சியே தமிழ் சினிமாவுக்கு அப்போது புதுசு தான். வழக்கமான தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு ஒன்றுக்கு இரண்டு கதாநாயகிகள் இருப்பார்கள். ஆனால் அவன் தங்கை என்று வந்து விட்டால், மற்ற ஆடவரை ஏறெடுத்து பார்க்காத எட்டு முழ புடவை/தாவணி சுற்றிக் கொண்டு, குணவதியாக, குடும்ப குத்து விளக்காக தான் இருப்பார். அப்படியே தப்பித் தவறி காதலித்தாலும், அவன் ஒரு கல்லூளிமங்கனாய் இருப்பான். கதாநாயகன் தங்கையை அவனிடமிருந்து காப்பாற்றுவான், அல்லது அவனை திருத்துவான். இப்படி எதுவுமே இல்லாமல் காதலுடன் வெளியே சுற்றும் தங்கையை கதாநாயகன் கண்டு கொள்வதை போன்ற ஒரு காட்சியை பார்க்கும்போது ஆனந்தமாய் தான் இருந்தது. [இதே போன்று ஒரு காட்சி பாஷா படத்திலும் வருகிறது. இரண்டையும் ஒப்பிட்டு பாருங்கள்! ரஜினி பெண்ணிய விஷயத்தில் எத்தனை பின்தங்கி இருக்கிறார் என்று புரியும்; சுவாரஸ்யமாய் இருக்கும்]


அவர்கள் இருவரும் ஒரு ஃ பேமிலி ரூமில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தங்கையின் குரலை கேட்ட சத்யா சடாலென்று உள்ளே நுழைகிறான். அவனை அங்கு எதிர்பார்க்காத இருவரும் நிலை தடுமாறி போகிறார்கள். நிலைமையை சமாளிக்க தங்கை, சத்யாவுக்கு அவரை அறிமுகப்படுத்துகிறாள். அவர் ஒரு இன்ஸ்பெக்டர் என்றும், அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் சொல்கிறாள். சத்யா இன்ஸ்பெக்டரை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறான். "ஏன்யா, இன்ஸ்பெக்டர் தானே நீ? அது என்னய்யா ஃபேமிலி ரூம்ல ஒழிஞ்சுட்டு லவ் பண்ற?" என்ன ஒரு கேள்வி பாருங்கள்! சத்யாவுக்கு அவர்கள் ஒழிந்து கொண்டு காதலிப்பது தான் பிடிக்கவில்லை :) பிறகு அவனை தீர்க்கமாய் பார்த்துக் கொண்டே சத்யா அவரிடம் "மை சிஸ்டர், ஆர் யு சீரியஸ்?" என்கிறான். அவரும் அசடு வழிந்து கொண்டே "ஆமா, ரொம்ப சீரியஸா ரெண்டு பேரும்" என்று மென்னு முழுங்கும்போதே, அவரிடம் தான் கையை நீட்டி "ஐ அம் சத்யா" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அண்ணன் சம்மதித்து விட்டான் என்று துருதுருப்பில் "அதெல்லாம் நான் ஏற்கனவே" என்று வாயெடுக்கும் தங்கையை பொய் கோபத்துடன் "நீ சும்மா இரு" என்று சொல்லி அவள் அடங்கியதும் அவளை பார்த்து சிரிக்கிறான். பதிலுக்கு அவளும் சிரிக்கிறாள். இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்று அந்த காதலன் முழிப்பதை உணர்ந்த சத்யா அவரின் தோளை தட்டிக் கொடுத்து "சிரிக்கலாம்" என்கிறான்.  என்ன ஒரு அருமையான காட்சி. கவிதையாய் இருக்கிறது. இதை விட எதார்த்தமாய் அந்த ஒரு தருணத்தை அணுக முடியுமா என்று தெரியவில்லை. ஒரு பாசக்கார, கோபக்கார அண்ணனாக கமலின் நடிப்பு உச்சம்.

பிறகு இன்னொரு காட்சியில் சத்யாவின் நண்பர்கள் கதாநாயகியை அவனுடன் சேர்த்து வைத்து கேலி பேசுவார்கள். அவளை வீட்டுக்கு விடும்போது சத்யா "சாரிங்க, பசங்க கொஞ்சம் அசிங்கமா பேசிட்டாங்க, நீங்க ஒன்னும் தப்பா நெனச்சுக்காதீங்க!" என்கிறான். பதிலுக்கு மலையாளத் தமிழில் அவள், "ஏன் நல்லா தானே பேசினாங்க" என்று புரியாமல் கேட்க, "இல்லைங்க, ரெண்டாவது நாள் தான் சந்திக்கிறோம், அதுக்குள்ளே அண்ணின்னு எல்லாம் பேசக்கூடாது இல்லையா.." அவள் "அப்போ பத்து நாள் கழிச்சி பேசலாமா?" அதற்கு சத்யா "அது கொஞ்சம் கெளரவமா இருக்காது?!" என்று அவளிடமே கேட்டு அவள் சிரிக்கும்போது அவளுக்கும் இஷ்டம் தான் என்று உணர்ந்து "இன்னும் எட்டு நாள் இருக்கு" என்கிறான்! கிளாஸ்!!

அதே போல் தான் தந்தையை மரியாதை குறைவாய் நடத்து முதலாளியை துவம்சம் செய்யும் காட்சி. கமல் மிக அனாயாசமாய் நடித்திருப்பார். செம அடி வாங்கிய பிறகு, அந்த முதலாளி, "அய்யோ அவருக்கு இவ்வளவு பெரிய பையன் இருக்காருன்னு தெரியாம போச்சுங்க,  ரெண்டு பொண்ணுங்க இருக்குன்னு தெரியும்" என்று சொல்லிவிட்டு, மேலும் அடி விழுகும் என்று சுதாரித்துக் கொண்டு "அய்யோ தங்கச்சி மாதிரிங்க நீங்க என் அண்ணன் மாதிரிங்க என்று அவர் அழுவது செம...அதற்கு சத்யா சொல்லும் பதில் "இதை முன்னாடியே ஒத்துட்டு இருந்தா இவ்வளவு பெயிண்ட் செலவு இல்லைல்ல?" தூள்! அவரை அடித்து ஷெல்பில் தொங்கவிட்டு அவர் முகத்தில் பெயிண்ட் பூசிக் கொண்டே சத்யா தான் யார் என்று சொல்லும் விதம் பிரமாதம். ஒரு கட்டத்தில் அவர் அடி தாங்க முடியாமல், "சார் வேற எதுனா ஒடச்சுட்டு போறதா இருந்தா போறீங்களா, என்னால முடியலை" என்று கூறுவார். அதற்கு சத்யா சலிப்புடன், "என்னாலயும் முடியலையா! உத்தரவு குடுய்யா" என்று கிளம்புவான், செம மாஸ் சீன்!

இந்தப் படத்தின் ஒரு முக்கியமான சிறப்பு அம்சம், கிட்டிக்கு எஸ் பி பியின் குரல்! அடடா..அந்த ஒரு வில்லத்தனமான பாத்திரத்துக்கு, தேன் தடவி பேசுறார் என்று சொல்வோமே, அத்தனை பொருத்தம். அவரிடம் சத்யா வந்து சேர்ந்தவுடன் அவரின் அன்பில் திக்கு முக்காடிப் போயிருப்பான். அப்போது அவர் "வேற ஏதாவது வேணுமா சத்யா? பணம் ஏதாவது?" கேட்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் சத்யா தடுமாறிக் கொண்டே, "என் தங்கச்சி டவ்ரி, ஒரு இருபது.." என்று சொன்னவுடன் அவர் தான் உதவியாளரிடம் பணம் கேட்க திரும்புவார். அதற்குள் சத்யா ஏது இருபது ரூபாயை எடுத்து கொடுத்து விடப் போகிறாரோ என்று பயந்து, "சார், சார், இருபது...ஆயிரம் சார்" என்று சொல்லும்போது ஒரு சாமானியனுக்கு இருபது ஆயிரம் என்பது எவ்வளவு பெரிய தொகை என்று தான் நடிப்பின் மூலம் சொல்லாமல் சொல்லி இருப்பார் கமல். கையில் பணம் வாங்கிக் கொண்டு நன்றியோடு அழும் சத்யாவை பார்த்து, முதலில் அந்தப் பணத்தை கடனாக தரவில்லை என்று சொன்னவர், "சரி, இது கடன் தான், சத்யாவுக்கு நான் கொடுத்த கடன், இதை திருப்பித் தாங்க திருப்பித் தாங்கன்னு டெய்லி உங்களை தொந்தரவு பண்ண போறேன்; போதுமா? என்னப்பா நீங்க?" எஸ் பி பியின் குரல் அப்படி நடித்திருக்கும்.

