Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

மக்களே செளக்கியமா? மாசத்துல ஒரு தடவை வந்து போறதுக்கு உனக்கு எதுக்கு ப்ளாக் கருமாந்திரம் எல்லாம்னு கேக்குறது புரியுது! என்ன பண்றது, வேலை அப்படி! அமேரிக்கா வந்து ஒருத்தன் வீடு பாத்து, காரோட்ட கத்துக்கிட்டு, சுத்தி முத்தி நண்பர்களை தேடிப் புடிச்சி சேத்துகிட்டு, நாலு இடம் சுத்தி பாத்துட்டு.. அப்பாடா! இப்போ தான் கொஞ்சம் நல்லா இருக்குன்னு சொல்றதுக்கு குறைஞ்சது ஆறு மாசம் ஆவும்! எனக்கும் அதே கதி தான்! அப்பாடா ல அப்பா நான் சொல்ல என் மேலிடம் மிச்ச டாவை சொல்லி நீ ரிச்மண்ட்ல குப்பை கொட்டினது போதும், கெளம்பு பாய்ஸி, ஐடாஹோக்குன்னு (ஐய்யய்யோ!) சொல்லிடுச்சு! ரிச்மண்ட்ல இருந்தே நான் ஆணி புடுங்குறேனேன்னு சொன்னதுக்கு, ஐடாஹோல இருக்குற ஆணியை ரிச்மண்ட்ல இருந்து எப்படி புடுங்குவே, ஏதோ ரிச்மண்ட்ல பொறந்து வளந்த மாதிரி பேசுறேன்னு கெட்ட வார்த்தையிலேயே திட்டினாங்க! போறாளே பொன்னுத்தாயி பொலபொல வென்று கண்ணீர் விட்டு பாட்டை பேக்ரவுண்ட்ல போட்டு விட்டு தூக்க முடியாத பல பெட்டி படுக்கைகளைத் தூக்கிப் போட்டு வந்துட்டோம்! இதுல உங்களுக்கு டெய்லி ஒரு ப்ளாக் எழுதனுமாக்கும்? அட போங்கப்பா! ஆமா, நானே பேசிட்டு இருக்கேனே, என்னடா இவன் மாசத்துக்கு ஒன்னு எழுதுறான்னு குறைபட்டுக்குற ரெண்டு பேராவது இருக்கீங்களா? இல்ல நானா தான் பெனாத்திட்டு இருக்கேனா? எங்கே, என் ப்ளாக் புடிக்கும்ன்றவங்க கையைத் தூக்குங்க, சரி நீ எழுதுனா என்ன எக்கேடு கெட்டுப் போனா என்னன்றவங்க கையத் தூக்குங்க? சரி, ரெண்டுக்கும் தூக்காதவங்க இப்போ கையைத் தூக்குங்க! தெரியுமே, அங்கேயும் ஒருத்தன் இருப்பானே!

பாய்ஸில இருக்குற சனம் யாராவது மாசத்துக்கு ஒரு தடவை ஒரு இலக்கியப் படைப்பை அளிக்கும் (அதாங்க மொக்கை!!) என் ப்ளாக்கை படிச்சீங்கன்னா இந்த ஊர்ல எப்படி நடந்துக்கனும், என்ன எது வாங்கனும், வால் மார்ட் எங்கே, இந்தியன் ஸ்டோர் எங்கேன்னெல்லாம் கத்துக் கொடுக்க வந்துருங்க!! இது இங்கே தானே இருக்கப் போவுது, மெல்ல பாத்துக்கலாம்னு மட்டும் நெனைக்காதீங்க! அமேரிக்காவுல நெறைய எடத்துல இருக்கு நான் புடுங்க வேண்டிய ஆணி!

அமெரிக்காவிற்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்தை பிடித்து தள்ளியாகி விட்டது. அந்த இயந்திர சக்கரத்தினூடே தலையைக் கொடுத்து பயணப்பட ஆரம்பித்தாகிவிட்டது. வங்கிக் கணக்கு நேர்த்தியாகிவிட்டது. சமூக பாதுகாப்பு எண் [சோசியல் செக்யுரிட்டி நம்பரை எப்படி சொல்வது?] வந்தாகிவிட்டது. அபார்ட்மென்ட் செட் ஆகி விட்டது. பாத் டப்பிற்கு ஷவர் கர்ட்டெயின் வாங்கியாகி விட்டது. [இதெல்லாம் ரொம்ப முக்கியமா என்பவர்களுக்கு கீழே விளக்கியிருக்கிறேன்] பிஎஸ் என் எல்லின் தயவில் கொஞ்சம் ஃபோட்டோ, கொஞ்சம் படம் என்றில்லாமல் யு ட்யுப் வீடியோ சரளமாய் வருகிறது. குக்கர் சத்தம் போட்டால் ஸ்மோக் டிடெக்டர் அலறுகிறது! வெஜிடெபிள் கட்டரால் சற்று விசிறி விட்டால் சாந்தமாகி விடுகிறது!

காம்ப்பவுண்ட் சுவரே இல்லாத என் அபார்ட்மென்டின் ஒரு எல்லையிலிருந்து ஏறி அங்கு போகும் ஒரு சின்ன ரோட்டை கடந்தால், காம்ப்பவுண்ட் சுவரே இல்லாத என் அலுவலகத்தின் பின் எல்லையை அடைந்து விடலாம்! எவ்வளவு கஷ்டம் பாருங்கள். நானும் பொறுப்பாய் காலை எட்டரைக்கெல்லாம் அலுவலகத்தைல் ஆஜராகி, ஆஹா இன்றும் நாம் தான் முதலில் வந்தோம் என்று பெருமை பட்டுக் கொண்டேன். பிறகு தான் தெரிந்தது, இங்கு பாதி பேர் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பவர்கள் என்று....எப்போதாவது 2, 3 தலைகள் தென்படுகிறது. மற்ற நாட்களிலெல்லாம் தனிக்காட்டு ராஜா தான்! ரோட்டில் தான் ஆள் நடமாட்டம் இல்லையென்றால் அலுவலகத்திலுமா? அட போங்கப்பா....

