தீபாவளி குழந்தைகளுக்குத் தான் என்றே தோன்றுகிறது. வயது ஆக ஆக நம்மோடு சேர்ந்து தீபாவளிக்கும் வயதாகிவிடுகிறது! பள்ளியில் படிக்கும்போது தீபாவளியை நினைத்தால் ஏற்படும் குதூகலம் இல்லை இப்போது! ஏன் அப்படி? அதே தீபாவளி, அதே புத்தாடை, அதே இனிப்புகள், அதே பட்டாசுகள், அதே புது சினிமாக்கள்! அதே சிறப்பு நிகழ்த்திசிகள்! ஆனால் அப்போதிருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை. ஏதோ ஒரு நாள் விடுமுறை என்கிற அளவிற்கு அது நீர்த்துப் போய் விட்டது! ஒரு வேளை இந்த அத்தனையும் அப்பா வாங்கிகொடுத்த போது இருந்த சந்தோஷம் நாமே சம்பாதித்து வாங்கும்போது குறைந்து விட்டதோ? தெரியவில்லை...

பள்ளியில் படிக்கும்போது தீபாவளியை பற்றிய கனவு, புது வருஷ காலெண்டரில் தொடங்கும்! காலேண்டர் கைக்கு கிடைத்ததும், முதலில் பார்ப்பது தீபாவளி எப்போது என்று தான்! கிட்டத் தட்ட ஒரு வருடத்திற்கு முன்னே...அது அருகே வர வர, நெஞ்சில் ஒரு வித குறு குறுப்பு  தோன்றும். புது துணிகளுக்காக கடை ஏற ஆரம்பித்ததும் அது மேலும் சூடு பிடிக்கும். புது துணி எடுத்ததும், வீட்டில் வருவோம் போவோரிடமெல்லாம் புதுத் துணியை காட்டுவது ஒரு சடங்காகும்! அது அப்படி ஒரு பரவசமான அனுபவம். என் நண்பன் ஒருவன் சொன்னான், விடிந்தால் தீபாவளி என்கிற பரவசம், நமக்கு விடிந்தால் கல்யாணம் என்பதிலும் இருப்பதில்லை! எத்தனை உண்மை!  பட்டாசுகள் என்னை அவ்வளவு பாதித்ததில்லை. சாஸ்திரத்துக்கு வாங்கி வெடித்துக் கொண்டிருந்தேன். இத்தனை பட்டாசு வேண்டும் என்று அப்பாவிடம் அடம்பிடித்ததாய் ஞாபகம் இல்லை. என்னை பொறுத்தவரை, தீபாவளியை விட தீபாவளியை எதிர்பார்ப்பதே அருமையான த்ரில்! பள்ளியில் படிக்கும்போது கிளாசில் எழுதும்போது, தேதி போட்டு எழுதுவதுண்டு! தீபாவளி நெருங்க நெருங்க, அந்த தேதிகளும் எனக்குள் ஒரு குறுகுறுப்பை உண்டாக்கும். தீபாவளி எந்த நாள் என்பது வருஷத்தின் முதல் நாளே மனப்பாடம் ஆகி விடுவதால், இதே, அடுத்த மாதம், இந்த தேதியில் தீபாவளி என்று மனது அலைபாயும். தேதி ஒத்துப் போகவில்லைஎன்றால் கிழமை...எப்படியோ எல்லா தேதிகளும் தீபாவளியையே சென்றடையும்! எல்லா மதமும் கடவுளை சென்றடைவதைப் போல்...ஆனால் அதே தேதிகள் தீபாவளி முடிந்ததும் சோகத்தை அள்ளிப் பூசும். தீபாவளி முடிந்து முதல் நாள் பள்ளி சென்று எழுத ஆரம்பத்ததும், என் கை தன்னையுமறியாமல் தீபாவளிக்கு முந்தின தேதிகள் குறிப்பிட்ட பக்கங்களை நோக்கிச் செல்லும்! சே, இந்த நாட்களில் தீபாவளியை எதிர்நோக்கி நாம் எத்தனை மகிழ்ச்சியாக இருந்தோம் என்று ஏங்குவேன்! அந்த ஏக்கம் அடுத்த புது வருஷ காலெண்டரை பார்க்கும் வரை நீடிக்கும். பிறகு அதே எதிர்பார்ப்பு தொடங்கி விடும்...