பிறகு தன் தங்கையின் புகுந்த வீட்டில் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கும் இடத்தில் கமல் அதகளப்படுத்தி இருப்பார். பணத்தை இறைத்து விட்டு, அந்த முதுகெலும்பில்லாத மாப்பிள்ளையை மிரட்டும் போதும் சரி, பிறகு அவரின் குணம் அறிந்து அவரை பார்த்து பரிதாபப்படும்போதும் சரி, தனிக்குடித்தனம் போங்கள் என்று தைரியம் கொடுக்கும்போதும் சரி, பிறகு தங்கையின் நல்ல குணத்தை பார்த்து பெருமிதப்படும் போதும் சரி! கமல்; கமல்; கமல்!! சான்சே இல்லை...தங்கையை பார்த்துக் கொண்டே அவள் சொல்வதும் சரி தான் என்று தோன்றி, ஒரு "பாஸ்" விட்டு அந்த மாப்பிள்ளையிடம் கை கொடுத்துவிட்டு "பாத்துக்குங்க!" என்று சொல்லி புறப்படுவார். அப்பா...அத்தனையும் தேர்ந்த நடிப்பின் நுணுக்கங்கள்...

இப்படி படம் முழுதும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் தான். வாய்ப்பு கிடைத்தால் மறுபடியும் பாருங்கள்.

"உன் பேர் என்னடா?"
"சத்யா டா!"  
எல்லோரும் அஞ்சானை எதிர்நோக்கி காத்திருக்கும் போது நான் இரா பார்த்தீபனை  சைடா நோக்கிக் கொண்டிருந்தேன். அஞ்சானுக்கு சூர்யா வாயில் குச்சியை வைத்துக் கொண்டு பேசாமல் நிற்கும் ஸ்டில் போதும்; ஆனால் இரா பார்த்தீபனுக்கு வாயில் குசும்பை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அதை தான் மனிதர் செய்து கொண்டிருந்தார்; கிறார். படம் வரப்போகிறது என்று சொன்னதில் இருந்து "தியேட்டருக்கு வந்து பாருங்க", "இது என் படம் இல்லை, உங்க படம்", "உங்க கைதட்டல் தான் பெரும் சன்மானம்".....என்று பேப்பருக்கு பேப்பர் அவரின் பேச்சு விளம்பரங்கள். நேற்று எதேச்சையாய் ஒரு டீக்கடையில் வடையில் உள்ள எண்ணையை பிழிய ஒரு பேப்பரை எடுத்தால் அது அவரின் படத்துக்கு அடித்த பிட் நோட்டிஸ்! அதில் வேறு திருட்டு வீசிடி யில் படம் பார்க்காதீர்கள் என்று மன்றாடி கேட்டிருந்தார்! கண் கலங்கி விட்டது. மனுஷன் என்னமா யோசிக்கிறான்யா! ரொம்ப ஃபீல் ஆகி, சரி கழுதை, நூறு ரூபா தானே [உண்மையில் அறுபது ரூபாய் தான்!], இந்த உழைப்புக்கு, அர்ப்பணிப்புக்குத் தரலாம் என்று, டீயை குடித்து விட்டு, பைக்கில் ஏறும்போது என் மனசு இறங்கி, இன்று பைக்கிலிருந்து இறங்கி படம் பார்க்க தியேட்டரில் நுழைந்தேன். [ஏன் அவர் தான் எதுகை மோனையா பேசுவாரா, எங்களுக்கும் வரும்!]

அவர் சொன்னது போல் கதை இல்லாமல் எடுத்த படமா இது? இல்லை; இதிலும் ஒரு கதை, (ஒன்னா?) இருக்கு! ஒரு "நல்ல வளர்ந்த" பட் சினிமாவில் டைரடக்கராய் வளரத் துடிக்கும் இளைஞன். அவன் படத்திற்காக ஒரு கதை தேடி அலைவது தான் படத்தின் கதை. கடைசியில் அவன் ஜெயித்தானா இல்லையா என்ற ட்விஸ்டை க்ளைமாக்சில் வைத்திருக்கிறார் இயக்குனர். இந்தப் படம் ஒரு கவிதை! உங்களுக்கு கவிதை பற்றி கொஞ்சம் தெரியும் என்றால் [இரவில் வாங்கினோம்; இன்னும் விடியவில்லை! இது கவிதை இல்லை - சுஜாதா] நான் சொல்ல வருவது புரியும்!

நிறைய அபிமான நட்சத்திரங்கள். படத்தின் முக்கால்வாசி பேர் புதுமுகங்கள். கதாநாயகன் அடக்கமான அழகு; நடிப்பு. கதாநாயகி சில ஆங்கிள்களில் ஒல்லியான நயன்தாரா போல இருக்கிறார். யாருங்க அவருக்கு பொட்டு வச்சு விட்றது? இன்னொரு கதாநாயகி மொக்க! "தம்பி" ராமையா தான் படத்தில் எல்லோருக்கும் "அண்ணன்"![அய்யோ நானே பார்த்தீபன் சார் அசிஸ்டெண்டா போயிடலாம் போல இருக்கே!] இவருக்கு மட்டும் தான் படத்தில் நல்ல ஸ்கோப்! படத்தின் ப்ளஸ் இயக்குனர் பார்த்தீபனின் நச் நச் ஒரு வரிகள். ஆனால் சில சமயம் அதுவே ஓவர் டோஸ். இவர் ஒருவர் விழாக்களில் பேசினாலே தாங்காது; படத்தின் அத்தனை காரெக்டர்களும் இவர் மாதிரியே பேசினால்! பூமி தாங்காது இல்ல?

அந்த சுனாமி கிராபிக்ஸ் சூப்பர்! வலைதளங்களில் பல படங்களின் விமர்சனங்களை பார்த்து ரொம்பவே பயந்து போயிருக்கிறார் என்று நினைக்கிறேன். படம் பார்த்து விட்டு நாம் சொல்ல வேண்டியதை எல்லாம் படத்திலேயே அவர் சொல்லி விடுகிறார். சீன்கள் ஆங்காங்கே சுவாரஸ்யமாய் இருந்தாலும், மொத்தமாய் ஒரு படமாய் யோசித்து பார்க்கும்போது பேன்ட் பையில் இருந்து எடுக்கும் ஹெட் ஃபோனை போல ஒரே கொச கொசவென்று ஆகி விடுகிறது. இருந்தும், கதாநாயகன் பஞ்ச் பேசிவிட்டு பத்து பேரை பறந்து பறந்து அடிப்பதை அலுக்காமல் பார்க்கும் நாம் இதை பார்ப்பதில் தப்பில்லை.

கடைசி பஞ்ச், எந்த வித்தியாசமும் இல்லாமல் பார்த்தீபன் ஒரு படம் எடுத்தால் ரொம்ப வித்தியாசமாய் இருக்கும்! என்ன சொல்றீங்க?

அந்த பன்ச்சோட விமர்சனம் முடியுது. [இந்த விமர்சனமும் பேன்ட் பையில் இருந்து எடுக்கும் ஹெட் ஃபோனை போல ஒரே கொச கொசவென்று...?!]