இரவு எட்டு எட்டரை வரை வெளிச்சமாகவே இருக்கிறது. வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து, அமெரிக்கா வந்தால் தான் வார நாட்களில் மாலை என்ற ஒரு பொழுதே அனுபவமாகிறது. என் எட்டு வருட மென்பொருள் வரலாற்றில் அதிகம் போனால் வார நாட்களில் 50 மாலைகளை பார்த்திருப்பேன். எப்போதாவது 6 மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியே வந்து விட்டால் போதும், ஏதோ ஆயுள் முழுதும் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு இன்று விடுதலை ஆவதைப் போல் இருக்கும். வெளியே வந்தவுடன் வானத்தையும், அந்திச் சூரியனையும் சற்று நேரம் பார்த்துக் கொண்டே நிற்பேன். அமெரிக்காவில் இதற்கு நேர் எதிர். 5 மணிக்கு பெட்டையை கட்டி விடுகிறார்கள். கலகலவென்று அலுவலகம் இருந்தாலே, சே, எவ்வளவு நேரம் தான் இங்கேயே உட்கார்ந்திருப்பது? வாழ்க்கையே இவ்வளவு தானா என்று தோன்றும், இங்கு என் பக்கத்தில் சுமார் ஒரு 10, 15 இருக்கைகளில் நான் ஒருவன் தான் இருக்கிறேன். எனக்கு எப்படி இருக்கும்? ஏதோ ஒரு ஞாயிற்றுக் கிழமை தேவையில்லாமல் அலுவலகம் வந்து விட்டதை போல் உணர்கிறேன். அதனால் நானும் அதிகபட்சம் 6 மணிக்கு [என்ன இருந்தாலும் இந்தியர்கள், 6 மணிக்கு முன்னாடி போனா உறுத்துதில்லை...]கிளம்பி விடுகிறேன். கேட்க நாதியில்லாததால், என் கூட்டில் போய் ஒடுங்கி விடுவேன், வேறு என்ன செய்ய?

இங்கு யாரும் நடப்பதில்லை. ரோட்டில் ஆள் நடமாட்டமே இல்லை. நல்ல ஒரு கூட்டமான இடத்திலிருந்து வந்ததால் அது ஒரு வித எரிச்சலை தருகிறது. எங்கே மக்கள் மக்கள் என்று மனம் அலைபாய்கிறது. இதே அனுபவம் எனக்கு சண்டிகரிலும் கிடைத்தது. ரோட்டில் அதிகம் ஆள் நடமாட்டமே இருக்காது. என்ன ஊர் இது என்று தோன்றும். அங்கு ரோஸ் ஃபெஸ்டிவல் அன்று தான் கூட்டத்தையே பார்த்தேன். சண்டிகார் என்றால் சர்தார்னிகள் நிறைந்திருக்கும் நகரம். [நம்ம சிம்ரன் லூதியானா பொண்ணு], அவங்கள்லாம் கலகலவென்று வெளியில் தெருவில் நடமாடினால் தானே மனதுக்கு சற்று ஆறுதலாய் இருக்கும்....

கடை கன்னிகள் அருகில் காரை பார்க் செய்து விட்டு கடைக்குள் நடப்பது தான் அமெரிக்கர்களின் நடை. [வீட்டில் த்ரட் மில்லில் எகிறி குதித்து ஓடிக் கொண்டிருப்பதை தவிர்த்து] எனக்கு ரஜினியின் ஞாபகம் வருகிறது. அவரும் இப்படித் தானே இருப்பார், வீட்டிலிருந்து இறங்கியதும் கார், செல்லும் இடம் வந்ததும் இறங்கி உள்ளே ஓடி விடுவார். அதை வைத்து பார்க்கும் போது ஒவ்வொரு அமெரிக்கனும், ஒரு ரஜினிகாந்த் தான்! [இதையே இந்த பதிவுக்கு தலைப்பா வச்சுர்றேன், கூட்டம் கூடிடும்!]

திடீரென்று என் சிந்தனை சிங்கத்தை [எவ்வளவு நாள் தான் குதிரைன்னே சொல்றது? ஆமா சீனாவுக்கு, சீனா தானே சரியா வருது, ஏன் குதிரை உள்ளே கொண்டு வந்தாங்க?...] தட்டி விட்டேன். அதாவது, இங்கு இடம் மிக மிக அதிகமாக இருக்கிறது, மக்கள் மிக மிக குறைவாக இருக்கிறார்கள். இந்தியாவில் இடம் மிக மிக குறைவாக இருக்கிறது, மக்கள் மிக மிக அதிகமாக இருக்கிறார்கள். இதுக்கு நான் என்ன சொல்றேன்னா, ஒரு காண்ட்ராக்ட் மாதிரி போட்டு, இங்கு இருப்பவர்களை எல்லாம் அங்கு ஷிஃப்ட் செய்து விட்டு, அங்கு இருப்பவர்களை இங்கு கொண்டு வந்து விட்டால் என்ன, இவங்க அங்கே போய் நம்ம இந்தியாவை அமெரிக்காவா மாத்திர மாட்டாங்க? என்று தோன்றியது. [இதைச் சொன்னா நம்மளை கிறுக்கன்னு சொல்றாங்க...] இதிலிருந்து என்ன தெரியுது? ஒருத்தன் தனியா இருக்கக் கூடாது, அப்படியே இருந்தாலும், அவன் தமிழனா இருக்கக் கூடாது, அப்படியே இருந்தாலும், அவனுக்கு ஒரு வலைத்தளம் இருக்கக் கூடாதுன்னு புரியுதா? விதி வலியது...

ஷவர் கர்ட்டெயின்:
இது இல்லைன்னா நீங்க குளிக்கவே முடியாது. பாத்ரூம்ல நம்ம ஊர் மாதிரி தண்ணி போக ஓட்டை எல்லாம் இருக்காது, நீங்க காலால வரட்டு வரட்டுன்னு தண்ணியெல்லாம் அதுல விட்றதுக்கு...ஒரு பாத் டப் இருக்கும், அதுக்குள்ள போய் நின்னுட்டு ஷவர் தொறந்து விட்டுக்கணும், அதுக்கு முன்னாடி இந்த கர்ட்டெயினை மூடிக்கனும் [ஒரு கூண்டு மாதிரி ஆயிடும்! குயிலைப் புடிச்சி கூண்டிலடைச்சி பாட்டும், கெணத்தடியில வாளியில மொன்டு மொன்டு ஓடி ஓடி குளிச்சதெல்லாம் ஞாபகம் வந்து படுத்தும்!] இல்லைன்னா தண்ணி தெறிச்சி பாத்ரூம் பூரா சொத சொதன்னு ஆயிடாது...அதனால...நம்ம இங்கிலீஷ் படத்துல எல்லாம் பாத்துருப்போம், ஒரு அழகான ஹீரொயின் ஒரு ட்ரான்ஸ்பெரன்டான ஷவர் கர்ட்டெயினை மூடிட்டு ட்ரஸ் எல்லாம் கழட்டிட்டு குளிக்கப் போவா, [ஹூம்....] அப்ப தான் அந்த கொலைகாரப் பாவி வந்து அவ கழுத்துலையே குத்து குத்துன்னு குத்துவான்...அப்புறம் அந்த டப் ஓட்டை வழியா செவப்பு கலர் தண்ணியை க்ளோஸப்ல காட்டுவானுங்க...அட போங்கப்பா...