இதோ மற்றொரு தீபாவளி, ஒரு சர வெடி முடிவுக்கு வருவதைப் போல் முடிந்து கொண்டிருக்கிறது! புது வருஷ காலண்டருக்காக காத்திருக்கத் தொடங்குகிறது ஒரு குழந்தை மனது!

தீபாவளி நல் வாழ்த்துக்கள்!



தலையின் 50 வது படம். அதில் வெங்கட் பிரபு கேம் விளையாடி இருக்கிறார்.

மங்காத்தா!


ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தை ஒழிக்க (நல்ல) போலீஸ் அதிகாரி ப்ரித்வி (அர்ஜுன்) நியமிக்கப்படுகிறார். அந்த சூதாட்டத்தில் புழங்கும் ஐந்நூறு கூடி ரூபாய் பணத்தை நான்கு பேர் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார்கள். அதில் ஒருவராய் சேர்ந்து கொள்கிறார் சஷ்பென்ஷனில் இருக்கும் (கெட்ட) போலீஸ் அதிகாரி விநாயக் (அஜீத்). ஆட்டம் ஆரம்பிக்கிறது! கடைசியில் பணம் யாருக்குக் கிடைத்தது என்பதில் ஒரு ட்விஸ்ட்!!

அந்த போலீஸ் கட், சால்ட் பெப்பர் லுக், ரே பன் கிளாஸ்...அந்த வசீகரம் குறையாத சிரிப்பு! எம்.ஜி.ஆர், ரஜினிக்குப் பிறகு அஜீத்துக்கு தான் அப்படி ஒரு ஸ்க்ரீன் ப்ரிசென்ஸ்! பிக்கினி போட்டு நாலு வெள்ளைத் தோள் பெண்கள் உடம்பை வளைத்து நெளித்து ஆடினாலும் நம் பார்வை அஜீத்தை தாண்ட மறுக்கிறது. மே வந்தால் 40 வயதாகிறது என்று அவரே சொல்கிறார், அத்தனை அழகாய் வயதாகிறது அவருக்கு! ஆக் ஷன் கிங் என்று அர்ஜுனை நக்கல் விடுவதும், "நீ எங்கே சுட்டியோ அங்கே தாண்டா நானும் சுட்டேன்" என்பதும் கிளாஸ்! அத்தனை ஹை ஃபையாய் இருக்கும் ஒருவர் கெட்ட வார்த்தைகள் பேசுவதும் ஒரு கிக் :)  ஃபிரேம் பை ஃபிரேம் அஜீத் இருக்க வேண்டும் என்று பிரபு முடிவு கட்டி விட்டார் போல்!! தலை ரசிகர்களுக்கு அவரின் 50 வது படத்தில் இதை விட வேறென்ன வேண்டும்! படத்தை அஜீத் தான் தாங்கு தாங்கு என்று தாங்குகிறார். தன் 50 வது படத்தில் இப்படி ஒரு நெகடிவ் ஷேட் காரக்டர் எடுத்ததே பெரிய விஷயம் தான்! அவரே சொல்வது போல், இத்தனை நாள் நல்லவனாகவே நடித்துப் பார்த்தார், ஒன்றும் விளங்கவில்லை. அதனால் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டார் போலும்! அதுவும் நல்லதுக்கு தான் என்று சொல்ல வேண்டும்!

அழுது கொண்டே "நிஜமாத் தான் சொல்றியா?" என்று அஞ்சலி கேட்கும் போது பிரபுவின் ட்ரேட் மார்க் குறும்பு தெரிகிறது. அது சீரியஸ் சீனாய் இல்லாவிட்டால் "கற்றது தமிழ்" படத்திலிருந்து அஞ்சலியின் ஷாட்டை எடுத்து அப்படியே போட்டிருப்பார் என்று பட்டது! மற்றபடி சென்னை 28, சரோஜாவில் இருந்த திரைக்கதை நேர்த்தி ஒன்றும் இதில் இல்லை. படம் பார்த்த நாங்கள் தான் குண்டடி படாமல் தப்பித்தோம்; படம் முழுதும் யாரோ யாரையோ சுட்டுக் கொண்டே இருந்தார்கள்! அதோடு பல இடங்களில் லாஜிக் சொதப்பல்கள்!  படம் எடுத்துக் கொண்டே கதை எழுதியிருக்கிறார் என்று தெளிவாய் தெரிகிறது! ஆனால், என்ன கதை எழுதினாலும் அதில் சாமர்த்தியமாய் அவரின் கூட்டாளிகளை புகுத்தி விடுகிறார். மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை. பிரேம்ஜி என்ன செய்தாலும் சிரிக்கிறார்கள். இந்தப் படத்தில் அவர் வழி மொழியும் டயலாக், வானம் படத்தில் சிம்பு சொல்லும் டயலாக் "என்ன வாழ்க்கை டா?" மற்றவர் சொன்ன டயலாக்கை அப்படியே இவர் திரும்பி சொல்வதற்கு இவருக்கு இத்தனை பெயரா? "என்ன வாழ்க்கை டா?!"

