சரி என் கதைக்கு வருகிறேன். ஒவ்வொரு கனிப்பொறி வல்லுனரின் நித்திய கனவான அமெரிக்காவுக்கு ஒரு வழியாய் வந்தாகிவிட்டது. இங்கு வந்து பல யுகங்கள் கடந்து விட்டதைப் போன்ற ஒரு உணர்வு எனக்குள். அதிக ஆள் அரவமில்லாத எந்த ஒரு புது நகரத்தில் குடி பெயர்ந்தாலும் நாட்களை பிடித்து தள்ளத் தான் வேண்டியிருக்கிறது.
நான் இருப்பது மேல் சொன்ன மாதிரியான ஒரு சின்ன டவுன். சுற்றிலும் மலைகள், [கொஞ்சம் கண்களை அகல விரித்துக் கொள்ளுங்கள்!] சில நாட்கள் பச்சைப் பசேலென்றும், சில நாட்கள் பனி படர்ந்து வெள்ளை வெளேரென்று! உண்மை என்னவென்றால், அனைத்து மலைகளிலும் தங்கம் கொட்டிக் கிடக்கிறது என்று இங்கு உள்ளவர்கள் சொல்கிறார்கள். 1862 ல் இருந்து இங்கு பல தங்கச் சுரங்கங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த கட்டடம் கட்டுவதற்காக தோண்டும்போது கிடைத்த தங்கம் என்று சிறு கிண்ணத்தில் வைத்திருக்கிறார்கள்! ஊர் முழுவதும் அத்தனை தங்கம். நம் ஊரில் தோண்டினால் தண்ணீர் வர மாட்டேன் என்கிறது, தங்கம் எங்கிருந்து வருவது?
அமெரிக்கா என்றவுடன் எல்லோரும் செல்வது கலிஃபோர்னியா, நியுயார்க்..வழக்கமாய் நான் புலம்புவது போல் எனக்கு என்று வரும்போது, ஹெலனா, மோன்டனா! அப்படி ஒரு மாநிலம் அமெரிக்காவில் இருப்பதே பலருக்குத் தெரியவில்லை. எது எப்படியோ, என்னை பொறுத்தவரை அமெரிக்கா..அவ்வளவு தான்! அமேரிக்காவில் எல்லாமே கிங் சைச் தான்! பர்கரில் இருந்து பால் நிலவு வரை! பர்கர் சாப்பிடுவதற்குள் நான் படும் பாடு! எனக்கு வாய் பத்த மாட்டேன் என்கிறது! இங்கு சுற்றிலும் மலையும், காடுகளும் இருப்பதால், மான் வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் மக்கள் வருகிறார்கள்!
காலை நேரங்களில், மதிய வேளைகளில் வெளியே வந்தால் ஊரடங்குச் சட்டம் ஏதாவது போட்டு விட்டார்களா என்று தோன்றுகிறது. ரோட்டில் ஜன நடமாட்டமே இல்லை. ஒரு வெள்ளைக்கார நண்பரிடம் கேட்டேன், எங்கே ரோட்டில் யாரையும் காணவில்லை என்று? அதற்கு அவர் என்னை ஆச்சர்யமாகப் பார்த்து விட்டு, பெரியவர்கள் அலுவலில் ஈடுபட்டிருக்கிறார்கள், குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருப்பார்கள்! என்று மிக எளிதாக ஒரு பதிலளித்தார்! சென்னையை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டேன், அவர் என்ன என்றார்..கொஞ்சம் சத்தமாக சிரித்து விட்டேனோ என்னவோ!
இது மிகச் சிறிய ஊர் என்பதால் அமெரிக்காவின் பெரு நகரங்களில் இருப்பதைப் போல் இங்கு போக்குவரத்து ஒன்றும் அவ்வளவாக இல்லை. கை தட்டிக் கூப்பிட நம் ஊர் போல் ஆட்டோக்களும் இல்லை! டாக்சிக்கே ஃபோன் செய்து காத்திருக்க வேண்டியிருக்கிறது. இங்கு இருப்பவர்களுக்கு அந்தக் கவலை இல்லை. எல்லோரிடமும் கார் இருக்கிறது! இந்த ஊரில் நான் கண்டவரை மனிதர்களை விட கார்களே அதிகம். கார் என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாய் இருக்கிறது. இங்கு உள்ள நடுத்தர மக்கள் ஒரு காரை வாங்கிவிட்டு, மாதாமாதம் வேண்டா வெறுப்பாக தவணை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊரில் கார் வைத்திருப்பதால் இன்னொரு ஹிம்சை, குளிர் காலங்களில் பாலம் பாலமாக கார்களில் பனி படர்ந்து விடும். அதை கொத்தி எடுத்து கார் ஸ்டார்ட் செய்ய கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகும்! அது ஒன்று தான் இவர்கள் செய்யும் அதிக பட்ச உடல் உழைப்பு என்று நினைக்கிறேன்!
