இன்று மதியம் வைகையில் அம்மா அப்பாவை மதுரைக்கு ரயில் ஏற்றி விட தாம்பரம் சென்றிருந்தேன். காரை [நான் கார் வாங்கி விட்டேன் என்று அறிக!] நிறுத்தி விட்டு, சக்கரம் வைத்த பெட்டியை இழுத்துக் கொண்டு ரயில் நிலையத்தில் நுழைந்தேன். படி ஒரு பக்கம், சறுக்கல் ஒரு பக்கம் இருந்தது. பெட்டி கனமாக இருந்ததால், படி பக்கம் செல்லாமல் சறுக்கல் வழியாய் இழுத்துக் கொண்டு சென்று விடலாம் என்று நினைத்தேன். அருகில் சென்றவுடன் அந்த சறுக்கல் எச்சி துப்பவும், சிறுநீர் கழிக்கவும் அமைக்கப்பட்டது என்று அறிந்தேன். பெட்டியை தூக்கிக் கொண்டு படியில் ஏறினேன்.

ஊருக்குச் செல்லும் ரயில்கள் என்ன என்ன? எந்த இடத்தில் வந்து நிற்கும்? எந்த வித அறிவிப்பு பலகையும் என் கண்ணில் படவில்லை. சரி, எட்டு அல்லது ஒன்பதாவது நடைமேடையில் தானே வரும், தெரிந்தது தானே என்று படியில் ஏறினேன். மடியில் இல்லை என்றாலும், கையில் கணம் வேறு! ஏறி முடிந்ததும் ஒரு குன்றின் மீதே ஏறிவிட்ட அனுபவம்ரயில் நிலையங்களில் உள்ள படிகளுக்கு பயந்தே பலர் ரயிலில் பிரயாணிப்பதில்லை. நம் கனத்தை தூக்கிக் கொண்டு ஏறுவதே கொடுமை, இதில் பெட்டி படுக்கை வேறு!! என்னை போன்ற டி யில் வேலை செய்பவர்களும், வயதானவர்களும் பாவம் தானே? மாற்றுத் திறனாளிகள் எப்படி ரயில் பிரயாணம் செய்வார்கள் என்றே தெரியவில்லை. அதற்கு ஒரு ஏற்பாடும் ரயில் நிலையத்தில் நான் பார்க்கவில்லை. [என் கண்ணில் தான் கோளாறா?] மாடியில் ஏறி பார்த்தால் ஒரு நீண்ட நடைபாதை. நாங்கள் ஒன்னாவது நடைமேடைக்கு அருகில் நிற்கிறோம், எங்கள் வண்டி ஒன்பதாவது நடை மேடைக்கு வரும். சரி இனி கவலையில்லை, பெட்டியை தள்ளிக் கொண்டே செல்லலாம் என்று நினைத்து இழுத்தேன். கர கரவென்று ஒரு சத்தம். என்னடா என்று பார்த்தால், அந்த நடைபாதைக்கு இடைவெளியுடன் கூடிய அழகான தரை அமைத்திருக்கிறார்கள். அதன் அமைப்பு ஒரே சீராய் இல்லாததால் அப்படி ஒரு சத்தம். கடந்து செல்பவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே போனார்கள். என் நேரம், அந்த நேரத்தில் வேறு எவனும் அப்படி ஒரு பெட்டியுடன் தள்ளிக் கொண்டு வரவில்லை. இல்லையென்றால் எல்லோருக்கும் கரகர ஒழி பழகி இருக்கும். கூட்டத்தோடு கூட்டமாய் நானும் சென்றிருப்பேன். மூணாவது நடைமேடை அருகில் வந்ததும், என்னாலேயே அந்த சத்தத்தை தாங்க முடியவில்லை. கையில் தூக்கிக் கொண்டேன்.

வெயில் அதிகம் என்றாலும், அந்த உயரத்தில் நல்ல காற்று வந்தது. இதமாய் இருந்தது. ஒரு பரதேசி மாதிரி ஒரு நாள் இந்த நடைபாதையில் துண்டு விரித்து படுத்தால் என்ன என்று கூட தோன்றியது. என்ன ஒரு கூட்டம், என்ன ஒரு அவசரம். எத்தனை முகங்கள், எத்தனை வாழ்க்கை. எழுத்தாளனாய் [யாரு, நீயா?] இருப்பது இந்த மாதிரி சமயத்தில் உதவும். எல்லோரையும் ஆராய்ந்து கொண்டு, எதையாவது கற்பனை செய்து கொண்டே நடந்தால், பாதையின் தூரமும், கையில் பாரமும் தெரியாது.

அறிவிப்பாளர் விடாமல் "இரண்டாம் நடைமேடையில் உள்ள வண்டி ஷெட்டுக்கு செல்லும் என்று கூவிக் கொண்டிருந்தார்" வண்டியில் அமர்ந்த எத்தனை பேர் திட்டிக் கொண்டே இறங்கினார்களோ! ஒரு வழியாய் ஒன்பதாவது நடை மேடைக்கு அருகில் வந்தேன். நடைமேடைக்குச் செல்ல படியில் இறங்கலாம் என்று பார்த்தால் நந்தி மாதிரி சில பயணிகள் அமர்ந்து ஊர் கதை பேசிக் கொண்டிருந்தார்கள். அது எப்படி சரியாய் படியின் நடுவில் இடம் பிடிக்கிறார்கள் என்று புரியவில்லை. "வாழு, வாழவிடு" என்ற பழமொழி நம் மக்களின் மனநிலையை வைத்து தான் எழுதி இருப்பார்கள் போலிருக்கிறது.

ஒரு வழியாய் படியில் இறங்கி நடைமேடையில் கால் வைத்ததும் ஒரு பலகையில் "நடைமேடை சீட்டை வாங்கி வாருங்கள்" என்று ஒரு அறிவிப்பு. நான் ரயில் நிலையத்தில் உள்ளே நுழைந்து ஒரு பலகை தேடினேனே, அங்கு இருக்க்க வேண்டிய பலகை இது! ஒன்றரை கிலோ மீட்டர் நடந்த பிறகு வைத்திருக்கிறார்கள். சரி இங்காவது வைத்திருக்கிறார்களே என்று என்னை நானே நொந்து கொண்டு எங்கள் [ரயில்] பெட்டி எங்கு வரும் என்ற பலகையை நோக்கினேன். இது கண்டிப்பாய் முற்ஃபி விதி தான். முற்ஃபி விதி தெரியாதவர்கள இங்கு பார்க்கவும்

"நம்முடையது எந்த பெட்டியை இருந்தாலும், அது நடைமேடையின் கடைசியில் தான் வரும்!" எங்கள் பெட்டி "D2 ", அது பதினேழாம் என் பலகைக்கு அருகில் வரும் என்று போட்டிருந்தார்கள். நாங்கள் ஒன்றாம் எண் பலகையின் அருகில் கூட இல்லை! நான் என் பெற்றோர்களை அதை நோக்கி நடக்கச் சொல்லி விட்டு, நடைமேடை சீட்டு வாங்கி வரக் கிளம்பினேன். இங்கு இன்னொரு முற்ஃபி விதி இருக்கிறது.

"நாம் என்று நடைமேடை சீட்டு வாங்கவில்லையோ, அன்று பரிசோதகர் கண்டிப்பாய் வருவார்!"

புத்திசாலித்தனமாய் முன் பக்க நுழைவாயில் கவுண்டருக்கு செல்லாமல் பின் பக்க நுழைவாயில் கவுண்டருக்கு சென்றேன். கவுண்டருக்கு வெளியே இரண்டு வரிசை நின்றிருந்தது. வெள்ளிக் கிழமை முற்பகல், ஒரு மணிக்கு இத்தனை கூட்டம்! நம் நாட்டில் மக்கள் எங்கேயாவது போய் கொண்டே இருக்கிறார்களா? வேலை வெட்டியே இல்லையா என்று தோன்றியது. எத்தனையோ முறை ரயில் நிலையம் சென்றிருந்தாலும், நடைமேடை சீட்டு எடுத்திருந்தாலும், வரிசையில் முன்னாள் இருப்பவரிடம் ஒரு கேள்வியாவது கேட்க வேண்டி இருக்கிறது! கேட்டேன், சார், பிளாட்பாரம் டிக்கட்டுக்கு எந்த க்யு? அவர் அதாரட்டி மாதிரி பலருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாத்துக்கும் ஒரே க்யு தான் என்றார் என்னிடம். அமைதியாய் நின்றேன். இருந்தும், ஒரு சந்தேகம். ஏனென்றால் அரை மணிநேரம் க்யூவில் நின்று விட்டு கவுண்டரில் பணம் கொடுத்தால் அது பக்கத்து கவுண்டர் என்று இரக்கமே இல்லாமல் திருப்பி அனுப்பி விடுவதில் நம் ஆட்கள் வல்லவர்கள். சுற்றி முற்றி பார்த்ததில் "Any Ticket Any Counter" என்று ஒரு வாசகம் கண்ணில் பட்டது. அப்பாடா, இவர் சொன்னது சரி தான்! ஆனால் "Any Ticket Any Counter" என்னும் அந்த முறை எத்தனை சரி என்று தெரியவில்லை. ஊருக்கு போக டிக்கெட் எடுப்பவன், எலெக்ட்ரிக் ட்ரெயினில்பயணம் செய்ய டிக்கட் எடுப்பவன், நடைமேடை டிக்கட் எடுப்பவன் என்று எல்லோருக்கும் ஒரே வரிசை என்பது சரியான முறை அல்ல என்றே பட்டது. நடைமேடை சீட்டு வாங்க எனக்கு ஒரு நிமிடம் ஆகாது, ஊருக்கு போக டிக்கட் எடுப்பவனுக்கு அப்படியா? இதற்காக ஒரு தனி வரிசை இருந்தால் தானே சுலபம் என்று தோன்றியது

நடைமேடை சீட்டுக்கென்று மெஷின் வைத்து பார்த்தார்கள், ஒன்றும் சரிப்படவில்லை. நானும் பொறுமையாய் காத்திருக்க ஆரம்பித்தேன். பெண்களுக்கு தனி வரிசை இல்லை என்று கண்டிப்பாய் சொல்லி இருந்தார்கள். ஏன் என்று தெரியவில்லை. எப்போதும் நடப்பது போல, வெளியே வருபவர்கள், வரிசையில் சரியாய் என் அருகில் வந்து நுழைந்து அந்தப் பக்கம் சென்றார்கள். இது ஏன் என்றே எனக்கு இன்று வரை புரியவில்லை. வழக்கம் போல, "நீங்கள் எந்த வரிசையில் இருக்கிறீர்களோ, அதற்கு அடுத்த வரிசை தான் வேகமாய் நகரும்!" என்ற முற்ஃபி விதி இன்று வேலை செய்யவில்லை. என் வரிசை சற்று வேகமாகவே நகர்ந்தது. ஆச்சர்யமாக இருந்தது! பக்கத்து வரிசையில் ஒருவர் "அந்த ஒரே ஆளு, அரைமணி நேரமா நிக்கிறான்யா" என்று பொறுமை இழந்து கொண்டிருந்தார். இது வரை என் வாழ்க்கையில், வரிசையில் நிற்கும் ஒருவர் எந்த வித சலிப்பும், புலம்பலும் இல்லாமல் நான் பயணச் சீட்டு வாங்கியதாய் எனக்கு நினைவே இல்லை. குறிப்பாக தாம்பரத்தில்!

வழக்கம் போல ஒரு பிரகஸ்பதி கூட்டம் எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்பதை போல மெல்ல வரிசையில் தன்னை சொருகிக் கொண்டான். சரியாய் என் பின்னால் வந்து தன்னை வரிசையுடன் இணைத்துக் கொண்டான், என் பின்னால் இருந்த மார்வாடி ஒன்றும் சொல்லவில்லை. என் முன்னால் அவன் வந்திருக்க வேண்டும்! நாக்கு என்ன, கண்ணு, காத்து, மூக்கு புடுங்குற கேட்டுருப்பேன். தப்பிச்சிட்டான். நம் மக்களின் மனநிலையே அப்படித் தான் இருக்கிறது. எப்படியாவது அவர்களுக்கு குறுக்கு வழி ஒன்று வேண்டும். அங்கு நிற்கும் நேரத்தை மிச்சம் பிடித்தால் அவன் எதோ, நோபல் பரிசு வாங்கி விடுவது மாதிரி!