கீழே உள்ளது என்னோட நாலாவது குறும்படத்தோட டீசர். பார்த்து விட்டு படம் பார்க்க தயாராகுங்கள். மேலே சொன்னது "கதை திரைக்கதை வசனம் இயக்கம்". கீழே உள்ளதில் அவை எல்லாமே "நான்"! [இந்தப் பதிவின் தலைப்பை எப்படி கொண்டு வந்தேன் பாத்தீங்களா?]


வேலையில்லா பட்டதாரி

தனுஷை சொல்லிக் குற்றமில்லை. சமீபத்திய படங்களில் தனுஷின் நடிப்பை எல்லோரும் புகழும்போது அவருக்கு நன்றாய் இருந்தாலும், அதே சமயம், இந்த படத்தை விற்கும்போது, விநியோகஸ்தர்கள் அவரிடம் "படம் நல்லா இருக்கு, ஆனா  நீங்க சிவகார்த்திகேயனை வச்சி எடுக்குற அடுத்த படத்தையும் எங்களுக்கே கொடுத்தீங்கன்னா உங்க படத்தை வாங்கிக்கிறோம்!" என்று கொளுத்திப் போட்டதாய் கேள்வி. அது உண்மை என்றால், தனுஷ் தொடர்ந்து "வேலையில்லா பட்டதாரி" மாதிரி படத்தை தான் எடுக்க வேண்டி இருக்கும். "புகழ்" காதுக்கும், கருத்துக்கும் நல்லது தான்!  வயித்துக்கு பணம் தானே நல்லது?!

தனுஷ் இந்தப் படத்தை எல்லாம் இடது கையால் ஊதித் தள்ளி விடுவார். "கறியில கை வை, கொன்னுர்றேன்" என்று அவர் வேண்டா வெறுப்பாய் கறி வாங்க போகும்போது ஏதோ நம் பக்கத்துக்கு வீட்டை எட்டிப் பார்ப்பது போல் இருக்கிறது. அத்தனை இயல்பு, யதார்த்தம். தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே ஒரு அம்மா இருப்பதால், சரண்யாவை "தமிழ்த் தாய்" என்று அழைக்கலாம். ஒரு கை வைத்த பனியனை போட்டு, வேஷ்டியை கட்டி,  கொஞ்சம் தலையை நரைக்க வைத்து, கண்ணாடி போட்டால்  தமிழ்த் தந்தை ரெடி. சமுத்ரகனி கச்சிதம். அந்தத் தம்பி தான் அந்தக் குடும்பத்துடன் ஒட்டாமல் இருந்தான். தனுஷ் பக்கத்து வீட்டு ஃபிகரை சைட் அடிக்க உடனே ஒரு டெலஸ்கோப் செய்கிறார். வீட்டின் எல்லா வேலையும் செய்கிறார். பக்கத்து வீட்டில் குடி வந்திருப்பவர்களுக்கு பால், கேஸ் என்று எல்லாம் ஏற்பாடு செய்கிறார். முப்பது செகண்ட் டைம் கொடுத்து பொறுக்கிகளை பின்னி எடுக்கிறார். இப்படி எல்லாவற்றிலும் கில்லியாக இருப்பவருக்கு வேலை தான் கிடைக்க மாட்டேன் என்கிறது!

இப்படி இன்னும் படத்தை பற்றி குறைகளை எழுதலாம். படத்தை விட அது போர் அடிக்கும் அபாயம் இருப்பதால், இந்தப் படம் தனுஷின் வயித்துக்கு என்று சொல்லி முடித்துக் கொள்கிறேன்!

சதுரங்க வேட்டை

விகடன் ஐம்பத்தி இரண்டு மார்க் போட்டு அரை மாமாங்கம் கடந்து விட்டது. ஜிகர்தண்டா வந்த பிறகும் கூட இது சில  தியேட்டர்களில் இன்னும் ஓடிக் கொண்டிருப்பதை வைத்தே படத்தின் தரத்தை சொல்லி விடலாம். கதை விறு விறு; திரைக்கதை பர பர; வசனம் சுருக் சுருக்; இயக்கம் பட பட! ஒரே குறையாக என்று எனக்குப் பட்டது, ஹீரோ ராங் காஸ்டிங்! சவ சவ! என்ன செய்வது, இயக்குனரே  சொல்லிவிட்டாரே, குற்ற உணர்ச்சியில்லாமல் செய்யும் தப்பு தப்பு ஆகாது என்று. ஏனோ படம் நெடுக விஜய் சேதுபதியின் ஞாபகம் வந்து அது ஏக்கமாகவே மாறி விட்டது எனக்கு. அவர் நடித்திருந்தால் இன்னொரு சூது கவ்வும்!  இயக்குனருக்கு ஒரு வேண்டுகோள். இத்தனை ஐடியா வச்சுருக்கீங்க, அதை ஏன் படம் எடுத்து வேஸ்ட் பண்றீங்க..ஒரு முன்னூறு கோடிக்கு ஐடியாவை ரெடி பண்ணி செட்டில் ஆவுங்க பாஸ்! எப்பவுமே ஏமாற எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க :-)

 ஜில் ஜில்...

சேதுவுக்கு அவனை பார்த்து யாராவது சிரித்தால் பிடிக்காது! அப்படி பட்ட ஒருவனை எனக்கு ரொம்ப பிடித்தது [டிரையிலர், படத்தின் முதல் பாதி], பிறகு அவனை பார்த்து ஊரே கை கொட்டி சிரித்தது என்று கதையை மாற்றி விட்டீர்கள் [பின் பாதி]. அது எனக்குப் பிடிக்கவில்லை. "என்னடா சேதுவை பாத்து சிரிக்கிறீங்க?" என்று அவனை போல நானும் ரவுடி ஆகிவிடலாமா என்று தோன்றியது!

சேதுவுக்குப் பிறகு கருணாவும், சங்கிலி முருகனும் கிளாஸ்!

அப்புறம் செளராஷ்ட்ரா மக்களாய் வரும் அம்பிகாவும், லக்ஷ்மியும் சேலை திருடுகிறார்கள் என்று காட்டி இருக்கிறீர்கள்.  எனக்குத் தெரிந்து எங்கள் சமூக மக்கள் கையில் உள்ள தங்கள் சேலையை பறி கொடுத்துவிட்டு வருவார்களே தவிர, இப்படி திருடுவதை நான் கேள்விப்படவில்லை. சரி, சினிமாவில் வரும் அத்தனை கதாப்பாத்திரங்களையும், அவர்களின் சமூகத்தோடு நிறுத்திப் பார்த்தால், ரஜினி பத்து பேரை பறந்து பறந்து அடிக்கும்போது, மராட்டியர்கள் [ரஜினி மராட்டியர் தானே?] யார் இப்படி பத்து பேரை பறந்து பறந்து அடிக்கிறார்கள்? என்று கேட்க வேண்டி இருக்கும் என்பதால் இதை படம் என்று கருதி விட்டு விடுவோம்.

சந்தோஷ் நாராயணனை பற்றி சொல்ல ஒன்றும் அதிகமில்லை. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி இளையராஜா; ஏ ஆர் ரகுமான்; சந்தோஷ் நாராயணன்!

மற்றபடி ஜிகர்தண்டா எல்லோரும் ருசிக்க வேண்டிய பட(பான)ம்!


சகோதரர்கள் மற்றும் "நண்பிகள்" அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இன்றைய தினத்தில் காலையிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டியோடு  ஒட்டிக் கொண்டு பல சிறப்பு நிகழ்சிகளை பார்த்து நீங்க டயர்ட் ஆகி இருந்தாலும் பரவாயில்லை. பத்தோடு பதினொன்றாய் என் குறும்படத்தையும் பார்த்து விடுங்கள்! என் முதல் குறும்படத்தை பார்த்து விட்டு, "நல்ல முயற்சி, மென்மேலும் தொடருங்கள்!" என்று உங்களில் பலர் ஊக்குவித்திருந்தீர்கள்.  நீங்கள் எதை நினைத்து அப்படி சொன்னீர்களோ, நான் அதை ரொம்ப சீரியசாய் எடுத்துக் கொண்டேன். உங்களுக்குப் பரிசாக [தண்டனையாக?] இதோ என் இரண்டாவது குறும்படம்!