அமெரிக்கர்களிடம் நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது!
- ரோட்டில் யார் நடந்து சென்றாலும் புன்னகை புரிகிறார்கள்! காலை வணக்கம் சொல்கிறார்கள்!
- எந்தக் கடையில் என்ன வாங்கினாலும், உங்கள் நாள் இனிதாக இருக்கட்டும் என்று முகம் மலர வாழ்த்துகிறார்கள்
- எல்லோரிடமும் மிக அற்புதமான நகைச்சுவை உணர்வு! நன்றாக வாய் விட்டுச் சிரிக்கிறார்கள்! பத்தில் ஒரே ஒருவர் சிடு மூஞ்சியாய் இருந்தால் அதிகம்!
- கார் ஓட்டுபவர்கள் தெருவில் யார் நடந்து சென்றாலும் ஒரு நிமிஷம் நிறுத்தி அவர்கள் கடந்து சென்ற பிறகே செல்கிறார்கள் [நம் ஊர் ஞாபகம் வந்தது, சாவுகிராக்கி, வீட்ல சொல்ட்டு வந்தியா நீ சாவுறதுக்கு என் வண்டி தான் கெடச்சுதா?]
- ஊனமுற்றவரகளையும், வயதானவர்களையும் மிக கண்ணியமாக நடத்துகிறார்கள்
- எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையும் நாணயமும் கொண்ட மக்கள்!
அதற்கு
ஒரு உதாரணம் கூற வேண்டும். வழக்கம் போல அலுவலகத்திலிருந்து நானும் என் நண்பரும் ஹோட்டலுக்கு டாக்சியில் சென்றோம். இறங்கியதும், ஒருவருக்கு 6.50, இருவர் என்றால் 7.50 என்றார். என் இந்திய நண்பர், அது எப்படி நாங்கள் இருவரும் ஒன்றாய் தானே தங்குகிறோம், 6.50 தான் தருவேன் என்று அபத்தமாய் பிடிவாதம் பிடித்தார். சரி பரவாயில்லை நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் என்று மிக்க கண்ணியமாக வாங்கிக் கொண்டார். மறுநாளும் அதே டிரைவர். சென்று இறங்கியதும் அதே கணக்கை சொன்னார். என் நண்பர் அதே பழைய பல்லவியை மறுபடியும் பாடினார். அதற்கு அவர், போன தடவை கேட்டீர்கள், பரவாயில்லை என்று ஒத்துக் கொண்டேன், இந்தத் தடவையும் நீங்கள் அதையே சொல்கிறீர்கள் சரி உங்கள் இஷ்டம் கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டார். என் நண்பர் பில் கேட்டார். அவர் சரியாக 7.50 என்று எழுதிக் கொடுத்தார். நாங்கள் 6.50 தானே கொடுத்தோம், நீங்கள் 7.50 என்று பில் கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். என்ன செய்வது, நீங்கள் தர மாட்டீர்கள், நான் என கை காசை போட்டுக் கொள்வேன்..அது ஒன்றும் பிரச்சனையில்லை என்று சாதாரணமாய் சொன்னார். இருவரும் வெட்கித் தலை குனிந்தோம்! போன முறையே இப்படி எல்லாம் இந்தியாவில் போடும் சண்டை போட வேண்டாம், கேட்டதை கொடுத்து விடுவோம் என்று என் நண்பரிடம் சொன்னேன். அதை அவர் கேட்கவே இல்லை. சிலருக்கு அடிபட்டால் தான் உரைக்கிறது!
- பயணப்படும்!