என் முறை வந்தது. எவ்வளவு என்று தெரியாமல் என் பையில் உள்ள அத்தனை சில்லறையையும் கையில் வைத்திருந்தேன். ஐந்து ரூபாய் கொடுத்து சீட்டு வாங்கிக் கொண்டு நடந்தேன். படியில் இறங்கி நடைமேடையில் பதினேழாம் என்னை தேடினால் கண்ணிலேயே படவில்லை. ரயிலுக்காக காத்திருக்கும் எல்லோரையும் தாண்டி சென்று கொண்டே இருந்தேன். இதையே நான் ஜி எஸ் டி சாலையில் நடந்திருந்தால் தாம்பரம் சானிட்டோரியம் வந்திருக்குமோ என்று தோன்றியது! பதினேழு தான் கடைசியோ என்று நினைத்தால் அதற்கு மேல் பலகைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அடக் கடவுளே!  

என் அப்பா, வீட்டில் "D2" கோச் பார்த்ததும் எஞ்சின் அருகில் வரும் என்று சொன்னார். அவருக்குத் தான் முற்ஃபி விதி தெரியாதே!

மதுராபுரி ஒரு அழகான சிற்றூர். ஆறுகளும், மலைகளும், பச்சை போர்வை போர்த்திய வயல்களும் பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாகத் திகழ்ந்தது. அந்த ஊர் மக்கள் அனைவரும் மிக நல்லவர்கள். யாருக்கும் எந்த வித தீங்கும் செய்யாமல், ஒருவருக்கொருவர் உபகாரமாய் வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரை சுற்றி அடர்ந்த காடு ஒன்று இருந்தது. ஒரு முறை, வெகு தொலைவிலிருந்து கள்ளகன் என்ற அரக்கன் அங்கு வந்து சேர்ந்தான். அவன் மதுராபுரியை பற்றி வரும் வழி எல்லாம் நிறைய கேள்விப்பட்டிருந்தான். நெடுந்தூரமாய் பயணம் செய்து வந்த அவன் மிகவும் களைத்து போயிருந்தான். இனிமேல் சில நாட்கள் இங்கே தங்கி ஓய்வெடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அதிலும் மதுராபுரியை சேர்ந்த மக்கள் எல்லாம் செல்வச் செழிப்பாக கொழு கொழுவென்று இருப்பார்கள் என்று அவன் கேட்டிருந்தான். அதை நினைக்கும்போது அவன் நாக்கில் அப்போதே எச்சில் ஊறியது.

அப்போது மதுராபுரியைச் சேர்ந்த வேலப்பன் அந்த வழியாய் பக்கத்து ஊருக்குச் சென்று கொண்டிருந்தான். உடனே இது தான் சமயம் என்று அவன் முன் கள்ளகன் தோன்றினான். வேலப்பன் இத்தனை பயங்கரமான அரக்கனை பார்த்து குலை நடுங்கிப் போனான். கள்ளகன் பயங்கரமாகச் சிரித்தான். வேலப்பனுக்கு மயக்கமே வந்து விடும் போல் இருந்தது. தயவு செய்து என்னை கொன்று விடாதே என்று கெஞ்சினான். அதற்கும் அரக்கன் பலமாகச் சிரித்தான். சிரித்து ஓய்ந்ததும், கள்ளகன் வேலப்பனிடம், "இதோ பார், நான் இப்போது கடுமையான பசியில் இருக்கிறேன். இருந்தும் இப்போது நான் உன்னை கொல்ல மாட்டேன். நான் இந்த வனத்தில் தான் இன்னும் சிறிது காலம் தங்கப் போகிறேன். நான் மதுராபுரியை பற்றி நிறைய கேள்விபட்டிருக்கிறேன். அதன் செல்வச் செழிப்பும் நான் அறிவேன். அதனால் நீ உன் ஊருக்குச் சென்று என்னை பற்றி கூறி தினமும் எனக்கு ஒரு வண்டி சோறு, ஒரு வண்டி குழம்பு, ஒரு வண்டி ரசம், ஒரு வண்டி தயிர், ஒரு வண்டி கூட்டு, ஒரு வண்டி பொறியல், ஒரு வண்டி கோழி முட்டை, ஒரு கோழி, ஒரு ஆடு, ஒரு மாடு, ஒரு மனிதன் ஆகியவற்றை ஏற்பாடு செய். அதனால் தான் உன்னை இப்போது உயிருடன் விடுகிறேன். நாளை முதல் எனக்கு இது வந்து சேர வேண்டும், இல்லையென்றால் நான் ஊருக்குள் புகுந்து ஊரையே அழித்து விடுவேன்." என்றான். இதைக் கேட்ட வேலப்பன் வெலவெலத்துப் போனான். தலை தப்பியது புண்ணியம் என்று நினைத்தாலும், தன் ஊர் மக்களை நினைத்து வருந்தினான்.

ஊருக்கு வந்த வேலப்பன் ஊரில் உள்ள அனைவரையும் கூப்பிட்டு நடந்தவைகளை ஒன்று விடாமல் சொன்னான். இதைக் கேட்ட அனைவருக்கும் கை, கால் ஓட வில்லை. என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. அரக்கன் முன் சாதாரண மனிதர்கள் என்ன செய்ய முடியும் என்று தங்கள் விதியை நினைத்து நொந்தனர். பின்னர், கள்ளகன் கேட்டதை எல்லாம் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள். பெரிய குடும்பத்திலிருந்து, குடும்பத்திற்கு ஒருவரை, அதாவது முதலில் வயதானவர்களை, பிறகு ஆடவர்கள், பிறகு பெண்கள், பிறகு குழந்தைகள் என்று அரக்கனிடம் அனுப்ப முடிவு செய்தார்கள். அதன் படியே மறுநாளிலிருந்து செய்ய ஆரம்பித்தார்கள். சோறு இன்னும் ரெண்டு வண்டி கேட்டாலும் கொடுக்கலாம், இப்படி நாளுக்கு ஒருவரை பலி கொடுப்பது அவர்களால் தாங்க முடியவில்லை. ஆனால் கள்ளகன் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவேயில்லை. அவன் அவனுக்கு தினமும் வரும் விருந்தில் அக மகிழ்ந்து போயிருந்தான். இத்தனை காலம் இந்த ஊரை வந்து சேராதது எத்தனை தவறு என்று தன்னையே நொந்து கொண்டான்.

நாட்கள் செல்லச் செல்ல மதுராபுரியில் மக்கள் தொகை மிகவும் குறைந்து விட்டது. அந்த ஊரே களையிழந்து விட்டது. யாருக்கும் எதிலும் மனம் ஒட்டவில்லை. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருந்த ஊரில் சாவுக் கலையே தாண்டவமாடியது. அப்போது அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்தார். மக்கள் அவரிடம் நடந்தவைகளை சொல்லி புலம்பினர். சாமியார் அவர்களை ஆறுதல் படுத்தி விட்டு, சிறிது நேரம் நிஷ்டையில் அமர்ந்தார். மக்கள் அனைவரும் அவரை நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் அவரின் முகம் ஒளிர்ந்தது. மெதுவாய் கண்ணை திறந்த சாமியார் மக்களை பார்த்து புன்னகை பூத்தார். பிறகு திடீரென்று அவர் முகத்தில் இருந்த ஒளி மங்கியது. மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஊர் பெரியவர் ஒருவர் சாமியாரிடம் விசாரித்தார். சாமியார், "கள்ளகனை கொல்ல என்ன வழி என்று என் ஞான திருஷ்டியில் கண்டு கொண்டேன்!" மக்கள் அனைவரும் ஆரவாரத்தால் குதூகளித்தனர். ஊர் பெரியவர், சொல்லுங்கள் சாமி, என்ன கண்டீர்கள் தங்கள் ஞான திருஷ்டியில், எப்படி அவனை கொல்வது, என்று வினவினார். சாமியார், வெகு நாட்களுக்கு முன், ஒரு முறை கள்ளகன் இரை தேடிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு பூனைக் கூட்டத்தை கண்டான். அந்தக் கூட்டம் முழுவதையும் அடித்துச் சாப்பிட்டான். கடைசியில் ஒரு வயதான பூனை ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தது. அதனை உண்பதற்காக அதை பிடித்து அதனுடைய கழுத்தை அழுத்தும்போது, அதிசயமாய் அந்த பூனை பேசியது. என் கண்ணுக்கு முன்னே என் கூட்டத்தை இரக்கமில்லாமல் ஒழித்த உன்னை நான் சபிக்கிறேன் என்றது. அதைக் கேட்ட கள்ளகன் ஆத்திரம் கொண்டு, சீ, வாயை மூடு கிழப் பூனையே! கேவலம் பூனை நீ, நீயா என்னை கொல்வது? இதோ, நான் உன்னை இப்போது கொன்று விடுகிறேன் பார்" என்று அதன் கழுத்தை மேலும் அழுத்தினான். உடைந்த குரலில் அந்தப் பூனை, இன்னும் சில காலங்களில் என்னை போலவே ஒரு பேசும் பூனையை நீ பார்ப்பாய், அதனிடம் "இதோ, நான் உன்னை இப்போது கொன்று விடுகிறேன் பார்" என்று சொன்னவுடன் உன் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடும். அதோடு இப்படி ஒரு சாபம் உனக்கு இருப்பதை நீ மறக்கக் கடவது என்றும் சபித்து விட்டது என்றார்.

ஊர் மக்கள் இதை வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். வாய் வரை சென்ற உணவை தட்டிப் பறித்தது போல் ஆகிவிட்டது ஊர் மக்களுக்கு. இந்தப் பேசும் பூனையை எங்கே தேடுவது? பூனை எங்காவது பேசுமா? அப்படி ஒரு பூனை இந்த உலகில் இருக்கிறதா? அப்படி இருந்தாலும் எப்படி அதை தேடிக் கண்டுபிடிப்பது என்று பல வித கேள்விகள், குழப்பங்கள் எழுந்தன. அப்போது கூட்டத்திலிருந்து "இந்த வேலையை நான் செய்கிறேன்" என்று ஒரு குரல் வந்தது. கூட்டத்தை விளக்கி ஒரு சிறுவன் வந்தான். எல்லோரும் அவனை ஆச்சர்யமாய் பார்த்தார்கள். அந்த சிறுவன் பொன்னன். தன் வயதான பாட்டியுடன் அந்த ஊரில் வாழ்ந்து வந்தான். சிறு வயதிலேயே அவனுடைய தாய் தந்தை இறந்து விட்டார்கள். பாட்டி தான் அவனை வளர்த்து வந்தாள். பொன்னன் மிகவும் புத்திசாலி! ஊருக்கே அவன் செல்லப் பிள்ளை. கள்ளகனுக்கு உணவாக அவன் பாட்டி தான் அடுத்து செல்ல வேண்டியிருந்தாள். அதை நினைத்து வருந்திக் கொண்டிருந்த நிலையில் சாமியாரின் இந்த உபாயம் பொன்னனுக்கு கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்தது. சாமியார் அவனை அருகில் அழைத்து பொன்னனை ஆசிர்வதித்தார். பொன்னன் பூனையை கொண்டு வரக் கிளம்பினான்.

மறுநாள் அதிகாலை எழுந்து பொன்னன் சுத்தமாகக் குளித்தான். அரக்கனுக்கு கொண்டு செல்ல வேண்டிய அனைத்து பொருட்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டான். அதோடு தன்னிடம் உள்ள பேசும் பூனையை பெட்டியில் வைத்துக் கொண்டான். அரக்கனின் இடம் நோக்கி விரைந்தான். கள்ளகன் மிகவும் பசியுடன் இருந்தான். உணவின் நறுமணம் அவன் உணர்ந்ததும், அவன் குகை விட்டு வெளியே வந்தான். அவனால் இனிமேலும் பொறுக்க முடியவில்லை. உணவை எடுத்து வாயில் வைக்கும்போது பொன்னன், கள்ளகரே நில்லும், இன்று நீங்கள் உண்ணப் போகும் மானுடன் நான் தான். நீங்கள் உணவை உண்பதற்கு முன் தங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்றான். வயதானவர்களையே தின்று சலித்திருந்த கள்ளகனுக்கு பிள்ளைக் கறி என்றதும் குதூகலமாய் இருந்தது. சரி வேகமாய் சொல், நான் மிகவும் பசியுடன் இருக்கிறேன் என்றான். இது தான் சமயம் என்று நினைத்த பொன்னன், கள்ளகரே, என்னிடம் ஒரு பேசும் பூனை இருக்கிறது. அது பொல்லாத பூனை. நீங்கள் மிகுந்த பலசாலி என்று அதனிடம் சொன்னேன். அந்தப் பூனையோ, தன்னை விட பலசாலி இந்த உலகிலேயே கிடையாது, கள்ளகன் எல்லாம் என் கால் தூசி என்று சொல்லி விட்டது! உங்களை அது இப்படி அவமானப்படுத்தியதால், அதை நான் இங்கு கொண்டு வந்திருக்கிறேன். நீங்களே அதற்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்றான். அதை கேட்ட கள்ளகன் உடலில் உஷ்ணம் பரவியது. காதிலிருந்து புகையாய் வந்தது. எங்கே அந்தத் திருட்டு பூனை காட்டு என் முன்னால் என்று கர்ஜித்தான். பொன்னன் மெல்ல தான் கொண்டு வந்திருந்த பெட்டியின் பூட்டை திறந்தான். அது நின்று கொண்டே தூங்கிக் கொண்டிருந்தது. அதன் தலையில் லேசாய் தட்டினான். பூனை விழித்தெழுந்தது. அதன் முன்னே பிரம்மாண்டமான கள்ளகனை பார்த்து சற்று மிரளாமல் கொட்டாவி விட்டது. கள்ளகனுக்கு ஆத்திரம் பொங்கியது...அடே, நான் யார் தெரியுமா? என்று கத்தினான். பதிலுக்கு பூனையும், அடே, நான் யார் தெரியுமா? என்றது. "நீயா என்னை கொல்வாய், இதோ, நான் உன்னை இப்போது கொன்று விடுகிறேன் பார்" என்றதும், பதிலுக்கு பூனையும் அதையே சொன்னது. சொல்லி முடித்த அடுத்த நிமிஷம், கள்ளகனின் தலை வெடித்து சுக்கு நூறாய் ஆனது.

