மலையாளப் படங்களைப் பார்க்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை. புரியாதோ என்று ஒரு தயக்கம். அந்தப் படங்கள்ல புரிய என்ன இருக்கு, ஜஸ்ட் என் ஜாய் என்று கண்ணைக் காட்டாதீர்கள். நான் சொல்வது "அந்த" மாதிரி படங்களை அல்ல. மலையாள சினிமாவை சிலாகித்து அடிக்கடி பத்திரிக்கைகளில் படிப்பதுண்டு. இப்போது தமிழ் சினிமாவைப் பார்த்து அவர்களும் கெட்டுப் போய் விட்டார்கள் என்ற போதிலும், சீனிவாசன், ப்ளெஸ்ஸி, ஆடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் நல்ல படங்களை அவ்வப்போது தந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நேற்று தற்செயலாய் கமல் (ஹாசன் அல்ல) இயக்கிய கருத்த பக்க்ஷிகள் பார்த்தேன். அந்நியனுக்குப் பிறகோ என்னமோ, விக்ரம் இந்தப் படத்தை ரீமேக் செய்து நடிக்கப் போகிறார் என்று படித்ததாய் ஞாபகம். அது கடைசியில் நடக்கவே இல்லை. அப்போதிருந்தே இதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேற்று அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது. அதிலும் ஆன்லைனில் சப் டைட்டிலோடு இருந்தது மேலும் வசதியானது.



முருகன் தமிழ்நாட்டிலிருந்து பிழைப்புத் தேடி 15 வயதில் கேரளா வந்து தன் மூன்று குழந்தைகளுடன் வீடுகளில் சென்று இஸ்திரி செய்து கொடுத்து பிழைக்கிறான். அதில் கடைசிக் குழந்தை பிறவியிலேயே கண் பார்வை இழந்தவள். அவன் மனைவி வயிற்று வலியால் இறந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் குடும்பத்தோடு ஒரு ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி உள்ள ஒரு சேரியில் வாழ்கிறான். அவர்களைப் போலவே கஷ்டப்படும் அக்கம் பக்கத்துக்காரர்கள். அங்கே இருக்கும் ஒரு பிச்சைக்காரிக்கு (பூங்கொடி) அந்தக் குழந்தைகளின் மீது ஒரு அலாதிப் பிரியம். ஏழைகளுக்குத் துணை ஏழைகள் தானே! அவன் இஸ்திரி போட்டுக் கொடுக்கும் ஒரு பணக்கார வீட்டில் பம்பாயிலிருந்து சுவர்னா வந்து சேர்கிறாள். அவள் ஒரு தீராத நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள், வாழ்வின் கடைசி காலங்களை தன் சொந்த மண்ணில் கழிப்பதற்காக அங்கு வந்து சேர்கிறாள். அங்கு அவளுக்கு மல்லியின் பரிச்சயம் கிடைக்கிறது. அந்தப் பிஞுக் குழந்தைக்கு இந்த உலகத்தைக் காண வேண்டும் என்ற ஆவலைப் புரிந்து கொண்ட சுவர்னா, தான் இறந்ததும் தன் கண்ணை இவளுக்குக் கொடுக்க வேண்டும் என்று எழுதிக் கொடுக்கிறாள். சுவர்னா சீக்கிரம் செத்துப் போக வேண்டும் என்று மல்லியின் அண்ணன் ஆன்டவனைப் பிரார்த்திக்கிறான். இதற்கிடையில் ஒரு கலவரத்தில், முருகனின் இஸ்திரி பெட்டியையும், தள்ளு வண்டியையும் கும்பல் ஒன்று கொளுத்தி விடுகிறது. வாடிக்கையாய் இஸ்திரி போட்டுக் கொடுக்கும் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெய்ன்ட் செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. மூன்று பிள்ளைகளும் பசியால் துடிப்பது பொறுக்காமல் சலவைத் தொழிலாளியிடம் குறைந்த சம்பளத்தில் வேலைக்குப் போகிறான். பூங்கொடி விளையாட்டாய் மல்லியைக் கூட்டிக் கொண்டு, அவளையும் பிச்சை எடுக்க வைத்து எல்லோருக்கும் உணவு கொண்டு வருகிறாள். இதை அறிந்த முருகன் ஆத்திரம் கொண்டு அவளை அடித்துத் துரத்துகிறான். பூங்கொடி மல்லியை கண் பார்வையற்றவள் என்பதால் தான் பிச்சை எடுக்க அழைத்துச் சென்றாள் என்பதை தாங்க முடியாமல் வருந்துகிறான்.


I N T E R V A L


ஏற்கனவே வாங்கிய கடன் சுமை கழுத்தை நெறிக்க அந்த சலவைத் தொழிலில் முதலாளியின் ஆலோசனைப் படி இஸ்திரி வண்டி வைத்துக் கொண்டு அதை வைத்து வேலைக்குப் போகாமல் தண்ணி அடித்துக் கொண்டு ஊர் சுற்றும் ஒருவனிடம் சென்று அந்த வண்டியை வாடகை எடுத்துக் கொண்டு வேலையைத் தொடர்கிறான். ஒரு சமயம் சுவர்னாவின் பிறந்த நாளை முன்னிட்டு முருகனின் குடும்பத்தை அழைத்து விருந்து கொடுக்கிறார்கள். அப்போது சுவர்னா முருகனின் மனைவியைப் பற்றி விசாரிக்கிறாள், அவள் வயிற்று வலியால் இறந்ததாகவும், தமிழ்நாட்டில் சிதம்பரம் பக்கத்தில் ஒரு குகை இருப்பதாகவும், அங்கு சென்று வந்தால் தீராத நோயும் தீரும் என்றும், அவள் அங்கு சென்று வர வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறான். அதை நம்பாததால் தான் தன் மனைவியைப் பறி கொடுத்ததாகவும் சொல்கிறான். சுவர்னாவுக்கு அதில் நம்பிக்கை இல்லாத போதும், அவன் கேட்டுக் கொண்டதற்காக அவனையும் அவன் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு அங்கு சென்று வருகிறாள். ஒரு சமயம், முருகனிடம் தன் வண்டியை வாடகைக்கு விட்ட குடிகாரன், முருகன் வாடகையை தன்னிடம் தராமல் தன் மனைவியிடம் தருவதால் அவர்கள் இருவரையும் சந்தேகித்து முருகனிடம் விசாரிக்கும் போது ஆத்திரத்தில் முருகனை கத்தியால் குத்தி விடுகிறான். இதற்கிடையில், சுவர்னாவின் உடல் நலம் தேறி வருவதாயும், இனி பயப்படத் தேவையில்லையென்றும் அவளின் ரிப்போர்ட் பார்த்த டாக்டர் கூறி விடுகிறார். இதைக் கேட்டு அளவில்லா மகிழ்ச்சியடையும் சுவர்னா, சிறிது நேரத்தில் மல்லிக்குத் தான் கொடுத்த வாக்கை நினைத்தும், அவளுக்கு பார்வை கிடைக்கப் போவதாய் ஆசையை உண்டாக்கியதை நினைத்து குற்ற உணர்வு கொள்கிறாள். முருகனின் நிலையை கேள்விப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தாலும், அவள் உள்ளே செல்லாமல் அவன் செலவுக்குப் பணத்தை மட்டும் கொடுத்து அனுப்புகிறாள். விஷயத்தைக் கேள்விப்பட்ட முருகன் குணமானதும், நேராய் சுவர்னாவைப் பார்க்க வீட்டுக்கு வருகிறான். ஆனால் அவள் ஏற்கனவே பம்பாய் சென்று விட்டதால் அவனால் பார்க்க முடியாமல் போய் விடுகிறது. அவளின் குற்ற உணர்வை அறிந்த முருகன் அவள் நன்றாய் இருந்தால் போதும், எங்களுக்கு கண் தேவையில்லை என்று சொல்லிச் சென்று விடுகிறான். இந்தக் கத்திக் குத்து சம்பவத்தால் மனமொடிந்த முருகன், இங்கு குழந்தைகளை வைத்துக் கஷ்டப்படுவதை விட, சொந்த நாட்டுக்கே சென்று விடலாம், தனக்கு ஏதாவது கஷ்டம் வந்தாலும் அங்கு சொந்த பந்தங்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று முடிவெடுத்து தன் சொந்த நாட்டிற்குச் செல்லத் தயாராகிறான். இவர்கள் போவதை காணப் பொறுக்காமல் வாடி நிற்கும் பூங்கொடியிடம், நீயும் என்னுடன் வந்து விடு என்றவுடன் அவளும் துள்ளிக் குதித்துக் கொண்டு புறப்படுகிறாள். பேருந்து நிலையம் சென்றவுடன் சுவர்னா வீட்டில் சொல்லாமல் வந்தது ஞாபகம் வர, அவன் மட்டும் அங்கு போகிறான். அங்கே சுவர்னா இறந்து போயிருப்பதைப் பார்க்கிறான். சுவர்னாவின் கணவன் கீழ் சாதிப் பயலுக்கு சுவர்னாவின் கண்ணை தனமாகத் தர முடியாது என்று கூறிவிட்டதாய் அவன் அறிகிறான். ஒன்றும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டுச் செல்கிறான். பேருந்தில் ஏறி அமர்ந்ததும் மல்லி சுவர்னாவைப் பற்றி விசாரிக்கிறாள். முருகன் அவள் செளக்கியமாய் இருப்பதாய் பொய் சொல்கிறான். மல்லி ஜன்னலின் வழியே காற்றைக் கையில் பிடிக்க முயல்வதுடன் படம் முடிகிறது!!

நல்ல கதை தான் ஹீரோக்களும் பேட்டி கொடுத்து விட்டு, மாஸ் என்றும், சினிமா ஒரு வியாபாரம் என்றும் தப்பித்துக் கொண்டு கண்ட கன்றாவிகளில் நடிக்கிறார்களே, அவர்கள் பார்க்க வேண்டும் இந்தப் படத்தை. இத்தனை எளிமையான, ஆத்மார்த்தமான கதையை உருவாக்கிய கமலை பாராட்டியே ஆக வேண்டும்.

இஸ்திரி போட்டுக் கொடுத்து மூன்று குழந்தைகளுடன் சேரியில் வாழும் ஒரு சாதாரண கதாப்பாத்திரத்தில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாய் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராய் திகழும் மம்மூட்டி நடிக்கிறார். ஒரு அழுக்கு பிச்சைக்காரியாய் பத்மப்ரியா நடிக்கிறார். நம் ஊரில் ஒரு அருமையான நடிகரை சூப்பர் ஸ்டார் ஆக்கி விட்டு சந்திரமுகியும், சிவாஜியும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதில் குசேலன் படத்தில் கடைசி அரை மணி நேரம் ரஜினி என்ன ஒரு அற்புதமான நடிப்பு என்று சிலாகித்துக் கொள்கிறோம். பூஜாவை பிச்சைக்காரியாய் பால வாழ வைத்திருக்கிறார் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். மலையாள சினிமாவில் அவர்கள் இதையெல்லாம் போகிற போக்கில் செய்கிறார்கள் என்று எனக்குப் படுகிறது.

படத்தில் ஒரு காட்சியில் முருகனின் மகன் பள்ளியில் ஒரு பையனை அடித்து விடுகிறான். வாத்தியாரின் புகாரைக் கேட்ட முருகன் ஏன் அடித்தாய் என்று பையனை கேட்கிறான். அவன் ரஜினியை திட்டிட்டான்பா என்கிறான் ஆவேசமாய். இதைக் கேட்ட முருகன் வாத்தியாரிடம், ஐய்யோ, ரஜினியை எப்படிங்க திட்டலாம், அவர் எங்களுக்கு சாமி மாதிரி, அதான் என் மகன் அடிச்சுருக்கான் என்று சொல்கிறான். தமிழ்நாட்டில் சினிமா என்பது ஒரு கலாச்சாரம் என்று இயக்குநர் நன்றாய் நக்கலடித்திருக்கிறார்.

படத்தில் சின்ன சின்ன விஷயங்கள் அழகாய் இருந்தன. அப்பா, அப்பா என்றூ சதா அழைக்கும் மல்லிக்கு ஏன் கண்ணு என்று வினவும் முருகனின் பாங்கு, நட்சத்திரம் இருக்கா? என்னை பாக்குதா? என்று ஒரு குழந்தைக்குரிய குறுகுறுப்பு, யார் என்ன கொடுத்தாலும், கூப்பிடாலும், "அப்பா" என்று ஒரு முறை அனுமதி கேட்கும் விதம், சந்திரமுகி படத்திற்குச் சென்று பார்க்க முடியாமல் ரஜினி வேஷ்டியா பேண்டா? ஜோதிகா சேலையா? அழகா இருக்காங்களா என்ற எல்லா அசட்டுக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் முருகனின் வேடத்தில் ஒரு பாசமுள்ள தந்தையை மம்மூட்டி நம் கண் முன் நிறுத்துகிறார். ஆனால் கண் தெரியாத பெண் என்பதற்காக அவள் எதை தொட்டாலும் புன்னகை புரிந்து கொண்டே இருப்பது உறுத்துகிறது.

பத்மப்ரியாவுக்கு சுட்டித் தனமான பிச்சைக்காரி வேடம். பொருத்தமாய் இருக்கிறார். அடிக்கடி குறும்பாய் சிரிக்கிறார். முருகனை அண்ணா என்று அழைக்கிறார். அவர் கூப்பிட்டதும் வெட்கப்பட்டுக் கொண்டே அவருடன் செல்கிறார். அந்த வெட்கத்திற்கும், அண்ணா என்று அழைத்ததற்கும் சம்மந்தம்மில்லை. அது தான் புரியவில்லை. இருந்தாலும் முருகனின் மேல் பூங்கொடி ஒருதலை காதல் கொள்கிறாள் போன்ற அசட்டுத்தனம் இல்லாதது ஆறுதல்.