மொக்கை பதிவு தான்! மூளைக்குத் தெரியுது, ஆனா இந்த மனசுக்குத் தெரியலையே....யார்ட்டயாவது பொலம்பனும் பாருங்க...

பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே!!!

இந்த வரி தான் எனக்கு இப்போது மனதெங்கும் வியாபித்திருக்கிறது! ஏன் என்று நீங்கள் கேட்டு நான் காரணம் சொன்னால் உங்களில் சிலர் என்னை அடிக்க வரக்கூடும். காரணம் என்னவென்றால், அலுவலகத்தில் அடம் பிடித்து அவசர அவசரமாய் ஒரு அமெரிக்கப் பயணம்! 3 வருடத்திற்கு முன் நான் இங்கு வந்த மூன்று மாதங்களில் சுற்றிப் பார்த்தது 9 மாநிலங்கள். சத்தியமாய் டூரிஸ்ட் விசாவில் வரவில்லை. வேலை செய்யத் தான் வந்தேன். இனிமேல் யார் இவ்வளவு தூரம் வருவது என்ற நினைப்பில் ஒரேடியாய் சுற்றிப் பார்த்து விட்டேன். என்னுடைய அமெரிக்க கட்டுரைகளை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். மறந்தவர்கள் தலையில் கொட்டிக் கொண்டே [உங்க தலையிலங்கானும்] இங்கு க்ளிக்கவும். என்ன செய்வது விதி வலியது என்பதை விட வீடு கட்ட வாங்கிய கடன் வலியதாய் இருக்கிறது. இந்த அழகில் ஒரு நாள் பச்சை கலர் சட்டை, ஒரு நாள் மஞ்சள் கலர் சட்டை போட்டவனை எல்லாம் வேலைய விட்டு தூக்கு என்ற ரேஞ்சில் ஐ.டி. உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. [ஆடிய ஆட்டம் என்ன?] காற்றுள்ள போது தானே தூற்றிக் கொள்ள வேண்டும் என்று கிளம்பி வந்தாகிவிட்டது!

போன முறை குறுகிய கால விசாவில் வந்ததால் ஹாயாக ஹோட்டலில் தங்கி விட்டு ஊர் சுற்ற சரியாய் இருந்தது. இந்த முறை கொஞ்சம் நீண்ட கால விசாவில் வந்துள்ளதால் மண்டை காய்கிறது. அமெரிக்கா ஒரு பெரிய இயந்திரம். மாடர்ன் டைம்ஸில் சார்லி சாப்ளின் நட்டை திருப்பிக் கொண்டே அந்த சக்கரத்தில் மாட்டிக் கொள்வாரே, அது போல்! நீங்கள் அந்த இயந்திர கதியில் எல்லோரைப் போல சகஜமாய் சுற்ற ஆரம்பிப்பது வரை நரகம்! அதிலும் நீங்கள் அந்த இடத்தில் தனியாய் மாட்டிக் கொண்டால் அவ்வளவு தான், அன்பே சிவம் மாதவன் மாதிரி ஜோக் கேட்டால் கூட அழுகையாய் வரும்! சோ, நீங்கள் என்னை இப்போது பார்த்தால் அன்பே சிவம் மாதவனை பார்க்கத் தேவையில்லை.

தற்சமயம் நான் தனித்து இருப்பது க்ளென் ஆலென், [ரிச்மன்ட் அருகில்] விர்ஜினியா. இந்த இடத்திற்கு இன்னொரு பெயரும் இருக்கிறதாம். காதலர்களின் சொர்க்கம் என்று என்னுடன் வந்த ஒரு மேனெஜர் சொல்கிறார். எப்படி இருக்கிறது பாருங்கள்! எல்லா மானேஜர்களும் சேர்ந்து ஒரு இளம் காதலர்களை பிரித்து [சந்தேகமே வேண்டாம்! என்னையும் என் மனைவியையும் சொன்னேன்] குண்டு கட்டாய் என்னை மட்டும் பார்சல் செய்து அனுப்பி விட்டு இப்படி குசும்பு செய்வது அழகாமோ?

தமிழ் கூறும் நல்லுலகில் நிறைய பேர் இங்கு இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நல்ல சமைக்கக் கூடிய, ஒரு பெரிய காரில் தன்னந்தனியே போய் கொண்டிருக்கும் [ரோட்டில் நான் மட்டும் நடக்க பயம்மா இருக்குப்பா!] ஒரு பேச்சிலர் என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். இந்த வாரம் நான் ஒரு புது வீட்டுக்கு சாராயம் காய்ச்சி கூடியேறப் போகிறேன், சாமான் செட்டு தூக்குவதற்கு, என்னை ஊர் சுற்றிக் காட்டுவதற்கும், வால் மார்ட் கூட்டிப் போவதற்கும், எந்த செல்ஃபோன் வாங்கலாம், எந்த இன்டர்நெட் கனெக்ஷன் வாங்கலாம் என்று வழி காட்டுவதற்கும், பணம் பத்தவில்லை என்றால் க்ரடிட் கார்ட் தேய்க்கவும் செளகரியமாய் இருக்கும். உனக்கு நான் ஏன் செய்யனும்? எக்கேடு கெட்டும் போ என்பவர்கள் மூடிக் கொண்டு போங்கள்![ஐய்யோ, சாருவை நிறைய படித்தது தப்பாகி விட்டதே!]

அமேரிக்காவில் என்ன வியாபாரம் செய்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும் என்று எனக்குப் புரிகிறது! இல்லையென்றால் நீங்கள் சூ செய்யப்படுவீர்கள். அதாவது, பாதிக்கப்பட்டவர் உங்கள் வியாபாரத்தின் மீது வழக்கு தொடர்ந்து பல மில்லியன் டாலர்கள் வரை நஷ்ட ஈடு கேட்கலாம். மேலோட்டமாக, இங்கு மோட்டல் வைத்திருந்த ஒரு இந்தியரைப் பற்றி கேள்விப்பட்டேன். அவருடைய மோட்டலில் ஒரு நாள் தங்க வந்தவர், கால் தடுக்கி விழுந்து விட்டார். மோட்டல் ஓனரின் அறியாமையாலும், அஜாக்கிரதையாலும் தான் நான் தடுக்கி விழுந்தேன். இவர் எனக்கு இத்தனை மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று வாதாடி கடைசியில் அந்த இந்தியர் தன்னுடைய மோட்டல் சாவியை அவர் கையில் கொடுத்து விட்டு வெறும் கையுடன் நடையைக் கட்டினாராம். பார்த்தீர்களா கொடுமையை..