வெற்றி வாகையுடன் பொன்னன் ஊருக்குள் வந்தான். ஊர்காரர்களால் அவர்கள் கண்ணையே அவர்களால் நம்பமுடியவில்லை. எப்படி அந்த அரக்கனை கொன்றாய் என்று கேட்டார்கள். இதோ, இந்தப் பூனையின் மூலம் தான் என்று பூனையை பெட்டியிலிருந்து காட்டினான். பூனை அனைவரையும் பார்த்து விழித்தது. பிறகு பெட்டியை பூட்டி விட்டான். இந்த பூனையின் பெயர் என்ன என்று ஒருவன் கேட்டான். இதன் பெயர் "டாக்கிங் டாம்" என்றான் பொன்னன்!

"தாண்டவம்" பார்த்தேன். இயக்குனர் என் கையில் கிடைத்தால் "ருத்ர தாண்டவம்" ஆடி இருப்பேன். இந்தக் கதைக்கு சண்டை வேறு! கஷ்டம்!! பார்வையாளர்கள் அத்தனை பெரும் அடி முட்டாள்கள் என்ற நினைப்பில் படம் எடுத்திருக்கிறார் இயக்குனர்.

வெடி குண்டு விபத்தில் தன் மனைவியையும், கண் பார்வையையும் இழந்த ஒருவன் பழி வாங்குவதே கதை. இனி மேல் தமிழ் சினிமாவில் பழி வாங்கும் கதையை எடுக்கும் ஒவ்வொரு இயக்குனரையும் நான் பழி வாங்கப் போகிறேன். போதும் யா...யோவ்! முடியலை...இயக்குனர் விக்ரமுக்கு இப்படி கதை சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன். கூடவே என் மைன்ட் வாய்சும்.

விஜய்: சார், ஓபன் பண்ணா லண்டன்ல ஒரு பாம் பிளாஸ்ட். [ஆரம்பமே பிரம்மாண்ட அதிரடி!] அப்படியே டைட்டில் பறக்குது. சில வருடங்களோ, மாதங்களோ கழிந்ததும் லண்டன்ல ஒரு கொலை நடக்குது [?]. அந்தக் கொலையை பண்றது நீங்க! [படம் முடிஞ்சு போச்சு...பாம் ப்ளாஸ்ட்ல யாரோ செத்துட்டாங்க, பழிக்கு பழி!] அதுல என்ன புதுசுன்னு தானே கேக்குறீங்க [யு தேர்! கமான் டெல் மீ ]..உங்களுக்கு இந்தப் படத்துல கண்ணு தெரியாது [என்னா ட்விஸ்ட்!] அப்புறம் எப்படி கொலை எல்லாம்னு நீங்க கேப்பீங்க...[கெரகம், சொல்லுங்க!] உங்களுக்கு கண்ணு தான் தெரியாது, ஆனா நீங்க வாயை தொறந்தா ஒரு சத்தம் வருது! [எனக்கு இப்போ நல்லா வாயில வருது!] அந்த சத்ததோட எதிரொலி வச்சி எதிரியை கொல்றீங்க...[எதிரியை மட்டுமா கொல்றீங்க!] நீங்க லண்டன்ல ஒரு சர்சுல மணி ஆட்றீங்க...சாரி, பியானோ வாசிக்கிறீங்க [நைஸ்!]. அங்கே இருக்குற எல்லா வெள்ளைக் காரங்களுக்கும் உங்களை அவ்வளவு புடிக்கும். [ஏன்?] அந்த சர்ச்சுக்கு ஏமி வர்றாங்க [வரணுமே!]. அவங்க அந்த ஊர் வெள்ளைக்காரி மாடலை விட பெரிய மாடல் [ம்ம்ம்..]. அப்போ ஒரு குழந்தைய மடியில வச்சிட்டு வாசிக்கிறீங்க சார். இதை விட காதல்ல தொபக்கடீர்னு விழுறதுக்கு ஒரு சந்தர்பம் கிடைக்குமா சார்? அப்படியே லவ், ஒரு சாங்குக்கு ஃபாரின் போறோம். [நாம ஆல்ரெடி பாரின்ல தானேப்பா இருக்கோம்!]

அவங்களோட நீங்க ஒரு பார்க்ல நடந்து போகும் போது பேட் பாய்ஸ் வர்றாங்க. [லண்டன்லயுமா?] நீங்க எமியை கற்பழிக்க வர்றாங்கனு நெனச்சீங்களா, அங்கே தான் ஒரு ட்விஸ்ட் வச்சிருக்கோம்! [அங்கே கொண்டு போயா வச்சீங்க!] அவங்க எமியோட தொழில் ரீதியான எதிரிகள். எமியை அவங்க மெரட்றாங்க..தடுக்கப் போன உங்களை அடிக்க வர்றாங்க! [ஆஹா, இந்த எடத்துல தமிழ் சினிமா ஹீரோ கை, கால் இல்லைனாலே பத்து பேரை அடிப்பானே!] கண்ணை மூடி தொறக்குறதுக்குள்ள சட்டை தொறந்த சல்மானா நிக்கிறீங்க...டொக்கு, டொக்குன்னு சத்தம் போட்டு போட்டு எதிரிகளை சுத்தி சுத்தி அடிக்கிறீங்க...எமி அப்படியே ஷாக் ஆயிடறாங்க...[நாங்களும் தான்! கண்ணு மண்ணு தெரியாம காப்பாத்துற ஆம்பளைகளை எந்த பொண்ணுக்குத் தான் புடிக்காது?] அவங்க லவ்வை ஓபன் பண்றாங்க..ஆஹா, நம்ம நெறைய பேரை க்ளோஸ் பண்ண வேண்டி இருக்கு, இந்த பொண்ணு லவ்வை ஓபன் பண்ணிடுச்சேன்னு வொரி ஆகுறீங்க...அப்போ அந்த லவ்வோட சேத்து உங்க ஃப்ளாஷ் பேக்கையும் ஓபன் பண்றோம்.

சத்தமே போடாம ஒரு பத்து பேரை அடிச்சி உங்க நண்பனை காப்பாத்துறீங்க.[அவன் துரோகியா இருப்பான்னு "ஐக்யு" வே இல்லாதவன் கூட சொல்வான்!]..என்னடான்னு பாத்தா, உங்களுக்கு கண்ணு தெரியுது! நீங்க டெல்லியில ரா ல ஒரு பெரிய உயர் அதிகாரி. திடீர்னு உங்களுக்கு கல்யாணம்! [இன்னுமா ஆகலை?] கட் பண்ணா, பச்சை பசேல்னு ஒரு கிராமம் [வில்லேஜ் ஆடியன்ஸ்!]. நீங்க பொண்ணை பாத்து கல்யாணம் வேணாம்னு சொல்ல போறீங்க...அப்போ தான் வழியில அனுஷ்கா மழையில நனையிறாங்க..[நாங்களும் தான்!] ஐஸ்வர்யா ராயையும், அனுஷ்காவையும் பொண்ணு ரூபத்துல பாத்த எவனாவது கல்யாணம் வேணாம்னு சொல்வானா? [மாட்டன், மாட்டான்!] அவங்க டெல்லியில கண் டாக்டர் [வாட் அன் ஐரணி!] உங்களுக்கு அவங்களை பத்தி தெரியாது, அவங்களுக்கு உங்களை பத்தி தெரியாது! கல்யாணம் பண்ணிட்டு கண்டு புடிக்கிறீங்க. அங்கே ஒரு லவ் எபிசொட்! [ஏன் சார், பிகாசோ, ரவி வர்மன் இப்படி எல்லாமே எங்களுக்கு தெரிஞ்ச பெயராவே இருக்கே, இவங்களைத் தவிர உங்களுக்கு எந்த பெயின்டரும் தெரியாதா? கொடுமை..ஆமா அனுஷ்கா சொன்ன மாதிரி விக்ரமும் உண்மை சொல்லி இருந்தா, அந்த எஸ். ஐ., பிரமோஷன், மொக்கை எல்லாம் கட் பண்ணி இருக்கலாமே! சரி அப்படியே கல்யாணத்துக்கு அப்புறம், எவனோ ஒருத்தன் உன் புருஷன் இங்கே தான் இன்னாரா வேலை பாக்குறான்னு சொன்னா..மனைவிக்கு நல்லாவா இருக்கும்? இதை எந்த விதத்துல க்யுட்டான சீன்ச்னு நினைச்சீங்க. எந்த பொண்டாட்டி சார் புருஷன் எங்க வேலை பண்றான்னே தெரியாம இருப்பா? என்ன லாஜிக்கோ...உங்களோட யாரு சார் டிஸ்கஷன்ல உக்கார்றது?] அனுஷ்காவுக்கு லவ் பொங்கி [நமக்கு ஆத்திரம் பொங்கி!] அவங்க லண்டன் வந்து பாம் வெடிச்சி செத்து போறாங்க. [நாங்க வெடிக்காம...]

அப்புறம் நீங்க லெட்சுமி ராயின் கிசு கிசு க்ளூவின் மூலம் எதிரிகளை பழி வாங்குறீங்க சார் [ஏன் சார், லெட்சுமி ராய்க்கு தான் கண்ணு தெரியுதே, அவங்களே போய் கொல்ல வேண்டியது தானே? அவங்களுக்கும் தான் புருஷன் செத்து போனான்!]

க்ளைமாக்ஸ் ல நீங்க அஞ்சு பேரை எப்படி பழி வாங்குநீங்கன்னு நாசர் அவரோட டேப்லட் ல ஆராஞ்சதுல ஐந்து கொலைகளும் பஞ்ச பூதங்களுக்கு தொடர்பு இருக்குன்னு கண்டு புடிக்கிறாரு. [இது வேறையா..]

ஆனா ஒன்னு சார், உங்களை சொல்லி குத்தமில்லை. நம்ம தமிழ் சினிமா நாயகர்களின் திறமையும் அசாத்தியம் தான் [அஜீத் தவிர, அவர் மட்டும் தான் புத்திசாலி!]. இப்படி ஒரு மொக்கை படத்தை பண்ணிட்டு அதை பத்தி டீவியில ஆஹா, ஓஹோன்னு பேசி நடிக்கிறாங்களே . அது தான் டாப்!

நல்லா எடுக்குறீங்க சார் படம். நீங்க இனிமே ஒரிஜினலா எழுதுறேன்னு எதையும் ட்ரை பண்ணாதீங்க...எத்தனை ஹாலிவுட் படம் வந்துருக்கு...உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை..பாத்து புரிஞ்சு நடந்துக்குங்க!