சுவர்னாவாய் வரும் மீனா அதிக மிகையில்லாமல் சொன்னதை ஒழுங்காய் செய்திருக்கிறார். நோய்வாய்பட்ட தெளிவில்லாத முகம் சரியாய் இருந்தது. மேக்கப்பா அல்லது இயற்கை அழகா? அவருக்கு என்ன வியாதி என்று சொல்லாமல் விட்டது நன்றாகவே இருந்தது. அவர் கேட்கும் லதா மங்கேஷ்கரின் பாடல்கள் அருமையாய் இருந்தது.

படத்தில் இசையும் ஒளிப்பதிவும் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த மாதிரி படங்களுக்கு அவைகளின் இருப்பு தெரியவேண்டியதில்லை. அப்படியென்றால் சரியாய் தான் இருக்கிறது.


இந்தப் படம் 2006ம் ஆண்டின் சிறந்த குடும்பப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறது. மம்மூட்டி, பத்மப்ரியாவுக்கு இதற்காக 2007ம் ஆண்டு ஃப்லிம் ஃபேர் அவார்டும் கிடைத்தது.


ஒரு நிறைவான படம்!



இனிமே நான் ரஜினி கட்சி இல்லை. ப்ரூஸ்லீ கட்சி என்று புரியாத ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் என் அண்ணன். நான் ஆடிப்போய்விட்டேன். இத்தனைக்கும் அவர் வீட்டில் போன வருடத்து பைண்டிங் பண்ணிய புத்தகத்தின் ஒரு பக்க அட்டையின் நடுவில் நீளச் சதுரமாய் வெட்டித் துளை போட்டு, அதில் பல விதமான ரஜினி படங்களின் ஃப்லிம்களைச் சொருகி வெயில் விழும் இடத்தில் ஒரு கண்ணாடியை வைத்து (கண்ணாடிய வெயில்ல காட்டினா அதோட பாதரசம் போயிடும் ஏன்டா இப்படி பண்றீங்க...அம்மாவை பொருட்படுத்தாது)அந்த ஃப்லிம் அட்டையை கண்ணாடி முன்பு காட்டி அதற்கு முன் ஒரு 15 பைசா லென்ஸை வைத்தால் எதிரில் இருக்கும் சுவரில் மங்கலாய் ஜெகஜ்ஜோதியாய் ரஜினி தெரிவார். இனிமேல் அந்த படங்களை எல்லாம் ஓட்ட முடியாதா? அவர் வீட்டில் இருக்கும் மூன்று முகம் வசனத்தை டேப்பில் போட்டுக் கேட்க முடியாதா? ரஜினி படம் போட்ட பலவித பொங்கல் வாழ்த்துக்கள் என்ன ஆகும்? ரஜினி போடுவது போலவே அதே டிசைனில் சட்டை போடுவாரே..இனிமேல் அவ்வளவு தானா? இவருக்கு அப்புறம் அந்த சொத்தெல்லாம் எனக்குத் தான் என்று நினைத்தேனே இப்படி அதில் மண்ணள்ளி போட்டு விட்டாரே என்று ஒரே கவலை எனக்கு. இனிமேல் நீயும் உன் தம்பியும் ரஜினி கட்சி இல்லை;ப்ரூஸ்லீ கட்சி தான்! என்ன? என்றார் என்னை பார்த்து. ப்ரூஸ்லீன்னா யாருண்ணே என்றேன். அப்போது அவர் பீரோவின் மேல் ஒட்டியிருந்த ஒரு படத்தை காட்டினார். அதில் ஒருவர் தன் காலைத் தூக்கி நெஞ்சு பூரா முடி உள்ள ஒருவரின் கழுத்தை நோக்கி நீட்டியிருந்தார். அவர் கண்ணில் ஒரு குரூரம். அப்படித் தான் ப்ரூஸ்லீ எனக்கு அறிமுகமானார்.

அப்போது என் அண்ணன் வீட்டில் தான் டீவியும், டெக்கும் இருந்தது. (படம் பார்க்கும் போது அடிக்கடி கோடு வரும், ஹெட்டைத் திறந்து க்ளீன் செய்து செய்து பார்க்க வேண்டும்) மேலுள்ள சம்பவத்திற்குப் பிறகு அவர் பார்த்ததெல்லாம் ப்ரூஸ்லீ படங்கள் தான். ப்ரூஸ்லீ ஒரு கருப்பண்ணசாமி போல் என் அண்ணனுக்குள் வந்து சாமியாடினார். கராத்தே க்ளாஸில் சேர்ந்தார். அந்த கருப்பண்ணசாமியை கொஞ்சம் கொஞ்சமாய் எனக்கும் என் தம்பிக்கும் ஏற்றி விட்டார். ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன் நான் முதலில் பார்த்த ப்ரூஸ்லி படம். அவருடைய ஒவ்வொரு மிரட்டல் அடியில் ரஜினி கொஞ்சம் தள்ளித் தான் போய் விட்டார். அதன் பிறகு நானும் என் தம்பியும் போடும் டிஷ்யும் டிஷ்யும் சண்டைகள் மறைந்து ஊஊஊஊஊஊஊ....ஈஈஈஈஈஈஈ என்று ஊளைச் சத்தம் சேர்ந்தது. அம்மா என் அண்ணனைத் திட்டினாள்.



ப்ரூஸ்லி 1940ம் ஆண்டில் சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார். இருந்தும் அவரின் தந்தையார் சைனீஸ் ஒபேராவில் ஒரு பாடகராய் இருந்தார். அவர் அப்போது ஹாங்காங்கில் சுற்றுப் பயணம் கொண்டதால், அவருடைய வளர்ப்பு அங்கு தொடங்கியது. ப்ரூஸ்லீ ஐந்து வயதிலிருந்தே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தன்னுடைய 13 வது வயதில் முறையாய் தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். அவருடைய கோபமும், வேகமும் பல வித தெருச் சண்டைகளுக்கு காரணமாய் அமைந்தன. இதனால் பயந்த அவர் பெற்றோர் அவருடைய 18 வயதில் அமேரிக்காவில் வாழும் உறவினரின் உணவு விடுதியில் வேலைக்காக அவரை அனுப்பி வைத்தனர். ப்ரூஸ்லீ சியாடிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம் படித்தார். அதே பல்கலைக்கழகத்தில் லின்டாவைச் சந்தித்து காதலித்து மணந்தார். அப்போதே அவர் தனியாய் ஒரு பள்ளி அமைத்து அங்கிருக்கும் மாணவர்களுக்கு தற்காப்புக் கலைகளின் ஒன்றான குங்ஃபு வை கற்றுத் தர ஆரம்பித்தார். சீனாவில் இவையெல்லாம் சீனாவைச் சேர்ந்தவனுக்குத் தான் கற்றுக் கொடுப்பார்கள். ஆனால் ப்ரூஸ்லீ எந்த வித பாரபட்சமும் இல்லாமல் எல்லோருக்கும் சொல்லித் தந்தார். இதனால் அமேரிக்காவில் இருக்கும் பிற தற்காப்புக் கலை நிபுணர்களிடம் ப்ரூஸ்லீ பிரபலமானார். தற்காப்புக் கலைகளுக்கான ஒரு விழாவில் ப்ரூஸ்லி சிறப்பு விருந்தினராய் கலந்து கொண்ட இடத்தில் ஹாலிவுட்டின் ஹேர்ஸ்டைலிஸ்ட் ஜேயின் தொடர்பு கிடைத்தது. அவர் ப்ரூஸ்லீயை ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக சிபாரிசு செய்தார். தி க்ரீன் கார்னெட் என்ற அந்த ஷோவில் ஸ்கிரீன் டெஸ்டில் ப்ரூஸ்லீ தேர்வாகி அந்தத் தொடரில் நடிக்க ஆரம்பித்தார்.

சில பல காரணங்களால் அந்த நிகழ்ச்சி பாதியிலேயே நின்று விட்டது. இதனிடையில் ப்ரூஸ்லீ தன்னுடைய அனுபவத்தைக் கொண்டும், இடைவிடாத பயிற்ச்சியினாலும் பல வித உக்திகளை புகுத்தி ஜீட் குன் டோ என்ற ஒரு புது விதமான யுக்தியை உண்டாக்கினார். அவருக்கு ஹாலிவுட் படங்களில் அவ்வப்போது சிறு சிறு வேடங்களே கிடைத்தன.

அவருடயை நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி தன்னுடைய திறமையை நிரூபிக்கும் விதமாக ஒரு படத்தை எடுத்து வர அவர் ஹாங்காங் சென்றார். அங்கே ப்ரூஸ்லியின் திறமையை பார்த்து வியந்த தயாரிப்பாளர் ஒருவர், அவரை கதாநாயகனாக்கி "பிக் பாஸ்" படத்தை எடுத்தார். மிகச் சிறிய பொருட் செலவில் தாய்லாந்தில் ஒரு கிராமத்தில் அதன் படப்பிடிப்பு நடந்தது. அந்தப் படம் வெளி வந்து அது வரை ஓடிய அனைத்து சீன படங்களின் வசூலையும் முறியடித்தது. ஒரே நாளில் ப்ரூஸ்லீ நட்சத்திர அந்தஸ்தை எய்தினார். அதன் பிறகு வந்த ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி, ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன் ப்ரூஸ்லீயை வெற்றியை பறை சாற்றின. அதன் சத்தம் ஹாலிவுட்டின் காதிலும் லேசாய் விழுந்ததில், ப்ரூஸ்லீயை வைத்து என்டர் தி ட்ராகன் என்ற படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படம் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷனில் இரவு பகலாய் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது ப்ரூஸ்லீயின் உடல்நிலை மோசமானது. ஜூலை 20, 1973ம் நாள் தலை வலிக்காக ஒரு மாத்திரை போட்டுக் கொண்டு தூங்கச் சென்றவர், மாத்திரையினால் மூளையில் ஏற்பட்ட அலர்ஜியின் காரணமாக செரிப்ரல் எடீமா உண்டாகி இறந்து போனார். நேதாஜியின் இருப்பைப் பற்றியும், இறப்பைப் பற்றியும் இன்றும் உலவும் வதந்திகளைப் போல் இவருடைய மரணமும் பல விதமான வதந்தைகளைக் கொண்டது. ப்ரூஸ்லியின் மரணத்திற்குப் பிறகு வெளி வந்த என்டர் தி ட்ராகன் ஹாலிவுட்டிலும் பெரும் வெற்றி பெற்றது.

ப்ரூஸ்லியைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்:

ப்ரூஸ்லீயின் உயரம் 5.7, ஆனால் அவர் இறந்த போது அவரின் எடை 58 கிலோ தான்.

ஒரு பயிற்சியின் போது அவருடைய முதுகுத் தண்டில் பயங்கரமான அடி விழுந்தது. இனிமேல் அவர் எழுந்து நடக்க முடியாது என்றும் தற்காப்புக் கலைப் பயிற்சிகளை செய்ய முடியாது என்றும் டாக்டர்கள் சொல்லியும் அதை ஒரு துளி கூட நம்பாமல் தன் சுய முயற்சியாலும், பயிற்சியாலும் மீண்டு வந்து காட்டினார்.

ப்ரூஸ்லீயின் வீட்டில் இருந்த நூலகத்தில் அனைத்து வகையான தற்காப்புக் கலைகளைப் பற்றியும், தத்துவங்களைப் பற்றியும் கிட்டத்தட்ட 2,500 புத்தகங்களை வைத்திருந்தார்.

ப்ரூஸ்லீ ஒற்றைக் கையில் இரண்டே விரல்களை (கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் உபயோகித்து) வைத்து தண்டால் எடுப்பார்.

ப்ரூஸ்லீ அவரின் வேகத்தை மற்றவருக்கு செய்து காட்ட சில யுக்திகளை கையாண்டார். அவரால் எதிராளியின் கையில் இருந்த நாணயத்தை அவர் கையை மூடுவதற்குள் எடுத்து விட முடியும்.

ப்ரூஸ்லீ ஒரு இன்ச் தூரத்தில் இருந்து குத்தும் ஒரு குத்து கூட எதிராளியை நிலை குழையச் செய்யும். (படம் பார்க்க) இத்தனை குறைந்த தூரத்தில் அத்தனை வேகம் ஒரு துப்பாக்கியிலிருந்து புறப்படும் ஒரு குண்டுக்குத் தான் இருக்க முடியும்.

ப்ரூஸ்லீயின் வேகத்தை காமெராவின் 24 ஃப்ரேம்களில் அடக்க முடியாமல் 32 ஃப்ரேம்களைக் கொண்டு படம் பிடித்தனர்.

ப்ரூஸ்லீயின் பிரபலமான தத்துவம்.

Be formless... shapeless, like water. If you put water into a cup, it becomes the cup. You put water into a bottle; it becomes the bottle. You put it into a teapot; it becomes the teapot. Water can flow, or it can crash. Be water, my friend...


ப்ரூஸ்லீ இறந்து இத்தனை ஆண்டுகள் கழிந்தும், உலகின் எந்த மூலையில் இருக்கும் குழந்தைக்கும் அதனுடைய பத்து வயதிற்குள் அவரின் அறிமுகம் எப்படியோ கிடைத்து விடும் என்று தோன்றுகிறது. அந்த வயதில் அவர் ஏற்படுத்தும் தாக்கம் வாழ்க்கை முழுவது தங்கி விடுகிறது. பிறவிக் கலைஞர்களுக்கு நீண்ட ஆயுள் தேவையில்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் ஒரு புயலென வந்து இந்த உலகுக்குத் தம் பங்கைச் செலுத்தி விட்டு சென்று விடுகிறார்கள். இன்னும் சில காலம் அவர்கள் வாழ்ந்திருக்கலாமே என்று நம்மை ஏங்க விட்டுச் சென்று விடுகிறார்கள். சார்லி சாப்ளீன் 88 ஆண்டுகள் வரை உயிர் வாழாமல், இளம் வயதில் இறந்திருந்தால் அவருடைய பேரும் புகழும் குறைந்திருக்குமா என்ன?

