சென்ற வார இறுதியில் நண்பர் ஒருவரின் கல்யாணத்திற்காக மதுரை சென்றிருந்தேன். இப்போதெல்லாம் அடிக்கடி மதுரை செல்ல முடிவதில்லை. அதற்கு அவசியம் ஏற்படுவதில்லை. ஆனால், என்ன தான் மரங்கள் வான் நோக்கி கிளை பரப்பி நின்றாலும், அதன் வேர்கள் மண்ணோடு தான் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறது! அது போல, நாம் பணியின் நிமித்தம் எங்கெங்கோ அலைந்து திரிந்தாலும், மனம் சொந்த ஊரை கட்டிக் கொண்டு தான் கிடக்கிறது! நம் சொந்த ஊரில் காலடி வைத்ததும், அங்கு நம் வாழ்ந்த வாழ்வின் நினைவுகள் ஒரு குளிர்ந்த காற்றை போல் நம் முகத்தில் அறைகிறது!
 
நான் மதுரைக்கு இரயிலில் சென்றாலும், பேருந்தில் சென்றாலும், வண்டி விட்டு இறங்கியதும் வீட்டுக்கு நடக்கத் தான் விரும்புவேன். ஆட்டோவில் செல்வதில்லை. வீடு ரயில் நிலையம், பேருந்து நிலையத்திலிருந்து அருகில் இருப்பதால் இருபது நிமிடத்திற்குள் சென்று சேர்ந்து விடலாம். அதிகாலை மதுரை என்றுமே அழகு தான். மூட்டைகளா மனிதர்களா என்று எந்த வித்தியாசமுமின்றி ரயில்வே நிலைய வாசலில் படுத்துக் கிடக்கும் ஜனக் கூட்டம், சுத்த பத்தமாய் குளித்து முடித்து விட்டு, சூடாய் பால் காய்ச்சி தேநீர் ஆத்தும் டீ கடை நாயர்,  வாசல் தெளித்து அழகழகாய் கோலம் போடும் நைட்டி பெண்கள், ஜரூராய் நடக்கும் பால் வியாபாரம், புட்டுக்கு லைன் கட்டி நிற்கும் சுள்ளான்கள், அதற்கு நேர் எதிராய் சூடாய் அப்பக் கடை, அப்போது தான் வந்திருக்கும் லாரியிலிருந்து சரக்கு இறக்கும் உழைப்பாளர் கூட்டம், "விநாயகனே வினை தீர்ப்பவனே" சீர்காழியின் சீற்றம் என்று வழி நெடுக மதுரை அழகழகாய் வித விதமாய் விழிக்கிறது!

இந்த பயணத்தில் நான் கண்டது, மதுரையில் அடிக்கடி எல்லாம் மின் வெட்டு இல்லை; எப்போதாவது வருகிறது! ஆமாம், அப்படித் தான் சொல்ல வேண்டும்! என் மாமா ஒருவர் மின்சார வாரியத்தில் தான் பனி புரிகிறார். அவர் நல்ல வேடிக்கையான மனிதர்! மின் வெட்டு அதிகப்படுத்தியதிலிருந்து அவருக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு நாள் இரவு, வழக்கம் போல் மின்சாரத்தை நிறுத்தியிருக்கிறார். உடனே ஒரு தொலைபேசி அழைப்பு! எடுத்தால், ஒரு குழந்தை அழும் சத்தம் தான் கேட்கிறது! இவரும்  பல முறை ஹலோ, ஹலோ என்று சொல்லி பார்த்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து ஒரு பெண் பேசியிருக்கிறார் இப்படி: 

பெண்: என்ன கேக்குதா?
மாமா: கேக்குதும்மா
பெண்: என்ன கேட்டுச்சு?
மாமா: குழந்தை அழுகுற சத்தம் கேட்டுச்சு...
பெண்: நல்லா கேட்டீங்களா?
மாமா: [வேடிக்கையாய்] குழந்தைக்கு பசிக்குது போல, பால் குடும்மா...
பெண்: அதெல்லாம் குடுத்து தான் படுக்க வச்சோம், நீங்க கரண்ட ஆஃப் பண்ணதும் முழிச்சிகிட்டான்!
மாமா: ......

குழந்தைகள் பரீட்சைக்கு படிக்க முடியவில்லை ஏன் இப்படி அநியாயம் பண்றீங்க என்று கேட்பவருக்கு, நீங்க பேசாம ஒரு எமெர்ஜென்சி லைட்டோ, அல்லது இன்வேர்டரோ வாங்கிடுங்க சார். நாங்க என்ன வேணும்னா கட் பண்றோம், கவர்ன்மென்ட் சொல்லுது, நாங்க செய்றோம். இப்போ எல்லாம் எல்லா மிடில் கிளாஸ் மக்களும் இன்வர்டர் வாங்கிடறாங்க சார் என்று வயித்தெரிச்சலில் பேசும் மக்களிடம் இவர் அட்வைஸ் வேறு செய்கிறார். இன்னொரு பெண்மணி ஃபோன் போட்டு சார், உங்க ஆபிஸ்ல கரண்ட இருக்குல்ல, நான் படுக்கையை தூக்கிட்டு அங்கே வந்து தூங்குறேன் என்று சொன்னதற்கு, தாராளமா வாங்கம்மா, இங்கே குத்துமதிப்பா ஒரு ஆயிரம் கொசு இருக்கு, இப்போ அது என்னை மட்டும் கடிச்சுட்டு இருக்கும், நீங்க வந்தீங்கன்னா உங்களுக்கு ஐநூறு, எனக்கு ஐநூறு என்று கலாய்த்திருக்கிறார்!  இது தான் மதுரை நக்கல் போலும்! 

ஒன்றும் சொல்வதற்கில்லை, கொடுமை என்னவென்றால் மக்கள் இதற்கும் பழகிவிட்டார்கள். தங்களின் வேலைகளை அந்த குறைந்த நேர இடைவேளைகளில் வைத்துக் கொள்ள பழகி விட்டார்கள்.  நமக்கு எதுவுமே பழகி விடுவது தான் பிரச்சனையே! கூடங்குளம் அணுமின் நிலையத்தினாலும் இந்த பற்றாக்குறை தீரப்போவதில்லை. அணுமின் நிலையம், விண்ட் மில், ஹைட்ரோ பவர் என்று பலவற்றை நம்புவதை விட, சூரியனை நம்பலாம்! ஒரு வீட்டுக்கு சோலார் பவர் வைக்க கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ஆகிறது! அதற்கு அரசு ஏதாவது மானியம் அளித்து ஆதரிக்கலாம்! அம்மா, போன முறை மழை நீர் சேகரிப்பை நடைமுறை படுத்தியதை போல இந்த முறை இதை செய்யலாம்! பிறகு பிரச்சனையே இருக்காது...

சரி, மின்சாரப் பிரச்சனையை விட்டு மதுரைக்கு வருவோம்; மதுரையில் நான் பிறந்து வளர்ந்த அதே தெருவில் தான் இன்னும் எங்கள் வீடு இருக்கிறது. அன்று ஓடு இருந்த இடத்தில் இன்று மாடி இருக்கிறது. சொந்த வீடு என்பதால் இன்னும் நான் பிறந்து வளர்ந்த தெருவில் வசிக்கும் வசதி வாய்த்திருக்கிறது. சொந்த வீடாகவே இருந்தாலும், சிலர் நல்ல நிலைமையில் வந்ததும் இந்த சிறிய வீடு பத்தாது என்று நகரத்துக்கு வெளியே நல்ல பெரிய வீடாய் கட்டிக் கொள்கிறார்கள். அதில் வசதி இருக்கிறது என்றாலும், ஒரு முறை நம் இடத்தை விட்டு போய் விட்டால், பிறகு அந்த பக்கம் தலை வைத்து படுக்க மாட்டோம்! நமக்கு அதற்கான நேரமே இருக்காது! அதனால் நாம் நாம் வாழ்ந்த இடத்தை, வாழ்ந்த வாழ்க்கையை, சுக துக்கத்தை மறந்து விடுகிறோம். நம் பிள்ளைகளுக்கு நம்முடைய பழைய வாழ்க்கை தெரிவதில்லை. இன்று நீங்கள் கார் வைத்திருந்தாலும், அன்று கஷ்டப்பட்டு ஒரு சைக்கிள் வாங்கி அந்த தெருவில் வலம் வந்ததை நம் பிள்ளைகளுக்கு எப்படிச் சொல்வது? இந்த முறை சென்ற போது, வீட்டு வாசலில் அமர்ந்து தெருவையே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் வாழ்ந்த அந்தத் தெரு, பல அனுபங்களை சுமந்து கொண்டு இன்றும் இளமையாய் நிற்கிறது. எங்கள் வீட்டின் எதிரே உள்ள குழாயடி, அதைச் சுற்றிய குட்டிச் சுவர், அந்த சுவற்றைச் சுற்றி சுற்றி வந்து நான் படித்த பரிட்சைகள், நான் உட்கார்ந்து மாங்கா விற்ற அந்த எதிர் வீட்டுத் திண்ணை, கருங்கல் வாசற்படிகள், பின்னிப் பிணைந்து கிடக்கும் வீடுகள், ஏதோ ஒன்றை கூவி விற்றுச் செல்லும் வியாபாரிகள், வேட்டியை ஏற்றி  விட்டு கொண்டு பைக்கில் செல்லும் ஆசாரிகள், காம்போசிஷன் நோட்டை நெஞ்சில் நிறுத்திச் செல்லும் இளம் பெண்கள், காலையில் வாசல் தெளித்த தண்ணீரின் மிச்சங்கள், சௌராஷ்டிரா பெண்களின் பார்வைகள், வம்பளப்புகள், விசாரிப்புகள் என்று பலவிதமான அனுபவங்கள்...அன்று குழந்தையாய் சுற்றித் திரிந்த வாண்டுகள் இன்று அரும்பு மீசையுடன் என்னை கடக்கையில் தங்கள் ஞாபக அடுக்குகளில் என்னைத் தேடுகிறார்கள்!

நான் ஐந்தாவது, ஆறாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது எந்த போஸ்ட்மேன் எனக்கு "ப்ரமோடட்" கார்ட் கொடுத்தாரோ, அவரை நான் அன்று பார்த்தேன். லேசாக தலை முடி நரைத்திருந்தது. வேறு எந்த மாற்றமுமில்லை. இந்த இமெயில் யுகத்தில் இன்றும் அவர் "ப்ரமோடட்" கார்ட் கொடுக்கிறாரா என்று தெரியவில்லை. அதே, பால் வண்டிக்காரர், அதே அயர்ன் வண்டிக்காரர் என்று காலம் எண்பதுகளிலேயே ஸ்தம்பித்து நிற்கிறது! இத்தனை வருடம் கழித்தும் அந்தத் தெருவில் பதினோரு மணி வெயில் அப்படியே தான் இருக்கிறது.

மதுரை இன்னும் மாறவில்லை!

எல்லா சிறந்த நகைச்சுவையும் ஒரு கட்டத்தில்
இதற்குத் தானா அப்படிச் சிரித்தோம்
என்று ஆகி விடுகிறது!
 ------------------------------------------------------
ரொம்ப நாட்களாய் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். இன்று, உங்களை கேட்கிறேன்.
தனியாய் ஒரு பெண் மட்டும்
ஒரு ஹோட்டலில் அமர்ந்து
உணவருந்துவதை பார்த்திருக்கிறீர்களா?
[KFC, Mc Donalds போன்ற இடங்களைத் தவிர்த்து!] 
 -----------------------------------------------------
பெண்கள் தினத்துக்கு அலுவலகத்தில் ஸ்டால் போட்டு
சேலை, சுடிதார், தோடு, வளையல், செயின் என்று
கொள்ளையடித்தார்கள்.
 
நூற்றி முப்பது ரூபாய்க்கு நான் வாங்கிய தோடுகளும், வளையலும்
வனவாசத்தில் சீதா தேவியார் உபயோகப்படுத்தியது போலிருந்தது!
-------------------------------------------------------------
கணையாழியின் கடைசி பக்கங்கள் படிக்கும்போது
சுஜாதாவின் வாசிப்பு பிரமிக்க வைக்கிறது!
அதே சமயம், அவர் மனைவியிடம் 
எவ்வளவு நேரம் பேசியிருப்பார் 
என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை!!

மாத ஆரம்பத்தில் ஒரு பதிவு, மாதக் கடைசியில் ஒரு பதிவு! எத்தனையோ எழுத வேண்டும். நல்ல படக் காட்சிகளை பார்க்கும்போது அதை பற்றி எழுதலாம் என்று தோன்றுகிறது. நல்ல பாடல்களை கேட்கும்போது அது ஏன் பிடிக்கிறது என்பதை பகிர்ந்து கொள்ளலாம்.  விகடனில் ராஜு முருகனின் வட்டியும் முதலும் படிக்கும்போது, அப்படி எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. நல்ல சிறுகதை ஒன்று எழுத வேண்டும். என் ஐ. டி. வாழ்க்கை பற்றி ஒரு நாவலே எழுதலாம்.  நான் எழுதாமல் இல்லை. எழுதியது எதுவும் திருப்தியாய் வரவில்லை. அதனால் அவைகளை பதிய முடியவில்லை. அதுவே உண்மை! கார்டூன் வரைந்து பழக ஒரு போர்டும், மார்க்கரும் வாங்கி வந்தேன். கார்டூன் தவிர எல்லாம் வரைந்து கொண்டிருக்கிறேன், இல்லை, வரைந்து கொண்டிருக்கிறோம்! [என் மனைவியும் சேர்த்து] அந்தப் படங்கள் உங்கள் பார்வைக்கு! ஒரு பதிவுக்காச்சு!