சத்தமில்லாமல் 
ஆழ்மனதில் ஓடுகிறது 
ஒரு ஜீவ நதி
அதன் பிறப்பிடம் தெரியவில்லை
அது கடலை நோக்கிச் செல்லவில்லை
ஒரு இலக்கு, எல்லை இல்லாமல் அது விரிந்து செல்கிறது
பொங்கும் நுரையுடன், நீல வண்ணத்துடன் 
அது விரைந்தோடிச் செல்கிறது
அது பெரும்பாலும் வானத்தை பிரதிபலிக்கிறது
காட்டில் மிருகங்கள் வாய் வைத்து அதில்
நீர் பருகும்போது அது லேசாய் குறுகுறுக்கிறது
இரவு என்றால் அதற்குக் கொள்ளை பிரியம்
உலகம் தொடங்கிய முதல் நாள் இரவு போலவே
அத்தனை இரவுகளையும் அது பாவிக்கிறது
நிலவொளியில் தன்னை அலங்கரித்துக் கொள்ள
அது ஒரு நாளும் தவறுவதே இல்லை
இனி பகலே கிடையாது, இரவு மட்டும் தான்
என்று எண்ணி எண்ணி கூத்தாடுகிறது
அதன் சத்தமே அந்த இரவுக்கு இசையாகிறது!
சென்ற வார ஞாயிற்று கிழமை ஒரு கல்யாணத்திற்காக மாயாவரம் வரை செல்ல வேண்டி இருந்ததுரயிலில் காலை எட்டு மணிக்கு ஏறினால் மதியம் இரண்டு மணிக்குள் சென்று சேர்த்து விடும் என்று சொன்னார்கள்காலை எட்டு மணிக்கு எழும்பூரில் இருக்க வேண்டும் என்று படுத்தேன்மறுநாள் காலை டான் என்று ஒன்பது மணிக்கு துயில் எழுந்தேன்நான் தான் புத்திசாலி ஆயிற்றேஃபால் பாக் ப்ளான் ஒன்றை கை வசம் வைத்திருந்தேன்ஈசீஆர் சென்று பாண்டி போய்அங்கிருந்து சிதம்பரம் போய்அங்கிருந்து மாயவரம் போவது என்ற மிக எளிதான ப்ளான்பத்தரை மணி அளவில் திருவான்மியூர் பஸ் பிடித்தேன்என் முன்னோர்கள் செய்த புண்ணியம்அது பதினோரு மணிக்குள் திருவான்மியூர் சென்று விட்டதுஅங்கிருந்து இறங்கி ஒரு டப்பா பாண்டி பஸ் ஒன்றை பிடித்தேன். இடம் வேறு கிடைத்தது! நூறு ரூபாய் நோட்டு கொடுத்த எனக்கு எண்பத்தைந்து ரூபாய் டிக்கட்டுக்கு போக மிச்சம் பத்து ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு "சீட்டு சீட்டு" என்று அடுத்தவரிடம் போய் விட்டார் நடத்துனர். பாக்கி தராத நடத்துனரை பற்றி கவிதை எல்லாம் நான் படித்திருக்கிறேன். அது இப்படி இருக்கும் என்று ஞாபகம்.

வழி நெடுக வரும்
இயற்கை காட்சியை ரசிக்க முடியவில்லை
நடத்துனர் தரவேண்டிய பாக்கி!

சார் மிச்ச ஐந்து ரூபாய் என்று குடைந்தேன்நீங்கள் நேற்று என்னை பார்த்திருக்க வேண்டும்ஒரு ஒளி மங்கிய டி சர்ட்ஒரு ஒளி இழந்த ப்ளு [வண்ணம் - இறந்த காலம்!] ஜீன்ஸ் பேன்ட்ஒரு தோளில் மாட்டும் பை. கல்யாணத்திற்கு போகிறோம் என்று வழு வழுவென்று சவரம் வேறு செய்திருந்தேன். கிட்டத்தட்ட லாலா கடை சேட்டு மாதிரி இருந்தேன். கண்களில் ஒரு குளு குளு கண்ணாடி வேறு! கண்டிப்பாய் அந்த ஐந்து ரூபாயை நான் கேட்பேன் என்று நடத்துனர் நினைத்திருக்க மாட்டார். இது ஒரு தர்மசங்கடமான நிலை. நடத்துனர்களிடம் பாக்கி கேட்பது ஒரு கலை. சத்தமாய் கேட்கக் கூடாது. மெதுவாய் கேட்டால் காதிலேயே வாங்காத மாதிரி நடந்து கொள்வார்கள். அவர் நாம் சொன்னதை கேட்டாரா, பாக்கியை கொடுப்பாரா என்று ஒன்றும் புரியாது. கொஞ்சம் சத்தமாய் கேட்டால், அவ்வளவு தான். நீங்கள் தீர்ந்தீர்கள். அத்தனை பொறுப்பா இருக்குறவன் சில்லறை கொண்டு வர வேண்டியது தானே என்று காய்ச்சி எடுத்து விடுவார். அதிலும் என்னை மாதிரி இப்போது தான் தொட்டிலிலிருந்து பால் குடித்துவிட்டு வாயை துடைத்து விட்டு வந்த மாதிரி இருந்தால் சொல்லவே வேண்டாம்! ம்ம்..அவர் என்னையும் என் கண்ணாடியையும் உற்று பார்த்தார். அல்லது, எனக்கு அப்படி பட்டது. [ஏன்யா, மெட்ராஸ்ல அடிக்கிற வெயிலுக்கு ஒரு கிளாஸ் போடறது குத்தமா?]  இருங்க இறங்கும்போது தர்றேன் என்றார். அப்பாடா, நான் கேட்டது அவர் காதுகளில் கேட்டிருக்கிறது என்ற திருப்தியுடன் சாய்ந்து உட்கார்ந்தேன். ஓட்டுனரின் இடது பக்கத்து சீட்டில் தான் அமர்ந்திருந்தேன். டோல் கேட் வருவதற்குள், பின்னாலிருந்து ஒருவர் எஞ்சின் மேல் இருந்த அந்த கேரி பேக் கொடுங்க என்றார், அது என்னது இல்லை. அதன் உரிமையாளர் அவசர அவசரமாய் எடுத்துக் கொடுத்தார். ஓட்டுனர் பின்னால் சீட்டில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் லக லகவேன்று வாந்தி எடுத்தார். எனக்கு கொடைக்கானல் மலை இறங்குவது ஞாபகம் வந்தது. எடுத்து விட்டு அதை தூக்கி எறியவில்லை. பை நிறைய வேண்டாமா? கையிலேயே வைத்திருந்தார். வண்டியில் வாந்தி எடுப்பது ஒரு கொடுமையான அனுபவம். எங்கே எனக்கும் வந்து விடுமோ என்று பயம் வந்து விட்டது. இருந்த ஒரே கேரி பேகும் போய் விட்டது. பார்வையை மறுபக்கம் திருப்பிக் கொண்டேன். ஓட்டுனர் அருகில் அமர்ந்திருந்ததால் வண்டி போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். ஈசிஆர் ரோட்டில் பைக்கில் போகவே கூடாது என்று படுகிறது. பஸ் ஒன்று போனால் அந்த பக்க சாலை முழுவதும் தீர்ந்து விடுகிறது. இதில் பெரிய பெரிய கார்களில் அந்தப் பக்கம் வருபவர்கள் ஒரேடியாய் சைட் எடுத்து இந்தப் பக்கம் வந்து விடுகிறார்கள். கடற்கரை சாலை என்று ப்ளான் செய்தவர்கள், இத்தனை செலவு செய்தவர்கள் கொஞ்சம் தொலை நோக்குப் பார்வையுடன் இதை ஒரு நான்கு வழிப்பாதையாக ஆக்கி இருக்கலாம்! 

வண்டி சிறிது தூரம் சென்றதும் ஒரு நிறுத்தத்தில் இறங்கிய பெண் ஒருவர், "கண்டெக்டர் சில்லறை நாலு ரூவா கொடு" என்று கீழே இறங்கி கத்துவது என் காதில் விழுந்தது. கண்டெக்டர் அதை கண்டு கொண்ட மாதிரியே தெரியவில்லை. பஸ் புறப்பட்டது. எனக்கு பகீல் என்றது. இறங்கும் போது தருகிறேன் என்பதற்கு இது தான் அர்த்தமா? என்று எண்ணிக் கொஞ்சம் உஷாரானேன். சிறிது நேரம் கழித்து நடத்துனர் வந்து என் முன்னால் இருந்த சீட்டில் அமர்ந்து கொண்டார். கொஞ்ச நேரத்திற்கு பிறகு, ஒடிசலான ஒரு பையன் தயங்கி தயங்கி நடத்துனரிடம் ஏதோ சொன்னான். பிறகு தான் புரிந்தது. நாங்கள் இருக்கும் பஸ்சுக்கு முதல் பஸ்ஸில் மகாபலிபுரம் செல்வதற்கு ஏறியிருக்கிறான். மகாபலிபுரத்தில் இறங்கியவன் பையை பஸ்சிலேயே விட்டு விட்டான். இப்போது அந்த பஸ்ஸை துரத்திக் கொண்டு இந்த பஸ்ஸில் ஏறி இருக்கிறான். அவனுக்கு தமிழ் தெரியாது. நடத்துனருக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கும் இரண்டுமே தெரியும் என்பதை பையன் உணர்ந்து கொண்டான். அதனால் இருவருக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளன் ஆனேன். பையன் ஆந்திராவைச் சேர்ந்தவன். ஆந்திராவிலிருந்து வந்த ஸ்ரீ தேவியை, ரோஜாவை மதித்த அளவுக்கு வேறு யாரையும் நாம் மதிப்பதில்லை. சென்னையில் இரு நாட்கள் ஊர் சுற்ற வந்த அவன் இத்தகைய ஒரு கொடுமையான அனுபவத்தை எதிர்பார்த்திருக்க மாட்டான். அவன் சொல்லச் சொல்ல நானும் அதை நடத்துனரிடம் மொழி பெயர்த்துச் சொன்னேன். நம் அரசு ஊழியர்களிடம் எப்போதும் ஒரு மேம்போக்குத்தனம் தெரியும். நமக்கு உயிர் போகும் பிரச்சனை என்று ஒன்று சொல்லும்போது தான், "யாரு நம்ம எஸ் பியா? யாரு கூட? இதெல்லாம் பாலிடிக்ஸ்யா! நான் தான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல?" என்று வெகு சுவாரஸ்யமாய் பேசிக் கொள்வார்கள். நம்மை ஒரு மனிதனாகவே அவர்கள் மதித்திருக்க மாட்டார்கள். அதே போல் தான் நான் நடந்த சம்பவத்தை பற்றி விளக்கிச் சொல்லிக் கொண்டிருக்க, அவர்கள் இருவரும் [நடத்துனரும், ஓட்டுனரும்] வேறு எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பையன் வேறு, என்ன சொல்கிறார்கள் என்று என்னையே கேட்டுக் கொண்டிருந்தான். நான் என்னத்தை சொல்ல? பஸ் ரிடர்ன் ஆகுமா என்று கேட்டதற்கு "டிப்போ போகும்" என்று ஒரு பதில். அங்கு யாரிடமாவது போன் போட்டு அந்தப் பையை எடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லலாமே என்றேன். நான் யாருக்கு ஃபோன் போடறது என்று செல் போனையே பார்த்துக் கொண்டிருந்தவர், கடைசி வரை ஒரு ஃபோன் கூட போடவில்லை. பையில் என்ன இருக்கிறது என்று கேட்டேன், "காமெரா, கொஞ்சம் கேஷ்" என்றான் பையன். "கேஷ் வேறு இருக்கா" என்று ஜெர்க் ஆனார் நடத்துனர். "இப்படி பையை வச்சுட்டா எறங்குறது" என்று தமிழே தெரியாது என்றாலும் அவனை கடிந்து கொண்டார். அவனை பார்க்க பரிதாபமாய் இருந்தது. தவறு செய்வது சகஜம், அதன் பிறகு என்ன செய்யலாம் என்று ஒரு முயற்சி இல்லை, அதை விட்டு விட்டு நடந்த தவறையே பேசிக் கொண்டிருந்தால்? ம்ம்ம்...பஸ் பாண்டியை அடைந்ததும், அவன் டிப்போவில் சென்று விசாரிக்கலாம். அவன் அதிர்ஷ்டம் பை இருந்தால், மகாபலிபுரத்தை விட பாண்டி ஊர் சுற்ற நல்ல இடம் தான் என்று எண்ணிக் கொண்டேன்.