தலைப்பே சொல்லிவிட்டது.

சாலைக் குறிகளைப் பற்றி 10 கேள்விகள். கண்டிப்பாய் 10 கேள்விக்கும் சரியான விடை கொடுக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால், அடுத்த பரிட்சை, சாலை விதிகளைப் பற்றியது. 35 மைல் வேகத்தில் செல்லும் வண்டியை ப்ரேக் பிடித்தால் எத்தனை அடிகள் தள்ளி நிற்கும்? விர்ஜினியாவில் காரோட்டும் போது அனுமதிக்கப்பட்ட மதுவின் அளவு என்ன? இப்படியாக ஒரு 26 கேள்விகள். இதில் 80 சதவிகிதம் தேர்ச்சி பெற வேண்டும். பள்ளியில் படிக்கும் போது ஆங்கிலத்தில் வொர்க் புக் என்று ஒன்று கொடுப்பார்களே, அதைப் போல் ஒன்று கொடுத்து படிச்சு பாஸ் பண்ணிட்டு வா, அப்புறம் ட்ரைவிங் கத்துத் தர்றேன் என்று அனுப்பி விட்டார்கள். நானும் இதெல்லாம் சப்பை மேட்டர் என்று நினைத்து, அந்த புக்கை அப்படியே சில முறை புரட்டி விட்டு, இணையத்தில் உள்ள மாதிரி தேர்வில் ஒவ்வொரு முறையும் அநாயசமாய் நூற்றுக்கு நூறு வாங்கி அதே கெத்துடன் போன வாரம் தேர்வெழுதி, அநியாயமாய் ஃபெயில் ஆனேன்!

விடுங்க சகா, இதெல்லாம் இங்கே சகஜம்...அப்படியே தட்டி விட்டுட்டு போயிட்டே இருக்கணும் என்று இங்கு அனுபவம் உள்ளவர்கள் அறிவுரை கூறினார்கள். நான் சென்னையிலிருந்து வரும்போது காருக்கான லைசன்சை எடுத்துக் கொண்டு தான் வந்தேன். எல்.எல்.ஆர். எடுக்க இப்படித் தான் ஒரு தேர்வு எழுத வேண்டியிருந்தது. நானும் தலையில் எண்ணையெல்லாம் தடவி உச்சி எடுத்து நெத்தியில் விபூதி குங்குமம் எல்லாம் இட்டுக் கொண்டு தேர்வெழுத போய் சேர்ந்தேன். என்னை ஒரு கணினிக்கு முன்னால் உட்கார வைத்தார்கள். திக் திக் என்றது. 10 பேருக்கு பதில் சொல்லிக் கொண்டே ஒருவர் கணினியில் என்னவோ செய்து எல்லா கேள்விகளையும் கொண்டு வந்தார். நான் முதல் கேள்வி படித்து நான்கில் எது விடை என்று தேடிக் கொண்டிருந்த போது வேறு பத்து பேருக்கு பதில் சொல்லிக் கொண்டே அவர் எல்லா கேள்விகளுக்கும் பதில் தட்டிக் கொண்டே போனார். 5 நிமிடத்தில் கணினி பச்சைக் கலரில் நான் தேர்வில் வெற்றி பெற்றதாக முட்டாள்தனமாய் என்னை வாழ்த்தியது. அந்த பத்து பேருடன் நானும் சேர்ந்து கொண்டு, சார் நான்ல எழுதனும், நீங்க என்று இழுத்தேன். நீங்க எழுதுவீங்க, அப்புறம் ஃபெயில் ஆவீங்க, அப்புறம் மறுபடியும் வரணும்? எதுக்கு சார்? டைம் வேஸ்ட் தானே என்றார். நீங்களே சொல்லுங்கள்? நம் இந்தியர்களைப் போல் அமேரிக்கர்கள் எப்போது நேரத்தின் மதிப்பை உணரப் போகிறார்கள்? ஹைய்யோ ஹைய்யோ!!

அலுவலகத்தில் இருக்கும் ஒரு புண்ணியவான் மூலம் நூலகம் ஒன்றில் சேர்ந்து விட்டேன். ஒரு ஐடி கார்டையும், அட்ரஸ் ப்ரூஃபையும் கொடுத்தால் அந்த அழகான பெண் சிரித்துக் கொண்டே பைசா செலவில்லாமல் யாரையும் மெம்பர் ஆக்கி விடுகிறார். சொன்னால் நம்ப மாட்டீர்கள். ரயில்வே ஸ்டேஷனில் எடை பார்க்கும் போது வரும் அட்டையை போல் (பார் கோட் இருக்கிறது) அது இருக்கிறது. அந்த அட்டை ஒன்றுக்கு புத்தகமோ, ஒலி புத்தகமோ, பத்திரிக்கையோ, சீடீயோ, டீவிடீயோ இப்படியாக ஐம்பது எண்ணிக்கைகளை அள்ளிக் கொள்ளலாம். புத்தகங்களை நான்கு வாரங்கள் வரையும், டீவிடீக்களை இரண்டு வாரங்கள் வரையும் வைத்துக் கொள்ளலாம். அதோடு, நூலகத்தில் இணைய வசதி இலவசம். கணினி வகுப்புகள் இலவசமாய் நடக்கின்றன. நான் சேர்ந்த நூலகத்திற்கு கிட்டத்தட்ட பத்து கிளைகள் இருக்கின்றன. ஒரு கிளையின் புத்தகத்தை இன்னொரு கிளையிலும் திருப்பிக் கொடுக்கலாம். ரொம்ப அசதியாய் இருந்தால் மொபைல் புத்தக வாகனமும் இருக்கிறது. வாரத்திற்கு ஒரு முறை அது குறிப்பிட்ட இடங்கள் வந்து போகும். நூலகம் சென்று திருப்பிக் கொடுக்க அலுப்பாய் இருந்தால், அதில் திருப்பிக் கொடுத்து விடலாம். இதையெல்லாம் தவிர்த்து இணையத்திலும் நீங்கள் திருப்பிக் கொடுக்கும் தேதியை நீட்டிக் கொள்ளலாம். நீங்கள் தேடும் புத்தகம் அந்த நூலகத்தில் இல்லாமல் வேறு கிளையில் இருந்தால் அதை நீங்கள் விண்ணப்பித்து தருவித்துக் கொள்ளலாம். சரி, நீங்கள் சொல்லும் புத்தகம் எந்தக் கிளையிலும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள், அதை புதிதாய் வாங்கி உங்களுக்குத் தருகிறார்கள். எத்தனை வசதி பாருங்கள்! படிப்பவர்களை கொண்டாடுகிறார்கள்.

ஒரு சின்ன உதவி, தமிழில் இத்தனை நாட்களாய் படித்து வந்ததால் (அதுவும் கொஞ்சம் தான்!) ஆங்கிலத்தில் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. தமிழில் நம்ம வாத்தியார் கையை பிடித்து நடப்பது போல் ஆங்கிலத்தில் விறு விறு வென்று போகும் வாத்தியார்களின் பெயர்கள் வேண்டும். ஆங்கிலத்தில் எனக்கு பிடித்தது என்று சொல்வதை விட எனக்கு புரிந்தது ஆர்.கே. நாராயணன், ரஸ்கின் பாண்ட், சேதன் பகத். எல்லாம் நம்ம ஊர் எழுத்தாளர்கள் தான். சிட்னி ஷெல்டனின் ஒரு நாவல் படித்திருக்கிறேன். எளிதாய் விறு விறுவென்று இருந்தாலும் எனக்கு அவ்வளவாய் ஈர்க்கவில்லை. நிறைய சிறுகதைகள் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆங்கில கவிதைகளும் படிக்க வேண்டும். ஆனால் அது எந்த அளவுக்குப் புரியும் என்று தெரியவில்லை...கொஞ்சம் கோடு போட்டீர்கள் என்றால் நான் ரோடு போட முயற்சிக்கிறேன்.

உரைநடை சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப் பட்டது.

உச்சி பொழுது. சென்னையின் மார்கழி வெயில் உக்கிரம். தம்பி என்ற ஒரு குரல் கேட்டுத் திரும்பினேன். ஒரு கான் க்ரீட் தடுப்பு நிழலில் ஒன்றிக் கொண்டிருந்த அந்தப் பெரியவர் நான் வண்டி எடுப்பதை கவனித்து என்னை விளித்தார். ஊன்றுகோலின் வசதியுடன் மெல்ல நடந்து என்னருகில் வந்தார். தொண்டுக் கிழம். நெற்றி நிறைய பட்டை. அரதப் பழசான வேட்டி சட்டை. இத்தனை வயது வரை வாழக் கூடாதென்று முடிவு செய்து கொண்டேன்.

மெயின் ரஸ்தாவுக்குப் போகனும் தம்பி!

"இதோ தெரியுதே" என்று கூப்பிடு தூரத்தில் இருந்த ரஸ்தாவைக் கையைக் காட்டினேன்.

"அந்த ரஸ்தாவுல இருக்குற ஆஸ்பத்திரிக்குப் போகனும்!" என்றார் மெல்ல.

இத்தனை தள்ளாட்டத்துடன் இருப்பவரை எப்படி பைக்கில் கூட்டி செல்வது என்று எனக்கு கொஞ்சம் தயக்கம். இருந்தாலும் பாவமாய் இருந்தது. சரி வண்டியில உக்காந்துருவீங்களா? என்று கேட்டு முடிப்பதற்குள் தட்டுத் தடுமாறி ஏறி அமர்ந்து கொண்டார். நல்லா கெட்டியா புடிச்சுக்கோங்கோ என்று மெல்ல வண்டியை நகர்த்தினேன். "நீங்க போங்கோ, ஆஸ்பத்திரிக்கு நேக்கு வழி தெரியும், நான் சொல்றேன். அந்தத் தாமரை குளத்துக்கு ஒட்டினாப்பல இருக்குற சந்துல இருக்கு. ஆமா...நான் சொல்றேன். வயசாயிடுத்து, நடக்க முடியலை...முட்டி தேஞ்சு வலிக்கிறது. நீங்க நன்னா இருக்கணும். எனக்காக இத்தனை சிரமம் எடுத்துக்குறேள். இந்தக் காலத்துல யாரு இப்படி உபகாரம் பண்றா? வெயில் என்னமா மண்டையை பிளக்கிறது? மரமும் மனுஷாளும் குறைஞ்சுண்டே வர்றா, எப்படி மழை வரும், எப்படி லோகம் செழிக்கும்? இதோ நீங்க இருக்கேள், எப்படி உபகாரம் பண்றேள், இப்படி எல்லாருமா பண்றா...வயசாயிட்டா எல்லாத்துக்கும் ஒரு கேலிப் பொருள் மாதிரி ஆயிட்றோம். உடம்பு பாடாய் படுத்துறது. பகவான் கண்ணைத் தெறக்க மாட்றான். அவன் என்ன செய்வான், லோகத்துல இருக்குற எல்லாருக்காகவும் அவன் கண்ணைத் தொறந்துண்டே இருந்தா, அவன் எப்போ தான் கண்ணை மூடுறது? இந்த லாரிக்காரன் பாருங்கோ, கண்ணுல மண்ணை கொட்டிண்டே போறான். சரியான எமன்...."

எங்கே இவர் புலம்பிக் கொண்டே வழியை மறந்து விடப் போகிறார் என்று தாமரைக் குளத்தை ஆட்டோக்காரர்களிடம் விசாரித்தேன். பேச்சை நிறுத்தி மெல்ல புன்னகைத்து "நான் தான் சொல்றேனே, போங்கோ வந்தா சொல்றேன். நேக்கு தெரியும், தம்பிக்கு நம்பிக்கை இல்லை" என்று அந்த ஆட்டோக்காரர்களிடமும் மன்றாடினார். நான் மெல்ல வண்டியை நகர்த்தியதும், மறுபடியும் ஆரம்பித்து விட்டார்.

"நேக்கு 89 வயசாறது. ஒரே இருமல், சளி!! மூச்சை முட்றது. சின்ன வயசுல நான் அப்படி இருப்பேன். என் ஆம்படையா என்னை முழுங்குற மாதிரி பாப்பா...அது அந்தக் காலம். இப்போ அவ ஆஞ்சு ஓஞ்சு போயிட்டா. அவளுக்கும் ஒரு 80 வயசு இருக்கும். நீங்க யார் பெத்த புள்ளையோ, உங்களை நன்னா வளத்துருக்கா, எல்லா செல்வங்களோட நீங்க நீடூழி வாழனும்!" என்றவுடன் மறுபடியும் அந்த எண்ணம் தோன்றியது. இந்த வயது வரை சத்தியமாய் வாழக் கூடாது! ஒரு வழியாய் ஆஸ்பத்திரியில் இறங்கினோம். "சத்த இருங்கோ, நான் டாக்டரை பார்த்துட்டு வந்துடறேன்" என்று ஆட்டோக்காரரை அமர்த்தி விட்டு செல்வதைப் போல் சொல்லி விட்டு அவர் மெல்ல நடந்தார். கால்கள் தளர்ந்து, உடலை வருத்தி அவர் இறைந்து இறைந்து செல்வதை காணப் பொறுக்கவில்லை. "நீங்க உக்காருங்க, நான் விசாரிக்கிறேன்" என்று அவரை உட்கார்த்தி விட்டு அங்கு இருந்த ஒருவரிடம் விசாரித்தேன். "பதினோரு மணி வரை தான் சார் பாப்பாங்க, இனிமே நாளைக்கு தான்" என்றார். அவருக்கு இறைத்துக் கொண்டிருந்தது. மூச்சு முட்டியது. என்னிடம் சொன்னதையே அவரிடம் சென்று சத்தமாய் இறைந்து சொன்னார். "சார், கொஞ்சம் மருந்தாவது கொடுங்க..டானிக் எதாவது.." என்றேன். "சீக்கிரம் வர்றதுக்கென்ன?" என்று அவரிடம் எரிந்து விழுந்தார். சில மாத்திரைகளையும், ஒரு சிரப்பையும் என்னிடம் கொடுத்தார். "வாங்க" என்று அவரை மெல்ல எழுப்பினேன். அப்போதும் ஏதோ பேசி கொண்டே இருந்தார்.

