வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் ஷாப்பிங் செய்து விட்டு ஞாயிற்றுக் கிழமை இரவு நானும், என் மனைவியும், என் மகள் தருவும் வெளியே வந்தோம். மால் பார்க்கிங் சார்ஜ் ஜாஸ்தி என்பதால் வேளச்சேரி 100 அடி ரோட்டில் ஒரு ஓரத்தில் பைக்கை வைத்திருந்தேன். "ஒரு அம்பது, நூறுக்கு எல்லாம் ஏன் இப்படி பண்றீங்க?" என்ற மனைவியிடம் "அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு என்  எதிர்ப்பை எப்படி தெரிவிப்பது!?" என்று சொல்லி இருக்கலாம், வேண்டாம் கொலை வெறி ஆகி விடுவாள்!

மாலில் இருந்து வெளியே வந்து 100 அடி ரோட்டை நோக்கி நடக்கத் துவங்கினோம். "பைக்கை யாராவது எடுத்துட்டு போயிட்டா என்ன பண்ணுவீங்க?" என்று அவள் கேட்டதெல்லாம் வயிற்றில் லைட்டாய் புளியை கரைத்துக் கொண்டிருந்தது. 100 அடி ரோடில் ஒரு 10 மீட்டர் நடந்தால் போதும், பைக் அங்கு தான் நிறுத்தி இருந்தேன். ஞாயிற்றுக் கிழமை என்பதால் கடைகள் சாத்தி இருந்தார்கள். அதனால் அந்த இடத்தில் வெளிச்சம் வேறு இல்லை. ஏக்கப்பட்ட பைக்குகளும், கார்களும் நின்று கொண்டிருந்தன. இப்படி எல்லாம் கூட்டத்தில் கண்டு பிடிப்பதற்காக தான் நான் சாமர்த்தியமாய் சிவப்பு ஹெல்மட் வாங்கி இருந்தேன். அதை தேடினால் போதும். அந்த கும்மிருட்டில் கருப்பு வண்டி தெரிய வழியில்லை. சிவப்பை எதிர்நோக்கி என் கண்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கும் போது, காலில் வழு வழுவென்று ஏதோ பட்டது. "அட, பரவாயில்லையே, கார்ப்பரேஷன்ல இவ்வளவு வழவழப்பா டைல்ஸ் எல்லாம் போடறாங்களா?" என்று நான் நினைப்பதற்குள் அது என் காலில் இருந்து நழுவி குறைத்துக் கொண்டே ஓடியது. அது ஒரு கருப்பு நாய்! அதன் வயிற்றிலேயே கால் வைத்திருக்கிறேன். நல்ல வேளை அது என் தொடையில் வாய் வைக்கவில்லை. சுற்றி இருந்தவர்களில் ஒருவர், "அது ஒன்னும் கடிக்காது சார்!" என்றார். யாராவது என் வயிற்றில் கால் வைத்தால் நானே கடிப்பேன். அது நாய், எப்படி கடிக்காமல் இருக்கும். ஏதோ என் அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொண்டேன். வயிற்றில் புளி இன்னும் ஜாஸ்தி ஆனது. நாயின் புண்ணியத்தில் நெஞ்சு வேறு அடித்துக் கொண்டது. இது வரை என் சிவப்பு ஹெல்மட்டும் கண்ணில் படவில்லை, கருப்பு வண்டியும் கண்ணில் படவில்லை.

என் மனைவியிடம், "இங்கே தான் நிறுத்தினேன், காணோம்!" என்றேன். "உங்களுக்கு இது தேவையா, சரி இன்னும் முன்னாடி போயி பாருங்க" என்றாள் பொறுமையாய். இல்லை என்று தெரிந்தும் முன்னால் போனேன். திரும்பி வரும்போது என் மனைவி என்னை அழைத்தாள். "கிடைத்து விட்டதா?" என்று ஆர்வம் போங்க அருகில் சென்றால், "இப்போ தான் போலீஸ் ஒரு 30 பைக்கை எடுத்து போயிருக்காங்களாம், பீனிக்ஸ் மால் பக்கத்துல நிக்கிறாங்களாம், அவங்க சொல்றாங்க!" என்று என் வயிற்றில் கரைந்து கொண்டிருந்த புளியில் கொஞ்சம் பாலை ஊற்றினாள்! நான் அவர்களிடம் "ஏன் சார், ஏன் வண்டியை எடுத்தாங்க?" என்று கேட்டேன். அவர்கள், "இது நோ பார்க்கிங் சார்" என்றார். அந்த இருட்டில் அப்படி எந்த போர்டும் என் கண்ணுக்கு தெரியவில்லை. மாலையில் நான் நிறுத்தும் போது கூட ஒரு தடவை பார்த்து விட்டு தான் நிறுத்தினேன். அந்த நேரத்திலும் அங்கு 100 வண்டி நின்று கொண்டிருந்தது. "என்ன சார், இத்தனை வண்டி நிக்குது" என்றேன். "அவங்க எடுத்து எடுத்துட்டு தான் போறாங்க, அதுக்குள்ளே மறுபடியும் மக்கள் நிறுத்திடறாங்க. அவங்க எத்தனை வண்டிய தான் தூக்கிட்டு போவாங்க பாவம்!" என்றார். நான் என் மனைவியிடம் "இரு" என்று கிளம்பும்போது, "நானும் வர்றேன், குழந்தையோட பாத்தா விட்ருவாங்க!" என்றாள். என்ன ஒரு சாமர்த்தியம்.! "சரி வா" என்று மறுபடியும் அவர்களை மால் வரை நடத்திப் போனேன். வழியெங்கும், "இது உனக்கு தேவையா?" என்ற ஒரே சொல் எனக்குள்ளே ரீங்காரமாய் ஒலித்தது.

பீனிக்ஸ் மால் அருகில் ஒரு காலி இடத்தில் ஒரு பெரிய டோயிங் வேன் நின்றது. அங்கு இரண்டு வெள்ளை சட்டை போலீஸ்கள் இருந்தார்கள். என் வண்டி சிவப்பு தொப்பியுடன் ஜம்மென்று நின்று கொண்டிருந்தது. இரு இளைஞர்கள்  "ஏன் சார் வண்டிய கொண்டு வந்தீங்க" என்று கேட்டு ஒரு போலீஸ் அதிகாரியின் ஈகோவை கிளப்பி விட்டுக் கொண்டிருந்தார்கள். நான் பின்னால் குழந்தையுடன் நிற்பதை பார்த்ததும் இன்னொரு போலீசிடம், "இங்கே பாரு, ஏன் எடுத்தீங்கன்னு கேக்குறாங்க, தம்பி நீங்க இந்த பக்கம் வாங்க, பாவம் குழந்தையோட நிக்கிறாங்க, முன்னாடி வாங்க சார்" என்று அவர்களை தனியாய் ராடு எடுப்பதற்காக ஓரம் கட்டி விட்டு என்னை அழைத்தார்.

கார்ப்பரேட் உலகில் "கஸ்டமர் இஸ் காட்" என்று ஒரு சொல்லாடல் உண்டு. அதை போல் நம்மூரில் "அதிகார வர்க்கம் இஸ் காட்". போலீஸ்களிடம் இந்த மாதிரி நேரடியான கேள்விகளை எல்லாம் கேட்கக் கூடாது. அவர்கள் பதில் சொல்லக் கடமைபட்டிருந்தாலும், அவர்களின் ஈகோ தான் முதலில் தலை எடுக்கும். அவர்களை அடக்க ஒரே வழி அவருக்கு மேலான ஒரு அதிகாரம். அது நம்மிடம் இல்லை. இன்னொன்று பணம். நான் அந்த இளைஞர்களை போல் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. "நோ பார்க்கிங்க்னு தெரியாது சார், தெரியாம நிறுத்திட்டேன். இது தான் சார் என் வண்டி" என்றேன். "ஒருத்தன் சிக்கிட்டாண்டா" என்பது போல், அந்த இளைஞர்களை புறம் தள்ளி விட்டு அந்த மற்ற போலீஸ் வந்தார். எங்களை ஓரம் கட்டினார்.

கையில் ஃபைன் மெஷினுடன்  "260 ஃபைன் கட்டும்மா" என்றார். பரவாயில்லையே, நேர்மையாய் ஃ பைன் தான் கேட்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டேன்.  அதற்குள் என் மகள் ஏதோ பேச "என்ன வயசும்மா ஆகுது?" என்று என் மகளிடம் சகஜமாக பேச ஆரம்பித்தார். நான் "நோ பார்க்கிங் 260 ஃபைனா சார் என்றேன். [பருத்தி வீரன் மாதிரி கேட்கக்கூடாது, பாலக்காட்டு மாதவன் மாதிரி அடக்கமாய், அப்பாவியாய் கேட்கணும். அப்போது தான் பதில் வரும்.] "டோயிங் சார்ஜ் போடுவோம்மா" என்றார்.

"ஆமா, இவ்வளவு வெயிட்டான பைக்கை தூக்கி போட்டு கொண்டு வந்துருக்கான்களே, நியாயம் தான்!" என்று நினைத்து ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டினேன். அவர் முன்னூறு ரூபாய் திருப்பிக் கொடுத்தார். நானும் வாங்கி வைத்துக் கொண்டேன். இடையில் "எங்க வேலை பாக்குறீங்க?" என்றார், நான் ஒரு நடிகன் சார், குறும்படங்கள் ல, நாடகங்கள் ல நடிக்கிறேன் என்றேன். இப்போதெல்லாம் மாட்டினால் இப்படி தான் சொல்கிறேன். "ஒ, எப்படி போகுது? குடும்பம் நடத்த வருமானம் வருதா? என்றார் அக்கறையாய். நான் "கஷ்டம் தான் சார்" என்றேன். [நமக்கா நடிக்கத் தெரியாது!] "சரி வண்டி எடுத்துக்குங்க" என்றதும் நான், "சார் ரெசிப்ட்" என்றேன். "அப்போ இன்னும் அறுபது ரூபா கொடுங்க!" என்றார். அப்போது தான் அவர் இருநூறு ரூபாயை லஞ்சமாய் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை எனக்கு புரிந்தது! "செய்றதை சரியா செஞ்சுருவோம்" என்று சொல்லிக் கொண்டே ரூபாயை எடுத்தேன். அவரும் ஆமோதித்து "ஆமாம், ஆமாம், நாங்க க்ளோஸ் பண்ணிட்டு இருக்கோம், அதனால தான்" என்று ஏதோ மழுப்பினார்.

நான் ரெசிப்ட் கேட்டதும் தான் என் பெயர், முகவரி, வண்டி என், லைசன்ஸ் என்று எல்லாவற்றையும் கேட்டார். 260 ரூபாய் ஃபைன், அதற்கு பதிலாய் 200 ரூபாய் லஞ்சம். அந்த 200 ரூபாய் லஞ்ச பணத்துக்காக ஏதோ பத்து வருடம்  பழகிய நண்பர் போல எங்களுடன் ஒரு நட்பு கலந்த உரையாடல்! உண்மையில் அங்கு பார்க்கிங் செய்யக் கூடாது என்று இவர்கள் நினைத்தால் நல்ல நடவடிக்கைகளை எடுக்கலாம். பேரிகேட்ஸ் வைக்கலாம், பெரிய நோ பார்கிங் போர்ட் வைக்கலாம். வார இறுதிகளில் அங்கேயே ஒரு போலீஸ்காரரை நிறுத்தி வைக்கலாம். ஆனால் இவர்கள் செய்வது என்ன? செய்யாத ஒரு தப்பு நம்மை சிக்க வைத்து, அதற்கு ஃபைனும் போட்டு, அதிலிருந்து தப்பிக்க லஞ்சம் என்று இன்னொரு தப்பையும் நம்மை செய்ய வைத்து...இது என்ன மாதிரியான தண்டனை? என்ன மாதிரியான சட்டம்?

"நீ தப்பு பண்ணிட்டே! கட்டு ஃபைன்" என்று சிங்கம் போல் சொல்ல வேண்டியவர்கள் அந்த இருநூறு ரூபாய் பணத்துக்காக நம்மிடம் இல்லாதது பொல்லாதது எல்லாம் பேசி ஒரு நாயை போல் குழைகிறார்கள். ஒருபக்கம் அவர்களை பார்த்து எனக்கு பரிதாபமே மிஞ்சியது. பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்?

வண்டியை எடுக்கும்போது பார்த்தேன், நல்ல துணியில் நான் வைத்திருந்த ஹெல்மெட் கேப், நான் வண்டி துடைக்க வைத்திருந்த மஞ்சள் துணியை காணவில்லை. அவர்களிடமே கண்டு பிடித்து தரச் சொல்லி இருக்கலாம். ஏற்கனவே 200 ரூபாய் போன கடுப்பில் ஓவர் ஸ்பீட் என்று ஐநூறு ரூபாய் ஃபைன் போட்டு அதற்கு முன்னூறு ரூபாய் லஞ்சம் கேட்பார்கள். எதற்கு வம்பு!

கடந்த ஞாயிறு அன்று கிருஷ்ணகிரியில் "தமிழ் கலை இலக்கிய பட்டறை" நடத்திய குறும்பட த் திருவிழாவில் அஜயன் பாலா, விஜய் ஆர்ம்ஸ்ட்ராங், தமிழ் ஸ்டூடியோ அருண் மற்றும் கவிஞர் சாம்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாய் பங்கு பெற்றனர். நான் நடித்த "வலி" குறும்படத்தை சமர்த்திருந்தோம். அங்கு திரையிடப்பட்ட பதினாறு படங்களில் சில படங்களை தேர்ந்தெடுத்து விருதளித்தார்கள். அதில் வலியும் ""சிறந்த குறும்படம்" விருதை வென்றது. சென்ற வாரம் தமிழ் ஸ்டூடியோவின் மூலம் Article 39 படத்துக்கு விருது. இந்த வாரம் இவர்களின் மூலம் "வலி" படத்துக்கு விருது என்று எங்கள் காட்டில் ஒரே விருது மழையாய் இருக்கிறது. மகிழ்ச்சி! 


தமிழ் ஸ்டூடியோ சார்பாக சென்னையில் அருண் இம்மாதிரி விஷயங்களை முன்னெடுப்பதே பெரிய விஷயம் என்று என் முந்தய பதிவில் எழுதியிருந்தேன். அவரை பின்பற்றி கிருஷ்ணகிரியில் இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்ட "சதீஷ்" மற்றும் மற்ற "தமிழ் இலக்கிய பட்டறை" குழுவுக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள். 

இப்படி ஒரு நிகழ்வை எளிதாய் நடத்தி விட முடியாது. கடந்த ஒரு மாதமாய் இதற்காக இராப்பகலாய் உழைத்து, போட்டியில் கலந்து கொண்டவர்களை அழைத்து, எல்லோரையும் ஒரு ஏ சி ஹாலில் அமர வைத்து, எல்லோருக்கும் நல்ல சாப்பாடு போட்டு, நம் படத்தை திரையிட்டு, கை தட்டி, நெஞ்சார பாராட்டி, மற்ற சக படைப்பாளிகளுக்கு நம் அறிமுகங்களை கிடைக்கச் செய்து, போதாதென்று மேலும் ஒரு விருதளித்து...என்ன கிடைக்கும் இவர்களுக்கு? போட்டியில் ஒரு பங்காளனாக இந்த நிகழ்வின் வெற்றியாக நான் நினைப்பது, பங்கு கொண்ட படங்களில் ஒரு படம் பத்து வயது சிறுவனாலும் [ஒரே நாளில் எடுத்து முடித்தது!], இன்னொரு படம் ஐம்பது வயது கடந்த முதியவராலும் இயக்கப்பட்டிருந்தது. இரண்டுமே முதல் முயற்சிகள்!

வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் சொன்னது போல், சினிமா என்றால் சென்னை என்று இல்லாமல், தமிழ் படம் என்றால் சென்னையை மட்டுமே மையமாக கொள்ளாமல் அந்த அந்த வட்டாரப்பகுதிகளின் கதைகளை முன்னெடுத்து இப்படி குறும்படங்கள் வருமானால் அதை விட ஒரு சிறப்பு இருக்க முடியாது. செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதற்கான முதல் அடி தான் இது! வாழ்த்துக்கள் விருதளித்த உங்களுக்கும், உங்களின்  விருதுக்குத் தகுதியான எங்களுக்கும் :)
தமிழ் ஸ்டூடியோ நடத்திய "பாலுமகேந்திரா" குறும்பட விருது வழங்கும் விழா நேற்று கோடம்பாக்கத்தில் BOFTA [Blue Ocean Films Technology & Academy] பள்ளியில் மிகச் சிறப்பாக நடந்தது.  என்னை போன்ற ஒரு சினிமா ஆர்வலனுக்கு பாலுவின் பெயரில் விருது வாங்குவதை விட சிறப்பு ஒன்று இருக்க முடியாது.



இந்த விருது அறிவிக்கப்பட்டதும், "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பிரதீப் குமாரா? என்று ஆர்வம் போங்க, என்னுடைய [என் இயக்கத்தில் உருவான] குறும்படங்களான "விடியல்", "தமிழ் கிஸ்", "பச்சா பையா" ஆகியவைகளை சமர்ப்பித்து விட்டேன். மூணுல ஒன்னாவது தேறாதா என்ற நப்பாசை தான். சமீபத்தில் வெளியிட்ட "Article 39" படமும் தாயாராய் இருந்ததால் அதையும் சமர்ப்பித்தோம். ஆக இந்த போட்டியில் என் படங்கள் மட்டும் நான்கு :-)

எடிட்டர் லெனின் அவர்கள் முதல் சுற்றுக்கான பதினாறு படங்களை தேர்ந்தெடுத்தார். அதில் ஒன்று "Article 39(F)"! சனிக்கிழமையே, முதல் சுற்றுக்கு தேர்வான பதினாறு படங்களில் "Article 39" தேர்வானது குறித்து அலைபேசியில் அழைத்து சொன்னார்கள். ஞாயிற்றுக் கிழமை 1:30 மணிக்கு அந்த பதினாறு படங்களும் சாரு நிவேதிதா, லீனா மணிமேகலை, BOFTA நிறுவனர் தனஞ்செயன், எடிட்டர் லெனின் [ஜூரி] முன்னர் திரையிடப்பட்டது.

ஞாயிற்றுக் கிழமை ஒரு மணிக்கே "Article 39" க்ரூ ஆஜர். ஆனால், ஏதோ சூப்பர் ஸ்டாரின் முதல் நாள் ஷோ போல், தியேட்டர் ஃபுல். !. உள்ளே நிற்க இடமில்லை.  படங்கள் இன்னும் திரையிட ஆரம்பிக்கவில்லை. "என்னடா இப்படி ஆகிவிட்டதே! நம் படத்தை திரையில் பார்க்க முடியாமல் போய் விடுமோ? "என்று ஸ்க்ரீனுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்போது லெனின் அவர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். அத்தனை கூட்டத்தில் வாசலில் நின்று கொண்டிருந்த என் மீது அவரின் கண்கள் நின்றது. ஒரு புன்முறுவல். "எனக்கு அவரை தெரியும், அவருக்கு என்னை தெரியாதே!" என்று நான் முழித்துக் கொண்டே "வணக்கம் சார்" என்றேன், என் அருகில் வந்து என் தோளில் கை வைத்து நின்று "ரொம்ப நல்ல நடிச்சுருக்கே! அருமையா இருந்தது. ஆமா, இத்தனை படமா எடுப்பே? என்றார்!" எனக்கு ஒரு நிமிடம் தலை கால் புரியவில்லை. "ரொம்ப நன்றி சார்" என்று வாயில் வார்த்தை வராமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். எனக்கு என்னமோ அங்கேயே அப்போதே அவார்ட் கிடைத்து விட்டது போல் இருந்தது. அவ்வளவு பெரிய மனிதர், இத்தனை படங்களை பார்த்து விட்டு, என்னை அடையாளம் கண்டு வாழ்த்துகிறார் என்றால், இதை விட வேறு என்ன வேண்டும். புளகாங்கிதம் அடைந்து விட்டேன். அவருக்கு பின்னால் வந்த ஒருவர், கை கொடுத்து, "உங்க எல்லா படத்தையும் பாத்தாரு, ரொம்ப நல்லா பண்ணி இருந்தீங்க" என்றார்.


பிறகு தமிழ் ஸ்டூடியோ அருண் என்னை பார்த்து விட்டு, "படத்துல நடிச்சுருக்கீங்களா? சீக்கிரம் வரச் சொன்னேன்ல?" என்று செல்லமாய் கோபித்துக் கொண்டார். அருண், நான் 1:30 நிகழ்ச்சிக்கு 1 மணிக்கே வந்துருக்கேன் என்றேன். "நிகழ்ச்சி காலையில 10 மணியில இருந்து!" என்று புள்ளி வைத்தார். பிறகு அவர் லெனின் ஐயாவை சாப்பிட அழைத்தார். சாப்பிட கீழே இறங்கியவர் என்னை பார்த்து கையால் "வா" என்று சைகை செய்து கொண்டே முன்னால் போனார். நான் நாய்க்குட்டி மாதிரி அவர் பின்னாலேயே போனேன். அவர் அருகில் என்னை அமர வைத்து மறுபடியும் பாராட்ட ஆரம்பித்தார். "எல்லா படங்களும் பாத்தேன், அதெல்லாம் வேற யாரோ டைரக்ட் பண்ணி இருக்காங்க போல, இது தான் சிறப்பா இருந்தது!" என்றார். அதெல்லாம் ஆரம்ப காலத்துல நானே பண்ணதுங்க, இது பாலாஜி டைரக்ட் பண்ணார் என்று அருகில் இருந்த இயக்குனரை கை கட்டினேன். அவ்வளவு நேரம் அவர் அருகில் இருந்ததையே நான் மறந்து விட்டேன். பாலாஜி மன்னிப்பாராக! பிறகு அவரையும் பாராட்டினார். போட்டிக்கு வந்த 65 குறும்படங்களில் 16 தேர்வு செய்ததாக சொன்னார். "65 படம் எப்படி சார் பாத்தீங்க?" என்றதற்கு, "படம் பாக்க தான் நமக்கு எப்பவுமே புடிக்குமே, கின்னஸ் ரெக்கார்டுக்கே கொடுக்கலாம் அத்தனை குறும்படங்களை பாத்துருக்கேன் என்றார்! பிறகு நல்ல குறும்பட போட்டிகளில் கலந்து கொண்டு பல படங்களை பார்க்க வேண்டும் என்று சொன்னார். அத்தனை பேச்சுக்களிடையிலும் "நீங்க சாப்பிட்டீங்களா?" என்று கேட்டார்.

அதோடு விடாமல் உள்ளே சென்று உட்காரும்போது என்னை கையோடு கூட்டி போய் அவர் அருகே அமர்த்திக் கொண்டார். அங்கே மக்கள் நிற்க இடம் இல்லாமல் இருக்கும்போது நான் சொகுசாய் ஒரு சேரில் அமர்ந்து கொண்டது எனக்கே கொஞ்சம் உறுத்தியது. நல்ல வேலையாய் லீனா வந்து விட்டதால், அருண் வந்து விரட்டுவதற்குள், நான் இடத்தை காலி செய்து எழுந்து நின்று கொண்டேன்.

பதினாறு படங்களும் திரையிட்டு முடிந்ததும், மாலை ஆறரை மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி. கார்த்திக் சுப்பாராஜ், மாலன், லீனா, சாரு, லெனின் மற்றும் தனஞ்செயன் எல்லோரும் இந்த நிகழ்வை பற்றியும், குறும்படங்களின் முக்கியத்துவங்கள் பற்றியும், அதன் முன்னேற்றங்களை பற்றியும் எடுத்துரைத்து பேசினார்கள்.

சாரு, லீனா, தாங்கள் பார்த்த பதினாறு குறும்படங்களில் இருந்த குறை நிறைகளை மேலோட்டமாய் எடுத்துரைத்தார்கள். வணிக சினிமா சுற்றி இருக்கும் அத்தனையும் அழித்து வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கும்போது, குறும்படங்கள் தான் இலக்கியத்துடன் ஒரு நட்பை வளர்த்துக் கொள்கிறது என்பது ஆறுதலாய் இருப்பதாய் லீனா ஒரு கருத்தை முன் வைத்தார். அதோடு குறும்படங்களுக்கே உரிய மெலோட்ராமா, செண்டிமண்ட், க்ளிஷேடாய் இருப்பதையும், இவைகளில் எந்தப் படமும் இன்னும் ஒரு முழுமையான கலை வடிவம் என்று சொல்வதற்குரியதாய் இல்லை என்றும் குறிப்பிட்டார். சாரு, மாற்று சினிமா மேல் தனக்கு உள்ள பயத்தையும், இசையை சரியாய் உபயோகப்படுத்துங்கள், ஐரோப்பிய சினிமாக்களை பாருங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். அடுத்து பேச வந்த லெனின் அவர்கள் தன் அனுபவங்களை ஆக்கப்பூர்வமான மொழியில் ஒரு கொண்டாட்ட மனநிலையில் பேசி எல்லோரையும் அந்த மனநிலைக்கு கொண்டு சென்றார். வகுப்பில் மாணவனை கேள்வி கேட்டு எழுப்பும் ஆசிரியரை போல் தான் படத்தில் பார்த்து அவர் மனதில் பதிந்த உருவங்களை எழுப்பி எல்லோருக்கும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தார். எங்கள் குழுவினரை எழுப்பி நல்லதாய் சில வார்த்தைகள் பேசி விட்டு, "அதுக்காக அவங்களை தேர்ந்தேடுதேன்னு நெனைச்சுடாதீங்க!" என்றார்.

எந்தப் படம் வென்றது என்று சொல்லாமல், மேலோட்டமாய் எல்லோரும் நிறை குறைகளை சொல்லிச் சென்றது ஒரு புது அனுபவம். "தேவை இல்லாத இடங்களில் இசையை போட்டு ஏன் கொல்கிறீர்கள்?" என்று சாரு சொல்லும்போது அவர் எந்தப் படத்தை பற்றி பேசுகிறார் என்று தெரியாமல், அதை ரசிப்பதா, இல்லையா என்று ஒரே குழப்பமாய் இருந்தது. அது ஒரு பயங்கரமான த்ரில்லிங் அனுபவத்தை கொடுத்தது.

ஒரு வழியாய் அனைவரும் பேசி முடித்து, விருதுக்கான படங்கள் அறிவிக்கப்பட்டது. "கண்காணிப்பின் மரணம்", "ஆயா" ஆகிய படங்கள் முதல் இரண்டு இடத்தையும், "ஞமலி", "Article 39 (F)" சிறப்பு பரிசுகளை வென்றது. எங்களை பொருத்தவரை, பங்கு பெற்றதே முதல் வெற்றி! முதல் சுற்றில் வெற்றி பெற்றது அடுத்த வெற்றி. அதன் பிறகு, லெனின் போன்ற ஒரு ஆளுமை எங்களை அருகில் அமர்த்தி பேசுவது பெரிய வெற்றி. இதற்கு மேல் விருது வேறு கொடுத்தால் அதை போனஸாய் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்! "இதோடு எப்படி உங்களை விடுவது?" என்பது போல், சமீபத்தில் கார்த்திக் சில குறும்படங்களை ஒன்றிணைத்து வெளியிட்ட "பெஞ்சு டாக்கீஸ்" படத்தை போல் வெற்றி பெற்ற நான்கு படங்களையும் ஒன்றிணைத்து வெளியிட இருக்கிறார்கள். மிக விரைவில்; வெள்ளித் திரையில் - Article 39 (F)! இப்படித் திணற திணற...:-)







இத்தனை செலவு செய்து, இத்தனை உழைப்பை சேர்த்து, இப்படி ஒரு விருதை வழங்குவதால் தமிழ் ஸ்டூடியோவுக்கு ஒன்றுமே கிடைக்கப் போவதில்லை. "நாட்டுக்கு உழைக்கிறேன்!" என்றாலே வீட்டில் திட்டுவார்கள்; தமிழ் ஸ்டூடியோ குழுவினர் "நல்ல சினிமாவுக்கு உழைக்கிறேன், அதற்காக இத்தனை பணத்தை செலவழிக்கிறேன்!" என்று இத்தனை வேலைகளை செய்கிறார்கள் அவர்கள் வீட்டில் எப்படி அவர்களுக்கு சோறு போடுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. இதற்கெல்லாம் நன்றி என்ற ஒரு வார்த்தை க்ளிஷேடாய் போய் விடும் :) அதிலும் அருணிடம் சென்று நன்றி என்று என்ன ஆரம்பித்தாலும் மனிதர் சுட்டு பொசுக்கி விடுவதை போல பார்க்கிறார். எதுக்கு வம்பு?

கடைசியாய் ஒன்று சொல்கிறேன்,

பாலுமகேந்திரா நல்ல படங்களையும், நல்ல மாணவர்களையும் சினிமாவிற்கு விட்டுச் சென்றிருக்கிறார்  - உத்தம கலைஞன்! 
டைட்டிலே வழக்கமான மணிரத்னம் பாணியில், அழுது வடியாமல் இளமை கொப்பளிக்க, ஒரு ரகளையான அனிமேஷனில் ஆரம்பிக்கிறது. Refreshing!

முதல் சீனிலேயே ஹீரோ ஹீரோயின் அறிமுகம். பிறகு வழக்காமான க்ளிஷேடான மணிரத்ன அசட்டு வசனங்கள் [அந்த சர்ச்சில் இருவரும் பேசுவது! ஸ்வபா..] பிரகாஷ் ராஜ் ஒப்பனை அருமை. ஒரு வேளை இது தான் நிஜ பிரகாஷ் ராஜா? யார் இந்த லீலா சாம்சன்? என்ன ஒரு அருமையான பாத்திரம், என்ன ஒரு அற்புதமான நடிப்பு!

துல்கர் முகத்தில் என்னமோ ஒன்று சரி இல்லை, மூக்கா, முழியா தெரியவில்லை. மனிதரை எல்லா பெண்களுக்கும் பிடிக்கிறது. அவர் மாதிரி நான் ஹேர் ஸ்டையில் வைத்துக் கொண்டால், "ஏன்டா தலைய குருவிக் கூடு மாதிரி வச்சுருக்கே?" என்று கேட்பார்கள். அச்சு அசல் அப்படி தான் இருக்கிறது. அவருக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயம். நடிப்பதற்கு பெரிதாய் ஒன்றும் ஸ்கோப் இல்லை. "பெங்களூர் டேஸ்" படத்தில் எப்படி கேர்ஃப்ரீயாய் இருந்தாரோ அதே போல் தான் இதிலும் இருக்கிறார்.