என் பிரச்னைக்கு வருவோம், இப்போது நடத்துனரிடம் பேசிப் பழகிய தைரியத்தில், இறங்கும் வரை எதற்கு காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று, "சார், அந்த அஞ்சு ரூபா" என்றேன். ஒரு தடவை பையை துலாவி விட்டு, வண்டி ஒரு இடத்தில நிக்கும், அப்போ சில்லறை மாத்தி தர்றேன் என்றார். ஒரு அஞ்சு ரூபா இல்லையா? இல்லை வைத்துக் கொண்டே நேரத்தை கடத்துகிறார்களா? ஒன்றும் புரியவில்லை. அப்போது யாரோ ஒரு புண்ணியவான் சார் என் சில்லறை என்று வந்தான். அவனிடம் ஐந்து ரூபாய் வாங்கி அவனுக்கு பத்து ரூபாய் கொடுத்து விட்டார். அந்த ஐந்து ரூபாயை அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டே எனக்கு கொடுத்தார். பரிட்சையில் பாஸ் ஆன திருப்தி, எலெக்ஷனில் சீட்டு கிடைத்த திருப்தி எனக்கு. ஒரு வழியா தட்டு தடுமாறி மூன்று மணி நேர பயனத்திருக்குப் பிறகு வண்டி பாண்டி வந்து சேர்ந்தது. மணி இரண்டு, இலக்கியா மெஸ்சுக்குள் நுழைந்தேன். ஒரு அசைவ சாப்பாடு சொன்னேன். பக்கத்தில் தாஸ் மார்க்கிலிருந்து வந்த ஒருவன் என் அருகில் உள்ளே சீட் இருப்பதை பார்த்தான். நான் எழுந்து உள்ளே போங்க என்று வழி விட எத்தனித்தபோது, அவருடன் வந்தவன், இல்லை நீங்க சாப்பிட்டு முடிங்க, வா என்று தள்ளாடியவனை அழைத்துச் சென்றார். என்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்த தள்ளாடும் ஆசாமி, ஐ வெயிட்டிங், வெயிட்டிங் என்றான். [நான் தான் கூலிங் கிளாசை கழட்டிட்டேனே?] மீன் குழம்பு [ஒரு துண்டு மீனுடன்], சாம்பார், ரசம், மோர்  அதோடு ஒரு மீன் வருவலையும் வாங்கிக் கொண்டேன். ஒரு புடி புடித்தேன். அறுபத்தைந்து ரூபாய் ஆனது! மீன் வறுவல் இருப்பத்தைந்து ரூபாய். சென்னையில் மொக்கை ஹோட்டல் போனாலும், ஒரு மீன் துண்டுக்கு எண்பது ரூபாய் கேட்பான். வாழ்க என்று வெளியில் வந்து சிதம்பரம் வண்டிக்குக் காத்திருந்தேன். வானம் மேக மூட்டமாய் இருந்தும், உஷ்ணம் தலைக்கேறியது. அப்படி ஒரு வெக்கை. என்ன ஊரோ! 

சிதம்பரம் என்று போர்ட் மாற்றிய ஒரு பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டேன். "நான் வானவில்லையே பார்த்தேன்" பாடல் சத்தமாய் சில்னஸ் கொட்ட கொட்ட ஒலித்துக் கொண்டிருந்தது. பஸ்ஸில் போடுவதற்கென்றே சில பாடல்கள் வைத்திருக்கிறார்கள். "மச்சான்கிட்ட முந்தானைய தந்து வைப்பாளா", "சேலையில வீடு கட்டவா", "கும்பாபிஷேகம் கோவிலுக்குத் தான்", " "வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி" என்று சில. பத்து பன்னிரண்டு வருஷமாய் இதை தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். "பூவுக்குள் போர்க்களம் செய்வது காதல், போர்க்களத்தில் பூச்செடி வைப்பது காதல்" [காதல் வரிகளாம்!] என்று மலேசியா பாட, அப்படியே ராமைய்யா ராவைய்யா என்று தேவாவும் சேர்ந்து கொள்ள எனக்கு அப்படியே யாரையாவது போட்டுத் தள்ளலாம் போல இருந்தது. அது ப்ரைவேட் பஸ். பஸ்ஸை ஷேர் ஆட்டோ ரேஞ்சுக்கு நினைத்து ஆட்களை ஏற்றிக் கொண்டிருந்தார் நடத்துனர். நம் நாட்டில் எங்கு போனாலும் கூட்டம். ஞாயிறு மதியம் மூணு மணிக்கு நூறு பேர் சிதம்பரம் போகிறார்கள். அப்படி நூறு பஸ் போகிறது. எல்லாம் நிறைந்து கொண்டு தான் போகிறது. மக்கள், மக்கள், மக்கள்...எங்கு பார்த்தாலும் தலைகள்...

பயணத்தில் இன்னொரு சுவாரஸ்யம் நம் மக்கள் கையில் இருக்கும் செல்போன்கள். அடடா..ஒவ்வொருத்தனின் ரிங் டோனும் ஒரு சிம்பொனி. அதிலும் போன் வந்து அவர்கள் பேச ஆரம்பித்து விட்டால்...இவர்கள் பேசுவது உண்மையில் போன் வழியாகத் தான் எதிராளிக்குக் கேட்கிறதா, அல்லது அப்படியே கேட்டு விடுமா என்று சந்தேகம். நான் பஸ்ஸின் நடுவில் அமர்ந்திருந்தேன். பஸ்ஸில் ஓட்டுனர் பின்னால் உள்ள சீட்டில் அமர்ந்திருந்தவருக்கு ஒரு போன் வந்தது!

மொதல்லா நீங்க எழுபத்தஞ்சு ஆயிரத்தை வட்டியோட ஃபைசல் பண்ணுங்க...அப்புறம் அதெல்லாம் பாத்துக்கலாம்...[இதே வாக்கியத்தை ஒரு இருபது தடவை சொன்னார்!]
.....
அட நான் சொல்றதை கேளுங்க...[முப்பது!]
....
சரிங்க நீங்க சொல்றது சரி தான், நான் சொல்றதையும் கேளுங்க...
.....
யோவ், நீ மொதல்ல எழுபத்தஞ்சு ஆயிரத்தை வட்டியோட கட்டுய்யா, அப்புறம் பத்திரம் திருப்புரதேல்லாம் பாத்துக்கலாம்..[நாப்பத்தேழு தடவை]
.......
ஆமா, நீ கடன் வாங்கி ரெண்டு வருஷம் ஆச்சுதே, அதுக்கு என்ன சொல்றீரு? [பதினேழு] 
........
நீ கெடைக்கும்போதேல்லாம் தருவே, நான் கொஞ்சம் கொஞ்சமா பத்திரத்தை திருப்ப முடியுமா?
.........
மொத்தமா ரெண்டு வருஷத்துக்கு வட்டியோட கட்டிட்டு பத்திரத்தை வாங்கிட்டு போ! வேற பேச்சு கெடையாது...[எண்ணவில்லை!]
.........
இப்படியே ஒரு மணி நேரத்திற்கு பிறகு,
.........
யோவ், இப்போ நான் வெளிய இருக்கேன். ஊர்ல இருந்து பஸ்ல திரும்பி வந்துட்டு இருக்கேன்.[அட மக்கா இப்போ தான் அது உனக்கு புரிஞ்சதாப்பா!] ஆஸ்பத்திரி போயிட்டு வர்றேன்! [அது சரி!] வீட்ல அவங்க மட்டும் தான் இருக்காங்க [அந்த கடன் வாங்கினவன் ப்ளான் போட்ருப்பானா, மாட்டனா?]....

அதற்குள் என் அருகில் இருந்த ஒரு அம்மா ஒரு போனை போட்டு, ஏய், ஆமா, பஸ்ல தான் இருக்கேன். நான் கோவிலுக்கு போறேன். பாத்து இருடா செல்லம். கோயிலுக்கு போய் போன் போடறேன். நீ செல்லை பக்கத்துலையே வச்சிரு! சைலன்ட்ல போட்ராதே, என்னா...சரிடா செல்லம் வைக்கவா...என்ன மூணு மணிக்கு இவ்வளவு ரஸ்ஸா இருக்கே என்று பக்கத்தில் உள்ளவரிடம் அங்கலாய்த்தார். 

இதன் நடுவில் ஒன்ஸ் மோர் படப் பாடலில் தேவா குரலில் பாட்டு! இதற்கு பெயர் தன் ஃப்யுஷன்! கொலை வெரி ஆகுமா ஆகாதா? 

சிதம்பரம் நெருங்க நெருங்க தலை வலி ஆரம்பித்தது. ஒரு வழியாய் ஊர் வந்து இறங்கியவுடன் நேராய் சென்று ஒரு ஸ்ட்ராங் காப்பி சாப்பிட்டேன். தெய்வீகமாய் இருந்தது. மாயவரத்திற்கு அடுத்த பஸ்ஸில் ஏறணும் என்று நினைக்கும்போது பகீர் என்றது. அதே சில்னச்ஸ், அதே மாதிரி பாடல்கள்! ஆஹா...ஆரம்பிச்சிட்டாங்களே! மாலை ஐந்து ஆகிவிட்டது. பஸ் புறப்பட்டது. ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. கடைசி சீட் தான் கிடைத்தது. பின் வாசல் வழியாய் காற்று வருமே என்று ஆர்வமுடன் உட்கார்ந்தால் நீங்கள் தான் ஏமாறுவீர்கள். நம் மக்கள் அத்தனை பெரும் அங்கு தான் நிற்பார்கள். அவங்களுக்கு காத்து வருனும்ல? அந்த வாசலே உங்கள் கண்ணுக்குத் தெரியாது! பல முதுகுகளின் மத்தியில் இருந்து திடீரென்று ஒரு கை வந்தது, சீட்டு என்றது. ஊர் பெயரைச் சொல்லி பணம் கொடுத்தேன். கை மறைந்து கொண்டது. சீட்டும் வரவில்லை, கடைசி வரை நடத்துனரும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் கை மட்டும் வேலை செய்தது.  நான் அப்படி இப்படி துடித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அருகில் இருந்தவர், பொறுமையா இருங்க. இவர் படிக் கண்டெக்டர் [?] அந்த கண்டேக்டர்கிட்ட டிக்கட் வாங்கித் தான் இவர் நமக்கு தருவாரு, சோ, மெல்ல தருவாரு. நான் வண்டி ஏறினதும் கொடுத்தேன். இன்னும் வரலை என்றார்! அவர் என் கண்ணை திறந்த மகானாகவே எனக்குப் பட்டார். என்ன பொறுமை, என்ன சாந்தம். என்ன ஒரு தேஜஸ்! அந்த மகான் சொன்னது போலவே நடந்து கொண்டார். நூறு ரூபாய் கொடுத்து விட்டு, என்னை போல் பாக்கி எப்போது வரும் என்று கவலையே இல்லாமல் அமர்ந்திருந்தார். சற்று நேரம் கழித்து எனக்கு டிக்கட் மாதிரி ஒரு துண்டுச் சீட்டு வந்தது.அவர் இறங்கும் நேரத்தில் அவருடைய பாக்கி அவரை தேடி வந்தது! வேற நோட்டு கொடுங்க என்று அனாயாசமாய் நல்ல நோட்டை கேட்டு வாங்கிக் கொண்டார். என்ன ஒரு வீரம்! மேன்மக்கள் மேன்மக்களே!

மாலை ஆறு, ஆறேகால் அளவில் மாயவரம் கால்டாக்ஸ் என்ற ஒரு ஸ்டாப்பிங்கில் பஸ் என்னை உதிர்த்து [நான் உதிர்ந்து போயிருந்தேன், அதான்!] விட்டுச் சென்றது. ரிசப்ஷன் முடிந்த கையோடு, அதாவது இன்னும் நான்கு மணி நேரத்தில் மறுபடியும் ஒரு ஆறு மணி நேர பயணம் காத்திருந்தது என்று நினைத்தாலே, மனது திகிலடைந்தது. நல்ல வேலையாக சென்னை திரும்பி வர பஸ்ஸை ஏற்கனவே புக் செய்திருந்தேன். இப்படி மாறி மாறி தான் வர வேண்டும் என்றிருந்தால், ஒரு வேளை நான் மாயவரத்திலேயே செட்டில் ஆகியிருப்பேன்!


ஒரு நண்பரின் மூலம் ஜெயா டிவியின் பதினான்காவது ஆண்டு தொடக்க விழா மற்றும் எம் எஸ் விஸ்வநாதன், ராமமூர்த்தி அறுபது ஆண்டு கால திரையிசை சாதனைக்கான பாராட்டு விழா நிகழ்ச்சிக்குச் செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. தமிழக முதல்வர் தலைமையேற்று நடத்தினார்.  சாலை எங்கும் ஃபோகஸ் லைட்டுகள். சென்ட்ரல் தொடங்கி அம்மாவின் கட் அவுட்டுகள்.  அரங்கத்தின் உள் வரை அது நீள்கிறது. இத்தனைக்கும் கட் அவுட் வைப்பதெல்லாம் இப்போது அவருக்குப் பிடிப்பதில்லை என்று வேறு சொல்கிறார்கள்.  அந்த ஏரியாவே காக்கிச் சட்டைகளால் நிரம்பி வழிந்தது. என் வரிப் பணம் இப்படியெல்லாம் சீரழிகிறதே என்று வேதனையாய் இருந்தது. நேரு உள்ளரங்கம் இத்தனை பெரிது என்று எனக்குத் தெரியாது. கேட், கேட்டாக சுற்ற விட்டுக் கொண்டே இருந்தார்கள். ஒரு வழியாய் ஒரு வழியில் உள்ளே அனுமதித்தார்கள்; பயங்கர கெடுபிடியுடன்! தண்ணீர், சாப்பாடு சமாச்சாரம் என்று எதுவுமே உள்ளே அனுமதி கிடையாது. நான் குடை கொண்டு போயிருந்தேன். அதையும் எடுத்து வெளியே போட்டு விட்டார்கள். எங்கும் சோதனை, ஏனடா வந்தோம் என்று ஆயிற்று. கேட்டால் முதல்வரின் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடு! வேடிக்கை என்னவென்றால் ஜெயா டிவி பல வித "அதிகார துஷ்ப்ரயோகங்களை" கடந்து வெற்றி நடை போடுகிறது என்று ஜெ [அம்மா என்றெல்லாம் சொல்ல முடியாது!] வே சொல்கிறார். ஆமா மேடம், மேல் சொன்ன அத்தனைக்கும் பெயர் என்னவாம்?