1  படத்திற்கு கீழே என் பெயர் இருப்பதால், SELF PORTRAIT ஆ என்று கேட்டு விடாதீர்கள்.  படத்தை வரைந்தது தான் நான்!

2 கீழுள்ள கண்கள் என் மனைவியின் கை வண்ணம்! பொன்னியின் செல்வன் எஃபெக்ட் !




எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது வழங்கப்பட்டதற்காக உயிர்மை ஒரு பாராட்டு விழா...மன்னிக்கவும், மிகப் பெரிய பாராட்டு விழா நடத்தியது! அந்த பாராட்டு விழா "பெரிய" என்பதிலிருந்து "மிகப்பெரிய" என்று ஆனதற்கு சூப்பர் ஸ்டார் அங்கு வந்து சிறப்புரை ஆற்றுவதன் காரணமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். இதை பற்றி அன்றிரவே எழுதி இருக்க வேண்டும். மறுநாள் எழுத ஆரம்பித்து இன்று வரை எழுதிக் கொண்டிருக்கிறேன். இதை நீங்கள் வாசித்தால் பதிவேறிவிட்டது என்று தானே அர்த்தம்! முதலில் இந்த நிகழ்வை பற்றி எஸ். ராவின் வலைதளத்தில் பார்த்த போதே, ரஜினிக்கும் இந்த விழாவிற்கும் என்ன சம்மந்தம் என்று கேள்வி எழுந்தது! அந்தக் கேள்வி எல்லோருக்கும் எழுந்திருக்கிறது என்று விழாவில் தெரிந்தது. அதற்கு ரஜினியும் தகுந்த விளக்கமளித்தார்.
 
அந்த விழாவில் ராமகிருஷ்ணனின் இலக்கிய ஆசான் எஸ். ஏ. பெருமாள், இறையன்பு [ஏன் இவர் பெயர் சொல்லும்போது கூட எல்லோரும் "ஐ.ஏ.எஸ்" சேர்த்து சொல்கிறார்கள் என்று புரியவில்லை], வைரமுத்து, கு. ஞானசம்மந்தம், விஜயசங்கர் என்று பலர் வந்திருக்க, அந்த விழாவின் கதாநாயகன் உட்பட எல்லோரையும் தூக்கி எரிந்தது சூப்பர் ஸ்டார் என்னும் ரஜினி அலை! ஒரு மனிதனால் இத்தனை புகழை எப்படி தாங்க முடிகிறது என்று தெரியவில்லை. புகழ் என்பது ஒரு மனிதனுக்கு வரம் என்றால், அது ரஜினிக்கு சாபம் என்று தான் சொல்ல வேண்டும்!
 
நான் சென்னை வந்ததிலிருந்து இது வரை மூன்று முறை ரஜினியை பார்த்தேன். எழுத்தாளர் சுஜாதாவின் அஞ்சலியின் போது, வாலியின் ஆயிரம் பாடல்கள் புத்தக வெளியீட்டு விழாவில், நேற்று இந்த விழாவில். அது என்ன நிகழ்ச்சியாக இருக்கட்டும், எந்த வித சூழ்நிலையாக இருக்கட்டும். அவர் அந்த இடத்தில் வந்தவுடன் ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. காலம் ஒரு நிமிஷம் அப்படியே உறைந்து விடுகிறது. அதை நான் கண் கூடாக  காண்கிறேன். சுஜாதாவின் உடலை அவர் அஞ்சலி செய்ய அங்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் பத்து நிமிடத்திற்கும் குறைவு! ஆனால் அந்த நேரத்தில் அங்கு நிலவிய மௌனம் ஆயிரம் வருடங்கள் கடந்தது!
 
ரஜினி இருக்கும் மேடையில் வேறு ஒருவர் கதாநாயகனாய் இருக்க முடியாது! அது தான் உண்மை. நேற்று நடந்த விழாவில், இயல் விருது என்றால் என்ன? யார் கொடுக்கிறார்கள்? எப்போதிருந்து கொடுக்கிறார்கள்? இது வரை யாருக்கெல்லாம் அது வழங்கப்பட்டிருக்கிறது என்று எந்த விபரமும் சொல்லப்படவில்லை. அது அங்கே தேவைப்படவுமில்லை. காரணம் சூப்பர் ஸ்டார்! ரஜினி படத்தில் யார் நடித்தாலும் ரஜினியையே நாம் பார்ப்பது போல், ரஜினியே நேரில் அமர்ந்திருக்கும் போது யாரை யார் பாராட்டினால் என்ன? பேச வந்தவர்களில் யார் "சூப்பர் ஸ்டார்" என்று பேச்சை தொடங்கினாலும் அப்படி ஒரு உற்சாகம், துள்ளல், கை தட்டல், ஆரவாரம்! ஒரு முறையல்ல, ஒவ்வொரு முறையும்! 
 
இன்றைய ரஜினியை பார்த்தால் ஒரு சாயலுக்கு சி. ஜே. பாஸ்கர் போல் இருக்கிறார். சற்று மெலிந்திருக்கிறார். இன்றும் தமிழை தத்தக்க புத்தக்க என்று தான் பேசுகிறார். எல்லா மொழிகளும் அரைகுறையாய் தெரிவதால் எதில் பேசுகிறோம் என்ற குழப்பம் ஏற்பட்டு விடுகிறது என்று அவரே காரணமும் சொல்கிறார். தான் புத்திசாலி இல்லை, தான் அதிகம் படித்தவனில்லை, இங்கிலீஷ் ஃப்ளுயன்சி கிடையாது என்று, அவருக்கு இது தெரியும் என்பதை விட தெரியாது என்று தான் அதிகமாய் பேசுகிறார். அது தான் உண்மையும் கூட! ஆனால் அவர் என்ன பேசினாலும் கூட்டம் தன்னை மறந்து கை தட்டி ரசித்து ஆரவாரிக்கிறது! உண்மையில் ஒன்றுமே தெரியாதவனுக்கு இத்தனை புகழ் வந்தால், ஆரம்பத்தில் தனக்கு ஒன்றும் தெரியாது என்று தான் சொல்வான். அதுவே, நாள் ஆக ஆக மேலும் மேலும் எல்லோரும் அவன் புகழ் பாடிக் கொண்டிருந்தால், ஒரு வேளை, எல்லோரும் சொல்வது நிஜம் தான் போலிருக்கிறது, நான் பெரிய ஆள் தான் போலிருக்கிறது என்று சிறிதாவது தலையில் ஏறி விடும்! ஆனால், ரஜினி எப்படி இன்னமும், இந்தப் புகழ் தன்னுடையது இல்லை, நான் ஒன்றும் செய்யவில்லை என்று தன்னைத் தானே தன் தலையில் தட்டி சமாளிக்கிறார் என்று தெரியவில்லை! அது தான் ஆச்சர்யம்! ஒரு வேளை அந்த வேலையை அவர் நாடும் ஆன்மிகம் செய்கிறதோ என்னமோ? [அதே ஆன்மீகத்தை நாடும் இளையராஜா அப்படி இல்லையே?!] 

விழாவில் எஸ். ரா வின் இலக்கிய ஆசான் எஸ். ஏ. பெருமாள் வந்திருந்தும், அவரைப் பற்றி அவர் ஒன்றுமே சொல்லாமல், ரஜினி தான் தன்னை வளர்த்தது போல் எஸ். ராவே பேசினார்! ம்ம்..எஸ். ராவை சொல்லிக் குற்றமில்லை. ரஜினியை வைத்துக் கொண்டு யாரும் வேறொருவரை புகழ முடியுமா? அது படத்தில் எம்.ஜி.ஆர் செத்துப் போவது போல் ஆகி விடும்! மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்களே!

விழா முடிந்து வெளியே வந்தேன். வெள்ளை சட்டை வெள்ளை பான்ட்டுடன் ஒருவர் என்னை கடந்து சென்றார். அவரை யாருமே கண்டு கொள்ளவில்லை. ரஜினியை வைத்து இருபத்தைந்து படங்கள் இயக்கி இன்றும் அவர் இப்படி ஒரு மாஸ் ஹீரோவாய் இருக்கக் காரணமானவர்! 

அவர் தான் எஸ். பி. முத்துராமன்! அது தான் சினிமா!

வீட்டிற்கு வந்து டீ.வி. போட்டால், ரஜினி பேசியது ஃப்ளாஷ் நியுஸில் வருகிறது!

அது தான் ரஜினி!

பின் குறிப்பு : விழாவுக்கு சூப்பர் ஸ்டார் மட்டுமில்லை, பவர் ஸ்டாரும் வந்திருந்தார்! ரசிகர்கள் அவரை மொய்த்துக் கொண்டு ஆர்ப்பரித்தது பார்த்து என் உடல் சிலிர்த்தது!


சார், இவர் பாட்டுக்கு தூக்கி தூக்கி அடிச்சுடுராறு. இந்த தடவையும் அது
பக்கத்து வீட்டி ஆண்டி வீட்டுக்குள்ள போய் விழுந்துருச்சு!

இது இன்டர்நேஷனல் மேட்சும்மான்னு சொன்னாலும், அது கேக்காம என்
அம்மா அப்பாவை கூட்டிட்டு வரச் சொல்லுது...

நீங்க வந்து கொஞ்சம் சொல்லுங்க சார்!

வழக்கமான க்ளிஷேவுக்கு உட்பட்டு நானும் உங்களுக்கு "ஹேப்பி மாட்டு பொங்கல்" தெரிவித்துக் கொள்கிறேன். பொங்கல் விடுமுறையின் பெயரால் சென்னை, ஜனத்தொகையில் ஒரு ஐம்பது வருடத்திற்கு முன் சென்று விட்டதாக படுகிறது! விசாலமான சாலைகள், குறைவான வாகனங்கள். கொட்டும் பனி என்று இன்று வழக்கத்திற்கு மாறாக ஒரு மிக இனிமையான ஒரு அனுபவம். இரவு எட்டு மணிக்கு ஜெமினி பாலத்தின் அடியில் சிக்னல் இல்லை என்றால் நம்புவீர்களா? இரு பக்கமும் பார்த்து மெதுவாய் செல்லுங்கள் என்று மஞ்சள் விளக்கு மட்டும் அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தது. அண்ணா சாலை ஹோவென இருந்தது. ஆனால், நம் மக்களுக்குத் தான் இதை அனுபவிக்கத் தெரியவில்லை. சாலை காலியாய் இருந்தால் ஏன் அப்படி பறக்கிறார்கள் என்று புரியவில்லை. என்னை போல், இந்த தருணத்தை அனுபவிக்க நினைப்பவர்களையும் பயமுறுத்தி விடுகிறார்கள். சில டாட்டா சுமோக்களும், டொயோட்டா இன்னோவாக்களும் ஏன் ஆம்புலன்ஸ் ரேஞ்சுக்கு போகிறது என்று புரியவில்லை. தண்ணி லாரிக்கு பிறகு எமன் இதில் தான் அதிகம் சவாரி செய்வதாய் படுகிறது. சென்னையில் என்னை போல் விதிமுறைக்கு உட்பட்டு இரு சக்கர வாகனம் ஓட்டுபவன் மகா பரிதாபி! [பரிதாபத்துக்குரியவன்] அதிலும் சிக்னல், பச்சையிலிருந்து மஞ்சளுக்கு மாறும்போது கடந்தால் அதோ கதி தான். சிவப்பு வந்து விடுமே என்று வேகத்தை குறைத்தால், பின்னால் வேகமாய் வருபவன் இடிப்பான், சரி வேகமாய் கடந்து விடலாம் என்று நினைத்தால் இந்தப் புறம் வருபவர்கள் இடித்து விட்டு, "ஏன்டா, சிக்னல் கண்ணுக்குத் தெரியலையா?" என்று ரூல்ஸ் ராமானுஜம் மாதிரி பேசுவார்கள். எனக்கு முன்னதில் அனுபவம் உண்டு! இப்போது சொல்லுங்கள், நான் பரிதாபி தானே?

இன்று மாட்டுப் பொங்கல். நீங்கள் எத்தனை பேர் அலங்காரம் செய்யப்பட ஒரு மாட்டை இன்று பார்த்தீர்கள்? எனக்கு அந்த பாக்கியம் கை கூடியது. மடிப்பாக்கத்தில் அல்ல; சைதாப்பட்டையில்! மடிப்பாக்கத்தில் வழக்கமாய் வழி மறிக்கும் மாடுகள் இன்று கண்களுக்கே படவில்லை. அந்த சைதாபேட்டை பசு மாட்டுக்கு நல்ல அலங்காரம் செய்திருந்தார்கள். கொம்பில் வர்ணம் எல்லாம் பூசவில்லை. பொட்டிட்டு, கண்ணில் மையிட்டு, அந்த பசுவை சுற்றி கலர் ஜிகினா பேப்பரை சுற்றி இருந்தார்கள். அடடா..நாகரிக வளர்ச்சி! அது சிக்னல் விழுந்து கடக்கும் போது, அந்த டாட்டா சுமோ கிரீச்சிட்டு நின்றது!