நித்யா அழகாய் இருக்கிறார். கிடைமட்டமாய் [தமிழில் horizontal] வளர்ந்திருக்கிறார். அவருக்கும் துல்கருக்கும் கெமிஸ்ட்ரி செம! ஃபிசிகலாய் எதுனா இருக்குமோ? [கிசு கிசு]. நெருங்கி வரும் ஆதியிடம் "ஆதி, நோ சொல்லு, நோ சொல்லு" என்னும் தாரா பதிலுக்கு ஆதி, "நோ" என்றவுடன், "அப்போ கிட்ட வராதே!"  என்று குதூகலிக்கும் இடம் சோ ஸ்வீட்! பிறகு போர்வை போர்த்திக் கொண்டு துல்கரை அழ வைக்கும் அந்த இண்டர்வல் ப்ளாக், வழிய வழிய காதல் :) மணிரத்னம் என்னமாய் கொஞ்சுகிறார்! மணிரத்தினம், the lover returns!

கதையை பொருத்தவரை Old wine in new bottle. இளமை வழிய வழிய ஒரு காதல், பிரத்தியாரால் அவர்களுக்குள் பிரச்சனை, இளமை கடந்த மற்றொரு காதல் தம்பதிகள், அவர்களிடமிருந்து ஒரு வாழ்க்கை பாடம். சுபம். படத்தின் பெயரை அலைபாயுதே 2 என்று வைத்திருக்கலாம்.

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் காதலர்கள் பற்றிய கதை. கடைசியில் அவர்களும் கல்யாணம் தான் செய்து கொண்டார்கள் என்று ஏன் முடிக்க வேண்டும்? சேர்ந்து வாழ்பவர்கள் காதலில் விழுந்து விட்டால் கல்யாணம் செய்து கொள்ளத் தான் வேணுமா? அவர்கள் விருப்பப்படியே அவன் அமெரிக்க போகட்டும், அவள் பாரீஸ் போகட்டும். திரும்பி வந்து மீண்டும் சேர்ந்து வாழலாமே? இந்த காலத்தில் டச் சில் இருப்பாதா கஷ்டம்? எதற்கு ஒரு கல்யாணம்? தாலி? லைசன்சா? ஒழுங்கா திரும்பி என்கிட்டே வந்துரணும் என்று சொல்ற மாதிரியா, புரியவில்லை. முடிவில் உடன்பாடு இல்லை என்றாலும், படம் எனக்கு பிடித்துத் தான் இருந்தது. அலைபாயுதேவை விட எனக்கு இந்தப் படம் பிடித்தது!

படத்தின் மற்ற பலங்கள், இசை, கலை மற்றும் ஒளிப்பதிவு. என்ன ஒரு இளமை துள்ளும் இசை, அந்த பிரகாஷ் ராஜின் வீடு, அகமதாபாத் ஹோட்டல், நித்யாவின் ஹாஸ்டல் அருமையான ரசனை. நகரத்தில் இருக்கும் எல்லா அசிங்கங்களையும் மறைத்து அதை ஒரு சொர்க்கமாய் காட்ட மணிரத்னம், ஸ்ரீராமால் தான் முடியும் :) மும்பை போக ஆசையாய் இருக்கிறது!

முன்னாலேயே எழுதி இருக்க வேண்டிய பின்குறிப்பு: இந்த விமர்சனத்துக்கு மெளஸ் உபயோகப்படுத்தப்படவில்லை!
உத்தம வில்லன் வந்திருக்கும் இந்த சமயத்தில் என்னுடைய அடுத்த  (ஆறாவது) குறும்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி!

இந்தக் குறும்படத்தின் தலைப்பு வேறு தான். ஆனால், உத்தம வில்லன் பார்த்து, விமர்சனம் எழுதிய கையோடு, இந்த குறும்படத்தை பார்த்தால், "உத்தம வில்லன் - II" சரியான தலைப்பாய் தான் தோன்றுகிறது.

நீங்களே பார்த்து விட்டு முடிவு செய்து கொள்ளுங்கள் :)

வாழ்த்துக்களையும், வசவுகளையும் எதிர்நோக்கி....


கதை இந்நேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் சொல்லி விடுகிறேன். அப்போது தான் கமலிடம் உள்ள பிரச்சனைகளை பற்றி ஆராய முடியும். [எதுக்கும், மௌஸ் நகத்தாம...]

மனோரஞ்சன் ஒரு ஸ்டார். தோளுக்கு வளர்ந்த மகன் இருக்கும்போதும், தன் மாமனார் [கே. விஸ்வநாத்] தயாரிப்பில் பல மசாலா படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவன் வாழ்வை புரட்டிப் போடும் இரண்டு செய்திகள் அவனுக்கு கிடைக்கிறது.

ஒன்று, மூளையில் உண்டான கட்டியால் அவன் சீக்கிரமே இறக்கப் போகிறான்.
இரண்டு, அவனுடைய முன்னாள் காதலியின் மூலம் தனக்கு ஒரு மகள் இருப்பது தெரிய வருகிறது.

தன் மகளுடன் சமாதானம் செய்து கொண்டு, சாகும் தருவாயில் தன் குருநாதர் மார்கதரிசியுடன் [பாலசந்தர்] ஒரு நல்ல படத்தில் நடித்து விட வேண்டும் என்று முடிவு செய்கிறான். தன் சோகம் தன்னோடு போகட்டும், மக்கள் சிரித்துச் சிரித்து தன் கடைசி படத்தை ரசிக்க வேண்டும் என்று ஒரு காமடி படத்தை பண்ணலாம் என்று தன் குருநாதருக்கு வேண்டுகோள் விடுக்கிறார். அதன்படி உத்தம வில்லன் என்ற ஒரு சாகாவரம் பெற்ற ஒரு கூத்துக் கலைஞன் கதையை படம் எடுக்கிறார்கள்.

உலகத்தில் சாகாவரம் பெற்று வாழ ஒன்று முனிவனாய் இருக்க வேண்டும்; அல்லது, நல்ல ஒரு எழுத்தாளனாய் இருக்க வேண்டும், அல்லது, நல்ல ஒரு கலைஞனாய் இருக்க வேண்டும். நல்ல ஒரு கலைஞனுக்கு  என்றுமே சாவில்லை என்ற செய்தியுடன் படம் முடிகிறது.

படத்தில் +

  • கமலிடம் எப்போதும் இருக்கும், அள்ள அள்ள குறையாத பல்வேறுபட்ட கதைக் களன்கள். சாவு என்றால் என்ன? ஒரு நல்ல கலைஞனை அது என்ன செய்து விடும்? இந்தக் கேள்விகளுக்கு விடையாக, தன்னை நெருங்கி வரும் சாவிடம் செத்துக் கொண்டிருக்கும் ஒரு கலைஞன் சாகாவரம் கொண்ட கதாப்பாத்திரம் ஒன்றை ஏற்று நடிப்பது சாவையே எள்ளி நகையாடுவது போல் தானே? அத்தகைய பரந்துபட்ட விஷயங்களை திரைக்கதையில் லாவகமாய் புகுத்துவது. கமலுக்கு கை வந்த கலை!!
  • கமலுடைய commanding knowledge on various things & his observation skills! இவருக்கு புராணம் தெரிகிறது; சரித்திரம் தெரிகிறது; தெய்யம், கூத்து என்று பல்வேறு கலைகள் பற்றிய அறிவு இருக்கிறது; பல மனிதர்களையும், அவர்களின்  உடல்மொழியும் தெரிகிறது. இவ்வளவு பெரிய நடிகராக ஒரு கூட்டுக்குள் அடைபட்டுக் கொண்டே இத்தனை கதாபாத்திரங்களை எப்படி இவரால் படைக்க முடிகிறது என்று ஆச்சர்யமாய் இருக்கிறது. உதாரணத்திற்கு இந்தப் படத்தில் வரும் தெலுங்குக் குடும்பத்திற்கும் பல்ராம் நாய்டுவுக்கும் துளியும் சம்மந்தமில்லை.
  • ரஜினி லிங்காவில் தன் மகள் வயதில் உள்ள பெண்ணிடம் டூயட் ஆடுவார். கமல் எண்பதுகளில் தன்னுடன் ஆடிய ஊர்வசியை தனக்கு ஜோடியாகவும், தன் தோள் தொடும் உயரத்தில் ஒரு பையனை தன் மகனாகவும்,  பார்வதி மேனனை [கிழங்கு மாதிரி இருக்கிறார், அப்படி நடிக்கிறார்!] தன் மகளாகவும் கதை அமைக்கிறார். அதற்கு ஒரு சபாஷ்! [இதில் ஒரு உள்குத்து என்னவென்றால், ஊர்வசியை ஜோடியாய் போடும்அதே நேரத்தில் பூஜா குமார், ஆன்ட்ரியாவை எப்படி ஆதரிப்பது அது நமக்கு உறுத்தாமல் எப்படி பார்த்துக் கொள்வது என்றும் அவருக்குத் தெரியும். "கள்ளனைய்யா நீர்!"] 
  • என்ன தான் தன்னை முன்னிறுத்தி திரைக்கதை அமைத்தாலும், கதாநாயகனுக்கே உரிய நல்லத்தனத்தால் அவன் தன் முன்னாள் காதலி, தன் மனைவி என்று எல்லோரையும் நேசிக்கிறான் என்று காட்டினாலும், அவனுக்கும் பலவீனங்கள் உண்டு என்பது போல், அவனுக்கு வைத்தியம் செய்யும் அந்த இளம் டாக்டரிடம் ஒரு கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறான் என்று அமைத்த அந்த திரைக்கதையின் நேர்மை :)
  • படத்தின் வசனம். வசனம் என்று தனியாக டைட்டிலில் போட்ட மாதிரி தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாய் கமலின் வசனம் தான் என்று தோன்றுகிறது. உதாரணத்திற்கு மனோ மார்கதரிசியிடம் ஒரு படம் பண்ணித் தரச் சொல்லிக் கேட்கும் இடம்.
  • தன் குருநாதரை இந்தக் கதையில் அழகாய் நுழைத்து, அதில் அவரை அவராகவே இருக்க விட்டது. பிற்காலத்து எம்ஜியார்  படங்களிலும் சரி இப்போதைய ரஜினி படங்களிலும் சரி, படத்தில் வரும் எந்தக் கதாப்பாத்திரமும் அவர்களை "டா" போட்டு கூப்பிட முடியாது. கமலும் அத்தகைய இடத்தில் இருப்பவர் தான். இருந்தாலும், தன்னை ஆரம்ப காலங்களில் அவர் எப்படி கூப்பிட்டாரோ, அப்படியே படத்திலும் அவரை "டேய்", "ராஸ்கல்" என்றெல்லாம் கூப்பிட வைத்தது நல்ல விஷயம். குருவுக்கு தன் சிஷ்யன் எவ்வளவு உயரம் சென்றாலும் அவருக்கு அவன் சிஷ்யன் தானே? அது தானே யதார்த்தம்.
  • நாம் நடிகையர் திலகம் என்று சாவித்ரியை கொண்டாடிவிட்டு, அதற்கு இணையான ஊர்வசிக்கு தமிழில் எப்போதும் அசட்டு கதாப்பாத்திரங்களாய் கொடுத்து வீணடித்துவிட்டோம். புருஷனை விட்டால், எந்த உலக அறிவும் இல்லாத ஒரு வசதியான தெலுங்கு அம்மாவை அப்படியே அச்சு அசலாக கண் முன் நிறுத்துகிறார்.
  • சொக்குவாக வரும் எம் எஸ் பாஸ்கர் மற்றொரு பலம். சிவாஜியின் காலத்தில் எதற்கு அலட்டிக் கொள்ளாமல் நடித்த வீ. கே. ராமசாமியை கண்டுகொள்ளாதது போல், கமல் காலத்தில் எம் எஸ் பாஸ்கர், இளவரசு போன்றவர்களை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது. அத்தனை அற்புதமான நடிகர்கள்.

படத்தில் -


  • கமலிடம் எப்போதும் இருக்கும், அள்ள அள்ள குறையாத பல்வேறுபட்ட கதைக் களன்கள்! தனக்கு தெரிந்ததை எல்லாம் ஒரே படமாய் எடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறார். மனோரஞ்சனின் கதையை எடுத்துக் கொள்வோம். சாகப் போகும் ஒரு ஸ்டார். அவன் திரும்பி பார்க்கும் தருணம். சரி செய்ய நினைக்கும் விஷயங்கள். தான் புதிதாய் கண்டெடுத்த மகள், அவர்களுக்கான உறவு, புரிதல் என்று அதை மட்டுமே ஒரு உணர்ச்சிகரமான படமாய் எடுக்க முடியும். இதற்குள் தேவையே இல்லாமல் ஒரு காமெடி கதை என்று ஒரு பீரியட் கதையை நுழைத்து, நிறைய்ய தமிழ் கலந்து, தெய்யத்தையும் , கூத்தையும் கலந்து பியுஷன் என்ற பெயரில் ஒரு கூத்தடித்து...அடடா...
  • வழக்கம் போல படம் பூராவும் வியாபித்து இருப்பது. மற்றவர்களுக்கும் கொஞ்சம் ஸ்கோர் செய்ய விட வேண்டும். நான் பார்த்த வரை, ஊர்வசிக்கு கொஞ்சம் தருகிறார். இருந்தாலும் பத்தவில்லை.
  • அந்த பீரியட் கதை. நான் இதுவரை பார்த்த கமல் படங்களில் இப்படி ஒரு மொக்கையை பார்த்ததில்லை. கமலுக்கா  இப்படி காமடிக்கு பஞ்சம் வந்து விட்டது என்று தோன்றியது. ஒவ்வொரு காட்சியும் பொறுமையை மிகவும் சோதித்தது.
  • பீரியட் கதையின் ஒப்பனை. இன்று குறும்படங்கள் எடுக்கும் சுண்டான்களே முழு நீள படங்களை போல் அவ்வளவு சிரத்தையாய் மெனக்கெட்டு ஒவ்வொன்றாய் பார்த்து பிரமாதமாக அழகாக எடுக்கிறார்கள். பல வருடங்களாக பழம் தின்று கொட்டை போட்ட கமலுக்கு ஒரு நல்ல விக், ஒட்டு மீசை கூடவா கிடைக்கவில்லை? இல்லை, அப்படி இருந்தால் தான் அது பார்ப்பதற்கு காமடியாக இருக்கிறது என்று படக் குழுவினர் நினைத்திருந்தால் எனக்கு அழுகை தான் வருகிறது!!! டைரக்டர் சார், இதையாவது பார்த்திருக்கலாமே?
  • பீரியட் கதையின் கிராபிக்ஸ். படத்தின் ஆரம்பத்தில் "இந்தப் படத்தில் எந்த மிருகத்தையும் துன்புறுத்தவில்லை" என்று போட்டார்கள். அப்போதே நான் யோசித்திருக்க வேண்டும். எலி முதல் புலி வரை எல்லாவற்றையும் கிராபிக்ஸில் வன்கொடுமை செய்து பார்வையாளர்களான நம்மை தான் துன்புறுத்திவிட்டார்கள் !
  • பூஜா குமார். அமெரிக்க வனப்பு. அமச்சூர் நடிப்பு. விலங்கிட்டு பைத்தியமாய் இருப்பவர் நல்ல பாய்கட்/ஸ்பைக் கட் எல்லாம் வைத்து, நல்ல உடை உடுத்தி நல்ல கும்மென்று இருக்கிறார். அவர் என்ன செய்வார் பாவம். ஆட்டையிலேயே  சேர்த்துக் கொள்ள முடியாது.
  • படத்தின் வசனம் பெர்சனலாய் எனக்குப் பிடித்தது. ஆனால் ஜில்லா, வீரம் போன்ற காவியங்களை போற்றி வாழும் நம் தமிழ் மக்களுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர். 

