உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப் பட்டது.

உச்சி பொழுது. சென்னையின் மார்கழி வெயில் உக்கிரம். தம்பி என்ற ஒரு குரல் கேட்டுத் திரும்பினேன். ஒரு கான் க்ரீட் தடுப்பு நிழலில் ஒன்றிக் கொண்டிருந்த அந்தப் பெரியவர் நான் வண்டி எடுப்பதை கவனித்து என்னை விளித்தார். ஊன்றுகோலின் வசதியுடன் மெல்ல நடந்து என்னருகில் வந்தார். தொண்டுக் கிழம். நெற்றி நிறைய பட்டை. அரதப் பழசான வேட்டி சட்டை. இத்தனை வயது வரை வாழக் கூடாதென்று முடிவு செய்து கொண்டேன்.

மெயின் ரஸ்தாவுக்குப் போகனும் தம்பி!

"இதோ தெரியுதே" என்று கூப்பிடு தூரத்தில் இருந்த ரஸ்தாவைக் கையைக் காட்டினேன்.

"அந்த ரஸ்தாவுல இருக்குற ஆஸ்பத்திரிக்குப் போகனும்!" என்றார் மெல்ல.

இத்தனை தள்ளாட்டத்துடன் இருப்பவரை எப்படி பைக்கில் கூட்டி செல்வது என்று எனக்கு கொஞ்சம் தயக்கம். இருந்தாலும் பாவமாய் இருந்தது. சரி வண்டியில உக்காந்துருவீங்களா? என்று கேட்டு முடிப்பதற்குள் தட்டுத் தடுமாறி ஏறி அமர்ந்து கொண்டார். நல்லா கெட்டியா புடிச்சுக்கோங்கோ என்று மெல்ல வண்டியை நகர்த்தினேன். "நீங்க போங்கோ, ஆஸ்பத்திரிக்கு நேக்கு வழி தெரியும், நான் சொல்றேன். அந்தத் தாமரை குளத்துக்கு ஒட்டினாப்பல இருக்குற சந்துல இருக்கு. ஆமா...நான் சொல்றேன். வயசாயிடுத்து, நடக்க முடியலை...முட்டி தேஞ்சு வலிக்கிறது. நீங்க நன்னா இருக்கணும். எனக்காக இத்தனை சிரமம் எடுத்துக்குறேள். இந்தக் காலத்துல யாரு இப்படி உபகாரம் பண்றா? வெயில் என்னமா மண்டையை பிளக்கிறது? மரமும் மனுஷாளும் குறைஞ்சுண்டே வர்றா, எப்படி மழை வரும், எப்படி லோகம் செழிக்கும்? இதோ நீங்க இருக்கேள், எப்படி உபகாரம் பண்றேள், இப்படி எல்லாருமா பண்றா...வயசாயிட்டா எல்லாத்துக்கும் ஒரு கேலிப் பொருள் மாதிரி ஆயிட்றோம். உடம்பு பாடாய் படுத்துறது. பகவான் கண்ணைத் தெறக்க மாட்றான். அவன் என்ன செய்வான், லோகத்துல இருக்குற எல்லாருக்காகவும் அவன் கண்ணைத் தொறந்துண்டே இருந்தா, அவன் எப்போ தான் கண்ணை மூடுறது? இந்த லாரிக்காரன் பாருங்கோ, கண்ணுல மண்ணை கொட்டிண்டே போறான். சரியான எமன்...."

எங்கே இவர் புலம்பிக் கொண்டே வழியை மறந்து விடப் போகிறார் என்று தாமரைக் குளத்தை ஆட்டோக்காரர்களிடம் விசாரித்தேன். பேச்சை நிறுத்தி மெல்ல புன்னகைத்து "நான் தான் சொல்றேனே, போங்கோ வந்தா சொல்றேன். நேக்கு தெரியும், தம்பிக்கு நம்பிக்கை இல்லை" என்று அந்த ஆட்டோக்காரர்களிடமும் மன்றாடினார். நான் மெல்ல வண்டியை நகர்த்தியதும், மறுபடியும் ஆரம்பித்து விட்டார்.

"நேக்கு 89 வயசாறது. ஒரே இருமல், சளி!! மூச்சை முட்றது. சின்ன வயசுல நான் அப்படி இருப்பேன். என் ஆம்படையா என்னை முழுங்குற மாதிரி பாப்பா...அது அந்தக் காலம். இப்போ அவ ஆஞ்சு ஓஞ்சு போயிட்டா. அவளுக்கும் ஒரு 80 வயசு இருக்கும். நீங்க யார் பெத்த புள்ளையோ, உங்களை நன்னா வளத்துருக்கா, எல்லா செல்வங்களோட நீங்க நீடூழி வாழனும்!" என்றவுடன் மறுபடியும் அந்த எண்ணம் தோன்றியது. இந்த வயது வரை சத்தியமாய் வாழக் கூடாது! ஒரு வழியாய் ஆஸ்பத்திரியில் இறங்கினோம். "சத்த இருங்கோ, நான் டாக்டரை பார்த்துட்டு வந்துடறேன்" என்று ஆட்டோக்காரரை அமர்த்தி விட்டு செல்வதைப் போல் சொல்லி விட்டு அவர் மெல்ல நடந்தார். கால்கள் தளர்ந்து, உடலை வருத்தி அவர் இறைந்து இறைந்து செல்வதை காணப் பொறுக்கவில்லை. "நீங்க உக்காருங்க, நான் விசாரிக்கிறேன்" என்று அவரை உட்கார்த்தி விட்டு அங்கு இருந்த ஒருவரிடம் விசாரித்தேன். "பதினோரு மணி வரை தான் சார் பாப்பாங்க, இனிமே நாளைக்கு தான்" என்றார். அவருக்கு இறைத்துக் கொண்டிருந்தது. மூச்சு முட்டியது. என்னிடம் சொன்னதையே அவரிடம் சென்று சத்தமாய் இறைந்து சொன்னார். "சார், கொஞ்சம் மருந்தாவது கொடுங்க..டானிக் எதாவது.." என்றேன். "சீக்கிரம் வர்றதுக்கென்ன?" என்று அவரிடம் எரிந்து விழுந்தார். சில மாத்திரைகளையும், ஒரு சிரப்பையும் என்னிடம் கொடுத்தார். "வாங்க" என்று அவரை மெல்ல எழுப்பினேன். அப்போதும் ஏதோ பேசி கொண்டே இருந்தார்.

மிகுந்த சிரமப்பட்டு, "தம்பி என்னை வீட்ல விட்டுடுங்கோ" என்றார். உங்க வீடு எங்கே என்றேன். "இதோ இந்தத் தாமரை குளத்துக்கு அந்தப் பக்கம்" என்றார் இறைந்து கொண்டே! எனக்கு புரியவில்லை. வீடும் இங்கே, ஆஸ்பத்திரியும் இங்கே..இவர் எப்படி அங்கு வந்தார்? அத்தனை தூரத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்? அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சில பயல்களின் உதவியுடன் அவரை மெல்ல வண்டியில் ஏற்றினேன். "தாத்தா நல்லா சாரை புடிச்சுக்குங்க" என்றான் ஒருவன். இருமி கொண்டே புன்னகை செய்தார். "ஆமா, வீடு இங்கே தான் இருக்குன்னா, அவ்வளவு தூரத்துல என்ன பண்ணிட்டு இருந்தீங்கன்னு" கேட்டேன். என் கேள்வியை சிறிதும் சட்டை செய்யாமல், "ஆ! இங்கே தான், நான் தான் சொன்னேனே, தாமரை குளம் பக்கத்துல...இந்த சந்து தான்.. ஏழாம் நம்பர் சந்து...திரும்புங்க" என்றார்! அந்த குண்டும் குழியுமான சாலையின் நடுவில் இருந்தது அவர் வீடு. ஒரு துருப் பிடித்த பழைய கேட்டை அவர் திறப்பதற்கும், அந்த வீட்டின் கதவு திறப்பதற்கும் சரியாய் இருந்தது. உள்ளிருந்து ஒரு வயதான மாமி எட்டி பார்த்தார். நான் ஒரு எட்டு வைத்து அவரிடம் பேச முயல்வதற்குள் அவர் அந்த இரும்பு கேட்டை வேகமாய் சாத்திக் கொண்டார். " தாத்தா, அந்த மருந்து மத்தியானம் சாப்டுட்டு" என்பதற்குள் தலையை ஆட்டிக் கொண்டே ஒரு வித பதட்டத்துடன் உள்ளே சென்றார். நான் மாமியை பார்த்து, "மாமி அந்த மருந்து எப்போ சாப்பிடனும்னா" என்று சொல்வதற்குள் அவர் ஆட்டிய தலையை நிறுத்தாமல் உள்ளே சென்று கதவை தாளிட்டுக் கொண்டார்.

யூ ட்யுபினால் டீவி இல்லாத குறையே தெரிவதில்லை. முதல் நாள் ஒளிபரப்பான நிகழ்ச்சி அடுத்த நாள் சின்ன சின்ன வீடியோவாக எண் பிரித்து போட்டு விடுகிறார்கள். யார், எப்படி இத்தனை பொறுப்புடன் செயல்படுகிறார்கள் என்று ஆச்சர்யமாகவே இருக்கிறது. இதனால் அவர்களுக்கு என்ன லாபம்? புரியவில்லை. நேற்று விஜய் டீவி அவார்ட்ஸ் பார்த்தேன். பாலிவுட்டில் நடக்கும் ஃப்லிம் ஃபேர் அவார்ட் ரேஞ்ச்சுக்கு நடத்துகிறார்கள். அதுவும் கோபி ஒவ்வொரு நாமினியையும் சொல்லும்போது எல்.ஈ.டி ஸ்கிரீனில் அவர்களின் முகம் பளிச்சிடுவது கூடுதல் பளிச்சு! வழக்கமாய் நிகழ்ச்சியை வழங்கும் யூ கி சேதுவை விட்டு விட்டு, நீயா நானா கோபியை அழைத்திருந்தார்கள். சில இடங்களில் நீயா நானா சாயல். இந்த மாதிரி நிகழ்ச்சியை நடத்த நிறைய டைமிங் வேண்டும். ஷாருக்கான் இதில் உண்மையில் கிங் கான் தான். ஒரு சூப்பர் ஸ்டார் இப்படி ஒரு நிகழ்ச்சியை மற்றவர்களை விட சுவாரஸ்யமாய் நடத்துவது பெரிய விஷயம் தான். தமிழ் நாட்டில் இப்படி எல்லாம் நடக்குமா? ரஜினியோ விஜய்யோ இந்த நிகழ்ச்சியை நடத்தினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கவே பயங்கரமாய் இருக்கிறது. அதிலும் நிகழ்ச்சி முழுதும் விஜய்யின் முகத்தில் ஒரு சின்ன புன்னகையை கூட நான் பார்க்கவில்லை. ஏதோ ஒரு உலகத் திரைப்பட விழாவில் மிக மெல்ல நகரும் ஒரு அற்புதமான ஈரானிய திரைப்படத்தை வலுக்கட்டாயமாக அவரை உட்கார்த்தி பார்க்க வைப்பதைப்போல் இருந்தார். கமலஹாசனுக்கு இவர் விருது கொடுக்கிறார். கமலும் அவர் உளறுவதை தேமே என்று பார்த்துக் கொண்டு நிற்கிறார். இதில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடிக்கும், நான் கூட விஜய்யை என் கம்பெனிக்கு நடித்துக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறேன் என்று கமல் காமடி வேறு செய்கிறார். விஜய் அப்படியா, எனக்குத் தெரியாதே, அது எப்போது என்பது போல் ஒரு பார்வை பார்த்தார். என்ன தான் மேடை நாகரீகம் என்றாலும் ரொம்ப அ நாகரீகமாய் இருந்தது போல் தோன்றியது. அதிலும் கமலுக்கு ஏகப்பட்ட அவார்ட்கள். சிவகுமார் சொல்வது போல் கமலை எல்லாம் இந்த ஆட்டையில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அப்படியே சேர்த்துக் கொண்டாலும் அவர் மற்றவர்களுக்கு அவார்ட் கொடுப்பதோடு நின்று விட வேண்டும். மனொரமாவிடம் மைக் கொடுக்காதீர்கள் என்றால் கேட்கமாட்டேன் என்கிறார்கள். இனிமேல் பார்த்தீபனிடமும் மைக்கைக் கொடுக்கக் கூடாது. மனிதர் வித்தியாசமாய் பேசுகிறேன் என்று கொன்று விடுகிறார். அவர் எல்லோரும் பேசுவது போல் சாதரணமாய் பேசினால் ரொம்ப வித்தியாசமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். அவார்ட் வாங்கிய அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்கள். [திட்றதெல்லாம் திட்டிட்டு...]

புத்தகங்கள் படிப்பது மிகவும் குறைந்து விட்டது. எஸ். ராமகிருஷ்ணன் பட்டியலிட்டுள்ள நூறு கதைகளையாவது தேடிப் படிக்க வேண்டும். முத்துக்கள் பத்து என்று புத்தக சந்தையில் 8 எழுத்தாளர்களின் கதைத் தொகுப்பை வாங்கியிருந்தேன். அதை எலி கடிப்பது போல் ஆங்கொன்றும் இங்கொன்றும் படித்து வருகிறேன். பிச்சமூர்த்தி கதைகள், ராஜம் கிருஷ்ணன் கதைகளைத் தவிற வேறு கதைகள் அதிகம் ஒட்டவில்லை. ரா.கி. ரங்கராஜன் மொழி பெயர்த்த பட்டாம்பூச்சி நாவலை மறுபடியும் வாசிக்கிறேன். ஏதாவது படிக்க வேண்டும் என்று நான் டெல்லியில் இருந்த போது வாங்கியது. அப்போது யாராவது ரா(க்)கி யைப் பற்றி என்னிடம் கேட்டிருந்தால் சில அழகிய பெண்கள் ஆண்களுக்கு செய்யும் துரோகம் என்று சொல்லியிருப்பேன். ஒரு மொழிபெயர்ப்பை படிக்கிறோம் என்ற உணர்வேயில்லை! அத்தனை எளிதாய் லாவகமாய் செய்திருக்கிறார். இவருடைய நாலு மூலையும் நான் மிகவும் ரசித்த புத்தகம். வாத்தியாரின் சில ஈ புக்குகள் இணையத்தில் கிடைத்தன. இங்கே! ஆ படித்தேன். அத்தனை சிலாக்கியமாய் எனக்குத் தோன்றவில்லை. ஒருவேளை தொடராய் வந்த சமயத்தில் படித்திருந்தால் அற்புத அனுபவமாய் இருந்திருக்குமா (ஆ!)? கணையாழியின் கடைசி பக்கங்களை அலுவலகத்தில் ஆல்ட் டாப் முறையில் படிக்கிறேன்! பெங்களூர் தமிழ் சங்கத்தில் நின்று கொண்டே படித்து, அவரின் எழுத்தை ரசித்து சிரித்தது ஞாபகம் வருகிறது. இன்று ஆல்ட் டாபும் போது, கணையாழியின் கடைசிபக்கத்தில், தோராயமாய் ஒரு நடுப் பக்கத்தில், ஒரு சைனீஸ் கவிதையை எப்படி எழுதுவது என்று அவர்கள் சொல்வதாய் இவர் சொல்கிறார். அதாவது,

சாதரணமாக சைனீஸ் கவிதைக்கு நான்கு வரிகள் உண்டு. முதல் வரி கவிதையை தொடங்குகிறது. இரண்டாம் வரி கவிதையை தொடர்கிறது. மூன்றாம் வரி ஒரு புதிய கருத்தை ஆரம்பிக்கிறது. நான்காவது வரி முதல் மூன்று வரிகளையும் சேர்க்கிறது.

சைனீஸ் சாம்பிள்

கியோட்டாவை சேர்ந்த சில்க் வியாபாரிக்கு
இரண்டு பெண்கள்.
மூத்தவளுக்கு இருபது வயது. இளையவள்
பதினெட்டு.
ஒரு படைவீரன் கத்தியால் கொல்கிறான்.
ஆனால் இந்தப் பெண்கள் ஆண்களை தத்தம்
கண்களால் கொல்கிறார்கள்.

வாத்தியார் முயற்சி

மன்னாரு மெதுவாக வந்து சேர்ந்தான்.
மணி பார்த்தான். உட்கார்ந்தான். படுத்துக் கொண்டான்.
சென்னை விட்டு திருச்சி போகும் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தை கடந்து செல்லும்!

அடியேன் முயற்சி

அந்தமான் ஒரு அழகான தீவு.
அங்கு மூசா என்பவன் வாழ்கிறான்.
ஜோலார்பேட்டையில் வசிக்கும் ரசீபு கறாரானவன்.
இந்த இருவருக்கும் எந்த சம்மந்தமுமில்லை!

தொடர் விளையாட்டுக்களில் புத்தக மிமீ ஒன்று தான் எனக்கு பிடித்தது. அது தான் மற்றவருக்கு கொஞ்சமாவது ப்ரயோஜனமாய் இருக்கும். நான் 8 மணிக்கு டெய்லி பல்லு விளக்குவேன் போன்ற சுயதரிசனத்தைக் கொண்டாடும் இந்த மாதிரி தொடர் விளையாட்டுக்களுக்கெல்லாம் நான் அதிகம் போவதில்லை. [கொஞ்சம் அடங்குறியா...] என்னுடைய ஆஸ்தான கமெண்டர் சிவமுருகன் கூட ஏதோ ஒரு விளையாட்டுக்கு என்னை கூப்பிட்டார். ஆளை விடுங்க என்று எஸ்கேப் ஆகிவிட்டேன். இப்போது சுரேஷிடம் வகையாய் மாட்டிக் கொண்டேன். சரி நாளுக்கு 4 வீதம், வாரத்துக்கு 30 பதிவா போட்றோம் [யாருப்பா அது, 4*7=28 தானேன்னு சொல்றது?] இது இப்போ முடியாது என்று அலுத்துக் கொள்வதற்கு! சரி, ஒரு கலாய் கலாய்ச்சிருவோம் என்று முயற்சித்திருக்கிறேன். இனி உங்கள் தலையெழுத்து...எல்லா பழியும், பாவமும், புகழும் சுரேஷ் கண்ணனுக்கே!!

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

நான் என்ன ரஜினிகாந்தா, ரோஜாவா? என் பெயர் காரணம் சுவாரஸ்யமாக இருப்பதற்கு? ஏதோ ஒரு காலத்துல, ஒரு ஊருல ஒரு ராஜாவாம் டைப் கதை கேக்கும்போது பிரதிவிராஜ் என்ற ஒரு ராஜாவைப் பற்றி என் பெற்றோர்களில் ஒருவர் கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது, அவர் ராணி சம்யுக்தாவை காதலித்து குதிரையில் தூக்கிச் சென்றாராம். நம்ம பையனும் இப்படி வீர தீர செயல்களை எல்லாம் செய்யனும்னு நினைச்சு எனக்கு அந்தப் பெயரின் தழுவலான என் பெயரை சத்தியமாய் என் பெற்றோர் வைக்கவில்லை...ஆனால் அந்தப் பெயர் வைத்ததன் காரணமோ என்னமோ, என் வாழ்க்கையில் கிட்டத்தட்ட அதே போலவே நடந்து விட்டது! [என்ன நடந்ததா? அதை இங்கெ சொல்லிட்டா, அப்புறம் என் ஆட்டோ பயாக்ரஃபில என்னத்தை எழுதுறது? சும்மா இருங்கப்பா]...ஏதோ பேரு வச்சதோடு நிக்காம, சோறு வச்சி இந்த அளவுக்கு வளர்த்து விட்டுருக்காங்களே, அதை நெனைச்சி சந்தோஷப்படுவீங்களா...