இன்றும் புத்தக கண்காட்சிக்கு சென்றேன். இன்று திங்கள் கிழமை, மூன்று மணிக்கு திறப்பார்கள் என்று நினைத்து போனேன். இன்று விடுமுறை நாள் என்பதை மறந்து விட்டேன். நாலு மணிக்கு நுழைவு வாயில் கதவை சாத்திக் கொண்டு, ஏதோ சூப்பர் ஸ்டார் படத்திற்கு டிக்கட் வாங்க உள்ளே விடாதது போல் அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். மக்களுக்கு புத்தகங்கள் மீது ஒரேடியாய் தான் நம்பிக்கை வந்து விட்டது போலும். உள்ளே சென்றால் கூட்டம் ஜே ஜே [ஜே ஜே க்கு பதில் வேறு ஏதாவது எழுதலாம் என்று நினைத்தேன், எதற்கு வம்பு அதிமுக ஆட்சி வேறு நடக்கிறது!] என்று இருந்தது. அமெரிக்காவிலிருந்து ஒரு நண்பர் வந்திருதார். புத்தக கண்காட்சி நடக்கும்போது யார் என்னை சந்திக்க விரும்பினாலும் நான் அவர்களை அங்கு வர சொல்லி விடுகிறேன்! இது எப்படி? அவரின் தலையில் ஒரு மூவாயிரத்துக்கு புத்தகங்களை கட்டி விட்டேன். கண்காட்சி முடிந்ததும்,  அந்த சில பதிப்பகங்களில் இதை சொல்லி கொஞ்சம் கமிஷன் வாங்க வேண்டும்! இத்தகைய ஒரு கண்காட்சியில் மக்கள் கூட்டத்தை பார்த்தால் நன்றாய் இருக்கிறது, ஆனால் ஆண்கள் கழிப்பறை என்று போர்டை பார்த்துக் கொண்டே அங்கு இருக்கும் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது!? என்னால் அடக்க முடியாமல் [சிறுநீரை அல்ல!] அந்த திறந்த வெளிக்கு முன் நின்று கொண்டேன். ஒருவர் வந்தார்!

சார், பிஸ் அடிக்கனுமா?

[நான் ஏதோ அவரிடம் வழி கேட்கிறேன் என்று நினைத்துக் கொண்டு] அடிங்க, அதோ அங்கே இருக்கே டாய்லெட், இல்லேன்னா இங்கே கூட அடிங்க...

எனக்கு இல்லை சார், உங்களுக்கு அடிக்கனும்னா அதான் அங்கே இருக்கே, அங்கே போங்களேன். 2 அடியில தான் இருக்கு. ஏன் இங்கே அடிக்கிறீங்க?

எனக்கு சொல்லாதீங்க சார். இது தான் நல்லா இருக்கு. அங்கே சுத்தமா இல்லை!

அடப்பாவிகளா...நான் சொல்லச் சொல்ல இன்னும் இரண்டு பேர் என்னை தாண்டி போய் சுகமாய் வெட்டவெளியில் நின்று கொண்டு பிஸ் அடித்தார்கள்.   என்னை ஏதோ சட்டையை கிழித்துக் கொண்டு நிற்கும் பைத்தியம் போல் பார்த்தார்கள். இத்தனைக்கும் முக்கால்வாசி பேர் பதிப்பகங்களை சேர்ந்தவர்கள்! இவர்களிடம் அந்த புத்தகங்கள் என்ன செய்யும்?

நேற்று ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் நிகழ்ந்த ஒரு சம்பாஷனை:

அது பறவை இல்லப்பா, வவ்வால் டா..அது!
ஏன் அது தலை கீழ தொங்குது?
அது அப்படி தான் தொங்கும்.  அதோட அமைப்பு அப்படி!
அப்படி தொங்கினா அதோட கொடல் வெளிய வந்திராதா?

சரியாய் தான் சொல்லி இருக்கிறார்கள் 

"புத்தகங்களே, குழந்தைகளை கிழித்து விடாதீர்கள்!"


ரோட்டில் போகும் முன் பின் தெரியாத ஒரு பெண்ணின் அருகில் பைக்கை நிறுத்தினான்.

எக்ஸ்க்யுஸ்மி, இஃப் யு டோன்ட் மைன்ட், நீங்க எங்க போறீங்கன்னு சொல்லுங்க நான் உங்களை டிராப்  பண்றேன்?

நோ தேங்க்ஸ். நடந்தாள்.

ஒரு நிமிஷம், நீங்க என்னை நம்பலாம். 

உங்களுக்கு என்னை முன்ன பின்ன தெரியுமா?

இல்லை.

அப்புறம் எப்படி மிஸ்டர் நான் உங்களை நம்புறது?

உங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு தோணுது. நீங்க நம்பினா வாங்க.

அவனை தீர்க்கமாய் பார்த்தாள். ஒரு வித குழப்பத்துடன் ஓகே என்றாள்!

அவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. பைக்கில் கொஞ்சம் முன் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு அவளுக்கு இடம் கொடுத்தான். அவள் ஜாக்கிரதையாக ஏறி உட்கார்ந்தாள். போக வேண்டிய இடத்தை சொன்னாள்.

அவன் ஒன்றும் பேசாமல் வந்தான். மிகவும் ஜாக்கிரதையாக வண்டியை ஓட்டினான். அவளுக்கு சிரிப்பு வந்தது.

சிறிது தூரம் சென்றவுடன், வண்டி அவளின் வீடு நோக்கி செல்லவில்லை என்று தெரிந்து கொண்டாள். 

மிஸ்டர், நான் எங்க போக சொன்னா, நீங்க எங்க போறீங்க?

எல்லாம் போக வேண்டிய இடத்துக்கு தான் போறேன்.

அவனை பின்னால் அடித்து, வண்டியை அசைத்தாள். பாலன்ஸ் தவறி ஸ்கிட் ஆகி பைக் வழுக்கி விழுந்தது. அவன் மெதுவாய் போய் கொண்டிருந்ததால் இருவருக்கும் அதிகம் அடிபடவில்லை. உடலை தட்டிக் கொண்டே எழுந்தார்கள். 

இதுக்கு தான் நான் உங்க கூட வர மாட்டேன்னு சொன்னேன். இது தான் நான் சொன்ன இடத்துக்கு போற வழியா?

இது வேணா சரியான வழியா இல்லாம இருக்கலாம், ஆனா இது நீ போக வேண்டிய சரியான இடம் தான்.

புரியாமால்...நான் யார்னு உங்களுக்கு தெரியுமா?

ரொம்ப நடிக்காதே! நீ ஒரு பிராத்தல் கேஸ்னு எனக்கு தெரியும். ஆமா, நான் யார்னு உனக்கு தெரியுமா?

[அதிர்ச்சியுடன்] அலட்சியமாய்...தெரியாது! 

இந்த ஏரியாவுக்கு புதுசா வந்துருக்குற இன்ஸ்பெக்டர்!

அலட்சியம்++, கொஞ்சம் நல்ல பொண்ணா நடிச்சு பாப்போமேன்னு நெனச்சேன். அதான் உங்களுக்கே தெரியுமே, அப்புறம் என்ன? உங்களுக்கு வேண்டியதை இங்கேயே முடிச்சுக்கலாமே, எங்க கூட்டிட்டு போறீங்க? சார், இதுக்காகவே ஸ்பெஷலா பண்ணை வீடு வச்சுருகீங்களோ?

நீ நெனைக்கிற மாதிரி ஆள் இல்லை நான். ஒழுங்க ஸ்டேஷனுக்கு வா..

கோவுசுக்காதீங்க சார்.... உன்னை மாதிரி நான் எத்தனை பேரை பாத்திருப்பேன் என்று அவனின் சட்டையை அவிழ்க்க முற்படுகிறாள்!

அவன் பளீரென்று அவள் கன்னத்தில் ஒரு அரை விட்டான். அவள் எட்டிப் போய் விழுவதற்கும் அங்கு ஒரு கார் வந்து நிற்பதற்கும் சரியாய் இருந்தது. அந்த காரின் ஹெட் லைட் அவளின் கண்களில் பட்டு அவள் கண்கள் கூசியது. காரிலிருந்து ஒரு கரை வேட்டி இறங்கியது!

இன்ஸ்பெக்டர் சல்யுட் அடித்தான்.

இங்கே பாரு, ரோட்லே ஆரம்பிச்சுடீங்களா? [அவனை பார்த்து] என்னய்யா பிரச்சனை?  

சார், ரவுண்ட்ஸ் வந்தேன் சார். இவ இங்கே பிராத்தல் பண்றான்னு நியுஸ் வந்தது, ஃபாலோ பண்ணி மடக்கிட்டேன் சார். ஸ்டேஷன் கூப்பிட்டா முரண்டு பண்றா சார். 

அவள் மெல்ல எழுந்து அவரை பார்த்து புன்னகைத்தாள்.

அது சரி, ஒண்ணு பண்ணு, நீ வண்டிய எடுத்துட்டு கெளம்பு. நான் இவளை ஸ்டேஷனுக்கு அனுப்புறேன்!

இல்லை சார், நானே கூட்டிட்டு போயிடறேன் சார்.

யோவ், சொன்னா புரிஞ்சுக்க மட்டீறு! நாளைக்கு மெதுவா ஸ்டேஷனுக்கு வரட்டும்! என்ன அவசரம்? என்ன கண்ணு? கார்ல ஏறு!

அவனின் பதிலுக்கு காத்திருக்காமல் அவளை காரில் ஏற்றி, கார் நகர்ந்தது. அவள் காரின் கண்ணாடியின் வழியே அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்! அவன் தரையில் ஓங்கி ஒரு உதை  விட்டான்.

அடுத்த வாரம் ஸ்டேஷனுக்கு அவனின் பெயருக்கு ஒரு கவர்ன்மென்ட் ஆர்டரும், ஒரு லெட்டரும் வந்தது.

அந்த ஆர்டர் அவனின் ப்ரமோஷன் ஆர்டர்!

லெட்டரில்...

ஆர்டர் கைல வாங்கி இருப்பேன்னு நெனைக்கிறேன். ஆச்சர்யமா இருக்கா? இருக்கும். அன்னைக்கு நீ என்னை வண்டியில கூப்டப்ப நான் யாருன்னு தெரியாம தான் கூப்பிடறே, சரி இவனுக்கு ஏதோ சபலம், வண்டியில கூட்டிட்டு போற சாக்கில இவனும் கொஞ்சம் வாழ்ந்துட்டு போறான்னு நெனச்சி தான் ஏறினேன். நீ போலீஸ்னு எனக்கு தெரியாது. என்னை பத்தியும் உனக்குத் தெரியாதுன்னு நெனைச்சேன். ஆனா, லைஃப் ல எப்படியெல்லாம் ட்விஸ்ட் பாத்தியா? நெனச்ச சிரிப்பா வருது! ஆனா, நீ ரொம்ப நல்லவன்யா. அன்னைக்கு நடந்ததை நெனைச்சி எனக்கு என்னமோ உன் மேல பாவமா இருந்தச்சி. என்னை அனுபவிக்கவும் முடியல, உன் கடமை தவறாம என்னை ஸ்டேஷன் கொண்டு போய் தண்டனை வாங்கி கொடுக்கவும் முடியலை.  உனக்கு ஏதாவது பண்ணனும்னு தோணுச்சி! அதான் இந்த ஆர்டர். சொன்னா நம்பமாட்டே, உங்க டிபார்ட்மென்ட்ல எனக்கு நெறைய்ய ஃபிரண்ட்ஸ் இருக்காங்கப்பா...ஏதாவது வேலைன்னா சொல்லு...

இப்படிக்கு
இப்போதைக்கு "மைனா"

பல வித எதிர்பார்த்த/எதிர்பாராத திருப்பங்களுடன் இந்த குட்டிக் கதையை எழுதி விட்டேன். இது ஒரு வழக்கமான சுஜாதா ஸ்டைல் கதை. இதற்கு மேல் கதையை எப்படி கொண்டு போகலாம் என்று சொல்லுங்கள்..ஒரு கண்டிஷன், கதையின் ட்விஸ்ட் வித்தியாசமாய், எதிர்பாராததாய் இருக்க வேண்டும்! இதுவும் சுஜாதா ஸ்டைல் தான்!

