தேன்கூட்டிற்காக
1995 - செளராஷ்ட்ரா காலேஜ், மதுரை.
ஒரு மலையை நோக்கிச் செல்லும் அந்தப் பாதையில் தொடங்கியது என் வாழ்வின் வசந்த காலம். நாம் நடந்து வந்த அந்த வசந்த காலங்களை சற்றே திரும்பிப் பார்க்கும்போதெல்லாம் நம்மையறியாமல் நம் முகத்தில் ஒரு புன்னகை அரும்பும். இன்று என் முகத்திலும் அதே புன்னகை. என் கல்லூரிக் நாட்களை பற்றி வலை பதிய வேண்டும் என்று வெகு நாட்களாய நினைத்துக் கொண்டிருக்கிறேன், அது
சிறில் அலெக்ஸ் மூலம்
குறும்பு என்ற தலைப்பின் மூலமும் இன்று நிறைவேறுகிறது. அதற்கு நான் முதலில் அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்! எத்தனை இனிமையான நாட்கள்? எதிர்காலத்தைப் பற்றி எந்த பயமும் இன்றி, எந்தக் கவலையும் இன்றி பாடித் திரிந்த அந்த நாட்களை அசை போடுவது எனக்கு கசக்கவா செய்யும்? அதிலும் கரும்பு தின்ன கூலி போல் அதற்கு தேன்கூட்டில் பரிசு வேறு கொடுக்கிறார்கள். கல்லூரி வாழ்வில் இல்லாத குறும்புகளா? பேச்சுகளா? கேலிகளா? கிண்டல்களா? [அப்பாடா பில்டப் ஓவர்!]
சீனியர்: பஸ்ட் இயரா?
நான்: ஆமா
சீனியர்: எந்த க்ரூப்?
நான்: பி.எஸ்.எஸ்ஸி. பிசிக்ஸ்
சீனியர்: ஓ, ராணி க்ளாஸா? [பெயர் மாற்றப்படவில்லை]
நான்: இல்லை, ராணி தான் என் க்ளாஸ்!
சீனியர்: ???!!! [வலை நாகரீகம் கருதி அவர் சொன்னது சென்ஸார் செய்யப்படுள்ளது..ஹிஹி]
மாமா கூப்பிட்றாருன்னு அந்த அக்காவை கூப்பிடு என்று என்னை கேர்ள்ஸ் பார்க்குக்குள் அனுப்பி வைத்தார்கள். [பெண்களுக்காக தனியாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும், அதற்கு நாங்கள் வைத்த பெயர் ஜுராஸிக் பார்க்] அங்கெல்லாம் போகக்கூடாது என்று தெரியாமல் ஐ, கேர்ள்ஸ் பார்க் ஆச்சே, ராக்கிங் என்றால் இப்படி இல்ல இருக்கனும் என்று குடு குடுவென ஓடிய என்னை தடுத்து நிறுத்த படாத பாடு பட்டுப் போனார்கள் சீனியர்கள்!
நான் போன ஜென்மத்தில் செய்த புண்ணியமோ என்னமோ, காலேஜே சைட் அடிக்கும் ஒரு பெண் என் க்ளாஸில் இருந்தது. பசங்க எல்லாம் சேந்து என்னை அவளிடம் முதலை கதை சொல்லச் சொன்னார்கள். முதலை கதை உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும், தெரியாதவர்களுக்கு கதையாகப்பட்டது என்னவென்றால்...
முதலை இருக்கும் ஒரு குளத்தில் நீங்கள் இறங்குகிறீர்கள், அது உங்கள் காலை பிடித்துக் கொள்கிறது நீங்கள் என்ன சொன்னால் அந்த முதலை உங்கள் காலை விடும்? இது கேள்வி, நீங்கள் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் என்ன பதில் சொன்னாலும் அப்படி சொன்னா விட்ருமா? என்று கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இது தான் விஷயம்.
தெரியலை நீயே சொல்லு என்றாள்.