ஆக் ஷன் கிங் நெற்றியில் விழும் முடியை ஊதி விட்டுக் கொண்டு படம் முழுதும் சுட்டுக் கொண்டே இருக்கிறார். "மை டியர் தலை" என்று கடைசியில் மெய் சிலிர்க்கிறார். ரஜினி மீனாவின் மகளோடு டூயட் பாடும் காலத்திலும் இவர் துப்பாக்கியுடன் திருடர்களை சுட்டுக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்! [சார் அந்த துப்பாக்கியை கொஞ்சம் குடுங்க!!!] அஞ்சலிக்கு ஒரு பாட்டு, நாளு சீன். லட்சுமி ராய்க்கு 2 பாட்டு, நாலு சீன். ஆண்ட்ரியாக்கு எண்ணி மூணு சீன்! தயிர் சாதத்துக்கு ஊறுகாய் போல்! யாரு த்ரிஷாவா? அவங்க வேற இருக்காங்களா என்ன? என்னது அவங்க தான் ஹீரோயினா? [சத்தியமா இதை எழுதிக் கொண்டிருக்கும்போது சன் ம்யுசிக்கில் "விண்ணைத்தாண்டி வருவாயா" பாடல் போகிறது. அதை பார்த்து தான் த்ரிஷா இந்தப் படத்தில் இருக்கிறாரே என்று ஞாபகம் வந்தது!] அந்த லட்சணம் தான் அவங்க ரோல்! யுவன் ஒவ்வொரு ட்யூன் போட்டு விட்டு ட்விட்டிக் கொண்டிருந்தார். அது தான் மிச்சம். பாடல்கள் ஒன்றும் அத்தனை பிரமாதமில்லை..

மங்காத்தாவில் தலை இருக்கிறது! தலை மட்டும் தான் இருக்கிறது!!
வெகு நாட்களுக்குப் பிறகு என்னுடைய சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு...அனைத்தும் போட்டோஷாப்பில் வரைந்தது!


இன்றைய வலைப்பதிவை பார்க்கும் முன், என் முந்தைய வலைப்பதிவை பற்றி ஒரு updated கருத்து:

தெய்வத்திருமகள் படத்தை நான் ஆஹா ஹோஹோ என்று புகழ்ந்து எழுதிவிட்டேன். அது ஒரு ஆங்கில படத்தின் அப்பட்டமான காப்பி என்ற உண்மை தெரியாமல்! ராம் பின்னூட்டம்ல சொன்னதும் தான் வலையில் தேடி பார்த்தேன். விக்ரம் சிகை அலங்காரத்திலிருந்து அவர் சிரிப்பு வரை அப்படியே இருக்கிறது! ஏன் இதில் ஒரிஜினல் இல்லையா என்று நீங்கள் கேட்டால் இருக்கிறது, ஆனாலும் மூலம் நகல் தானே! வெறுத்து விட்டேன். படத்தில் ஒரு வரி கூட இதை போடவில்லை, தொலைக்காட்சியில் வண்டி வண்டியாய் படத்தை பற்றி பேசுகிறார்கள், இதைப் பற்றி சொல்லவில்லை! மிஷ்கினுக்கு அடுத்து இப்போது இயக்குனர் விஜய்! ஆங்கில படங்கள், உலக படங்கள் பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளட்டும், மற்றவர்களுக்கு இது ஒரு புது படம் தானே என்று நினைப்பது எத்தனை திருட்டுத்தனம்?

திருட்டு வீசிடியில் படத்தை பார்க்காதீர்கள் என்று எனக்கு சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

நிற்க [எந்திரிச்சி நிக்கத் தேவையில்லை!]

கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்! BACK TO THE STORY!! இன்று கொசுக்கடி தாங்க முடியாமல் அதைப் பற்றி நறுக்கென்று ஒரு கடியை பேஸ் புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போடலாம் என்று ஆரம்பித்தேன். அது வலைபதிவு வரை வந்து விட்டது. எனக்கு சந்தோஷம், உங்களுக்கு (சங்கடம்?)

சங்ககாலத்தை போல் இன்றும் வீரனின் இடையில்
வாள் வைக்கும் வழக்கம் இருந்தால்
இடையின் மற்றொரு பாகத்தில் 
இன்னொரு உறை வைக்க வேண்டி இருக்கும்...
கொசு பேட் வைக்க!!

எனக்கும் சங்க கால வீரனுக்கும்
நிறைய வித்தியாசமில்லை!
இரவில் பேட் கொண்டு நான் 
கொசு அடிக்கும் அழகைப் பார்த்தால்
உங்களுக்கு புரியும்!!

பறக்கும் படையில் எதிரிகள்
காலாட்படையின் வீரன் நான்
வாள் வீசிப் பயன் என்ன?
சரண் அடைந்தேன் கொசுவே சரணம்!

எப்படியும் கொசுவை அழிக்க முடியப்போவதில்லை - பதிலாக 
எதாவது ஆராய்ச்சி செய்து அதன் எடையை கூட்டி விட்டால்
அது நம் கை காலில் கடிக்க அமரும் போது அதன் பாரம் தாங்காமல்
தள்ளி விடவாவது ஏதுவாய் இருக்கும்!!

பிள்ளையார் எறும்பும் அசைவமா என்ன?
இறந்த கொசுவை தூக்கிக் கொண்டு ஓடுகிறேதே!

படுக்கையின் மேல் கொசு வலை விரித்து 
விளக்கணைத்துப் படுத்தேன்...காலையில் 
அதிக ரத்தம் குடித்து மயங்கிய நிலையில் 
தப்பிக்க வழியில்லாமல் கொசுக்கள் 
அசந்து தூங்கி கொண்டிருந்தன!
நீண்ட நாட்களாய் அகோரப் பசியோடு இருந்த விக்ரமிற்கு ஒரு ஃபுல் மீல்ஸ் படைத்திருக்கிறார் இயக்குனர் விஜய்! விக்ரம் உயிர்த்தெளிந்து வந்திருக்கிறார். ஆறு வயது மனம் படைத்த வளர்ந்த மனிதனிடமிருந்து அவனது குழந்தையை உரியவர்கள் பறித்துக் கொள்கிறார்கள்.அவளை திரும்பி பெற அவன் நடத்தும் போராட்டமே கதை! கடைசியில் அதில் ஒரு சின்ன ட்விஸ்ட் என்று மிக அழகாய் திரைக்கதை பின்னியிருக்கிறார் விஜய்!

"கிருஷ்ணா, பேர் வைக்காதே! பின்னாடி பிரச்சனை ஆயிடும். எல்லாரும் பேர் சொல்லியே கூப்பிடுவாங்க!" என்ற வசனம் ஜெயகாந்தனின் "குரு பீடம்" கதையில் வரும் "பேரு என்னான்னு ஒரு கேள்வி கேட்டா - ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பதில் சொல்றான் பாத்தியா? ஒரு கேள்விக்கு எம்மாம் பதில்!" வசனம் நினைவுக்கு வந்தது! இப்படி பல "நச்ச்" கள்!

மரம் ஏன்பா உயரமா இருக்கு?
அதோட அப்பா உயரமா இருக்குல்ல அதான்!

காக்கா ஏன்பா கருப்பா இருக்கு?
அது வெயில்ல சுத்துது இல்லை, அதான்!

யானை ஏன்பா குண்டா இருக்கு?
அது நெறைய சாப்பிடுதுல்ல, அதான்!