மிகுந்த சிரமப்பட்டு, "தம்பி என்னை வீட்ல விட்டுடுங்கோ" என்றார். உங்க வீடு எங்கே என்றேன். "இதோ இந்தத் தாமரை குளத்துக்கு அந்தப் பக்கம்" என்றார் இறைந்து கொண்டே! எனக்கு புரியவில்லை. வீடும் இங்கே, ஆஸ்பத்திரியும் இங்கே..இவர் எப்படி அங்கு வந்தார்? அத்தனை தூரத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்? அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சில பயல்களின் உதவியுடன் அவரை மெல்ல வண்டியில் ஏற்றினேன். "தாத்தா நல்லா சாரை புடிச்சுக்குங்க" என்றான் ஒருவன். இருமி கொண்டே புன்னகை செய்தார். "ஆமா, வீடு இங்கே தான் இருக்குன்னா, அவ்வளவு தூரத்துல என்ன பண்ணிட்டு இருந்தீங்கன்னு" கேட்டேன். என் கேள்வியை சிறிதும் சட்டை செய்யாமல், "ஆ! இங்கே தான், நான் தான் சொன்னேனே, தாமரை குளம் பக்கத்துல...இந்த சந்து தான்.. ஏழாம் நம்பர் சந்து...திரும்புங்க" என்றார்! அந்த குண்டும் குழியுமான சாலையின் நடுவில் இருந்தது அவர் வீடு. ஒரு துருப் பிடித்த பழைய கேட்டை அவர் திறப்பதற்கும், அந்த வீட்டின் கதவு திறப்பதற்கும் சரியாய் இருந்தது. உள்ளிருந்து ஒரு வயதான மாமி எட்டி பார்த்தார். நான் ஒரு எட்டு வைத்து அவரிடம் பேச முயல்வதற்குள் அவர் அந்த இரும்பு கேட்டை வேகமாய் சாத்திக் கொண்டார். " தாத்தா, அந்த மருந்து மத்தியானம் சாப்டுட்டு" என்பதற்குள் தலையை ஆட்டிக் கொண்டே ஒரு வித பதட்டத்துடன் உள்ளே சென்றார். நான் மாமியை பார்த்து, "மாமி அந்த மருந்து எப்போ சாப்பிடனும்னா" என்று சொல்வதற்குள் அவர் ஆட்டிய தலையை நிறுத்தாமல் உள்ளே சென்று கதவை தாளிட்டுக் கொண்டார்.

யூ ட்யுபினால் டீவி இல்லாத குறையே தெரிவதில்லை. முதல் நாள் ஒளிபரப்பான நிகழ்ச்சி அடுத்த நாள் சின்ன சின்ன வீடியோவாக எண் பிரித்து போட்டு விடுகிறார்கள். யார், எப்படி இத்தனை பொறுப்புடன் செயல்படுகிறார்கள் என்று ஆச்சர்யமாகவே இருக்கிறது. இதனால் அவர்களுக்கு என்ன லாபம்? புரியவில்லை. நேற்று விஜய் டீவி அவார்ட்ஸ் பார்த்தேன். பாலிவுட்டில் நடக்கும் ஃப்லிம் ஃபேர் அவார்ட் ரேஞ்ச்சுக்கு நடத்துகிறார்கள். அதுவும் கோபி ஒவ்வொரு நாமினியையும் சொல்லும்போது எல்.ஈ.டி ஸ்கிரீனில் அவர்களின் முகம் பளிச்சிடுவது கூடுதல் பளிச்சு! வழக்கமாய் நிகழ்ச்சியை வழங்கும் யூ கி சேதுவை விட்டு விட்டு, நீயா நானா கோபியை அழைத்திருந்தார்கள். சில இடங்களில் நீயா நானா சாயல். இந்த மாதிரி நிகழ்ச்சியை நடத்த நிறைய டைமிங் வேண்டும். ஷாருக்கான் இதில் உண்மையில் கிங் கான் தான். ஒரு சூப்பர் ஸ்டார் இப்படி ஒரு நிகழ்ச்சியை மற்றவர்களை விட சுவாரஸ்யமாய் நடத்துவது பெரிய விஷயம் தான். தமிழ் நாட்டில் இப்படி எல்லாம் நடக்குமா? ரஜினியோ விஜய்யோ இந்த நிகழ்ச்சியை நடத்தினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கவே பயங்கரமாய் இருக்கிறது. அதிலும் நிகழ்ச்சி முழுதும் விஜய்யின் முகத்தில் ஒரு சின்ன புன்னகையை கூட நான் பார்க்கவில்லை. ஏதோ ஒரு உலகத் திரைப்பட விழாவில் மிக மெல்ல நகரும் ஒரு அற்புதமான ஈரானிய திரைப்படத்தை வலுக்கட்டாயமாக அவரை உட்கார்த்தி பார்க்க வைப்பதைப்போல் இருந்தார். கமலஹாசனுக்கு இவர் விருது கொடுக்கிறார். கமலும் அவர் உளறுவதை தேமே என்று பார்த்துக் கொண்டு நிற்கிறார். இதில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடிக்கும், நான் கூட விஜய்யை என் கம்பெனிக்கு நடித்துக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறேன் என்று கமல் காமடி வேறு செய்கிறார். விஜய் அப்படியா, எனக்குத் தெரியாதே, அது எப்போது என்பது போல் ஒரு பார்வை பார்த்தார். என்ன தான் மேடை நாகரீகம் என்றாலும் ரொம்ப அ நாகரீகமாய் இருந்தது போல் தோன்றியது. அதிலும் கமலுக்கு ஏகப்பட்ட அவார்ட்கள். சிவகுமார் சொல்வது போல் கமலை எல்லாம் இந்த ஆட்டையில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அப்படியே சேர்த்துக் கொண்டாலும் அவர் மற்றவர்களுக்கு அவார்ட் கொடுப்பதோடு நின்று விட வேண்டும். மனொரமாவிடம் மைக் கொடுக்காதீர்கள் என்றால் கேட்கமாட்டேன் என்கிறார்கள். இனிமேல் பார்த்தீபனிடமும் மைக்கைக் கொடுக்கக் கூடாது. மனிதர் வித்தியாசமாய் பேசுகிறேன் என்று கொன்று விடுகிறார். அவர் எல்லோரும் பேசுவது போல் சாதரணமாய் பேசினால் ரொம்ப வித்தியாசமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். அவார்ட் வாங்கிய அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்கள். [திட்றதெல்லாம் திட்டிட்டு...]

புத்தகங்கள் படிப்பது மிகவும் குறைந்து விட்டது. எஸ். ராமகிருஷ்ணன் பட்டியலிட்டுள்ள நூறு கதைகளையாவது தேடிப் படிக்க வேண்டும். முத்துக்கள் பத்து என்று புத்தக சந்தையில் 8 எழுத்தாளர்களின் கதைத் தொகுப்பை வாங்கியிருந்தேன். அதை எலி கடிப்பது போல் ஆங்கொன்றும் இங்கொன்றும் படித்து வருகிறேன். பிச்சமூர்த்தி கதைகள், ராஜம் கிருஷ்ணன் கதைகளைத் தவிற வேறு கதைகள் அதிகம் ஒட்டவில்லை. ரா.கி. ரங்கராஜன் மொழி பெயர்த்த பட்டாம்பூச்சி நாவலை மறுபடியும் வாசிக்கிறேன். ஏதாவது படிக்க வேண்டும் என்று நான் டெல்லியில் இருந்த போது வாங்கியது. அப்போது யாராவது ரா(க்)கி யைப் பற்றி என்னிடம் கேட்டிருந்தால் சில அழகிய பெண்கள் ஆண்களுக்கு செய்யும் துரோகம் என்று சொல்லியிருப்பேன். ஒரு மொழிபெயர்ப்பை படிக்கிறோம் என்ற உணர்வேயில்லை! அத்தனை எளிதாய் லாவகமாய் செய்திருக்கிறார். இவருடைய நாலு மூலையும் நான் மிகவும் ரசித்த புத்தகம். வாத்தியாரின் சில ஈ புக்குகள் இணையத்தில் கிடைத்தன. இங்கே! ஆ படித்தேன். அத்தனை சிலாக்கியமாய் எனக்குத் தோன்றவில்லை. ஒருவேளை தொடராய் வந்த சமயத்தில் படித்திருந்தால் அற்புத அனுபவமாய் இருந்திருக்குமா (ஆ!)? கணையாழியின் கடைசி பக்கங்களை அலுவலகத்தில் ஆல்ட் டாப் முறையில் படிக்கிறேன்! பெங்களூர் தமிழ் சங்கத்தில் நின்று கொண்டே படித்து, அவரின் எழுத்தை ரசித்து சிரித்தது ஞாபகம் வருகிறது. இன்று ஆல்ட் டாபும் போது, கணையாழியின் கடைசிபக்கத்தில், தோராயமாய் ஒரு நடுப் பக்கத்தில், ஒரு சைனீஸ் கவிதையை எப்படி எழுதுவது என்று அவர்கள் சொல்வதாய் இவர் சொல்கிறார். அதாவது,

சாதரணமாக சைனீஸ் கவிதைக்கு நான்கு வரிகள் உண்டு. முதல் வரி கவிதையை தொடங்குகிறது. இரண்டாம் வரி கவிதையை தொடர்கிறது. மூன்றாம் வரி ஒரு புதிய கருத்தை ஆரம்பிக்கிறது. நான்காவது வரி முதல் மூன்று வரிகளையும் சேர்க்கிறது.

சைனீஸ் சாம்பிள்

கியோட்டாவை சேர்ந்த சில்க் வியாபாரிக்கு
இரண்டு பெண்கள்.
மூத்தவளுக்கு இருபது வயது. இளையவள்
பதினெட்டு.
ஒரு படைவீரன் கத்தியால் கொல்கிறான்.
ஆனால் இந்தப் பெண்கள் ஆண்களை தத்தம்
கண்களால் கொல்கிறார்கள்.

வாத்தியார் முயற்சி

மன்னாரு மெதுவாக வந்து சேர்ந்தான்.
மணி பார்த்தான். உட்கார்ந்தான். படுத்துக் கொண்டான்.
சென்னை விட்டு திருச்சி போகும் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தை கடந்து செல்லும்!

அடியேன் முயற்சி

அந்தமான் ஒரு அழகான தீவு.
அங்கு மூசா என்பவன் வாழ்கிறான்.
ஜோலார்பேட்டையில் வசிக்கும் ரசீபு கறாரானவன்.
இந்த இருவருக்கும் எந்த சம்மந்தமுமில்லை!

தொடர் விளையாட்டுக்களில் புத்தக மிமீ ஒன்று தான் எனக்கு பிடித்தது. அது தான் மற்றவருக்கு கொஞ்சமாவது ப்ரயோஜனமாய் இருக்கும். நான் 8 மணிக்கு டெய்லி பல்லு விளக்குவேன் போன்ற சுயதரிசனத்தைக் கொண்டாடும் இந்த மாதிரி தொடர் விளையாட்டுக்களுக்கெல்லாம் நான் அதிகம் போவதில்லை. [கொஞ்சம் அடங்குறியா...] என்னுடைய ஆஸ்தான கமெண்டர் சிவமுருகன் கூட ஏதோ ஒரு விளையாட்டுக்கு என்னை கூப்பிட்டார். ஆளை விடுங்க என்று எஸ்கேப் ஆகிவிட்டேன். இப்போது சுரேஷிடம் வகையாய் மாட்டிக் கொண்டேன். சரி நாளுக்கு 4 வீதம், வாரத்துக்கு 30 பதிவா போட்றோம் [யாருப்பா அது, 4*7=28 தானேன்னு சொல்றது?] இது இப்போ முடியாது என்று அலுத்துக் கொள்வதற்கு! சரி, ஒரு கலாய் கலாய்ச்சிருவோம் என்று முயற்சித்திருக்கிறேன். இனி உங்கள் தலையெழுத்து...எல்லா பழியும், பாவமும், புகழும் சுரேஷ் கண்ணனுக்கே!!

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

நான் என்ன ரஜினிகாந்தா, ரோஜாவா? என் பெயர் காரணம் சுவாரஸ்யமாக இருப்பதற்கு? ஏதோ ஒரு காலத்துல, ஒரு ஊருல ஒரு ராஜாவாம் டைப் கதை கேக்கும்போது பிரதிவிராஜ் என்ற ஒரு ராஜாவைப் பற்றி என் பெற்றோர்களில் ஒருவர் கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது, அவர் ராணி சம்யுக்தாவை காதலித்து குதிரையில் தூக்கிச் சென்றாராம். நம்ம பையனும் இப்படி வீர தீர செயல்களை எல்லாம் செய்யனும்னு நினைச்சு எனக்கு அந்தப் பெயரின் தழுவலான என் பெயரை சத்தியமாய் என் பெற்றோர் வைக்கவில்லை...ஆனால் அந்தப் பெயர் வைத்ததன் காரணமோ என்னமோ, என் வாழ்க்கையில் கிட்டத்தட்ட அதே போலவே நடந்து விட்டது! [என்ன நடந்ததா? அதை இங்கெ சொல்லிட்டா, அப்புறம் என் ஆட்டோ பயாக்ரஃபில என்னத்தை எழுதுறது? சும்மா இருங்கப்பா]...ஏதோ பேரு வச்சதோடு நிக்காம, சோறு வச்சி இந்த அளவுக்கு வளர்த்து விட்டுருக்காங்களே, அதை நெனைச்சி சந்தோஷப்படுவீங்களா...