என்னது ரெண்டாவது படமா என்று ஷாக்க் ஆகாதீர்கள். உங்களை மாதிரியே நானும் ஷாக்க் ஆகித் தான் போயிருக்கிறேன். "முன்னேறுவதற்கான முதல் படி, அதற்கான முதல் அடியை எடுத்து வைப்பதில் தான் இருக்கிறது!" என்று சொல்வார்கள் [சொல்லுவாங்கல்ல?] அது எத்தனை உண்மை என்பதை இப்போது நான் புரிந்து கொண்டேன். இங்கே, முக்கியமாக சொல்ல வேண்டிய ஒன்று, எனக்கு குறும்படம் எடுப்பதில் ஆர்வம் இருந்தாலும், என்னுடைய இரண்டாவது படத்தை நான் இத்தனை சீக்கிரம் வெளியிடுவதற்கு உங்களின் உந்துதல் தான் முதன்மையான காரணம்! [அப்பாடா, பழியை போட்டாச்சு!]

இந்தப் படத்தை பொருத்தவரை, நான் நடிகன் மட்டுமே! ஐ டி யின் அந்தஸ்தினால் கொஞ்சம் பணம் போட்டேன்! [நன்றி ஐ டி] எழுதி, இயக்கியது எல்லாம் என் முதல் குறும்படத்தின் காமெராமேன் பிரசன்னா. என்னுடைய அடுத்த படம் வரக்கூடாது என்று சமூக பொறுப்புடன் நீங்கள் சிந்திப்பவர் என்றால் இவரை பிடியுங்கள். இவரிடம் நிறைய கதை இருக்கிறது. என்னிடம் நிறைய  திறமை இருக்கிறது! அவ்வளவு தான் சொல்லுவேன்.

இந்த படத்தில் நான் நன்றாய் நடித்திருந்தால் என்னை பாராட்டுங்கள்; சொதப்பி இருக்கிறேன் என்று உங்களுக்குத் தோன்றினால் இயக்குனரை திட்டுங்கள்! [உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது; உள்ளத்தில் இருக்கும் வார்த்தையை மறைக்கும் கபடம் தெரியாது....]

இந்தப் படம் "விடியல்" போல் இல்லாமல், எல்லோருக்கும் புரியும்படியும், சுவாரஸ்யமாயும் இருக்கும் என நம்புகிறேன். தங்களின் "பூச்செண்டுகளையும்", "செமகாண்டுகளையும்" எதிர்நோக்கி காத்திருக்கும் "காதல் வந்தா கம்முன்னு கெட" குழு!

இனி படம்...



இம்தியாஜ் அலியின் அடுத்த படமான "ஹைவே" கூட வெளி வந்து விட்டது. இப்போது தான் அவரின் "ராக்ஸ்டார்" படத்தை பார்த்தேன். என் வரையில் இது ஒரு படம் என்பதை தாண்டி ஒரு பேரனுபவமாக அமைந்து விட்டது. இம்தியாஜின் கதையும், ரன்பீரின் நடிப்பும், ரஹ்மானின் இசையும், இர்ஷாத் கமீலின்  பாடல் வரிகளும், மோஹித் சவ்ஹானின் குரல் வளமும்...சொல்லிக் கொண்டே போகலாம்! A sheer magic. இதெல்லாம் ரொம்ப "ஓவரா" இருக்கே என்று எனக்கே தோன்றியது! ஆனால், இந்தப் படமும், இந்தப் படத்தின் பாடல்களும் கடந்த ஒரு வாரமாய் என்னை பிடித்து ஆட்டுகின்றன. எனக்கு நினைவு தெரிந்து இந்த மாதிரி பித்து பிடித்து நான் எந்தப் பாடலையும் கேட்டதில்லை. அதுவும் "டை ஹார்ட்" "ராஜா" ரசிகனான நான் ரஹ்மானின் பாடலில் இப்படி கிறங்கி போவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. "உன்மத்த நிலை" என்று சாரு அடிக்கடி சொல்வாரே, அந்த நிலையில் இருக்கிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை; இருந்திருந்தால் இந்தப் பாடலை கேட்கும்போது நான் கடவுளுக்கு மிக அருகில் செல்வதாய் உணர்கிறேன் என்று எழுதி இருப்பேன். [நாத்தீகர்கள் இந்த நிலையை எப்படி தான் எழுதுவது?] பாடல் காட்சியை பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பார்த்தாலும் அது தனி ஒரு அனுபவம் என்று தான் சொல்வேன். கண்களை மூடி ஒரு ஹெட்ஃபோன்  போட்டுக் கொண்டு எல்லா விளக்கையும் அனைத்து விட்டு பாடலை கேளுங்கள்.  இதோ பாடல்! [நீங்களும் என் நிலையை அடைந்தீர்கள் என்றால், நாம் இருவரும் நண்பர்களே!]


முதல் சொன்ன பாடலுக்கு இந்தப் பாடல் நேர் எதிர். முதல் பாடல் தன்னை முழுவதும் கடவுளுக்கு அர்ப்பணிப்பதாக, அவருக்கே பூரணமாய் அடிபணிந்த வகையில் அமைந்த பாடல். ஆனால், இந்தப் பாடல், யாருக்கும் அணிபடியாத, தான் நினைப்பது சரி, எவன் என்ன சொன்னால் என்ன என்ற வகையில் அமைந்த பாடல். எல்லோரையும் எப்போதும் உங்களால் உங்களோடு ஒத்துப் போகச் செய்ய முடியாது என்ற உண்மையை அடிப்படையாக கொண்டு அமைந்த பாடல். ஒரு வகையில் இது மிகப் பெரிய தத்துவம் என்றே சொல்ல வேண்டும். இந்த பாடலை நான் அலுவலகத்தில் கேட்கும்போது அங்கேயே எழுந்து ஆடினால் என்ன என்று கூடத் தோன்றியது. அப்படி ஒரு எனர்ஜி பாடலில்...பாடல் முழுவதும் கிடார் இசை பொங்கி வழிகிறது. "ஒரியந்தி" என்ற உலகப் புகழ் பெற்ற ஆஸ்ட்ரேலியன் கிடாரிஸ்ட்டின் கை வண்ணம். ஜாக்சனின் கடைசி நிகழ்ச்சியில் இவர் தான் லீட் க்டாரிஸ்ட் ஆக இருக்க வேண்டியவராம்; விக்கி சொல்கிறது! பட்டையை கிளப்பி இருக்கிறார். இதோ பாடல். பாடலில் ரன்பீரின் நடிப்பை பாருங்கள். a real rockstar!!


பாடலின் ஆங்கில வடிவம். "ஒரு பெயர் தெரியாதவர்" மிக அழகாய் மொழி பெயர்த்திருக்கிறார்!


In this world of yours’ O social beings
The human being is wrong at every step
No matter,considering correct what I do,
You always declare it to be incorrect
If I am wrong, then who is right

Do I need to seek your permission for my life,my choices,my willingness
Does that mean that you all have more right over me than I myself have
Its my right
Give it to me here…

These queues,demonstrating social obedience.These debts,dividing and labelling humans
Why are you suffocating my nature flow of life in them
I am uncivilized,I belong to that street
Where all are immodest and shameless
I feel as if social obedience is the tax I have to pay,just to stay alive
This world is my enemy,this world is alien to me
Burn it into flames
My heart says…Live as you wish,else choose to die

It’s my right
Give it to me here…

O eco-friendly
The saviours of nature
I too am a manifestation of nature [எனக்கு மிகவும் பிடித்த வரி!]
 