ஸ்டார் பக்ஸில் [இது ஒரு மில்லியன் டாலர் கம்பேனியாமே அப்படியா?] ஒரு காபி குடிக்கும்போது அந்த கப்பில் கவனித்தேன். நீங்கள் குடிக்கப் போவது மிகவும் சூடானது என்று ஒரு எச்சரிக்கை, நானும் மெதுவாக வாய் வைத்து மெல்லமாய் உறிஞ்சினேன், காபி ஆறிப் போய் பல மணி நேரம் ஆகியிருந்தது..அதே போல் காபி கப்பில் ஏதாவது பொன் மொழி இருப்பதுண்டு. பொன்மொழி 1 வரி இருந்தால், அது எங்கள் கருத்தல்ல, எழுதியவரின் கருத்து..இதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்ற எஸ்கேப்பிஸம் 10 வரியில் இருக்கும். [சரிடா, இப்போ உங்களை என்ன சொல்லிட்டோம்] நானும் சரி இப்படி ஏதாவது நொள்ள சொல்லி ஒரு மில்லியன் டாலர் வாங்கிட்டு இந்தியா போய் செட்டில் ஆகிடலாம் என்றால் ஒரு குறையும் கண்ணுக்கு தெரிய மாட்டேன் என்கிறது..[குறை சொல்லியே பேர் வாங்கும் புலவர்கள் மத்தியில் அடியேனை பார்த்தீர்களா?]ஒரே வழி, நான் இங்கு ஒரு குறையும் பார்க்க முடியவில்லை என்று வழக்கு தொடர்வது தான்!

நம் ஊர் போல் இங்கு ரயிலை அதிகமாக உபயோகிப்பதில்லை. எல்லாம் சாலை வழி தான்! ஒவ்வொரு ஃப்ரீ வேயிலும் [நம் ஊரில் இது ஹைவே!] ஒவ்வொரு காரும் 80, 90, 100 மைலில் பறக்கிறது. அந்த ரோட்டில் அழகை என்னவென்று சொல்வேன். நீங்கள் செல்ல வேண்டிய லேனில் இருந்து சற்று விலகி எதிர் லேனில் சென்று விட்டால் டயரில் கிரீச் சத்தமிட்டு நீ தவறான பாதையில் செல்கிறாய் என்று எச்சரிக்கிறது! அட அட அடா...அனுமதிக்கப்பட்டிருக்கும் வேகத்தை மீறி செல்லும் வண்டிகளை கண்காணிக்க அங்கங்கு ரேடார் பொறுத்தப்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு அத்துவானக் காட்டில் உள்ள ரோட்டில் கூட ஒரு குப்பை இல்லை. அமேரிக்க மக்களின் சுய ஒழுக்கம் அந்தச் சாலைகளில் பிரதிபலிக்கிறது! நான் பார்த்த வரை நம் ஊர்களில் இருப்பதைப் போல் சாலை ஓரங்களில் அதிக மரங்கள் இல்லை. எல்லாம் பரந்து விரிந்த வெறும் நிலமாகத் தான் இருக்கிறது. ஒரு வேளை சாலை ஓரங்களில் கண்ட இடங்களில் நம் மக்களைப் போல் சிறு நீர் கழிக்க முடியாததாலோ என்னவோ! [புரியலை? மரம் வளர உரம் வேணாமா ஹிஹி] போர் காலங்களில் ஆகாய விமானங்கள் இறங்க ஓடு தளங்களாகவும் இந்த சாலைகளை உபயோகிப்பார்களாம்! அப்படி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எத்தனை விசாலமான, தூய்மையான சாலைகள் என்று!

நிற்க

மோன்டனா [ஹெலினா, வேலைக்கு வந்த இடம்]
நெவேடா [லாஸ் வேகஸ்]
அரிசோனா [கிராண்ட் கேன்யன்]
செளத் டகோடா [மெளன்ட் ரஷ் மோர்]
வையோமிங் [யெல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க்]
நியு யார்க் [நியுயார்க் நகரம்]
மேரி லேன்ட் [பால்டிமோர்]
கலிஃபோர்னியா [லாஸ் ஏஞ்சல்ஸ்]

வந்து மூன்று மாதங்களில் அமேரிக்காவின் 8 மாநிலங்களை பார்த்து விட்டேன்! இது நானே எதிர்பார்க்காத ஒன்று! என் நண்பர்கள் வட்டத்தில் யார் அமேரிக்கா சென்றாலும் பணம் சேமிக்கனும்னு நினைக்காதே, நல்லா ஊர் சுத்தி பார் என்பது தான் என்னுடைய வேண்டுகோளாக இருக்கும்! அதை என் விஷயத்தில் அச்சரம் பிசகாமல் செய்திருக்கிறேன் என்பதில் எனக்கு பரம திருப்தி! ஏக சந்தோஷம்! எத்தனை விதவிதமான ஊர்கள், மனிதர்கள், கலாச்சாரங்கள், நாகரீகங்கள், பழக்க வழக்கங்கள்! அடேயப்பா..வெறும் 2 அல்லது 3 லகரங்களை சேர்த்து வைப்பதற்காக இத்தனை அனுபவங்களை இழப்பதா?

அடுத்த வார இறுதியில் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு இந்தியாவுக்குப் புறப்படுகிறேன்! அமேரிக்காவில் முக்கியமான அனைத்து பெரு நகரங்களையும் பார்த்தாயிற்று! ஒரே குறை நயாகாராவை பார்க்க முடியவில்லை..குளிர் காலத்தில் அது உறைந்து விடுவதால் அனுமதி கிடையாதாம். உறைந்து போன அருவி, கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்...ம்ம்ம்ம் நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்! அடுத்த டார்கெட் ஐரோப்பா தான்!

உலகம்..அழகு கலைகளின் சுரங்கம்!
பருவச் சிலைகளின் அரங்கம்!!

முன்னாலேயே போட்டிருக்க வேண்டிய பின்குறிப்பு: அமேரிக்காவைப் பற்றிய என் பதிவுகள் அத்தனையும், நான் பார்த்தவைகளையும், கேள்விப்பட்டவைகளையும் கொண்டு முழுக்க முழுக்க என் பார்வையில் எழுதப்பட்டது..இதில் தவறிருக்கவும் வாய்ப்புண்டு!