என் பெயர் பிடிக்குமா என்று கேட்டால், தெரியவில்லை. பெரிதாய் வருத்தம் ஒன்றும் இருந்ததில்லை. பள்ளியில் படிக்கும் காலத்தில் 3 பிரதீப்கள் இருந்தார்கள். [பாலாஜீக்கள் தனி..], அந்த 3 பிரதீப்புகளில் மிக மட்டமாய் படிக்கும் பிரதீப் நான் தான். ஒவ்வொரு பிரதீப்பாய் கூப்பிட்டு மார்க் ஷீட் கொடுக்கும் போது என் மார்க்கைப் பார்க்கும் போது என் பெயரின் மேல் எனக்கு எரிச்சலாய் வரும். பெயருக்கும் மார்க்குக்கும் என்ன சம்மந்தம் என்று தெரியவில்லை...குழந்தைகளுக்கு என் பெயர் அவ்வளவு எளிதில் வராது. பெடீப் என்று சொல்லும். அப்போது கொஞ்சம் எரிச்சல் வரும். மற்றபடி சின்ன வயதில் தமிழ் துணைப்பாடத்தில் [நான்டீடெயிலில்] படித்த மண்ணாங்கட்டியின் கதை ஞாபகம் வருகிறது. பெயரில் என்ன இருக்கிறது?

2) கடைசியா அழுதது எப்போது?

என் மனைவி இங்கே வருவதற்கு முன். என்னமோ தெரியலை, சென்னையில் கலகலவென்று இருந்து விட்டு, இங்கு சீண்டக்கூட ஆளில்லாமல் இருந்தது ஒரு மாதிரியாய் தான் இருந்தது. இருவரும் டைடல் பார்க்கில் ஒரே தளத்தில் வேலை பார்த்ததால், சேர்ந்தே போவது, சேர்ந்தே வருவது என்று இருந்து விட்டோம். திடீரென்று இத்தனை தூரம் பிரிந்தது என்னவோ போல் தான் இருந்தது..வேலையின் பளு காரணமாய் என் மனைவியிடம் சரியாய் கூட பேச முடியாத நிலை. என்னை மிஸ் பண்றியா என்று அவள் கேட்கும்போதெல்லாம், நான் எப்போதும் யாரையும் மிஸ் பண்ணியது கிடையாது, நான் ரொம்ப ப்ராக்டிகல், எனக்கு நானே போதும் என்றெல்லாம் ஓவராய் பீலா விட்டிருக்கிறேன். அது தான் உண்மை. ஆனால், ஒரு நாள் அவளிடம் பேசும்போது, உன் சட்டையை பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் தூங்குகிறேன் என்று அவள் சொன்னவுடன் அலுவலகம் என்று கூட பாராமல் அப்படி அழுதேன். மனைவியிடம் காதலை வெளிப்படுத்தக் கூட நாம் எவ்வளவு தயங்கியிருக்கிறோம் என்று அன்று புரிந்து கொண்டேன்..


3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

பிடிக்காமல்! அந்த ஒன்றை வைத்துக் கொண்டு கல்லூரியில் எல்லா பெண்களின் அசைன்மென்ட் நோட்டின் முகப்பில் அவர்களின் பெயர்களை டிசைன் டிசைனாய் எழுதி எத்தனை பசங்களின் வயித்தெறிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்...பிடிக்காமல் எப்படி?

4) பிடித்த மதிய உணவு?

நான் இங்கு வந்த சமைத்த காலத்தில் தான் உணர்ந்தேன். எந்தக் கேணையன் நாளைக்கு 3 அல்லது 4 தடவை சாப்பிடனும்னு வரையுறுத்தியது? டெய்லி 3 வேளை என்னத்தை தான் சமைக்கிறது? அம்மாக்கள் பாடு எவ்வளவு கஷ்டம் என்று....எனக்கும் சாப்பாட்டுக்கும் உள்ள ஒரே உறவு உயிர் வாழ்தல் தான்...சாப்பிடுவது எனக்கு ஒரு வேலை...அவ்வளவு தான். மற்றபடி இது தான் என்று எதையும் சொல்வதற்கில்லை...

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

கண்டிப்பாக! மறுகேள்வி இல்லாமல்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

கேள்வியே அரைகுறை. மொதல்ல குளிக்க பிடிக்குமான்னு கேக்கணும்! ஐய்யோ, என்னை தப்பா நினைச்சிராதீங்க...மத்தவங்களுக்காகச் சொன்னேன். எனக்கு குளிக்க ரொம்ப புடிக்கும். யாருமே இல்லாத அருவியிலும், அலையே இல்லாத கடலிலும் குளிக்கப் பிடிக்கும். மிகவும் பிடித்தது கிணற்றடியில் இறைத்துக் குளிப்பது, ஷவர் பாத்![இல்லை தெரியாம தான் கேக்குறேன், இதனால யாருக்காவது பைசா ப்ரயோஜனம் இருக்கா?]

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

ஆண்களின் பாடி லேங்க்வேஜ், ட்ரஸிங் சென்ஸ், பெண்களின் ....நூற்றுக்கு தொன்னூறு ஆண்களைப் போல்! இதெல்லாம் நான் சினிமாவில் பெரிய ஸ்டார் ஆனவுடன் குமுதம் பேட்டியிலோ, விகடன் பேட்டியிலோ, வண்ணத்திரை பேட்டியிலோ சொல்லலாம் என்று இருந்தேன். அவசரப்பட்டுட்டீங்க...

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பெற்றோர் தந்த முகம்
முடிந்தவரை நேர்மையாய் இருக்க முயற்சிப்பது
எல்லோரிடமும் சகஜமாய் பழகும் தன்மை
எதிராளியின் பார்வையிலிருந்து நோக்கும் திறன்
நகைச்சுவைத் திறன்
எழுத்து
ஓவியம்
சிந்தனை

சோம்பேறித்தனம்
அசட்டுத்தனம்
மறதி
என் உயரம் [கம்மி என்பதால்]
என் பல்வரிசை [நேர்மையால் இருப்பதால் வரும் பிரச்சனை...இதெல்லாம் எழுத வேண்டியிருக்கிறது! இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன், இல்லையென்றால் நேரில் என்னை பார்த்தால் எங்கே ஈ சொல்லுங்க என்று சொல்லப் போகிறீர்கள்!]

9) உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

அவளுக்கு என் மீது இருக்கும் அளவு கடந்த காதல்
அவளுடைய அறிவு, சாமர்த்தியம், புத்திசாலித்தனம்
வாடிய பயிரைப் பார்க்கும் போதெல்லாம் வாடும் அவளின் இயல்பு

சோம்பேறித்தனம்
அவளுக்கென்று ஒரு நியாயம் [இது ஒரு வேளை எல்லா பெண்களுக்கும் பொருந்துமோ?]

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

இந்தக் கேள்வியும் குழப்புகிறது, யாராவது என் பக்கத்திலா அல்லது நான் யாருடைய பக்கத்திலாவதா?

முதலாவது, ராகினிஸ்ரீ மாதிரி என் பக்கத்தில் (அதாவது அலுவலகத்தில்) ஒரு பொண்ணில்லையே என்று![என்ன மனைவி திட்டுவாங்களா, அட விடுங்க பாஸ் அவங்க எப்பவுமே இப்படித் தானே...]

இரண்டாவது, (தமிழ்) சினிமாவின் பக்கம் நான் இல்லையே என்று!

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

கருப்பு வெள்ளை கோடு போட்ட சட்டையும், க்ரே பேண்டும்.[இதுக்கு அந்தரங்கம் அழுக்கானதுன்னே எழுதியிருக்கலாம்...சுரேஷ் எல்லாம் உங்களை சொல்லனும்!]

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

பராக்கு பார்த்துக் கொண்டு...ஆபிஸில் பாட்டு கேட்டால் திட்ட மாட்டார்கள்? [அப்போ பதிவு போட்டால்?]

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

மயில் கழுத்து கலர்ல மாத்துறீங்களா? இல்லை ராமர் பச்சையில மாத்துங்க! இல்லை தெரியாம தான் கேக்குறேன், என்னை ஏங்க பேனாவா மாத்துறீங்க? என்னை நம்பி ஒருத்தி இருக்காளே, அவளை என்ன அப்போ பென்சிலா மாத்துவீங்களா? என்ன, எந்த வர்ண பென்சிலா? அட போங்கப்பா...

14) பிடித்த மணம்?

அப்பாவின் வாசனை
சந்தனம்
அந்துருண்டை
சாம்பிராணி
+ சுரேஷின் பதில்

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

நான் இந்த மாதிரி தொடர் விளையாட்டுக்களில் யாரையும் இதுவரை குறிப்பிட்டு அழைத்ததில்லை. அதனால் முதல் கேள்வி அவுட்! இரண்டாவது கேள்விக்கு பதில், என்ன எழவைத் தான் எழுதுவது என்று முழி பிதுங்கி நிற்கும் அனைவரும் எழுதலாம். அல்லது உங்களையும் நம்பி ஒருவர் அழைத்தால் எழுதலாம். சோ, எல்லாரும் எழுதலாம்.

16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

இந்தப் பதிவு என்று ஒன்றை சொல்ல முடியவில்லை. எனக்குப் புரியும் வகையில் அவர் எழுதிய அத்தனை எளிமையான பதிவுகளும் என்று சொல்லலாம். வலையுலகில் நான் தொடர்ந்து வாசிக்கும் மிகச் சிறிய லிஸ்டில் இவரும் ஒருவர்.

17) பிடித்த விளையாட்டு?

அம்மா அப்பா விளையாட்டு! ஹேய் குழந்தைகள் விளையாடுவதப்பா...

18) கண்ணாடி அணிபவரா?

இதற்கு ஆம் என்று பதில் சொன்னால், அடுத்த கேள்வி என்ன? சோடா புட்டியா? என்று கேட்பீர்களா? பதில், இல்லை!

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

யதார்த்தமான வாழ்வை சுவாரஸ்யமாய் பதிவு செய்த படங்கள் பிடிக்கும். கொஞ்சமாவது லாஜிக் இருக்க வேண்டும். சினிமாவுக்கே உரிய ஃபேன்டஸி பிடிக்கும்...ரஜினி பறந்து பறந்து அடிக்கலாம். ஆனால் தனுஷ் அடிக்கக் கூடாது!

20) கடைசியாகப் பார்த்த படம்?

நேற்று அஞ்சாதே பார்த்தேன். மறுபடியும். நரேனின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு காமடியாய் இருந்தது...

21) பிடித்த பருவ காலம் எது?

என் வலைதளத்தின் பெயரை பார்த்து விட்டும், இப்படி எல்லாம் கேட்பது ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்!

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

ரா.கி.ரங்கராஜனின் பட்டாம்பூச்சி [மறுவாசிப்பு]
சுஜாதாவின் ஆ! [காலில் என்ன ஊர்கிறது, எறும்பா...ஆ]

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

என்னிடம் இருப்பது லேப்டாப்! [ஐய்யோ, என்னா அறிவு!!]

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

அருவியின் இரைச்சல்
நீரோடையின் சலசலப்பு
பலத்த காற்று
அமைதியான காட்டில், குயிலின் ஓசை
புகைவண்டி
மழலையின் அர்த்தமற்ற பேச்சு
எங்கோ ஒரு ரேடியோவில் கேட்கும் ஒரு பழைய பாடல்

போங்கப்பா, இந்த கேள்வி போர்! நெக்ஸ்ட்...

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

மதுரையில் மஹால் 7வது தெருவில் இருக்கும் வீட்டிலிருந்து நியுதில்லி, சண்டிகார், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, அமேரிக்கா...எப்போது வேண்டுமென்றாலும், கொடுங்கூற்றுக்கிரையாகலாம்! [அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும்!]

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

நான் ஒரு பிறவிக் கலைஞன் என்று எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு நினைப்பு. ஸ்ருதின்னா, பக்கத்து வீட்டு பாப்பாவா என்று நீங்கள் கேட்பவர் என்றால், நான் நன்றாய் பாடுவேன்! நான் நடனம் ஆடினால் அது நடனம் போலவே இருக்கும். சுமாராய் ஆடுவேன். அப்படி ஆடி ஒரு குட்டி டீசர்ட் போட்ட டீ.ஜேயிடம் [பேப் என்று தனியாய் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்!] பரிசு வாங்கியதை இங்கே அளந்திருக்கிறேன். மனுஷ்யபுத்திரன் அளவுக்கு இல்லையென்றாலும், என் அப்பனுக்கு புத்திரன் என்ற அளவுக்கு கவிதைகள் எழுதுவேன். ஒரு அடித்தல் திருத்தல் கூட இல்லாமல் பேனாவினால் படம் வரைவேன். [கல்லூரிக் காலங்களில் செய்தது, இப்போது வருமா என்று தெரியவில்லை...யாரும் டெஸ்ட் வைத்து விடாதீர்கள்! இப்போதெல்லாம் டிஜிட்டல் ஓவியங்கள் தான், என்ன கழுதை கார்ட்டூன் தான் வர மாட்டேன் என்கிறது] நல்ல தாளம் அடிப்பேன் [காட்டுக் குயிலு மனசுக்குள்ள, வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்] எந்த பாட்டு என்று ஈசியாய் கண்டு பிடிக்கும் அளவுக்கு அடிப்பேன். அவ்வப்போது தேவயில்லாமல் ஓவர் ரியாக்ஷன் கொடுப்பேன். அதனால் எனக்கு நடிக்கவும் சுலபமாய் வரும் என்று தோன்றுகிறது...டைமிங் சென்ஸ் உண்டு. [மணி என்ன? பாத்தீங்களா...நான் சொல்லலை?] நேற்று கூட இப்படித் தான் தூங்கப் போகும் போது என் மனைவி ஹால் லைட்டை ஆஃப் செய்யுங்கள் என்றால். அதற்கு நான், ஒரு ஆணை பார்த்து ஆஃப் செய்ய சொல்கிறாய் என்றேன்! அதற்கு அவள் விவேக்கை போல், டேய் நோட் பண்ணுங்கடா..நோட் பண்ணுங்கடா என்று கலாய்த்தாள். தமிழ் சினிமாவைப் பற்றி கொஞ்சம் நிறையவே அறிவு உண்டு. [புதிய படங்களைத் தவிர்த்து!] இதை எல்லாம் விட, நடு சென்டரில் தலை கீழாய் நிற்பேன். இரு புருவத்தையும் தனித் தனியாய் தூக்க முடியும். இரு காதுகளை மட்டும் தன்னிச்சையாய் அசைக்க முடியும். இப்படிப் பல தனித் திறமைகள் உள்ள என்னை பார்த்து உங்களிடம் ஏதாவது தனித்திறமை, நோட் திஸ் பாய்ன்ட், தனித்திறமை என்று ஒருமையில் கேட்கிறீர்கள். வெட்கம்!