With these rules and regulations, these social dos and don’t s
Why do you cut me why do you piece me so inhumanly
Why this propagation of truth
When you can’t even handle the truth
If someone dares to speak up the truth
You begin to teach your social rules n regulations

Your fears.Your love.Your Praises
Keep it with yourself
Keep it all

It’s my right
Give it to me here...
[ஒரு குறிப்பு: நீங்கள் இன்னும் படம் பார்க்கவில்லை என்றால் பார்த்துவிட்டு இதை படியுங்கள். இல்லையென்றால் ஒரு மகா அனுபவத்தை இழந்து விடுவீர்கள் :-)]
 

புகழின் போதை எத்தகையது என்று இன்று தான் உணர்ந்தேன். கிட்டத்தட்ட பத்து வருடமாய் எழுதிக் கொண்டிருக்கிறேன். இத்தனை நாள் கிடைக்காத பாராட்டு என் முதல் குறும்படத்திற்காக ஒரே நாளில் எனக்கு கிடைத்திருக்கிறது. அது தான் சினிமாவின் வீச்சு. அதற்குத் தான் ஒவ்வொரு கலைஞனும் சினிமா என்றால் ஆளாய் பறக்கிறான் போலும்.

இந்தப் படத்தின் ஒன் லைன் எனக்குக் கிடைத்து ஒரு ஐந்து வருடங்களாவது இருக்கும். ஏதோ ஒரு ரஜினி படத்தை பார்க்கும்போது "ஒரு கண் தெரியாதவன் ரஜினியை எப்படி அணுகுவான்" என்ற கேள்வி என் மனதில் உதித்தது! "அவனுக்குப் பார்வை வந்ததும், ரஜினியை பார்த்ததும் அவனுடைய கற்பனை உருவத்துக்கும் உண்மை உருவத்துக்கும் எவ்வளவு சம்மந்தம் இருக்கும்?" என்று கற்பனை தொடர்ந்தது...அப்படி தொடங்கி, "சரி பல வருடமாய் பார்வை இல்லாமல் இருந்தவனுக்கு பார்வை கிடைத்தால் அவன் முதல் நாள் எப்படி இருக்கும், அவன் எதையெல்லாம் பார்க்க நினைப்பான்?" என்று யோசிக்கத் தொடங்கினேன். பிறகு வழக்கம்போல் அந்த யோசனை மேலும் வளராமல் அப்படியே தங்கி விட்டது. சென்ற வருடம், எப்படியும் இந்த வருடமாவது ஒரு குறும்படம் எடுத்து விட வேண்டும் என்று நானும் நண்பர்களும் பேசிக் கொண்டிருந்தோம். சரி என்று இந்தக் கதையை தூசு தட்டினேன். இந்தப் படத்தின் "திரைக்கதை" இந்த ஒரு தருணத்துக்காகவே காத்திருந்ததை போல அந்த ஒரு இரவில், ஒரு மணி நேரத்தில், என்னை வைத்து தன்னை எழுதிக் கொண்ட பிறகு தான் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது என்று நினைக்கிறேன்!

எனக்கு கதை மிகவும் பிடித்தது. என் நண்பர்களுக்கு சொன்னேன். வழக்கமான லவ், டாஸ்மாக் இல்லாத வித்தியாசமான கதைக்களம் என்பதால் அவர்களுக்கும் பிடித்திருந்தது. சோ, கதை எங்களை உந்தித் தள்ள ஷூட்டிங் கிளம்பிவிட்டோம்! என்ன ஒரு மகத்தான அனுபவம் அது.

THE FILM MAKER: Pain is temporary; Film is forever!

மிகச் சரியான வாசகம். இந்த தம்மாத்துண்டு படத்துக்கே எத்தனை சொதப்பல்கள், எத்தனை வாக்குவாதங்கள், எத்தனை குறிக்கிடல்கள், எத்தனை கேள்விகள், எத்தனை குழப்பங்கள்!! சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாவற்றையும் ஒரு வழியாய் கடந்து வந்தோம்.

சினிமா என்னை அழைத்துச் செல்லும் இடங்கள் எனக்கு பிடித்திருக்கிறது. அந்த அனுபவமே அலாதி. படத்தில் வரும் டேப் ரிக்கார்டரை என் வீட்டின் எதிரில் உள்ள பாத்திர வியாபாரியிடம் இரவல் வாங்கினேன். அந்த கண் தெரியாதவர் உபயோகிக்கும் கம்புக்காக அடையார், நுங்கம்பாக்கம் என்று எல்லா கண் தெரியாத பள்ளிகளுக்கும் சென்றேன். கண் தெரியாதவருக்கு கண் வந்தால் அவர்கள் எதை முதலில் பார்க்க விரும்புவார்கள் என்று தெரிந்து கொள்ள பார்வையற்ற ஒருவரை பேட்டி எடுத்தேன். கண் வந்ததும் ஒருவரின் நடை, உடை, பாவனை எப்படி இருக்கும் என்று ஒரு மருத்துவரிடம் விசாரித்தேன். "நீங்கள் ஒன்றை உண்மையாக விரும்பினால் அதை உங்களுக்குப் பெற்றுத் தருவதில் இந்த உலகமே உதவி செய்யும்!" என்பது எத்தனை உண்மை என்று கற்றுக் கொண்டேன்.  உதாரணமாக, முதல் நாள் ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று வெளியிடங்களுக்கு சென்று சூட் செய்தோம். கதைப்படி ஒரு பார்வையற்ற பிச்சைக்காரர் வேண்டும். நாங்கள் ரயிலில் ஏறி ஒவ்வொரு ஸ்டேஷனும் தேடினோம். ஒருவரும் தென்படவில்லை. பிறகு தான், அன்று ஞாயிற்றுக் கிழமை அவர்கள் யாரும் அன்று தொழில் செய்ய மாட்டார்கள் என்று பிறர் சொல்லக் கேள்விப்பட்டோம். சரி அடுத்த சனிக்கிழமை எடுத்துக் கொள்ளலாம் என்று வேறு ஷாட்களை எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது தான் பார்வை இல்லாத குமார் அங்கு வந்து சேர்ந்தார். ரயில் புறப்படும் நேரம் ரயில் ஏறும் அவரை பார்த்து விட்டு, அவரை அவசர அவசரமாய் கீழே இறக்கி, அவரிடம் விஷயத்தை சொல்லி நாங்கள் அவரை உபயோகப்படுத்திக் கொண்டோம். கொஞ்சம் பணம் கொடுத்து அவரை நல்லபடியாய் அனுப்பி வைத்தோம்.

பிறகு டீ கடையில் இருக்கும் டீ வி! உங்களில் சிலர் அதை உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் அந்தக் கடையில் டீவியே இல்லை. டீவியுடன் உள்ள டீ கடையை நாங்கள் தேடாத இடமில்லை. எங்கள் கண்ணில் படவேயில்லை. சரி என்று டீவி இருப்பதாய் பாவனை செய்து நடித்து, வீட்டில் வந்து டீவி [அரசு டீவி என்பது முக்கியம்!] ஷாட்ஸ் எடுத்துக் கொண்டு, எடிட்டிங்கில் வெட்டி ஓட்டினோம்!

ஏன் அவன் அந்த துண்டை பார்த்து சிரிக்கிறான்; ஏன் அதை தூக்கி எறிகிறான் என்று சிலர் கேட்டிருந்தார்கள். இத்தனை காலம் பார்வை இல்லாமல் இருந்ததால் அவன் கணக்குப்படி அந்த இடத்தில் வந்து துணியை காயப்போடுவது வழக்கம். இன்று கண் வந்து விட்டதால், இனி தான் எதை வேண்டுமென்றாலும், எங்கு வேண்டுமென்றாலும் தூக்கிப் போடலாம்,  அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று இறுமாந்து போவது தான் அந்த காட்சி. நான் மிகவும் சொதப்பிய ஒரு காட்சி என்றால் இது தான்.