எல்லா தடவல்களுக்கும் பிறகு ஒரு வழியாய் உள்ளே நுழைந்து ஒரு சீட் தேடி அமர்ந்தேன். முதல் வரிசை, வீ வீ ஐ பிக்களுக்கு. அதாவது, விழா நாயகர்கள், ஜெ, ரஜினி, கமல், பாலச்சந்தர், ஏவிஎம் சரவணன், இளையராஜா. அடுத்த வரிசை வீ ஐ பிக்களுக்கு! பழம்பெரும் நடிகர்கள், பாடகர்கள் அனைவரும். பிறகு கட்சிக் கண்மணிகளுக்கு! மேல் வரிசையில் தான் பார்வையாளர்களுக்கு! கமல் பாலச்சந்தரின் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்படி யூகித்துக் கொண்டேன். ஏன் என்றால், நான் உட்கார்ந்த இடத்திலிருந்து அங்கு வைத்திருந்த பெரிய டிவியே சின்னதாய் தான் இருந்தது! பிறகு இளையராஜா வந்தார். டிவியில் பிரபுவையும், சத்யராஜையும் காட்டும்போது ஒரே கரவொலி. அவர்களும் உற்சாகமாய் கையசைத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு தான் தெரிந்தது, அது அவர்களுக்கான ஒலி அல்ல, ரஜினியின் வருகை என்று! பல்ப்! மனிதர் குருவை கண்டால் போதும் காலில் விழுந்து விடுகிறார். என்ன ஒரு பணிவு! மேடையில் ஏறியதும் மக்களை பார்த்து பெரிய கும்புடு ஒன்று போடுகிறார். ஒரே ஆரவாரம்! ரஜினி செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் கூட்டம் சைக்கிக் ஆகிறது! ஒரு வழியாய் செட்டில் ஆன பிறகு, மெல்ல ஜெ வந்தார். அவருக்கு ஒரு தனி வழி, நேராய் அது மேடைக்கு கொண்டு வந்தது. அவர் அந்த மேடையில் வந்ததும், ஏதோ தேசிய கீதம் போட்டது போல் கீழ் உள்ள அத்தனை பெரும் எழுந்து நிற்கிறார்கள். அவர் அமர்ந்ததும் தான் அமர்கிறார்கள்!  அடப் பாவிகளா!

ஒரு வழியாய் விழா ஐந்து மணிக்குத் தொடங்கியது. சின்மயி, விஜய் ஆதிராஜ் [மனிதர் எப்போது பார்த்தாலும் அதே மாதிரி இருக்கிறார்!] தொகுத்து வழங்கினார்கள். எம் எஸ் வி, ராமமூர்த்திக்கு ஜனாதிபதி அவார்ட் கிடைக்காததால் ஜனங்க அவார்ட் கொடுப்போம் என்று கூறி "திரையிசை சக்கரவர்த்தி" மக்கள் வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டத்தை ஜெ அவர்கள் எம் எஸ் விக்கு வழங்கினார். ராமமூர்த்தி பற்றி யாரும் நிறைய்ய பேசவில்லை. ஜெ பேசும்போது "கண் போன போக்கிலே" பாட்டில் வரும் சோலோ வயலின் ராமமூர்த்தி வாசித்தது என்றார். அறுபது ஆண்டு கால சாதனைக்காக அறுபது பொற்காசுகள் கொண்ட பொற்கிழி ஒன்றையும் இருவருக்கும் வழங்கி கவுரவித்தார். அதோடு அவரின் இசையில் பாடிய பலருக்கு தங்கப்பதக்கம் அளித்தார். வழக்கமாய் இந்த மாதிரி விழாக்களில் முதலில் பாட்டு, ஆட்டம் என்று கச்சேரி தான் நடக்கும். எல்லாம் ஆய்ந்து ஓய்ந்த பிறகு நிகழ்ச்சிக்கு வருவார்கள். ஆனால், இங்கே, முதலில் நிகழ்ச்சியை மட மடவென முடித்து விட்டு பிறகு கச்சேரிக்குச் சென்றது சற்று ஆறுதலாய் இருந்தது! கச்சேரி தொடங்கியதும் பல பிரபலங்கள் கழண்டு கொள்ளவும் சவுகரியமாய் இருந்தது.

முதலில் ஜெயா டிவி சி ஈ ஓ ராவ் அவர்கள் தமிழில் தங்கு தடையற பேசினார். ஜெயா டிவி தொடங்கி பதிமூன்று ஆண்டுகள் முடிவடைந்தாலும் ஜெ பங்கு பெரும் முதல் நிகழ்ச்சி இது தான் என்றார்.

ஏவிஎம் சரவணன் எம் எஸ் வி யுடன் அமர்ந்து ட்யூன் போட்ட காலங்களை நினைவு கூர்ந்தார். இருவரும் வித்யா கர்வமில்லாதவர்கள் என்றார். எம் எஸ் வி, எனக்கு ஏதோ கொஞ்சம் மியூசிக் தெரியும், நான் போடறேன், உங்களுக்குப் புடிச்சதை எடுத்துக்குங்க என்று ஒன்றும் தெரியாதவர் போல் சொல்வார் என்று சொன்னார். ஜெய டிவியில் தான் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளை சொன்னார்.

பிறகு இளையராஜா பேசினார். எம் எஸ் வி அவர்கள் துப்பிய எச்சங்கள் தான் எனக்கு உணவாய் அமைந்தது என்றார். ஜெ வை வெண்ணிற ஆடை படத்தின் பாடல் காட்சியின் [அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்] படப்பிடிப்பில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று பார்த்ததாகச் சொன்னார். எம் எஸ் வி அவர்களை பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை என்று முடித்துக் கொண்டார்.

பிறகு பாலச்சந்தர். வயதானாலும் அவரின் கம்பீரம் இன்றும் அப்படியே இருக்கிறது. நல்ல கண்டிப்பான ஒரு கல்லூரி பேராசிரியர் மாதிரி எந்த நிகழ்ச்சியாய் இருந்தாலும் மிடுக்காய் வருவார்.  இந்த விழாவை ஜெயா டிவி எடுத்தது திரையுலகினர் எங்களுக்கு இழுக்கு. இது நாங்கள் எடுக்க வேண்டிய விழா என்று ஆதங்கப்பட்டார். இருவருக்கும் மத்திய அரசு பத்ம விருதுகள் வழங்கத் தவறி விட்டதாகவும் அது கிடைக்க முதல்வர் முயற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அவரும், எம் எஸ் வி யும், கண்ணதாசனும் இணைந்த எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் என்றும், அந்தப் பாடல்களைத் தாங்கி நின்ற தன்னுடைய அத்தனை படங்களையும் அவருக்கு சமர்ப்பிப்பதாகச் சொல்லி முடித்துக் கொண்டார். 

அடுத்து கமலஹாசன். வழக்கமான சாமர்த்தியமான பேச்சு. இத்தனை ஆண்டுகள் கழித்து இது தான் நீங்கள் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி எனும்போதே, செல்லம் கொடுத்து வளர்ந்த குழந்தை இது இல்லை, தானே வளர்ந்த குழந்தை என்று புரிகிறது என்றார். நான் முதலில் வாயசைத்தது எம் எஸ் ராஜேஸ்வரியின் குரலுக்குத் தான் என்றார். அவர்கள் அனைவரையும் கவுரவப்படுத்தியது என்னை கவுரவப்படுத்தியது போலிருக்கிறது என்றார். இசை அமைக்கும் இளையராஜாவுக்கே சொல்வதற்கு வார்த்தை இல்லையென்றால் இசையை கேட்க மட்டுமே தெரிந்த நான் என்ன சொல்ல முடியும் என்று கூறி முடித்துக் கொண்டார். 

ரஜினி. அடுத்து திரு ரஜினி [பேசத் தான் அழைக்கிறார்கள் என்று ரஜினி எழுந்து பாதி தூரம் வந்து விட்டார்] அவர்களுக்கு திரு ராவ் அவர்கள் நினைவுப் பரிசு வழங்குவார். பிறகு சென்று அமர்ந்து கொண்டார். ரஜினியின் வேகத்தை பார்த்து அனைவரும் ரசித்துச் சிரித்தனர். நினைவு பரிசை வாங்கி வைத்துக் கொண்டு விறு விறுவென்று நடந்து மைக்கை பிடித்தார். வழக்கமான குளறல், உளறல் பேச்சு. இன்றும் இவரால் தங்கு தடையில்லாமல் தமிழில் பேச முடியவில்லை. சார், பேசாம குஷ்பூகிட்ட போய் தமிழ் கத்துக்குங்க! "எங்கே பிராமணன்" என்ற நிகழ்ச்சியை தான் விரும்பிப் பார்த்ததாகவும், அது திடீரென்று நின்று விட்டதால், சோவிடம் நான் விசாரித்தேன். ஏன் சார், நல்லா தானே இருக்கு, ஏன் நிறுத்துட்டீங்கன்னு...ஆமா, சி எம் கூட கேட்டாங்க. ஆனா எனக்கு வேலை இருக்கு, அதான் மேற்கொண்டு பண்ண முடியலை ன்னு சொன்னாரு! சி எம் மே கேட்டு முடியாதுன்னு சொல்றதுக்கு ஒருத்தர் நாட்ல இருக்காருன்னா அது சோ தான் என்று ஒரு போடு போட்டார்! அதைக் கேட்ட சோ தலையில் அடித்துக் கொண்டது ஹை லைட்! ஜெ இருக்கும் மேடையில் என் நண்பர் கலைஞர் என்று ரஜினி பேசுகிறார். இதிலிருந்து அவர் எதையும் தயார் செய்து கொண்டு வருவதில்லை. அங்கு அப்போது என்ன வருகிறதோ அதை பேசி விடுகிறார் என்று தெரிகிறது. தான் வித்தியாசமாய் இருப்பதால், எம் எஸ் வி தனக்கு முதலில் குரல் கொடுத்தார் என்றார். இந்த மேடையில எல்லாரையும் விட நான் தான் ஜூனியர், அவர்களுக்கே சொல்ல வார்த்தை இல்லைன்னு சொல்றப்போ, நான் என்ன சொல்ல முடியும் என்று முடித்துக் கொண்டார். 

பிறகு ஜெ சிறப்புரை ஆற்றினார். உண்மையிலேயே சிறப்பாய் இருந்தது. அவருடைய கணீர் குரலில் எம் எஸ் வி பற்றியும், ராமமூர்த்தி பற்றியும் தன்னுடைய அனுபவங்கள் கலந்து சொல்லி முடித்தார். அவர்களின் பெயரை பத்மா விருதுக்காக ஏற்கனவே பரிந்துரைத்ததாகவும், அதை மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றும், தான் சொன்னால் நடக்கும் காலம் வரும், அப்போது கண்டிப்பாய் உங்களுக்கு அந்த விருதை வாங்கித் தருவேன் என்றும் சூளுரைத்தார். பிறகு ஜெய டிவி ஊழியர்களுக்கு சம்பள உயர்வையும் [30 முதல் 40%!] பல வித சலுகைகளையும் அறிவித்தார். அவரே தயாரித்த எம் எஸ் வியின் சிறந்த பாடல்கள் கச்சேரியை தானும் கேட்டு ரசிக்கப் போவதாய் சொல்லி முடித்துக் கொண்டார். 

எம் எஸ் வி அவர்கள் ஏற்புரையை தன்னுடைய வழக்கமான சுருக்கமான பாணியில் முடித்துக் கொண்டார். 

பிறகு கச்சேரி தொடங்கியது. ஒய் ஜி மகேந்திரா "நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா" பாடலுக்கு அருமையாய் விசிலடித்தார். அவரின் நெஞ்சத்தில் இருவருக்கு நிரந்தர இடம், ஒன்று நடிகர் திலகம் இன்னொன்று எம் எஸ் வி, ராமமூர்த்தி என்றார். [நாகேஷ் எங்கே சார்?] ஆமாம், இவரும் இளமையாய் தான் இருக்கிறார். இவரை ஏன் மார்க்கண்டேயன் என்று அழைப்பதில்லை? திரையுலக மார்க்கண்டேயனும் [சிவகுமார்] கச்சேரிக்கு இடையில் அவருடைய வழக்கமான பாணியில் சுருக்கமாய் பேசி விட்டுச் சென்றார். ஜெ வை அவர் அம்மா என்று அழைக்காமல் "எங்கள் திரையுலக சகோதரி" என்று அழைத்தது சற்று ஆறுதலாய் இருந்தது! அவர் பேசும்போது அவருடைய ஞாபக சக்தியை பறைசாற்றும் விதமாக அவர் கூறும் சில விஷயங்கள் அலுப்பு தட்டுகிறது. இந்த நாள், இந்த நேரத்துல இந்த கலர் சட்டை போட்ருந்தேன், இந்த ஹோட்டல்ல சாப்டேன் என்ற ரேஞ்சில் படுத்துகிறார். போதும் சார்!

