இந்திய வலையுலகில் முதன் முறையாக
திரைக்கே இன்னும் வரவே வராத...!!!
(இன்னும் சன் டீவியில் ட்ரைலர் டார்ச்சரே ஆரம்பிக்காத!!)
சூப்பர் ஹிட் திரைப்படம்
எந்திரன் விமர்சனம்
உங்கள் பெய்யெனப் பெய்யும் மழையில்...
விஞ்ஞானி (குறுந்தாடி மஸ்ட்!) ரஜினி (வசீகரன்) தன் பத்து வருட அயராத உழைப்பால் (நிறைய்ய தாடி = அயராத உழைப்பு!) மனிதனைப் போலவே சிட்டி என்ற பொய் பித்தலாட்டம் தவிர்த்த ஒரு அருமையான மனித ரோபோவை உருவாக்குகிறார். அதற்கு உணர்ச்சிகளை முடுக்கி விட்டதும் தொடங்குகிறது அழிச்சாட்டியம். ஐஸ்வர்யா ராயை கண்டதும் காதல் கொள்கிறது. அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யத் துணிகிறது. அதனால், வேண்டாத சில சமூக விரோதிகளிடம் சிக்கி உலகையே அழிக்கப் புறப்படுகிறது. சிட்டியை வசீகரன் எப்படி அடக்கினார்? அவர் எப்படி இந்த உலகத்தை காப்பாற்றினார்? சிட்டியின் காதல் கை கூடியதா? அதை அவரவர் வசதிக்கேற்ப வெள்ளித் திரையிலோ, திருட்டு டிவிடியிலோ (சொன்னா கேக்கவா போறீங்க!) பார்த்துக் கொள்ளவும்.
ரஜினிக்கு சரியான பெயரை தான் ஷங்கர் வைத்திருக்கிறார். வசீகரன்! 60 வயதிலும் மனிதர் பின்னிப் பெடலெடுக்கிறார். அவரின் வசீகரம் துளியும் குறையவில்லை. ஷங்கர் இந்த வயதிலேயே ரஜினியை இந்த அளவுக்கு காட்டுகிறார், இன்னும் ரஜினி பரட்டைத் தலையுடன் இளமையாய் இருக்கும் காலத்தில் ஷங்கர் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணி ஏங்க வைத்து விடுகிறார். விஞ்ஞானியாய் உறைவதும், ஐஸ்வர்யாவிடம் காதலில் உருகுவதும் என்று ரஜினி பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். வழக்கமாய் ரஜினி படங்களில் கதாநாயகி தான் ரஜினியிடம் உருகுவார். இவர் பாவம் பார்த்து காதலிப்பார். படையப்பாவில் செளந்தர்யாவிடம் உருகும் ரஜினியை பார்க்க எனக்கு பாவமாய் இருந்தது. குஷ்புவே தலைவர் பின்னாடி சுத்தும், இந்த பொண்ணுகிட்ட போய் தலைவரை உருக வச்சிட்டாங்களே என்று! அந்த மாதிரி எந்த ஏக்கமும் இந்தப் படத்தில் வரவில்லை. அழகின் உட்சபட்சம் ஐஸ்வர்யா ராய் என்று ஆகி விட்ட நிலையில் தலைவர் அவர் பின்னாலே அலைவது ஒன்றும் பெரிதாய் இடரவில்லை. ஐஸ்வர்யாவிடம் ரஜினியின் நெருக்கத்தை பார்க்கும் போது, ரஜினியே சொன்னது போல் "அமிதாப் நிலையில் இருந்து "கபர்தார்!" என்று சொல்லத் தோன்றுகிறது.