இந்தக் கதையை பொருத்தவரை, பார்வையாளர்கள் மனதில் கேள்விகளை எழுப்பி விட்டு இறுதிக்காட்சியில் அதை தெளிவு படுத்த விரும்பினேன். அதனால் படம் தொடங்கியதிலிருந்து பார்வையாளர்களுக்கு இது கண்/பார்வை சம்மந்தப்பட்ட படம் என்பதை ஆங்காங்கே ஜாடை காட்டிக் கொண்டே இருக்கும்படி காட்சிகள் அமைத்தேன். [ஒரு படம் எடுத்துட்டு என்னா ஆட்டம்!]

1. டைட்டிலில் "விடியல்" லில் உள்ள புள்ளியின் மேல் கண் இருக்கும்.
2. படம் தொடங்கியதும் ரேடியோவில் ஒலிக்கும் பாடல் "அந்தி மழை பொழிகிறது!"
3. கண் கண்ணாடியை போட நினைப்பவன், அதை இன்றாவது விட்டு விட்டுப் போவோம் என்று நினைத்து எடுத்த இடத்தில் வைப்பது.
4. கதவை திறந்து வெளியே போகும்போது, இத்தனை நாள் தனக்குத் துணையாய் இருந்த அந்த கம்பை ஒரு நொடி பார்ப்பது.
5. தன் நினைவிலிருந்து மறைந்தே போன அந்த சூரிய உதயத்தின் அழகை ரசிப்பது.
6. கண்களை மூடி அலைகளை தரிசிப்பது.
7. ரயிலை பார்ப்பது; இந்த உலகத்தையே புதிதாய் பார்ப்பது.
8. சினிமா பார்ப்பது.
9. ரஜினியை குரல் கொண்டு அடையாளம் சொல்வது!
10. பேருந்தில் பயணச்சீட்டை கூர்ந்து கவனிப்பது; காசை தடவிப் பார்ப்பது [இங்கு முக்கால்வாசி பேர் யூகித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்!]
11. இறுதியில், இத்தனை காலம் பார்வை இல்லாமல் எளிதாய் வலம் வந்த சாலையில், பார்வை வந்த பிறகு தடுமாறும் அந்தத் தருணம்! ஒரு பார்வை இல்லாதவனின் உதவியுடன் அந்த சாலையை கடந்து கொள்ளும் அந்த நிமிடத்தில் அவன் மனநிலை..[இந்தக் காட்சியின் உன்னதத்தை நான் சரியாய் திரையில் கொண்டு வரவில்லை என்பதை நான் அறிவேன்!]

எப்படியோ முதல் படம் ஒன்று எடுத்தாகிவிட்டது. முதல் அடி ஒன்றை வைத்தாகி  விட்டது. முதல் படம் என்பதால் என் குறைகளை மன்னித்து நிறைகளை மட்டும் கொஞ்சம்  அதீதமாய் சொல்லி பாராட்டி இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நானும் வழக்கமான தமிழ்  சினிமா இயக்குனர்களை போல்  அடுத்த படத்தில் சரக்கு தீர்ந்து ஒரு மொக்கை படம் எடுத்து உங்களிடம்  தர்ம அடி வாங்காமல் இருந்தால் சரி!!
"விடியல்" - என் முதல் குறும்படம். நேற்று தான் இதன் வேலைகள் அனைத்தும் முடிந்தது. இன்று உங்கள் பார்வைக்கு...2014 எனக்கு நன்றாய் விடிந்திருக்கிறது :-)

படத்தை பார்க்கும் "முன் குறிப்புக்கள்":

1. இது என் முதல் முயற்சி. ஒரு மிகச் சில நிறைகளும், பலப் பல குறைகளும் உங்களுக்குத் தெரியலாம். குறையோ நிறையோ, எதுவாயினும் எனக்குச் சொல்லுங்கள். அடுத்த படத்தில் அதை திருத்திக் கொள்கிறேன்! [அடுத்த படம் வேறயா?!]
2. உங்களுக்கு படம் புரியவில்லை என்றால் அது என் குறையே அன்றி உங்கள் குறை அல்ல! [இது எங்களுக்கே தெரியும்!] அதனால் மனம் தளராமல் இரண்டாம் முறை பார்த்து விடுங்கள்!
3. பத்து நிமிட படம் தான். நல்ல ஒரு ஹெட் ஃபோன் இருந்தால் காதில் மாட்டிக் கொண்டு படத்தை பாருங்கள். ["எத்தனை தடவை கூப்பிடறேன், காதுல எதாச்சும் வாங்குறீங்களா?" என்று உங்கள் மனைவி உங்களை திட்டினால் என்னை திட்டாதீர்கள்!]
4. இனி படம்.



எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன். இணையத்தில் இந்தப் படத்தை சிலாகித்தது சிலர் எழுதுவதை பார்த்ததும் பொறுக்க முடியவில்லை. பாலுமகேந்திரா ஒரு அருமையான கலைஞன் தான்! அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர் இந்த வயதில் இத்தனை சிரமப்பட்டு [நம்மையும் சிரமப்படுத்தி!] ஏன் இப்படி ஒரு படத்தை எடுத்தார் என்று தான் எனக்குப் புரியவில்லை! படத்தில் மிக சொற்பமான காட்சிகளை விடுத்து, சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனக்கு ஏன் படம் பிடிக்கவில்லை என்றால்...

1. படம் முழவதும் துண்டு துண்டான [அவர் துண்டி கட்டிக் கொண்டு!] காட்சிகள். ஒரு கதையே இல்லை!
2. மிகச் செயற்கையான நடிப்பு. எல்லோரும். அதிலும் பாலு மேடையில் எப்போதும் பேசுவது போல் தன் ஆட்காட்டி விரலால் நம் கண்ணை குத்துவதை போல குத்தி குத்தி விடாமல் வசனம் ஒப்பிப்பது.
3. படத்தின் லாஜிக் :-( இந்தக் காலத்தில் புருஷன் கூட இருக்கும்போதே மாமனார் மாமியாருடன் யாரும் சேர்ந்து வாழ விரும்புவதில்லை. [எந்தக் காலத்திலும் என்பது தான் சரியாய் இருக்கும்!] அப்படி இருக்கும்போது இந்த படத்தில் மருமகள் தன் சென்னை வாழ்க்கையை துறந்து, டாக்டர் தொழிலை மறந்து, தன் பையன் இங்கேயே தங்கி தாத்தாவிடம் தமிழ் கற்றுக் கொள்ளட்டும் என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் இல்லை, ரொம்பவே ஓவர்! சரி, அந்தப் பெண் ஆயிரத்தில் ஒருத்தி என்று எடுத்துக் கொள்ளலாம் என்றால், அதற்கான பக்கபலமான காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை.
4. சரி அம்மாவை விடுங்கள். சென்னையில் வளரும் ஒரு சமத்தான பையன் [சாலையில் இரைச்சல்களையும், புதிதான ஓசைகளையும் சவுண்ட் ரெக்கார்டிங் எல்லாம் செய்கிறான்], அந்த அத்துவானக் காட்டில் எத்தனை நாள் தங்குவான்? அங்கு பேஸ்புக் இல்லை, வீடியோ கேம்ஸ் இல்லை. அங்க எப்படிங்க இருப்பான்?
5. இத்தனை காலம் சாதி/மத பித்து பிடித்து, அலையும் ஒரு பெரியவர் ஒரு பாதிரியார் சொன்னதும், எல்லாவற்றையும் துறந்து விடுவதெல்லாம் காதில் அல்ல உடம்பு பூரா பூ!
6. படம் முடிந்து வெளியே வரும்போது என் நண்பர் "இது ஆணாதிக்க சினிமா!" என்றார். எப்படி என்று கேட்டதற்கு, "மகளுக்கு தான் மூன்று மகன்கள் இருக்கிறார்களே? தாத்தா ஏன் அவர்களிடம் விளையாடவில்லை? ஏன் அவர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கவில்லை? ஏன் இந்தப் பேரனிடம் அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கச் சொல்லவில்லை? ஏன் இந்தப் பேரனிடம் மட்டும் அத்தனை கரிசனை?" என்றார். பையன் வழி பேரன் தான் அப்போ முக்கியமா?