தெரியலை நீயே சொல்லுன்னா விட்றுமா? என்றேன்
என்ன சொல்றது என்று சிரித்தாள்
என்ன சொல்றதுன்னா விட்றுமா?
ஐய்யோ, ஆளை விடு பிரதீப்
ஐய்யோ, ஆளை விடு பிரதீப்ன்னா விட்ருமா?
ஒன்றும் சொல்லாமல் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்
இப்படி ஒன்னும் சொல்லாம சிரிச்சுட்டே இருந்தா விட்ருமா?
அவள் சிரிப்பில் மயங்கி..நான் பசங்களை பார்த்தேன். டேய் ஒரு வேளை இவ சிரிச்சா முதலை விட்ருமோன்னேன்! யாரும் இதை எதிர்பார்க்கவில்லை, எல்லோரும் மிகவும் ரசித்து சிரித்தார்கள்!
சீனியர் பெண்களிடம் கடலை போடுவது என் தலையாய கடமை. அதிலும் இந்த சேம் சேம் ஸ்வீட் விளையாட்டு இருக்கே..இரண்டு பேர் ஒரே கலரில் ட்ரஸ் போட்டிருந்தால் யார் முதலில் சேம் சேம் ஸ்வீட் சொல்கிறார்களோ அவருக்கு இன்னொருவர் சாக்லேட் வாங்கித் தரணும். அதிலும் காலேஜ் பெண்களுக்கு காட்பெரீஸுக்கு கீழ் மிட்டாய்கள் இருப்பதே தெரியாது. நான் அதற்கு மசியவே மாட்டேன். ஜீரக மிட்டாய் ஒரு பாக்கெட் வாங்கி ஆளுக்கு 2 தர்றேன் வாயில போட்டுக்குங்க என்று நழுவி விடுவேன். இன்னொரு முறை இப்படித் தான் ஒரு பெண் சேம் சேம் ஸ்வீட், கிவ் மீ எ ஸ்வீட் என்றாள், நானே ஸ்வீட், என்கிட்ட போய் வேற ஸ்வீட் கேக்குறியே என்றேன், அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்திருக்க வேண்டும்! [இனிமே ஸ்வீட் கேப்பியா? கேப்பியா?]
ஜீனியர் நானே இப்படி இருந்தால் என் சீனியர்ஸ் எப்படி இருப்பார்கள்! என் தம்பியும் என் காலேஜில் என் க்ரூப்பில் என் ஜீனியராய் சேர்ந்தான்! ஒரு செமஸ்டர் முடிந்து ரிசல்ட் வந்ததும் என் சீனியர் ஒருவர், என்ன உன் தம்பி எப்படி மார்க் எடுத்துருக்கான் என்று கேட்டார். நானும் தெனாவட்டாய், சூப்பர் மார்க், அள்ளிட்டான்ல யாரு ட்ரைனிங் எல்லாம் ஐய்யா தான் என்று என் காலரை உயர்த்தி பீத்திக் கொண்டிருந்தேன். அவர் அமைதியாய், நல்ல வேளை உன் தம்பி நீ சொல்லித் தந்ததை கவனிக்கலைன்னு நினைக்கிறேன் என்றார். சீனியர் சீனியர் தான்!