பி சுசீலாவை மாலை பொழுதின் மயக்கத்திலே பாடலை பாட அழைத்தார்கள். தங்கப் பதக்கத்தால் ரொம்பவே உருகி விட்டார் என்று நினைக்கிறேன். உளறு உளறு என்று உளறினார். பாடலை அருமையாய் பாடினார். என்ன குரல் வளம் அவருக்கு! ஏ எல் ராகவன் இன்னும் அருமையாய் பாடுகிறார். பழைய பாடகர்களின் குரலில் ஜெயா டிவியில் பாடும் பாடகர்கள் மிக அருமையாய் பாடினார்கள். 

டி எம் எஸ், பி பி எஸ் போன்றோர்கள் மிகவும் தளர்ந்து விட்டார்கள். மேடையில் ஏறவே முடியவில்லை. அவர்களை படுத்தி மேலே அழைத்து வந்து பதக்கம் பெறச் செய்கிறார்கள். ஜெ அவர்களுக்கும் அம்மா தானே, பிள்ளைகள் மேல் பாசமாய் அவர்களே கீழே வந்து கொடுக்கலாமே? நான் பார்த்த வரை ஜெ வை பார்த்தால் ஸ்ட்ரிக்ட் எச் எம் ரேஞ்சுக்கு எல்லோரும் கை கட்டி வாய் பொத்தி நிற்கிறார்கள். அவரை வைத்து இயக்கிய பாலச்சந்தர் அப்படி வணக்கம் போடுகிறார். அவர்கள் வயதையும் மீறி ஒரு பதவிக்கு இத்தனை அடிபணிவது அசிங்கமாய் இருக்கிறது. தமிழ்நாட்டில் தான் இப்படி எல்லாம் நடக்கும்!

திரும்பி வரும்போது நான் போட்டு போன குடை அப்படியே இருந்தது! தமிழ்நாட்டில் இப்படியும் நடக்குமா? 

மற்றுமொரு சுதந்திர தினம். வழக்கமான கொடியேற்றல்கள். சம்பிரதாயமான கொண்டாட்டங்கள். புளித்துப் போன அரசியல்வாதிகளின் உறுதி மொழிகள். மேடைப் பேச்சுக்கள், போலி பெருமிதங்கள்! சுதந்திரம் அடைந்து அறுபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் நாட்டில் அருபத்தைந்தாயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. எதை நினைத்து சுதந்திரத்தை கொண்டாடுவது? அறுபத்தைந்து ஆண்டுகளாய் வளரும் நாடுகளில் பட்டியலில் தான் இருக்கிறோம். ஒரே முன்னேற்றம் முப்பது கோடி இருந்த மக்கள் தொகை நூற்றி இருபது கோடி ஆகியிருக்கிறது.

நான் அரசியல்வாதிகளை குற்றம் சொல்ல மாட்டேன். நாட்டின் இந்த நிலைக்கு நாம் தான் காரணம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தான் காரணம். நேர்மையாய் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு எத்தனை பேர் வாழ்கிறோம்? எல்லாவற்றிலும் ஒரு அலட்சியம், பொறுப்பின்மை, களவாணித்தனம். சுயஒழுக்கம் என்பது மருந்துக்கும் கிடையாது. அரசியல்வாதிகளை சொல்ல நமக்கு என்ன தகுதி இருக்கிறது? நமக்கு அளிக்கப்பட இடத்தில் நாம் என்ன தப்பு செய்ய  முடிகிறதோ, அவர்களுக்கு அளிக்கப்பட இடத்தில் அவர்கள் அதை செய்கிறார்கள். 

தவறு என்பது தவறிச் செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தப் பாக்கணும்
தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்

காலங்காலமாக சினிமா பாடல்களை பாடி வருகிறோம். ஆனால் அதிலிருந்து நம் வாழ்க்கைக்கு என்ன எடுத்துக் கொண்டோம்? மேடைக்கு மேடை காந்தி, காமராஜர் பிறந்த நாடு என்று பீற்றிக் கொள்கிறோம். அவர்களின் வாழ்வியல் தத்துவமான "எளிய வாழ்க்கை, உயரிய சிந்தனை" என்றைக்காவது கடைபிடித்திருப்போமா? பொய் சொல்லாமல் நம்மால் ஒரு நாள் வாழ முடியுமா? தவறு செய்தால் மன்னிப்பு கேட்கும் திடம் நமக்கு இருக்கிறதா? இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத கடவுளுக்கு செய்யும் செலவுகளில் கொஞ்சம் நம் கன் முன்னே ரத்தமும் சதையுமாய் இருக்கும் மனிதனுக்கு நாம் செய்வோமா? 

நாட்டில் சாதி மத சண்டைகள் ஒழியவில்லை. இன்றும் எங்கோ ஓர் இடத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு அநீதி இழைத்து கொண்டு தான் இருக்கிறோம். இன்று ஒரு படி மேலே போய், கெளரவக் கொலைகள் வரை வந்து விட்டோம்!

என்று ஒரு பெண் தன்னந்தனியாய் கழுத்து நிறைய நகைகளுடன் இரவு பனிரெண்டு மணிக்கு தெருவில் தனியாய் நடக்க முடிகிறதோ, அன்று தான் உண்மையான சுதந்திரம் அடைகிறோம் என்று காந்தி சொன்னார். கழுத்து நிறைய நகைகளை விடுங்கள், இரவு பனிரெண்டு மணி கூட விடுங்கள், ரோட்டில் ஒரு பெண் தனியாய் நடக்க முடிகிறதா? பத்து இருபது பேர் குடித்து விட்டு ஒரு பெண்ணை நடு ரோட்டில் வன்கொடுமை செய்கிறார்கள். அதை வீடியோ எடுத்து இணையம் எங்கும், தொலைக்காட்சியில் அத்தனை சானல்களிலும் ஒளிபரப்புகிறார்கள். என்ன அநியாயம் என்று நாமும் ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம், பிறகு இந்த நாட்டை திருத்த முடியாது என்று சானலை மாற்றி விடுகிறோம். காந்தி சொன்ன சுதந்திரம் எங்கே? 

வறுமை ஒழியவேயில்லை. இன்றும் நாற்பது சதவிகிதம் இந்தியர்கள் நாளைக்கு $1.25 குறைவான வருமானம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.  ஒரு நாளைக்கு சராசரி வருமானமே முப்பத்திரண்டு ரூபாய் இருந்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வர மாட்டார் என்று நாகூசாமல் சொல்கிறார்கள்.

இன்று செய்தித்தாளை படிப்பது போன்ற ஒரு மனச் சோர்வு கிடையாது. செய்தித்தாளை படித்து நம் நாளை துவக்க முடியுமா? ஒவ்வொரு செய்திகளையும் படித்தால் ரத்தக்கொதிப்பே வந்து விடும். ஒரு பக்கம் வெள்ளம் வந்து வாழ்வியல் பாதித்தது என்று செய்தி. அடுத்த பக்கத்தில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதித்தது, பஞ்சத்தில் இத்தனை பேர் இறந்தார்கள் என்று அஞ்சலி! என்ன ஒரு வேடிக்கை?

உழவர்களை முழுவதுமாய் புறக்கணித்து விட்டோம். விவசாயம் முற்றிலும் அழிந்து கொண்டிருக்கிறது. அவர்களின் வயலுக்கு வாங்கிய பாலிடாயில் தான் இன்று அவர்களுக்கு கடைசி உணவாக ஆகிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளை புறக்கணித்த எந்த தேசம் உருப்படும்?

நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று மார் தட்டும் அதே சமயத்தில் பக்கத்து மாநிலத்துடன் அடித்துக் கொள்கிறோம். அந்த இந்தியன் என்ன ஆனான் என்று தெரியவில்லை. 

எங்கும் லஞ்சம் விரவிக் கிடக்கிறது. நாட்டில் எல்லாவற்றிற்கும் ஒரு ரேட் இருக்கிறது. வொயிட்ல இத்தனை ப்ளாக்ல இத்தனை என்று நாகூசாமல் பேசிக் கொள்கிறோம்.  நான்கு வயதுக் குழந்தை ஸ்ருதிக்கு சாக வேண்டிய வயதா?

மிதக்கும் சொர்க்கம் என்று சொல்லிச் சொல்லி ஒரே ஒரு சொர்கத்தை வைத்துக் கொண்டு நாட்டையே தீவிரவாதம் என்ற பெயரில் நரகமாகிவிட்டோம். 

மக்களாட்சி என்று பெயருக்கு தான் சொல்கிறோமே தவிர, மன்னராட்சியை போல் வாரிசு அரசியல் தான் எங்கும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அத்தனையும் அவர்கள் குடும்பச் சொத்தாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை தான் நாம் பார்க்க, கேட்க, படிக்க வேண்டி இருக்கிறது. 

கல்விமுறையை பற்றி கேட்கவே வேண்டாம். நம் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்? அவர்கள் நல்லவர்களாக, நாலு பேருக்கு உதவுபவர்களாக வளர்கிறார்களா?  நம் குழந்தைகளை அறிவுக் குருடர்களாக அல்லவா வளர்த்து வருகிறோம். கசடற கற்பதை விடுங்கள், என்ன கற்கிறோம் என்றே தெரியாமல் மதிப்பெண் ஒன்றையே நோக்கி ஓடும் கடிவாளம் கட்டிய குதிரைகள் ஆகிவிட்டன நம் குழந்தைகள். குழந்தைகள் நம்மை பார்த்து தான் கற்றுக் கொள்கிறார்கள். நான் ரெட்டை மதிக்காமல் சிக்கனில் க்ராஸ் செய்தால் நாளை அவன் எப்படி அதை மதிப்பான்? அப்போது வருங்கால இந்தியா எப்படி இருக்கும்?

நூற்றி அறுபத்தைந்தாவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் என்று சம்பிரதாயமாக இருக்கும்! வேறு என்ன சொல்ல? 

தினமும் குளிக்கிறேன்; ஆக்ஸ் டியோடரண்ட் தான் உபயோகிக்கிறேன்.
வேற்று கிரக பெண்கள் வேண்டாம்...
பக்கத்து வீட்டு பெண் கூட அருகில் வர மாட்டேன் என்கிறாள்.
ம்ம்ம்...அழகாய் இருக்க வேண்டும் போலிருக்கிறது...

"சரி" என்றோம்
பிறகு "ஓகே" என்றோம்
இப்போது "சரி ஓகே" என்கிறோம்
கவனித்தீர்களா?

புள்ளை பெறும் வரை புதுப்பொண்டாட்டி - 
சீட்டின் பாலிதீன் கவர் கிழியும் வரை புதுக் கார்

ஏதோ இனிமேல் சிக்னல் பச்சையே கட்டாது
என்பது போல் தூரத்திலேயே பச்சையை பார்த்தவர்கள் 
எல்லோரும் வண்டியை விரட்டுகிறார்கள்

எண்பதுகளில் வந்த ரஜினி படங்களில் அவர் 
ஆடும் நடனமாடும் படங்களைப் பார்த்தால்
சீக்கிரம் ஆடி விட்டு அடுத்த ஷூட்டிங்குக்கு போகணும்
என்கிற அவசரமே எனக்குத் தெரிகிறது :-)

முகப்புத்தகத்தில் தமிழ் பழமொழிகளை இந்த காலத்துக்கு ஏற்ப மாற்றி எழுதியிருந்தார்கள். மிகவும் ரசித்தேன். உங்கள் பார்வைக்கு சில:

ஒரு பானை சோத்துக்கு - ஒரு குண்டா சாம்பார்
தம்பி உடையார் - அண்ணன் செட்டியார்!
தோல் கொடுப்பான் - கறிக்கடை பாய்!
ஊரார் புள்ளைய நீ ஊட்டி வளத்தா - உன் பொண்டாட்டி உன்னை சந்தேகப்படுவா..
நல்ல மாட்டுக்கு - அஞ்சு கிலோ புண்ணாக்கு
காற்றுள்ள போதே தூங்கி விடு - கரண்ட் போனா தூக்கம் வராது!

இதை படிச்சுட்டு நம்ம கை சும்மா இருக்குமா? ஆனா, இதை ரசிக்க உங்களுக்கு கீழ் கண்டவற்றின் சரியான பதிப்பு தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எல்லாம் பிரபலமானவை தான், தெரியும் என்று நம்புகிறேன்!