இன்னும் இப்படி எத்தனையோ...

இது "மாற்று சினிமா" என்று சொன்னால் சிரிப்பு தான் வருகிறது. என்னை பொருத்தவரை பாலுமகேந்திரா அவருடைய ஸ்டைலில் சிறிதும் மாறாமல் அதே சமயம் பெரிதும் சொதப்பி எடுத்த ஒரு "மாறாத சினிமா" தான் தலைமுறைகள்!!


"ரயில்வே ஆண்டி" என்ற ஒரு கில்மா கதை. அதை தான் பி ஏ பாஸ் என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார்கள். "ஒரு அப்பாவி ஆண் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எப்படி மிகப் பெரிய ரவுடியாகிறான்" என்று தமிழ்பட இயக்குனர்கள் தங்களின் படங்களை பற்றி சொல்வதை பல பேட்டிகளில் கேட்டிருப்போம். அதே போல் தான் இந்தக் கதையும். ஒரே வித்தியாசம் இந்தப் படத்தின் கதாநாயகன் ரவுடிக்கு பதிலாக விபச்சாரனாகிறான் [இந்தப் பதம் சரிதானா?!]

கதாநாயகனின் (முகேஷ்) பெற்றோர்கள் ஒரு விபத்தில் இறந்து விடுகிறார்கள். அவனுக்கு இரண்டு தங்கைகள். இனி அவர்கள் மூவரையும் யார் பார்த்துக் கொள்வது என்று உறவினர் மத்தியில் ஒரு குழப்பம். முகேஷை தில்லியில் அத்தை வைத்துக் கொள்வதாயும், அவன் தங்கைகளை தாத்தா வைத்துக் கொள்வதாயும் முடிவாகிறது. முகேஷ் பி. ஏ. படித்துக் கொண்டிருக்கிறான். அவன் தலையெடுத்துத் தான் அந்தக் குடும்பத்தை இனி காப்பற்ற வேண்டும்.

தில்லியின் ஒரு ரயில்வே காலனியில் அத்தையின் வீட்டில் முகேஷ் வேறு வழியில்லாமல் ஒண்டிக் கொள்கிறான். அந்த வீட்டில் ஒரு வேலைக்காரனை போல் இருக்கிறான். இயல்பாய் சதுரங்கத்தில் உள்ள ஆர்வத்தின் காரணமாய் முகேஷ் அங்கு சவப்பெட்டி செய்யும் ஒருவனை நட்பாக்கிக் கொள்கிறான். அந்த நண்பனுக்கு மொரீஷியஸ் போக வேண்டும் என்பது கனவு. கையில் காசில்லாததால் கனவை புதைத்து விட்டு, பிறரை புதைக்க சவப்பெட்டி செய்து வாழ்கிறான். ஒரு முறை, அத்தையின் தோழிகள் சிலர் வீட்டுக்கு வருகிறார்கள். முகேஷ் வழக்கம் போல் எல்லோருக்கும் எடுபுடி வேலைகளை செய்கிறான். அதில் ஒரு பெண் சாரிகா. முகேஷை பார்த்ததும், "என் வீட்டுக்கும் வந்து வேலை செய்து கொடு" என்று அவனை கூப்பிடுகிறாள். அத்தையின் வற்புறுத்தலின் பேரில் அவள் வீட்டுக்கு செல்கிறான். அங்கே சாரிகா அவனை வற்புறுத்தி அவனிடம் உறவு கொள்கிறாள். நல்ல உடைகள் வாங்கிக் கொள்ளச் சொல்லி அதற்கு பணமும் தருகிறாள். அதுவே அவர்களிடையே நாளடைவில் பழக்கமாகிறது. புது உடைகளை பார்த்து கேள்வி கேட்கும் அத்தையிடம் டியுஷன் எடுப்பதாக பொய் சொல்கிறான்.

ஒரு நாள் ஊரில் உள்ள தாத்தா இறந்து விடுகிறார். தங்கைகள் மீண்டும் அநாதை ஆகிவிடுகிறார்கள். அத்தை மற்றும் உறவினர்கள் எல்லோரும் அவர்கள் இருவரையும் ஒரு ஹோமில் சேர்த்து விடுகிறார்கள். இதை எல்லாம் அறிந்த சாரிகா, அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ஒரு நம்பர் கொடுத்து முகேஷை அங்கு போக சொல்கிறாள். அங்கிருக்கும் ஒரு ஆண்டி இவனை வற்புறுத்தி உறவு கொள்கிறாள். அதற்கு பணமும் தருகிறாள். சாரிகாவிடம் முகேஷ், தான் அப்படிப் பட்ட பையன் இல்லை, இப்படி பணம் சம்பாதிக்க விரும்பவில்லை என்று சொல்கிறான்.  பதிலுக்கு சாரிகா, "பி. ஏ. படித்து முடித்ததும் ரயில்வே போர்ட்டில் பெரிய பதவியா உனக்குக் கிடைக்கப் போகிறது? உனக்கு பணம் தேவை, அதற்கு தான் உதவி செய்கிறேன்,  உன் தங்கைகளின் நிலையை நினைத்து பார்"  என்று சொல்லி அவளின் தந்திரத்துக்கு மசிய வைக்கிறாள். ஆண் துணை தேவைப்படும் அவளுக்குத் தெரிந்த எல்லா பெண்களின் நம்பரையும் அவனுக்கு தருகிறாள். வேறு வழி தெரியாமல், பணத்தின் காரணமாக அவனும் அதில் தீவிரமாய் ஈடுபடத் தொடங்குகிறான்.

தங்கைகள் இருக்கும் அந்த ஹோமில், வார்டனும், மற்ற  சில பெண்களும் ஒழுக்கம் கெட்டவர்களாய் இருக்கிறார்கள். அதனால் அவன் தங்கைகளுக்கும் பிரச்சனையாய் இருக்கிறது. தான் சம்பாதிக்கும் பணத்தில் அவர்களுக்கு ஒரு ஃபோன் வாங்கித் தருகிறான். எப்படியாவது அவர்களை ஒரு தனி வீட்டுக்கு குடித்தனம் வைத்து விட வேண்டும் என்று முனைகிறான். அதற்காக தன் நண்பனிடம் சொல்லி ஒரு வீடும் பார்த்து விடுகிறான். அத்தையின் வீட்டில் பணம் இருப்பது பல கேள்விகளை எழுப்பும் என்பதை புரிந்து கொண்டு, சாரிகாவிடம் பணத்தை கொடுத்து வைக்கிறான். அப்போது அவர்கள் உறவு கொள்ளும்போது அவள் கணவன் அவர்களை கையும் களவுமாக பிடித்து விடுகிறான். சாரிகாவின் கணவன் முகேஷின் அத்தையிடம்  இல்லாதது பொல்லாததை சொல்லி, முகேஷை வீட்டில் சேர்க்க வேண்டாம் என்று சொல்லி விடுகிறான். இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும், முகேஷின் அத்தையை ஒரேடியாய் வில்லியாக காட்டாமல் இயல்பான ஒரு கதாப்பாத்திரமாக வடித்ததற்கு ஒரு சபாஷ்! முகேஷ் வீட்டில் இருந்து விரட்டி அடிக்கப்படுகிறான். நண்பனின் வீட்டில் தஞ்சம் அடைகிறான். சாரிகாவிடம் பணம் மாட்டிக் கொண்டு விட்டதால், தான் முன்பு சென்று வந்த அத்தனை பெண்களுக்கும் வேலைக்காக மீண்டும் ஃபோன் செய்கிறான். எல்லோரும் ஃபோனை துண்டித்து விடுகிறார்கள். சாரிகா எல்லாவற்றையும் தடுத்து விட்டால் என்று புரிகிறது.