என் பெயர் பிடிக்குமா என்று கேட்டால், தெரியவில்லை. பெரிதாய் வருத்தம் ஒன்றும் இருந்ததில்லை. பள்ளியில் படிக்கும் காலத்தில் 3 பிரதீப்கள் இருந்தார்கள். [பாலாஜீக்கள் தனி..], அந்த 3 பிரதீப்புகளில் மிக மட்டமாய் படிக்கும் பிரதீப் நான் தான். ஒவ்வொரு பிரதீப்பாய் கூப்பிட்டு மார்க் ஷீட் கொடுக்கும் போது என் மார்க்கைப் பார்க்கும் போது என் பெயரின் மேல் எனக்கு எரிச்சலாய் வரும். பெயருக்கும் மார்க்குக்கும் என்ன சம்மந்தம் என்று தெரியவில்லை...குழந்தைகளுக்கு என் பெயர் அவ்வளவு எளிதில் வராது. பெடீப் என்று சொல்லும். அப்போது கொஞ்சம் எரிச்சல் வரும். மற்றபடி சின்ன வயதில் தமிழ் துணைப்பாடத்தில் [நான்டீடெயிலில்] படித்த மண்ணாங்கட்டியின் கதை ஞாபகம் வருகிறது. பெயரில் என்ன இருக்கிறது?

2) கடைசியா அழுதது எப்போது?

என் மனைவி இங்கே வருவதற்கு முன். என்னமோ தெரியலை, சென்னையில் கலகலவென்று இருந்து விட்டு, இங்கு சீண்டக்கூட ஆளில்லாமல் இருந்தது ஒரு மாதிரியாய் தான் இருந்தது. இருவரும் டைடல் பார்க்கில் ஒரே தளத்தில் வேலை பார்த்ததால், சேர்ந்தே போவது, சேர்ந்தே வருவது என்று இருந்து விட்டோம். திடீரென்று இத்தனை தூரம் பிரிந்தது என்னவோ போல் தான் இருந்தது..வேலையின் பளு காரணமாய் என் மனைவியிடம் சரியாய் கூட பேச முடியாத நிலை. என்னை மிஸ் பண்றியா என்று அவள் கேட்கும்போதெல்லாம், நான் எப்போதும் யாரையும் மிஸ் பண்ணியது கிடையாது, நான் ரொம்ப ப்ராக்டிகல், எனக்கு நானே போதும் என்றெல்லாம் ஓவராய் பீலா விட்டிருக்கிறேன். அது தான் உண்மை. ஆனால், ஒரு நாள் அவளிடம் பேசும்போது, உன் சட்டையை பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் தூங்குகிறேன் என்று அவள் சொன்னவுடன் அலுவலகம் என்று கூட பாராமல் அப்படி அழுதேன். மனைவியிடம் காதலை வெளிப்படுத்தக் கூட நாம் எவ்வளவு தயங்கியிருக்கிறோம் என்று அன்று புரிந்து கொண்டேன்..


3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

பிடிக்காமல்! அந்த ஒன்றை வைத்துக் கொண்டு கல்லூரியில் எல்லா பெண்களின் அசைன்மென்ட் நோட்டின் முகப்பில் அவர்களின் பெயர்களை டிசைன் டிசைனாய் எழுதி எத்தனை பசங்களின் வயித்தெறிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்...பிடிக்காமல் எப்படி?

4) பிடித்த மதிய உணவு?

நான் இங்கு வந்த சமைத்த காலத்தில் தான் உணர்ந்தேன். எந்தக் கேணையன் நாளைக்கு 3 அல்லது 4 தடவை சாப்பிடனும்னு வரையுறுத்தியது? டெய்லி 3 வேளை என்னத்தை தான் சமைக்கிறது? அம்மாக்கள் பாடு எவ்வளவு கஷ்டம் என்று....எனக்கும் சாப்பாட்டுக்கும் உள்ள ஒரே உறவு உயிர் வாழ்தல் தான்...சாப்பிடுவது எனக்கு ஒரு வேலை...அவ்வளவு தான். மற்றபடி இது தான் என்று எதையும் சொல்வதற்கில்லை...

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

கண்டிப்பாக! மறுகேள்வி இல்லாமல்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

கேள்வியே அரைகுறை. மொதல்ல குளிக்க பிடிக்குமான்னு கேக்கணும்! ஐய்யோ, என்னை தப்பா நினைச்சிராதீங்க...மத்தவங்களுக்காகச் சொன்னேன். எனக்கு குளிக்க ரொம்ப புடிக்கும். யாருமே இல்லாத அருவியிலும், அலையே இல்லாத கடலிலும் குளிக்கப் பிடிக்கும். மிகவும் பிடித்தது கிணற்றடியில் இறைத்துக் குளிப்பது, ஷவர் பாத்![இல்லை தெரியாம தான் கேக்குறேன், இதனால யாருக்காவது பைசா ப்ரயோஜனம் இருக்கா?]

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

ஆண்களின் பாடி லேங்க்வேஜ், ட்ரஸிங் சென்ஸ், பெண்களின் ....நூற்றுக்கு தொன்னூறு ஆண்களைப் போல்! இதெல்லாம் நான் சினிமாவில் பெரிய ஸ்டார் ஆனவுடன் குமுதம் பேட்டியிலோ, விகடன் பேட்டியிலோ, வண்ணத்திரை பேட்டியிலோ சொல்லலாம் என்று இருந்தேன். அவசரப்பட்டுட்டீங்க...

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பெற்றோர் தந்த முகம்
முடிந்தவரை நேர்மையாய் இருக்க முயற்சிப்பது
எல்லோரிடமும் சகஜமாய் பழகும் தன்மை
எதிராளியின் பார்வையிலிருந்து நோக்கும் திறன்
நகைச்சுவைத் திறன்
எழுத்து
ஓவியம்
சிந்தனை

சோம்பேறித்தனம்
அசட்டுத்தனம்
மறதி
என் உயரம் [கம்மி என்பதால்]
என் பல்வரிசை [நேர்மையால் இருப்பதால் வரும் பிரச்சனை...இதெல்லாம் எழுத வேண்டியிருக்கிறது! இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன், இல்லையென்றால் நேரில் என்னை பார்த்தால் எங்கே ஈ சொல்லுங்க என்று சொல்லப் போகிறீர்கள்!]

9) உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

அவளுக்கு என் மீது இருக்கும் அளவு கடந்த காதல்
அவளுடைய அறிவு, சாமர்த்தியம், புத்திசாலித்தனம்
வாடிய பயிரைப் பார்க்கும் போதெல்லாம் வாடும் அவளின் இயல்பு

சோம்பேறித்தனம்
அவளுக்கென்று ஒரு நியாயம் [இது ஒரு வேளை எல்லா பெண்களுக்கும் பொருந்துமோ?]

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

இந்தக் கேள்வியும் குழப்புகிறது, யாராவது என் பக்கத்திலா அல்லது நான் யாருடைய பக்கத்திலாவதா?

முதலாவது, ராகினிஸ்ரீ மாதிரி என் பக்கத்தில் (அதாவது அலுவலகத்தில்) ஒரு பொண்ணில்லையே என்று![என்ன மனைவி திட்டுவாங்களா, அட விடுங்க பாஸ் அவங்க எப்பவுமே இப்படித் தானே...]

இரண்டாவது, (தமிழ்) சினிமாவின் பக்கம் நான் இல்லையே என்று!

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

கருப்பு வெள்ளை கோடு போட்ட சட்டையும், க்ரே பேண்டும்.[இதுக்கு அந்தரங்கம் அழுக்கானதுன்னே எழுதியிருக்கலாம்...சுரேஷ் எல்லாம் உங்களை சொல்லனும்!]

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

பராக்கு பார்த்துக் கொண்டு...ஆபிஸில் பாட்டு கேட்டால் திட்ட மாட்டார்கள்? [அப்போ பதிவு போட்டால்?]

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

மயில் கழுத்து கலர்ல மாத்துறீங்களா? இல்லை ராமர் பச்சையில மாத்துங்க! இல்லை தெரியாம தான் கேக்குறேன், என்னை ஏங்க பேனாவா மாத்துறீங்க? என்னை நம்பி ஒருத்தி இருக்காளே, அவளை என்ன அப்போ பென்சிலா மாத்துவீங்களா? என்ன, எந்த வர்ண பென்சிலா? அட போங்கப்பா...

14) பிடித்த மணம்?

அப்பாவின் வாசனை
சந்தனம்
அந்துருண்டை
சாம்பிராணி
+ சுரேஷின் பதில்

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

நான் இந்த மாதிரி தொடர் விளையாட்டுக்களில் யாரையும் இதுவரை குறிப்பிட்டு அழைத்ததில்லை. அதனால் முதல் கேள்வி அவுட்! இரண்டாவது கேள்விக்கு பதில், என்ன எழவைத் தான் எழுதுவது என்று முழி பிதுங்கி நிற்கும் அனைவரும் எழுதலாம். அல்லது உங்களையும் நம்பி ஒருவர் அழைத்தால் எழுதலாம். சோ, எல்லாரும் எழுதலாம்.

16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

இந்தப் பதிவு என்று ஒன்றை சொல்ல முடியவில்லை. எனக்குப் புரியும் வகையில் அவர் எழுதிய அத்தனை எளிமையான பதிவுகளும் என்று சொல்லலாம். வலையுலகில் நான் தொடர்ந்து வாசிக்கும் மிகச் சிறிய லிஸ்டில் இவரும் ஒருவர்.

17) பிடித்த விளையாட்டு?

அம்மா அப்பா விளையாட்டு! ஹேய் குழந்தைகள் விளையாடுவதப்பா...

18) கண்ணாடி அணிபவரா?

இதற்கு ஆம் என்று பதில் சொன்னால், அடுத்த கேள்வி என்ன? சோடா புட்டியா? என்று கேட்பீர்களா? பதில், இல்லை!

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

யதார்த்தமான வாழ்வை சுவாரஸ்யமாய் பதிவு செய்த படங்கள் பிடிக்கும். கொஞ்சமாவது லாஜிக் இருக்க வேண்டும். சினிமாவுக்கே உரிய ஃபேன்டஸி பிடிக்கும்...ரஜினி பறந்து பறந்து அடிக்கலாம். ஆனால் தனுஷ் அடிக்கக் கூடாது!

20) கடைசியாகப் பார்த்த படம்?

நேற்று அஞ்சாதே பார்த்தேன். மறுபடியும். நரேனின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு காமடியாய் இருந்தது...

21) பிடித்த பருவ காலம் எது?

என் வலைதளத்தின் பெயரை பார்த்து விட்டும், இப்படி எல்லாம் கேட்பது ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்!

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

ரா.கி.ரங்கராஜனின் பட்டாம்பூச்சி [மறுவாசிப்பு]
சுஜாதாவின் ஆ! [காலில் என்ன ஊர்கிறது, எறும்பா...ஆ]

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

என்னிடம் இருப்பது லேப்டாப்! [ஐய்யோ, என்னா அறிவு!!]

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

அருவியின் இரைச்சல்
நீரோடையின் சலசலப்பு
பலத்த காற்று
அமைதியான காட்டில், குயிலின் ஓசை
புகைவண்டி
மழலையின் அர்த்தமற்ற பேச்சு
எங்கோ ஒரு ரேடியோவில் கேட்கும் ஒரு பழைய பாடல்

போங்கப்பா, இந்த கேள்வி போர்! நெக்ஸ்ட்...

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

மதுரையில் மஹால் 7வது தெருவில் இருக்கும் வீட்டிலிருந்து நியுதில்லி, சண்டிகார், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, அமேரிக்கா...எப்போது வேண்டுமென்றாலும், கொடுங்கூற்றுக்கிரையாகலாம்! [அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும்!]

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

நான் ஒரு பிறவிக் கலைஞன் என்று எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு நினைப்பு. ஸ்ருதின்னா, பக்கத்து வீட்டு பாப்பாவா என்று நீங்கள் கேட்பவர் என்றால், நான் நன்றாய் பாடுவேன்! நான் நடனம் ஆடினால் அது நடனம் போலவே இருக்கும். சுமாராய் ஆடுவேன். அப்படி ஆடி ஒரு குட்டி டீசர்ட் போட்ட டீ.ஜேயிடம் [பேப் என்று தனியாய் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்!] பரிசு வாங்கியதை இங்கே அளந்திருக்கிறேன். மனுஷ்யபுத்திரன் அளவுக்கு இல்லையென்றாலும், என் அப்பனுக்கு புத்திரன் என்ற அளவுக்கு கவிதைகள் எழுதுவேன். ஒரு அடித்தல் திருத்தல் கூட இல்லாமல் பேனாவினால் படம் வரைவேன். [கல்லூரிக் காலங்களில் செய்தது, இப்போது வருமா என்று தெரியவில்லை...யாரும் டெஸ்ட் வைத்து விடாதீர்கள்! இப்போதெல்லாம் டிஜிட்டல் ஓவியங்கள் தான், என்ன கழுதை கார்ட்டூன் தான் வர மாட்டேன் என்கிறது] நல்ல தாளம் அடிப்பேன் [காட்டுக் குயிலு மனசுக்குள்ள, வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்] எந்த பாட்டு என்று ஈசியாய் கண்டு பிடிக்கும் அளவுக்கு அடிப்பேன். அவ்வப்போது தேவயில்லாமல் ஓவர் ரியாக்ஷன் கொடுப்பேன். அதனால் எனக்கு நடிக்கவும் சுலபமாய் வரும் என்று தோன்றுகிறது...டைமிங் சென்ஸ் உண்டு. [மணி என்ன? பாத்தீங்களா...நான் சொல்லலை?] நேற்று கூட இப்படித் தான் தூங்கப் போகும் போது என் மனைவி ஹால் லைட்டை ஆஃப் செய்யுங்கள் என்றால். அதற்கு நான், ஒரு ஆணை பார்த்து ஆஃப் செய்ய சொல்கிறாய் என்றேன்! அதற்கு அவள் விவேக்கை போல், டேய் நோட் பண்ணுங்கடா..நோட் பண்ணுங்கடா என்று கலாய்த்தாள். தமிழ் சினிமாவைப் பற்றி கொஞ்சம் நிறையவே அறிவு உண்டு. [புதிய படங்களைத் தவிர்த்து!] இதை எல்லாம் விட, நடு சென்டரில் தலை கீழாய் நிற்பேன். இரு புருவத்தையும் தனித் தனியாய் தூக்க முடியும். இரு காதுகளை மட்டும் தன்னிச்சையாய் அசைக்க முடியும். இப்படிப் பல தனித் திறமைகள் உள்ள என்னை பார்த்து உங்களிடம் ஏதாவது தனித்திறமை, நோட் திஸ் பாய்ன்ட், தனித்திறமை என்று ஒருமையில் கேட்கிறீர்கள். வெட்கம்!

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

உலகம்:
இந்த உலகம் எல்லா வளங்களையும் கொண்டிருந்தாலும், ஆறறிவு படைத்த உயிரினம் என்று நம்மை நாமே பீற்றிக் கொண்டாலும், எல்லோருக்கும் எல்லாமும் என்ற எளிமையான ஒரு கோட்ப்பாட்டினை கடைபிடிக்கத் தவறி, எல்லைகள் வகுத்து, அன்பு நெறி தவறி...மனிதனே சக மனிதனை சாப்பிடுவது!!!!

இந்தியா:
எந்த ஒரு தகுதியும், தராதரமும் இல்லாமல் ஜனநாயகத்தின் பேரைச் சொல்லிக் கொண்டு கண்ட கருமாந்திரங்கள் அரசியலில் குதிப்பது [ஏன், நீ குதி என்கிறீர்களா?]
இந்தத் தள்ளாத வயதிலும் விடாமல் பதவியில் அமர்ந்து கொண்டு ஒரு மாநிலத்தையே குடும்பச் சொத்தாக பிரித்துக் கொள்வது
ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் இருக்கும் அந்த கேடுகெட்ட சகிப்புத்தன்மை, எதையும் மறந்து விடும் மனப்போக்கு, சுயஒழுக்கமின்மை இப்படி எத்தனையோ [என்னையும் சேர்த்துத் தான்!]

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ஏன் இவ்வளவு நேரம் என் இமேஜ் டேமேஜ் ஆனது பத்தாதா? அப்புறம் சாருவுக்கும் எனக்கும் வித்தியாசம் வேண்டாம்...

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

ஸ்விச்சர்லாந்து! இனிமேல் தான் போக வேண்டும். தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால், நீளமான ஜாக்கெட், கணமான பேண்ட், உயரமான பூட்ஸ் எல்லாம் போட்டுக் கொண்டு, ஒரு கர்சீப்பை கட்டிக் கொண்டிருக்கும் ஹீரோயினுடன் அந்த ஊரில் உள்ள ஒரு அழகான, அமைதியான சாலையில் நின்று கொண்டு கேடுகெட்ட ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடலாம்! [ஆமா, அது என்ன மாதிரியான ரசனை?]

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

எளிமையான வாழ்க்கை. தெளிவான சிந்தனை!

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

நண்பர்களுடன் நைட் ஸ்டடி...[டேய் அவ நிஜம்மா உன்னை பாக்குறா மச்சான்...]

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

சூஸ் தி பெஸ்ட் ஆன்சர்!

வாழும் போது மற்றவருக்கு பயனாய்; வாழ்ந்த பிறகு மற்றவருக்குப் பாடமாய்!

வாழும் போதும், வாழ்ந்த பிறகும், வாழ்வது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் எழுதிய மற்ற தொடர் பதிவுகள்:

இந்திரன் கெட்டதும் சந்திரன் கெட்டதும்

பெய்யெனப் பெய்யும் மழை - சிறு குறிப்பு வரைக

கற்றதும் பெற்றதும்

தலைப்பு நல்லா இருக்கா? மழைக்கும் பக்கங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை தான். ஆனால் எழுதப் போவதற்கும் இதற்கும் சம்மந்தம் இருக்கிறதே...எல்லாம் நம்ம வாத்தியார் வழி தான். அவர் டெல்லியில் இருந்த போது அவருக்கு கனையாழியின் கடைசி பக்கங்கள் கிடைத்தது. வகைதொகை இல்லாமால் எழுதினார். [இப்படிச் சொன்னால் திட்டுவதாய் அர்த்தம் இல்லையே?] எனக்கு இந்த வலைதளம் தான் கனையாழி, குமுதம், விகடன், கல்கி எல்லாம்...அது தான் என் வலைப்பக்கங்களிருந்து கொஞ்சம் பக்கங்களை ஒதுக்கி, அதாவது நம் பள்ளி நாட்களில் ஒரு நோட்டை இரண்டு பாடத்திற்கு பயன்படுத்த நோட்டின் மத்தியில் ஒரு பக்கத்தை மடக்கி அம்புக்குறி மாதிரி செய்வோமே, அதே போல் செய்து என் வாழ்வின் அனுபவச் சிதறல்களை எடுத்து கொஞம் மெருகூட்டி, பதப்படுத்தி....அதை ஒரு கோர்வையாக்கி...என்ன புரியலையா? ஒன்னுமில்லை, வந்தது போனது, பூசுனது, பூசாதது இப்படி எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிக்கடி பலவிதமான மொக்கைகளா போட்டுத் தள்ளலாம்னு பாக்குறேன்!

பின்ன என்னங்க, எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறார் என்ற கதையாய் எத்தனை நாள் தான் யாருமே வராத டீ கடையை ஆத்திக் கொண்டிருப்பது. இந்த உலகத்துல காலை ஆட்டிட்டே இருக்கணும், இல்லைன்னா சோலி முடிஞ்சி போச்சுன்னு கொண்டு போய் அடக்கம் பண்ணி புடுவாய்ங்க என்று நடிகர் திலகம் எங்கோ சொன்னதாய் ஞாபகம். அவர் சொன்னது போன்ற ஒரு காலாட்டலுக்கான முயற்சி தான் இது. அதுக்காக சார் நேத்து ராத்திரி பூரா தூங்கல, பாத்ரூம் போகல, சரியா சாப்புட்ல என்றெல்லாம் எழுதி மொக்கை போட மாட்டேன். ஆனா நீங்க எல்லாரும், மத்தவங்களுக்கு செய்ற மாதிரி, ஐம் ஃப்ஸ்ட், இதோ பல்லு வெளக்கிட்டு வந்துட்றேன் என்றெல்லாம் பின்னூட்டம் போடணும் சரியா? சரி மேட்டருக்கு வருவோமா?