இதையும் தாண்டி படத்தில் பல இடங்களில் நெகிழ்ச்சியான சம்பவங்கள். ஒரு உணர்ச்சிப்பூர்வமான மலையாள சினிமா பார்த்த உணர்வு! குழந்தை சாரா ஒரு நல்ல அறிமுகம்! கோர்ட் சீனில் விக்ரமுக்கு இணையாக அசத்துகிறது! அனுஷ்காவையும் அமலா பாலையும் வைத்துக் கொண்டு இந்த மாதிரி ஒரு படத்தை கொடுத்ததற்கே இவரை பாராட்ட வேண்டும். அனுஷ்கா இடுப்பு தெரியாமல் நடித்த ஒரே படம் இதுவே தான் இருக்கும்! சி ஜே பாஸ்கர், சந்தானம் காமெடி களை கட்டுகிறது! தமிழர்கள் சிரிக்கத் தெரியாதவர்கள் என்று யாரும் சொல்ல முடியாது! சமயத்தில் மொக்கை ஜோக்குக்கும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்! அவிலாஞ்சியின் அழகு நல்ல ஒரு ஒளிப்பதிவினால் கண்ணை பறிக்கிறது! பப்பப்பா பா பாடல் காதுக்கு இனிமை.

அடேயப்பா தில், தூள், சாமியில் பார்த்த விக்ரமா இது? என்ன ஒரு மாற்றம்! தலை முடியை சுற்றிக் கொண்டே, கையை தூக்கிக் கொண்டே, விரலை தேய்த்துக் கொண்டே, வாயை திறந்து கொண்டே, அசட்டுத்தனமாய் அட்டகாசமாய் சிரித்துக் கொண்டே என்று மனிதர் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் நல்ல ஒரு கதைக்காக, அந்த கதாப்பாத்திரமாய் வார்த்துக் கொண்டு, தன்னையே புதுப்பித்துக் கொள்ளத் துடிக்கும் ஒரு உன்னதமான கலைங்கனுக்கு ஹேட்ஸ் ஆஃப்! 

படத்தில் சில கேள்விகள், சில விமர்சனங்கள்!

படத்தில் வொய். ஜி. மகேந்திரன் கதாப்பாத்திரம் எதற்காக? 
அந்த டாக்டர் அத்தனை ஸ்ட்ரிக்டான ஆசாமி என்றால் விக்ரம் எப்படி ஐ. க்யு டெஸ்டில் தேறினார்?
மூர்த்தி (சீ ஜே பாஸ்கர்) பாஷ்யத்தின் (நாசர்) ஆளாய் இருந்தார், திடீரென்று எப்படி அவர் மனம் மாறினார்?

படம் நன்றாய் இருந்தாலும், சற்று நீளமாய் போய் விட்டது. சில தேவையில்லாத சீன்களை வேட்டி ஒட்டியிருந்தால் க்றிஸ்பாய் இருந்திருக்கும்! அதிலும் கோர்ட்டில் இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டு அடடடா...அப்பப்பா, தாங்க முடியவில்லை!! திடீரென்று அனுஷ்காவை விக்ரம் கட்டிப் பிடித்ததும் ஒரு கனவுப் பாடல்! குபீலென்று ஆகிவிட்டது!  கொடுத்த காசுக்கு மேல் பிரகாஷ் இசை அமைத்ததால் வந்த உபரி பாட்டு போல! நல்ல வேலை பாட்டோடு அந்தக் காதல் நின்று விட்டது!! படம் தப்பித்தது!!

இயக்குனர் விஜய் ஒரு பேட்டியில் சொன்னது போல், எந்த சூது வாதும் தெரியாமல், யாருக்கும் தீங்கு செய்யாமல், அன்பு ஒன்றே வேதமாய், எத்தனை அவசரத்திலும் விதிமுறைகளை தவறாத ஒருவனை மன நலம் இல்லாதவன் என்று சொல்வது எத்தனை விசித்திரம்!

இந்தப் படம் தெய்வத்திருமகள் அல்ல, தெய்வத்திருமகன் தான்!

மறுபடியும் ஒரு தீவிரவாதத் தாக்குதல்! மும்பையில் மூன்று குண்டு வெடிப்புகள்...ஊரில் உள்ள அத்தனை போலீஸ்களும் அங்கே குடி கொண்டு விட்டனர்.அத்தனை மீடியாவும் கூடாரம் அடித்து தங்கி விட்டது அங்கேயே! மற்றும் அத்தனை சானல்களிலும் கை இழந்து கால் இழந்து கதறும் படங்கள்! ஒருவரையும் விட மாட்டோம்; தீவிரவாதத்தை நூறு சதவிகிதம் ஒழிக்காமல் ஓய மாட்டோம் என்று வாக்குறுதிகள். யார் மீது குற்றம், யாருடைய தோல்வி இது என்று ஏராளமான விடை தெரியா வினாக்கள், நாடெங்கும் இதே செய்தி! உலகெங்கும் வன்மையான கண்டிப்புகள்! பிரதமர் உடனே முதலமைச்சரை தொடர்பு கொள்கிறார், அங்கு உள்ள நிலவரத்தை தனக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டுகிறார். பிறகு அவரே விரைகிறார் சம்பவ இடத்தை பார்வையிட!