- பயணங்கள் முடிவதில்லை!
நான் பார்த்த வரை அமேரிக்கர்கள் மந்த புத்திக்காரர்களாகத் தான் இருக்கிறார்கள்! [நான் பார்த்த வரை!] கடிவாளம் போட்ட குதிரை போல, தான் இத்தனை வருடங்கள் எப்படி ஒரு வேலையை செய்தோமோ, அது எத்தனை சுற்றி வளைத்து செய்ய வேண்டி இருந்தாலும் அதையே செய்கிறார்கள்! ஏன் இதற்கு இத்தனை கஷ்டப்பட வேண்டும்? இதற்கு வேறு வழி இல்லையா என்று யோசிக்கவே மாட்டார்களோ என்னமோ?

நான் பணிபுரியும் அலுவலகத்தில் ஒரு நாள் ஒரு அமேரிக்க நண்பனை வைத்துக் கொண்டு வேர்ட் டாக்குமென்டில் டாக்குமென்டிக் கொண்டிருந்தேன்..தலைப்புக்காக சிலவற்றை அடிக்கோடிட்டேன். அதாவது "கன்ட்ரோல் யு" அடித்தேன். திடீரென்று அவன் பதட்டப்பட்டு, அது எப்படி மெளஸ் இல்லாமல் நீ கோடு போட்டாய் என்று வியந்து கேட்டான்! நான் ஷார்ட் கட் கீ என்று சொல்லி எப்படிச் செய்வது என்று காண்பித்தேன்! "யு ஆர் ஜீனியஸ்" என்றான்! ஆஹா ஒருத்தன் சிக்கிட்டான்டா என்று நானும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் என்னுடைய ஜீனியஸ் தனங்களை வெளிக்காட்டிக் கொண்டேன். நீ டீ ஆத்தக் கூட லாயக்கில்லை என்று பள்ளியில் என் வாத்தியார் என்னை திட்டியது எனக்கு ஞாபகம் வந்தது!! இதில் பாரட்டப்பட வேண்டிய விஷயம், தெரியாததை தெரியாது என்று ஒத்துக் கொள்வதில் இவர்கள் வெட்கப்படுவதேயில்லை! நம்மைப் போல் எனக்குத் தெரியும், இருந்தாலும் உனக்கு தெரியுதா என்று டெஸ்ட் பண்ணேன் என்று பீலா விடுவதில்லை.என்னை பொறுத்தவரை, பொதுவாகவே இவர்கள் ஒரு நாள் மாங்கு மாங்கு என்று பார்க்கும் வேலையை நாம் ஒரு மணி நேரத்தில் செய்து விடுவோம் என்று தோன்றுகிறது! அதனால் தான் இந்தியர்களுக்கு இங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒரு மெளசும் நிறைய மவுசும் இருக்கிறது! [மெளஸ், மவுசு எப்படி கனெக்ட் பண்ணேன் பாத்தீங்களா? அப்படி பொங்குதுங்க..சரி சரி!]

அமேரிக்காவின் பெயரை மாற்றி பேப்பரிக்கா என்று வைக்கலாம்! அத்தனை பேப்பர்களை செலவழிக்கிறார்கள்! இன்று ஒரு நாள் யாரும் எந்த வகையான பேப்பரையும் உபயோகிக்கக் கூடாது என்று சொல்லி விட்டால் போதும், பாதிக்கு மேல் தற்கொலை செய்து கொண்டு செத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்! அலுவலகத்தில் கேட்கவே வேண்டாம்! கம்ப்யுட்டரில் ஒரு ஃபைல் தயாரித்து அதை ஒரு ஃபோல்டரில் போட்டு, அந்த ஃபைலை ப்ரிண்ட் எடுத்து அந்த பேப்பரை ஒரு ஃபைலில் போட்டு அதன் மேல் பத்து பதினைந்து ஸ்டிக் நோட் போட்டு டாக்டர் கையெழுத்தில் ஏதோ கிறுக்குகிறார்கள்! கடைசியில் தேடும்போது எது வேண்டுமோ அதை தவிர ஏகப்பட்ட பேப்பர்கள் இருக்கின்றன..ப்ரிண்டருக்கு வாய் இருந்தால் கதறி அழும்! நான் இந்தியாவில் ஆடிக்கொரு தடவை அம்மாவாசைக்கு ஒரு தடவை ப்ரிண்ட் எடுக்க போவேன், அன்னைக்குன்னு பாத்து பேப்பர் இருக்காது, இல்லைன்னா சோடா புட்டி கண்ணாடி போட்டு பாத்தாலும் தெரியாத அளவுக்கு மங்கலா விழும்! நானும், ஆனியே புடுங்க வேணாம்னு வந்துருவேன்!

நான் இங்கு வந்த அன்று என் ஸீட்டில் ஒரு பெரிய டப்பா கொண்டு வந்து வைத்தார்கள்! முழு மகாபாரதத்தை ப்ரிண்ட் எடுத்து அதற்கு பின் போட எவ்வளவு பெரிய ஸ்டாப்லர் வேண்டுமோ அவ்வளவு பெரிய ஸ்டாப்லர்! ஒரு பெரிய கத்திரிக்கோல், பெரிய பஞ்சிங் மெஷின், நிறைய ஸ்டிக் பேட், நிறைய பேப்பர் க்ளிப்ஸ், சலஃபன் டேப், நிறைய மார்க்கர்ஸ் [மஞ்சள் கலர் சிங்குசா, பச்சை கலர் சிங்குசா...சே சே!], பேனாவில் தப்பாய் எழுதி விட்டால் அழிப்பதற்கு எரேசர் [ப்ளேடால் எப்படி அழிப்பது என்று இவர்களுக்கு இன்னும் தெரியாதா? பென்சில் என்றால் எச்சி தொட்டு அழிப்பது தான் பெஸ்ட்!] எனக்கு சந்தேகமே வந்து விட்டது, எனக்கு கம்ப்யுட்டர் கொடுப்பார்களா இல்லை அரசு அலுவலகம் மாதிரி பெரிய பெரிய பேரெடை கொடுத்து அதில் ப்ரோக்ராம் எழுது என்று சொல்லி விடுவார்களோ என்று! அடப்பாவிகளா..அவர்கள் கொடுத்த ஒன்றை கூட நான் இன்னும் தொடவில்லை, சில பேப்பர் க்ளிப்ஸை தவிர..கனினியின் பயனை இன்னும் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று படுகிறது!