இந்தப் பரதேசத்தில் தனிமையிலே இனிமை காண முடியுமா என்று யோசித்து வந்த அத்தியாயம் இனிதே நிறைவடைந்து விட்டது. சரியாய் என் மனைவி இங்கு வரும் முதல் நாள் அன்று ஒரு பதிவை போட்டிருக்கிறேன். என்ன? மனைவி வந்தாச்சா, எங்கே சொல்லவேயில்லை என்றெல்லாம் என் முகத்தை பிங்க் கலரில் மாத்தக் கூடாது சொல்லிட்டேன்! அதற்குப் பிறகு இந்தப் பக்கம் கை வைக்கவில்லை. [தலை வைத்துப் படுக்க இது என்ன பாயா?] உடனே, இந்த ஆம்பளைங்களே இப்படித் தான் ஒரு பதிவு போட வக்கில்லைன்னாலும் பொண்டாட்டியை குறை சொல்லலைன்னா இவங்களுக்குத் தூக்கம் வராதே என்று என் இனிய சிநேகிதிகளான நீங்கள் நினைப்பதற்குள் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று தெளிவு படுத்திக் கொள்கிறேன். மாறாக அவள் தான் நான் யு டியுப் பார்க்கும் போதெல்லாம் இதென்ன எப்போ பாத்தாலும் யூ டியுப், ஒழுங்கா ப்ளாக் போட்ற வழியை பாருங்க என்று நச்சரிக்கிறாள். பரிட்சைக்கு படிக்காம அப்படி என்ன டீவி வேண்டிக் கிடக்கு என்று அம்மா திட்டுவது போல் இருக்கிறது.

நானும் இந்த உரைநடை போட்டிக்கு ஒரு சிறு காவியத்தை எழுதிடுவோம்னு பாக்குறேன், அதை பத்தி நெனைக்கும் போது மனசுல கதையா கொட்டுது ஆனா அதை எழுதலாம்னு உக்காந்தா இந்த எழுத்து தான்...வார்த்தை...!!!! பைத்தியக்காரனை [பேரைத் தேடி போட்டுருக்கலாமோ?] நினைத்தால், இல்லை இல்லை நாயகனை நினைத்தால் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. 30,000 செலவு பண்ணி இப்படி எல்லாம் தமிழை வளர்க்கிறாரே என்று. வீட்டில் திட்ட மாட்டாங்களா சார்?

வெண்ணிலா கபடி குழு பார்த்தேன். எனக்குப் பிடித்தது. என்ன தமிழ் சினிமாவில் ஹீரோ சைக்கிளில் பஸ்சை முந்தினால் காதல் வந்து விடுகிறது. கிஷோர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த அருமையான நடிகர் என்று தோன்றுகிறது. நெல்லை பாஷையை அருமையாய் பேசி நடித்திருக்கிறார். அதுல் குல்கர்னிக்கு வந்த நிலை இவருக்கு வரக் கூடாது என்று எங்கும் இல்லாத ஆண்டவனை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். சரண்யா கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல இருக்கிறார். இசை அருமை. லேசா பறக்குது மனசு மனசு...மனசு லேசாய் பறக்கவே செய்கிறது. செல்வகணேஷை யாரும் கண்டு கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.
பசங்க படம் பார்த்தேன். கை தட்டி அன்புவை பிழைக்க வைப்பதை தவிர்த்தால் மிக அருமையான படம் தான். சுப்ரமணியபுரத்தில் செய்ய ஆரம்பித்தது. பேக்ரவுண்டில் இளையராஜா பாட்டை ஓட விடுவது...[சிறு பொன்மணி அசையும்...] இதிலும் தொடர்கிறது. செல்ஃபோனில் ரிங்டோனாக வித விதமான பாட்டுக்களை வைத்துக் கொண்டு அவர் அலம்பு விடுகிறார். சும்மா சொல்லக் கூடாது, ராஜா என்னமா போட்ருக்காரு...படத்தில் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஃபோன் செய்து பேசுவது... அதிலும் "என்ன ஜப்பான்ல இருந்தா? புஜ்ஜிமாவா, டேய் அது கொழந்தை டா" சீன் சுப்பர்!

வேலியில் போவதை வேட்டிக்குள் விட்ட கதையாய் கொழுப்பெடுத்துப் போய் யாரடி நீ மோகினி பார்த்தேன். நான் கடவுளில் போலீஸ் பேசும் டயலாக் தான் ஞாபகம் வந்தது. அடுத்து அதே காட்சியில் ரஜினி பேசும் வசனமும் ஞாபகம் வந்ததால் விட்டு விட்டேன். ஒரே இரவில் ஒரு மண்ணும் தெரியாத தனுஷ் ப்ரோக்ரமாய் அடித்துத் தள்ளுகிறார். ஜாவா கன்சோலில் மெசேஜ் பாக்ஸ் வருகிறது. ஒரு மென்பொருள் பொரியாளனாய் மனம் கொதிக்கிறது. ஆள் முக்கால் ஆடை காலாய் இடைவேளை வரை வலம் வரும் நயந்தாரா வீட்டில் ஒரே ஆச்சாரமாம். காலையில் கோழி கூவ எந்திருக்கனுமாம். அருகம்புல் ஜூஸ் குடிக்கனுமாம். எல்லா பொம்மனாட்டிகளும் இழுத்து போத்திட்டு இருக்கனுமாம். இந்த கண்டிஷன் எல்லாம் போட்றவர் யார் என்று பார்த்தால் கே. விஸ்வநாத். அற்புதமான பல படங்களை எடுத்த அவரால் அந்தப் படத்தில் எப்படி நடிக்க முடிந்தது என்று தெரியவில்லை. நெஜம்மா முடியலை...கார்த்திக் எம்.ஜி.ஆர் கலரில் இருக்கிறார். ஆனால் நயந்தாரா, சரண்யா என்று எல்லோரும் துரத்தி துரத்தி தனுஷை லவ் பண்ணுகிறார்கள். எப்படி இவர் விடாமல் இந்த மாதிரி கேரக்டரிலேயே நடிக்கிறார் என்று தெரியவில்லை। அவரைப் பார்த்தாலே பாவமாய் இருக்கிறது. கண்ட நாள் முதலில் இது தான்டா லவ்னு சிரிப்பார். இதில் அழுகிறார், கோபப்படுகிறார். போதும் கார்த்திக் கொல்லாதீங்க... முதலில் தமிழ் சினிமாவில் அமேரிக்க மாப்பிள்ளை, இந்த மாதிரி சொத்தை நண்பன் கேரக்டரை எல்லாம் தடை செய்ய வேண்டும்! சாரு நம்மை எல்லாரையும் திட்டுவது சரி தான்...இந்தப் படம் ஏன் சார் நூறு நாள் ஒடனும்?

இவ்வளவு காண்டாய் பேசும் நானே எல்லாம் கலந்து கட்டி ஒரு மசாலா பதிவைத் தானே போட வேண்டி இருக்கு...விடுங்க விடுங்க! தமிழர் என்று சொல்லுவோம், தறி கெட்டுப் போவோம்!

இன்று எத்தனை பேர் கூகுளாரின் லோகோவை கவனித்தீர்கள் என்று தெரியவில்லை. அமேரிக்காவில் வாழும் தம்மாத்துண்டு குழந்தைகளிலிருந்து 12ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் வரை கடந்த இரண்டு மாதங்களாக அனைவருக்கும் ரவுண்டு கட்டி நேஷனல் டிசைன் மியுசியத்துடன் இணைந்து ஒரு அற்புதமான போட்டி நடத்தி முடித்துள்ளது. அதாவது "நான் விரும்பும் உலகம்" என்ற தலைப்பில் எல்லா குழந்தைகளும் அவரவர் விருப்பம் போல கூகுள் லோகோவை வடிவமைக்க வேண்டியது. தேர்ந்தெடுக்கப்படும் லோகோ ஒரு நாள் முழுதும் கூகுள்.காமை அலங்கரிக்கும். எத்தனை சிறப்பான விஷயம். கூகுளின் லோகோவையும் அவர்கள் அடிக்கடி அதன் முகம், நிறம் மாற்றும் உக்திக்கே பலர் அடிமை. அதில் நானும் ஒருவன். இதில் இப்படி ஒரு போட்டியை எல்லா குழந்தைகளுக்கும், பள்ளிகளுக்கும் வைத்து இத்தனை பொறுப்புடன் திறமைகளை வெளிக்கொணரும் பாங்கை நான் என்ன சொல்வதென்று புரியவில்லை. இந்தப் போட்டியில் வெல்லுபவருக்கான பரிசுகளைப் பாருங்கள்
1. முதல் பரிசு பெறும் குழந்தைக்கு $15,000 படிப்பிற்கான ஸ்காலர்ஷிப் பரிசு

2. கூகுள் அலுவலகத்திற்குள் ஒரு பயணம்

3. ஒரு லேப்டாப்

4. வென்ற லோகோவைக் கொண்ட ஒரு டீஸர்ட்

5. இதோடு மட்டுமல்லாமல், அந்தக் குழந்தையின் பள்ளிக்கு கம்ப்யுட்டர் லேப் வளர்ச்சிக்காக $25,000 பரிசு.

பார்க்க நமீதாவைப் போல் பிரம்மாண்டமாய் பலவித படங்களைக் காட்டும் பல இணையதளங்களில் உள்ளே சென்றால் கமலா காமேஷ் ரேஞ்சுக்குக் கூட விஷயம் இருக்காது. ஆனால் கூகுள், ஒரு படம், ஒரு உள்ளீட்டு வசதி, ஒரு பொத்தானை வைத்துக் கொண்டு காட்டும் படம் இருக்கிறதே அப்பப்பா.....சமீபத்தில் கூட சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதற்காக தன் அலுவலகத்தைச் சுற்றி உள்ள புற்களை சமன்படுத்த இயந்திரத்தை உபயோகிக்காமல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்! வேலை பாத்தா இங்கே பாக்கணும்!

சினிமாக்காரனுக்கு சமூகப் பொறுப்பு இல்லையா? எழுத்தாளனுக்கு சமூகப் பொறுப்பு இல்லையா என்று வகை தொகை தெரியாமல் நாம் பல பேரை கேள்வி கேட்டு டார்ச்சர் செய்து [என்ன அரசியல்வாதிகளை விட்டுட்டேனா? இல்லை தெரியாம தான் கேக்குறேன், அவங்களுக்கும் சமூகத்துக்கும் என்ன சார் சம்மந்தம்?] . பணத்தை மட்டுமே பிரதானமாய் நினைத்து வாழும் பல வித நிறுவனங்களுக்கு மத்தியில் கூகுள் போன்ற ஒரு நிறுவனம் இத்தகைய சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவர்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பில் ஒரு பங்காவது நம்மில் இருக்கிறதா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தப் போட்டி தொடங்கும் போதே இதைப் பற்றி பதிய வேண்டும் என்று நினைத்தேன். பதியமுடியவில்லை. என் சமூக பொறுப்பு எப்படி இருக்கிறது பாருங்கள். இந்த போட்டியின் அழகியல் என்னை மிகவும் கவர்கிறது. இப்படி ஒரு தலைப்பை குழந்தைகளிடம் கொடுத்து தங்களுடைய லோகோவை வடிவமைக்கச் சொல்லி அழகு பார்ப்பது எத்தனை பேருக்கு வரும்? நாங்க தான் நாசமா போயிட்டோம், நீங்களாவது இந்த உலகத்தை காப்பாத்துங்க என்று குழந்தைகளுக்கு இந்த வகையில் ஒரு அறிவிப்பு விடுத்துள்ளது. குழந்தைகளின் உலகம் எத்தனை அழகானது. எத்தனை வண்ணமயமாகவும், பரிசுத்தமாகவும் இருக்கிறது. கூகுளில் இதே பணியில் ஈடுபட்டிருப்பவர்களைக் காட்டிலும் எந்த விதத்திலும் குழந்தைகள் சலைத்தவர்கள் இல்லை என்பதை கீழ் உள்ள படங்கள் பறைசாற்றுகின்றன. எனக்குப் பிடித்த சில படங்களை இங்கே கொடுத்திருக்கிறேன். கண்டு களியுங்கள்...

வெற்றி பெற்ற படம்


3வது படிக்குது...நானோடேக்னாலஜி அதுலயும் அண்டத்துல...

வாங்கப்பா பீச்சுக்கு என்று ஒரு பிஞ்சுக் குழந்தையின் குரல், ராணுவ ஆடைகளை எங்கே தொங்க விட்டிருக்கிறார் பாருங்கள்!



இந்தப் படம் தப்பு தான், உலகத்தை ஒரு அமைதியான இடத்துக்கு தூக்கிட்டு போகுதாம்...சுத்தி இருக்குற இடமா பிரச்சனை? உள்ளே இருக்குறவங்க தானே பிரச்சனை...ஆனாலும் அருமை...


இன்னும் பாருங்க...            




பூமி உருகுகிறது, அதன்மேல் தெர்மா மீட்டரை வைத்திருக்கிறார். அந்தப் போலார் கரடியை பாருங்கள். எத்தனை பாவமாய் உட்கார்ந்திருக்கிறது.

நம்பிக்கை துளிர் விடுகிறது...

ரணகளம்...






மிச்சத்தை வெண் திரையில் காண்க...

என் முதல் விஞ்ஞானச் சிறுகதை [என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்!] இன்னும் சற்று மெனக்கெட்டு எழுதியிருந்தால் நன்றாய் வந்திருக்கும் என்று தோன்றுகிறது. மத்தபடி நீங்க தான் படிச்சிக் கிழிக்கனும்![என்னைத் தான்!]

முன் குறிப்பு: சுஜாதாவின் வாசனையடிக்கிறதைத் தவிர வேறு ஏதாவது புதுசாய் சொன்னால் தன்னியனாவேன்!

------------------------------------------------------------------------------------------------

சில நாட்களாகவே அவரை பார்க்கிறேன். நான் போகும் இடங்களிலெல்லாம் வந்து என்னையே வெறித்து பார்க்கிறார். ஒரு நாற்பது, ஐம்பது வயது இருக்கும். சாந்தமான முகம். நெற்றியில் விபூதிப் பட்டை. இடுப்பில் பட்டினத்தார் போல் ஒரு வேட்டி. அவ்வளவு தான். இவரை முன் பின் நான் பார்த்ததில்லை. ஏன் என்னை இப்படி பின் தொடர்கிறார் என்று புரியவில்லை. இன்று கேட்டு விடுவது என்று தீர்மானித்தேன். இந்த வரி வரை நான் ஆணா பெண்ணா என்று சொல்லவில்லை. பெண்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒருவர் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார் என்றவுடன், ஆண்களுக்கு நான் செம ஃபிகர் போல என்று ஒரு எண்ணம் உருவாகியிருக்கும். அப்படித் தோன்றியிருந்தால் அதை எச்சில் தொட்டு அழித்து விடுங்கள். நான் ஒரு ஆடவன். கடவுளுக்கு மிகவும் பயந்தவன். ஆண்டவன் எல்லாத்துக்கும் ஒரு கணக்கு வச்சுருக்கான் என்று தீர்க்கமாய் நம்புகிறவன். போர்டில் முன் பெயர் அழிந்து போன ஒரு அன் கோ. வில் குமாஸ்தாவாய் தேமேயென்று பணிபுரிந்து மாதம் 6,350 ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு கட்டை பிரம்மச்சாரி! சரி ஏன் பின் தொடர்கிறார் என்று கேட்டு விடுகிறேன்.

வணக்கம். நானும் கொஞ்ச நாளா பாத்துட்டே இருக்கேன், நீங்க என்னை பின் தொடர்ந்து வர்ற மாதிரியே இருக்கு. மன்னிக்கனும், நீங்க யார் என்னன்னு எனக்கு தெரியலை. கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.

நான் கேட்ட கேள்விக்கு அவர் திருப்பிக் கேட்ட கேள்வி என்னை அதிர வைத்தது. மிகுந்த ஆச்சர்யத்துடன் என்னை பார்த்து....

தம்பி, நான் கேட்கிறேன் என்று தவறாய் நினைக்காதே, நான் உன் பார்வைக்குத் தெரிகிறேனா?

என்னங்க இப்படி கேக்குறீங்க? பின்னாடியே வந்துட்டு இருந்தா கவனிக்காமலா இருப்பாங்க?

நான் உன் முன் நின்றாலும் உன் கண்களுக்குத் தெரிய சாத்தியமில்லயே...நீ முதலில் என்னுடன் வா, தனியாகப் பேசுவதாய் உன்னை யாராவது தவறாக எண்ணக் கூடும். என்று ஒரு சுவருக்குப் பின்னால் கூட்டிக் கொண்டு போனார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நீங்க என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியலை.

சரி, நான் சொல்வதைப் போல் செய். அதோ வருகிறாரே, அவரிடம் நான் நான் யார் என்று கேள்...

எதுக்குங்க, எனக்கு வேலை இருக்கு. நீங்க ஏன் என் பின்னாடி வர்றீங்கன்னு சொல்லுங்க..

எனக்காக கொஞ்சம் கேளேன் தம்பி.

இந்தாப்பா...இங்கே வா! வந்தான். இவர் யாருன்னு உனக்குத் தெரியுமா?

அவன் என்னை ஒரு மாதிரி பார்த்தான். என்ன காண்டிட் காமெர ப்ரோக்ராமா சார் என்று சுற்றும் முற்றும் பார்த்து சிரித்தான்.

இவர் யாருன்னு சொல்லுப்பா...

ம், இவர் தான் அறிஞர் அண்ணா..போய்யா, சொவத்தைக் காட்டி யாரு யாருன்னு காலங்காத்தால...சே! அவன் போயேவிட்டான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் என்னை பார்த்து சிரித்தார்.

நான் தான் சொன்னேனே, நான் யாருக்கும் தெரியமாட்டேன். உனக்கு எப்படித் தெரிந்தது என்று தான் எனக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது!

ஓ, அப்போ நீங்க தான் கடவுளா? எங்க இப்படி என்றேன் எகத்தாலமாய்...

எல்லாம் உனக்காகத் தான்! போகலாமா என்றவரின் பேச்சை மதிக்காமல், அந்த வழியே செல்லும் ஒரு பெண்ணை கூப்பிட்டு,

இது யாரு தெரியுதா என்று கேட்டேன். எது என்று அவர் கேட்டார், இதோ என்று அவரைக் காட்டினேன். என்ன கிண்டல் பண்றியா செருப்பு பிஞ்சிரும் என்று சொல்லியபடியே அவரும் போய் விட்டார். எனக்கு நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவர் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார்.

நீ எத்தனை பேரிடம் கேட்டாலும் உனக்கு இத்தகைய பதில் தான் கிடைக்கும். நான் சொல்வதைக் கேள் என்றார் தெளிவாய்.

சற்று உட்கார்ந்தால் தேவலாம் என்று பட்டது. இருவரும் அருகில் இருந்த திண்ணையில் உட்கார்ந்தோம்.

சொல்லுங்க..நீங்க யாரு, ஏன் என் பின்னாடி வர்றீங்க?

உன் காலம் முடியப் போகிறது, உன்னைக் கூட்டிப் போகவே வந்தேன். நான் தான் எமன் என்றார் சாய்ந்து அமர்ந்தவாறே.

எனக்கு சப்த நாடியும் அடங்கிப் போனது.

என்ன? எமனா? உங்க எருமை எங்கே? கதாயுதம் எங்கே? பாசக்கயிறு எங்கே என்று ஏதேதோ உளறினேன்.

அதெல்லாம் நீங்களாய் மனமுவந்து கொடுத்த வேடங்கள். அப்படி நான் இல்லையென்று கேட்டால் நான் என்ன செய்வது?

நீங்க யார் கண்ணுக்கும் தெரியலை, அதை நம்புறேன். ஆனா, உங்களை எமன்னு நான் எப்படி நம்புறது?