நம் அரசாங்கத்திடம் [எல்லா நாட்டு அரசாங்கத்திடமும்!] ஒரே பிரச்சனை, பிரச்சனையின் மூலத்தை விட்டு விட்டு பிரச்சனையை பற்றியே பேசிக் கொண்டிருப்பது! இந்த முறை குண்டை எதனால் செய்திருக்கிறார்கள், எப்படி அதை வெடிக்கச் செய்திருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்தது போக, எப்படி இது இனிமேல் நடக்காமல் செய்வது என்பதை யோசிக்க வேண்டும். இந்த முறை செல்போன் மூலம் வெடிக்கச் செய்தால், அடுத்த முறை காய்கறி கூடையின் வழியே வெடிக்கச் செய்வார்கள். காவலர்கள் என்ன தான் செய்ய முடியும்? எதை என்று சோதனை செய்வது? எத்தனை நாள் செய்வது? யாரை தான் சந்தேகத்தில் பிடிப்பது? காஷ்மீர் பிரச்சனையை கிட்டத்தட்ட 65 ஆண்டுகளாய் வைத்து பேசிக் கொண்டிருக்கிறோம்! நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், நேர்மையான அணுகுமுறையுடன் இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சு வார்த்தைக்கு அமர்ந்தால் இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு மாதத்திற்கு மேல் ஆகுமா?

ஆனால் இதெல்லாம் மக்களுக்கு பழகி விட்டது. அரசியல்வாதிகள் இத்தகைய சம்பவத்தை வைத்து அரசியல் செய்து கொள்ளட்டும், ஊடகங்கள் இதை வைத்து பணம் சம்பாதிக்கட்டும், நம் அன்றாடப் பொழப்பை கவனிப்போம் என்று ஆகி விட்டனர். அவரவர்க்கு தெரிந்த தொழிலை அவரவர் செய்கிறார்கள், நாம் நம் வயிற்றுப்பாட்டிற்கு தெரிந்த தொழிலை செய்து பிழைப்போம் என்று மறத்து விட்டார்கள். மழை, வெயில் போல் குண்டு வெடிப்புகளும் பருவ காலங்களுள் சேர்ந்து விட்டது. அன்றாட வாழ்வில் ஒரு நிகழ்வாய் போய் விட்டது. ஒரே வித்தியாசம் மழை, வெயில் காலங்களை போல் இந்தக் காலம் எப்போது வரும் என்று திட்டவட்டமாய் தெரிவதில்லை!

" தி ஜங்கிள் புக்" படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் மோக்லியை அழைத்துச் சென்று நாகரீகப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சியில் ஒருவன் தன்னிடம் உள்ள பல விதமான ஆயுதங்களையும் அதனுடைய கொடூரத் தன்மையையும் மோக்லிக்கு விளக்குகிறான். இந்த ஒரு ஆயுதத்தை வயிற்றில் குத்தினால் போதும், அது வயிற்றில் உள்ளே மூன்றாக விரிவடையும். அதனால் அந்த மனிதன் உடனடியாக செத்து விடுவான் என்று பெருமையாய் சொல்கிறான். அதற்கு மோக்லி ஆர்வமாய், அவனை கொன்று தின்று விடுவாயா என்று கேட்கிறான். அவன் இல்லை என்கிறான். பிறகு மோக்லி அப்படி என்றால் அவன் உன்னை கொல்ல வந்தானா என்று கேட்கிறான். அவன் அதற்கும் இல்லை என்று பதில் சொல்கிறான். மோக்லி புரியாமல் அப்படியென்றால் ஏன் அவனை கொல்கிறாய் என்று கேட்கிறான். மேலும், "எங்களுடைய காட்டு வாழ்வின் விதிப்படி, ஒரு உயிரை கொல்வதற்கு ஒன்று நீ அதை சாப்பிட வேண்டும், அல்லது அது உன்னை கொல்ல வந்திருக்க வேண்டும். இந்த இரண்டு காரணமுமில்லாமல் எந்த உயிரையும் நாங்கள் கொல்ல மாட்டோம் என்கிறான்."