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

உலகம்:
இந்த உலகம் எல்லா வளங்களையும் கொண்டிருந்தாலும், ஆறறிவு படைத்த உயிரினம் என்று நம்மை நாமே பீற்றிக் கொண்டாலும், எல்லோருக்கும் எல்லாமும் என்ற எளிமையான ஒரு கோட்ப்பாட்டினை கடைபிடிக்கத் தவறி, எல்லைகள் வகுத்து, அன்பு நெறி தவறி...மனிதனே சக மனிதனை சாப்பிடுவது!!!!

இந்தியா:
எந்த ஒரு தகுதியும், தராதரமும் இல்லாமல் ஜனநாயகத்தின் பேரைச் சொல்லிக் கொண்டு கண்ட கருமாந்திரங்கள் அரசியலில் குதிப்பது [ஏன், நீ குதி என்கிறீர்களா?]
இந்தத் தள்ளாத வயதிலும் விடாமல் பதவியில் அமர்ந்து கொண்டு ஒரு மாநிலத்தையே குடும்பச் சொத்தாக பிரித்துக் கொள்வது
ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் இருக்கும் அந்த கேடுகெட்ட சகிப்புத்தன்மை, எதையும் மறந்து விடும் மனப்போக்கு, சுயஒழுக்கமின்மை இப்படி எத்தனையோ [என்னையும் சேர்த்துத் தான்!]

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ஏன் இவ்வளவு நேரம் என் இமேஜ் டேமேஜ் ஆனது பத்தாதா? அப்புறம் சாருவுக்கும் எனக்கும் வித்தியாசம் வேண்டாம்...

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

ஸ்விச்சர்லாந்து! இனிமேல் தான் போக வேண்டும். தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால், நீளமான ஜாக்கெட், கணமான பேண்ட், உயரமான பூட்ஸ் எல்லாம் போட்டுக் கொண்டு, ஒரு கர்சீப்பை கட்டிக் கொண்டிருக்கும் ஹீரோயினுடன் அந்த ஊரில் உள்ள ஒரு அழகான, அமைதியான சாலையில் நின்று கொண்டு கேடுகெட்ட ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடலாம்! [ஆமா, அது என்ன மாதிரியான ரசனை?]

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

எளிமையான வாழ்க்கை. தெளிவான சிந்தனை!

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

நண்பர்களுடன் நைட் ஸ்டடி...[டேய் அவ நிஜம்மா உன்னை பாக்குறா மச்சான்...]

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

சூஸ் தி பெஸ்ட் ஆன்சர்!

வாழும் போது மற்றவருக்கு பயனாய்; வாழ்ந்த பிறகு மற்றவருக்குப் பாடமாய்!

வாழும் போதும், வாழ்ந்த பிறகும், வாழ்வது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் எழுதிய மற்ற தொடர் பதிவுகள்:

இந்திரன் கெட்டதும் சந்திரன் கெட்டதும்

பெய்யெனப் பெய்யும் மழை - சிறு குறிப்பு வரைக

கற்றதும் பெற்றதும்

தலைப்பு நல்லா இருக்கா? மழைக்கும் பக்கங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை தான். ஆனால் எழுதப் போவதற்கும் இதற்கும் சம்மந்தம் இருக்கிறதே...எல்லாம் நம்ம வாத்தியார் வழி தான். அவர் டெல்லியில் இருந்த போது அவருக்கு கனையாழியின் கடைசி பக்கங்கள் கிடைத்தது. வகைதொகை இல்லாமால் எழுதினார். [இப்படிச் சொன்னால் திட்டுவதாய் அர்த்தம் இல்லையே?] எனக்கு இந்த வலைதளம் தான் கனையாழி, குமுதம், விகடன், கல்கி எல்லாம்...அது தான் என் வலைப்பக்கங்களிருந்து கொஞ்சம் பக்கங்களை ஒதுக்கி, அதாவது நம் பள்ளி நாட்களில் ஒரு நோட்டை இரண்டு பாடத்திற்கு பயன்படுத்த நோட்டின் மத்தியில் ஒரு பக்கத்தை மடக்கி அம்புக்குறி மாதிரி செய்வோமே, அதே போல் செய்து என் வாழ்வின் அனுபவச் சிதறல்களை எடுத்து கொஞம் மெருகூட்டி, பதப்படுத்தி....அதை ஒரு கோர்வையாக்கி...என்ன புரியலையா? ஒன்னுமில்லை, வந்தது போனது, பூசுனது, பூசாதது இப்படி எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிக்கடி பலவிதமான மொக்கைகளா போட்டுத் தள்ளலாம்னு பாக்குறேன்!

பின்ன என்னங்க, எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறார் என்ற கதையாய் எத்தனை நாள் தான் யாருமே வராத டீ கடையை ஆத்திக் கொண்டிருப்பது. இந்த உலகத்துல காலை ஆட்டிட்டே இருக்கணும், இல்லைன்னா சோலி முடிஞ்சி போச்சுன்னு கொண்டு போய் அடக்கம் பண்ணி புடுவாய்ங்க என்று நடிகர் திலகம் எங்கோ சொன்னதாய் ஞாபகம். அவர் சொன்னது போன்ற ஒரு காலாட்டலுக்கான முயற்சி தான் இது. அதுக்காக சார் நேத்து ராத்திரி பூரா தூங்கல, பாத்ரூம் போகல, சரியா சாப்புட்ல என்றெல்லாம் எழுதி மொக்கை போட மாட்டேன். ஆனா நீங்க எல்லாரும், மத்தவங்களுக்கு செய்ற மாதிரி, ஐம் ஃப்ஸ்ட், இதோ பல்லு வெளக்கிட்டு வந்துட்றேன் என்றெல்லாம் பின்னூட்டம் போடணும் சரியா? சரி மேட்டருக்கு வருவோமா?

இந்தப் பரதேசத்தில் தனிமையிலே இனிமை காண முடியுமா என்று யோசித்து வந்த அத்தியாயம் இனிதே நிறைவடைந்து விட்டது. சரியாய் என் மனைவி இங்கு வரும் முதல் நாள் அன்று ஒரு பதிவை போட்டிருக்கிறேன். என்ன? மனைவி வந்தாச்சா, எங்கே சொல்லவேயில்லை என்றெல்லாம் என் முகத்தை பிங்க் கலரில் மாத்தக் கூடாது சொல்லிட்டேன்! அதற்குப் பிறகு இந்தப் பக்கம் கை வைக்கவில்லை. [தலை வைத்துப் படுக்க இது என்ன பாயா?] உடனே, இந்த ஆம்பளைங்களே இப்படித் தான் ஒரு பதிவு போட வக்கில்லைன்னாலும் பொண்டாட்டியை குறை சொல்லலைன்னா இவங்களுக்குத் தூக்கம் வராதே என்று என் இனிய சிநேகிதிகளான நீங்கள் நினைப்பதற்குள் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று தெளிவு படுத்திக் கொள்கிறேன். மாறாக அவள் தான் நான் யு டியுப் பார்க்கும் போதெல்லாம் இதென்ன எப்போ பாத்தாலும் யூ டியுப், ஒழுங்கா ப்ளாக் போட்ற வழியை பாருங்க என்று நச்சரிக்கிறாள். பரிட்சைக்கு படிக்காம அப்படி என்ன டீவி வேண்டிக் கிடக்கு என்று அம்மா திட்டுவது போல் இருக்கிறது.

நானும் இந்த உரைநடை போட்டிக்கு ஒரு சிறு காவியத்தை எழுதிடுவோம்னு பாக்குறேன், அதை பத்தி நெனைக்கும் போது மனசுல கதையா கொட்டுது ஆனா அதை எழுதலாம்னு உக்காந்தா இந்த எழுத்து தான்...வார்த்தை...!!!! பைத்தியக்காரனை [பேரைத் தேடி போட்டுருக்கலாமோ?] நினைத்தால், இல்லை இல்லை நாயகனை நினைத்தால் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. 30,000 செலவு பண்ணி இப்படி எல்லாம் தமிழை வளர்க்கிறாரே என்று. வீட்டில் திட்ட மாட்டாங்களா சார்?

வெண்ணிலா கபடி குழு பார்த்தேன். எனக்குப் பிடித்தது. என்ன தமிழ் சினிமாவில் ஹீரோ சைக்கிளில் பஸ்சை முந்தினால் காதல் வந்து விடுகிறது. கிஷோர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த அருமையான நடிகர் என்று தோன்றுகிறது. நெல்லை பாஷையை அருமையாய் பேசி நடித்திருக்கிறார். அதுல் குல்கர்னிக்கு வந்த நிலை இவருக்கு வரக் கூடாது என்று எங்கும் இல்லாத ஆண்டவனை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். சரண்யா கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல இருக்கிறார். இசை அருமை. லேசா பறக்குது மனசு மனசு...மனசு லேசாய் பறக்கவே செய்கிறது. செல்வகணேஷை யாரும் கண்டு கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.
பசங்க படம் பார்த்தேன். கை தட்டி அன்புவை பிழைக்க வைப்பதை தவிர்த்தால் மிக அருமையான படம் தான். சுப்ரமணியபுரத்தில் செய்ய ஆரம்பித்தது. பேக்ரவுண்டில் இளையராஜா பாட்டை ஓட விடுவது...[சிறு பொன்மணி அசையும்...] இதிலும் தொடர்கிறது. செல்ஃபோனில் ரிங்டோனாக வித விதமான பாட்டுக்களை வைத்துக் கொண்டு அவர் அலம்பு விடுகிறார். சும்மா சொல்லக் கூடாது, ராஜா என்னமா போட்ருக்காரு...படத்தில் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஃபோன் செய்து பேசுவது... அதிலும் "என்ன ஜப்பான்ல இருந்தா? புஜ்ஜிமாவா, டேய் அது கொழந்தை டா" சீன் சுப்பர்!

வேலியில் போவதை வேட்டிக்குள் விட்ட கதையாய் கொழுப்பெடுத்துப் போய் யாரடி நீ மோகினி பார்த்தேன். நான் கடவுளில் போலீஸ் பேசும் டயலாக் தான் ஞாபகம் வந்தது. அடுத்து அதே காட்சியில் ரஜினி பேசும் வசனமும் ஞாபகம் வந்ததால் விட்டு விட்டேன். ஒரே இரவில் ஒரு மண்ணும் தெரியாத தனுஷ் ப்ரோக்ரமாய் அடித்துத் தள்ளுகிறார். ஜாவா கன்சோலில் மெசேஜ் பாக்ஸ் வருகிறது. ஒரு மென்பொருள் பொரியாளனாய் மனம் கொதிக்கிறது. ஆள் முக்கால் ஆடை காலாய் இடைவேளை வரை வலம் வரும் நயந்தாரா வீட்டில் ஒரே ஆச்சாரமாம். காலையில் கோழி கூவ எந்திருக்கனுமாம். அருகம்புல் ஜூஸ் குடிக்கனுமாம். எல்லா பொம்மனாட்டிகளும் இழுத்து போத்திட்டு இருக்கனுமாம். இந்த கண்டிஷன் எல்லாம் போட்றவர் யார் என்று பார்த்தால் கே. விஸ்வநாத். அற்புதமான பல படங்களை எடுத்த அவரால் அந்தப் படத்தில் எப்படி நடிக்க முடிந்தது என்று தெரியவில்லை. நெஜம்மா முடியலை...கார்த்திக் எம்.ஜி.ஆர் கலரில் இருக்கிறார். ஆனால் நயந்தாரா, சரண்யா என்று எல்லோரும் துரத்தி துரத்தி தனுஷை லவ் பண்ணுகிறார்கள். எப்படி இவர் விடாமல் இந்த மாதிரி கேரக்டரிலேயே நடிக்கிறார் என்று தெரியவில்லை। அவரைப் பார்த்தாலே பாவமாய் இருக்கிறது. கண்ட நாள் முதலில் இது தான்டா லவ்னு சிரிப்பார். இதில் அழுகிறார், கோபப்படுகிறார். போதும் கார்த்திக் கொல்லாதீங்க... முதலில் தமிழ் சினிமாவில் அமேரிக்க மாப்பிள்ளை, இந்த மாதிரி சொத்தை நண்பன் கேரக்டரை எல்லாம் தடை செய்ய வேண்டும்! சாரு நம்மை எல்லாரையும் திட்டுவது சரி தான்...இந்தப் படம் ஏன் சார் நூறு நாள் ஒடனும்?