மனுஷங்க நீங்க யாரைத் தான் நம்பியிருக்கீங்க? அதோ பார், அங்கு வருபவனை சற்று கூர்ந்து கவனி. அவன் நம் அருகே வந்ததும் துடிதுடித்து விழுவான்.அப்படிச் சொல்லி விட்டு அவர் கண்களை மூடி ஏதோ முனுமுனுக்க ஆரம்பித்தார்.

என்ன ஆச்சர்யம், எங்களின் பக்கம் வரும் வரை செல்ஃபோனில் உற்சாகமாய் பேசி வந்தவன், பக்கம் வந்ததும் துடிதுடித்து விழுந்தான். நடந்து சென்றவர்கள் அவனை ஒரு ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள். அவலம் அடங்க சற்று நேரம் ஆனது.

செத்துட்டானா? என்றேன்.

அவன் கதை முடியும் காலம் இன்னும் வரவில்லை. சற்று ஆட்டம் காண்பித்தேன் அவ்வளவு தான். பிழைத்து விடுவான். இப்போதாவது நீ என்னை நம்புகிறாயா?

எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. எனக்கு வயசு 35 தானே, அதுக்குள்ள என்ன என்றேன் வேர்த்து விறுவிறுத்து...

ஏன் பூலோகத்தில் 35 வயதில் யாரும் சாவதில்லையா? உனக்கு அல்பாயுசு என்று எழுதி இருக்கிறதே அப்பா, நான் என்ன செய்வது?

எனக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. இதெல்லாம் நிஜம் தானா, நான் இறந்து விடப் போகிறேனா? வாழ்வில் ஒரு சுகமும் அனுபவிக்காமல் இறந்து விடுவேனா? நான் தான் சகல செளக்கியங்களுடன் இருக்கிறேனே..எனக்கு எப்படி மரணம்?

ஐய்யா, நீங்கள் எமன் என்றே ஒத்துக் கொள்கிறேன். நான் அதற்குள் சாகத் தான் வேண்டுமா? இதற்கு வேறு வழியே இல்லையா?

உங்கள் கதைகளில் வருவதைப் போல் என்னிடமிருந்து உன்னை மீட்க சாவித்திரி கூட இல்லையே உன்னிடம்? நான் என்ன செய்வது?

ஐய்யா, அதைத் தான் நானும் சொல்கிறேன். இந்த நாள் வரை, ஒரு கட்ட பிரம்மச்சாரியாய் எந்த சுகங்களையும் அனுபவிக்காமல் வாழ்ந்துட்டேன். தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்.

அது முடியாது தம்பி. காலம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். எல்லாம் விதிப் படி தான் நடக்கும். அதைத் தடுக்க என்னாலும் முடியாது.

இதற்கு வேறு வழியே இல்லையா? தயவு செய்து எனக்காக யோசித்துப் பாருங்கள்.

இதெல்லாம் நான் உன் பார்வைக்குத் தெரிந்ததால் வந்த விணை. எங்கோ எப்படியோ ஒரு கோளாறு நிகழ்ந்திருக்கிறது. அது உன் தவறல்ல. அதை நாங்கள் தான் சரி செய்ய வேண்டும். இத்தனை நாள் உன்னை கண்கானித்ததில் நீயும் எந்த ஒரு லெளகீக சுகங்களை அறியாதவன் என்பதை நானும் புரிந்து கொண்டேன். உன்னால் என்னை பார்க்க முடிகிறது என்பதால் உன் மீது ஒரு இனம் தெரியாத பாசம் வருகிறது. அதனால் உனக்காக மட்டும் இந்தச் செயலை செய்கிறேன். இதை நீ வேறு யாரிடமும் சொல்லி விடக் கூடாது. சொல்லி விட்டால் அந்தக் கணமே உன் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடும் என்று நீ பல கதைகளில் படித்திருப்பாய்! நான் இந்தக் கோளாறு எப்படி நடந்தது என்று எமலோகம் சென்று பார்த்து விட்டு வருகிறேன். நான் இரண்டு நாளில் திரும்பி வந்து விடுவேன். நீ அதற்குள் உன் வாழ்வை வாழ்ந்து கொள். இதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது!

ஐய்யா, மிக்க நன்றி. மிக்க நன்றி...ஆனா ரெண்டு நாள்ல நான் என்னங்க வாழ்றது? கொஞ்சம் நீங்க பொறுத்து வந்தீங்கன்னா, நல்லா இருக்கும்.

அடேய் மானிடா, நான் சொல்வது எமலோகத்தின் இரண்டு நாட்கள். அது பூமியைப் பொறுத்தவரை சில ஆண்டுகளடா...

எனக்கு தெரியலையே...இருந்தாலும் உங்க கருணைக்கு ரொம்ப நன்றி ஐய்யா...ரொம்ப சந்தோஷம்!

அது போகட்டும், இதற்காக நீ எனக்கு என்ன தருவாய்?

நான் உங்களுக்கு என்னங்க தர்றது? நான் ஒரு சாதாரண மனுஷன்! நீங்க வேற..

பூலோகத்தில் பணம் என்னும் பிசாசு இல்லாமல் ஒரு வேலையும் நடக்காதாமே, அந்தப் பிசாசை நான் பார்க்க வேண்டுமே?

இது தான் அந்தப் பிசாசு என்று என் பர்சில் இருந்து 50 ரூபாயை எடுத்துக் காட்டினேன்.

சரி, மறைக்காமல் ஒன்றை சொல். இதைப் போல் உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது?

எனக்கு தான் எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லையே, வாங்குற சம்பளத்துல மிச்சம் புடிச்சி ஒரு லட்ச ரூவா பேங்க்ல போட்டு வச்சிருக்கேன்...

பலே...அப்படியென்றால் நான் செய்யும் இந்த உதவிக்காக நீ எனக்கு அதில் பாதியை தர வேண்டும். என்ன சொல்கிறாய்?

ஐயய்யோ, அது எதுக்குங்க உங்களுக்கு?

மேலுலகத்தில் அனைவரும் பணத்தைக் காண ஆவலாய் இருக்கிறார்களடா...நானும் எல்லா உலகத்து நாணையங்களையும் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கும் அது உதவியாய் இருக்கும்.

அதுக்கு அம்பது ரூபா போதுமே?

அடேய், ஒருவனை அழைத்து வருவதாய் சொல்லி வந்திருக்கிறேன். நீ இல்லாமல் திரும்பிப் போனால் நான் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் இந்தப் பணத்தைக் கொடுத்துத் தானே நான் சரி கட்ட வேண்டும்.

ஒஹோ எமலோகத்திலும் லஞ்சம் வந்து விட்டதா?

அது தான் நீங்கள் வந்து விட்டீர்களே, பின் லஞ்சம் வராதா? வாக்குவாதம் செய்யாமல் பணத்தைக் கொடு! நீ கொடுத்தே ஆக வேண்டும்.

உயிரை விடவா ஐம்பதாயிரம் பெருசு...வாங்க ஏடிஎம் ல எடுத்துக் கொடுக்குறேன்.

அப்பாடா, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு. எமனுக்கே லஞ்சம் கொடுத்து வரலாற்றில் இடம் புடிச்சிட்டோம் என்ற மிதப்பில் நான் ரோட்டை க்ராஸ் செய்யும் போது ஒரு தண்ணி லாரி எல்லா நீரையும் கொட்டிக் கொண்டே என் மேல் அநியாயமாய் ஏறிச் சென்றது. நான் ரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருக்கும் போது "டேய், அந்த ஆட்டோவைக் கூப்பிடு" என்று கத்தும் யாரோ ஒருவரின் குரல் மிகவும் பழக்கப்பட்டதாய் இருந்தது.

175 ஆவது பதிவு

மரணம் சம்பவிக்கும் வீடுகள் என்றும் விசித்திரமானவை. அத்தனை காலமும், பத்தோடு பதினொன்றாக அந்தத் தெருவில் இருந்த அந்த வீடு திடீரென ஒரு வரலாற்றுச் சின்னமாய் உயிர்த்தெழுந்து விடுகிறது. முதன் முதலாய் மேடையேற்றப்பட்ட குழந்தையைப் போல் அந்த வீட்டின் மீது அத்தனை பேரின் பார்வையும் பதிந்து விடுகிறது. விடிந்தும் எறியும் அந்த ஜீரோ வாட்ஸ் பல்பும், தெருவில் இறைந்து கிடக்கும் நாற்காலிகளும் அந்த வீட்டின் துக்கத்தை மெளனமாய் பறைசாற்றுகின்றன. இத்தனை நாள் அந்த ஒரு வீடு இருப்பது கூடத் தெரியாமல் அதை கடந்து போனவர்கள், இன்று திடீரென அந்த வீட்டை திரும்பிப் பார்த்தபடியே செல்கிறார்கள். இறந்தவரை எப்படி வைத்திருக்கிறார்கள் என்று பார்க்கும் ஆவல் அந்த வீட்டைக் கடக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

மரணம் ஒவ்வொரு வீட்டின் வாசல்படியிலும் வசதியாய் அமர்ந்திருக்கிறது. மரணமும் குழந்தையை போல் தான். ஒரு குழந்தை தனக்கு வேண்டியதை தன் வீட்டிலிருந்து எத்தகைய உரிமையோடு எடுத்துக் கொள்கிறதோ, அதே உரிமையுடன் தான் மரணமும் தனக்கு வேண்டியதை எடுத்துச் செல்கிறது. எந்த ஒரு பெற்றோருக்கும் என்றுமே அடங்காத குழந்தையாய் அது இருக்கிறது. மரணத்திற்கு இசைந்தே வாழ்க்கை இயங்குகிறது. மரணம் ஒரு காட்டாறு போல வீறு கொண்டு ஓடுகிறது, வாழ்க்கைக் கரைகள் அதற்கேற்ப வளைந்து நெளிந்து தன்னை உருவாக்கிக் கொள்கின்றன.

மரணத்தின் அதிர்வு இடத்திற்கு இடம் மாறுகிறது. கிராமங்களைப் போல் நகரங்களில் யாரும் ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுவதில்லை. கிராமங்களில் ஏற்படும் அதே அதிர்வை ஒரு மரணம் நகரங்களில் ஏற்படுத்தினாலும் அங்கு துக்கங்கள் நாசூக்கானவையாகத் தான் இருக்கின்றன. துக்கம் விசாரிக்க வருபவர் அத்தனை பேருக்கும், மரணம் சம்பவித்த அந்த நிமிடத்தை பற்றி கேட்டுத் தெரிந்த கொள்ள ஆவலாய் இருக்கிறது. அதை தங்கள் மனத்திரையில் ஓட விட்டுப் பார்த்துக் கொள்கிறார்கள். "தாகமா இருக்கு, கொஞ்சம் தண்ணி கொடுன்னாரு" என்று சொல்லும்போதே நம் மனம் அப்போது தான், அப்போது தான் என்று பரபரக்கிறது. நமக்கும் ஒரு நாள் இப்படித் தான் நடக்கும் என்று அப்போது தோன்றுவதேயில்லை. அந்த நொடியை ஒவ்வொருவரும் தமக்குள் அனுபவித்து வெவ்வேறு வர்ணனைகளுடன் அடுத்தவருக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

என்ன சோகம் இருந்தாலும் மரணம் எல்லோருக்கும் ஒரு வித விடுதலை உணர்வை தருகிறது. இறந்தவருக்கு நிரந்தர விடுதலை. மற்றவருக்கு தற்காளிக விடுதலை. அந்த மரணத்தில் பங்கு கொண்ட யாரும் அன்று செய்ய வேண்டிய காரியத்தை செய்யத் தவறியதற்காக தண்டிக்கப்படுவதில்லை. மரணம் அன்று ஒரு நாள் எல்லாவற்றையும் மன்னித்து ஆசிர்வதிக்கிறது. இந்தக் கால ஓட்டத்தின் பிடியிலிருந்து எல்லோரையும் சற்று தளர்த்தி ஆசுவாசப்படுத்துகிறது. சற்று நேரம் அழுது ஓய்ந்ததும் மனது லேசாகிறது. அப்போது தான் பலருக்கு வானத்தையும், நிலவையும், மரங்களின் சலசலப்பையும், குழந்தைகளின் விளையாட்டுக்களையும் பார்க்க முடிகிறது. இறந்தவரின் மூலம் பல விட்டுப் போன உறவுகள் ஒன்று கூடுகின்றன. அன்று தான் எல்லோரிடமும் நிறைய நேரம் இருக்கிறது. அவரைப் பற்றி பேச ஆரம்பித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்கள்.

அப்படி மனம் விட்டுப் பேசும் போது, பல விதமான மரணங்களைப் பற்றியும், அதைச் சார்ந்த சம்பவங்களைப் பற்ரியும் தீர ஆலோசிக்கப்படுகிறது. தான் அதில் பங்கு கொள்ளாதவரை மரணம் நேர்ந்த சம்பவங்களைப் பற்றிக் கேட்க எல்லோருக்கும் ஆவல் இருக்கிறது. அதைப் பற்றிப் பேசப் பேச அது வளர்ந்து கொண்டே வருகிறது. வாழ்க்கை எத்தனை விசித்திரமானது, மரணத்தின் முன் அது எத்தனை அற்பமானது என்று நினைக்கத் தோன்றுகிறது. மரணத்திற்கான எல்லா பதில்களும் வாழ்க்கைக்கான கேள்விக்குறிகளாய் நம் மீது குவிகின்றன. மரணத்தைப் பற்றி சிலாகிக்கும் போதும், அதன் நிதர்சனத்தை உணரும் போது, நம்மில் எங்கோ அடி ஆழத்தில் புதைந்து போய் விட்ட மனிதம் ஆனது மெல்ல தலை காட்டுகிறது. அந்த சில நொடிகள் நாம் பிறந்த குழந்தையாய் மாறி விடுகிறோம். அது வெறும் சில நொடிகள் தான். அந்தக் கனவு கலைந்தவுடன் நாம் சராசரியாகி விடுகிறோம். ஒவ்வொரு மரணமும் வாழ்க்கை எப்படி வாழப்பட வேண்டும் என்று செய்தியை உணர்த்திக் கொண்டே இருக்கிறது. நாம் கண்களை மூடி பயணிக்கிறோம்!

அமெரிக்காவிற்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்தை பிடித்து தள்ளியாகி விட்டது. அந்த இயந்திர சக்கரத்தினூடே தலையைக் கொடுத்து பயணப்பட ஆரம்பித்தாகிவிட்டது. வங்கிக் கணக்கு நேர்த்தியாகிவிட்டது. சமூக பாதுகாப்பு எண் [சோசியல் செக்யுரிட்டி நம்பரை எப்படி சொல்வது?] வந்தாகிவிட்டது. அபார்ட்மென்ட் செட் ஆகி விட்டது. பாத் டப்பிற்கு ஷவர் கர்ட்டெயின் வாங்கியாகி விட்டது. [இதெல்லாம் ரொம்ப முக்கியமா என்பவர்களுக்கு கீழே விளக்கியிருக்கிறேன்] பிஎஸ் என் எல்லின் தயவில் கொஞ்சம் ஃபோட்டோ, கொஞ்சம் படம் என்றில்லாமல் யு ட்யுப் வீடியோ சரளமாய் வருகிறது. குக்கர் சத்தம் போட்டால் ஸ்மோக் டிடெக்டர் அலறுகிறது! வெஜிடெபிள் கட்டரால் சற்று விசிறி விட்டால் சாந்தமாகி விடுகிறது!

காம்ப்பவுண்ட் சுவரே இல்லாத என் அபார்ட்மென்டின் ஒரு எல்லையிலிருந்து ஏறி அங்கு போகும் ஒரு சின்ன ரோட்டை கடந்தால், காம்ப்பவுண்ட் சுவரே இல்லாத என் அலுவலகத்தின் பின் எல்லையை அடைந்து விடலாம்! எவ்வளவு கஷ்டம் பாருங்கள். நானும் பொறுப்பாய் காலை எட்டரைக்கெல்லாம் அலுவலகத்தைல் ஆஜராகி, ஆஹா இன்றும் நாம் தான் முதலில் வந்தோம் என்று பெருமை பட்டுக் கொண்டேன். பிறகு தான் தெரிந்தது, இங்கு பாதி பேர் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பவர்கள் என்று....எப்போதாவது 2, 3 தலைகள் தென்படுகிறது. மற்ற நாட்களிலெல்லாம் தனிக்காட்டு ராஜா தான்! ரோட்டில் தான் ஆள் நடமாட்டம் இல்லையென்றால் அலுவலகத்திலுமா? அட போங்கப்பா....

இரவு எட்டு எட்டரை வரை வெளிச்சமாகவே இருக்கிறது. வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து, அமெரிக்கா வந்தால் தான் வார நாட்களில் மாலை என்ற ஒரு பொழுதே அனுபவமாகிறது. என் எட்டு வருட மென்பொருள் வரலாற்றில் அதிகம் போனால் வார நாட்களில் 50 மாலைகளை பார்த்திருப்பேன். எப்போதாவது 6 மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியே வந்து விட்டால் போதும், ஏதோ ஆயுள் முழுதும் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு இன்று விடுதலை ஆவதைப் போல் இருக்கும். வெளியே வந்தவுடன் வானத்தையும், அந்திச் சூரியனையும் சற்று நேரம் பார்த்துக் கொண்டே நிற்பேன். அமெரிக்காவில் இதற்கு நேர் எதிர். 5 மணிக்கு பெட்டையை கட்டி விடுகிறார்கள். கலகலவென்று அலுவலகம் இருந்தாலே, சே, எவ்வளவு நேரம் தான் இங்கேயே உட்கார்ந்திருப்பது? வாழ்க்கையே இவ்வளவு தானா என்று தோன்றும், இங்கு என் பக்கத்தில் சுமார் ஒரு 10, 15 இருக்கைகளில் நான் ஒருவன் தான் இருக்கிறேன். எனக்கு எப்படி இருக்கும்? ஏதோ ஒரு ஞாயிற்றுக் கிழமை தேவையில்லாமல் அலுவலகம் வந்து விட்டதை போல் உணர்கிறேன். அதனால் நானும் அதிகபட்சம் 6 மணிக்கு [என்ன இருந்தாலும் இந்தியர்கள், 6 மணிக்கு முன்னாடி போனா உறுத்துதில்லை...]கிளம்பி விடுகிறேன். கேட்க நாதியில்லாததால், என் கூட்டில் போய் ஒடுங்கி விடுவேன், வேறு என்ன செய்ய?

இங்கு யாரும் நடப்பதில்லை. ரோட்டில் ஆள் நடமாட்டமே இல்லை. நல்ல ஒரு கூட்டமான இடத்திலிருந்து வந்ததால் அது ஒரு வித எரிச்சலை தருகிறது. எங்கே மக்கள் மக்கள் என்று மனம் அலைபாய்கிறது. இதே அனுபவம் எனக்கு சண்டிகரிலும் கிடைத்தது. ரோட்டில் அதிகம் ஆள் நடமாட்டமே இருக்காது. என்ன ஊர் இது என்று தோன்றும். அங்கு ரோஸ் ஃபெஸ்டிவல் அன்று தான் கூட்டத்தையே பார்த்தேன். சண்டிகார் என்றால் சர்தார்னிகள் நிறைந்திருக்கும் நகரம். [நம்ம சிம்ரன் லூதியானா பொண்ணு], அவங்கள்லாம் கலகலவென்று வெளியில் தெருவில் நடமாடினால் தானே மனதுக்கு சற்று ஆறுதலாய் இருக்கும்....

கடை கன்னிகள் அருகில் காரை பார்க் செய்து விட்டு கடைக்குள் நடப்பது தான் அமெரிக்கர்களின் நடை. [வீட்டில் த்ரட் மில்லில் எகிறி குதித்து ஓடிக் கொண்டிருப்பதை தவிர்த்து] எனக்கு ரஜினியின் ஞாபகம் வருகிறது. அவரும் இப்படித் தானே இருப்பார், வீட்டிலிருந்து இறங்கியதும் கார், செல்லும் இடம் வந்ததும் இறங்கி உள்ளே ஓடி விடுவார். அதை வைத்து பார்க்கும் போது ஒவ்வொரு அமெரிக்கனும், ஒரு ரஜினிகாந்த் தான்! [இதையே இந்த பதிவுக்கு தலைப்பா வச்சுர்றேன், கூட்டம் கூடிடும்!]