அலுவலகத்தில் ப்ராஜக்டிலிருந்து விடுவித்து விட்டார்கள். புதிதாய் ஒரு ப்ராஜக்ட் தேட வேண்டும். அது வரை பெஞ்சு தேய்க்கலாம். ஐ. டியில் இருப்பது போல் மற்ற நிறுவனங்களில் இந்த பெஞ்சு தேய்க்கும் பழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஐ டியில் பெஞ்சு தேய்ப்பது பிரசித்தி பெற்ற செயல்! பெஞ்சு தேய்ப்பது ஆரம்பத்தில் சுவாரஸ்யமாய் இருந்தாலும், போகப் போக போரடித்து விடும். எல்லோரும் ஏதோ ஒரு வேளையில் மும்முரமாய் இருக்க, நீங்கள் மட்டும் தனியாய் விடப்பட்ட தீவில் அலைவதை போல் அலைய வேண்டியது தான். சிறிது நாட்களுக்குப் பிறகு நமக்கே ஒரு பயம் வந்து விடும். அடித்துப் பிடித்து ஏதோ ஒரு மொக்கை ப்ராஜக்ட்டில் சேர்ந்து விடுவோம். படாத பாடு படுத்துவார்கள், என்னை விடுவித்து விடுங்கள் என்று சண்டை போட வேண்டியது [நான் அப்படி சண்டையிட்டு விடுவித்துக் கொள்ளவில்லை!], மறுபடியும் பெஞ்சு, மறுபடியும் இன்னொரு மொக்கை ப்ராஜக்ட்!

இதுவரை பெஞ்சு தேய்த்ததில் எனக்குப் புரிந்தது என்னவென்றால், மிக நல்ல ப்ராஜக்ட் என்று ஒன்று இல்லை. நீங்கள் செய்வதை உங்களுக்குப் பிடித்து செய்தால், அது நல்ல ப்ராஜக்ட்; இல்லையென்றால் எல்லாமே கெட்ட ப்ராஜக்ட் தான்!!

தீபாவளி என்றால் எப்படி தீபாவளி மலர் வருகிறதோ [நன்றி சுஜாதா], அதை போல் ஜனவரி வந்தால் புத்தகக் கண்காட்சி வரும்! இந்த முறை, 0.0000000000000000001% மட்டுமே படிக்கும் நான் 0.00000000000000000001% மட்டுமே படிக்கும் சில பேர்வழிகளை கூட்டி போய் இப்படி எல்லாம் சென்னையில் ஒரு கண்காட்சி நடக்கிறது என்று காட்ட சந்தர்ப்பம் கிடைத்தது மகிழ்ச்சி. சும்மா போய் பார்க்கலாம், ஒன்றும் வாங்க வேண்டாம் என்று வழக்கம் போலவே நினைத்துக் கொண்டு போய், கண்காட்சியில் நான் வாங்கிய, இல்லை... என்னை வாங்கிய புத்தகங்கள்.

கணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா - உயிர்மை 
தமிழ்செல்வன் சிறுகதைகள் - தமிழ் செல்வன் - பாரதி புத்தகாலயம்
ஆயிஷா - இரா. நடராஜன் - பாரதி புத்தகாலயம்
அறிவியல் களஞ்சியம் - ஆத்மா. கே. ரவி - பாரதி புத்தகாலயம்
ஓவியம் - கூறுகளும் கொள்கைகளும் - புகழேந்தி - அருவி
இவன் தான் பாலா - ரா. கண்ணன் - விகடன்
ஜென் கதைகள் - தமிழில்: சேஷையா ரவி - அகல்
கார்டூன் வரையலாம் - யு. மா. வாசுகி - யுரேகா புக்ஸ்
காவல் கோட்டம் - சு. வெங்கடேசன் - தமிழினி
அன்டன் செகோவ் சிறுகதைகள் - எம். எஸ். - பாதரசம்

கணையாழியின் கடைசி பக்கங்களில் வாத்தியார் மிளிர்கிறார். இரண்டு வரிகளில் இருநூறு விஷயங்களை போகிற போக்கில் தெளித்து விட்டுச் செல்கிறார். இதை வைத்து தான் மழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் என்று ஒரு வகைப்படுத்தலை நான் என் வலைப்பதிவில் ஆரம்பித்தேன்! ஆரம்பித்ததோடு சரி!..


சரி, சித்திரம் வரையத் தெரியாதவர்களுக்காக...ஒரு கருப்பு கட்டம் போட்டு அதை ஒரு ஹாஸ்ய படமாக எப்படி மாற்றுவது என்று கடைசி பக்கங்களில் வாத்தியார் சொல்கிறார். அவர் சொன்னதை போலவே நான் முயற்சித்த போது...









"ஏன்டா, இதுக்குல்லையா அல்வா விக்கிறாங்க?"

"இது தான் நீ சொன்ன ஈ பி ஆபிசா?"

"என்ன தேடுறீங்க?
சுவிட்சை தான்!
ச்சி..."

திருடன்
விட்டுச் சென்று விட்டான் 
ஜன்னலில் நிலவை

எஸ். ராமகிருஷ்ணன் ரஷ்ய கலாச்சார மையத்தில் மேற் சொன்ன கவிதையை மிகவும் சிலாகித்து கேட்டேன். அதே கவிதையை பற்றி 1966 ல் எழுதியிருக்கிறார் சுஜாதா. தமிழ் சினிமாவை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்கிறார், இன்னும் அறுபதுகளில் தான் இருக்கிறேன், 98 வரியின் தொகுப்பு இது! Long way to go...

அன்டன் செகோவ் என்று அடிக்கடி படித்திருக்கிறேன். பார்த்தவுடன் வாங்கிவிட்டேன். முதல் கதையே [பந்தயம்] பிரமாதம். 

"இவன் தான் பாலா" படித்தேன் மறுபடியும்! அவருடைய படங்களின் தன்மையின் காரணங்கள் புரிகிறது. பாலாவும் ரஜினியும் சினிமாவில் வராமல் இருந்திருந்தால், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு இன்று ஜெயிலில் தான் இருந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. 

காதலே நமக்கு வராது என்று நம்பிக்கையாய் இருந்த என் நண்பர் ஒருவருக்கு காதல் வந்து விட்டது! அவர் சொன்னதும் நான் சிந்திய பொன்மொழி கீழே!

காதலை நாம் தேர்ந்தெடுப்பதில்லை...
அது நம்மை தேர்ந்தெடுக்கிறது!

என்ன சரி தானே?
"தானே" புயல் தானே என்று சாதரணமாய் இருந்து விட முடியவில்லை. தமிழகத்தை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு போயிருக்கிறது. அதன் After Effects இன்னும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கடந்த வாரத்தில் சென்னையில் மொட்டை மாடியில் நின்றால் மேகம் தலைக்கு மிக அருகில் கடந்து சென்றது. "சூரியனே தேவை இல்லை வித்துடலாமா" என்ற சமீபத்திய ஹிட் பாடல் ஞாபகம் வந்தது. ஒரே கொடைக்கானல் எஃபக்ட். கிட்டத்தட்ட நாற்பது பேரை இது வரை தானே புயல் காவு வாங்கி இருக்கிறது. டீ கடைகளில் வால் பேப்பர் படித்தேன். "தானே புயலால் இத்தனை பேர் இறந்தார்கள், முழுப் பக்க படங்கள்" [கவனிக்க: முழுப் பக்க படங்கள்!] என்று சர்வ சாதரணமாய் போட்டு சூடாய் வியாபாரம் செய்கிறார்கள். இத்தனை காலங்கள் நாட்டில் வாழ்ந்தாலும் மனிதனுக்குள் இருக்கும் அந்த காட்டுமிராண்டித்தனம் குறையவில்லை என்று புரிந்தது. இந்தப் புயலை வைத்து டிவியினர் அடித்த கூத்து சொல்லி முடியாது. தானே புயல் கரையை கடக்கும் வரை அதோடு சேர்ந்தே இவர்களும் கடந்து கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே செய்தியாளர்களை நிறுத்தி வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு வீடு இடிந்து விழாதா? ஒரு மரம் வேரோடு சாயாதா? யாரையாவது கடல் கொண்டு போக்காதா? அதை நாம் அப்படியே படம் பிடித்து விட மாட்டோமா என்று அகோர பசியுடன் அலைந்தார்கள் என்றே நினைக்கிறேன். அங்கிருக்கும் மக்களிடம் மைக்கை கொடுத்து அரசாங்கத்தை திட்டச் சொல்கிறார்கள். அதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் புயலை விட பயங்கரமான அவர்களின் கிராபிக்ஸ் படங்கள் சிலிர்க்க வைத்தது.

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற சம்பிரதாயத்தின் பேரில் வீட்டிலேயே இருந்தாலும் பனிரெண்டு மணிக்கு மேல் தான் நேற்று தூங்கினேன். ஜப்பானில் பூகம்பமாம் என்ற ஒரு அதிர்ச்சி செய்தியுடன் என் மனைவி என்னை துயில் எழுப்பினாள். இன்னும் உலகத்தில் உள்ளவருக்கு வாழ்த்து சொல்லி முடியவில்லை, அதற்குள் ஒரு அழிவு! ஒரு பக்கம் இயற்கை வாரி வழங்குகிறது. மறுபக்கம் இரக்கமே இல்லாமல், நாள், நேரம் பார்க்காமல் வாரி எறிகிறது! சிறு பிள்ளைகள் அழுதால், பெரியவர்கள் கையில் பொம்மையை கொடுத்தும், வேறு திசையில் எதையோ காட்டியும் கவனத்தை கவர்வதை போல் நமக்கு நாமே புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லி கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. இயற்கை இதோடு தன் அழிவுகளை நிறுத்துமா என்று தெரியாது, அப்படி மேலும் ஏதாவது அழிவு ஏற்பட்டால் அதை பத்திரிகைகளில் கலர் படங்களாய் போடாமல், டிவியில் விளம்பர இடைவேளைக்கு இடையில் அந்த அழிவுகளை படம் பிடித்துக் கொண்டும் இராமல், நம்மை காத்துக் கொள்ளவும், பிறருக்கு உதவி செய்யவும் சக்தி வேண்டும் என்று வாழ்த்திக் கொள்ளலாம்!

நல்ல பதிவாய் இருக்கிறது[?], இன்னும் நிறைய வரும் என்று நினைக்காதீர்கள். இதோ முடித்து விடுவேன்.

முடித்து விட்டேன்!
கொல வெறி பாடல் உலகம் முழுதும் கொல வெறியை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இது வரை நானூறு விதமாய் அதை பாடி விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். கண்ணதாசன், வாலி போன்றோர்கள் பல பாடல்களை எழுதி தமிழகத்தில் காலத்துக்கும் அழியாத பாடலை படைத்தததை, தனுஷ் ஒரே பாட்டில் உலகம் முழுதுக்குமாய் படைத்து விட்டார். ரஜினியின் மருகமன் தனுஷ் என்பது போய், தனுஷின் மாமனார் ரஜினி என்று ஆகிவிட்டது...

மருமகன் மாமனார்(க்)கு ஆற்றும் உதவிஇவன் மாமன்
எந்நோற்றான் கொல்எனும் சொல்!!"

உலகமே சரியென்று ஒப்புக்கொள்ளும் விஷயத்தை நான் எதிர்க்கவில்லை என்றால் அப்புறம் நான் உண்மையான வலைப்பதிவானாய் இருக்க முடியாது! அதன் விதிகளுக்கேற்ப, இந்தப் பாடலில் பெண்களை திட்டுவதால், பசங்களுக்கு பிடிப்பதில் ஆச்சரியமில்லை, பெண்களுக்கு ஏன் பிடிக்கிறது என்று நானே என்னை கேட்டுக் கொண்டேன். ஏதோ பெண்கள் தான் பசங்களை ஏமாற்றி விடுவது போலும், பசங்க ஒண்ணுமே தெரியாத அப்பாவிகள் போலவும், பாட்டு வருகிறது. பசங்களுக்காவது காதல் தோல்வி அடைந்தால் தம்மு, தண்ணி இருக்கிறது...பெண்கள் கர்சீப் வைத்துக் கொண்டு கப்சிப் ஆகிவிடுகிறார்கள்! பெண்களை பூமிக்கு ஒப்பிட்டதில் தப்பே இல்லை. ரொம்ப பெரிய மனசு...நம்மை திட்டுகிறார்களே என்று கூட உணராமல் தினமும் முகப்புத்தகத்தில் இந்தப் பாட்டை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்! 

சரி, என்னை போன்ற பெண்ணியவாதி எங்கே இருக்க போகிறார்கள், வழக்கம் போல் நாமே இதற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். பெண்கள் பார்வையில் ஒரு கொல வெறி பாடல் சமூகத் தேவை என்று உணர்ந்தேன். இது வரை அப்படி ஒரு வெர்ஷன் வந்திருக்கிறதா என்று சில நண்பர்களை கேட்டேன், இல்லை என்றார்கள். [ஆனால், வந்திருக்கிறது!] சரி அப்படி ஒரு உன்னதமான பாடலை எழுதி இதை கல் வெட்டில் பொறித்தால் நாளை வரும் சந்ததிகள் இதை படித்து புரிந்து நடந்துப்பாங்கல்ல! பெண்களின் சமூகத்துக்காக இத்தனை பாடு படும் எனக்கு இதற்காகவாவது நோபல் பரிசு தர வேண்டும்! ஒரு அழகான பாடத் தெரிந்த பெண் [white skin gal :-)] இதை பாடி வீடியோ எடுக்க முன் வந்தால் சொல்லுங்க...நானும் தனுஷ் மாதிரி அந்த வீடியோல ஒரு பங்கெடுத்துக்குறேன். இனி பாட்டு...