இவ்வளவு காண்டாய் பேசும் நானே எல்லாம் கலந்து கட்டி ஒரு மசாலா பதிவைத் தானே போட வேண்டி இருக்கு...விடுங்க விடுங்க! தமிழர் என்று சொல்லுவோம், தறி கெட்டுப் போவோம்!

இன்று எத்தனை பேர் கூகுளாரின் லோகோவை கவனித்தீர்கள் என்று தெரியவில்லை. அமேரிக்காவில் வாழும் தம்மாத்துண்டு குழந்தைகளிலிருந்து 12ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் வரை கடந்த இரண்டு மாதங்களாக அனைவருக்கும் ரவுண்டு கட்டி நேஷனல் டிசைன் மியுசியத்துடன் இணைந்து ஒரு அற்புதமான போட்டி நடத்தி முடித்துள்ளது. அதாவது "நான் விரும்பும் உலகம்" என்ற தலைப்பில் எல்லா குழந்தைகளும் அவரவர் விருப்பம் போல கூகுள் லோகோவை வடிவமைக்க வேண்டியது. தேர்ந்தெடுக்கப்படும் லோகோ ஒரு நாள் முழுதும் கூகுள்.காமை அலங்கரிக்கும். எத்தனை சிறப்பான விஷயம். கூகுளின் லோகோவையும் அவர்கள் அடிக்கடி அதன் முகம், நிறம் மாற்றும் உக்திக்கே பலர் அடிமை. அதில் நானும் ஒருவன். இதில் இப்படி ஒரு போட்டியை எல்லா குழந்தைகளுக்கும், பள்ளிகளுக்கும் வைத்து இத்தனை பொறுப்புடன் திறமைகளை வெளிக்கொணரும் பாங்கை நான் என்ன சொல்வதென்று புரியவில்லை. இந்தப் போட்டியில் வெல்லுபவருக்கான பரிசுகளைப் பாருங்கள்
1. முதல் பரிசு பெறும் குழந்தைக்கு $15,000 படிப்பிற்கான ஸ்காலர்ஷிப் பரிசு

2. கூகுள் அலுவலகத்திற்குள் ஒரு பயணம்

3. ஒரு லேப்டாப்

4. வென்ற லோகோவைக் கொண்ட ஒரு டீஸர்ட்

5. இதோடு மட்டுமல்லாமல், அந்தக் குழந்தையின் பள்ளிக்கு கம்ப்யுட்டர் லேப் வளர்ச்சிக்காக $25,000 பரிசு.

பார்க்க நமீதாவைப் போல் பிரம்மாண்டமாய் பலவித படங்களைக் காட்டும் பல இணையதளங்களில் உள்ளே சென்றால் கமலா காமேஷ் ரேஞ்சுக்குக் கூட விஷயம் இருக்காது. ஆனால் கூகுள், ஒரு படம், ஒரு உள்ளீட்டு வசதி, ஒரு பொத்தானை வைத்துக் கொண்டு காட்டும் படம் இருக்கிறதே அப்பப்பா.....சமீபத்தில் கூட சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதற்காக தன் அலுவலகத்தைச் சுற்றி உள்ள புற்களை சமன்படுத்த இயந்திரத்தை உபயோகிக்காமல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்! வேலை பாத்தா இங்கே பாக்கணும்!

சினிமாக்காரனுக்கு சமூகப் பொறுப்பு இல்லையா? எழுத்தாளனுக்கு சமூகப் பொறுப்பு இல்லையா என்று வகை தொகை தெரியாமல் நாம் பல பேரை கேள்வி கேட்டு டார்ச்சர் செய்து [என்ன அரசியல்வாதிகளை விட்டுட்டேனா? இல்லை தெரியாம தான் கேக்குறேன், அவங்களுக்கும் சமூகத்துக்கும் என்ன சார் சம்மந்தம்?] . பணத்தை மட்டுமே பிரதானமாய் நினைத்து வாழும் பல வித நிறுவனங்களுக்கு மத்தியில் கூகுள் போன்ற ஒரு நிறுவனம் இத்தகைய சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவர்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பில் ஒரு பங்காவது நம்மில் இருக்கிறதா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தப் போட்டி தொடங்கும் போதே இதைப் பற்றி பதிய வேண்டும் என்று நினைத்தேன். பதியமுடியவில்லை. என் சமூக பொறுப்பு எப்படி இருக்கிறது பாருங்கள். இந்த போட்டியின் அழகியல் என்னை மிகவும் கவர்கிறது. இப்படி ஒரு தலைப்பை குழந்தைகளிடம் கொடுத்து தங்களுடைய லோகோவை வடிவமைக்கச் சொல்லி அழகு பார்ப்பது எத்தனை பேருக்கு வரும்? நாங்க தான் நாசமா போயிட்டோம், நீங்களாவது இந்த உலகத்தை காப்பாத்துங்க என்று குழந்தைகளுக்கு இந்த வகையில் ஒரு அறிவிப்பு விடுத்துள்ளது. குழந்தைகளின் உலகம் எத்தனை அழகானது. எத்தனை வண்ணமயமாகவும், பரிசுத்தமாகவும் இருக்கிறது. கூகுளில் இதே பணியில் ஈடுபட்டிருப்பவர்களைக் காட்டிலும் எந்த விதத்திலும் குழந்தைகள் சலைத்தவர்கள் இல்லை என்பதை கீழ் உள்ள படங்கள் பறைசாற்றுகின்றன. எனக்குப் பிடித்த சில படங்களை இங்கே கொடுத்திருக்கிறேன். கண்டு களியுங்கள்...

வெற்றி பெற்ற படம்


3வது படிக்குது...நானோடேக்னாலஜி அதுலயும் அண்டத்துல...

வாங்கப்பா பீச்சுக்கு என்று ஒரு பிஞ்சுக் குழந்தையின் குரல், ராணுவ ஆடைகளை எங்கே தொங்க விட்டிருக்கிறார் பாருங்கள்!



இந்தப் படம் தப்பு தான், உலகத்தை ஒரு அமைதியான இடத்துக்கு தூக்கிட்டு போகுதாம்...சுத்தி இருக்குற இடமா பிரச்சனை? உள்ளே இருக்குறவங்க தானே பிரச்சனை...ஆனாலும் அருமை...


இன்னும் பாருங்க...            




பூமி உருகுகிறது, அதன்மேல் தெர்மா மீட்டரை வைத்திருக்கிறார். அந்தப் போலார் கரடியை பாருங்கள். எத்தனை பாவமாய் உட்கார்ந்திருக்கிறது.

நம்பிக்கை துளிர் விடுகிறது...

ரணகளம்...






மிச்சத்தை வெண் திரையில் காண்க...

என் முதல் விஞ்ஞானச் சிறுகதை [என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்!] இன்னும் சற்று மெனக்கெட்டு எழுதியிருந்தால் நன்றாய் வந்திருக்கும் என்று தோன்றுகிறது. மத்தபடி நீங்க தான் படிச்சிக் கிழிக்கனும்![என்னைத் தான்!]

முன் குறிப்பு: சுஜாதாவின் வாசனையடிக்கிறதைத் தவிர வேறு ஏதாவது புதுசாய் சொன்னால் தன்னியனாவேன்!

------------------------------------------------------------------------------------------------

சில நாட்களாகவே அவரை பார்க்கிறேன். நான் போகும் இடங்களிலெல்லாம் வந்து என்னையே வெறித்து பார்க்கிறார். ஒரு நாற்பது, ஐம்பது வயது இருக்கும். சாந்தமான முகம். நெற்றியில் விபூதிப் பட்டை. இடுப்பில் பட்டினத்தார் போல் ஒரு வேட்டி. அவ்வளவு தான். இவரை முன் பின் நான் பார்த்ததில்லை. ஏன் என்னை இப்படி பின் தொடர்கிறார் என்று புரியவில்லை. இன்று கேட்டு விடுவது என்று தீர்மானித்தேன். இந்த வரி வரை நான் ஆணா பெண்ணா என்று சொல்லவில்லை. பெண்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒருவர் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார் என்றவுடன், ஆண்களுக்கு நான் செம ஃபிகர் போல என்று ஒரு எண்ணம் உருவாகியிருக்கும். அப்படித் தோன்றியிருந்தால் அதை எச்சில் தொட்டு அழித்து விடுங்கள். நான் ஒரு ஆடவன். கடவுளுக்கு மிகவும் பயந்தவன். ஆண்டவன் எல்லாத்துக்கும் ஒரு கணக்கு வச்சுருக்கான் என்று தீர்க்கமாய் நம்புகிறவன். போர்டில் முன் பெயர் அழிந்து போன ஒரு அன் கோ. வில் குமாஸ்தாவாய் தேமேயென்று பணிபுரிந்து மாதம் 6,350 ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு கட்டை பிரம்மச்சாரி! சரி ஏன் பின் தொடர்கிறார் என்று கேட்டு விடுகிறேன்.

வணக்கம். நானும் கொஞ்ச நாளா பாத்துட்டே இருக்கேன், நீங்க என்னை பின் தொடர்ந்து வர்ற மாதிரியே இருக்கு. மன்னிக்கனும், நீங்க யார் என்னன்னு எனக்கு தெரியலை. கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.

நான் கேட்ட கேள்விக்கு அவர் திருப்பிக் கேட்ட கேள்வி என்னை அதிர வைத்தது. மிகுந்த ஆச்சர்யத்துடன் என்னை பார்த்து....

தம்பி, நான் கேட்கிறேன் என்று தவறாய் நினைக்காதே, நான் உன் பார்வைக்குத் தெரிகிறேனா?

என்னங்க இப்படி கேக்குறீங்க? பின்னாடியே வந்துட்டு இருந்தா கவனிக்காமலா இருப்பாங்க?

நான் உன் முன் நின்றாலும் உன் கண்களுக்குத் தெரிய சாத்தியமில்லயே...நீ முதலில் என்னுடன் வா, தனியாகப் பேசுவதாய் உன்னை யாராவது தவறாக எண்ணக் கூடும். என்று ஒரு சுவருக்குப் பின்னால் கூட்டிக் கொண்டு போனார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நீங்க என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியலை.

சரி, நான் சொல்வதைப் போல் செய். அதோ வருகிறாரே, அவரிடம் நான் நான் யார் என்று கேள்...

எதுக்குங்க, எனக்கு வேலை இருக்கு. நீங்க ஏன் என் பின்னாடி வர்றீங்கன்னு சொல்லுங்க..

எனக்காக கொஞ்சம் கேளேன் தம்பி.

இந்தாப்பா...இங்கே வா! வந்தான். இவர் யாருன்னு உனக்குத் தெரியுமா?

அவன் என்னை ஒரு மாதிரி பார்த்தான். என்ன காண்டிட் காமெர ப்ரோக்ராமா சார் என்று சுற்றும் முற்றும் பார்த்து சிரித்தான்.

இவர் யாருன்னு சொல்லுப்பா...

ம், இவர் தான் அறிஞர் அண்ணா..போய்யா, சொவத்தைக் காட்டி யாரு யாருன்னு காலங்காத்தால...சே! அவன் போயேவிட்டான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் என்னை பார்த்து சிரித்தார்.

நான் தான் சொன்னேனே, நான் யாருக்கும் தெரியமாட்டேன். உனக்கு எப்படித் தெரிந்தது என்று தான் எனக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது!

ஓ, அப்போ நீங்க தான் கடவுளா? எங்க இப்படி என்றேன் எகத்தாலமாய்...

எல்லாம் உனக்காகத் தான்! போகலாமா என்றவரின் பேச்சை மதிக்காமல், அந்த வழியே செல்லும் ஒரு பெண்ணை கூப்பிட்டு,

இது யாரு தெரியுதா என்று கேட்டேன். எது என்று அவர் கேட்டார், இதோ என்று அவரைக் காட்டினேன். என்ன கிண்டல் பண்றியா செருப்பு பிஞ்சிரும் என்று சொல்லியபடியே அவரும் போய் விட்டார். எனக்கு நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவர் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார்.

நீ எத்தனை பேரிடம் கேட்டாலும் உனக்கு இத்தகைய பதில் தான் கிடைக்கும். நான் சொல்வதைக் கேள் என்றார் தெளிவாய்.

சற்று உட்கார்ந்தால் தேவலாம் என்று பட்டது. இருவரும் அருகில் இருந்த திண்ணையில் உட்கார்ந்தோம்.

சொல்லுங்க..நீங்க யாரு, ஏன் என் பின்னாடி வர்றீங்க?

உன் காலம் முடியப் போகிறது, உன்னைக் கூட்டிப் போகவே வந்தேன். நான் தான் எமன் என்றார் சாய்ந்து அமர்ந்தவாறே.

எனக்கு சப்த நாடியும் அடங்கிப் போனது.

என்ன? எமனா? உங்க எருமை எங்கே? கதாயுதம் எங்கே? பாசக்கயிறு எங்கே என்று ஏதேதோ உளறினேன்.

அதெல்லாம் நீங்களாய் மனமுவந்து கொடுத்த வேடங்கள். அப்படி நான் இல்லையென்று கேட்டால் நான் என்ன செய்வது?

நீங்க யார் கண்ணுக்கும் தெரியலை, அதை நம்புறேன். ஆனா, உங்களை எமன்னு நான் எப்படி நம்புறது?

மனுஷங்க நீங்க யாரைத் தான் நம்பியிருக்கீங்க? அதோ பார், அங்கு வருபவனை சற்று கூர்ந்து கவனி. அவன் நம் அருகே வந்ததும் துடிதுடித்து விழுவான்.அப்படிச் சொல்லி விட்டு அவர் கண்களை மூடி ஏதோ முனுமுனுக்க ஆரம்பித்தார்.