திடீரென்று என் சிந்தனை சிங்கத்தை [எவ்வளவு நாள் தான் குதிரைன்னே சொல்றது? ஆமா சீனாவுக்கு, சீனா தானே சரியா வருது, ஏன் குதிரை உள்ளே கொண்டு வந்தாங்க?...] தட்டி விட்டேன். அதாவது, இங்கு இடம் மிக மிக அதிகமாக இருக்கிறது, மக்கள் மிக மிக குறைவாக இருக்கிறார்கள். இந்தியாவில் இடம் மிக மிக குறைவாக இருக்கிறது, மக்கள் மிக மிக அதிகமாக இருக்கிறார்கள். இதுக்கு நான் என்ன சொல்றேன்னா, ஒரு காண்ட்ராக்ட் மாதிரி போட்டு, இங்கு இருப்பவர்களை எல்லாம் அங்கு ஷிஃப்ட் செய்து விட்டு, அங்கு இருப்பவர்களை இங்கு கொண்டு வந்து விட்டால் என்ன, இவங்க அங்கே போய் நம்ம இந்தியாவை அமெரிக்காவா மாத்திர மாட்டாங்க? என்று தோன்றியது. [இதைச் சொன்னா நம்மளை கிறுக்கன்னு சொல்றாங்க...] இதிலிருந்து என்ன தெரியுது? ஒருத்தன் தனியா இருக்கக் கூடாது, அப்படியே இருந்தாலும், அவன் தமிழனா இருக்கக் கூடாது, அப்படியே இருந்தாலும், அவனுக்கு ஒரு வலைத்தளம் இருக்கக் கூடாதுன்னு புரியுதா? விதி வலியது...

ஷவர் கர்ட்டெயின்:
இது இல்லைன்னா நீங்க குளிக்கவே முடியாது. பாத்ரூம்ல நம்ம ஊர் மாதிரி தண்ணி போக ஓட்டை எல்லாம் இருக்காது, நீங்க காலால வரட்டு வரட்டுன்னு தண்ணியெல்லாம் அதுல விட்றதுக்கு...ஒரு பாத் டப் இருக்கும், அதுக்குள்ள போய் நின்னுட்டு ஷவர் தொறந்து விட்டுக்கணும், அதுக்கு முன்னாடி இந்த கர்ட்டெயினை மூடிக்கனும் [ஒரு கூண்டு மாதிரி ஆயிடும்! குயிலைப் புடிச்சி கூண்டிலடைச்சி பாட்டும், கெணத்தடியில வாளியில மொன்டு மொன்டு ஓடி ஓடி குளிச்சதெல்லாம் ஞாபகம் வந்து படுத்தும்!] இல்லைன்னா தண்ணி தெறிச்சி பாத்ரூம் பூரா சொத சொதன்னு ஆயிடாது...அதனால...நம்ம இங்கிலீஷ் படத்துல எல்லாம் பாத்துருப்போம், ஒரு அழகான ஹீரொயின் ஒரு ட்ரான்ஸ்பெரன்டான ஷவர் கர்ட்டெயினை மூடிட்டு ட்ரஸ் எல்லாம் கழட்டிட்டு குளிக்கப் போவா, [ஹூம்....] அப்ப தான் அந்த கொலைகாரப் பாவி வந்து அவ கழுத்துலையே குத்து குத்துன்னு குத்துவான்...அப்புறம் அந்த டப் ஓட்டை வழியா செவப்பு கலர் தண்ணியை க்ளோஸப்ல காட்டுவானுங்க...அட போங்கப்பா...

மொக்கை பதிவு தான்! மூளைக்குத் தெரியுது, ஆனா இந்த மனசுக்குத் தெரியலையே....யார்ட்டயாவது பொலம்பனும் பாருங்க...

பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே!!!

இந்த வரி தான் எனக்கு இப்போது மனதெங்கும் வியாபித்திருக்கிறது! ஏன் என்று நீங்கள் கேட்டு நான் காரணம் சொன்னால் உங்களில் சிலர் என்னை அடிக்க வரக்கூடும். காரணம் என்னவென்றால், அலுவலகத்தில் அடம் பிடித்து அவசர அவசரமாய் ஒரு அமெரிக்கப் பயணம்! 3 வருடத்திற்கு முன் நான் இங்கு வந்த மூன்று மாதங்களில் சுற்றிப் பார்த்தது 9 மாநிலங்கள். சத்தியமாய் டூரிஸ்ட் விசாவில் வரவில்லை. வேலை செய்யத் தான் வந்தேன். இனிமேல் யார் இவ்வளவு தூரம் வருவது என்ற நினைப்பில் ஒரேடியாய் சுற்றிப் பார்த்து விட்டேன். என்னுடைய அமெரிக்க கட்டுரைகளை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். மறந்தவர்கள் தலையில் கொட்டிக் கொண்டே [உங்க தலையிலங்கானும்] இங்கு க்ளிக்கவும். என்ன செய்வது விதி வலியது என்பதை விட வீடு கட்ட வாங்கிய கடன் வலியதாய் இருக்கிறது. இந்த அழகில் ஒரு நாள் பச்சை கலர் சட்டை, ஒரு நாள் மஞ்சள் கலர் சட்டை போட்டவனை எல்லாம் வேலைய விட்டு தூக்கு என்ற ரேஞ்சில் ஐ.டி. உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. [ஆடிய ஆட்டம் என்ன?] காற்றுள்ள போது தானே தூற்றிக் கொள்ள வேண்டும் என்று கிளம்பி வந்தாகிவிட்டது!

போன முறை குறுகிய கால விசாவில் வந்ததால் ஹாயாக ஹோட்டலில் தங்கி விட்டு ஊர் சுற்ற சரியாய் இருந்தது. இந்த முறை கொஞ்சம் நீண்ட கால விசாவில் வந்துள்ளதால் மண்டை காய்கிறது. அமெரிக்கா ஒரு பெரிய இயந்திரம். மாடர்ன் டைம்ஸில் சார்லி சாப்ளின் நட்டை திருப்பிக் கொண்டே அந்த சக்கரத்தில் மாட்டிக் கொள்வாரே, அது போல்! நீங்கள் அந்த இயந்திர கதியில் எல்லோரைப் போல சகஜமாய் சுற்ற ஆரம்பிப்பது வரை நரகம்! அதிலும் நீங்கள் அந்த இடத்தில் தனியாய் மாட்டிக் கொண்டால் அவ்வளவு தான், அன்பே சிவம் மாதவன் மாதிரி ஜோக் கேட்டால் கூட அழுகையாய் வரும்! சோ, நீங்கள் என்னை இப்போது பார்த்தால் அன்பே சிவம் மாதவனை பார்க்கத் தேவையில்லை.

தற்சமயம் நான் தனித்து இருப்பது க்ளென் ஆலென், [ரிச்மன்ட் அருகில்] விர்ஜினியா. இந்த இடத்திற்கு இன்னொரு பெயரும் இருக்கிறதாம். காதலர்களின் சொர்க்கம் என்று என்னுடன் வந்த ஒரு மேனெஜர் சொல்கிறார். எப்படி இருக்கிறது பாருங்கள்! எல்லா மானேஜர்களும் சேர்ந்து ஒரு இளம் காதலர்களை பிரித்து [சந்தேகமே வேண்டாம்! என்னையும் என் மனைவியையும் சொன்னேன்] குண்டு கட்டாய் என்னை மட்டும் பார்சல் செய்து அனுப்பி விட்டு இப்படி குசும்பு செய்வது அழகாமோ?

தமிழ் கூறும் நல்லுலகில் நிறைய பேர் இங்கு இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நல்ல சமைக்கக் கூடிய, ஒரு பெரிய காரில் தன்னந்தனியே போய் கொண்டிருக்கும் [ரோட்டில் நான் மட்டும் நடக்க பயம்மா இருக்குப்பா!] ஒரு பேச்சிலர் என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். இந்த வாரம் நான் ஒரு புது வீட்டுக்கு சாராயம் காய்ச்சி கூடியேறப் போகிறேன், சாமான் செட்டு தூக்குவதற்கு, என்னை ஊர் சுற்றிக் காட்டுவதற்கும், வால் மார்ட் கூட்டிப் போவதற்கும், எந்த செல்ஃபோன் வாங்கலாம், எந்த இன்டர்நெட் கனெக்ஷன் வாங்கலாம் என்று வழி காட்டுவதற்கும், பணம் பத்தவில்லை என்றால் க்ரடிட் கார்ட் தேய்க்கவும் செளகரியமாய் இருக்கும். உனக்கு நான் ஏன் செய்யனும்? எக்கேடு கெட்டும் போ என்பவர்கள் மூடிக் கொண்டு போங்கள்![ஐய்யோ, சாருவை நிறைய படித்தது தப்பாகி விட்டதே!]



1948ம் ஆண்டு, பிப்ரவரி 1. மெட்ராஸ் ப்ராவின்ஸி.

மழை பெய்யும் ஒரு அடர்த்தியான இரவில் படம் தொடங்குகிறது. சிறையிலிருக்கும் வேங்கடத்தை (பிரகாஷ்ராஜை) இரண்டு நாட்களுக்காக ஒரு விசேஷ அனுமதியுடன் வெளியே அழைத்து வரப்படுகிறார். அங்கிருந்து ஒரு பேருந்தில் ஏற்றி காஞ்சிவரம் கொண்டு வரப் படுகிறார். அவர் பயணத்தினூடே அவரின் கடந்த காலத்தை திரைப்படம் விளக்கிச் செல்கிறது. அந்த ஊரிலேயே தேர்ந்த நெசவாளியான வேங்கடம் அன்னத்தை திருமணம் செய்து கொண்டு ஊருக்குள் வருகிறார். தான் தன் மனைவியை பட்டுச் சேலை கட்டி கூட்டி வருவேன் என்ற அவனது வாக்கு பொய்த்து போனதை பக்கத்து வீட்டுக் கிழவி சுட்டிக் காடி கிண்டல் செய்கிறாள். அதுவே அவரின் வைராக்கியமாய் மாறி தனக்குப் பிறந்த பெண் குழந்தையை பட்டுப் புடவையுடன் தான் திருமணம் செய்து அனுப்பி வைப்பேன் என்று ஊராரின் முன்னிலையில் வாக்குறுதி அளிக்கிறார. அதைக் காப்பாற்ற அவர் படும் பாடுகளும், அதன் முடிவும் நீங்களே வெண் திரையில் காண்க [அதுவரை படம் ஓடினால்!]

அந்தக் காலத்திலேயே 800 ரூபாய் விலை போன பட்டுப் புடவைக்கு 7 ரூபாய் கூலி கொடுக்கிறார் வேங்கடத்தின் முதலாளி. "காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்" என்ற உழவர்களின் நிலையைப் போல எத்தனை விதமான புடவைகளை நெய்தாலும் ஒரு பட்டுப் புடவை என்பது ஒவ்வொரு நெசவாளியின் கனவாகவே இருந்திருக்கிறது. ஒரு நெசவாளியின் வாழ்வை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் இயக்குனர் ப்ரியதர்ஷன். முன்பொரு காலத்தில் நல்ல கலை நேர்த்தியான படங்களை இவர் இயக்கியிருந்தாலும் தற்போது ஹிந்தியில் காமெடி படங்களையே இயக்கிக் கொண்டிருக்கும் இவருக்கு திடீரென எப்படி இப்படி ஒரு கலை தாகம் எடுத்தது என்று ஆச்சர்யமாகவே இருக்கிறது. மிக நல்லதொரு முயற்சி என்றே சொல்ல வேண்டும்.

பிரகாஷ் ராஜ் வேங்கடமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் வழக்கமான க்ளிஷேயாகிவிடும். மனிதருக்கு கஷ்டப்பட ஒன்றுமில்லை. அநாயசமாய் செய்திருக்கிறார்.

ஷ்ரேயா அமைதியாய் அழகாய் அளவோடு வந்து போகிறார். நல்ல இயக்குநர்கள் கையில் இவர் கிடைத்தால் தமிழில் ஒரு ஸ்மிதா பாட்டில் மாதிரி ஆகி விட மாட்டார்? பார்க்கலாம்.

வழக்கமாய் தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு தங்கை என்று ஒன்று இருந்தால் அது ஒரு தருதலையை தான் கல்யாணம் செய்திருக்கும். அவன் அவளை பாடாய் படுத்துவான். கதாநாயகன் பொங்கி எழுவான். நல்ல வேளையாய் அந்தக் கஷ்டம் இங்கு இல்லை. வேங்கடத்தின் மச்சானின் கதாபாத்திரம் எந்த வித பாசாங்குமில்லாமல் மிக எதார்த்தமாய் கையாளப்பட்டிருக்கிறது. தொல்லை கொடுக்க வேண்டிய இடத்தில் தொல்லை கொடுக்கிறார். உதவ வேண்டிய நேரத்தில் சரியாய் உதவுகிறார். கழண்டு கொள்ள வேண்டிய இடத்தில் சரியாய் கழண்டு கொள்கிறார். அவரின் நடிப்பையும் பாராட்டலாம்.

படத்தில் மிகவும் பாராட்டுக்குறிய அம்சம் ஒளிப்பதிவு. திரு ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கியிருக்கிறார். நான் கவனித்த வரை பெரும்பாலான ஷாட்கள் வான் நோக்கியே வைக்கப்பட்டிருந்தன. விஜய்யும் மதனும் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். சில சாம்பிள்ஸ்.

மோட்டார் கார் ஒன்று முதன் முதலில் ஊருக்குள் வருகிறது.

- அது மோட்டார் கார். குதிரை இல்லாம ஓடும்.
- மோட்டார்னா?
- கண்டுபிடிச்சவன் பேரா இருக்கும். ஒருவேளை கவுண்டர், செட்டியார் மாதிரி மோட்டாரோ என்னமோ...குதிரை வண்டியை ஓட்றவன் குதிரைக்காரன் மாதிரி இதை ஓட்றவனுக்கு பேரு ட்ரைவர்காரனாம்! பட்டணத்துல இருந்து கூட்டிட்டு வர்றாங்க. மாசம் 35 ரூபாய் சம்பளம்!

கம்யுனிஸ சித்தாந்த்தினால் கவரப்பட்டு போராட்டம் நடத்தும் போது அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் டீ கடை ஆசாமி ஒருவர்...

புரட்சி புரட்சின்னு சொல்லிட்டே இருக்க வேண்டியது தான். இனிமே இவங்களுக்கு ஒரு குவளை காப்பி கூட தர மாட்டேன். காப்பி வேணும்னா கம்யுனிசத்தை கலந்து குடிக்கட்டும்!

படத்தின் இசை படத்தினோடு கலந்து செல்கிறது. அதுவே ஒரு மிகப் பெரிய விஷயம் தான். அதற்கு மேல் சொல்ல எனக்குத் தெரியவில்லை.

மற்றபடி இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இந்தப் பதிவையே எடுத்துக் கொள்வோம். இந்தப் பதிவு என்னுடைய வழக்கமான பாணியில் ஒரு விமர்சனம். ஒருவேளை நீங்கள் என் பாணியை ரசித்திருந்தாலும், இந்தப் பதிவு உங்களை அவ்வளவாகக் கவரவில்லை என்றால் அதே நிலை தான் காஞ்சிவரம் திரைப்படமும். இந்தப் படத்தில் எல்லாம் இருக்கிறது. நல்ல கதை, நல்ல நடிகர்கள், அழுத்தமான படப்பிடிப்பு, அளவான இசை...ஆனாலும் அது நம்மை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை! என்னுடன் வந்த நண்பரும், உதிரிப்பூக்கள் மெல்ல தான் போகும், ஆனால் அதனோட பாதிப்பு அதிகம் இல்லையா என்றார். அவர் சொல்வது நியாயமாய் தோன்றினாலும், இதில் இல்லாத ஒன்று அப்படி என்ன அதில் இருந்தது என்ற கேள்விக்கு என்னக்கு விடை தெரியவில்லை. ஒரு வேளை தமிழ் சமூகத்தைப் பற்றி தெரியாத உலக திரைப்பட விழாக்களில் இந்தத் திரைப்படம் வரவேற்கப்படலாம்!

பின்குறிப்பு: என் நண்பர் ஒருவர் குடும்பத்துடன் (அதாவது தன் 6வது படிக்கும் மகனுடன்) இந்தப் படத்திற்கு வந்திருந்தார். அந்தப் பையனால் தாங்க முடியவில்லை. இடைவேளை போடுவதற்கு முன் விளக்குகளை போட்டதும் துள்ளிக் குதித்தான்! "என் வாழ்நாள்ல நான் பாத்த 2 மொக்கை படத்துல இதுவும் ஒன்னு" என்றான். அந்த இன்னொன்னு என்னன்னு கேட்டேன். அவன் சொன்ன பதில், திருப்பாச்சி!

இது என்ன மாதிரியான ஜெனரேஷன்!???

குழந்தையும் தெய்வமும் ஒன்று!
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது!!
நம் பக்கத்து வீட்டுக் குழந்தை என்னை மாமாவென்றும்
உன்னை அக்காவென்றும் அழைக்கிறது!


உன் இரு ஆட்காட்டி விரல்களால்
கொம்பு செய்து கொண்டாய்
பின்னர் இடக்கையை பின்னுக்கிழுத்து
வடக்கையில் அபிநயம் பிடித்து - அதை
உன் இதழுருகில் கொண்டு வந்து
உன் மருண்ட விழிகளை உருட்டி
இங்கும் அங்கும் துள்ளிக் குதித்து
ஒரு மான் எப்படி இருக்கும் என்று
அந்தக் குழந்தைக்கு செய்து காட்டுகிறாய்
குழந்தை தவறாய் புரிந்து கொள்கிறது
என்று எனக்குப் படுகிறது!
தாம்பரம் போற வழியில, மீனம்பாக்கத்திற்கு முன் இருக்கிற ஒரு அஞ்சலகம் போக வேண்டியிருந்தது. 2 நாளா ஒரு என்.எஸ்.சி வாங்க அலைஞ்சுட்டு இருந்தேன். நூறு ரூபாய் என்.எஸ்.சி தான் வேண்டியிருந்தது. இவ்வளவு கம்மியாவா சேவிங்க்ஸ் பண்ணுவாங்கன்னு நீங்க நினைக்க வேணாம். இது அதுக்காக அல்ல, ஒரு ப்ராப்பர்டியின் செக்யுரிட்டி டிபாஸிட்டுக்காக! மடிப்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் (பஸ் ஸ்டாண்ட் மாதிரி) ஒட்டி ஒரு தம்மாதுண்டு போஸ்ட் ஆபிஸ் இருக்கிறது. போன சனிக்கிழமை காலை வழக்கம் போல் எல்லா சோம்பேறித்தனங்களையும் சுறுசுறுப்பாக முடித்து விட்டு ஒரு வழியாய் கிளம்பி ஒரு 11:30 மணியளவில் போய் சேர்ந்தேன். நூறு ரூபாய்க்கு ஒரு என்.எஸ்.சி வேணும் என்றேன். நூறு ரூபாய் என்.எஸ்.சியா? இங்கே இல்லையே சார். நீங்க வேணா கூட் ரோட்ல குமரன் தியேட்டர் பக்கத்துல இருக்குற போஸ்ட் ஆபிஸ் போய் கேட்டுப் பாருங்க, அங்கே தான் கிடைக்கும் என்று சாவதனமாய் ரீடைரக்ட் செய்து விட்டார். வழியெல்லாம் விசாரித்து ஒரு வழியாய் போய் சேர்ந்து பார்த்தால் நான் எதிர்பார்த்த படியே ஒரு நீ...............ளமான க்யு! வழக்கம் போல் எனக்கு செம டோஸ் விழுந்தது என்னிடமிருந்து! "கொஞ்சம் சீக்கிரம் வந்து தொலைச்சா என்ன? எல்லாத்துலையும் லேட்டு".