சிட்டி! பாடலில் வருவதை போல் இனி இது தான் பட்டி தொட்டி எல்லாம் பட்டயை கிளப்பப் போகிறது. ஆறறிவு ரஜினியே இத்தனை ஸ்பீடுடன் இருக்கும்போது நூறறிவு ரஜினி எத்தனை ஸ்பீடாய் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். சும்மா இல்லை, நிஜமாகவே அதிருகிறது! எந்திரனின் காதலில் வசீகரனின் காதல் தொலைந்தே போய் விடுகிறது. ஐஸ்வர்யா ராயை கவர அது பண்ணும் ஜிமிக்ஸ் வேலைகள் அற்புதம். இப்படி நிஜமாகவே ஒரு ரோபோ காதலன் வந்து விட்டால் பெண்கள் நம்மளை எல்லாம் மதிப்பார்களா என்பது சந்தேகம் தான்! ஆனால் ஐஸ்வர்யா தான் "இரவில், நடுவில் பாட்டரி தான் தீரும்!" (என்ன கவலை பாருங்கள்!) என்று ஒதுங்கி விடுகிறார். நிஜமாகவே ஏதோ ஒரு ஆக்ஸிலரேட்டரை உள்ளே வைத்து தைத்ததைப் போல் ரோபோ ரஜினியிடம் அத்தனை வேகம். 60 வயதில் இப்படி ஒரு அதகளம், அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்! ரஜினி தன்னுடைய 35 வருட சினிமா வாழ்க்கையில் இந்த அளவுக்கு எந்த படத்திலும் உழைத்திருக்க மாட்டார் என்பது நிச்சயம். ஷங்கர் பெண்டு எடுத்திருக்கிறார். ரஜினியே சொன்னது போல் ஷங்கர் என்ற குதிரையை கெட்டியாய் தான் பிடித்து உட்கார்ந்திருக்கிறார். சிட்டியின் ஜொள்ளு மனிதர்கள் புரிந்து கொள்ள இது மனித ஜொள்ளு அல்ல என்ற ரேஞ்சுக்கு பன்மடங்காய் இருக்கிறது. சிட்டி ஐஸ்வர்யாவை பார்க்கும்போதெல்லாம் தியேட்டர் அல்லோல கல்லோலப் படுகிறது. தூள் பறத்துகிறார் ரஜினி.
சனாவாக ஐஸ்வர்யா. ஷங்கர் என்ன வீடு படமா எடுக்கிறார், ஐஸ்வர்யா ராய்க்கு நிறைய்ய வேலை கொடுக்க! நல்ல வித விதமா ட்ரெஸ் போட்டுக்கோ, ரகுமான் 6 பாட்டு போட்டுக் கொடுத்திருக்காரு, யாருமே பாக்காத இடத்துக்கு கூட்டிட்டு போறேன் (யூனிட் பூராவும் தாம்மா! நல்லா வேலைய கெடுத்த போ!), நல்லா பாடி, ஆடு...அப்புறம் அப்போ அப்போ இந்த பக்கம் அந்த பக்கம் வந்து போம்மா என்று விட்டு விட்டார். அதை அவரும் செவ்வனே செய்திருக்கிறார். எனக்குத் தெரிந்து, ரஜினி ஐஸ்வர்யாவை படையப்பாவில் நீலாம்பரி கேரக்டரில் நடிக்க வைக்க நினைத்தார். நல்ல வேலை அது கை கூடவில்லை. ரம்யா தான் அதற்கு சரியானவர் என்பது என் அபிப்ராயம். ஐஸ்வர்யா என்ன தான் நடித்தாலும் அவரின் அழகும் பொலிவும் அதை மறைத்து விடும் என்றே தோன்றுகிறது! ஆனால் என்ன தான் மேக்கப் போட்டாலும், ஆணின் 60 வயது எளிதாய் மறைந்து விடுகிறது, ஆனால் பெண்ணின் 35 வயதை மறைப்பது கொஞ்சம் கஷ்டம் தான் போலும்!