என்ன ஆச்சர்யம், எங்களின் பக்கம் வரும் வரை செல்ஃபோனில் உற்சாகமாய் பேசி வந்தவன், பக்கம் வந்ததும் துடிதுடித்து விழுந்தான். நடந்து சென்றவர்கள் அவனை ஒரு ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள். அவலம் அடங்க சற்று நேரம் ஆனது.

செத்துட்டானா? என்றேன்.

அவன் கதை முடியும் காலம் இன்னும் வரவில்லை. சற்று ஆட்டம் காண்பித்தேன் அவ்வளவு தான். பிழைத்து விடுவான். இப்போதாவது நீ என்னை நம்புகிறாயா?

எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. எனக்கு வயசு 35 தானே, அதுக்குள்ள என்ன என்றேன் வேர்த்து விறுவிறுத்து...

ஏன் பூலோகத்தில் 35 வயதில் யாரும் சாவதில்லையா? உனக்கு அல்பாயுசு என்று எழுதி இருக்கிறதே அப்பா, நான் என்ன செய்வது?

எனக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. இதெல்லாம் நிஜம் தானா, நான் இறந்து விடப் போகிறேனா? வாழ்வில் ஒரு சுகமும் அனுபவிக்காமல் இறந்து விடுவேனா? நான் தான் சகல செளக்கியங்களுடன் இருக்கிறேனே..எனக்கு எப்படி மரணம்?

ஐய்யா, நீங்கள் எமன் என்றே ஒத்துக் கொள்கிறேன். நான் அதற்குள் சாகத் தான் வேண்டுமா? இதற்கு வேறு வழியே இல்லையா?

உங்கள் கதைகளில் வருவதைப் போல் என்னிடமிருந்து உன்னை மீட்க சாவித்திரி கூட இல்லையே உன்னிடம்? நான் என்ன செய்வது?

ஐய்யா, அதைத் தான் நானும் சொல்கிறேன். இந்த நாள் வரை, ஒரு கட்ட பிரம்மச்சாரியாய் எந்த சுகங்களையும் அனுபவிக்காமல் வாழ்ந்துட்டேன். தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்.

அது முடியாது தம்பி. காலம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். எல்லாம் விதிப் படி தான் நடக்கும். அதைத் தடுக்க என்னாலும் முடியாது.

இதற்கு வேறு வழியே இல்லையா? தயவு செய்து எனக்காக யோசித்துப் பாருங்கள்.

இதெல்லாம் நான் உன் பார்வைக்குத் தெரிந்ததால் வந்த விணை. எங்கோ எப்படியோ ஒரு கோளாறு நிகழ்ந்திருக்கிறது. அது உன் தவறல்ல. அதை நாங்கள் தான் சரி செய்ய வேண்டும். இத்தனை நாள் உன்னை கண்கானித்ததில் நீயும் எந்த ஒரு லெளகீக சுகங்களை அறியாதவன் என்பதை நானும் புரிந்து கொண்டேன். உன்னால் என்னை பார்க்க முடிகிறது என்பதால் உன் மீது ஒரு இனம் தெரியாத பாசம் வருகிறது. அதனால் உனக்காக மட்டும் இந்தச் செயலை செய்கிறேன். இதை நீ வேறு யாரிடமும் சொல்லி விடக் கூடாது. சொல்லி விட்டால் அந்தக் கணமே உன் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடும் என்று நீ பல கதைகளில் படித்திருப்பாய்! நான் இந்தக் கோளாறு எப்படி நடந்தது என்று எமலோகம் சென்று பார்த்து விட்டு வருகிறேன். நான் இரண்டு நாளில் திரும்பி வந்து விடுவேன். நீ அதற்குள் உன் வாழ்வை வாழ்ந்து கொள். இதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது!

ஐய்யா, மிக்க நன்றி. மிக்க நன்றி...ஆனா ரெண்டு நாள்ல நான் என்னங்க வாழ்றது? கொஞ்சம் நீங்க பொறுத்து வந்தீங்கன்னா, நல்லா இருக்கும்.

அடேய் மானிடா, நான் சொல்வது எமலோகத்தின் இரண்டு நாட்கள். அது பூமியைப் பொறுத்தவரை சில ஆண்டுகளடா...

எனக்கு தெரியலையே...இருந்தாலும் உங்க கருணைக்கு ரொம்ப நன்றி ஐய்யா...ரொம்ப சந்தோஷம்!

அது போகட்டும், இதற்காக நீ எனக்கு என்ன தருவாய்?

நான் உங்களுக்கு என்னங்க தர்றது? நான் ஒரு சாதாரண மனுஷன்! நீங்க வேற..

பூலோகத்தில் பணம் என்னும் பிசாசு இல்லாமல் ஒரு வேலையும் நடக்காதாமே, அந்தப் பிசாசை நான் பார்க்க வேண்டுமே?

இது தான் அந்தப் பிசாசு என்று என் பர்சில் இருந்து 50 ரூபாயை எடுத்துக் காட்டினேன்.

சரி, மறைக்காமல் ஒன்றை சொல். இதைப் போல் உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது?

எனக்கு தான் எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லையே, வாங்குற சம்பளத்துல மிச்சம் புடிச்சி ஒரு லட்ச ரூவா பேங்க்ல போட்டு வச்சிருக்கேன்...

பலே...அப்படியென்றால் நான் செய்யும் இந்த உதவிக்காக நீ எனக்கு அதில் பாதியை தர வேண்டும். என்ன சொல்கிறாய்?

ஐயய்யோ, அது எதுக்குங்க உங்களுக்கு?

மேலுலகத்தில் அனைவரும் பணத்தைக் காண ஆவலாய் இருக்கிறார்களடா...நானும் எல்லா உலகத்து நாணையங்களையும் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கும் அது உதவியாய் இருக்கும்.

அதுக்கு அம்பது ரூபா போதுமே?

அடேய், ஒருவனை அழைத்து வருவதாய் சொல்லி வந்திருக்கிறேன். நீ இல்லாமல் திரும்பிப் போனால் நான் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் இந்தப் பணத்தைக் கொடுத்துத் தானே நான் சரி கட்ட வேண்டும்.

ஒஹோ எமலோகத்திலும் லஞ்சம் வந்து விட்டதா?

அது தான் நீங்கள் வந்து விட்டீர்களே, பின் லஞ்சம் வராதா? வாக்குவாதம் செய்யாமல் பணத்தைக் கொடு! நீ கொடுத்தே ஆக வேண்டும்.

உயிரை விடவா ஐம்பதாயிரம் பெருசு...வாங்க ஏடிஎம் ல எடுத்துக் கொடுக்குறேன்.

அப்பாடா, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு. எமனுக்கே லஞ்சம் கொடுத்து வரலாற்றில் இடம் புடிச்சிட்டோம் என்ற மிதப்பில் நான் ரோட்டை க்ராஸ் செய்யும் போது ஒரு தண்ணி லாரி எல்லா நீரையும் கொட்டிக் கொண்டே என் மேல் அநியாயமாய் ஏறிச் சென்றது. நான் ரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருக்கும் போது "டேய், அந்த ஆட்டோவைக் கூப்பிடு" என்று கத்தும் யாரோ ஒருவரின் குரல் மிகவும் பழக்கப்பட்டதாய் இருந்தது.

175 ஆவது பதிவு

மரணம் சம்பவிக்கும் வீடுகள் என்றும் விசித்திரமானவை. அத்தனை காலமும், பத்தோடு பதினொன்றாக அந்தத் தெருவில் இருந்த அந்த வீடு திடீரென ஒரு வரலாற்றுச் சின்னமாய் உயிர்த்தெழுந்து விடுகிறது. முதன் முதலாய் மேடையேற்றப்பட்ட குழந்தையைப் போல் அந்த வீட்டின் மீது அத்தனை பேரின் பார்வையும் பதிந்து விடுகிறது. விடிந்தும் எறியும் அந்த ஜீரோ வாட்ஸ் பல்பும், தெருவில் இறைந்து கிடக்கும் நாற்காலிகளும் அந்த வீட்டின் துக்கத்தை மெளனமாய் பறைசாற்றுகின்றன. இத்தனை நாள் அந்த ஒரு வீடு இருப்பது கூடத் தெரியாமல் அதை கடந்து போனவர்கள், இன்று திடீரென அந்த வீட்டை திரும்பிப் பார்த்தபடியே செல்கிறார்கள். இறந்தவரை எப்படி வைத்திருக்கிறார்கள் என்று பார்க்கும் ஆவல் அந்த வீட்டைக் கடக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

மரணம் ஒவ்வொரு வீட்டின் வாசல்படியிலும் வசதியாய் அமர்ந்திருக்கிறது. மரணமும் குழந்தையை போல் தான். ஒரு குழந்தை தனக்கு வேண்டியதை தன் வீட்டிலிருந்து எத்தகைய உரிமையோடு எடுத்துக் கொள்கிறதோ, அதே உரிமையுடன் தான் மரணமும் தனக்கு வேண்டியதை எடுத்துச் செல்கிறது. எந்த ஒரு பெற்றோருக்கும் என்றுமே அடங்காத குழந்தையாய் அது இருக்கிறது. மரணத்திற்கு இசைந்தே வாழ்க்கை இயங்குகிறது. மரணம் ஒரு காட்டாறு போல வீறு கொண்டு ஓடுகிறது, வாழ்க்கைக் கரைகள் அதற்கேற்ப வளைந்து நெளிந்து தன்னை உருவாக்கிக் கொள்கின்றன.

மரணத்தின் அதிர்வு இடத்திற்கு இடம் மாறுகிறது. கிராமங்களைப் போல் நகரங்களில் யாரும் ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுவதில்லை. கிராமங்களில் ஏற்படும் அதே அதிர்வை ஒரு மரணம் நகரங்களில் ஏற்படுத்தினாலும் அங்கு துக்கங்கள் நாசூக்கானவையாகத் தான் இருக்கின்றன. துக்கம் விசாரிக்க வருபவர் அத்தனை பேருக்கும், மரணம் சம்பவித்த அந்த நிமிடத்தை பற்றி கேட்டுத் தெரிந்த கொள்ள ஆவலாய் இருக்கிறது. அதை தங்கள் மனத்திரையில் ஓட விட்டுப் பார்த்துக் கொள்கிறார்கள். "தாகமா இருக்கு, கொஞ்சம் தண்ணி கொடுன்னாரு" என்று சொல்லும்போதே நம் மனம் அப்போது தான், அப்போது தான் என்று பரபரக்கிறது. நமக்கும் ஒரு நாள் இப்படித் தான் நடக்கும் என்று அப்போது தோன்றுவதேயில்லை. அந்த நொடியை ஒவ்வொருவரும் தமக்குள் அனுபவித்து வெவ்வேறு வர்ணனைகளுடன் அடுத்தவருக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

என்ன சோகம் இருந்தாலும் மரணம் எல்லோருக்கும் ஒரு வித விடுதலை உணர்வை தருகிறது. இறந்தவருக்கு நிரந்தர விடுதலை. மற்றவருக்கு தற்காளிக விடுதலை. அந்த மரணத்தில் பங்கு கொண்ட யாரும் அன்று செய்ய வேண்டிய காரியத்தை செய்யத் தவறியதற்காக தண்டிக்கப்படுவதில்லை. மரணம் அன்று ஒரு நாள் எல்லாவற்றையும் மன்னித்து ஆசிர்வதிக்கிறது. இந்தக் கால ஓட்டத்தின் பிடியிலிருந்து எல்லோரையும் சற்று தளர்த்தி ஆசுவாசப்படுத்துகிறது. சற்று நேரம் அழுது ஓய்ந்ததும் மனது லேசாகிறது. அப்போது தான் பலருக்கு வானத்தையும், நிலவையும், மரங்களின் சலசலப்பையும், குழந்தைகளின் விளையாட்டுக்களையும் பார்க்க முடிகிறது. இறந்தவரின் மூலம் பல விட்டுப் போன உறவுகள் ஒன்று கூடுகின்றன. அன்று தான் எல்லோரிடமும் நிறைய நேரம் இருக்கிறது. அவரைப் பற்றி பேச ஆரம்பித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்கள்.

அப்படி மனம் விட்டுப் பேசும் போது, பல விதமான மரணங்களைப் பற்றியும், அதைச் சார்ந்த சம்பவங்களைப் பற்ரியும் தீர ஆலோசிக்கப்படுகிறது. தான் அதில் பங்கு கொள்ளாதவரை மரணம் நேர்ந்த சம்பவங்களைப் பற்றிக் கேட்க எல்லோருக்கும் ஆவல் இருக்கிறது. அதைப் பற்றிப் பேசப் பேச அது வளர்ந்து கொண்டே வருகிறது. வாழ்க்கை எத்தனை விசித்திரமானது, மரணத்தின் முன் அது எத்தனை அற்பமானது என்று நினைக்கத் தோன்றுகிறது. மரணத்திற்கான எல்லா பதில்களும் வாழ்க்கைக்கான கேள்விக்குறிகளாய் நம் மீது குவிகின்றன. மரணத்தைப் பற்றி சிலாகிக்கும் போதும், அதன் நிதர்சனத்தை உணரும் போது, நம்மில் எங்கோ அடி ஆழத்தில் புதைந்து போய் விட்ட மனிதம் ஆனது மெல்ல தலை காட்டுகிறது. அந்த சில நொடிகள் நாம் பிறந்த குழந்தையாய் மாறி விடுகிறோம். அது வெறும் சில நொடிகள் தான். அந்தக் கனவு கலைந்தவுடன் நாம் சராசரியாகி விடுகிறோம். ஒவ்வொரு மரணமும் வாழ்க்கை எப்படி வாழப்பட வேண்டும் என்று செய்தியை உணர்த்திக் கொண்டே இருக்கிறது. நாம் கண்களை மூடி பயணிக்கிறோம்!