கம்ப்யுட்டரில் ப்ரிண்ட் போட்டு கொஞ்சம் பழசாயிருந்தாலும் என்.எஸ்.சி தெளிவாய் தெரிந்தது. பொறுப்பாய் நின்றேன். நான் ஏற்கனவே சொன்னது போல் நான் எந்த இடத்தில் வரிசையில் நின்றாலும் அந்த இடத்தில் கனகச்சிதமாய் வந்து கொஞ்சம் தள்ளிக்குங்க என்று இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கும் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கத்திற்கும் செல்பவர்கள் இந்த முறை வரவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு வேளை வேறு பக்கம் செல்வதற்கு அங்கு இடம் இல்லாததும் காரணமாய் இருக்கலாம் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். திடீரென்று கவுண்டரில் இருந்தவர் எல்லோரிடமும் ஏதோ ஒரு பேப்பரை வாங்கிக் கொண்டார். நான் கூப்பிட்றேன் வெயிட் பண்ணுங்கோ என்றார். அட ராமா, இவங்க இல்லை எனக்கு பேப்பர் கொடுக்கனும் என்று குழம்பி கற்றது கல்லளவு கல்லாதது கவர்மெண்ட் அளவு என்பது சரியாய் தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் நீங்க என்.எஸ்.சி தானே, போய் கேளுங்க என்று உந்தித் தள்ள கடைசியில் துணிந்து உள்ளே போய், கண்ணாடியை கீழ் மூக்கில் இறக்கி விட்டு பாதி கண்ணின் வழியே பார்த்தவரிடம் என்.எஸ்.சி வாங்கனும் என்றேன். அவர் சாவகாசமாய் அதுக்கு டைம் முடிஞ்சதே என்றார். ஓ, இதுக்கு டைம் எல்லாம் இருக்கா என்று யோசிக்கும் போது, 12 மணியோட முடிஞ்சுரும், நீங்க மண்டே வாங்க என்றார். மணி பார்த்தேன். 12:05! அதற்கு மேல் சார், கொஞ்சம் பாத்து போட்டுக் கொடுங்க என்றெல்லாம் நான் குழையவில்லை. என் தப்பு தான்! போயிட்டு மண்டே வந்தா தான் சரி என்று நான் என்னை திட்டிக் கொண்டே வந்து விட்டேன். அதற்கு முன், சார் ஃபார்ம் ஏதாவது ஃபில் பண்ணனுமா என்றதும் அவரும் கொஞ்சமாய் உழைத்து அரதப் பழசான, இன்னைக்கோ நாளைக்கோ என்று இருந்த ஒரு மஞ்சள் தாளை எடுத்துத் தந்தார். அதில் சில சந்தேகங்களுக்கும் தெளிவாய் பதில் சொன்னார். முதலில் அரசு அலுவலகங்களில் கொடுக்கும் ஃபார்மின் தரத்தை உயர்த்த வேண்டும்! சாதரணமாகவே கரையான் அரித்தது போலவே இருக்கிறது.

மண்டே மார்னிங், காலை 10 மணி சமீபம்.

இந்த முறை தைரியமாய் உள்ளே போனேன். என்.எஸ்.சி அந்தப் பக்கம் என்று இதுவரை பார்க்காத இன்னொரு ஜன்னலைக் காட்டினார்கள். நல்ல வேளை அங்கு கூட்டமே இல்லை, அதோடு ஜன்னலில் ஆளும் இல்லை. வெயிட் பண்ணுங்க வந்துருவார் என்றார் ஒரு பெண்மணி. வெயிட் பண்ணிக் கொண்டே இருந்த போது கொஞ்சமாய் வெயிட் போட்ட ஒருவர் தலையில் கொஞ்சம் முடியுடனும், நிறைய பொறுமையுடனும் நூறு ரூபாய் என்.எஸ்.சி இங்கே இல்லை சார். அதெல்லாம் இப்போ சரியா போறதில்லை, யாரும் இவ்வளவு சின்ன அமவுண்ட்டுக்கு வாங்குறதில்லை, அதனால நாங்களும் வச்சிக்கிறதில்லை, நீங்க ஹெட் போஸ்ட் ஆபிஸ் போய் பாருங்க, ஜி.எஸ்.டி ரோட்ல ஆர்மி கேம்ப் பக்கத்துல இருக்கு என்று ஏதோ பலசரக்கு கடையில் வியாபாரம் ஆகாத பொருளை வைத்துக் கொள்வதில்லை போல் பேசினார்! மிக்க நன்றி என்று மணியை பார்த்து விட்டு, இன்னைக்கும் அவ்வளவு தானா என்று அலுவலகத்திற்கு நடையை கட்டினேன்.

ரெட் லிப்ஸ் மார்னிங், அதாவது செவ்வாய் காலை, 9:15 மணியளவில். [ஐய்யோ, மொக்கை தாங்க முடியலைடா...]

வண்டியை நிறுத்தி அந்த இடத்தை ஒரு நோட்டம் விட்டேன். பழங்கால கட்டிடம், சுற்றிலும் மண் தரை தான். ஜிலு ஜிலுவென அங்கிருந்த சில மரங்களின் காற்று. ஆஹா! உள்ளே கூட்டமே இல்லை, அங்கு வேலை பார்த்த ஒரு இளம் ஆன்டியிடம் நான் சென்று நின்றதும் 9;30 தான் சார் ஆரம்பிக்கும், வெயிட் பண்ணுங்க. இல்லை, நூறு ரூபாய் என்.எஸ்.சி வேண்டும் என்றேன். நூறு ரூபாயா, அது இருக்காதே சார், நீங்க வேணா மெளண்ட் ஹெட் போஸ்ட் ஆபிஸ் போய் பாருங்க, அங்கே கிடைக்கும் என்றார். இவர்களே செக்யுரிட்டி டிபாஸிட் என்று கேட்பது, கேட்டால் அங்கே போ இங்கே போ என்று அலைய விடுவது. நம்பியார் போல் கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு ஒரு புன்னகையுடன் இல்லை மேடம், மடிப்பாக்கம் போஸ்ட் ஆபிஸ்ல இருந்து இது வரை மூணு போஸ்ட் ஆபிஸ் பாத்துட்டேன். எங்கேயும் இல்லை, அவங்க தான் இங்கே கிடைக்கும்னாங்க என்று குழைந்தேன். சரி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, ஒன்னே ஒன்னு பாத்த மாதிரி ஞாபகம் என்று என் வயிற்றில் ஆவின் [ப்ளு பாக்கெட், கொளுப்புச் சத்து இல்லாதது] பாலை ஊற்றினார். வழக்கம் போல் ஒரு ஓரமாய் அமர்ந்து வெயிட் பண்ண ஆரம்பித்தேன். அதை விட நோட்டம் விட ஆரம்பித்தேன் என்பது சரியாய் இருக்கும். ஒரு பெரிய ஹால். அங்கங்கே மரத் தடுப்புகள். பிறக்கும்போதே, இவர்கள் அரசு அலுவலகங்களில் அமர்த்தப் படுவார்கள் என்று நிர்ணயித்த முகங்கள். ஒட்டடை படிந்த மேல்கூரை, நீள நீளமான ஃபேன்கள். பெரிய ஜன்னல்கள். மிதமான சூரிய ஒளி. வயிற்றைத் தள்ளிக் கொண்டு நிற்கும் பிள்ளைத்தாச்சி பெண்களைப் போல் பழங்காலத்து ஃபைல்கள். எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் பேப்பர்கள் வெளியே வராத ஃபைல்கள் பார்த்ததாய் ஞாபகம் இல்லை. அந்த இடத்தில் சம்மந்தமே இல்லாமல் அமைதியாய் ஏதோ ஒரு நாட்டின் இயற்கை வளத்தை ஞாபகப்படுத்தும் ஸ்கிரீன் சேவர்களுடன் தூசி படிந்த கம்ப்யுட்டர்கள். என்னம்மா இது ப்ரிண்ட் ஆக மாட்டேங்குது என்று கொஞ்சம் வயதான ஆன்டி அந்த இளவயது ஆன்டியிடம்
கேட்டாள். ஸ்விட்ச் போடுங்க என்றதும் கொஞ்சம் அசடு வழிந்தார். அங்கு வேலை செய்யும் வயதான பெண்ணை கூவி அழைத்து இனிமே காலையில கூட்டி பெருக்கும் போதே ஸ்விட்ச் போட்றுங்க என்று அதட்டினார்.

9:30 மணிக்குள் இன்னும் சிலர் அங்கு வந்தார்கள். சிலர் சேமிப்பு கணக்கை நேர் செய்ய, சிலர் ஸ்டாம்பு வாங்க, சிலர் என்வலப் வாங்க. ஆஹா என்ன ஒரு அருமையான வேலை. ஒரு பிக்கல் பிடுங்கல் இல்லை, டெட்லைன் இல்லை. இப்படியே வர்றவனுக்கெல்லாம் கேட்டதை கொடுத்து விட்டு, 5 மணிக்கு டான் என்று கடை சாத்தி நடையைக் கட்டி விடலாம். அதிலும் ஈமெயில் காலத்தில் போஸ்ட் ஆபிஸில் அதுவும் இந்த மாதிரி ஒரு இடத்தில் வேலை அமைந்து விட்டால் சொல்லவே வேண்டாம். என்ன சம்பளம் ஒரு குறை, பரவாயில்லை, இதை வைத்துக் கொண்டே இவர்கள் பிள்ளைகள் ஒவ்வொன்றும் இன்ஜினியரிங் படிக்கவில்லையா? ஒரே ஏக்கமாய் இருந்தது. இக்கரைக்கு அக்கரை பச்சை, அதிலும் இந்த மாதிரி நினைப்பெல்லாம் டார்க் பச்சை என்று என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். ஒரு வழியாய் என்.எஸ்.சி வாங்கிக் கொண்டு அங்கேயே ஒரு என்வலப் [5 ரூபாய்] வாங்கி, ஸ்பீட் போஸ்ட் [20 ரூபாய்] அனுப்பினேன். அட்ரஸ் எழுதி அந்த ஆண்டியின் கையில் தந்ததும், கருப்பு மையால் அச்செடுத்து சிரித்துக் கொண்டிருந்த காந்தி தாத்தாவின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து! என்ன ஆனாலும் சரி, என் படத்தை ஸ்டாம்ப் போடும் அளவுக்கு பெரிய மனிதன் ஆவதில்லை என்று உறுதி செய்து கொண்டு கிளம்பினேன்! வெளியில் மரங்கள் ஆசிர்வதித்தன!
கூட்டமாய் வந்து நிற்கும் பேருந்தில், வந்தவர்கள் இறங்குவதற்குள் துண்டை
போட்டு இடம் பிடிப்பது போல் ஆகிவிட்டது, வலையுலகில் பதிவிடுவது.
ஆரம்பத்திலிருந்தே பேருந்துகளில் துண்டு போட்டு இடம் பிடிக்கும்
சாமர்த்தியம் எனக்கு இருந்ததில்லை...ரஹ்மான் விருது வாங்கியதும் நானும்
ஒரேடியாய் பூரித்துப் போய் இன்று எல்லோரையும் முந்திக் கொண்டு பதிவிட்டு
விடுவது என்று நினைத்தேன். அதற்குப் பிறகு நடந்ததெல்லாம்
இஸ்ட்ரி![இஸ்ட்ரின்னா வரலாறு தானே?]

நேற்று [இது நேற்றே போட வேண்டிய பதிவு!] காலையில் அலுவலகம் வருவதற்கு
முன்பே ரஹ்மான் இரு விருதுகள் பெற்றதை தொலைக்காட்சியில் ஐபிஎன் மூலம்
அறிந்து கொண்டேன்! அலுவலகம் செல்லும் வழியில் இயல்பாய் தங்கள் வேலையை
செய்து கொண்டிருப்பவரை பார்க்கும் போதெல்லாம், அடேய் உங்களுக்கு ஒரு
விஷயம் தெரியுமா? என்று கத்திச் சொல்ல வேண்டும் போலிருந்தது.
தொலைக்காட்சியில் அப்படி ஒரு செய்தியும், பல பிரபங்களின்
வாழ்த்துக்களும், இந்தியாவே துள்ளிக் குதித்துக் கொண்டாடும் காட்சிகளும்
என்னை புல்லரிக்கச் செய்தன! அந்தச் சேனலில் வரும் ராஜேஷையும் அவரின்
ஆங்கிலப் புலமையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் வழக்கமாய் சினிமா
விமர்சனத்திற்கும் நல்ல ஒரு உலக படத்தை [டிவிடி] பரிந்துரைக்கவும்
வருவார். அவருடைய வாயில் இருந்து ஆங்கிலம் அப்படி கொட்டும்! எந்த வித
தங்கு தடையுமில்லாமல் சரளமாய் உரையாடுவார். ஆனால் நேற்று செய்தி கேட்டு
மனிதர் சந்தோஷதில் திக்கு முக்காடி விட்டார் போலும். வாயிலிருந்து
வார்த்தை வர அத்தனை தடுமாறினார்!

எத்தனையோ பிரபலாமனவர்கள், ரஹ்மானிடம் வேலை பார்த்தவர்கள் வாழ்த்தினாலும்
எஸ் பி பி யின் வாழ்த்தினை போல் இல்லை. இதை விட பல பிரமாதமான இசையை
ரஹ்மான் நமக்கு அளித்திருக்கிறார் என்ற அவர் கூற்றை நூற்றுக்கு நூறு
அங்கீகரிக்கிறேன். ராஜேஷ் எல்லோரிடமும் ஒரே ஒரு கேள்வியை கேட்டார்,
அடுத்த முறை ரஹ்மானை பார்க்கும் போது என்ன சொல்வீர்கள் என்று. எஸ் பி பி
அவரை கட்டித் தழுவி முத்தம் கொடுப்பேன் வேறென்ன சொல்வது என்றார். மனிதர்
இதயத்தின் அடியிலிருந்து அன்பு கொப்பளிக்க வாழ்த்தினார். எத்தகைய அன்பு!
ஒரு தந்தைக்குரிய பாசமும் பெருமிதமும் அதில் தெரிந்தது.

அடடா, ரஹ்மானை விட்டு விட்டு எஸ் பி பி புகழ் பாட ஆரம்பித்து விட்டேன்.
பேக் டு ரஹ்மான்! நான் இளையராஜாவின் தீவிர ரசிகன்! என்னை பொறுத்தவரை
எப்போதாவது தொட்டுக் கொள்ளும் ஊறுகாயை போன்றது ரஹ்மானின் பாட்டு.
எப்போதும் உண்ணும் சாப்பாட்டைப் போன்றது இளையராஜாவின் பாட்டு. [இந்த
நேரத்தில் இப்படி ஒரு உவமை தேவையா?] இருந்தாலும் ரஹ்மான் என்ற கலைஞனை
நான் மதிக்கவே இல்லை என்று அர்த்தம் ஆகாது. எத்தனை கழுதை வயசாகுது, நம்ம
என்ன சாதிச்சிருக்கோம் இந்த இளம் வயதில் இவங்களைப் பாரு என்று நான் என்
கல்லூரிக் காலங்களிலிருந்தே பார்த்து ஏங்கும் இருவர் ரஹ்மானும்
டென்டுல்கரும்! ரஹ்மான் மிகப் பெரிய கலைஞன் என்பதில் சந்தேகமேயில்லை
[நல்ல வேளை நீ சொன்ன, எங்க யாருக்கும் இது தெரியாது!!]

ரஹ்மான் அவரின் இளம் பருவத்தில் எடுத்த முக்கியமான முடிவுகள் அனைத்தும்
மிகச் சரியானவை! சிறு வயதிலேயே இளையராஜாவிடம் சேர்ந்தது. நல்ல ஒரு
வாய்ப்பு வந்ததும் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு அற்புதமான இசையை
வெளிக் கொண்ர்ந்தது. இளையராஜாவைப் போல் தீபாவளிக்கு 20 படம்,
வருஷத்துக்கு ஒரு நாலு ராமராஜன் படம் என்று சிக்காமல் ஹிந்தி படங்களில்
இசையமைத்து தன்னுடைய வட்டத்தை அகலப்படுத்தியது. அதோடும் நின்று விடாமல்
வெளி நாட்டினருடன் இசை ஆல்பம் தயாரித்தது, பாம்பே ட்ரீம்ஸ் இசையமைத்தது
என்று அவர் எப்போதும் அடுத்த அடுத்த எல்லையை நோக்கி பயணித்துக் கொண்டே
இருந்தார்! அது சாதாரணமான விஷயமே அல்ல! அதற்கு செய்யும் தொழிலில்
எல்லையில்லா ஈடுபாடும் அசாத்தியமான உழைப்பும் அன்றி அது சாத்தியமாகாது.

இந்தப் படம் மொத்தத்திற்கும் இசையமைக்க ரஹ்மான் எடுத்துக் கொண்டது வெறும்
15 நாட்கள் மட்டுமே. இது தான் அவர் இசையமைத்ததிலேயே குறைவான நாட்களை
எடுத்துக் கொண்ட படமாம். அடப் பாவிகளா, இதுக்கே இரண்டு அவார்ட் தூக்கிக்
கொடுத்துக் கொண்டீர்களே இன்னும் அவரின் பட்டையை கிளப்பும் பாடல்களை
[ரோஜா, புதிய முகம், தால், ரங்கீலா, இருவர், மின்சார கனவு, லகான், ரங் தே
பசந்தி] எல்லாம் கேட்டால் என்ன செய்வீர்கள் என்று இருந்தது எனக்கு.

ரஹ்மானை எல்லோரும் புகழும் இந்த நேரத்தில் அவருக்கு எந்த விதத்திலும்
குறைவில்லாத, இதே போல் பல வித சாதனைகள் படைத்திருக்க வேண்டிய இளையராஜா
(மேல் சொன்னது போல்) ஏன் தன்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்கிக்
கொண்டாரோ என்ற ஆற்றாமையை தவிர்க்க முடியவில்லை!

சரி அதை விடுங்கள், நாடே இந்த நற்செய்தியால் அல்லோல கல்லோல பட்டுக்
கொண்டிருக்கிறது, இளையராஜா ரஹ்மானைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே?
சொல்லவில்லையா அல்லது என் காதில் படவில்லையா? 2 வரி பாராட்டினா என்ன சார்
ஆயிடும்? நீங்க பாத்து வளந்த புள்ள தானே? இதான் சார், உங்க கிட்ட...

கமலஹாசன் சொன்னது போல் ஆஸ்கார் அமேரிக்காவின் உச்சம், அதோடு நில்லாமல்,
[அவர் எங்க நிக்க போறாரு] அதையும் தாண்டி இசையில் அகில உலக உச்சத்தை அடைய
என் இனிய வாழ்த்துக்கள். அதோடு ஆஸ்கார் வென்ற பூக்குட்டிக்கும் என்
வாழ்த்துக்கள்!

ஒய். ஜி. மகேந்திரன் நடத்திய நாகேஷின் அஞ்சலி கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். சோ, சச்சு, மனோரமா, வி.எஸ்.ராகவன், சித்ராலயா கோபு, வியட்நாம் வீடு சுந்தரம், ஒய்.ஜி. பார்த்தசாரதி ஆகியோர் நாகேஷை வாழ்த்தி பேசினார்கள்! [கமல் எங்கே?] நான் போய் சேர்வதற்குள் சோ பேசி முடித்து விட்டார்!

சித்ராலயா கோபு

நாகேஷுக்கு முதல் சீன் சொல்லும்போது மிஸ்டர். கோபு என்றார். கொஞ்ச நேரம் கழிச்சி கோபு சார். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி டேய் கோபு என்றார்! அன்றிலிருந்து எங்கள் நட்பு செழித்து வளர்ந்தது. சிறிது காலம் சித்ராலயாவில் தான் படங்களை கொடுத்தோம். என்னடா எப்படி இருக்கு என்று கேட்கும் போது நாகேஷ் அலுத்துக் கொண்டு, எங்கேடா? பார் சோப்பைத் தாண்ட மாட்டெங்குதே என்பார்! அது என்னடா பார் சோப்பு என்றால் சம்பளம் 501ஐ தாண்ட மாட்டேங்குதே என்பார். பொறுமையாய் இரு என்று சொல்வேன். நான் சொன்னது போல் சில படங்களுக்கு அப்பால் நாகேஷை நான் தேட வேண்டியதாகி விட்டது. அவர் எங்கேயோ சென்று விட்டார். அவ்வளவு பிசி. என்றாலும் நான் எடுத்த படங்களுக்கு தாரளமாய் நேரம் ஒதுக்கி நடித்துக் கொடுத்தார்!