காலேஜில் மாடல் எக்ஸாம் என்று ஒன்று வைப்பார்கள். செமஸ்டர் வருவதற்கு முன் ஒரு தடவை மாதிரி பரிட்சையாம்! செமஸ்டருக்கு படித்து பாஸாவதே பெரிய விஷயம், இதில் மாடல் எக்ஸாம் வேறு. மாதிரி பரிட்சை என்றாலே எல்லோருக்குள்ளும் ஒரே போட்டி தான்..பரவாயில்லையே, படிப்புன்னா போட்டி இருக்கனும் என்று புருவம் உயர்த்தாதீர்கள், போட்டி, யார் முதலில் எக்ஸாம் ஹாலில் இருந்து வெளியே வருவது என்று! இதற்கு நைட் ஸ்டடி வேறு போட வேண்டும், அப்பா எத்தனை வேலைடா..என் நண்பனின் பாட்டி விட்டிற்கு கூட்டமாக கிளம்பி விடுவோம். பக்கத்தில் தான் அலங்கார் தியேட்டர். அப்போது அங்கே தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே [இதை படிக்கவே உங்களுக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கே, நான் அடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்?] என்ற ஹிந்திப் படம் ஓடிக் கொண்டிருந்தது. பரிட்சை நடந்த அத்தனை தினங்களும் நைட் ஸ்டடி அங்கு தான்..ராத்திரி கண் விழித்து படம் பார்த்து விட்டு, பரிட்சை ஹாலில் தூங்காமல் முதல் ஆளாய் வெளியே வருவதில் இருக்கும் கஷ்டம் அனுபவித்தால் தான் தெரியும். ஹாலில் பசங்க அநியாயம் பண்ணுவாங்க. கேள்வித் தாளை தரும்போது, சிலர் இது எதுக்கு சார் என்று வந்தவரை கலாய்ப்பார்கள்.ஒரே ஒரு பேப்பர் தான் வாங்குவார்கள். அதில் முதல் 2 வரி தான் எழுதப் பட்டிருக்கும். அதுவும் கேள்வியாய் தான் இருக்கும். அந்த ஒரு பேப்பருக்கு சார் நூல் என்று ஒருத்தன் எழுந்து நிப்பான். வாங்குவது ஒரு பேப்பர், அதையும் பின்னால் இருப்பவனுக்கு பார்த்து எழுத கொடுத்து விட்டு வெறும் மேஜையில் தலை கவிழ்ந்து படுத்திருந்தான் ஒருவன். சூப்பர்வைசர் அவனை பார்த்து அதிர்ந்து பேப்பர் எங்கே என்றார், அவன் மெல்ல அழுகும் குரலில், இவன் பாத்து எழுத வாங்கிட்டு தர மாட்றான் சார் என்றான். அவருக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. அவர் காப்பி அடித்துக் கொண்டிருந்தவனிடம், பேப்பரை வாங்கி பார்த்து அதிர்ந்து கேட்டார், ஏன்டா அவனே 2 வரி எழுதியிருக்கான். அதை நீ வேற பாத்து எழுதுறியா குட்றா அவன் பேப்பரை என்று கடிந்து கொண்டார். இது எப்படி இருக்கு?
ஒரு நாள் லஞ்ச் முடிந்து எல்லோரும் தூங்கி வழிய ஏதோ ஒரு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. வகுப்பில் அவரவர் பெஞ்சில் தலை சாய்த்து படுத்திருந்தோம். ப்ரொஃபஸருக்கோ பரந்து விரிந்த தலை..வழுக்கை சார்! திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம். என் பக்கத்தில் சுகமாய் தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பினேன். அவன் தூக்கத்தை கெடுத்த கடுப்பில் என்னடா, சொல்லித் தொலை என்றான். நான் மெல்ல அவனிடம், டேய் மாப்ளே..இந்த ஆளு எப்பிட்றா முகம் கழுவுவாரு? ரொம்ப தூரம் கழுவ வேண்டி இருக்கும்ல..ரொம்ப கஷ்டம்டா..என்றேன்! அவன் சிரிப்பை அடக்க முடியாமல் அடிவயிற்றை பிடித்துக் கொண்டு பெஞ்சுக்கு அடியில் சரிந்து விட்டான்.
இப்படித் தான் ஒரு வாத்தி போர்டில் ட்ரான்ஸிஸ்டர் [இது
98.3 FM ட்ரான்ஸிஸ்டர் இல்லை, பிசிக்ஸ் ட்ரான்ஸிஸ்டர்பா..] படத்தை போட்டார். நாங்களும் தூக்கம் வராம இருக்க ரொம்ப பொறுப்பா அதை நோட்ல வரஞ்சோம். அவர் வெறுத்து போய் இந்த படத்தை தான் நான் டெய்லி போட்றேன், இதை ஆயிரம் தடவைக்கு மேல போட்டாச்சு என்றார்! [எல்லாம் ஒரே கட்டம் கட்டமா தான் இருக்கு...யாரு கண்டா!] ஒரு வேளை இது தான் வாத்தி குறும்பா?