எப்படியாவது சாரிகாவிடம் இருக்கும் தன் பணத்தை வாங்கியாக வேண்டும், ஆனால் இத்தனை பிரச்சனைக்குப் பிறகு அங்கு போகவும் முடியாது என்று நினைத்து என்ன செய்வதென்று தெரியாமல், தன் நண்பனை சென்று வாங்கி வரச் சொல்கிறான். போனவன், அவள் "என்னை உள்ளேயே விடவில்லை, பணம் எல்லாம் இல்லை என்று சொல்லி விரட்டி விட்டுவிட்டாள்" என்று சொல்கிறான். ஆத்திரம் கொண்ட முகேஷை அவன் நண்பன் தேற்றுகிறான். தங்கைகள் முகேஷை தங்கள் பிரச்சனை சொல்லி நெருக்குகிறார்கள். அவர்கள் வார்டன் தொல்லை தாங்காமல் தப்பித்து வெளியே வந்து விட்டதாக சொல்கிறார்கள். மறுநாள் ரயில்வே நிலையத்தில் வந்து தங்களை கூட்டிச் செல்லும்படி கெஞ்சுகிறார்கள். ரயில்வே நிலையம் வந்ததும் தனக்காக காத்திருக்கச் சொல்லிவிட்டு அன்று இரவு அதே கட்டடத்தில் விபச்சாரனாய் இருக்கும் ஒருவனின் துணையோடு விபச்சாரத்துக்குச் செல்கிறான். சாலையில் கிராக்கிக்காக காத்திருக்கிறான் [ஆணாய் இருந்தாலும் சரி!]. ஒரு காரில் குடித்து விட்டு வரும் மூன்று ஆண்கள் அவனை வலுக்கட்டாயமாய் தூக்கிச் சென்று வன்புணர்வு செய்து அனுப்பி விடுகிறார்கள்.

மிகவும் நொந்து போன தருவாயில் வேறு வழியே இல்லை என்று நினைத்து மறுநாள்  நேராய் சாரிகாவின் வீட்டுக்கு போகிறான். பூட்டிய வீட்டை திறந்து பணத்தை தேடுகிறான். அப்போது சாரிகா வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் வருகிறாள். அவளிடம் பணத்தை கொடுக்கச் சொல்லி கத்தியை காட்டி மிரட்டுகிறான். அவளோ, அவன் நண்பனிடம் கொடுத்து விட்டதாய் சொல்கிறாள். நண்பனின் மேல் மிகுந்த நம்பிக்கை உள்ள முகேஷ் அவள் பொய் சொல்கிறாள் என்று வாக்குவாதம் செய்கிறான். அந்த வாக்குவாதத்தில் அவளின் பிடியில் தன்னை போல் பல இளைஞர்கள் சிக்கி இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்கிறான். இந்த சமயத்தில் சாரிகாவின் கணவன் வந்து விடுகிறான். அவன் கதவை தட்டிக் கொண்டே இருக்கும்போது, சாரிகா, தன் வயிற்றின் மீது கத்தியை வைத்து மெல்ல அழுத்து என்று சொல்கிறாள். மறுபடியும் ஒரு நாடகம் ஆடுகிறாள் என்று நினைத்த முகேஷ், இந்த முறை நீ மட்டும் தப்பிக்க நான் மாட்ட மாட்டேன் என்று அவள் வயிற்றை குத்தி கிழித்து விடுகிறான். அங்கிருந்து ஓட்டம் பிடித்து நண்பனை பார்க்க செல்கிறான். அவன் அறையை காலி செய்து விட்டு மொரீஷியஸ் போய் விட்டதை தெரிந்து கொள்கிறான். ஒரு பக்கம் போலீஸ் இவனை துரத்துகிறது, மறுபக்கம் தங்கைகள் ரயில்வே நிலையத்தில் இவனுக்காக காத்திருக்கிறார்கள். போலீசிடம் இருந்து தப்பித்து ஓடும்போது ஒரு கட்டடத்தின் மாடியில் மாட்டிக் கொள்கிறான். தங்கைகளின் அழைப்பை துண்டித்து விட்டு அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறான்!!
அதோடு படம் முடிகிறது.

ஒரு கில்மா கதையை என்ன ஒரு அருமையான வாழ்வனுபவமாக பதிவு செய்திருக்கிறார்கள். இந்த மாதிரி கதைக்கு மிக அழகான ஒரு மாமியை (ஆண்டி!) தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், அப்படி எல்லாம் இல்லாமல் கதைக்கு பொருத்தமாய் ஷீபாவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.  படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அருமையான தேர்வு. குறிப்பாக, ஷதாப் கமல் (முகேஷ்), அந்த பாட்டி, அத்தை, முகேஷின் நண்பன்! எல்லோரும் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அந்த மாதிரி படம் பார்த்த உணர்வே இல்லை. படம் முடியும்போது அது நமக்குள் பல வித கேள்விகளை எழுப்பிச் செல்கிறது. இந்தப் படம் பார்க்கும்போது எனக்குத் தோன்றிய சில எண்ணங்கள் இவை...

விபச்சாரிகளை போல் அவர்கள் ஏன் சமூகத்தில் அவ்வளவு பிரபலமாய் இல்லை? மும்பையை போல், கொல்கத்தாவை போல் ஒரு சிவப்பு விளக்கு பகுதி சென்னையிலும் வேண்டும் என்று பாலியல் தொழிலாளர்கள் கொடி பிடித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையிலும் விபச்சாரன்கள் ஏன் சமூகத்தில் மறைந்து வாழ்கிறார்கள்? விபச்சாரன்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? பொதுவாய் ஆண்களுக்கு பல பெண்களிடம் உறவு கொள்ள ஆசை தான்! அது Genetical Defect. அப்படி இருக்கும்போது அதுவே தொழிலாய் செய்து வருமானமும் வந்தால்? அதோடு பெண்களுக்கு ஆண்களால் வரும் அளவுக்கு பாலியல் துன்பங்கள் வரவும் வாய்ப்பு அதிகமில்லை. ம்ம்ம்....அப்படியும் சொல்ல முடியாது, இதை படித்துப் பாருங்கள். http://meetmerighthere.wordpress.com/2011/01/30/busted/

Jokes apart, படத்திற்கு வருவோம். ஒரு சொற்ப சம்பளத்தில் வேலை பார்க்கும் ஒரு அப்பா திடீரென்று விபத்தில் இறந்து விட்டால், அந்த விபத்து உண்மையில் அவர் குடும்பத்துக்குத் தான் இல்லையா?! பொதுவுடைமை பற்றி பேசும்போது சொல்வார்கள், முதலாளித்துவத்தில், வயதான, நமக்கு உதவி செய்ய முடியாத அம்மாவும் ஒரு சுமை தான் என்று! இந்தக் கதையே எடுத்துக் கொள்ளுங்கள், முகேஷும் அவன் இரு தங்கைகளும் தங்களின் பெற்றோர்களின் மரணத்தால் என்ன என்ன கஷ்டங்கள் அனுபவிக்கவில்லை? ரயில் நிலையத்தில் காத்திருக்கும் அந்த பெண்களின் அழைப்பை துண்டித்து விட்டு அவன் விழுந்து சாகிறான். அந்த இடத்தில் அவனின் பெற்றோர்களை போல அவனுக்கும் விடுதலை கிடைத்து விட்டது. ஆனால் அவர்களின் தங்கைகளுக்கு இனி தான் தண்டனை காத்திருக்கிறது. இப்படி நம் நாட்டில் எத்தனை முகேஷ்களும் அவன் தங்கைகளும் இருப்பார்கள்? இத்தனை பெரிய நகரத்தில் ஒரு சக மனிதனின் துயர் துடைக்க ஒருவர் கூட இல்லை என்று நினைக்கும்போது பயமாய் இருக்கிறது. துணை இல்லாதவர்களுக்கு நகரத்தை போன்ற ஒரு நரகம் கிடையாது என்றே நினைக்கிறேன். நம் குடும்பத்தை ஒரு முறை கட்டி அணைத்துக் கொள்ளத் தோன்றுகிறது.