உதாரணத்திற்கு அதே "மனோ மார்கதரிசியிடம் ஒரு படம் பண்ணித் தரச் சொல்லிக் கேட்கும் இடம்."

"உனக்கு நான் எதற்கு படம் பண்ண வேண்டும்?" என்று மார்கதரிசி கேட்கும் இடத்தில் மனோ பேச வேண்டிய வசனம், "எனக்கு மூளையில கட்டி, செத்து போயிடுவேன் சார், கடைசியா உங்களோட ஒரு படம்.!"இந்த மாதிரி ஒரு ரெண்டு வரி தான். ஆனால், கமல் அந்த இடத்தில் இப்படி ஒரு வசனம் வைத்திருக்கிறார்!

"என்னை மாதிரி திமிரான ஆளு சார்.
நாளைக்குகிறது future ல  எங்கேயோ தூரத்துல இருக்குன்னு                                       நெனைக்கிறவன். திடீர்னு எல்லாத்தையும் பொரட்டி போட்ற மாதிரி ஒரு             நியுஸ் வருது. well, actually ரெண்டு news வருது! காதல், பாசம், thank you,                     sorry இதெல்லாம் சொல்றதுக்கே நேரம் இல்லைன்னு புரிய                                         ஆரம்பிக்குது."

கமல் புத்திசாலியாய் இருக்கலாம். எல்லோரும் கமல்கள் இல்லையே!

மற்றபடி ஜிப்ரான் இசையில் "காதலால்", "இரணியன்" பாட்டு மிளிர்கிறது.

என்னை பொறுத்தவரை கமல் பேசாமல் சில காலம், "வேட்டையாடு விளையாடு" மாதிரி பிறர் கதையில் நடிப்பை மட்டும் தரக்கூடிய வேலையை செய்யலாம்! கொஞ்சம் ஆசுவாசமாய் இருக்கும்!        

இன்னொரு பால்வெளியில்
நம் சூரியனின் பெயர் நட்சத்திரம்
தான் இல்லையா?



சில பெண்களுக்கு
தாங்கள் "பெரிய" பெண்கள்
என்று நினைப்பு!



முகம் புதைந்து அழுகிறேன்
சோகத்தில் ஒரு சுகம்.
சோகத்தில் என்ன சுகம் வேண்டி இருக்கிறது?



பரஸ்பர அன்பில் நெகிழ்ந்தேன்
பார்வையை கண்ணீர் மறைக்க
உலகம் தெளிகிறது



"சடசடவென்று" வரியை ஆரம்பிக்க வேண்டும்
"மடமடவென்று" எழுதி முடித்து விடலாம் தான்!
வழக்கமான இரட்டைக் கிளவி கூடாது;
இது அடுக்குமா? ஐயோ ஐயோ!!

அக்கினிப் பிரவேசம்

“இது யாருக்கும் தெரியக் கூடாது கொழந்தே! தெரிஞ்சா அதோட ஒரு குடும்பமே அழிஞ்சு போகும். நம் வீட்டிலேயும் ஒரு பொண் இருக்கே, அவளுக்கு இப்படி ஆகி இருந்தா என்ன பண்ணுவோம்னு யோசிக்கவே மாட்டா. பரம்பரை துவேஷம் மாதிரி குலத்தையே பாழ் பண்ணிடுவா... மத்தவாளைச் சொல்றேனே. இன்னொருத்தருக்குன்னா என் நாக்கே இப்படிப் பேசுமா? வேற மாதிரித்தான் பேசும். எவ்வளவு பேசி இருக்கு!” என்று புலம்பிக் கொண்டே கொடியில் கிடந்த துண்டை எடுத்து அவள் தலையைத் துவட்டினாள். தலையை துவட்டியபின் அவளை முகம் நிமிர்த்திப் பார்த்தாள். கழுவித் துடைத்த பீங்கான் மாதிரி வாலிபத்தின் கறைகள் கூடப் படிவதற்கு வழியில்லாத அந்தக் குழந்தை முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்து மகளின் நெற்றியில் ஆதரவோடு முத்தமிட்டாள். “நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே. உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி, ஜலம் இல்ல. நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே. நீ பளிங்குடீ. பளிங்கு.. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு. என்னடீ அப்படிப் பார்க்கறே? தெரிஞ்சுட்டா என்ன பண்றதுன்னு பார்க்கறியா? என்னடி தெரியப் போறது? எவனோடயோ நீ கார்லே வந்தேன்னுதானே தெரியப் போறது? அதுக்கு மேலே கண்ணாலே பார்க்காததெப் பேசினா அந்த வாயைக் கிழிக்க மாட்டாளா? ம்... ஒண்ணுமே நடக்கலேடி, நடக்கலே! கார்லே ஏறிண்டு வந்ததை மட்டும் பார்த்துக் கதை கட்டுவாளோ? அப்பிடிப் பார்த்தா ஊர்லே எவ்வளவோ பேரு மேல கதை கட்ட ஒரு கும்பல் இருக்கு. அவாளே விடுடி.. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். உன் மனசிலே ஒரு கறையுமில்லே. நீ சுத்தமா இருக்கேன்னு நீயே நம்பணும்கிறதுக்குச் சொல்றேன்டி... நீ நம்பு.. நீ சுத்தமாயிட்டே, நான் சொல்றது சத்யம், நீ சுத்தமாயிட்டே....? ஆமா - தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தட்வை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம்... அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக் கூடப் போறோமே; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார் - எல்லாம் மனசுதான்டி... மனசு சுத்தமா இருக்கணும்... ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாத துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்ன்னு சொல்லுவா, ஆனா அவ மனசாலே கெட்டுப் போகலை. அதனாலேதான் ராமரோட பாத துளி அவ மேலே பட்டுது. எதுக்குச் சொல்றேன்னா... வீணா உன் மனசும் கெட்டுப் போயிடக் கூடாது பாரு.. கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு.. உனக்கு ஒண்ணுமே நடக்கல்லே..”

புதிய வார்ப்புகள்

மனிதனே ரொம்பப் பழமையான உலோகம்தான். காலம்தான் அவனைப் புதிது புதிதாக வார்க்கிறது. வாழ்க்கையின் அந்த நிர்ப்பந்தத்துக்கு முடிந்தவர்கள் வளைகிறார்கள். வளைய முடியாதவர்கள் உடைந்து நொறுங்குகிறார்கள். 

வளைந்தாலும் சரி, உடைந்தாலும் சரி, காலம் புதிது புதிதாய் மனிதனை வார்த்துச் செல்கிறது. அந்தக் குடும்பம் வாழ்க்கையின் வார்ப்புக்கேற்ப வளைந்திருக்கிறதா, உடைந்திருக்கிறதா? அல்லது, இரண்டுமே நிகழ்ந்திருக்கிறதா? 

டாக்டர் வந்தபின் தெரியும்! 

யுகசந்தி

அதோ, காலை இளவெயிலில், சூடில்லாத புழுதி மண்ணில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் பதிய ஒரு பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்துக்கொண்டிருக்கும் பாட்டியின் தோற்றம்.....

வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக்கொள்ளப் பயணப்படுவதென்றால் ?......

ஓ ' அதற்கு ஒரு பக்குவம் தேவை '

சுயதரிசனம்

"அறுபது வருஷமா அர்த்தமில்லாமல் பேத்திண்டே வாழ்ந்திருக்கேன்! என்னைப்போல மனுஷாளாலேதான் பிராம்மண தர்மமே அவமானப் பட்டுடுத்து. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் சந்தியாவதனம் பண்றச்சேயெல்லாம் ஏதோ குத்தம் செய்யறமதிரி ஒரு உறுத்தல். பொய்யாவே வாழ்ந்துட்டமாதிரி ஒரு புகைச்சல்... சாஸ்திரங்கள், வேதங்கள் எல்லாம் இந்தக் காலத்தினாலே மதிப்பிழந்து போயிடுத்துன்னு நான் சொல்லமாட்டேன். அதுக்கு உரிய மதிப்பை, மரியாதையை நாமே உணர்ந்துக்கலேங்கறதுதான் எனக்குத் தெரியற உண்மை. இந்த ஒரு மாசமாத்தான் நானே ஒரு மனுஷன்னு எனக்குத் தெரியறது. இதுக்கு முன்னே நாடகத்திலே வர்ரமாதிரி நான் வேஷம் போட்டுண்டு, யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களைப் பேசறமாதிரி மந்திரங்களை மனசிலே ஒட்டாம உதட்டிலே ஒட்டிண்டு திரிஞ்சேன். 

... எனக்குத் தெரிஞ்சவா இப்ப யாராவது என்னெப் பார்த்தா அவாளுக்குத் தெரிஞ்ச கணபதிசாஸ்திரி நான்தான்னு சொன்னால் கூட, நம்பவேமாட்டா. எங்கேயாவது கண்ணாடியிலே என் உருவம் திடீர்னு தெரியறப்போ எனக்கே என்னை நம்ப முடியலே. ஆமாம்; என் மனசிலே இருக்கிற என் உருவம் குடுமி வச்சுண்டிருக்கு; பத்தாறு தரிச்சிண்டிருக்கு... அறுபது வருஷ நெனைப்பு அவ்வளவு சீக்கிரம் மாறிடுமா? ம்... நினைப்புத்தான்... 

இப்ப நான் பிராமணனும் இல்லே, சாஸ்திரியும் இல்லே. எனக்கு, என் மனசாட்சிக்குத் துரோகம் செஞ்சுக்காத ஒரு நேர்மையான மனுஷன் நான்! நான் பொறந்த குலத்தை நான் ரொம்பவும் மதிக்கிறேன். ரொம்பப் பெரியவாள் செய்ய வேண்டிய காரியத்தை எல்லாம் போலித்தனமா நான் செஞ்சுண்டு இருக்கறது, அவாளை நான் மதிக்கிறது ஆகாது. எல்லாரும் என்னைக் 'கிறுக்கு'ன்னுதான் சொல்லுவா இப்பவும். சொல்லட்டுமே... அன்னிக்கி, குளத்தங்கரையிலேருந்து வந்த கோலத்தைப் பார்த்தவா எனக்குப் பயித்தியம் பிடிச்சுடுத்துன்னுதான் நெனச்சுண்டு இருப்பா. சுந்தர கனபாடிகள் மாதிரி இருக்கிறவாளுக்கு புரோகிதம் கெளரவமான ஜீவிதம்தான். அவன் என்னை என்னதான் வைதிருந்தாலும், அவரை நினைச்சு நான் நமஸ்காரம் பண்றேன். என் கண்ணைத் திறந்துவிட்ட குரு அவர்தான். இந்த உலகமே அவர் ரூபத்திலே வந்து என்னைப் பிடிச்சுண்டு 'நீ பிராமணனா சொல்லு, இந்த மந்திரத்திற்கு அர்த்தம் தெரியாதவன்... நீ பிராமணனா சொல்லு'ன்னு உலுக்கின மாதிரி இருந்தது... அவர்தான் எனக்கு பிரம்மோபதேசம் செஞ்சு வச்சு பூணூல் போட்டவர்.... அவர் சொல்லிக் கொடுத்ததைத்தான் நான் இத்தனை காலமா சொல்லிண்டு இருந்தேன். அது தப்புன்னு அவரே சொல்லிட்டார். எப்படிப் பார்த்தாலும் அவர்தான் என் குருநாதர். அவரை நான் நமஸ்காரம் பண்றேன். 

இப்போ நான் கிராப்பு வச்சுண்டுட்டேன். சட்டை போட்டுண்டென், செருப்பு போட்டுண்டேன். இதெல்லாம் நன்னாத்தான் இருக்கு. எனக்கு நெனச்சுப் பார்த்தா சிரிப்பு சிரிப்பா வரது. சாஸ்திரிகள்னா செருப்புப் போட்டுக்கப்படாதாமே... ஆனா சைக்கிள்லே மட்டும் போலாமாம். என்னோட சைக்கிள் - நாற்பது ரூபாய்க்கு சிவராமன்தான் வாங்கித் தந்தான். வாங்கும்போதே அது கிழம்... இப்ப யாரு அதை உபயோகப் படுத்திண்டிருப்பா? சிவராமனா? மணியா?... கிழங்களும் உபயோகப்படுமே, சாகற வரைக்கும்." 

அக்ரஹாரத்துப் பூனை

கடா மீசைக்காரன் கிட்டக்கே வந்துட்டான். நான் ஒரு குட் மார்னிங் வச்சேன். அவனும் எனக்கு ஒரு சலாம் போட்டானே! 

அவன் என் பக்கத்திலே வந்து இரண்டு காலையும் தரையிலே ஊணிண்டு சைக்கிள்லேருந்து எழுந்திருக்காமலே நிக்கறான். அம்மாடி... அவன் எவ்வளவு உசரம்! நான் அவனை அண்ணாந்து பார்த்துச் சொல்றேன்: 

"ஒரு சின்ன உதவி..." 

"அதென்ன கோணியிலே?" - அவன் குரல் கிருஷ்ண லீலாவிலே வர்ற கம்சன் குரல் மாதிரி இருந்தது. 

"பூனை... ரொம்ப லூட்டி அடிக்கறது. அதுக்காக அதை கொன்னுடறதுக்காகப் பிடிச்சுண்டு வந்திருக்கேன்." 

"நீயேவா புடிச்சே?" - நான் பெருமையா தலையை ஆட்டறேன். அவன் மண்டபத்திலே ஒளிஞ்சிண்டிருக்கிற பையன்களையெல்லாம் ஒரு தரம் பார்க்கறான். என்னையும் பார்க்கறான். நான் அந்தக் காக்கிப் பைக்குள்ளே இருக்கற கத்தியோட பிடியையே பார்க்கறேன். 

"வெட்டறதுக்குக் கத்தி வேணுமா?"ன்னு அவன் என்னைப் பார்த்துக் கேட்கிறான். 

"ஊஹீம்.... நீங்கதானே ஆடெல்லாம் வெட்டுவேள். அதனாலே நீங்களே இதை வெட்டணும்." 

"ஓ!"ன்னு யோசிச்சிண்டே அந்தக் கத்தியை எடுக்கறான். பெரிய கத்தி! விளிம்பிலே கட்டை விரலை வெச்சு கூர் பார்த்துண்டே அவன் சொல்றான்: 

"பூனையை இதுவரைக்கும் நான் வெட்டினதே இல்லே... ஏன்னா, நாங்க பூனையைச் சாப்பிடறதுமில்லே... நான் வெட்டித் தரேன். நீங்க சாப்பிடுவீங்களா?" 

"உவ்வே!... வெட்டிக் குழியிலே புதைச்சுடலாம்." 

"அப்பத்தான் பாவம் இல்லே. நான் எதுக்கு ஆட்டை வெட்டறேன்? எல்லாரும் அதைத் தின்றாங்க. அவங்க சாப்பிடலேன்னா நான் வெட்டவும் மாட்டேன். நான் ஆடு வெட்டறப்ப நீ பார்த்திருக்கிறியா?" 

"ஓ, பார்த்திருக்கேனே. நீங்க ஏதோ மந்திரம் சொல்லி வெட்டுவீங்க. அதே மந்திரத்தைச் சொல்லி இதையும் வெட்டுங்க. அப்போ பாவமில்லே." 

"மந்திரம் சொல்றது அதுக்கில்லே தம்பி. ஒரு தொளிலை ஆரம்பிக்கறப்ப ஆண்டவனைத் தொளுவறது இல்லையா? அதுதான். வெட்டறது விளையாட்டு இல்லே தம்பி. அதுதான் என் குடும்பத்துக்கெல்லாம் கஞ்சி ஊத்தற தொளில். அதுக்காவ உங்கிட்டே காசு கீசு கேக்கலே. நான் வெட்டறேன். யாராவது சாப்பிட்டா சரி. எதையும் வீணாக்கக் கூடாது. வீணாக்கினா அது கொலை; அது பாவம்! என்னா சொல்றே?" 