வி.எஸ்.ராகவன்

நாகேஷை என் நண்பனா அடைஞ்சது நான் பெற்ற பாக்கியம். காதலிக்கிறவங்களுக்குள்ள மொதல்ல மோதல் வந்து பிறகு காதல் வர்ற மாதிரி எங்க நட்பு! ஏதோ ஒரு நாடகத்துல நான் நடிச்சிருந்தேன், அதை பாத்துட்டு நாகேஷ் அந்த நாடகத்துல நீ என்ன பண்ணியிருந்தே? ஒன்னும் புரியலையே என்றார். உனக்குத் தானே புரியலை, பரவாயில்லை என்றேன். அங்கு தான் தொடங்கியது எங்கள் நட்பு. அதற்குப் பிறகு நாங்கள் அடிக்கடி சந்திக்க ஆரம்பிச்சோம். நாகேஷ் ஒரு துணிச்சல்காரர். பார்க்க தான் நரம்பா இருப்பாரே தவிர மன உறுது ஜாஸ்தி! நாங்க எல்லாரும் ஒரு நிகழ்ச்சிக்காக மலேஷியா சிங்கப்பூர் போயிருந்தோம். அங்க ஒரு ஆர்டிஸ்டோட அப்பா குடிச்சிட்டு வந்து பாட்டிலை ஒடைச்சி எங்களை எல்லாம் குத்திடுவேன்னு மிறட்டினாரு. நாகேஷ் தைரியமா அவர் முன்னால நின்னு எங்கே, குத்துடா, குத்து என்றார். பிறகு அவர் பணிந்து போன பிறகு ஏன்பா இப்படி போய் அவன் முன்னாடி நிக்கிறே? அவனே குடிச்சிட்டு வந்துருக்கான்னு சொன்னா, குடிகாரனை பத்தி எனக்குத் தெரியாதா, அவன் சும்மா உதார் விட்றான் என்றார். நாகேஷ் ஒரு குழந்தை என்றும் சொல்லலாம். அவருக்கு ஒரு பொருள் பிடித்து விட்டதென்றால் அவருக்கு அது அப்பவே வேண்டும். என்னிடம் இருந்த காது குடையும் கம்பி போல் வேண்டுமென்று ஊர் பூராவும் அலைந்தோம். அதே போல் நாகேஷ் ஒரு சாமர்த்தியசாலி. தயாரிப்பாளர்களிடம் பணத்தை கறாராக பேசி வாங்கி விடுவார். பணத்தை வசூலிக்காமல் டப்பிங் செய்ய மாட்டார். அவர் பிசியா நடிச்சிட்டு இருந்த காலகட்டத்துல ஒரு நாளைக்கு 2, 3 கால்ஷீட் கொடுக்குறது வழக்கம். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரும் கலைஞர்களே அவருக்காக காத்திருப்பார்கள். ஒரு ஸ்டூடியோவில் லேட் ஆனால், அடுத்து போக வேண்டிய ஸ்டூடியோவில் இருக்கும் எலெக்ட்ரிஷியனை கூப்பிட்டு கரண்டை கட் செய்ய சொல்லி விடுவார். அவர் போய் சேர்ந்தடும் கரெக்டாய் கரண்ட் வந்து விடும். நாகேஷ் வந்தவுடன் கரண்ட் வந்து விட்டது என்று இவருக்கு நல்ல பெயர் வேறு கிடைத்து விடும்.

'வியட்நாம் வீடு' சுந்தரம்

என் வியட்நாம் வீடு நாடகத்தை மேடையேத்த ஒய்.ஜி.மகேந்திரன் கேட்டர். நானும் அவரின் மீது உள்ள நம்பிக்கையால் கொடுத்து விட்டேன். நாகேஷ் இறந்த சில நாட்களுக்கு முன் அவர் வீட்டிற்குச் சென்று இந்த விஷயத்தை சொன்னேன். டென்சிங் இன்னைக்கு செய்ய வேண்டியதை அன்னைக்கே செஞ்சுட்டான். அதான் எல்லோரும் அவனை மறந்துட்டா, நீ என்னைக்கோ எழுதின நாடகத்தை இன்னைக்கு மேடையேற்றி உன்னை ஞாபகப்படுத்திக்கிறா, நல்லது தானே என்று சொல்லி விட்டு என்னை சற்று நேரம் கூர்ந்து நோக்கினார். எனக்கு அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று புரிந்தது. அவர் மெல்ல என் கையை பற்றி "நீ முந்திண்டா நோக்கு, நான் முந்திண்டா நேக்கு!" என்றார். யுஏஏ வில் சாதாரண லைட் பாயாய் இருந்த நான் இன்று மேடையில் பேசும் அளவிற்கு வந்ததற்கு நாகேஷும் ஒரு காரணம்.

சச்சு

நாகேஷுடன் நடிக்கும் போது ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும், அவர் எப்போது எப்படி என்ன செய்வார் என்று அவருக்குத் தான் தெரியும். ஏதோ ஒரு படத்தில் ஒரு சீனில் நடித்துக் கொண்டிருக்கும் போது என் வாயில் படபடவென்று அடித்து விட்டார். ஷாட் முடிந்து பார்த்தால் ரத்தமே வந்து விட்டது. நாகேஷ் என்ன இது என்று கேட்டால், ஓ சாரிம்மா, நான் சொல்லனும்னு தான் இருந்தேன் என்று இழுப்பார். என் பாட்டி என் கூட ஷூட்டிங் வரும் போது இவரிடம் எப்படி சாப்பாடு கொடுக்குறது? என்ன சாப்பிடுதோ அப்படி இப்படி என்று புலம்ப இவரும் என்ன பாட்டி ரொம்ப கவலைப்பட்றீங்க, இதோ இருக்குது பேத்தி சாப்பாடு கொடுங்க என்றார். அதற்கு என் பாட்டி இவளை சொல்லலை, வீட்டுல இருக்குற நாயை சொன்னேன் என்று சொல்லி விட்டார். அவ்வளவு தான், இதை யுனிட் பூரா தண்டோரா போட்டு விட்டார். அதன் பிறகு என் பாட்டி நாகேஷ் இருந்தால் நான் வரலை என்ற அளவுக்கு ஆகி விட்டார்.

நிற்க

நாடக விழாவோ, சினிமா சம்பந்தப்பட்ட பாராட்டு விழாவோ, அல்லது இந்த மாதிரி அஞ்சலி கூட்டமோ, மனோரமா தவிர்க்க முடியாதவராகி விடுகிறார். இவரை அழைப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். மேடையில் பேச விட்டால் பாதி உணர்ச்சி வசப்பட்டும், பாதி உளறிக் கொட்டியும் எல்லோரையும் பாடாய் படுத்துகிறார். இவரா சினிமாவில் அந்தக் கலக்கு கலக்கியவர் என்றால் நம்பவே முடியவில்லை. இரு வார்த்தைகள் கோர்வையாய் இவரால் பேச முடியவில்லை. அவருக்கு முன்னால் பேசியவர்களின் பேச்சை எல்லாம் வாங்கிக் கொண்டு அதையே மறுபடியும் நா தழுதழுக்க சொல்லி சப்பை கட்டு கட்டி விடுகிறார். வடிவேலுவின் பேட்டிகளைப் பார்க்கும் போதும் எனக்கு இது தோன்றுவதுண்டு. ஏதோ உலகத்திலேயே அவர் ஒருவர் தான் அடக்கமானவர் மாதிரி ஆமாம்மா, அவரோட நான் நடிச்சது என் பாக்கியம் என்று ஓவர் செண்டிமெண்டுகளை பிழிவார். அத்தனை பெரிய சிரிப்பு நடிகரின் பேட்டி எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். எப்படி இவர் ஸ்கிரீனில் இவ்வளவு பிரமாதப்படுத்துகிறார் என்று எனக்கு சந்தேகம் வருவதுண்டு. நாகேஷ் சொன்னது போல் நம் தமிழ் சினிமாவில் காமெடியன்களில் சிலருக்கு டைமிங் நல்லா இருக்கு, சிலருக்கு டைம் நல்லா இருக்கு! என்பது தான் நினைவுக்கு வருகிறது.



நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையும் பேச அழைக்கும் போது ஒய்.ஜி.மகேந்திரன் நாகேஷைப் பற்றி பல வித எண்ணங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பாக இருந்தது. அதில் சில.

கலாட்டா கல்யாணத்தில் சிவாஜியும் நாகேஷும் வாடா போடா என்று பேசிக் கொள்வார்கள். நாகேஷ் ஏதோ பெசி முடித்ததும் சிவாஜி ஜெர்க் விட்டுக் கொண்டு, "ஏண்டா, டயலாக் பேசுறியா?" என்பார். பதிலுக்கு நாகேஷ், "ஏண்டா, நீ இருக்கும் போது யாரும் டயலாக் பேசக் கூடாதா?" என்பார்.

நம்நாடு படத்தில் ஏதோ வெளிநாட்டுக்காரர் போல் உடையணிந்து கொண்டு ஒரு பெரிய நாயுடன் நாகேஷ் வருவார். அதில் வில்லனாக வரும் தங்கவேலு நாயைப் பார்த்து நாகேஷிடம் "ஏன்பா, இது என்ன நாயா?" என்பார். அதுக்கு நாகேஷ், "பின்ன என்ன நீயா?" என்று ஒரு போடு போட்டார். அந்தக் காட்சி எடுத்து முடிந்ததும் தங்கவேலு எம்.ஜி.ஆரிடம் என்னங்க இந்தப் பைய இப்படி ஒரு போடு போட்டானே, தயவு செய்து இந்த சீனை எடுத்துறுங்க என்று கெஞ்சினார். எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அதை அப்படியே வைத்து விட்டார். எம்.ஜி.ஆரே நாகேஷை அந்த அளவிற்கு ரசித்தார்.

கெளரவம் படத்தில் வீட்டில் கோர்ட் ஒத்திகை பார்க்கும் சீன். சிவாஜி இங்கிலீஷில் பேசி அசத்தி டேக் ஓக்கே ஆயிற்று. எல்லோரும் ஆரவாரமாய் கை தட்டினார்கள். ஆனால் அவர் செட்டில் ஓரத்தில் இருந்த இருந்த எங்களிடம் (நாகேஷும், நானும்) என்னடா எப்படி சீன்? என்றார். நாகேஷ் உடனே கொஞ்சமும் பயப்படாமல் இந்த படத்துல நீங்க பல இடத்துல பாரிஸ்டர் மாதிரி இங்கிலீஷ் பேசி அசத்தியிருக்கீங்க, ஆனா இப்ப நீங்க பேசினது பாரிஸ்டர் இங்கிலீஷ் மாதிரி இல்லை, ராயபுரம் இங்கிலீஷ் மாதிரி இருந்தது. ஸ்டைலாய் இல்லை என்று ஒரு போடு போட்டார். எங்க ரெண்டு பேருக்கும் இதான் தோணுச்சு என்று என்னை வேறு கூட சேர்த்துக் கொண்டார். அதற்கு அவர், போங்கடா தடி மாட்டுப் பசங்களா, நான் என்ன ஒய்.ஜி.பி. ஆரம்பிச்ச இங்கிலீஷ் ஸ்கூல்லயா இங்கிலீஷ் படிச்சேன். நல்லாயில்லைன்னா சொல்ல வேண்டியது தானே என்று உடனே இன்னொரு டேக் எடுத்து அதை சரியாய் பேசி விட்டு ஒரு முறை நாகேஷ் பக்கம் பார்த்தார். நாகேஷ் ஓகே என்று கை காட்டியதும் தான் அவருக்குத் திருப்தி வந்தது.

நாகேஷ் சிவாஜிக்கு சடை என்று பெயர் வைத்திருந்தார். எப்போ பாத்தாலும் மேக்கப் போடு, டயலாக் படி என்று படுத்தும் என்பார். அதே சமயம் கெளரவம் படத்தில் அவர் மேக்கப் அறைக்கு சிவாஜி கணேசனாய் போய் திரும்பி வரும் போது பாரிஸ்டர் ரஜினிகாந்தாய் வெளியே வருவார். மதியம் ஒன்றரை வரை அப்படித் தான் பேசுவார். மதியத்திற்குப் பிறகு கண்ணனாய் தான் திரிவார். அவன் தாண்டா நடிகன், நம்ம எல்லாம் வேஸ்ட் டா என்றும் புகழ்வார்.

நிற்க


ஒய்.ஜி.மகேந்திரன் சிவாஜியின் தீவிர பக்தர் என்று நான் அறிவேன். ஆனால் அவர் நாகேஷிடம் அதே பக்தி கொண்டிருப்பார் என்று இன்று தான் அறிந்தேன். அவர் அந்த ஜாம்பவான்களோடு இருந்த சமயங்கள் ஒவ்வொன்றையும் சிலாகித்துச் சொல்லும் போது அவர்களிடம் அவருக்கு இருக்கும் மரியாதையும் பக்தியும் வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. அதனால் தான் அவர் இறந்த பிறகும் இத்தகைய ஒரு விழாவை அவரால் எடுக்க முடிகிறது.

எல்லோரும் பேசி முடித்ததும் நாகேஷின் அற்புதமான சில க்ளிப்பிங்க்ஸ்களை போட்டுக் காட்டினார்கள். கமலஹாசன் சொன்னது போல் ஒரு மனிதரின் இரங்கல் கூட்டத்திற்கு வந்து அதை மறந்து அவரை நினைவு கூறும் இடமெல்லாம் சிரிப்பென்றால் அந்த வாழ்க்கை எத்தகையது! காமெடியனாவே இருந்தாலும்

SERIOUSELY HE IS A LEGAND! HATS OFF!

கீழிருக்கும் அத்தனை பாய்ண்ட்களையும் நம் வலையுலக எழுத்தாளர்கள் ஒன்று விடாமல் எழுதியாகிவிட்டது. அப்புறம் நீ எதுக்கு எழுதுறேன்னு கேக்கப்படாது! எனக்கும் ஒரு ப்ளாக் இருக்குல்ல, நீங்க எழுதினதை நான் படிச்ச மாதிரி நான் எழுதினதை நீங்களும் படிக்கணுமா இல்லையா? இல்லை தெரியாம தான் கேக்குறேன் நான் எப்போ தான்யா ஒரு பதிவு போட்றது?



பாலா சாரிடம் சில கேள்விகள்

1. இருக்கும் எல்லா கழிசடைகளை விட நேர்த்தியாய் தான் படம் எடுக்கிறீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் ஒரே வித்தியாசம். அவர்களின் கதாநாயகர்கள் ஊரோடு ஒட்டி வாழ்ந்து குத்து, பாட்டு பாடி, எதிரிகளை வீழ்த்துகிறான். உங்கள் கதாநாயகன் ஊரோடு ஒன்ற முடியாத காட்டு வாசியாய் ஓன்றும் பேசாமலும், அப்படியே பேசினாலும் ஒன்றும் புரியாமலும் எதிரிகளை வீழ்த்துகிறான். எல்லோரிடமும் அடிபடும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை எப்போது படம் எடுப்பீர்கள்? (நீங்கள் அப்படி எடுத்தால் அந்தப் படமும் ஓடும் என்று நான் நம்புகிறேன்!)

2. நான் கடவுள் படத்தை உண்மையில் எத்தனை மணி நேரம் வருமாறு படம் பிடித்தீர்கள்? காசி காசி என்று மூன்று வருடமாய் கேட்டோமே, அங்கே அந்த 15 நிமிஷம் தானா எடுத்தீர்கள்?

3. அது எப்படி சார், 14 வருஷத்துக்குப் பிறகு அந்தக் கோலத்தில் இருப்பவனையும் தன் மகன் தான் என்று தந்தை சரியாய் அடையாளம் கண்டு கொள்கிறார்? லாஜிக்கே பார்க்காமல் படம் பார்க்கத் தானே பேரரசு போன்றவர்களை எல்லாம் வளத்து விட்டுறுக்கோம், உங்களுக்கு ஏன் இதெல்லாம்?

4. ஆர்யா காசியில் தொலைந்து போயிருந்தால், ஒரு வேளை உண்மையிலேயே அகோரி ஆனாலும் ஆகியிருப்பார். அந்த அளவுக்கு அவரை மாற்றிய நீங்கள் பூஜா பாடும் பாடல்களை ஏன் அவர் குரலிலேயோ அல்லது ஒரே ஒரு நல்ல குரலிலோ பாட வைக்கவில்லை? இதெல்லாம் நான் உங்களுக்கு சொல்லனுமா சார்?

5. பூஜாவைச் சுற்றி நாய்களும், நரிகளும், பேய்களும் (அதுங்க கூட பரவாயில்லை, சுற்றி மனுஷனுங்க!!) சுத்தி இருக்கும்போது அந்தப் பெண்ணை கற்பழிக்காமல் எப்படி சும்மா விட்டார்கள்? இதுக்கே அந்தப் பொண்ணு இந்த ஜென்மமே வேணாம் சாமின்னுதே, நம்ம நாட்ல இதை விட பொண்ணுங்க அவதிப்பட்றாங்களே அவங்களை எல்லாம் என்ன செய்றது?

6. அந்த தாண்டவனை எங்க சார் புடிச்சீங்க? அவனை பாத்தாலே....ஆமா, உண்மையில் ஆர்யா அந்த முதலாளிகளின் பிணங்களை என்ன சார் செஞ்சாரு? ஒருவேளை படத்தோட உக்கிரம் தாங்க முடியாம எல்லாரும் அகோரியா மாறி ரெண்டு பேரையும் கொன்னு தின்னுட்டீங்களா? மக்கா, நீங்க பாத்த தியேட்டர்லயாவது அதை காட்டுனாங்களா?

7. அப்புறம் சில தேவையில்லாத சீன்களும், அதன் தேவையில்லாத நீளமும் நீங்கள் ஏன் சரி செய்ய முயலவில்லை? (அந்த போலிஸ் ஸ்டேஷன் கூத்துக்கள், முருகன் குடித்து விட்டு உளருவது...)