கெமிஸ்ட்ரி லேப் என்றாலே டெஸ்ட் ட்யூப்களும், பியுரட்டுகளும், பிப்பட்டுகளும் வைத்து ஜிமிக்ஸ் வேலை காட்டுவது தானே..அங்கு இருந்த வாத்தியாருக்கு பசங்க என்ன பேர் வச்சுருப்பாங்கன்னு நினைக்கிறீங்க? ஜீபூம்பா! [ஹைட் ஆஃப் க்ரேயேடிவிட்டி!] சால்ட் அனாலிஸிஸ் என்று ஒன்று உண்டு. ஏதாவது ஒரு உப்பை கொடுத்து அதற்கான பல சோதனைகள் செய்து அது சோடியம் க்ளோரைடா, கால்சியம் கார்பனைட்டா இப்படி எத்தனையோ வகையறாக்களில் எது என்று கண்டு பிடிக்க வேண்டும்! ஒரு உப்பை வாங்கிப் பார்த்து அதன் தன்மைக்கேற்ப சோதனைகள் செய்தால் அது என்ன உப்பு என்று தெரியும், எனக்குப் பிடித்த பெண் எங்கே போகிறாளோ, என்ன செய்கிறாளோ அதையே செய்து கொண்டிருந்தால், உப்பை எங்கேயிருந்து கண்டு புடிக்கிறது. ஒரு மண்ணும் வராது..நேரா ஜீபூம்பாகிட்ட போவேன், அவர் ஒரு பெரிய நோட்டை வச்சிருப்பார். அதில் என் பெயருக்கு நேரே எனக்கு என்ன உப்பு கொடுக்கப் பட்டது என்று எழுதியிருக்கும். நான் செய்த சோதனைகளை வைத்து அது எந்த உப்பு என்று சொல்ல வேண்டும். நான் சொன்னதும் நோட்டில் உள்ளதும் ஒன்றாக இருந்தால் பெருசா என்ன செஞ்சிடுவாரு, இன்னொரு உப்பை தூக்கி கொடுப்பாரு! நான் போனவுடன் அந்த நோட்டை எட்டிப் பார்ப்பேன், அவர் கொஞ்சம் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு நோட்டை மறைத்து கொள்வார்...அடடா இன்ஸல்ட் ஆகிப் போச்சே!..இப்போ என்ன செய்றதுன்னு தெரியாம நான் முழிப்பேன்..அவர் ம்..என்ன உப்பு சொல்லும்பார். நான் காப்பர் சல்ஃபேட் சார் என்பேன்! அவர் நோட்டைப் பார்த்து இல்லையேப்பா என்பார். சார், இல்லை சார், இது அம்மோனியம் சல்ஃபேட் என்பேன்..இல்லையே என்பது போல் தலையசைப்பார். அவர் வெறுத்து போய் இது மக்னீசியம் க்ளோரைட் பா என்பார். கரெக்ட் சார் என்று நான் வந்து விடுவேன்! நம்ம தப்பா சொன்னா அவர் சரியா சொல்றாரே, இவர் ரொம்ப நல்லவர்டா என்று பசங்களிடம் அவர் பெருமை வளர்த்து விட்டேன்!அதற்குப் பிறகு நான் சோதனை செய்வதையே நிறுத்திக் கொண்டேன்....
இந்தக் கடைசி புள்ளிகளில் தொத்திக் கொண்டு நிற்கின்றன என் எஞ்சி இருக்கும் கல்லூரி நாட்கள், இன்னும் எத்தனையோ குறும்புகளுடனும், கும்மாளங்களுடனும்! [இன்னா ஓபனிங்! இன்னா பினிஷிங்!! ஹார்ட் டச் பண்டியே கண்ணு!]