"இன்னிக்கு மட்டும் ஒரு தடவை விளையாட்டுக்காக இந்தப் பூனையை வெட்டுங்களேன்." 

அவன் லேசாச் சிரிச்சு, என் மோவாயை நிமிர்த்தி, கையிலே ஏந்திண்டே சொன்னான்: (அவன் விரல் எல்லாம் பிசுபிசுன்னு இருந்தது.) 

"வெளையாட்டுக்குக் கொலை பண்ணச் சொல்றியா, த்சு... த்சு...! வெளையாட்டுக்கு வெட்ட ஆரம்பிச்சா, கத்தி பூனையோட நிக்காது தம்பி. நான் உன்னைக் கேக்கறேன்? விளையாட்டுக்கு உன்னை வெட்டினா என்ன?..." 

எனக்கு உடல் வெடவெடக்கிறது. 

"ம்... அந்தப் பூனை விஷமம் பண்றதே?" 

"நீ வெஷமம் பண்றது இல்லியா? பூனைன்னா வெஷமம் பண்ணும். வெஷமம் பண்ணாத்தான் பூனைன்னு பேரு. அதே மாதிரி நீயும் வெஷமம் பண்ணுவே. சின்னப் பிள்ளைங்கன்னா வெஷமம் பண்ணும்தான். பூனையும் வெஷமம் பண்ணட்டுமே! வீட்டிலே அடுப்பங்கரையைப் பூட்டி வெக்கச் சொல்லு"ன்னு சொல்லிண்டே என் கையிலே இருந்த கோணியைப் பிரிச்சு உதறினான். ஒரே ஜம்ப்! திரும்பிப் பார்க்காமே ஓடிட்டுது பூனை. பையன்களெல்லாம் சிரிச்சாங்க. கடா மீசைக்காரனும் சிரிச்சான். நானும் சிரிச்சேன். 

அன்னிக்கு ராத்திரியெல்லாம் நான் அழுதேன். பூனை தப்பிச்சுப் போயிடுத்தேன்னு இல்லே... நான் விளையாட்டா கொலை செஞ்ச வளையல் பூச்சி, மரவட்டை, தும்பி, ஓணான், பெருச்சாளி, பாவம்! அந்த நாய்... எல்லாத்தையும் நெனைச்சுண்டு அழுதேன்... 

நான் இப்ப அந்த அக்ரஹாரத்திலே இல்லை. இப்பவும் அந்த அக்ரஹாரத்திலே அந்த மாதிரி ஒரு பூனை இருக்கும்! இல்லையா? 

புது செருப்புக் கடிக்கும்

கல்யாணம் முடிந்து தன்னோடு புறப்பட்டபோது அவள் ஆரம்பித்த அழுகையை இன்னும் நிறுத்தவில்லை என்றும், அவளுக்குத் தன்னோடு வாழ்வதில் சந்தோஷமில்லை என்றும், தன்னை அவள் அவமதிப்பதையும், இன்று கூடத் தலையில் அடித்துக் கொண்டதையும் அவன் வாய் ஓயாமல் வத்ஸலாவைப் பற்றிப் பேசித் துயரத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தான். 

தையல் மிஷினுக்குப் பக்கத்திலிருந்து எண்ணெய் போடுகிற 'ஆயில் கேனை' எடுத்துக் கால் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையேயுள்ள புண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டே, அவன் புலம்புவதையெல்லாம் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் கிரிஜா. 

"பாவங்கோ அது. அறியாப் பொண்ணு தானேங்கோ?" என்று அவள் சொன்னதைக் கேட்டு அவன் ஒன்றும் புரியாமல் தலைநிமிர்ந்து அவளைப் பார்த்தான். 

"உங்களைக் கல்யாணம் பண்ணிக்கினதுனாலேயே உங்களுக்குச் சமமா ஆயிடுவாங்களாங்கோ அவுங்க?... அப்பா அம்மாவுக்கு ரொம்பச் செல்லப் பொண்ணுன்னு நீங்க தானேங்கோ சொல்லியிருக்கீங்கோ? எல்லாரையும் விட்டுட்டு வேற ஒரு ஊரிலே தனியா உங்களேட வந்து வாழறப்ப அந்தக் கொழந்தை மனசு எப்படிங்கோ இருக்கும்? அதெப் புரிஞ்சு நீங்கதான் - அட்ஜஸ்ட் பண்ணி நடக்கணும். நீங்க 'டிரெய்ன்ட்' இல்லீங்களா? ஒரு ஆம்பிளைங்கறதே அவுங்களுக்குப் புதுசு இல்லீங்களா? பயமா இருக்கும்ங்கோ; அருவருப்பாகூட இருக்கும்ங்கோ... நான் உங்ககிட்ட அப்படியெல்லாம் இருந்தேன்னா அதுக்குக் காரணம் என்னாங்கோ? நான் 'எக்ஸ்பீரியன்ஸ்ட்' இல்லீங்களா? யாருங்கோ 'வய்·பா' இருக்கிறதுக்கு டிரெய்ன்ட் ஹாண்ட் கேக்கறாங்கோ? இப்ப சொல்றீங்களே - என்னையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்னு - அப்ப ஏங்க அது தோணலே? நான் ஏற்கனவே 'டிரெய்ன்ட்'ங்கற 'டிஸ்குவாலி·பிகேஷன்' தாங்கோ அதுக்குக் காரணம்! அதனாலே, உங்க வய்·பை விட நீங்க அனுபவஸ்தர்ங்கிறதை நெனைப்பிலே வெச்சிக்கணும். அவுங்க கொழந்தைன்னு புரிஞ்சுக்கணும். நான் உங்ககிட்டே இருந்த மாதிரி நீங்க அவுங்ககிட்டே இருக்கணும். அப்படித்தான் போகப் போக எல்லாம் சரியாப் போயிடுங்கோ..." என்று அவள் எல்லாவற்றையும் லேசாக்கி விட்டதை நினைத்து அவன் ஆச்சரியப்பட்டான். இவளிடம் வரவேண்டுமென்று தான் நினைத்தது எவ்வளவு சரியானது என்று எண்ணினான். 

அவன் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததால் நிறுத்தியிருந்த - கால் விரலிடுக்கில் எண்ணெய் விடுகிற - காரியத்தில் மறுபடியும் முனைந்தாள். 

"என்ன காலிலே?" என்று அவள் அருகே நகர்ந்து குனிந்து பார்த்தான் அவன். 

"போன வாரம் புதுசா செருப்பு வாங்கினேன். கடிச்சிடுச்சுங்கோ. மிஷின் தைக்கறதிலே விரல் அசையறதனாலே சீக்கிரம் ஆற மாட்டேங்குது" என்று சொல்லிக் கொண்டே இருந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புடன் சொன்னாள்: "பார்த்தீங்களாங்கோ... செருப்புக்கூடப் புதுசா இருந்தா கடிக்குதுங்கோ... அதுக்காகப் பழஞ்செருப்பை யாராவது வாங்குவாங்களாங்கோ?" 

அவள் சிரித்துக் கொண்டுதான் சொன்னாள். அவன் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதுவிட்டான். 

அந்தக் கோழைகள்!

“ஒரு உயிரைக் கொல்லக் கூடாது; அதைவிட எனது வைத்திய சாஸ்திரத்துக்கோ உனது பெண்மைக்கோ அவமானம் எதுவுமில்லை. உன் குழந்தைக்கு ஒரு அப்பன் தானே வேண்டும்? அந்த அப்பனின் பெயர் டாக்டர் ராகவன் என்று சொல். எந்த நிலையிலும் நான் இதை மறுக்க மாட்டேன். இது சத்தியம்…” என்று ஒரு ஆவேசத்தில் உதடுகள் துடிக்க அவன் கூறிய போது அவள் வாய் பொத்திப் பிரமித்து நின்றாள். இருவரும் ஒருவரை ஒருவர் மௌனமாய்ச் சில வினாடிகள் பார்த்துக் கொண்டனர். தான் சொன்ன வார்த்தைகளை தான் சொன்ன முறையில் தொனித்த ஆவேச முறையில் – இவளது உணர்வு நம்ப மறுக்கிறது என்று புரிந்து கொண்ட ராகவன், மிகவும் சாதாரணமான முறையில் அவளுக்குத் தன் கருத்தை விளக்கினான்: “இது கருணையோ பச்சாதாபமோ இல்லே. இதிலே கொஞ்சம் சுயநலம் கூட இருக்கு. நாளைக்கு இந்த ஊர் பூரா, என் சிநேகிதர்கள் பூரா உன்னையும் என்னையும் இணைச்சுக் கதை பேசுவாங்க, பேசட்டும். என்னைப்பத்தி நாலு பேரு அப்படிப் பேசறதைக் கேக்கணும்னு எனக்கும் ஆசைதான்…” என்று கூறி வெறித்துப் பார்த்து அந்தக் காட்சிகளைக் கற்பனை செய்தான் ராகவன். தகுதியற்ற தன் மீது இவர் இவ்வளவு அன்பு கொண்டிருப்பதை இத்தனை காலம் அறியாமல் இப்படிக் கெட்டழிந்து போனோமே என்ற ஏக்கத்துடன் விம்மியவாறே அவன் காலடியில் தன்னைச் சமர்ப்பித்துக்கொண்டு அவள் கெஞ்சினாள்: “நீங்கள்தான் என் தெய்வம். உங்க காலடியிலேயே உங்களுக்காக நான் உயிர் வாழ்வேன். இப்படிப் பட்ட ஒரு உத்தமருக்கு எத்தனை கொழந்தை பெத்தாலும் இந்த உடம்பு தாங்கும்…” அவள் வெளியே சொன்ன, தன்னுள் முனகிய அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் முகத்தில் ஊசி தைப்பதுபோல், நாசியும் உதடுகளும் துடிதுடிக்க ராகவன் தொண்டை கரகரக்க குழந்தைபோல் அழுதான். ஒரு ஆணின் கனத்த குரலில் வெடித்து அமுங்கிய அந்தக் குமுறலைக் கேட்டு அவள் தேகாந்தமும் நடுங்கப் பிரமித்து நின்றாள். அவன் முகத்தை மூடிக் கொண்டு திரும்பி நின்று கழுத்து நரம்புகள் புடைக்க, தோளும் புஜங்களும் குலுங்க, சிதறிப்போன தனது உணர்ச்சிகளை எல்லாம் ஒன்று சேர்த்துத் தன்னைத் தானே சாந்தப்படுத்திக் கொண்டு மீண்டும் அவள் எதிரே திரும்பி நின்றான். “ராதா! நிறைவேற முடியாத ஆசையைத் தூண்டி விட்டுட்டேன். மன்னிச்சிடு. இப்ப உன் வயத்திலே இருக்கற குழந்தைக்கு மட்டும்தான் நான் அப்பனாக இருக்க முடியும், நீ நெனைக்கிற மாதிரி எனக்கு…” அதை எப்படிச் சொல்வதென்று தெரியாமல் தவித்து அவள் செவியருகே குனிந்து ‘அதை’ அவன் ரகசியமாய் கூறினான். – அந்த விஷயத்தை… அவனது வழக்கமான சுபாவப்படி – பச்சையாக அவனால் சொல்ல முடியவில்லை. பிறரைப் பற்றிய அவன் கருத்துப்படி, அதில் இப்போது அவனுக்கே தான் என்ற தன்மையும், தன்மயமான நோக்கும், இது இயற்கையின் இயல்பு என்ற பொதுவான எண்ணமும் அற்றுப்போன சுயமான உறுத்தலுமே எஞ்சி நின்றது. தனது செவியில் கூறிய அந்த ரகசியமான உண்மையைக் கேட்டு அவனது முகத்தைச் சேர்த்து அணைத்துக் கொண்டு “இல்லை இல்லை” என்று பிரகடனம் செய்வது போலப் பலமாக முணுமுணுத்தாள் அவள். இருளில் வந்து தன்னோடு உறவு கொண்டு ஒரு மாயைபோல் மறைந்து போன முகமறியாத அந்தக் கோழைகளைப் பற்றி அவள் எண்ணிப் பார்த்தாள்! தன் ஆத்மாவிலே கலந்து தன்னைப் புனிதப்படுத்தித் தன்னோடு நெருங்கி இருக்கும் இந்தப் புதிய உறவின் முகத்தை இரண்டு கைகளிலும் ஏந்தி ஆர்வமுடன் கண்ணெதிரே பார்த்தாள். அந்தக் கோழைகளை எல்லாம் விட இந்தத் தைரியமிக்கவன் மகத்தான ஆண் சிங்கம் என்றே அவளுக்குத் தோன்றியது. தனது இரண்டு கரங்களாலும் ஏந்திப் பிடித்த அந்த முகத்தில் தனது பெண்மை இதுவரை அனுபவித்தறியாத பௌருஷத்தின் தேஜஸைத் தரிசித்த நிறைவில் பெருமிதமும் திருப்தியும் கொண்டு அவனை அவள் ஆரத் தழுவிக் கொண்டாள். ராதாவின் காதோரத்தை ராகவனின் வெப்பமான கண்ணீர் நனைத்தவாறிருந்தது.

ஜிகர்தண்டா புகழ் இயக்குனர் "கார்த்திக் சுப்பாராஜ்" தொடங்கி இருக்கும் "ஸ்டோன் பெஞ்ச்" நிறுவனத்தின் மூலம் ஆறு குறும்படங்களை தேர்ந்தெடுத்து ஒரு திரைப்படமாக நேற்று சில திரை அரங்கில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதன் வரவேற்பை பொறுத்து அடுத்து அடுத்து 2வது பெஞ்சு, 3வது பெஞ்சு என்று வெவ்வேறு குறும்படங்களை திரையிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு புதுமை. 2003 லேயே நான் இத்தகையை முயற்சிகளை ஹிந்தி சினிமாவில் பார்த்திருக்கிறேன். தமிழுக்கு புதுசு! இந்தக் காலத்தில் யாருக்கும் நேரமில்லை. எல்லோரும் அவசரமாய் ஓடிக் கொண்டிருக்கிறோம். டெஸ்ட் மேட்ச் பார்த்து, ஒன்டே பார்த்து இன்று "டீ ட்வென்டி" பார்த்துக் கொண்டிருக்கிறோம். சினிமா மட்டும் ஏன் மூன்று மணி நேரம்? அதுவும் அந்தப் படம் மொக்கை என்றால்? அதற்கு பதிலாக சின்ன சின்ன படங்களாய்  ஒரு ஐந்து, ஆறு படங்களை பார்த்தால் வித்தியாசமான அனுபவமாய் இருக்காது?

இது ஒரு நல்ல முயற்சி. சினிமாவில் பிரபல இயக்குனர் ஆகவிட்ட போதிலும், தன் தாய் வீடான குறும்படத்தை மறக்காமல், மேலும் முன்னேற விரும்பும் அமச்சூர் குறும்பட இயக்குனர்களுக்கு இத்தகைய ஒரு மேடையை அமைத்துக் கொடுப்பதற்கும், கார்த்திக்கை தாராளமாய்  பாராட்டலாம்.

இன்று பார்த்த படத்தில் ஆறு படங்கள். ஆறு இயக்குனர்கள். ஆறு கதைகள்.