Why this Kolaveri Kolaveri Kolaveri da..
Why this Kolaveri Kolaveri Kolaveri da..
Why this Kolaveri Kolaveri  a da..

distance la god-u god-u
god-u made-u boys-u
boys-u follow gals-u gals-u
gals life-u gone-u

black-u skinu boy-e boy-e
boy heartum black-u
eyes-u eyes-u meet-u meet-u
i am future mom-u

hey, notes eduthukko, appadiye kerchief eduthukko

super di..ready 1, 2, 3, 4

what a change over di!

ok di, now tune change-u

kanla glassu...

only english

eye la glassu 
glass la coolu
looku fulla terroru
this love-u
if it fails-u
looksu next figure-u

1. 
loveu loveu they will tellu
its all-u for sexu
sexu sexu that is nextu
always love is firstu!

2. 
love-u love-u they will tell-u
its all-u to cheat-u
how-u how-u we will tellu-u
that is boys-u thougt-u

1 வது வரிகளில் சொல்லியிருப்பது அப்பட்டமான பெண்ணின் மனநிலை. இருந்தாலும் "செக்ஸ்" என்றெல்லாம் வரக் கூடாது என்று நினைத்தால் 2 வது வரிகளை எடுத்துக் கொள்ளலாம்.


godu why you made bad boysu
where are good guys-u?
this songu for poor galsu
we have less choice-u

Why this Kolaveri Kolaveri Kolaveri da..
Why this Kolaveri Kolaveri Kolaveri da..
Why this Kolaveri Kolaveri  a da..


நன்றும் இன்றே செய் என்பது சான்றோர் வாக்கு! நாட்குறிப்புகளை எழுதலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். பார்க்கலாம்..இது எத்தனை நாட்கள் என்று...

நேற்று இரவு தாமதமாய் தூங்கியதால் இன்று காலை தாமதமாய் எழுந்தேன். அதற்காக எட்டு மணிக்கு எழுந்தேன் என்று என்னை தவறாய் நினைத்து விடாதீர்கள். பத்து பத்தரைக்கு தான் எழுந்தேன்! அலுவலகம் போகவில்லை. சில நாட்கள் விடுப்பில் இருந்ததால், டீமிலிருந்து விடுவித்து விட்டார்கள். அடுத்த ப்ராஜக்ட் கிடைக்கும் வரை கொஞ்சம் வெட்டி தான்! வீட்டிலிருந்தே மெயில் பார்த்தேன். மதியம் ஒரு மணி வாக்கில் அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்றேன். இப்படி வெட்டியாய் இருப்பதால், இதெல்லாம் சாத்தியமாகிறது! மகிழ்ச்சி! 

கி. ராஜநாராயணின் "கதவு" சிறுகதை படித்தேன். அருமை! அவரின் புகைப்படங்களுடன் கூடிய அவரின் சரிதம் ஒன்றை படித்தேன், நடிகர் சிவக்குமாரின் டைரிக் குறிப்புகளை படித்தேன் [இது நினைவுக்கு வர நான் படாத பாடு பட்டேன்!], அட இப்படி எல்லாம் எழுதினால் எழுத்தாளர் ஆகி விடலாம் போலிருக்கிறதே என்று ஒரு யோசனை முளைத்தது. [சிவக்குமார் பாவம், அவரை திட்டாதீர்கள்]

பிறகு....

.....

......

...... [பொறுங்கள், யோசிக்கிறேன்!]

மறந்து விட்டது! ஆ! ஐந்து மணிக்கு வீடு வந்தேன். தேநீர் குடித்தேன். ரசம் வைத்தேன்! [இன்றிலிருந்து நான் நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை தொடங்கி இருக்க வேண்டாம்!] சப்பென்று இருந்தது. கலைஞர் டீவியில் அருந்ததி பார்த்தேன். அனுஷ்கா இருக்கும் காலத்தில் நாம் இருப்பது நமக்கு எவ்வளவு பெருமை! திடீரென்று படம் வரைய வேண்டும் போலிருந்தது. கொஞ்சம் கிறுக்கினேன். பிகாசோ அளவுக்கு இல்லையென்றாலும் பிரதீப் அளவுக்கு வந்தது! என்ன ஒன்று பல்லைக் காட்டி சிரிக்கும் போட்ரேட்டுகள் வரைந்தால் பிசாசுகள் போல் ஆகி விடுகிறது! பசித்தது. நான் செய்த ரசத்தை நானே சாப்பிட்டேன். தாஸ்தாவெஸ்கியின் "குற்றமும் தண்டனையும்" டைட்டில் ஞாபகம் வந்தது!

கடைசியாய் என் மனைவி எடுத்த என்னுடைய அருமையான புகைப்படம் ஒன்றை முகப்புத்தகத்தில் ஓட்டினேன். இன்றைய நாள் இனிய நாள்!

பின் குறிப்பு:

இது எழுதி முடித்ததும் ஒன்று விளங்கியது. இரவில் நாட்குறிப்பு எழுத பகலில் நடந்தவைகளை எல்லாம் புரட்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது. அப்படி என் மூளையை வறுத்த எனக்கு இஷ்டமில்லை [பல்லிருக்குறவன் பக்கோடா சாப்பிடுவான்!] அதனால், இனிமேல் நாட்குறிப்புகள் எழுதுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்!! 
சாருவின் EXILE நாவல் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். காமராஜர் அரங்கம் விசாலமாய் ஜம்மென்று இருக்கிறது. என் டூ வீலரை பார்க் பண்ணும்போது பார்க்கிங் ஏரியாவை பார்த்தேன். அங்கே ஏற்கனவே பார்க் பண்ணியிருந்த இன்னோவா கார்கள் சின்ன நாய்க்குட்டி சைசில் தெரிகின்றன! அத்தனை விசாலமான ஏரியா. என் வீட்டு பார்க்கிங்கில் என் சான்ட்ரோவை நிறுத்துவது ஏதோ தண்ணி லாரியை நிறுத்துவது போலிருக்கிறது! காமராஜர் அரங்கம் கலைஞர் ஆட்சியில் கட்டப்படவில்லையோ என்னமோ, இன்னும் அம்மாவின் கண்களை உறுத்தாமல் அது காமராஜர் அரங்கமாகவே இருக்கிறது!

வழக்கம் போல் இந்திய நேரந்தவறாமை விதியின் படி விழா சற்று தாமதமாய் தொடங்கியது. நான் போய் அமர்ந்தவுடன், கொலைவெறி பாட்டு ஒலித்தது. பிறகு இச்சு இச்சு இச்சு குடு பாடல். விழாவில் யாரும் யாருக்கும் பொன்னாடை போர்த்தவில்லை. ஒரு கூட்டமே சென்று மேடையில் அமரவில்லை. மேடையில் இருப்பதால் பேசி முடித்ததும் தான் போகவேண்டும் என்று இல்லை என்று சாரு மேடையில் அமர்ந்திருப்பவருக்கு சொல்லி விட்டார். இப்படி ஒரு இலக்கிய விழாவுக்கான எந்த வித மேடைச் சம்பிரதாயமுமில்லாமல் இருந்தது மிகப் பெரிய ஆறுதலாயிருந்தது. விதிமுறைகளை உடைப்பதில் எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தான்!

விழாவை சாருவே தொகுத்து வழங்கினார். வாழ்த்துரை வழங்க வாலி அவர்களும், நாவல் திறனாய்வு செய்ய இந்திரா பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்தனர். இருவரையும் சாரு எந்த வித முன் பின் அணிந்துரைகள் சேர்க்காமல் வெறும் அவர்களின் பெயரை சொல்லியே பேசியது வித்தியாசமாய் இருந்தது. அப்படி எந்த ஒரு மேடை அலங்காரமும் இல்லாமல் அவர் சாதரணமாய் பேசியது நன்றாகவே இருந்தது. ஆனால் அவரே சொன்னது போல், அவருக்கு சரியாய், கோர்வையாய் பேச வரவில்லை. அவர் ஒரு பேச்சாளர் இல்லை என்பதால் மன்னிக்கலாம்! வாலி வாழ்த்துரை வழங்கினார். எண்பது வயதிலும் அவரின் குரல் வளம் அருமை! இதை ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால் அதே அளவு வயதுள்ள இந்திரா பேசும்போது எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு பேசியது போல் குளறிப் போயிருந்தது. ஆனால் வாலியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவரின் பாடல் வரிகள் போல் இளமையாய் இருந்தது. வாலி சுவாரஸ்யமான பேச்சாளர். அபாரமான ஞாபக சக்தி அவருக்கு. அவரின் வாழ்க்கையில் நடந்த இரு நிகழ்ச்சிகளை சொன்னால் போதும், அந்த விழா சூடு பிடித்து விடும். சாருவை பற்றி நிறைய விமர்சனங்கள் இருப்பதை பற்றி பேசும்போது எவன் ஒருவன் விமர்சனத்துக்கு உள்ளாகிறானோ, அவனே அறிவாளி என்றார். மரவட்டையையும், மண்புழுவையும் எவனும் விமர்சிக்க மாட்டான். நல்ல பாம்பை தான் விமர்சிப்பான் என்றார்!

இந்திரா பார்த்தசாரதி பேசும்போது தனக்கு இத்தனை பெரிய கூட்டத்தில் பேசி பழக்கமில்லை. எப்போதும் தான் பேசும் இலக்கிய விழாக்களில் இருபது, முப்பது பேர் தான் இருப்பார்கள் என்றார். நாவலைப் பற்றி சொல்லும்போது சுருக்கமாய் இது ஒரு சாப்ஃட் போர்ன் என்று சொல்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை. இது ஹாட் போர்ன் என்றார். படிக்க இஷ்டமிருந்தால் படியுங்கள், இல்லையென்றால் விட்டு விடுங்கள் என்றார். 

மதன் சிறிது நேரம் பேசினாலும் மிக நன்றாய் பேசினார். இப்படி ஒரு நாவல் வெளியீட்டு விழாவுக்கு காமராஜர் அரங்கத்தில் வைக்க ஒரு தைரியம் வேண்டும் என்றார். இப்படிப் பட்ட நாவல்கள் பத்திரிக்கையில் தொடராக வருவது சாத்தியமில்லை. ஏனென்றால் ரசனை அல்லாத, தைரியம் அல்லாதவர்களே எந்த ஒரு துறையிலும் உயர்பதவியில் இருக்கிறார்கள். அவர்களால் இத்தகைய நாவல்களை எல்லாம் கொண்டு வர முடியாது என்றார். இந்த நாவலில் ஒரு இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் இருப்பதாக சொன்னார். 

இவர்களை தவிர வெற்றி மாறன், ஞானி போன்றோரும் வந்திருந்தார்கள். சாரு சிறப்புரை என்ற பெயரில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னார்.  பெரும்பாலும் அவரின் வலைதளத்தில் இருக்கும் சுய புலம்பல்களாய் இருந்தது. ஒன்று கவனித்தேன். சாருவை யார் புகழ்கிறார்களோ அவர்களை தான் அவர் புகழ்வார் போலிருக்கிறது! வாலி ஒரு முறை அவரைப் பற்றி விகடனில் எழுதியவுடன் அவரிடம் நட்பு வைத்துக் கொண்டார். ஆனால் அவரை அறிமுகம் செய்கிறேன் என்று அவர் பேசியதிலிருந்தே, வாலியை பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. இச்சு இச்சு குடு படலை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். ஆனால் வாலியின் வேறு எந்த நல்ல பாடலையும் அவரால் மேற்கோள் காட்ட முடியவில்லை. தளபதியில் எதோ ஒரு பாட்டு என்று பாதியில் விட்டு விட்டார். ஞானியை அவ்வளவு திட்டியவர், இன்று அவர் வந்தார் என்றதும் தனக்கும் அவருக்கும் கருத்து முரண்பாடு இருந்தது உண்மை, ஆனால் அவரை போல் எழுத்தாளர் இல்லை என்று பேசுகிறார். ஜெயமோகன் வந்திருந்தால் அவரையும் பாராட்டி இருப்பாரோ என்று தோன்றியது! 