NOTE: இந்த பத்தியை சாப்பிட்டுக் கொண்டே படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!

அலுவலகத்தில் விடுங்கள், டாய்லட்டில்..அட நம் நாட்டில் தான் தண்ணீர் பஞ்சம் இருந்தும் தண்ணீர் இல்லையென்றால் நாம் வருவதை கூட அடக்கிக் கொண்டு விடுவோம்! இவர்களுக்கு அங்கேயும் பேப்பர் தான்! துடைத்துக் கொண்டு ஒரு அரை மணி நேரம் சோப்பு போட்டு இவர்கள் கை கழுவுகிறார்கள்! [இப்போ என்ன பண்ணிட்டீங்கன்னு இந்த தேய் தேய்க்கிறீங்கன்னு கேக்கலாம் போல இருக்கு!] என் நண்பரிடம் ஏன் இவர்கள் கக்கூஸில் தண்ணீர் உபயோகப்படுத்துவதில்லை என்றதற்கு அவர்கள் கையை அந்த மாதிரி இடங்களிலெல்லாம் உபயோகிக்க மாட்டார்கள் என்றார். எனக்கு ஏனோ நான் பார்த்த ட்ரிபில் எக்ஸ் படமெல்லாம் ஞாபகம் வந்தது! சுத்தக்கார பாப்பாத்திகள்!

இன்னொரு முக்கியமான விஷயம் எப்போது பார்த்தாலும் எதையாவது கொறித்துக் கொண்டே இருக்கிறார்கள்! அலுவலகத்தில் ஒரு பெண் ஒரு மூட்டை பாப்கார்னை [உங்கள் தலை மேல் அடித்து சத்தியம் செய்கிறேன்!] கம்ப்யுட்டரில் வேலை பார்த்துக் கொண்டே ஒரு மணி நேரத்தில் தின்று தீர்த்து விட்டாள்! இருந்த இடத்திலேயே உட்கார்ந்து என்ன வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் என்பது இவர்களுக்கு மிக்க வசதியாய் இருக்கிறது. நம்மை மாதிரி வத்தக் குழம்பை சாதத்தில் குழைத்தா அடிக்க போகிறார்கள்! வாயில் நுழையாத பெரிய பர்கர் அல்லது சான்ட்விச்..அதில் ஆடு, மாடு, கோழி, பன்னி என்று அடித்து போட்டிருப்பார்கள்! நாளைக்கு ஒரு ஃபுட் ஃபெஸ்டிவல் வந்து விடுகிறது! எப்போதும் ஏதாவது கொறிக்க இருந்து கொண்டே இருக்கிறது! என் அமேரிக்க நண்பன், போ, போய் எடுத்து சாப்பிடு என்று என்னை பிடித்து தள்ளாத குறையாய் தள்ளுவான்! நண்பா, உன் அன்புக்கு ரொம்ப நன்றி நீ ஒன்றை மறந்து விட்டாய், நான் அமேரிக்கன் இல்லை இந்தியன்..உங்களைப் போல என்னால் சாப்பிட்டுக் கொண்டே இருக்க முடியாது என்று மன்றாடினேன்! அவன் விழுந்து விழுந்து சிரித்தான்! சாப்பிட்டுக் கொண்டே இருப்பது எங்கள் வேலைகளில் ஒன்று என்றான்! [அவன் சொல்லும்போது எனக்கு அவ்வளவு புரியவில்லை, வாயில் அவ்வளவு பெரிய பர்கரய்யா..பர்கர்!] நானும் அவ்வப்போது அவர்களை போல் கொறிக்க ஆரம்பித்து விட்டேன் என்று தான் நினைக்கிறேன்! சென்னை போனதும் சாப்பிடாம எப்படி நீங்க எல்லாம் வேலை செய்றீங்கன்னு கேட்டு டின் வாங்கி கட்டிக்க போறேன் என்று தோன்றுகிறது!! am i getting westernized?

- பயணப்படும்
தேங்க்ஸ் கிவ்விங் நீண்ட விடுமுறையில் லாஸ் வேகஸ் சென்றிருந்தேன். அந்த நகரத்தை பார்த்த வியப்பில் ஒரு வாரம் என்னால் சரியாக வாயை மூடவே முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! [எதாவது விபரீதமா நினைச்சுக்காதீங்க] ! அத்தனை ஆச்சர்யங்கள், அத்தனை அதிசயங்கள்!! இப்படியும் ஒரு ஊரா என்று வியப்பே மிஞ்சுகிறது.

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்! இந்த தடவை நான் பேசப் போவதில்லை, என் படங்கள் பேசும்![பேசிட்டாலும்]

நியுயார்க் நியுயார்க்



பாரீஸ் பாரீஸ்



சீசர்ஸ் பாலஸ்











அமெரிக்காவில் பிரை நிலவு இந்தப் பக்கம் திரும்பி இருப்பதை கவனித்திருக்கிறீர்களா?













இயற்கைக்கு முன்னால் மனிதன் தான் எத்தனை சிறியவன்!









ஹூவர் டாம், அரிசோனா







அனைத்து படங்களும் இந்தக் காமிராவினால்...



நான்.. நானே தான் எடுத்தேன் [பின்ன வேற யாராவது மண்டபத்துல கொடுத்தா எடுத்து வந்தேன்..நான் நானே தான் எடுத்தேன் ஐயா!] :-)



- பயணப்படும்
ஏர்ப்போர்ட்டிலிருந்து வெளியே வந்தவுடன் நானும் என் நண்பரும் டாக்ஸியில் ஏறி அமர்ந்து கொண்டோம், டிரைவர் அதிர்ச்சி அடைந்து இல்லை, இல்லை நான் தான் ஓட்டுவேன் என்றார். பார்த்தால் என் நண்பர் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தார்! [என்ன? என்ன நக்கல்? எங்களுக்குத் தெரியாதாக்கும், இங்கே லெஃப்ட் ஹேன்ட் ட்ரைவிங்னு..எல்லாம் ஒரு ஆர்வ கோளாறு தான்..]

ஹோட்டலில் எதற்கோ ஃபோன் செய்யப் போய் 911 எண்ணை தெரியாமல் அழுத்தி அது போலீஸுக்கு போய் ஹோட்டல் முதலாளி துடிதுடித்துப் போனார். தெரியாமல் அங்கு ஃபோன் செய்து விட்டால், மன்னித்து விடுங்கள், ராங் நம்பர் என்று வைத்து விடுங்கள் இல்லையென்றால் இங்கு யாரோ இறந்து கிடக்கிறார்கள் என்று போலீஸ் வந்து விடுமாம். கஷ்டம்! [நம் நாட்டிலும் அவசர போலீஸ் 100 எண்ணை அடித்தால் இப்படித் தானா?] பிரச்சனை என்னவென்றால், ஹோட்டல்களில் 9ஐ எஸ்கேப் கீயாக பயன்படுத்துகிறார்கள். 9 அடித்து விட்டு, நாட்டு எண் 1ஐ அடித்து வேறு எண்ணை அடிக்க, தெரியாமல் 1 அழுத்தி விட்டால் கதை முடிந்தது!