The Lost Paradise - சிறையில் இருந்து திரும்பி வரும் ஒருவன் தன் குடும்பத்தை தேடி வரும் கதை. ஆரண்ய காண்டம் சோமு வின் நடிப்பில் மிளிர்கிறது!
அக விழி - வாழ்வோடு கலந்து விட்ட ஆழ் மனக் கனவுகளின் ஒரு கண்ணாமூச்சி. நல்ல மேக்கிங்! ஆமாம், தமிழ் டைட்டில் நல்ல தானே இருக்கு? அப்புறம் எதுக்கு "An inner eye" என்று ஒரு சப்டைட்டில் :)
புழு - இரண்டு பாவிகள் தங்களை தாங்களே துன்புறுத்திக் கொள்வது. ஒரு கதையை இடையில் தொடங்கலாம் தான், இறுதியில் ஏதாவது இருக்க வேண்டுமே? ம்ம்ம்...கதைக்கும் டைட்டிலுக்கும் சம்மந்தம் புரியவில்லை.!

இடைவேளை.
நண்பன்டா டிரைலர்.

நல்லதோர் வீணை - பாலியல் வன்கொடுமையை பற்றிய ஒரு மெசேஜ் படம். நல்ல நடிப்பு. தேர்ந்த இசை. நல்ல டைட்டில்!
மது - மாது; மது; மசாலா; மாஸ்! ஒரு சாம்பிள்: 1: என்னடா பண்ற? 2 ஃபேன்ல தூக்கு போட்டுக்க போறேன். 1: ஏன் உங்க வீட்ல ஃபேன் இல்லையா? [இங்கேயே சிரிக்காதீங்க, அடுத்து தான் சூப்பர்!] 2: எங்க வீட்ல டேபிள் ஃபேன் தான் இருக்கு! [ஹிஹிஹி..]
நீர் - தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்லும் அவலத்தின் ஒரு குறுகிய பதிவு. விஜய் சேதுபதியின் கடைசி குறும்படம் என்று நினைக்கிறேன் :)

ஆறு படங்களை பார்த்து முடித்த பிறகு, இந்த முதல் முயற்சிக்காக இன்னும் கொஞ்சம் மாஸ் படங்களை போட்டிருக்கலாமோ என்று தோன்றியது. இருந்தாலும் பாராட்டத்தக்க முயற்சி.

என்னுடைய இரண்டு படங்கள் "விடியல்" மற்றும் "தமிழ் கிஸ்" கார்த்திக்கின் "பெஞ்ச் பிளிக்ஸ்" ஆன்லைன் ஒளிபரப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இன்று கார்த்திக்கை பார்த்தேன். என்குறும்படம் இப்படி திரையில் வர என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

எப்படியாவது ஒரு 5வது  பெஞ்சிலாவது நான் ஒரு சீட் போட வேண்டும்!பார்ப்போம்.

ராமானுஜன்

"பாரதி", பெரியாருக்குப் பிறகு ஞான ராஜசேகரனின் மற்றுமொரு வாழ்க்கைச் சரித்திரப் பதிவு. இந்த படத்தின் மூலம் ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ள முடியாது. மிகவும் சொற்ப பட்ஜெட்டில் எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். சில காட்சிகள்/செட்டுகள் அரதப் பழசாய் இருக்கிறது. ஆனால் ஒரு மாமேதையின்  வாழ்க்கை பதிவாய் பார்க்கும்போது இது ஒரு போற்றப்பட வேண்டிய முயற்சி. மனிதர் விடாமல் செய்யும் இப்படிப் பட்ட முயற்சிகளுக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்!

கணக்கில் புலி என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், ராமனுஜம் தான் கணக்கில் சிங்கம், புலி, கரடி, டைனோசர் எல்லாம்! இவர் கண்டுபிடித்த ஒரு தேற்றத்தை [Theorem] 93 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நம்மால் நிருபிக்கவே முடிந்திருக்கிறது. இவர் பாட்டுக்கு கணக்கை போட்டு, விடையை மட்டும் எழுதிக் கொண்டே போயிருக்கிறார். நம் இளையராஜா காட்சிகளை பார்த்துக் கொண்டே பின்னணி இசைக் குறிப்புக்களை எழுதுவது போல :-) [எனக்கு எப்படி கணக்கு வரும் சொல்லுங்க?]

படத்தில் கூட, ஒரு காட்சியில் அவரே இதை பற்றி சொல்கிறார். "ஒரு கணக்கை பார்த்தவுடன் அதன் விடை தான் எனக்குத் தோன்றுகிறது, அதை உடனே எழுதி விடுகிறேன். பிறகு அந்தக் கணக்கில் எனக்கு சுவாரஸ்யம் அற்றுப் போய் விடுகிறது!" என்று! இதையே இப்படி பார்க்கலாம். ஒரு எழுத்தாளனும் இதையே தான் சொல்கிறான். ஒரு கவிஞனும் அதை தான் சொல்கிறான். ஒரு ஓவியனும் அதை தான் சொல்கிறான். இல்லையா? அப்படி என்றால் அந்தக் கணத்தில் ராமானுஜனும், அவர் போடுவது கணக்கு என்பதெல்லாம் தாண்டி அவர் அங்கு ஒரு மேன்மையான படைப்பாளி ஆகி விடுகிறாரோ என்று தான் தோன்றுகிறது. பாரதியின் கவிதையை நாம் இன்றும் கொண்டாடுகிறோம் [இன்று தான் கொண்டாடுகிறோம்!], ஆனால் அது அவருக்கு சுவாரஸ்யம் அற்ற ஒன்றாய் தான் இருக்க முடியும். அவர் அடுத்த அடுத்த கவிதைகளில் தன் சஞ்சாரத்தை நிகழ்த்திக் கொண்டிருப்பார். அதே  போலத் தான் யாரோ கமலிடம், "உங்கள் படத்தில் உங்களுக்கு பிடித்த படம் எது?" என்றதற்கு "அது இன்னும் நான் எடுக்காத படம்!" என்று தான் சொன்னார்.

இந்தப் படத்தில் ராமனுஜன் சிறுவயதில் இரணிய வதம் நாடகம் பார்ப்பார். நரசிம்மர் வந்து இரணியனின் வயிற்றை குத்திக் கிழிக்கும்போது அவர் மயங்கி விழுந்து விடுவார். எழுப்பிக் கேட்டால், தனக்கு பயமாய் இருந்தது என்பார்.

இதே போல, தன் சிறு வயதில் "அரிச்சந்திரா" நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் "இனிமேல் பொய்யே சொல்லக் கூடாது" என்று முடிவெடுத்தான். அவர் பிற்காலத்தில் காந்தி ஆனார்.

பாஞ்சாலி சபதம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் "தப்பு செய்த புருஷன்களை விட்டு விட்டு ஏன் மற்றவரிடம் ஒப்பாரி வைக்கிறாய்", உன் புருஷனுங்க உன்னை வச்சி ஆடி தோத்த மாதிரி நீயும் அவங்களை வச்சி ஆட வேண்டியது தானே?" என்று கேள்வி எழுப்பினான். அவர் பிற்காலத்தில் பாரதி ஆனார்.

மற்றொரு சமயம் கட்டபொம்மன் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் மிகப் பெரிய நடிகன் ஆனான். அவர் சிவாஜி கணேசன். ஒரே சூழ்நிலை, வெவ்வேறு ஆளுமைகள்!

ராமானுஜன் படம் பிடித்தது, பிடிக்கவில்லை என்பதை தாண்டி படத்தை பார்க்கும்போது என்னுள் இத்தகைய கேள்விகளை எழுப்பியது. அதுவே ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

ராமானுஜனின் தாய், தந்தை மிகச் சாதாரண மனிதர்கள். ராமானுஜனின் தம்பி ஒரு சராசரி குழந்தை. திடுதொப்பென்று இவர் மட்டும் எப்படி அந்தக் குடும்பத்தில் இப்படி வந்து பிறந்தார்? இந்த மாதிரி அறிய ஜீவன்கள் எங்கிருந்து, எப்படி, எதனால் பிறக்கிறார்கள்?  கணக்குகளால் பின்னப்பட்ட ஜீனை இவர் எங்கிருந்து பெற்றார்? இதே கதை மேல் சொன்ன பாரதி, காந்தி, சிவாஜிக்கும் பொருந்தும். விடை தெரியா கேள்விகள்!

ஆனால் காந்தியும், சிவாஜியும் ராமானுஜனை போல ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் இருக்கும் காலத்திலேயே மக்கள் அவர்களின் மேன்மையை கண்டு கொண்டார்கள். பாரதி, புதுமைபித்தன் போன்றோர்கள் பட்ட பாடு! படத்தில் ஒரு வசனம் வருகிறது. ராமனுஜன் தன் மனைவியிடம் பேசுகிறார்.

"என்னை எல்லாரும் ஜீனியஸ்னு சொல்றா; ஆனா இந்த உலகம் ஜீனியசை ஜீனியஸா இருக்க விடறதில்ல. அவனையும் எப்படியாவது சராசரி ஆக்கிடனும்னு இந்த உலகத்துல எல்லாரும் கங்கணம் கட்டிண்டு அலையிறா. கல்யாணம் பண்ணி வைப்பா, குடும்ப கஷ்டத்தை எல்லாம் கொடுத்து பாப்பா, அப்படியும் ஒருத்தன் நான் சராசரி ஆக மாட்டேன்னு அடம் புடிச்சா, அவன் பைத்தியமா அலைய வேண்டியது தான்!"

இது தான் அந்தப் படத்தின் மற்றும் இந்த மாதிரி மாமேதைகளின் வாழ்க்கைச் சாரம் என்று தோன்றுகிறது. அதை நீங்கள் உணர்ந்து கொண்டால் இந்தப் படமும் ஒரு வெற்றிப் படமே!

மீகாமன்

Gripping Screenplay; Awesome Editing; A Sleek Thriller! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இந்தப் படத்தின் திரைக்கதையை பற்றி சொல்ல ஒரு காட்சி போதும்.

ஆர்யா (சிவா) ஒரு அண்டர் கவர் காப். ஒரு ட்ரக் பிசினஸ் செய்யும் கேங்கில் இருக்கிறார். அந்த கேங்கில் குருவும் ஒரு ரவுடி. சிவாவும், குருவும் தண்ணி அடிக்கிறார்கள். அதை அந்த கேங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. போதை தலைக்கு ஏறியதும் இருவருக்கும்  இடையில் வட்டத்தில் குறி பார்த்து சுடும் போட்டி ஒன்று நடக்கிறது. அது அடிக்கடி நடக்கும் போட்டி, அதில் எப்போதுமே சிவா தோற்றுப் போவான் என்று சுற்றி இருப்பவர்கள் சொல்கிறார்கள்.

இந்த முறை குரு முதலில் சுடுகிறான். நடு சென்டரில் சுடவில்லை என்றாலும் அதற்கு அடுத்த வட்டத்தில் சுடுகிறான். எல்லோரும் கை தட்டுகிறார்கள். ஒரே ஆரவாரம். இப்போது சிவாவின் முறை. வழக்கமான தமிழ் சினிமா பாணியில் மாஸ் ஹீரோ போல் மூஞ்சியை வைத்துக் கொண்டு சிவா குறி பார்க்கிறான். படம் பார்க்கும் நமக்கும் "இப்போ பாருங்கடா ஆர்யாவோட மாசை!" என்று தோன்றுகிறது.  தோட்டா பறக்கிறது. காமெரா பலகையின் வட்டங்களை க்ளோசப்பில் காட்டுகிறது. ஒரு துளையும் இல்லை. அந்தப் பலகையில் உள்ள எந்த வட்டங்களிலும் குண்டு துளைக்கவில்லை. காமெரா இன்னும் கொஞ்சம் மேலே போகிறது, அந்தப் பலகையின் ஓரத்தில் குண்டு துளைத்திருக்கிறது. அவன் குண்டு வட்டத்துக்குள்ளேயே வரவில்லை. எல்லோரும் கை கொட்டி சிரிக்கிறார்கள். இந்த முறையும் சிவா தோற்று விட்டான்! "வாட்ச்சை கழட்டு" என்று குரு பந்தயப் பரிசை வாங்கிக் கொள்கிறான். எல்லோரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றவுடன், மறுபடியும் சிவா தனியாய் தண்ணி அடிக்கிறான். பிறகு வீட்டுக்குக் கிளம்பும்போது அந்தப் பலகையை பார்க்கிறான். துப்பாக்கியை எடுக்கிறான். குறி பார்க்கிறான். அடுத்து என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? படம் பார்க்காதவர்கள் யூகியுங்கள். நான் பார்த்து மெரசலாயிட்டேன்! மாசாய் நடந்து வருவதற்கும், ஸ்டில் கொடுப்பதற்கும் பின்னால் இப்படி ஒரு திரைக்கதை இருந்தால் தான் கொஞ்சமாவது பார்க்க நன்றாய் இருக்கிறது. காமர்சியலை கட்டிக் கொண்டு அழும் மற்ற தமிழ் சினிமா இயக்குனர்கள் மகிழ் திருமேனியிடம் கற்க நிறைய இருக்கிறது!

P K
என் விருப்பத்துக்குரிய நடிகர் ஆமீர் கானின் சமீபத்திய ஹிந்தி படத்தின் பெயர் பீகே! ஹிந்தியில் "பீகே" என்றால் "குடித்திருக்கிறாயா" என்று அர்த்தம் கொள்ளலாம். படத்திற்கும் இந்த பெயருக்கும் என்ன சம்மந்தம்? இருக்கிறது. இந்தப் படத்தில் ஆமீர் கானின் கதாப்பாத்திரம்  குழந்தைத்தனமான பல்வேறு கேள்விகளை எழுப்புவதால் பதிலுக்கு எல்லோரும் "குடித்து விட்டு வந்திருக்கிறாயா?" என்று கேட்கிறார்கள். அதற்காக படத்தின் பெயரையே அப்படி வைத்து விட்டார்கள்.

ஏன் அவர் அப்படி குழந்தைத்தனமான கேள்விகளை கேட்கிறார்? ஏன் என்றால் அவர் வேற்று கிரக ஆசாமி! நம்மை போல் பிற ஜீவராசிகளை தேடி பூமியை அடைகிறார். அதனால் பூமியில் பார்க்கும் எல்லாவற்றையும் கேள்வி எழுப்புகிறார்! வேற்று கிரக ஆசாமி பூமியில் வந்து இறங்கினால் என்னவாகும்? அவன் திரும்பிச் செல்ல உதவும் அவனுடைய கழுத்துப் பட்டை திருடப்பட்டால் என்னவாகும்? இது தான் பீகே!

ராஜ்குமார் ஹிரானி என்னுடைய விருப்பத்துக்குரிய திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனர். அவருடைய முன்னாபாய் சீரிஸ் என்னை மிகவும் கவர்ந்தது. யாரையும் எளிதில் ஒப்புக்கொள்ளாத ஆமிர் இரண்டாம் முறையாக ராஜ்குமார் ஹிரானியுடன் கை கோர்க்கிறார் என்றால் அவரிடம் விஷயம் இல்லாமல் இருக்காது. முன்னாபாய் சீரிஸ், 3 இடியட்ஸ் என்று கடந்த பத்து வருடத்தில் அவர் பாலிவுட்டில் காட்டிய பாய்ச்சல் அசாதாரணமானது. அதே பாய்ச்சல் பீகேவிலும் தொடர்கிறது. அபிஜித் ஜோஷியுடன் ஜோடி சேர்ந்து இவர் எழுதும் ஒவ்வொரு திரைக்கதையும் பட்டாசு கிளப்புகிறது. ஒரு காலத்தில் ஹிந்தி திரை உலகை ஆண்ட சலீம் ஜாவேத் மாதிரி இவர்களும் தொடர வாழ்த்துக்கள்.