பாடல்களை கேட்டதும் உங்களுக்கே புரிந்திருக்கும், எது எங்கு வரும் என்று. எஸ் பி பி பாடி விட்டாலே அது முதல் பாடலாய் தான் இருக்க வேண்டும். புதிய மனிதாவில் படம் தொடங்குகிறது, ரோபோவை கண்டுபிடித்தது போக, வாங்க பழகலாம் டைப்பில் ஐஸ்வர்யாவை லவ்வடிக்கும் போது காதல் அணுக்களும், கிளிமாஞ்ஜாரோ இடைவேளைக்குப் பிறகும் வருகிறது! அரிமாவும், இரும்பிலேயும் ரோபோ ரஜினிக்கு! ஷங்கருக்கு பாடலுக்கு முன் வரும் காட்சியில் ஒரு பானை வந்தால், பாடலில் அதுவே ஒரு 10,000 வேண்டும். ரோபோவை பற்றி கேட்ட்க வேண்டுமா? 1000 ரோபோ ரோபோ ரஜினியுடன் ஆடுகிறது. அந்த வேஷம் கட்டி ஆடுபவர்கள் பாவம் (கருமம் எங்கெங்கெயோ வேர்க்குதே!!)
டானி வில்லன். ரோபோ ரஜினியை தன் சொல்படி எல்லாம் ஆட்டுவிக்க முயற்சிக்கிறார். இறுதியில் ஒரு பெரிய ஹைடெக் குடவுனில் பரிதாபமாய் சாகிறார். மற்றபடி படத்தில் வேறு யாருக்கும் அதிக வேலையில்லை என்றே சொல்ல வேண்டும். சிட்டியிடம் சந்தானமும், கருணாஸும் படும் பாடு சில இடங்களில் கல கல! மற்றபடி நாங்களும் ஷங்கர் படத்தில் நடிச்சிருக்கோம் என்பது போல் வந்து போகிறார்கள்.
ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ஃபுல் மீல்ஸ் ரெடி! மற்றபடி ஷங்கரிடம் இருந்து மற்றொரு பிரம்மாண்ட இரைச்சல்! சங்கர் சார், ஒரு சேஞ்சுக்கு உங்கள் "அழகிய குயில்" ஃபைலை தூசி தட்டி எடுங்களேன்! ஒரு அமைதியான, அடக்கமான, ஆழமான படம் என்றால் எப்படி எடுக்கிறீர்கள் என்று பார்ப்போம்!
டிஸ்க்ளைமர்: கவலைபடாதீங்க, நான் எந்த பிரீமியர் ஷோக்கும் போகலை! ஜக்கு பாய் மாதிரி எந்திரனுக்கு திருட்டு வீசிடியும் வரலை. எல்லாம் ஒரு ஆற்றாமை தான்! பின்ன என்ன? படம் வந்ததும் என்னமோ பண்ணி நீங்க எல்லாம் மொதோ நாள் பாத்துட்டு வந்து கலந்து கட்டி விமர்சனம் போட்ருவீங்க! நான் படம் பாத்துட்டு விமர்சனம் எழுதும்போது ஷங்கரே அடுத்த படம் எடுத்து முடிச்சிடுவாறு! அப்புறம் நான் சிவாஜிக்கு எழுதின மாதிரி தான் விமர்சனம் எழுதணும்! இது தேவையா? அதான் இன்னும் வெளி வராத தலைவர் படத்துக்கு விமர்சனம் எழுதி எஸ்டிடில (எஸ்டிடின்னா? வரலாறு தான்!) இடம் புடிச்சிட்டேன்! உண்மையிலேயே படம் பார்த்த பிறகு நான் மேல் சொன்ன விஷயங்களில் எத்தனை வேறுபட்டு இருக்கின்றன என்று பார்க்க வேண்டும்! அதுவும் இல்லாம ஷங்கர்/ரஜினி படம் எல்லாம் ஒரே மெனு தானே! எதை எவ்வளவு எங்கே போடணும்னு தெரிஞ்சா போதாது! என்ன நான் சொல்றது?