என்னை பொறுத்தவரை சாரு உடனடியாய் செய்ய வேண்டியது, தான் ஐரோப்பா சென்றது பற்றி, தமிழ்நாட்டில் தமிழ் எழுத்தாளனுக்கு மரியாதை இல்லை என்பது பற்றி, கேரளாவில் அவரை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பது பற்றி, உத்தம தமிழ் எழுத்தாளனைப் பற்றி, சினிமாவில் இவரை யாருமே கண்டு கொள்ளாதது பற்றி இவர் பேசாமல் இருப்பது நலம். இதை செய்தால் போதும் இவர் உலகம் போற்றும் பெரிய எழுத்தாளர் ஆகி விடுவார் என்று எனக்குத் தோன்றுகிறது.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். இரு வாரங்களுக்கு முன் நடந்த எஸ். ரா வின் இலக்கிய சொற்பொழிவுக்கு நான் சென்றேன் என்று உங்களுக்குத் தெரியும். ஒரு நாள், சற்று தாமதமாய் சென்றேன். கடைசி வரிசையில் ஒரு மனிதரின் பக்கத்தில் ஒரு இருக்கை காலியாய் இருந்தது. அமரலாமா என்று கேட்டேன். அவர் தலையாட்டினார். பார்த்தால் அவர் சாரு! அட, இவர் பக்கத்திலா நாம் அமரப் போகிறோம் என்று அமர்ந்தேன். நான் ஒரு வெள்ளை நிற குர்தா அணிந்திருந்தேன். [இலக்கிய விழா என்பதற்காக அல்ல, வெயில் காலத்தில் அதை அவ்வளவாய் போட முடிவதில்லை, அதனால் மழை காலத்தில் அந்த உடையை தேர்ந்தெடுத்தேன்] அவர் என்னை பார்த்தார் என்று நினைக்கிறேன். எஸ். ரா. பேச ஆரம்பித்து விட்டதால் நான் இவரிடம் எதுவும் பேசாமல் அவரின் பேச்சை கேட்க ஆரம்பித்தேன். அன்று விழா முடிந்ததும் இதைப் பற்றி என் மனைவியிடம் சொன்னேன். நீங்கள் அவரிடம் பேசவில்லையா என்று கேட்டாள்! அவரிடம் நான் என்ன பேசினாலும், நாளை வலைதளத்தில் குர்தா அணிந்து கொண்டு ஒருத்தன் வந்தான், என்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டான் என்று பதிவிடுவார். இது எனக்குத் தேவையா என்றேன். இன்று விழாவில் திடீரென்று குர்தா அணிந்து கொண்டு ஒருவன் ரஷ்ய கலாச்சார மையத்திற்கு வந்தார், அது அவருக்கு மிகவும் ஆபாசமாக இருந்தது. ஏன் இந்த உடை என்று கேட்டேன், அதற்கு இலக்கிய விழா என்றார்கள், அதனால் அப்படி வந்தேன் என்று பதில் சொன்னார் என்று கூறி கலாய்த்தார். அன்று அப்படி இன்னொரு ஆள் வந்திருந்தாரா, அல்லது என்னை நினைத்து மற்றதெல்லாம் அவரே இட்டுக் கட்டி சொன்னாரா தெரியவில்லை. ஆஹா, நாம் எதுவுமே பேசாமலேயே இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்தேன்!!


கடந்த ஒரு வாரமாக சென்னையில் மழையுடன் உலக இலக்கியத்திலும் நனைந்தேன். ரஷ்யன் கல்சுரல் சென்டரும், ஜெயகாந்தன்/புஷ்கின் மற்றும் உயிர்மை இணைந்து நடத்திய இலக்கிய கொண்டாட்டத்தை பற்றி சொல்கிறேன். கடந்த 21 ம் தேதி தொடங்கி நேற்று வரை வெகு விமர்சையாக, அரங்கு நிறைந்த நிகழ்வாகவும் மிக நெகிழ்வாகவும் நடந்தது. 7 நாட்களில் 7 சிறந்த உலக இலக்கியங்களை நாளொன்ராக அறிமுகம் செய்து வைத்து அதைப் பற்றி மிக விரிவாக எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார்கள்.


1. லியோ டால்ஸ்டாயின் அன்னா கரனீனா

2. தாச்தாவேய்ச்கியின் குற்றமும் தண்டனையும்

3. பாஷோவின் ஜென் கவிதைகள்

4. ஷேக்ஸ்பியரின் மேக்பெத்

5. ஹோமரின் இலியட்

6. 1001 அரேபிய இரவுகள்

7. ஹெமிங்வேயின் கிழவனும் கடலும்


முதலில் இப்படி ஒரு நிகழ்வை பற்றி அவரின் வலைதளத்தில் படித்ததும் என்னைப் போன்ற இலக்கிய உபாசகனுக்கு [அல்லது அப்படி சொல்லிக் கொண்டு திரிகிறவனுக்கு] ஒரு நல்ல அறிமுக நிகழ்ச்சியே இருக்கும் என்று பட்டது. மேலும் இது ஒரு புது வித அனுபவமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நிகழ்ச்சி சரியாய் திங்கள் [கவனிக்க MONDAY] மாலை 6 மணிக்குத் தொடங்கி ஞாயிறு வரை நீள்கிறது. ஏன் இந்த மாதிரி நிகழ்வை வார இறுதிகளில் வைக்காமல் வார நாட்களில், சென்னையின் மையத்தில், அதுவும் 6 மணிக்குத் தொடங்குகிறார்கள்? எத்தனை பேர் அலுவலகத்தை முடித்து இதில் கலந்து கொள்ள முடியும் என்று ஒரு வித எரிச்சல் வந்தது. அதிலும், என்னை போல் ஐ. டி யில் வேலை செய்பவனுக்கு வார நாட்களில் மாலை 6 மணி அலுவலகத்தை விட்டு வெளியே வருவது என்பது கனவில் தான் நடக்கும். அப்படியே நடந்தாலும் நான் வேலை பார்க்கும் இடமான தாம்பரம் சாநிடோரியதிலிருந்து ஆழ்வார்பேட்டை செல்வதற்கு நான் திங்கள் கிளம்பினால் ஞாயிறு வந்து விடும். சரி, ஏதோ முடிந்தவரை முயற்ச்சிப்போம் என்று நினைத்தேன். நல்ல வேளையாக அதிர்ஷ்டம் என் பக்கம் தான். ஏழு நாட்களில் ஒரு நாள் தவிர்த்து அத்தனை நாட்களிலும் அடாத மழையிலும் விடாது சென்று விட்டேன். யாருமே இருக்க மாட்டார்கள் என்று நான், ஏன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களும் நினைத்ததை உடைத்து எல்லா நாளும் அரங்கு நிறைந்த நிகழ்வாக இருந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நிகழ்வை பற்றி நான் இங்கு அப்படியே சொல்ல போவதில்லை, அது முடியாது. நாளுக்கு இரண்டு மணி நேரம் என்று இந்த ஏழு நாட்களுக்கு பதினான்கு மணி நேரம் குறையாமல் பேசி இருக்கிறார் எஸ். ரா. இப்போது தான் அவர் எப்படி இவ்வளவு எழுதுகிறார் என்று எனக்குப் புரிகிறது. மனிதரிடம் பொங்கி வழிகிறது. அவரின் சொற்பொழிவை புத்தக வடிவமாகவும், சீடி, டீவிடீ வடிவமாகவும் கொண்டு வர போவதாக சொன்னார்கள்.

தினமும் நிகழ்ச்சி முடிந்ததும் பதிவிட்டிருந்தால் நன்றாய் இருந்திருக்கும். அனைத்தையும் சேர்த்து நினைவில் உள்ளவரை எழுதுகிறேன்.

நிகழ்ச்சியில் கிடைத்த சில அறிய தகவல்கள்/முத்துக்கள்: [என் நினைவுப் பெட்டகத்திலிருந்து]

1. இந்தியாவில் ஆங்கில மோகம் இருப்பது போல் அப்போது ரஷ்யாவில் ஃபிரெஞ்ச் மோகம் இருந்தது. ஃபிரெஞ்ச் கலாச்சாரம் நாகரீகம் பிரதானப்படுத்தப்பட்டது.

2. ஆண் வீட்டை கட்டுகிறான். பெண் அதற்கு உயிர் தருகிறாள் என்று ஒரு பழமொழி இருக்கிறது.

3. உங்கள் அறை எப்போதும் ஒரு வீடாகாது. அறையிலிருந்து வீட்டுக்கு எப்போது போகலாம் என்று தான் எல்லோரும் நினைக்கிறோம். வீட்டுக்கு வந்ததும், நமக்கான அறையை தேடி ஒடுங்கி கொள்கிறோம்.

4. அன்னா கடைசியில் ஒரு நீச்சல் குளத்தில் குதிப்பதை போல் ரயிலின் முன் விழுகிறாள்.

5. நான் உங்களை இங்கு பார்த்துக் கொண்டிருப்பதை போல் நீங்கள் இல்லாதிருப்பதை உங்கள் வீட்டில் யாரோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பை போல் இல்லாதிருப்பதையும் உணர முடிகிறது.

6. ஜென் கவிதைகளின் மரபு அதில் ஒரு அக விழிப்பு/தரிசனம் இருக்க வேண்டும்.

7. ஒரு மரமானது ஒரு மெல்லிய பூவினை கொண்டுள்ள அதே சமயத்தில் அதன் வேர்கள் பாறையையும் உடைக்கும் தன்மை கொண்டுள்ளது.

நிகழ்வில் படிக்கப்பட்ட சில ஜென் கவிதைகள்:


திருடன்

விட்டுச் சென்றிருக்கிறான் -

ஜன்னலிலுள்ள

நிலவை


இரண்டு குமிழிகள்

இணையும் தருணத்தில்

காணாமல் போகின்றன

இரண்டுமே, மலர்கிறது

ஒரு தாமரை


திமிங்கலம்!

ஆழ ஆழ அது

செல்கையில்

உயர உயர எழுகிறது

அதன் வால்!


கோவில் மனிமேல்

ஓய்வெடுக்கும்

வண்ணத்துப் பூச்சிக்கு

நல்ல உறக்கம் -

மணி ஒலிக்கும் வரை.


உதிர்ந்த மலர்

திரும்புகிறதோ கிளைக்கு?

அது, வண்ணத்துப் பூச்சி


மட்சுஷிமா -

ஆ, மட்சுஷிமா!

மட்சுஷிமா!

மட்சுஷிமா என்பது ஜப்பானில் சமுத்திரக் கரையோரமுள்ள, மலைகளும், நதிகளும், மரங்களும், மலர்களும் உள்ள ஓர் இடம். அங்கு நின்று கொண்டு பாஷோ இந்த ஜென் கவிதையை பாடுகிறார். முதலில் அந்த இடத்தை பார்த்து பிரமித்து அதன் பெயர் சொல்கிறார். இப்போது அந்த இடம் அவர் கண்களில் நிறைந்து விட்டது. அதன் ஆச்சர்யத்தை பாடுகிறார். இப்போது அவருக்குள்ளும் இன்னொரு மாட்சுஷிமா!

சும்மா உட்கார்ந்

திருக்கிறது அமைதியாய்.

புல்

தானே வளர்கிறது

வசந்தம் வருகிறது


ஒரு வெட்டுக் கிளி இறகசைக்கிறது

ஒரு மலையின் மௌனம் கலைகிறது


ஒரு ஜென் கதை:

குருவே, இந்த வானம், பூமி, கடல், அருவி இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?

"உன் வாயிலிருந்து வந்தன! வானம், பூமி எல்லாம் சொற்கள், அது அவைகள் அல்ல"

1. ஜப்பானில் இன்றும் ஒருவிதமான யானை பொம்மை பிரசித்தம். ஏனென்றால் ஜப்பானில் அப்போது யானைகள் இல்லை. யானையை பார்க்காதவன் ஒருவன் வடித்த பொம்மை அது.

2. எழுதும்போது ஏதேனும் சொற்கள் கிடைக்காமல் நீங்கள் தவித்தால் உங்கள் பால்ய காலத்திற்குச் செல்லுங்கள், அங்கு உங்களுக்கு அது நிச்சயமாய் கிடைக்கும்.

3. சொற்கூட்டங்கள் மேகத்தை போல என்னை கடந்து செல்கின்றன, அதிலிருந்து எனக்குத் தேவையான சொல்லை நான் எடுத்துக் கொள்கிறேன் - தேவதச்சன்

4. ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்திற்காக இரண்டாயிரம் சொச்ச வார்த்தைகளை கொடுத்திருக்கிறார். Advertisement, Accomodation போன்றவை அவைகளுள் அடக்கம்.

5. ஒரு எழுத்தாளரிடம் உலகத்தில் ஒருவர் மட்டும் உயிருடன் இருக்கலாம் என்றால் யாரை சொல்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அவர் "ஷேக்ஸ்பியர்", ஏனென்றால் அவர் ஒருவர் இருந்தால் அவரே மற்ற அனைவரையும் கதாப்பாத்திரங்களாக உருவாக்கி விடுவார்! என்று சொன்னார்.

6. ஷேக்ஸ்பியர் வரலாறு கூறாமல் ஒரு விஷயத்தையும் சொல்வதில்லை.

7. ஷேக்ஸ்பியரின் மேக்பெத், அதை தழுவி ரோமன் போலன்ஸ்கி, விஷால் பரத்வாஜ் [மக்பூல்] போன்றோர்களால் திரைப்படமாய் எடுக்கப் பட்டது.

8. ஹோமரின் இலியட் நம் மகாபாரதம்/இராமாயணத்தை ஒத்திருக்கிறது, அதன் சம்பவங்கள் உட்பட...

9. மகாபாரத்ததிலிருந்து எந்த கதாபாத்திரத்தை எடுக்க முடியும், எதை எடுக்க முடியாது? என்ற ஒரு கேள்வி நான் எதிர்கொண்ட கேள்விகளில் மிகச் சிறந்த கேள்வியாகும். அதற்கு நான் சொன்ன பதில், மகாபாரதத்திலிருந்து பீஷ்மரை எடுக்க முடியாது. பாஞ்சாலியை எடுத்தாலும் கதைக்கு எந்த பங்கமும் வராது! பாஞ்சாலி இல்லையென்றாலும் பாரதம் இருக்கும். பாஞ்சாலி வெறும் பகடைக் காய் தான்.