ராஜ்குமாரின் திரைக்கதையின் முக்கிய அம்சம் ஒரு சமூகப் பார்வை கொண்ட கதைக் களன். ஒவ்வொரு காட்சியும் பார்வையாளனை நெகிழச் செய்து அவனை/அவளை ஆனந்தக் கண்ணீர் விட வைப்பது! ஒவ்வொரு படத்திலும் என்னை அழ வைப்பதால் அவரை நான் வெறுக்கிறேன்; அதே சமயம் சினிமா என்ற மாய பிம்பத்தின் ஊடே அவர் என் நெஞ்சை தொட்டு என்னை அழ வைப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். அது தானே சினிமாவின் பலம். அதை செய்யத் தெரிந்தவன் தான் சினிமா மொழி தெரிந்தவன். நான் இவருடைய படங்களில் மிகவும் ரசித்தது "லகே ரஹோ முன்னாபாய்". ஒரு லோக்கல் தாத்தா லேசாய் மனம் பிரழ்ந்து காந்தியுடன் சிநேகம் கொண்டால் என்னவாகும்? என்னை ஒரு முரணான கதைக்களன். அதகளப்படுத்தி இருப்பார்!

பீகேவை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஏற்கனவே இணையத்தில் நல்லமுறையில் பல விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டன. சிலர் வெகுவாக நெகிழ்ந்து இது ஒரு வாழ்நாளுக்கான திரைப்படம் என்று போற்றுகிறார்கள்! சந்தேகமே இல்லாமல் நல்ல கதை, நல்ல திரைக்கதை, நல்ல வசனம், நல்ல நடிப்பு. ஆனால் என்னை பொருத்தவரை படம் பல இடங்களில் திசை மாறிச் சென்று விட்டதை போல தோன்றியது. அனுஷ்காவின் காதல் கதை அரைவேக்காடாய் தோன்றியது. அனுஷ்காவின் வாயை [லிப்ஜாப்] ஏன் இப்படி செய்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. வழக்கமான ராஜ்குமாரின் ஆஸ்தான நடிகர்கள் பொமன் இராணி, சௌரப் சுக்லா சலிப்பூட்டுகிறது.  மேலும் சொல்லத் தெரியவில்லை!

நாட்டில் ஒன்றிரண்டு நல்ல இயக்குனர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களையும் குறை சொல்லிக் கொண்டிருந்தால் வேலைக்காகாது. முதல் படத்தில் அன்பு கொள் என்றார்; அடுத்த படத்தில் அகிம்சை வழி நட என்றார்; மூன்றாவது படத்தில் பிடித்ததை செய்யுங்கள் என்றார். இந்தப் படத்தில் மதத்தின் பெயரால் அறிவிழக்காதீர்கள் என்கிறார்!  நல்லதையே சொல்கிறார்; அதையும் சிறப்பாய் சொல்கிறார். கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கட்டுமே!

பீகே அவசியம் பார்க்கலாம்.

"சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு, கண்டதுண்டா?" என்ற ஒரு பாடல். இந்த பாட்டில் தலைவருக்கு சில எக்ஸ்க்ளூசிவ் க்ளோசப் இருக்கும். மனிதர் அள்ளுவார். அமலாவும் அம்சமாய் இருப்பார். பாடலும் நல்ல பாடல் தான். இதை எல்லாம் மீறி, அந்தப் பாடலை பார்ப்பது மனதுக்கு மிகவும் வருத்தம் தரும் செயல். என்ன நினைத்து வைரமுத்து பாட்டின் பல்லவியில் சேலையை கொண்டு வந்தாரோ, பாட்டில் படாத பாடுபடுவது அமலா தான்!

[டூயட் பாடல்களில் அடிக்கடி ஆடைகள் மாறுவதுண்டு. என் சிறு வயதில் இந்த ஆடை மாற்றம் எப்படி நிகழ்கிறது என்று என் மனதில் கேள்வி எழும். சரி, மரத்தை சுற்றி பாடும்போது மரத்துக்கு பின்னால் மாற்றிக் கொள்வார்கள் போல என்று நானே நினைத்துக் கொண்டு சமாதானம் அடைந்து விட்டேன்! இந்தப் பாடலில் தான் உண்மையில் ஆடை மாற்றுவதை கொஞ்சமாவது காட்டி இருக்கிறார்கள்!]

ரஜினியின் அருகில் அமலா வந்தால் போதும், அவருடைய சேலையை மனிதர் சரேலென்று உருவி விடுகிறார். அதுவும் ஸ்டைலாக! என்ன ஒரு கதாநாயகத்தனம்!! உடனே அமலாவுக்கு இன்னொரு சேலை. மறுபடியும் உருவுகிறார். பாவம் அமலா. இதை படம் எடுக்கும்போது ரஜினிக்கோ, பாரதிராஜவுக்கோ, நடன இயக்குனருக்கோ "வெட்டவெளியில் வைத்து நாம் இப்படி ஒரு பெண்ணை அசிங்கப்படுத்துகிறோமே" என்று தோன்றி இருக்காதா? விளையாட்டுக்காகவாவது அமலா ரஜினியிடம், "சார் வைரமுத்து சாரை சட்டை, பேன்ட் வச்சி ஒரு பாட்டு எழுத சொல்லுங்க, அதுல நான் உங்க சட்டை பேண்ட்டை புடிச்சி இழுக்கிறேன்!" என்று சொல்லி இருப்பாரா? குழந்தைகள், பெண்கள் என்று ரஜினியின் படங்களை பார்க்காத ஆள் கிடையாது. இப்படி ஒரு காட்சியை படத்தில் எப்படி வைக்கலாம் என்று ரஜினியும் சரி, பாரதிராஜாவும் சரி, நடன இயக்குனரும் சரி யாருமே சிந்தித்திருக்க மாட்டார்களா? சரி, இது தான் நடன அமைப்பு என்றால், அந்த செயலுக்கு பொருத்தமானவர் படத்தின் வில்லன் தானே? ஒரு வேலை அவர் தான் படத்தில் கதாநாயகியின் அப்பா என்பதால் விட்டுவிட்டார்களா? இதில் கொடுமை என்னவென்றால் இதுவரை இந்தப் பாடலை பார்த்து நமக்கு எதுவுமே உறுத்தாது தான்!. அப்படி என்றால் தமிழ் சினிமா எவ்வளவு தூரம் நம்மை அழுக்காக்கி இருக்கிறது?

சமீபத்தில் பார்த்த சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் கடைசி எபிசோட் "ஆண்மை" பற்றியது. ஒரு குடும்பத்தில் ஆண் என்பவன் எப்படி இருக்க வேண்டும், இப்போது எப்படி இருக்கிறான் போன்றவைகளை அலசினார்கள்.  அதில் ஒரு பகுதியில் ஆண்வர்க்கம் நிறைந்த சினிமாவில் பெண்களை எப்படி காண்பிக்கிறார்கள் என்று அலசினார்கள். பெண்களை போகப் பொருளாய் காட்டுவது, ஐட்டம் டான்ஸ், பாடல் வரிகளில் தந்தூரி சிக்கன், லெக்பீஸ், நாட்டுக்கட்டை என்றெல்லாம் வருவதை சொல்லி ஷாருக், சல்மான், அக்ஷய் என்று எல்லா ஹீரோக்களின் சில படங்களின் வீடியோ கிளிப்ஸ்களை காட்டினார்கள். அதில் நிகழ்ச்சி தொகுப்பாளரான ஆமீர்கானையும் விட்டுவைக்கவில்லை. "என் படமும் இதில் இருக்கிறது, அப்போது தெரியவில்லை, ஆனால் இப்போது அதை நினைத்து வெக்கப்படுகிறேன்" என்று சொன்னார். சினிமா போன்ற மீடியாவில் எதை காண்பிக்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தான் உணர்வதாக சொன்னார்.

எனக்கு வருத்தம் என்னவென்றால் மிகச் சில நடிகைகளை தவிர மற்றவர்கள் இவ்வாறான காட்சிகளுக்கு கேள்வி எழுப்புவதே இல்லை! பழம்பெரும் நடிகை பானுமதியை பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். ஞாபகத்தில் இருப்பது வரை சொல்கிறேன். ஏதோ ஒரு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி! எம்.ஜி.ஆர் கத்திச் சண்டை இட்டு நம்பியாரிடம் இருந்து பானுமதியை காப்பாற்ற வேண்டும். ஒரு டேக், இரண்டு டேக், மூன்று டேக் என்று போய்க் கொண்டே இருக்கிறது. அலுத்துப் போன பானுமதி எம்ஜிஆரிடம், "மிஸ்டர். ராமச்சந்திரன், நீங்க ரெண்டு பேரும் கத்திச்சண்டை போட்டுட்டே இருக்கீங்க. ஆனா என்னை இன்னும் காப்பாத்த மாட்டேங்கிறீங்க. பேசாம அந்த கத்தியை என்கிட்டே கொடுங்க. நானே என்னை காப்பாத்திக்கிறேன்!" என்றாராம். நம் தமிழ் சினிமாவுக்கு சில பானுமதிக்கள் வேண்டும்.

சமீபத்தில் கமல் நடித்த சத்யா பார்த்தேன். உலக நாயகன் என்ற எந்த வித உபத்திரவமும் மனதில் கொள்ளாமல் மிக அருமையாய் நடித்திருக்கிறார். நாயகனுக்குப் பிறகு வந்த படம் என்று நினைக்கிறேன். சத்யா, எழுபதுகளில் பிரபலமாய் இருந்த திரைக்கதை ஆசிரியர்களான சலீம் ஜாவேத் ஜோடியின் ஜாவேத்தின் திரைக்கதையில் வந்த அர்ஜுன் என்ற ஹிந்தி படத்தின் தழுவல். என்னை பொருத்தவரை ஒரிஜினலை போல் எப்போதும் ரீமேக்குகள் இருப்பதில்லை. [தில்லு முள்ளு ஒரு விதி விலக்கு என்று நினைத்திருந்தேன்; இப்போது சத்யாவையும் சேர்த்துக் கொண்டேன்] ஹிந்தியில் சன்னி தியோல் நடித்திருக்கிறார். தமிழ் தான் முதலில் பார்த்து இருந்ததால் அது பிடித்திருந்தது. சரி ஹிந்தியை பார்ப்போம் என்று பார்த்தேன். கால் படத்தை தாண்ட முடியவில்லை. சன்னி தியோல் இந்த மாதிரி கோபக்கார இளைஞன் [அமிதாப்புக்குப் பிறகு] பாத்திரத்தை சரியாய் செய்பவர் தான். இருந்தாலும் கமல் இதில் ஜொலித்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

வழக்கமான ஒரு மசாலா படம் தான் என்றாலும், சில நல்ல காட்சிகளால், கச்சிதமான வசனங்களால் [வசனம்:அனந்து], கமலின் அருமையான நடிப்பால் [சொல்லப்போனால் படத்தில் நடித்த அனைவரும் நன்றாகவே நடித்திருந்தார்கள்!] பல இடங்களில் சத்யா மிளிர்கிறது. முதலில் கமலின் உருவம். கையில் வராத அளவுக்கு முடி முளைத்த மொட்டை தலை, கூர்மையான கண்கள், அவருடைய செவ்வுதடுகளை மட்டும் கொஞ்சமாய் காட்டும் அடர்த்தியான அவர் தாடி, காலர் இல்லாத சட்டை, பழுப்பான ஜீன்ஸ் என்று தான் உருவத்தில் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கிறார். எனக்கு என்னமோ தசாவதாரம் படத்தின் மேக்கப்பை விட இது தான் பிடித்தது!

இந்தப் படத்திலும் கேட்பாரே இல்லாத அழகான கதாநாயகி, யாரையும் அடித்து துவம்சம் செய்து விடும் ஹீரோயிசம் என்று சினிமாத்தனங்கள் இருந்தாலும் சில நல்ல காட்சிகளுக்காக மன்னிக்கலாம். உதாரணமாய்...

சத்யா ஒரு ஆள் அரவமற்ற ரெஸ்டாரன்ட்டில் தான் தங்கையை அவள் காதலனுடன் பார்க்கிறான். இப்படி ஒரு காட்சியே தமிழ் சினிமாவுக்கு அப்போது புதுசு தான். வழக்கமான தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு ஒன்றுக்கு இரண்டு கதாநாயகிகள் இருப்பார்கள். ஆனால் அவன் தங்கை என்று வந்து விட்டால், மற்ற ஆடவரை ஏறெடுத்து பார்க்காத எட்டு முழ புடவை/தாவணி சுற்றிக் கொண்டு, குணவதியாக, குடும்ப குத்து விளக்காக தான் இருப்பார். அப்படியே தப்பித் தவறி காதலித்தாலும், அவன் ஒரு கல்லூளிமங்கனாய் இருப்பான். கதாநாயகன் தங்கையை அவனிடமிருந்து காப்பாற்றுவான், அல்லது அவனை திருத்துவான். இப்படி எதுவுமே இல்லாமல் காதலுடன் வெளியே சுற்றும் தங்கையை கதாநாயகன் கண்டு கொள்வதை போன்ற ஒரு காட்சியை பார்க்கும்போது ஆனந்தமாய் தான் இருந்தது. [இதே போன்று ஒரு காட்சி பாஷா படத்திலும் வருகிறது. இரண்டையும் ஒப்பிட்டு பாருங்கள்! ரஜினி பெண்ணிய விஷயத்தில் எத்தனை பின்தங்கி இருக்கிறார் என்று புரியும்; சுவாரஸ்யமாய் இருக்கும்]


அவர்கள் இருவரும் ஒரு ஃ பேமிலி ரூமில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தங்கையின் குரலை கேட்ட சத்யா சடாலென்று உள்ளே நுழைகிறான். அவனை அங்கு எதிர்பார்க்காத இருவரும் நிலை தடுமாறி போகிறார்கள். நிலைமையை சமாளிக்க தங்கை, சத்யாவுக்கு அவரை அறிமுகப்படுத்துகிறாள். அவர் ஒரு இன்ஸ்பெக்டர் என்றும், அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் சொல்கிறாள். சத்யா இன்ஸ்பெக்டரை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறான். "ஏன்யா, இன்ஸ்பெக்டர் தானே நீ? அது என்னய்யா ஃபேமிலி ரூம்ல ஒழிஞ்சுட்டு லவ் பண்ற?" என்ன ஒரு கேள்வி பாருங்கள்! சத்யாவுக்கு அவர்கள் ஒழிந்து கொண்டு காதலிப்பது தான் பிடிக்கவில்லை :) பிறகு அவனை தீர்க்கமாய் பார்த்துக் கொண்டே சத்யா அவரிடம் "மை சிஸ்டர், ஆர் யு சீரியஸ்?" என்கிறான். அவரும் அசடு வழிந்து கொண்டே "ஆமா, ரொம்ப சீரியஸா ரெண்டு பேரும்" என்று மென்னு முழுங்கும்போதே, அவரிடம் தான் கையை நீட்டி "ஐ அம் சத்யா" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அண்ணன் சம்மதித்து விட்டான் என்று துருதுருப்பில் "அதெல்லாம் நான் ஏற்கனவே" என்று வாயெடுக்கும் தங்கையை பொய் கோபத்துடன் "நீ சும்மா இரு" என்று சொல்லி அவள் அடங்கியதும் அவளை பார்த்து சிரிக்கிறான். பதிலுக்கு அவளும் சிரிக்கிறாள். இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்று அந்த காதலன் முழிப்பதை உணர்ந்த சத்யா அவரின் தோளை தட்டிக் கொடுத்து "சிரிக்கலாம்" என்கிறான்.  என்ன ஒரு அருமையான காட்சி. கவிதையாய் இருக்கிறது. இதை விட எதார்த்தமாய் அந்த ஒரு தருணத்தை அணுக முடியுமா என்று தெரியவில்லை. ஒரு பாசக்கார, கோபக்கார அண்ணனாக கமலின் நடிப்பு உச்சம்.