பசி வந்தால் - கொட்டிக்கோ
ஐந்தில் வளையாததை - அனாவசியமா வளைக்காதே
கந்தலானாலும் - ஜீன்ஸ் பேன்ட்
கூழானாலும் - ராவா குடி
ஆழமறியாமல் - தூர் வாராதே
விரலுக்கேத்த - மோதிரம்
வீட்டை கட்டி பார் - ஈ எம் ஐ கட்டிப் பார்
மரத்தை வச்சவன் - அதை வெட்டி பிளாட் கட்டுவான்
பெத்த மனம் பித்து - அஞ்சும் அஞ்சும் பத்து
சின்ன மீனை போட்டு - கொழம்பு வை மொதல்ல
இக்கரைக்கு அக்கரை - டார்க் பச்சை


எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
என் அழைப்புக்கு யாரும் செவி சாய்க்கவில்லை
ஒருவேளை ஒடுபவர்களில் யாராவது நின்று
என்னை அழைக்கக் கூடும்
நானும் ஓட ஆரம்பிக்க வேண்டும்
-----------------------------------------------------------------------------------------------------
சில சமயங்களில் எதுவுமே செய்யத் தோன்றுவதில்லை
இந்தக் கவிதையை போல



தமிழ் ஸ்டூடியோ, தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு மூன்றாம் சனிக்கிழமையும் அரிய, உலகத் தரம் வாய்ந்த இந்திய  திரைப்படங்களை திரையிட்டு அதைப் பற்றி கலந்துரையாடுகிறார்கள். அதன் சார்பாக சென்ற வாரம் ஜான் அப்ரஹாம் இயக்கிய அக்ரஹாரத்தில் கழுதை திரைப்படத்தை பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கத்தில் திரையிட்டார்கள்.

ஆதரவில்லாத ஒரு குட்டிக் கழுதைக்கு ஒரு பிராமண கல்லூரி  பேராசிரியர் அடைக்கலம் கொடுக்கிறார். அதனால் அவருக்கு கல்லூரியில் அனைவரும் கேலி பேசுகின்றனர். கல்லூரி முதல்வர் அவரை கூப்பிட்டு கண்டித்து கழுதையை ஒழித்துக் கட்டுமாறு கூறி விடுகிறார். இரண்டு நாட்கள், லீவு கொடுத்தால் நான் என் கிராமத்தில் விட்டு விடுகிறேன் என்று சொல்லி அனுமதி பெறுகிறார். தன் கிராமத்தில், ஒரு அக்ரஹாரத்தில் உள்ள தன் வீட்டில் அங்கு வேலை செய்யும் ஒரு ஊமைப் பெண்ணின் பொறுப்பில் அதை விட்டு விட்டு வந்து விடுகிறார்.

அந்த அக்ரஹாரத்தில் இருக்கும் சில விஷமம் பிடித்த சிறுவர்கள், அந்த கழுதையை படாத பாடு படுத்துகிறார்கள். யாகம் நடக்கும் வீட்டுக்குள் அனுப்பி விடுவது, பெண் பார்க்கும் வீட்டுக்குள் அனுப்பி வைப்பது, வயதானவர் நடக்கும் பாதையில் குறுக்கே விட்டு, அவர்களை விழச் செய்வது என்று பல வித விஷமம் செய்து விட்டு, பழியை கழுதையின் மேல் போடுகிறார்கள். அங்கு இருக்கும் பிராமணர்களும் பேராசிரியரின் வீட்டுக்கு வந்து குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறார்கள். இதனிடையில், அந்த ஊமைப்  பெண் ஒருவனின் ஆசைக்கு இணங்கி கருவுருகிறாள். விடுப்பில் வரும் பேராசிரியர் கழுதையை காணாமல் ஊமைப் பெண்ணிடம் கேட்க, எல்லோரும் சேர்ந்து அதை வண்ணானிடம் கொடுத்து விட்டார்கள் என்று அவள் சொல்கிறாள். அவளுடன் சென்று வண்ணானை கண்டு பிடித்து, கழுதையை திருப்பிப் பெற்றுக் கொள்கிறார் பேராசிரியர். மறுபடியும் கழுதை ஊமைப் பெண்ணின் பொறுப்பில் வருகிறது.

சில மாதங்கள் கழித்து ஊமைப்பெண்ணுக்கு குழந்தை இறந்தே பிறக்கிறது. இறந்த குழந்தையை ஊமைப் பெண்ணின் தாய் கோயில் வாசலில் வீசி விடுகிறாள். அதிர்ச்சி அடைந்த பிராமணர்கள் என்னவென்று அவளிடம் விசாரிக்க, தனக்கு ஒன்றும் தெரியாது இந்தக் கழுதை தான் அப்படி செய்திருக்கும் என்கிறாள். பொறுமையை இழந்த பிராமணர்கள் அந்தக் கழுதையை கொல்வது என்று தீர்மானிக்கிறார்கள். ஆட்கள் அமர்த்தி கழுதையை மலை உச்சியில் கொண்டு சென்று அடித்துக் கொன்று  விடுகிறார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு, அந்தக் கழுதையின் உருவம் பிராமணர்களின் கண்ணுக்கு அடிக்கடி தெரிகிறது. கழுதையின் ஆத்மா அங்கு அலைந்து கொண்டிருப்பதாக அனைவரும் பயப்படுகிறார்கள். இதனிடையில் பேராசிரியரின் தம்பி மனைவி வெகு நாட்கள் கழித்து கருவுருகிறாள். ஒரு பிராமணரின் காணாமல் போன பையன் திரும்பி வருகிறான். இதையெல்லாம் வைத்து அது ஒரு தெய்வீக கழுதை, அதை கொன்றது பாவம் என்றும், அதற்கு ஒரு கோயில் கட்டுவது என்றும் முடிவெடுக்கிறார்கள்.  

ஊமைப் பெண் குழந்தையையும், கழுதையையும் ஒருசேர இழந்த சோகத்தில் பித்துப் பிடித்துத் திரிகிறாள். ஊருக்கு வரும் பேராசிரியர் விஷயம் கேள்விப்பட்டு, ஊமைப் பெண்ணுடன் மலையுச்சிக்குச் சென்று அந்த கழுதையின் மண்டை ஓட்டை எடுத்து ஒரு மனிதனின் இறப்புக்கு பறை அடித்து என்ன மரியாதை செய்வார்களோ அத்தகைய இறுதி மரியாதை செய்கிறார். அந்த அக்ரஹாரம் தீப்பற்றி எரிகிறது. அதை ஆவேசத்துடன் பேராசிரியரும் ஊமைப்பெண்ணும் பார்ப்பதாக படம் நிறைவடைகிறது!

பதினாறு வயதினிலே வந்த சமயத்தில் வந்த படம் இது. தேசிய விருதுக்காக அந்தப் படத்துடன் போட்டியிட்டு இந்தப் படம் வென்றிருக்கிறது. ஒரு ஆர்ட் பிலிமுக்கே உரிய அமைதியான, பின்னணி இசை அதிகம் இல்லாத, தோய்ந்த நடை படம் முழுதும் இருக்கிறது. இந்தப் படத்தின் பெயரை நான் பல ஆண்டுகளாக கேட்டிருக்கிறேன். அப்போது வந்த தமிழ் படங்களில் இருந்து இது நிச்சயம் வித்தியாசப்பட்டிருக்கிறது. அந்தக் காலகட்டத்துக்கு இது ஒரு நல்ல முயற்சி தான். ஆனால், நான் எதிர்பார்த்துப் போயிருந்த அளவுக்கு படம் இல்லை என்பது தான் உண்மை.

அக்ரஹாரத்தில் கழுதை வந்தால் என்ன ஆகும்? இது தான் படத்தின் கதை. கழுதை என்பது இங்கு ஒரு குறியீடு, உயர்ந்த சாதியினர் மத்தியில் தாழ்ந்த சாதியினர் நடத்தப்படும் விதத்தை இயக்குனர் எடுத்தியம்புகிறார் என்றெல்லாம் நான் படம் பார்க்கவில்லை. அது எனக்கு ஒரு கழுதை தான். குட்டியாய் இருக்கும்போது கழுதையும் அழகு தான் என்று சொலவாடைக்கு ஏற்ப அந்தக் குட்டிக் கழுதை ஜோராய் இருந்தது. ஒவ்வொரு முறை அதை அழைத்துப் போய் விஷமம் செய்யும் போதும், அவர்கள் பின்னால் தலையாட்டிக் கொண்டே போகும் அதை பார்த்தால் பரிதாபமாய் இருந்தது. ஒரு வாய் இல்லா ஜீவனை இப்படி எல்லாம் வதைப்பது எவ்வளவு பெரிய கொடுமை. யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல் எல்லா பலி பாவங்களையும் அது ஏற்றுக் கொள்கிறது. அத்தனை பலி பாவங்கள் அதன் தலையில் சுமத்தப்பட்டது கூடத் தெரியாமல், அநியாயமாய் அடிபட்டுச் சாகிறது. எதிர்க்கத் துணியாத ஒரு ஜீவனிடம் இத்தகையை செயலை செய்வது எத்தனை ஈனமான செயல்? மனிதன் தான் எத்தனை குரூரமான குணம் கொண்டவனாக இருக்கிறான்.

வெங்கட் சுவாமிநாதன் திரைக்கதை எழுதி இருக்கிறார். ஜான் ஆபிரஹாம் இயக்கி இருக்கிறார். ஜான், அப்படியே திரைக்கதையை படமாக்காமல், அதில் இருந்து நிறைய்ய மாற்றி எடுத்தார் என்கிறார்கள்.அப்போது தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மீதும் அறிவின் மீதும் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை போலும்! அந்த விஷமக் காட்சிகள் ஒரு உதாரணம். பேராசிரியரின் வீட்டுக்கு வந்து உங்க கழுதை இன்னைக்கு என்ன செய்தது தெரியுமா? என்று அத்தனையும் சொல்லி விட்டு, அதையே காட்சியையும் காட்டுகிறார்கள். சினிமா என்றால், காட்ட வேண்டும், சொல்லக் கூடாது! அது தான் நல்ல திரைக்கதை உக்தி. இந்த படத்தில், முதலில் எல்லாவற்றையும் வசனமாய் சொல்லி விட்டு, எதற்கும் காட்சியும் இருக்கட்டும் என்று காட்டுகிறார்கள். அது சற்று எரிச்சலாய் இருந்தது.

படத்தில் சில விஷயங்கள் புரியவில்லை. பேராசிரியர் பாரதி புத்தகங்களை படிக்கிறார், சே வின் புத்தகங்களை படிக்கிறார். ஆனால் ஆமடா, நான் அப்படித் தான் வளர்ப்பேன் என்று சொல்லவில்லை.     யாரிடமும் மல்லுக்கு நிற்கவில்லை. அந்த ஊமைப் பெண் தவறான வழியில் கருவுற்றாள், யாரும் எதுவும் சொல்லவில்லை. அந்தப் பெண்ணின் கதாப்பாத்திரம் எதற்கு? கழுதையை வைத்து எப்படி விஷமம் செய்து பழியை அதன் மேல் போடுகிறார்களோ, அதே போல் அந்தப் பெண்ணை நாசம் செய்து விட்டு, அவளையும் பழிக்கிறது சமூகம் என்று சொல்ல வருகிறார்களா? புரியவில்லை. அப்படி இல்லையென்றால்,அவள் ஏன் கடைசியில் அத்தனை ஆவேசமாக இருக்கிறாள்? திடீரென்று ஆக்ராஹாரம் தீப்பிடித்து எறிவது எப்படி?

என் கூட வந்த நண்பர் ஒரு கருத்தை சொன்னார், மனிதர்கள், தானே நடக்கும் ஒரு சாதாரண செயலுக்கு அவர்களுக்கேற்றவாறு குறிப்பேற்றிக் கொண்டு திண்டாடுகிறார்கள் என்றார். கழுதை அங்கு வந்தது ஒரு சாதாரண நிகழ்வு. அது பொல்லாத கழுதை என்றும், அதை அடித்துக் கொன்ற பிறகு அது ஒரு தெய்வீக கழுதை என்றும் பிதற்றுவது ஒரு உதாரணம். அது ஒரு நல்ல கருத்தாய் எனக்குப் பட்டது.

படம் முடிந்த பிறகு கலந்துரையாடலிலும் இதே போன்ற விமர்சனங்களே எழுந்தன.நிகழ்ச்சி நிறைவுற்றதும் நான் தமிழ் ஸ்டூடியோ அரூணிடம் ஜெயகாந்தனின் "உன்னைப் போல் ஒருவன்" படத்தை திரையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். அது கிடைப்பது அரிது என்றும் முயற்சி செய்வதாகவும் சொன்னார். நல்ல ஒரு மாலைப் பொழுதுக்கு நன்றி நண்பர்களே!