10. "சப்தமே இல்லாத நடை என்றால் அது சகுனி தான்" என்பார் திருதிராஷ்ட்ரர்!

11. உங்களுக்கு வேண்டியது கிடைத்து விட்டால் எதிரியின் கூடாரத்தில் கூட நீங்கள் நிம்மதியாய் உறங்குவீர்கள், ப்ரியம் அகிலஸின் கூடாரத்தில் உறங்குவதை போல...

12. இலியட் அகிலஸின் புகழ் பாடுகிறது. ஒடிஸ்ஸி யுலிசிஸின் புகழ் பாடுகிறது.

13. அலிபாபாவும், அலாவுதீனும் எல்லோரும் கேட்டும், படித்தும் இருக்கிறோம், அனால் அவைகள் 1001 இரவுகள் கதைகளில் வருகிறது என்பது நமக்குத் தெரிவதில்லை.

14. ஷெஹெரஷா, ராஜா சாரியாருக்கு 1001 இரவுகளை கதை சொல்லியே நகர்த்துகிறாள். அதன் மூலம் சாவை தள்ளிப் போடுகிறாள். கதை சொல்லி நாமும் சாவைத் தள்ளிப் போடுவோம்.

15. கடவுள் மனிதனை படைத்தான், பின்பு மனிதன் கடவுளை படைத்தான்! - புதுமைப்பித்தன்

16. Army is Men without Women - Hemingway

17. ஹெமிங்க்வே ஒரு மிகச் சிறந்த வேட்டைக்காரர் [சிங்கம் ஒன்றை தனி ஆளாய் வேட்டையாடியவர்], உல்லாசி, சல்லாபி, பெரிய குடிகாரர், ஊர் சுற்றி, வாழ்வை கொண்டாடியவர். 127 முறை விபத்தில் அகப்பட்டு பிழைத்தவர்.

18. காளைச் சண்டை பார்க்கச் சென்ற ஹெமிங்க்வே அங்கு ஒருவன் நாள் முழுதும் ஓவியம் தீட்டிக் கொண்டிருப்பதை பார்த்து, அவரின் ஓவியத்தை வாங்கிப் பார்த்தார். அந்தக் காளையின் மூர்க்கம்/வலிமை அத்தனையும் உன் கோடுகளில் இருக்கிறது! நீ யார் என்று கேட்டார், அதற்கு அவர் நான் தான் பாப்லோ பிகாசோ என்றார்.

19. கிழவனும் கடலும் நாவல் வெறும் நூறு பக்கங்களே கொண்ட நோபல் பரிசு பெற்ற நாவல். அதில் இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள் தான் வருகின்றன. பெண்களே இல்லாத நாவல் இது.

20. வெற்றி தோல்வி என்பதை வெற்றி, சிறிய வெற்றி என்று வைத்துக் கொள்ளலாம். விளையாட்டில் கலந்து கொள்ளாதவர்களே தோற்றவர்கள்!

இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். எனக்கு நினைவு தெரிந்து என் கூடவே ஒட்டி உறவாடி, கட்டி உருண்டு சண்டையிட்டு, சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் ஒருவருக்கொருவர் கோள் மூட்டிக் கொண்டு, போட்டியிட்டுக் கொண்டு திரிந்த என் தம்பி, தந்தை ஆன நாள்! உருவத்தில் சிறிதாய் இருந்தாலும் நான் பெரிய்ய அப்பா ஆன நாள்! ஆம், எனக்கொரு மகள் பிறந்து விட்டாள்!

பெரியப்பா என்பது அண்ணன் ஆவது போலோ, மாமா ஆவது போலோ சாதாரணமானது அல்ல! அது இளம் வயதிலேயே எப்படியோ, யார் மூலமாகவோ கிடைத்து விடுகிறது. ஆனால் பெரியப்பா என்று சொல்லும்போதே ஒரு வித மரியாதை வந்து விடுகிறது! அப்பா என்ற சொல்லோடு ஒரு வித பொறுப்பு வந்து விடுகிறது.  உலகத்தில் ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் ஒவ்வொரு மனிதனின் நிலையை, அவனின் அடையாளத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. ஒரு கணவன் மனைவி தாய், தந்தை ஆகிறார்கள். ஒரு தாய் தந்தை தாத்தா, பாட்டி ஆகிறார்கள். இப்படி எத்தனையோ பேரின் அடையாளங்களை மாற்றி விட்டு அதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் தன் சிவந்த பிஞ்சு கைகளை மடக்கி சமர்த்தாய் தூங்குகிறது குழந்தை!

குழந்தை பிறப்பில் ஆண்களின் பங்கில் எனக்கு உடன்பாடு கிடையாது. வெறும் சுகத்தை மட்டும் ஆணுக்கு கொடுத்து விட்டு அத்தனை கஷ்டங்களையும் பெண்ணுக்கு கொடுத்ததில் என்ன நியாயம். ஐந்து மாதம் அவளிடம் ஐந்து மாதம் அவனிடம் என்றால் எத்தனை ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முன் வருவார்கள் என்று யோசிக்கிறேன்! ஆஹா, அப்படி நடந்தால் மக்கள் தொகை பிரச்சனையே கிடையாது! விஞ்ஞானிகள் யோசிக்க வேண்டும்! அதை விட கொடுமை, குழந்தை பெற்றுக் கொள்ள பெண்ணை தயார்படுத்துகிறேன் என்று அவர்களின் பதினோரு, பனிரெண்டு வயதிலிருந்து மாதவிடாய் தொல்லை, அது அவளின் ஐம்பது வயது வரை நீள்கிறது! என்ன அக்கிரமம்? இதற்கு பதிலாக, ஒரு பெண் திருமணமாகி உறவு கொள்ளத் தொடங்கியதும் அல்லது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பியதும், உடலில் சில ஹார்மோன்கள் உயிர்ப்பித்து கருவை உண்டாக்கியிருக்கலாம்! குழந்தைகள் பெற்றதும், அந்த நினைவு மங்கி விடும், அப்போது அந்த ஹார்மோன்கள் ஒதுங்கி கொள்ளலாம்!  கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் தான் பெண்ணை இப்படி படைத்தார் என்றால், அவர் நிச்சயம் ஆணாய் தான் இருக்க வேண்டும் :-)

பேச்சு வேறு எங்கோ சென்று விட்டது! என் தம்பி அமெரிக்காவில் குழந்தை பெற்றுள்ளான். ஆஸ்பத்திரியில் சேர்ததிலிருந்து நாங்கள் ஸ்கைப்பில் ஆன்லைனில் இருந்தோம். கிரிக்கெட் கமெண்ட்ரி சொல்வது போல் அங்கு நடப்பதை எல்லாம் எங்களுக்கு அவன் மெசெஜித்து கொண்டிருந்தான். இரவு ஒரு மணிக்கு மேல் தூக்கம் வந்து தூங்கி விட்டோம். காலையில் எழுந்து கணினியை திறந்தால், Where are you guys? Its baby time என்று அவன் ஆஃப்லைன் மெசேஜ் இருந்தது. அதோடு, Now we are going to push...push...push....baby is going to come out...push...oh! இந்திய நேரப்படி சரியாய் 6:36 மணிக்கு baby has come out என்று மெசஜ். ஆஹா! பிறகு அவனை தொடர்பு கொண்டு பேசினோம். உடனே ஒரு படம் எடுத்து அனுப்பி விட்டான். முன்பெல்லாம் படம் எடுத்தால் ஆயுள் குறைந்து விடும் என்று நம்பினார்கள். இப்போது குழந்தை பூமியில் விழுந்ததும் அடுத்தது போட்டோவில் தான் விழுகிறது :-)  எங்கோ கடல் கடந்து பிறந்த ஒரு குழந்தையை சில நிமிஷங்களில் பார்க்க முடிகிறது என்று நினைக்கும்போது உடல் சிலிர்த்தது.

உலகின் எந்த ஒரு நல்லது கெட்டது தெரியாமல், சுகமாய் உறங்கி கொண்டிருக்கும் குழந்தையை சிறிது நேரம் வீடியோவில் பார்த்தோம். அத்தனை நெகிழ்ச்சியான தருணம் அது! டெக்சாசில் இருக்கும் தன்னை பெரியப்பா சென்னையிலிருந்து பார்க்கிறார் என்பது தெரியாமல் குழந்தை உறங்கி கொண்டிருந்தது. ஒரு குழந்தையை பார்த்ததும் யாரும் அதை மட்டும் பார்ப்பதில்லை. அந்தக் குழந்தையில் யாரெல்லாம் தெரிகிறார்கள் என்று தான் பார்க்கிறோம். அம்மா மாதிரியா, அப்பா மாதிரியா, பாட்டி மாதிரியா, தாத்தா மாதிரியா...அது பிறந்தவுடன் தெரிவது கடினம் என்றாலும் அதை பற்றி பேசி விடுவதில் எல்லோருக்கும் ஒரு ஆர்வம். இவையெல்லாம் கேட்டுக்கொண்டே உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு என்ன தோன்றும்? கருவறையில் கிடைத்த அல்லது பழக்கப்பட்ட சௌரியங்கள் குறைந்து போயிருக்குமோ? அதனால் தான் அது அடிக்கடி அழுகிறதோ?  இத்தனை காலம் நம்மை சுற்றி ஈரமாய் இருந்ததே, இப்போது ஏன் காய்ந்து போயிருக்கிறது என்று நினைக்குமா?

கையை நீட்டி கன்னம் தொடும் போது தான் நாம் கணினியின் வழியே பார்க்கிறோம் என்ற நினைப்பு வருகிறது. ம்ம்ம்...ஒருவேளை வருங்காலத்தில் நான் என் கொள்ளுப் பேரன்களை இப்படிப் பார்க்கும்போது மானிட்டரின் ஊடே அவர்களின் கன்னத்தை கிள்ள முடியுமோ என்னமோ?

தினமும் அதிகாலை எட்டு மணிக்கெல்லாம் எழுந்து விடும் பழக்கம் எனக்கு! திடீரென்று நேற்று ஒரு ஞானோதயம். நாளைக்கு ஐந்து மணிக்கு எழுந்து பார்த்தால் என்ன? என்று! எழுந்து என்ன செய்வது என்று தெரியவில்லை. எழுந்து தான் பார்ப்போமே என்று நினைத்துக் கொண்டு நாலரை மணிக்கு அலாரம் வைத்தேன். அப்போது தானே அதை Snooze செய்து செய்து ஒரு ஐந்து மணிக்கு எழுவதற்கு வசதியாய் இருக்கும். அதற்கெல்லாம் அவசியம் இல்லாமல், கொசு வலைக்குள்ளே வசதியாய் கடித்துக் கொண்டிருந்த கொசுக்கள் நாலே முக்காலுக்கு எல்லாம் குத்தி குத்தி எழுப்பி விட்டன. எழுந்து பல் விளக்கி நானே சமையல் அறைக்குள் சென்று தட்டுத்தடுமாறி விளக்கை போட்டு [விளக்கை போட்டதும் பார்வை போய் விட்டது போல் அலறி ஓடுகிறது கரப்பான்!] எங்கே எது என்று தேடி ஒரு காப்பி போட்டு சாப்பிட்டேன். சக்கரை போட்டு கலக்கிய கலக்கில் சூடு கொஞ்சம் ஆறி இருந்தது. இருந்தாலும் சுவை பரவாயில்லை.

காப்பியை குடித்து விட்டு, அதற்கு நேர் எதிராக ஒரு சட்டையை மாட்டிக் கொண்டு, அதாங்க டீ சர்ட்! [ஸ்வபா...] மாட்டிக் கொண்டு வாக்கிங் கிளம்பினேன். இன்னும் இருட்டாய் இருந்தது. மெதுவாய் இடப்பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.காகங்கள் ஒன்றிரண்டு கரைந்து கொண்டிருந்தன. பகல் பொழுதில் நாடு ரோட்டில் நின்று அழிச்சாட்டியம் செய்யும் மாடுகள், இந்த சமயத்தில் அடைபட்ட கடையின் வாசலில் ஏகாந்தமாய் அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்றிரண்டு நாய்கள் "இவன் யாருடா புதுசா" என்பது போல் பார்க்கின்றன. மடிப்பாக்கத்து நாய்கள் பெங்களூர் நாய்கள் போல் அல்ல. மிகவும் சாதுவானவை. மற்ற ஏரியா நாய்களை பார்த்து தான் குறைக்கிறதே அன்றி மனிதர்களை பார்த்தல்ல! திடீரென்று இவைகள் எல்லாம் எப்போது தூங்கும் என்று ஒரு கேள்வி எழுந்தது! லேசாய் பனி மூட்டமாய் இருந்தது. வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் கண்ணாடிகளில் பனி உறைந்து போயிருந்தது. அதைப் பார்க்கும்போது தில்லியில் இருந்த நாட்கள் ஞாபகம் வந்தது.  மணி ஒரு ஐந்தே கால் இருக்கும். காலை நாலரையிலிருந்து ஐந்தரை வரை பிரம்ம முகூர்த்தம் என்கிறார்கள். கரை படியாத காற்று. அதிக வாகன இரைச்சல் இல்லையென்றாலும், அந்த நேரத்திலும் ஒரு கால் டாக்சியோ, இரு சக்கர வாகனமோ, பால் வண்டியோ, செங்கல் லாரியோ அம்பேத்கர் சாலையை கடந்து கொண்டு தான் இருக்கிறது!  பக்கத்து தெருவில் வீடு கட்ட செங்கல் இறங்கிக் கொண்டிருந்த லாரியிலிருந்து "கடவுள் அமைத்து வைத்த மேடை" பாடல் கேட்கிறது! அதை கடந்து நடந்தேன். சாக்கடையில் கழிவு நீர் ஓடும் சத்தம் காட்டில் ஒரு ஓடையை கடக்கும் அனுபவத்தை கொடுக்கிறது! 