பிறகு இன்னொரு காட்சியில் சத்யாவின் நண்பர்கள் கதாநாயகியை அவனுடன் சேர்த்து வைத்து கேலி பேசுவார்கள். அவளை வீட்டுக்கு விடும்போது சத்யா "சாரிங்க, பசங்க கொஞ்சம் அசிங்கமா பேசிட்டாங்க, நீங்க ஒன்னும் தப்பா நெனச்சுக்காதீங்க!" என்கிறான். பதிலுக்கு மலையாளத் தமிழில் அவள், "ஏன் நல்லா தானே பேசினாங்க" என்று புரியாமல் கேட்க, "இல்லைங்க, ரெண்டாவது நாள் தான் சந்திக்கிறோம், அதுக்குள்ளே அண்ணின்னு எல்லாம் பேசக்கூடாது இல்லையா.." அவள் "அப்போ பத்து நாள் கழிச்சி பேசலாமா?" அதற்கு சத்யா "அது கொஞ்சம் கெளரவமா இருக்காது?!" என்று அவளிடமே கேட்டு அவள் சிரிக்கும்போது அவளுக்கும் இஷ்டம் தான் என்று உணர்ந்து "இன்னும் எட்டு நாள் இருக்கு" என்கிறான்! கிளாஸ்!!

அதே போல் தான் தந்தையை மரியாதை குறைவாய் நடத்து முதலாளியை துவம்சம் செய்யும் காட்சி. கமல் மிக அனாயாசமாய் நடித்திருப்பார். செம அடி வாங்கிய பிறகு, அந்த முதலாளி, "அய்யோ அவருக்கு இவ்வளவு பெரிய பையன் இருக்காருன்னு தெரியாம போச்சுங்க,  ரெண்டு பொண்ணுங்க இருக்குன்னு தெரியும்" என்று சொல்லிவிட்டு, மேலும் அடி விழுகும் என்று சுதாரித்துக் கொண்டு "அய்யோ தங்கச்சி மாதிரிங்க நீங்க என் அண்ணன் மாதிரிங்க என்று அவர் அழுவது செம...அதற்கு சத்யா சொல்லும் பதில் "இதை முன்னாடியே ஒத்துட்டு இருந்தா இவ்வளவு பெயிண்ட் செலவு இல்லைல்ல?" தூள்! அவரை அடித்து ஷெல்பில் தொங்கவிட்டு அவர் முகத்தில் பெயிண்ட் பூசிக் கொண்டே சத்யா தான் யார் என்று சொல்லும் விதம் பிரமாதம். ஒரு கட்டத்தில் அவர் அடி தாங்க முடியாமல், "சார் வேற எதுனா ஒடச்சுட்டு போறதா இருந்தா போறீங்களா, என்னால முடியலை" என்று கூறுவார். அதற்கு சத்யா சலிப்புடன், "என்னாலயும் முடியலையா! உத்தரவு குடுய்யா" என்று கிளம்புவான், செம மாஸ் சீன்!

இந்தப் படத்தின் ஒரு முக்கியமான சிறப்பு அம்சம், கிட்டிக்கு எஸ் பி பியின் குரல்! அடடா..அந்த ஒரு வில்லத்தனமான பாத்திரத்துக்கு, தேன் தடவி பேசுறார் என்று சொல்வோமே, அத்தனை பொருத்தம். அவரிடம் சத்யா வந்து சேர்ந்தவுடன் அவரின் அன்பில் திக்கு முக்காடிப் போயிருப்பான். அப்போது அவர் "வேற ஏதாவது வேணுமா சத்யா? பணம் ஏதாவது?" கேட்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் சத்யா தடுமாறிக் கொண்டே, "என் தங்கச்சி டவ்ரி, ஒரு இருபது.." என்று சொன்னவுடன் அவர் தான் உதவியாளரிடம் பணம் கேட்க திரும்புவார். அதற்குள் சத்யா ஏது இருபது ரூபாயை எடுத்து கொடுத்து விடப் போகிறாரோ என்று பயந்து, "சார், சார், இருபது...ஆயிரம் சார்" என்று சொல்லும்போது ஒரு சாமானியனுக்கு இருபது ஆயிரம் என்பது எவ்வளவு பெரிய தொகை என்று தான் நடிப்பின் மூலம் சொல்லாமல் சொல்லி இருப்பார் கமல். கையில் பணம் வாங்கிக் கொண்டு நன்றியோடு அழும் சத்யாவை பார்த்து, முதலில் அந்தப் பணத்தை கடனாக தரவில்லை என்று சொன்னவர், "சரி, இது கடன் தான், சத்யாவுக்கு நான் கொடுத்த கடன், இதை திருப்பித் தாங்க திருப்பித் தாங்கன்னு டெய்லி உங்களை தொந்தரவு பண்ண போறேன்; போதுமா? என்னப்பா நீங்க?" எஸ் பி பியின் குரல் அப்படி நடித்திருக்கும்.

பிறகு தன் தங்கையின் புகுந்த வீட்டில் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கும் இடத்தில் கமல் அதகளப்படுத்தி இருப்பார். பணத்தை இறைத்து விட்டு, அந்த முதுகெலும்பில்லாத மாப்பிள்ளையை மிரட்டும் போதும் சரி, பிறகு அவரின் குணம் அறிந்து அவரை பார்த்து பரிதாபப்படும்போதும் சரி, தனிக்குடித்தனம் போங்கள் என்று தைரியம் கொடுக்கும்போதும் சரி, பிறகு தங்கையின் நல்ல குணத்தை பார்த்து பெருமிதப்படும் போதும் சரி! கமல்; கமல்; கமல்!! சான்சே இல்லை...தங்கையை பார்த்துக் கொண்டே அவள் சொல்வதும் சரி தான் என்று தோன்றி, ஒரு "பாஸ்" விட்டு அந்த மாப்பிள்ளையிடம் கை கொடுத்துவிட்டு "பாத்துக்குங்க!" என்று சொல்லி புறப்படுவார். அப்பா...அத்தனையும் தேர்ந்த நடிப்பின் நுணுக்கங்கள்...

இப்படி படம் முழுதும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் தான். வாய்ப்பு கிடைத்தால் மறுபடியும் பாருங்கள்.

"உன் பேர் என்னடா?"
"சத்யா டா!"  
ஒரு புது முயற்சி. தங்கள் ஆதரவு வேண்டி...

நேற்றைய நாளிதழில், மறுபடியும் தீபாவளிக்காக ஒரு சிறப்பு ரயில் விளம்பரம். நாளிதழ் வாங்கியவர்கள் அதில் படித்தார்கள். வாங்காதவர்கள் வாட்ஸ் அப்பில், ஃபேஸ்புக்கில் அந்த செய்தியை படித்தார்கள். நான் இரண்டாவது ரகம். பல வருடம் பசியோடு காத்திருந்த ஒரு விலங்கினை போல் அந்த செய்தியை நான் எதிர் கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் மூன்று மாதம் முன்பு தீபாவளிக்காக முன்பதிவு தொடங்கப்பட்ட அந்த நாளை ஒரு போர்வீரனை போல் எதிர்கொண்டு மோசமாய் தோற்றுப் போயிருந்தேன். நான் Available லின்க்கை க்ளிக்கும்போது கொத்து கொத்தாய் இருந்த சீட்டுக்கள், பணம் கட்டி திரும்ப வரும்போது என்னை காத்திருப்பு பட்டியலுக்கு தள்ளிவிட்ட சோகம் நடந்தேறியது அன்று. சரி மூன்று மாதம் இருக்கிறதே, கிடைத்து விடும் என்று தான் நினைத்தேன். அது என்னமோ சென்னையில் உள்ள அத்தனை பேரும் இந்த முறை மதுரையில் தான் தீபாவளி கொண்டாடுவோம் என்று முடிவெடுத்து விட்டதை போல இன்று வரை அந்த காத்திருப்பு பட்டியிலில் ஒரு முன்னேற்றத்தையும் காணோம். சென்னை திரும்பி வருவதற்கான டிக்கட் என் பூர்வ ஜென்ம புண்ணிய பலனால் கிடைத்து விட்டது. மதுரை போவதற்கு தான் வழி இல்லை. ரெட்பஸ்காரன் வேறு எனக்கு பெர்சனலாய் மெயில் போட்டுஎன்ன உங்களை ஆளையே காணோம், இந்தாங்க டிஸ்கவுண்ட்!” என்றெல்லாம் என்னை ஆசை காட்டி அழைத்தான். சரி என்று நம்பி உள்ளே போய் பார்த்தால் ஏன் அவன் டிஸ்கவுண்ட் கொடுக்கிறான் என்று அப்போது தான் புரிந்தது. தீபாவளி என்பதற்காக பஸ் டிக்கட் எல்லாம் ப்ளேன் டிக்கட் விலை ஆகி இருந்தது! “அட போங்கப்பா டட்காலே சரணம்!” என்று நான் பதுங்கி இருந்த போது வந்த செய்தி அது!

சும்மா போகும் ரயிலுக்கே கொத்து கொத்தாய் வந்து விழுவார்கள். தீபாவளிக்கான சிறப்பு ரயில் வேறு, ப்ரீமியம் ரயில் விட்டதற்கே  "பண்டிகை டயத்துல ப்ரீமியம் ரயிலாடா விடறீங்க?" என்று பயங்கர காண்டில் வேறு இருக்கிறார்கள்கேள்வியே கிடையாது நாளைக்கு சட்டை கிழியுது என்று நினைத்துக் கொண்டேன்நேற்று இரவே அதை எதிர்நோக்குவதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிவிட்டேன். நேரத்திற்கு படுக்கைக்குச் சென்று விட்டேன். அப்பா, அம்மாவிடம் டிக்கட் புக் செய்ய காலையில் எழுப்புமாறு சொல்லிவிட்டேன். பத்தாதற்கு மாமனாரிடமும் ஒரு பிட்டு போட்டு வைத்து விட்டோம். எல்லாம் தயார்! காலையில் ஆறு மணியில் இருந்து அலாரம் வைத்து, அதன் தலையில் தட்டி தட்டி, ஒரு வழியாய் ஏழரைக்கு எழுந்தேன்ஒரு ஏழரையை எதிர்நோக்க ஏழரைக்கு எழுவது எத்தனை பொருத்தம்! பல்லை துலக்கி விட்டு, லேப்டாப்பை திறந்தேன்வீட்டில் உள்ள இணையம் மெதுவாய் இருப்பதாய் மனைவி சொன்ன ஞாபகம் வந்தது. என் கம்ப்யுட்டர் மவுஸ் சில நாட்களாய் படு வேகமாய் வேலை செய்கிறது. நான் சிங்கிள் க்ளிக் செய்தால் அது டபுள் க்ளிக் செய்கிறது. நான் டபுள் க்ளிக் செய்தால் அது ட்ருபுள் க்ளிக் செய்கிறது. அதன் க்ளிக் ஸ்பீடை குறித்தும் பார்த்து விட்டேன். அது கண்டுக்கவே இல்லை. வீட்டில் ஒரு மவுஸ் கூட நம்மை மதிக்க மாட்டேன் என்கிறது. எல்லாம் அகராதி புடிச்சுது!

சடாரென்று ஒரு யோசனை! தம்பி உடையான் படைக்கு அஞ்சான் [இது மொத்த வித்தையும் எறக்குன அஞ்சான் இல்லை!]! "என்னையாடா கலாய்கிறீங்க, என் தம்பி ஒருத்தன் இருக்கான்டா!" என்று அவனுக்கு ஃபோனை போட்டேன். பெங்களூர் குளிரில் சுகமாய் தூங்கிக் கொண்டிருந்தான். எந்த பேட் வேர்ட்சும் யூஸ் பண்ணாமல் பரதன் ராமனின் பாதுகையை சுமந்து சென்றதை போல் கடமையே கண்ணாக எழுந்து கொண்டான்! “இப்போ வாங்கடா!” என்று இறுமாந்து அந்த எட்டு மணி ராகு காலத்துக்கு காத்திருந்தேன். அந்த சிறப்பு ரயிலின் நேர் உள்ள SL என்ற லின்க்கில் கையை வைத்துக் காத்திருந்தேன்..பெங்களூரில் என் தம்பி அதே போல் காத்திருந்தான்மணி ஏழு அம்பத்தொம்போது, நான் கிளிக்கே செய்யாமல் என் மவுஸ் க்ளிக் செய்து கொண்டிருந்தது. ராஸ்கல்! பிறகு தான் என் கை நடுக்கம் அது என்று புரிந்தது. மணி எட்டு. பதமாய் க்ளிக்கினேன். “441 Available” என்று சொன்னது. எனக்கு பேராசை இல்லை; இரண்டு டிக்கட் கிடைத்தால் போதும். க்ளிக்கினேன். என் பெயர், என் மனைவி பெயர், என் மகள் பெயர் என்று எல்லாவற்றையும் ஏற்கனவே சேமித்து வைத்த லிஸ்டில் இருந்து காலி டப்பாவில் நிரப்பினேன். சரி பார்த்துக் கொண்டேன். பேங்க்கை தேர்ந்தெடுத்தேன். பணத்தை கட்டினேன். அந்தச் சுட்டி பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பி எங்கு தொடங்கினோமோ அதே இடத்திற்கு வந்து சேர்ந்தது. கண்ணை விரித்து பார்த்தேன். S6 பெட்டியில் முத்து முத்தாக இரண்டு டிக்கட்டுகள் பதிவாகி இருந்தது. அதற்குள் ஜீடாக்கில் டாக்கிய என் தம்பி S9 கோச்சில் இரண்டு டிக்கட்டுகளை பதிவு செய்து விட்டேன் என்று சொன்னான். வேண்டியது இரண்டு, கிடைத்தது நான்கு! என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. உழைப்பு வீண் போகவில்லை என்று பெருமிதம் அடைந்தேன். என் தம்பி ஃபோன் செய்தான். எதை கான்சல் செய்வது என்று யோசித்தோம். "தாம்பரம் ஸ்டேஷனில் S9 முதலில் வருமா இல்லை S6 முதலில் வருமா?" என்று என்  தம்பியை கேட்டேன். அவன் இப்போது பேட் வேர்ட்ஸ் உபயோகிக்கத் தொடங்கினான். அதற்குள் என் மனைவி, "இரண்டையும் கான்சல் செய்து விடாதீர்கள்!" என்று சீரியசாய் அறிவுரை கூறினாள். ["நான் என்னமோ கிறுக்கன் மாதிரியே பேசுறது"] “சரி நீயே கான்சல் செய்!” என்று என் தம்பியிடம் சொல்லிவிட்டு நிமிர்ந்தேன். அப்போது ஒரு யோசனை, வியர்வை சிந்தி ரத்தம் சிந்தி, காப்பி சிந்தி இந்த டிக்கட்டை வாங்கிய பெருமிதத்தில் இப்போது வெயிட்டிங் லிஸ்ட் நம்பர் என்ன இருக்கிறது என்று பார்ப்போம் என்று அதே ரயிலின் புக்கிங் லிக்கை க்ளிக் செய்தேன்.

128 Available என்றது!