தூரத்தை கேட்டால் மயிலில்[இது முருகனோட மயில் இல்லை], எடையை கேட்டால் பவுண்டில், தட்பவெட்பநிலையை கேட்டால் ஃபாரன்ட்ஹீட்டில் என்று சொல்லி அதை கிமீக்கும், கிகிராமுக்கும், செல்சியசுக்கும் மாற்றி மாற்றி பார்த்து எங்கள் நாட்கள் கணக்கு செய்வதிலேயே கழிந்து விடுகிறது. நான் வழக்கம் போல் அந்த மாதிரி கணக்கு செய்வதில் கலந்து கொள்வதில்லை! [வேறு மாதிரி கணக்கு என்றால் பண்ணலாம்!] 40 டிகிரி ஃபாரன்ட்ஹீட்டா என்று என் நண்பர் ஃபார்முலா எல்லாம் ஞாபகப்படுத்தி அதை செல்சியஸில் ஆக்கி பார்த்துக் கொண்டிருப்பார். எப்படியும் செல்சியஸில் வந்தவுடன் இவ்வளவு கம்மியா என்று வாய் பிளக்க போகிறோம், நான் 40 டிகிரி ஃபாரன்ட்ஹீட் என்றவுடன் வாய் பிளந்து விடுவேன்! கதம் கதம்!

அமேரிக்கர்களுடைய வேலையையும், குடும்பத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாத இயல்பு என்னை மிகவும் கவர்கிறது. 8 மணிக்கு அலுவலகம் வந்து, 5 மணிக்கு எல்லோரும் ஜூட்! 5 மணிக்கு மேல் மெயின் கதவு கார்டை காட்டினாலும் திறக்காதாம்! 5 மணி வரை தான் அந்த கார்டுக்கு அனுமதியே வழங்குகிறார்கள்! எனக்கு கார்ட் கொடுக்கும்போது, எதற்கும் இருக்கட்டும் இவர்களுக்கு 24 மணி நேரமும் கொடுத்து விடுங்கள் என்று வாங்கிக் கொடுத்து விட்டார்கள்! [எப்படித் தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ?]

கிட்டத்தட்ட மூன்று வார லீவிலிருந்து ஊர் சுற்றி விட்டு வருகிறார்கள்! அடுத்த மூன்று வாரத்திற்கு எங்கு போவது எந்த ஊர் சுற்றுவது என்று கூகுளிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்! விடுமுறையை அவ்வளவு கொண்டாடுகிறார்கள். நம்மில் எத்தனை பேர் இந்தியாவை முழுதும் சுற்றிப் பார்த்திருக்கிறோம்? வாழ்க்கை முழுக்க ஆபீஸே கதியென்று கிடந்து அடித்து பிடித்து சம்பாதித்து ஒரு சின்ன வீடு கட்டிக் கொண்டு, பிள்ளைகளுக்கு அத்தனை சொத்தையும் எழுதி வைத்து விட்டு, போன தடவை 31 நாள் இருந்தீங்களே எங்க கூட, இந்த தடவை 29 நாள் தான் இங்கே இருக்கனும் என்ற ஏச்சுகளையும் பேச்சுகளையும் தான் வாங்கப் போகிறோம்! ஹும், அமேரிக்கர்கள் வாழ்க்கையை வாழத் தெரிந்தவர்கள் என்றே தோன்றுகிறது!

- பயணப்படும்
செளக்கியமா இருக்கீங்களா? என்ன சென்னையில் நல்ல மழையாமே? என் நண்பர் ஒருவர் சென்னையில் வீடு விட்டு வீடு மாறும் போது இந்த வீட்டில் நல்லா தண்ணி வருமா என்று தரகரிடம் கேட்டிருக்கிறார். அவரும் நன்றாக தலையை ஆட்டி இருக்கிறார். இப்போது தான் அவருக்குப் புரிகிறது, தான் கேட்டது குழாயில் தண்ணீர் வருவதை பற்றி, அவர் தலையாட்டியது மழை பெய்து வீட்டுக்குள் தண்ணீர் வருவதைப் பற்றி! நொந்து போய், இல்லை மழையால் நைந்து போய் உட்கார்ந்திருக்கிறார் நண்பர்.

சரி என் கதைக்கு வருகிறேன். ஒவ்வொரு கனிப்பொறி வல்லுனரின் நித்திய கனவான அமெரிக்காவுக்கு ஒரு வழியாய் வந்தாகிவிட்டது. இங்கு வந்து பல யுகங்கள் கடந்து விட்டதைப் போன்ற ஒரு உணர்வு எனக்குள். அதிக ஆள் அரவமில்லாத எந்த ஒரு புது நகரத்தில் குடி பெயர்ந்தாலும் நாட்களை பிடித்து தள்ளத் தான் வேண்டியிருக்கிறது.

நான் இருப்பது மேல் சொன்ன மாதிரியான ஒரு சின்ன டவுன். சுற்றிலும் மலைகள், [கொஞ்சம் கண்களை அகல விரித்துக் கொள்ளுங்கள்!] சில நாட்கள் பச்சைப் பசேலென்றும், சில நாட்கள் பனி படர்ந்து வெள்ளை வெளேரென்று! உண்மை என்னவென்றால், அனைத்து மலைகளிலும் தங்கம் கொட்டிக் கிடக்கிறது என்று இங்கு உள்ளவர்கள் சொல்கிறார்கள். 1862 ல் இருந்து இங்கு பல தங்கச் சுரங்கங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த கட்டடம் கட்டுவதற்காக தோண்டும்போது கிடைத்த தங்கம் என்று சிறு கிண்ணத்தில் வைத்திருக்கிறார்கள்! ஊர் முழுவதும் அத்தனை தங்கம். நம் ஊரில் தோண்டினால் தண்ணீர் வர மாட்டேன் என்கிறது, தங்கம் எங்கிருந்து வருவது?