விசேஷத்திற்கு ஆடர் எடுத்து ரெடிமேட் சாப்பாடு செய்பவர்கள் நால்வர் எதையோ கிண்டி கொண்டிருந்தார்கள். மிச்ச மீதி ஏதாவது தேறாதா என்று இரண்டு நாய்கள் காத்திருக்கின்றன. இருள் கொடுத்த சுதந்திரத்திலும், ஆள் நடமாட்டம் கம்மி என்பதாலும் முந்தானை ஒதுங்க குனிந்து கூட்டிப் பெருக்கி வாசல் மொழுகுகிறாள் ஒருத்தி. அவள் வயதானவள் தான் என்றாலும், என்னைப் பார்த்ததும் அவள் கை ஆடையை சரிசெய்கிறது! Intuition! அவளை கடந்ததும், ஹெல்மட் மாட்டிக் கொண்டு வண்டியை எடுத்து வெளியே வரும் கணவனுக்கு கேட்டை திறந்து விடுகிறாள் ஒரு இல்லத்தரசி. என் இடத்தில் ஒரு பொறுக்கியோ, கொள்ளைக்காரனோ இருந்திருந்தால் அவனுக்கு இந்த சந்தர்ப்பம் வசதியாய் அமைந்திருக்கும் என்று ஏனோ பட்டது! சிறிது தூரம் சென்று திரும்பி வந்த வழியே நடந்தேன். மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். அம்பேத்கர் சாலை விசாலமாய் தான் இருக்கிறது.  சாலையில் விளக்குகள் ஜோராய் எரிகிறது! மரங்களே இல்லாத வெறுமை! வெளியூரிலிருந்து வருபவர்கள், வெளியூர் செல்வபர்கள் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக என்னை கடந்து செல்கிறார்கள். நகரத்தின் அடுத்த பக்கத்தில் வேலைக்கோ, படிக்கவோ செல்பவர்கள் கிளம்பிவிட்டார்கள். பால் பாக்கெட்டுகளை ஒரு கூட்டம் அடுக்கிக் கொண்டிருக்கிறது. நம் ஊரில் தேநீர் கடைகளில் எந்த நேரத்திலும் ஒருவராவது நின்று தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் சற்று நேரத்திற்கு முன் அள்ளிப் பூசிய திருநீற்றுப் பட்டையுடன் பலசரக்குக் கடையை திறக்கிறார் அண்ணாச்சி ஒருவர். அவர் கடை திறக்க இரண்டு வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள்! பேருந்து நிலையத்தில் M45A வருகிறது. இது தான் முதல் பஸ்ஸாக இருக்க வேண்டும். அந்த நேரத்திலும் பத்து பேர் அந்த பாழடைந்த பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறார்கள்! இதில் ஏறினால் ஆறு, ஆறரை மணிக்குள் மெரீனா போய் விடலாம் என்று தோன்றியது. காசு கொண்டு போயிருந்தால் நிச்சயம் ஏறி இருப்பேன். அது மேலும் ஒரு புது அனுபவமாய் இருந்திருக்கும். இலக்கில்லாமல் பயணம் போவது சுவாரஸ்யமாய் தான் இருக்க வேண்டும். சென்னை வந்ததிலிருந்து ஒரு தடவை கூட சூரிய உதயத்தை கடற்கரையில் பார்த்ததில்லை. பொழுது புலர்வதை பார்ப்பதில் ஒரு தனி இன்பம் இருக்கிறது. அதிலும் கடற்கரையிலோ, மலையடிவாரத்திலோ பார்ப்பது அருமை. 

பேருந்து நிலையத்தை சுற்றியும் குப்பை கூளமாய் இருக்கிறது! மழை பெய்து தண்ணீர் தேங்கி இருக்கிறது. அதில் பிளாஸ்டிக் பைகள் நிரம்பி காணச் சகிக்கவில்லை. திரும்பி வீடு நோக்கி நடந்தேன். "நான் குணாலம்மன் கோயிலாண்டே தான் நிற்கிறேன், சரி வாங்கோ" என்று மொபைலில் ஆபிசர் ஒருவர் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார். பட்டுப்புடவையுடன் வாசலில் நின்று கொண்டு ஆட்டோவுக்காக ஒருவர் காத்திருக்கிறார்.

அதிகாலையில் வாக்கிங் போவதில் ஆயிரம் நல்ல விஷயம் இருந்தாலும், என்னைப் போன்று மாதம் ஒரு பதிவிடும் வலைப்பதிவாளனுக்கு அது ஒரு பதிவுக்காகிறது! அதற்காவது தினமும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்!


"நீங்க எவ்வளவு எவ்வளவு எவ்வளவு எதிர்பார்க்கிறீங்களோ, அவ்வளவு மேல, மேல, மேல இருக்கும்!" என்று சொல்வதற்கு நிச்சயம் தன் ஸ்க்ரிப்டில் அசகாய நம்பிக்கை வேண்டும். அப்படிப்பட்ட எக்கச்சக்க எதிர்ப்பார்ப்புகளுடன் களம் இறங்கி இருக்கிறது ஏழாம் அறிவு!

கதை:

ஆறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த ஒரு மாபெரும் யோகி போதிதர்மன். அவர் தற்காப்புக் கலையிலும், மருத்துவத்திலும் மிகவும் தேர்ச்சி பெற்றவர். பல்லவ மன்னனின் கட்டளைப்படி கால் நடையாக சீனாவுக்கு சென்று அங்கு தன் திறமைகளை சீனர்களை கற்றுக் கொடுத்து அங்கே உயிர் துறக்கிறார். அன்று ஒரு தமிழனிடம் கற்ற வித்தையை இன்று இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த திட்டம் தீட்டுகிறது சீனா. அந்த திட்டத்தை அழிக்க, போதிதர்மனின் திறமைகளை அவரின் வம்சாவழியில் வந்த அரவிந்தனிடம் [சூர்யா] உயிர்ப்பிக்கிறார் சுபா! [ஸ்ருதி].

கார சாரமான அக்மார்க் மசாலா கதை. வழக்கம் போல் முருகதாஸ் மிக புத்திசாலித்தனமாய் திரைக்கதை அமைத்திருக்கிறார். இரண்டு வருடம் ஸ்க்ரிப்டில் உழைத்ததாக கேள்விபட்டேன். போதிதர்மன் என்ற ஒருவரை மட்டும் தெரிந்து கொண்டு அவரை சுற்றி இப்படி ஒரு விறுவிறுப்பான கதையை பின்ன நிச்சயம் திறமை வேண்டும். அது முருகதாஸிடம் நிறைய இருக்கிறது. என்ன அருமையான கதையாக இருந்தாலும், திரைக்கதை சுவாரஸ்யமாய் இல்லாவிட்டால் படம் சலித்து விடும். அதை மிக அருமையாய் புரிந்து கொண்டிருப்பவர் முருகதாஸ். ரமணாவாகட்டும், கஜினியாகட்டும், ஏழாம் அறிவு ஆகட்டும், எல்லாவற்றிலும் சீனுக்கு சீன் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இல்லை. அதே போல், முருகதாஸின் கதாநாயகிகள் டூயட் பாட மட்டுமில்லாமல், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாய் இருப்பது ஒரு ஆறுதல்! இந்தப் படத்தில் ஆங்காங்கே சில தொய்வுகள் இருக்கத் தான் செய்கிறது. போதிதர்மன் சம்மந்தப்பட்ட காட்சிகள், வாய்ஸ் ஓவரில் கதை சொல்வது ஏதோ ஒரு டாக்குமெண்டரி ரேஞ்சுக்கு ஆகிவிடுகிறது. அதை தவிர்த்து காட்சிகளின் வழியே கன்வே செய்திருக்கலாம் என்று தோன்றியது. அதே போல், இந்த மாதிரி படங்களில் காதல் பகுதிகளை இரக்கமில்லாமல் தவிர்க்கலாம்! கதாநாயகன், கதாநாயகி என்றால் அவர்கள் காதலித்தே ஆக வேண்டும், அதற்காக ஃபாரின் லொகேஷன் டூயட்டுகள் பாடியே ஆகவேண்டும் என்பதை தமிழ் சினிமா இயக்குனர்கள் நிறுத்தியே ஆக வேண்டும்! இந்தப் படத்தில் அறிமுக பாடலும், காதல் காட்சிகளும், டூயட் பாடல்களும் மிகப் பெரிய தொய்வை உண்டாக்குகின்றன. "எம்மா எம்மா காதல் பொன்னம்மா, நீ என்ன விட்டு போனதென்னம்மா?" வரிகளே சரியில்லை. கதைப்படி, சுபா அரவிந்தனை காதலிக்கவே இல்லை, அதற்குள் எப்படி "நீ என்ன விட்டு போனதென்னம்மா?" என்று பாட முடியும்? அப்புறம் டையலாக் ரொம்ப ரொம்ப சுமார் ரகம். மற்ற இயக்குனர்களை போல், இவரும் யாராவது எழுத்தாளரை துணைக்கு அழைத்திருக்கலாம்! போதிதர்மன் கதையில் தமிழ், வீரம், ஈழம் என்று லேசாய் தொட்டுச் சென்றிருக்கிறார். இப்படி ஒரு கமர்சியல் படத்தில் ஈழத்தை பற்றி போகிற போக்கில் பேசுவதை விட, அதைப் பற்றி ஆழமான பார்வையுடன் ஒரு படைப்பை முன் வைப்பது நல்லதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சூர்யா, ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால் தன்னால் இயன்ற அளவு உழைப்பை கொடுப்பதில் அமீர் கானை நினைவுபடுத்துகிறார். சூர்யாவின் கண்கள் அவருக்கு மிகப் பெரிய ப்ளஸ்! ராம் கோபால் வர்மா சொல்வதை போல், Mr. Eyes தான்! ஒரு யோகி என்று அவரை கட்டும்போது அவர் கண்கள் அதை நம்ப வைக்கிறது! ஆனால் இந்த படத்தில் இவருடைய உழைப்பு வீணாக்கப்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது! சர்க்கஸ் கலைஞரை வருவதால் சர்க்கஸ் சாகசங்களை கற்கிறார், வியட்நாம் சென்று மார்சியல் ஆர்ட்ஸ் கற்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள். படத்தில் சர்க்கஸ் வருவது ஏதோ உப்புக்கு சப்பாணி போல் தான். எதற்கு இந்தப் படத்தில் நாயகன் சர்க்கஸ் கலைஞனாய் வரவேண்டும் என்ற கேள்விக்கு பதில் இல்லை! 

ஸ்ருதி, அழகாய் இருக்கிறார். உயரம் தான் கொஞ்சம் உறுத்துகிறது. பொட்டு வைத்துக் கொண்டு, பல காட்சிகளில் சுடிதாரில் வருவது ஆறுதல் அளிக்கிறது. கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். அவருடைய தமிழ் எனக்குப் பிடித்தது. 

படத்தின் வில்லன், ப்ரூஸ் லீ சாயலில் இருக்கிறார். அவர் கழுத்தை ஒடித்துப் பார்ப்பது போலவே பார்க்கிறார். அனன்யாவை என்னை சொல்லி படத்தில் போட்டார்களோ! இத்தனை சீன் என்று சொல்லி, இப்படி கட் பண்ணிட்டீங்களே என்பது போல் ஒரு ரியாக்ஷன்! மற்றபடி படத்தில் யாரை பற்றியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. 

ரவி. கே. சந்திரனின் ஒளிப்பதிவு போதிதர்மனின் சீன பயணத்திலும், பாடல்களிலும் ஒளிர்கிறது. பிறகு அதற்கு பெரிய வேலை இல்லை. ஹாரிஸின் பாடல்கள் கஜினி அளவுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். "முன்னந்திச் சாலையில்" பரவாயில்லை. பின்னணி இசை பல இடத்தில் நன்றாய் இருந்ததாய் எனது அபிப்ராயம்.

காதல், பாடல்கள் என்று ஒரு ஒரு மணி நேரத்தை இரக்கமில்லாமல் "கட்" டிருந்தால் படம் செம விறு விருப்பாய் இருந்திருக்கும்.