பேட்டியில் படித்த போதெல்லாம் நிறைய மனநிலை சரியில்லாதவர்கள் நடிக்கிறார்கள், அவர்களை நடிக்க வைக்க நிறைய நேரம் தேவைப்பட்டது என்றெல்லாம் படித்தேன். ஆனால் நடித்தவர்கள் அந்த அளவுக்கு நிலை தவறியவர்கள் மாதிரி தெரியவில்லை, ஒருவேளை நீங்கள் அவ்வளவு தெளிவாக நடிக்க வைத்து விட்டீர்களா? படத்தைப் பற்றி நிறைய எதிர்பார்ப்பு இருந்தது, எதிர்பார்ப்பு ஒன்று இருந்தாலே ஏமாற்றம் என்பது சகஜம். தீபாவளிக்கும், பொங்கலுக்கும் படம் விட்றது சினிமா ஒன்னும் பட்டாசு, கரும்பு இல்லை என்று எனக்குப் புரிகிறது, ஆனாலும் கொஞ்சம் பாத்து பண்ணுங்க சார்! தமிழ் சினிமா உங்களைப் போன்றவர்களைத் தான் நம்பியிருக்கிறது...அடியேனும் தான்!
நாற்பது ஆண்டுகளுக்கு முன் ரயில்வேயில் குமாஸ்தாவாக பணி புரிந்தவர் நேற்று இயற்கை எய்தியுள்ளார்! கடந்த நாற்பது ஆண்டுகளும் அவர் ரயில்வேயில் பணி புரிந்து விட்டு இறந்திருந்தால் அவரின் வாழ்க்கைக்கு அர்த்தம் இருந்திருக்குமோ இல்லையோ, இந்தப் பதிவுக்கு அர்த்தமிருந்திருக்காது! கடந்த நாற்பது ஆண்டுகள் கலையுலகில் அவருடைய உழைப்பும், அர்ப்பணிப்பும் இன்று அவரின் மறைவிற்கும், இந்தப் பதிவிற்கும் அர்த்தம் சேர்க்கிறது! நாகேஷ்! இந்தப் பெயரை சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை, நாகேஷ் என்ற பெயரைக் கேட்டவுடன் அதில் ஒரு வித நகைச்சுவை எனக்குத் தென்படுகிறது. முன் பின் தெரியாத ஒருவரின் அறிமுகத்தின் போது அவர் தன் பெயரை நாகேஷ் என்று சொன்னால் உங்களின் மனம் அனிச்சையாய் நடிகர் நாகேஷை நினைத்து ஒரு புன் முருவல் பூக்கும். அதை உங்களால் தவிர்க்க முடியுமா? அத்தகைய தாக்கத்தை நம் மனதில் நிரந்தரமாய் தங்கி இருக்கச் செய்தவர் நாகேஷ். மாடி வீட்டு மாதுவையும், தருமியையும், வைத்தியையும், செல்லபாவையும் மறக்க முடியுமா? ஆயிரம் பொன் பரிசாச்சே, சொக்கா என்ற அவரின் கூவல் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது! உங்களுக்கு ஒன்று தெரியுமா? திருவிளையாடல் வெற்றி விழாவை மதுரையில் கொண்டாடினார்களாம். அந்தத் திரைக்காவியத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் பொற்கிழி கொடுத்து கெளரவிக்கப் பட்டதாம். அந்த விழாவிற்கு நாகேஷை அழைக்கவில்லை. அது தான் சினிமா, என்று நாகேஷின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை லேண்ட்மார்க்கில் நின்று கொண்டே படித்த ஞாபகம்!!

நிற்க

இந்நேரம் அபியும் நானும் படத்தை வலையுலகம் பிரித்து மேய்ந்திருக்கும். என்ன செய்வது? எனக்கு இப்போது தான் அதைப் பார்க்க முடிந்தது! டூயட் மூவிஸாரிடமிருந்து மீண்டும் ஒரு நல்ல திரைப்படம்! எனக்குப் பிடித்தது! குழந்தைங்க கடகடன்னு வளர்ந்துர்றாங்க, ஆனா சில அப்பாக்கள் வளர்றதே இல்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை!! இன்றைய தலைமுறையில் குழ்ந்தைகள் தனக்கு என்ன வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாகவே உள்ளனர். they know what they are doing! தன் கருத்தை, தன் வாழ்க்கையை, தன் கனவை தம் பிள்ளைகளிடம் திணிக்கும் நம் இந்திய மரபு ஒழிய வேண்டும்! நல்லதோ கெட்டதோ, பிள்ளைகளை வழி நடத்துவதோடு பெற்றொர்களின் கடமை முடிந்து விடுகிறது. இதிலும் காதல் உண்டு என்ற போதும், இது போன்ற காதல் அல்லாத வாழ்வின் பிற உணர்வுகளின் மீதும் தமிழ் சினிமாவின் பார்வை விழ வேண்டும்! பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா, ரவி சாஸ்திரி [இவர் பெயர் என்ன?] கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ஜோடி எனக்கு ஏனோ பாரத விலாஸில் சிவாஜி - கே. ஆர். விஜயா ஜோடியை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது. அசட்டுத் தனமாய் நடந்து கொள்ளும் புருஷனுக்கு ஏற்ப அவனை ஒரு குழந்தையாய் பாதுகாக்கும் ஒரு மனைவி! பாரத விலாஸிலும் இதே காரெக்டரைசேஷன் தான். த்ரிஷாவின் காதலனாக பல்லே பல்லே என்று ஒரு சிங் வந்து நிற்பது தமிழ் சினிமாவுக்கு ஏற்ற அக்மார்க் ட்விஸ்ட்! மாமனாருக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக பிரதமரே அவரிடம் தொலைபேசியில் பேசுவதெல்லாம் கொஞ்சம் ஓவராகத் தான் பட்டது! அதிலும் மாப்பிள்ளையின் சொந்த பந்தங்களின் கதை எல்லாம் ஓவர் டோஸ்! அபியின் குடும்பம் ஒரு அழகான அமைதியான சராசரியான குடும்பம் என்பதைப் போல் மருமகனையும் யதார்த்தமானவனாகக் காட்டி இருக்கலாம்! என்ன தான் படம் நன்றாய் சென்றாலும், சருக்கு மரம் விளையாடச் சென்ற பிருத்திவிராஜின் குழந்தையை எங்கே காணோமே என்று என் மனம் அலை பாய்ந்து கொண்டே இருந்தது. இடைவேளை வரை அது அப்பாவைத் தேடவே இல்லை, வீட்டுக்கு போவோம் என்று சொல்லவே இல்லை.
அலுவலகத்தில் க்ரிஸ்மம், க்ரிஸ்சைல்ட் விளையாடுகிறோம்! சீட்டு குலுக்கிப் போட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். சீட்டில் யார் பெயர் வந்திருக்கிறதோ அவருக்கு நீங்கள் அம்மா. இதே போல் உங்கள் பெயரும் யாருக்கோ போயிருக்கும். அவர்கள் உங்களுக்கு அம்மா. ஆனால் தன் குழந்தையிடம் தான் தான் தாய் என்பதை கூறக் கூடாது! இயற்கைக்கு மாறுபட்டு இந்த ஆட்டத்தில், அம்மா சொல்வதை குழந்தை கேட்க வேண்டும்! இது தான் ஆட்டத்தின் நிபந்தனை...தினமும் அம்மா சொல்லும் செயல்களை குழந்தை தட்டாமல் செய்தால் ஆட்டத்தின் முடிவில் அம்மா குழந்தைக்கு ஒரு பரிசு கொடுப்பாள்! இது தான் ஆட்டம்!

சென்ற ஒரு வாரமாய் இந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறோம்! இதை பொதுவாக கிறிஸ்துமஸ் சமயங்களில் விளையாடி கிறுஸ்துமஸ் அன்று பரிசுகளை வழங்குவது வழக்கம். ஆனால் நாங்கள் க்ரிஸ்மம்மை பொங்கல்மம் ஆக்கிவிட்டோம்! இதுவும் நன்றாய் தான் இருக்கிறது...என் க்ரிஸ் மம் என்னிடம் என் மனைவியை பற்றி ஒரு கவிதை சொல்லு என்று சொல்லிவிட்டது! கேட்கவா வேண்டும்....ஒரு சென்னை 28 மாதிரியான கவிதையை எடுத்து விட்டேன்! [லைஃவ் இஸ் ட்ராமா, ஐ லவ் யு பூமா] அதுவாய் பொங்கி விட்டது...கவிதை [இது, கவிதை?] கீழே...

குருவி விஜய்க்கு ஒரு த்ரிஷா...
குருவி விஜய்க்கு ஒரு த்ரிஷா...
குமரன் பிரதீப்புக்கு ஒரு நிஷா! [என் மனைவியின் பெயர்]

ஊர்ல இருக்குற பல பொண்ணுங்களை பாத்து
என் கண்ணு டாப்புன்னுச்சு!
ஊர்ல இருக்குற பல பொண்ணுங்களை பாத்து
என் கண்ணு டாப்புன்னுச்சு!

உன்னைய பாத்ததும் என் மனசு
போதும் ஸ்டாப்புன்னுச்சு!

உன்னைய நெனச்சாலே கவிதை கொட்டுது
சொன்னா நம்ப மாட்டே கனவுல கயித முட்டுது!
ஸ்வபா...இப்போவே கண்ண கட்டுது!!

உன்னைய பாத்தாலே எனக்கு ஒரே ஃபீலிங்கு
உன்னைய பாத்தாலே எனக்கு ஒரே ஃபீலிங்கு
உன் ஒருத்திகிட்ட தான் என் ஹார்ட் ஃபாலிங்கு!

வானத்துல காயுது மூனு!
நான் தான் நீ தேடின மேனு!
உன் கண்ணு ரெண்டும் மீனு
ஜாக்ரதை, நான் வெஜ் நானு!!

நீயில்லின்னா நான் அவுட்டு
நீயில்லின்னா நான் அவுட்டு
லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன், எனி டவுட்டு?

காந்தி போடச் சொன்னார் கதர்!
காந்தி போடச் சொன்னார் கதர்!
வி ஆர் மேட் ஃபார் ஈச் அதர்!!

கடைசியா சொல்றேன் ஒண்ணு
கடைசியா சொல்றேன் ஒண்ணு
கடைசி வரை நீ தான் என் கண்ணு!

எப்படி கவிதை? அதான் ஒன்னுக்கு கீழே ஒன்னா வரியும், பல ஆச்சர்ய குறியும் இருக்குல்ல? [எப்படி ரைமிங்கு?] அப்போ அது கவிதை தானே...இப்போது இதை படித்த அத்தனை பேரும் கோரஸாய் வாஹ், வாஹ் என்று சொல்ல வேண்டும்! எங்கே பார்க்கலாம்...
வேண்டாம். என்னை ஒன்றும் கேட்காதீர்கள். நானே மண்டை காய்ந்து போயிருக்கிறேன். நவீன கவிதைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்னு நினைக்கிறது குத்தமா....அது என்னவோ தெரியவில்லை, சிறு வயதிலிருந்தே கவிதையை ரசிக்கும் பக்குவம் இருந்தது எனக்கு. அப்போதெல்லாம் புதுக் கவிதைகள் அதிகமாய் இருந்தன. எளிதான வார்த்தைகள், வர்ணனைகள் என்று புரியவும், ரசிக்கவும் ஏதுவாய் இருந்தது. ஆனால் இப்போது வரும் நவீன கவிதைகளின் தலை கால் புரியவில்லை. சரி நல்ல கவிதைகளை எப்படி அடையாளம் காணலாம் என்பதை விளக்கும் கவிஞர்களின் கட்டுரைகளை படித்தால் அது மற்றொரு நவீன கவிதைகளாகவே இருக்கிறது..ஒரு வேளை அதை நவீன கட்டுரை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்...தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஒரு வேண்டுகோள்! கீழிருக்கும் கவிதைகளைப் படித்து எனக்கு அர்த்தம் சொல்லுங்கள்! தமிழில் இருக்கும் அதிகம் உபயோகப்படாத வார்த்தைகளை சீட்டில் எழுதி குலுக்கி போட்டு எல்லாவற்றையும் கலந்து அடித்து இப்படி சம்மந்தா சம்மந்தமில்லாமல் எழுதுவது தான் நவீன கவிதையா?

இனி கவிதைகள் [என்ற பெயரில் என்னவோ...]

ஏதோ ஒரு வகை மீறலின் நீட்சி
மனமெங்கும் வியாபித்திருக்க
இரு கண்களின் வழியே வழியும்
கானல் நீராய் அது அலைக்கழிக்கும்
ஒரு நீர்த் துளியின் விளிம்பில்
விருட்சம் ஒன்றின் வேர் வளரும்
அந்த ஒரு நொடிக்காக நான்
காத்திருக்க மாட்டேன்!

குறையொன்றுமில்லை
உன் குறுதியின் அழகியல் சார்ந்த
வழிபாடு எனக்கு வாய்த்தபின்
குறையொன்றுமில்லை

அந்திச் சூரியனின் நிறம் கண்டு
கதறி நிற்கும் ஒரு பைத்தியக்காரனின்
பிதற்றல்களில் தெரிக்கும் ஒரு
பிரபஞ்சத்தின் ஓலம்

வைகரையின் வசந்த வீச்சில் வாலிப நுரைகள்
வந்து வந்து உன் காலை நனைத்த
அந்த நாளில் தான் உன் தெற்றுப் பல்
தெரிய நீ சிரித்தாய்!

நீ உளரியதையும்
நான் உளரியதையும்
புசித்துச் செரித்து
நம் உடல்கள் பூரித்து
நின்றபின் நமக்கான காதலை
நாமிருவரும் தேடத் துவங்குவோம்!

ஏதோ ஒரு வகை மீறலின் நீட்சி என்றால் என்ன? கண்களில் கானல் நீரா? நீர்த் துளியின் விளிம்பில் எப்படி விருட்சம் ஒன்றின் வேர் வளரும்? ஆமா நீ யாரு? இதுக்கும் நீ காத்திருக்குறதுக்கும் என்ன சம்மந்தம்? அட போங்கப்பா....இதை விட அடுத்து, குறுதியில் என்னய்யா அழகியல் சார்ந்த...அதோடு வழிபாடு ஏன் சேர்ந்தது? இல்லை என்னை பாத்தா உங்களுக்கு எப்படி இருக்கு? நானும் சரி கவிதையை புரிஞ்சுப்போம், நாமும் நாலு வரி எழுதி இலக்கியத்துக்கு தொண்டு செய்வோம்னா...ஸ்வபா....

ஆமாம், உண்மையில் இது நல்ல கவிதைகளா? இல்லை வெறும் பேத்தலா? எனக்குத் தான் புரியவில்லையா? நானும் படித்திருக்கிறேன். எல்லா கவிதைகளும் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதில்லை, அவரவர்க்கான கவிதைகளை ரசிக்கலாம், மற்றதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று! அப்படி என்றால் மேல் சொன்னவை யாருக்கான கவிதைகள்?
32ம் வருட புத்தக சந்தையைப் பற்றி எல்லோரும் பதிந்தாகிவிட்டது என்று நினைக்கிறேன்! சென்ற வாரமே நான் சென்று வந்து விட்ட போதிலும் இப்போது தான் பதிய முடிந்தது. இந்த முறை நான் அதிகம் புத்தகம் வாங்கவில்லை. கண்காட்சிக்குப் போவதற்கு முன்பே இந்த முறை சாரு நிவேதிதாவின் புத்தகத்தை வாங்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்! அவருடைய வலைப்பூவை மட்டும் படித்துக் கொண்டேயிருந்தால், எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து, பின் சட்டையை பிடித்து, ஏண்டா என் புக்கை வாங்க மாட்றீங்க என்று கேட்டு விடுவாரோ பயந்தும், சரி மனிதர் ரொம்பவும் தான் பேசுகிறார், ஒரு விஷயமும் இல்லாமல் இவ்வளவு பேச முடியுமா என்று சந்தேகித்தும், அப்படி என்ன தான் இலக்கியம் படைத்திருக்கிறார் என்று வியந்தும் அவருடைய ராஸ லீலா, ஃபேன்ஸி பனியன் [தலைப்பின் இன்னொரு பகுதி இன்னும் மனப்பாடம் ஆகிவில்லை], ஜீரோ டிகிரி என்று வாங்கித் தள்ளி விட்டேன். ஜீரோ டிகிரி ஒரு 60 பக்கம் படித்திருக்கிறேன். ஒரு துளி கூட புரியவில்லை. நாக்கு தள்ளிவிட்டது! முழுதும் படித்து விட்டு, சாருவை கொஞ்சமாவது புரிகிறதா என்று முயற்சி செய்து பார்க்கணும். உயிர்மையில் தான் அதிகம் வாங்கினேன். கா.நா.சு வின் பொய்த் தேவு, மேல் சொன்ன சாருவின் புத்தகங்கள், பாப்லோ நெருடாவின் கவிதையும், மனுஷ்ய புத்திரனின் சில கவிதைத் தொகுப்புகளும் வாங்கினேன். வழக்கம் போல் என் படுக்கையரையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் கிடைக்கவில்லை. மனுஷ்ய புத்திரனிடம் கேட்டு அவரை கொஞ்சம் சங்கடப்படுத்தினேன்! எஸ்.ராமிகிருஷ்ணன் உயிர்மை ஸ்டாலில் வந்திருந்தார். நான் வழக்கம் போல் அவரிடம் சென்று பேசவில்லை...அம்ருதா பதிப்பகத்தில் திலகவதி தொகுத்த முத்திரைகள் பத்து புத்தகங்கள் மிகவும் பிடித்தது. பல தேர்ந்த எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து பத்து பத்து கதைகளாய் பிரித்து ஒரு சின்ன டைரி வடிவில் தொகுத்திருப்பது என் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒரு எட்டு புத்தகங்களை வாங்கினேன். கிட்டத்தட்ட 315 ரூபாய் ஆனதாய் ஞாபகம். 8 விதமான எழுத்தாளர்களின் எழுத்துக்களும் 80 சிறுகதைகளும் கிடைத்த மகிழ்ச்சி! எங்காவது பயணிக்கும் போது கூடவே எடுத்துச் சென்று விடலாம்! மிகச் சுலபம்!! விகடனில் நான் வாங்குவது கார்ட்டூன்ஸ் தொகுப்புகள் தான். சென்ற முறை கோபுலு, இந்த முறை மதன். மதனின் சிரிப்புத் திருடன் சிங்காரவேலும், ரெட்டைவால் ரெங்குடுவும் கிடைக்கவில்லை. அதை ஏன் ஒரு தொகுதியாக வெளியிடவில்லை? அல்லது என் கண்ணில் படவில்லையா தெரியவில்லை...இப்படியாக இந்த வருட புத்தகத் திருவிழா இனிதே முடிந்தது!

இந்த வார சனிக்கிழமை எலியட்ஸ் கடற்கரையில் சென்னை சங்கமத்தின் இறுதி நாள். சரி நல்லபடியாய் முடித்துக் கொடுத்து விட்டு வருவோமே என்று அங்கு சென்றேன். கடற்கரையின் இடது பக்க சாலை முழுதும் நட்சத்திர ஹோட்டல்களின் அணிவகுப்பு. ஒவ்வொரு ஹோட்டலும் ஒவ்வொரு ஊர்களின் ஐட்டத்தை போட்டு தாக்கிக் கொண்டிருந்தார்கள். விருதுநகர் எண்ணெய் பரோட்டா, திண்டுக்கல் மட்டன் பிரியாணி, செட்டிநாடு இட்லி, மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா, மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், பிரேம விலாஸ் அல்வா...[டோர் லாக், ஜொள்ளு வடியுது தொடைங்க!!] சாப்பாடு விஷயத்தின் அன்று மொத்த தமிழ்நாடும் அங்கு தான் இருந்தது! அந்த சாலையில் அமர்ந்து கொண்டு கையில் குதிரை பொம்மையுடனும், மினுக் மினுக்கென்ற உடையுடன் ஆடி அசைந்து செல்லும் கலைஞர்களை பார்க்க உற்சாகமாய் இருந்தது. தாரை தப்பட்டை, கிராமிய பாடல்கள் என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார்கள். எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது போல் சிவமணியின் ஒரு மணி நேர ட்ரம்ஸும், 45 நிமிட வாண வேடிக்கையும் கண்ணுக்கும், காதுக்கும் நல்ல விருந்தாய் அமைந்தது. சிவமணியைப் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். அவர் மீது எனக்கு ஒன்றும் பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை. ஓவராய் அலட்டுகிறார் என்றே தோன்றும்.! அன்றோடு அந்த எண்ணத்தை அடியோடு ஒழித்து விட்டேன். மனிதர் என்னமாய் தட்டுகிறார். வலுக்கைத் தலையுடன் யாராவது மேடையில் ஏறியிருந்தால், அவர் தலையிலும் தட்டியிருப்பார்! அப்படி ஒரு வாசிப்பு. கிடைத்ததை எல்லாம் தட்டுகிறார். இடைவிடாத அவரின் தட்டல்கள் இசைப் பிராவகமாய் பொங்கி இதயத்தில் இடியென இறங்கியது! ஆனந்தம், பேரானந்தம். அத்தனை பெரிய ஜன சமுத்திரத்தை அந்த ஒரு மணி நேரம் கட்டிப் போட்ட அவரின் வித்தையை நினைத்து வியந்தேன்! அவரிடம் தான் என்ன ஒரு உற்சாகம், என்ன ஒரு உழைப்பு, தான் எடுத்துக் கொண்ட வேலையில் என்ன ஒரு லயிப்பு! சில விஷயங்களை வார்த்தைகளில் விளக்க முடியாது தான்!!