அமெரிக்கா என்றவுடன் எல்லோரும் செல்வது கலிஃபோர்னியா, நியுயார்க்..வழக்கமாய் நான் புலம்புவது போல் எனக்கு என்று வரும்போது, ஹெலனா, மோன்டனா! அப்படி ஒரு மாநிலம் அமெரிக்காவில் இருப்பதே பலருக்குத் தெரியவில்லை. எது எப்படியோ, என்னை பொறுத்தவரை அமெரிக்கா..அவ்வளவு தான்! அமேரிக்காவில் எல்லாமே கிங் சைச் தான்! பர்கரில் இருந்து பால் நிலவு வரை! பர்கர் சாப்பிடுவதற்குள் நான் படும் பாடு! எனக்கு வாய் பத்த மாட்டேன் என்கிறது! இங்கு சுற்றிலும் மலையும், காடுகளும் இருப்பதால், மான் வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் மக்கள் வருகிறார்கள்!

காலை நேரங்களில், மதிய வேளைகளில் வெளியே வந்தால் ஊரடங்குச் சட்டம் ஏதாவது போட்டு விட்டார்களா என்று தோன்றுகிறது. ரோட்டில் ஜன நடமாட்டமே இல்லை. ஒரு வெள்ளைக்கார நண்பரிடம் கேட்டேன், எங்கே ரோட்டில் யாரையும் காணவில்லை என்று? அதற்கு அவர் என்னை ஆச்சர்யமாகப் பார்த்து விட்டு, பெரியவர்கள் அலுவலில் ஈடுபட்டிருக்கிறார்கள், குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருப்பார்கள்! என்று மிக எளிதாக ஒரு பதிலளித்தார்! சென்னையை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டேன், அவர் என்ன என்றார்..கொஞ்சம் சத்தமாக சிரித்து விட்டேனோ என்னவோ!

இது மிகச் சிறிய ஊர் என்பதால் அமெரிக்காவின் பெரு நகரங்களில் இருப்பதைப் போல் இங்கு போக்குவரத்து ஒன்றும் அவ்வளவாக இல்லை. கை தட்டிக் கூப்பிட நம் ஊர் போல் ஆட்டோக்களும் இல்லை! டாக்சிக்கே ஃபோன் செய்து காத்திருக்க வேண்டியிருக்கிறது. இங்கு இருப்பவர்களுக்கு அந்தக் கவலை இல்லை. எல்லோரிடமும் கார் இருக்கிறது! இந்த ஊரில் நான் கண்டவரை மனிதர்களை விட கார்களே அதிகம். கார் என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாய் இருக்கிறது. இங்கு உள்ள நடுத்தர மக்கள் ஒரு காரை வாங்கிவிட்டு, மாதாமாதம் வேண்டா வெறுப்பாக தவணை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊரில் கார் வைத்திருப்பதால் இன்னொரு ஹிம்சை, குளிர் காலங்களில் பாலம் பாலமாக கார்களில் பனி படர்ந்து விடும். அதை கொத்தி எடுத்து கார் ஸ்டார்ட் செய்ய கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகும்! அது ஒன்று தான் இவர்கள் செய்யும் அதிக பட்ச உடல் உழைப்பு என்று நினைக்கிறேன்!

அமெரிக்கர்களிடம் நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது!
  • ரோட்டில் யார் நடந்து சென்றாலும் புன்னகை புரிகிறார்கள்! காலை வணக்கம் சொல்கிறார்கள்!
  • எந்தக் கடையில் என்ன வாங்கினாலும், உங்கள் நாள் இனிதாக இருக்கட்டும் என்று முகம் மலர வாழ்த்துகிறார்கள்
  • எல்லோரிடமும் மிக அற்புதமான நகைச்சுவை உணர்வு! நன்றாக வாய் விட்டுச் சிரிக்கிறார்கள்! பத்தில் ஒரே ஒருவர் சிடு மூஞ்சியாய் இருந்தால் அதிகம்!
  • கார் ஓட்டுபவர்கள் தெருவில் யார் நடந்து சென்றாலும் ஒரு நிமிஷம் நிறுத்தி அவர்கள் கடந்து சென்ற பிறகே செல்கிறார்கள் [நம் ஊர் ஞாபகம் வந்தது, சாவுகிராக்கி, வீட்ல சொல்ட்டு வந்தியா நீ சாவுறதுக்கு என் வண்டி தான் கெடச்சுதா?]
  • ஊனமுற்றவரகளையும், வயதானவர்களையும் மிக கண்ணியமாக நடத்துகிறார்கள்
  • எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையும் நாணயமும் கொண்ட மக்கள்!
    அதற்கு

ஒரு உதாரணம் கூற வேண்டும். வழக்கம் போல அலுவலகத்திலிருந்து நானும் என் நண்பரும் ஹோட்டலுக்கு டாக்சியில் சென்றோம். இறங்கியதும், ஒருவருக்கு 6.50, இருவர் என்றால் 7.50 என்றார். என் இந்திய நண்பர், அது எப்படி நாங்கள் இருவரும் ஒன்றாய் தானே தங்குகிறோம், 6.50 தான் தருவேன் என்று அபத்தமாய் பிடிவாதம் பிடித்தார். சரி பரவாயில்லை நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் என்று மிக்க கண்ணியமாக வாங்கிக் கொண்டார். மறுநாளும் அதே டிரைவர். சென்று இறங்கியதும் அதே கணக்கை சொன்னார். என் நண்பர் அதே பழைய பல்லவியை மறுபடியும் பாடினார். அதற்கு அவர், போன தடவை கேட்டீர்கள், பரவாயில்லை என்று ஒத்துக் கொண்டேன், இந்தத் தடவையும் நீங்கள் அதையே சொல்கிறீர்கள் சரி உங்கள் இஷ்டம் கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டார். என் நண்பர் பில் கேட்டார். அவர் சரியாக 7.50 என்று எழுதிக் கொடுத்தார். நாங்கள் 6.50 தானே கொடுத்தோம், நீங்கள் 7.50 என்று பில் கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். என்ன செய்வது, நீங்கள் தர மாட்டீர்கள், நான் என கை காசை போட்டுக் கொள்வேன்..அது ஒன்றும் பிரச்சனையில்லை என்று சாதாரணமாய் சொன்னார். இருவரும் வெட்கித் தலை குனிந்தோம்! போன முறையே இப்படி எல்லாம் இந்தியாவில் போடும் சண்டை போட வேண்டாம், கேட்டதை கொடுத்து விடுவோம் என்று என் நண்பரிடம் சொன்னேன். அதை அவர் கேட்கவே இல்லை. சிலருக்கு அடிபட்டால் தான் உரைக்கிறது!

- பயணப்படும்!