இதை ஏன் சொல்கிறேன் என்றால் காட்டுவாசியாய் திரிந்த போது இருந்த ஒரு கட்டுக் கோப்பு கூட நாகரீகம் அடைந்த நம்மிடம் இல்லை! ஒன்று புரிகிறது! மனிதன் இயற்கையின் சிறந்த ஜீவன். அவனை இனிமேல் அழிக்க இயற்கையாலேயே முடியாது! [ஒருவேளை பூமி வெப்பமாவதால் உலகம் அழிந்து விடும் என்று வைத்துக் கொண்டாலும் விஞ்ஞானம், பணபலத்தின் மூலம் எப்படியோ சிலராவது தப்பி விடுவார்கள் [2012 படத்தில் வருவதைப் போல] என்றே தோன்றுகிறது!] அதனால் மனிதனை மனிதனால் தான் அழிக்க முடியும்! அதற்கான ஆரம்பம் தான் இது! தீவிரவாதம், அரசியல், அதனால் ஊருக்கு ஊர் சண்டை, நாட்டுக்கு நாடு சண்டை என்று ஆரம்பித்து அது உலகப் போர், அணு ஆயுதம், பேரழிவு என்று முடியும்! இனி எத்தனை இயேசுக்களும், புத்தர்களும், காந்திகளும், தெரசாக்களும் பிறந்தாலும் அவர்கள் என்னதான் நன்னெறியை போதித்தாலும் மனிதன் மாறப் போவதில்லை. அவனின் அழிவு அவனால் தான் என்பதே உலக நியதி போலும்! [அப்படி நடந்தால் மனிதனுக்கு ஆறறிவு என்பது எதற்கு?]

மனித இனம் இனி மெல்லச் சாகும்!


வானம் மேகமூட்டமாய் இருக்கிறதென்று
நல்ல மழை பெய்கிறது என்று
சுடும் வெயிலில் ஒதுங்க மர நிழல் கிடைத்தது என்று
வேலைப் பளு அதிகம் என்று
பொழுதே போகவில்லை என்று
வீட்டில் பிரச்சனை என்று
வயிறு பசிக்கிறது என்று
பசிக்கவேயில்லை என்று
துக்கம் தாளவில்லை என்று
சந்தோஷம் சம்பவித்ததென்று
நண்பன் அழைத்தான் என்று
நல்ல அசைவச் சாப்பாடு என்று
மென்தொஸ் ஒன்று உபரி என்று
மனைவி வெளியூர் போய் விட்டாள் என்று,
புகை பிடிப்பவர்களுக்கு - எப்படியோ
கிடைத்து விடுகிறது புகை பிடிப்பதற்கான ஒரு தருணம்!

இது விமர்சனம் அல்ல! அவன் இவன் படத்தைப் பற்றி என்னுடைய ஒரு (ஒன்றரை!) பார்வை!

என்ன தான் சைக்கோத் தனமாக பாலாவின் முந்தைய படங்கள் இருந்தாலும், அவரின் படங்களில் வரும் அவருக்கே உரிய அக்மார்க் நக்கல்/எள்ளல் எனக்கு மிகவும் பிடிக்கும். உதாரணமாக:

சேது: மாமி, உங்க மயில் குட்டி போட்டா நேக்கும் ஒண்ணு தர்றேளா?
நந்தா: ந்தா, நீ எல்லாம் ஒரு டவுசர்/கிவுசர்னு மாட்டிட்டு வந்தா என்ன? அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்?
பிதாமகன்: எதுக்குடி ஃபைவ் ஹண்ட்ரட்? ம்ம்...நீ கக்கூசுக்கு போனதுக்கு!
நான் கடவுள்: [வாக்கி டாக்கியை காட்டி] பந்த் கர்!

அதே போல் இதிலும் சில நக்கல்கள் ஆங்காங்கே [அதாவது எங்கோ ஒரு ஆங்காங்கே!] தெறிக்கின்றன...

அப்பாவின் திருவளையாடல்களை பக்தர்களிடம் வைத்துக் கொள்ளக் கூடாதா? என்னிடமும் காட்ட வேண்டுமா?
ஏன்டா பக்தர்கள் மட்டும் என்ன இளிச்சவாயங்களா?

பக்தா உன் தவத்தை கண்டு மெச்சினோம்! வேண்டிய வரத்தை கேள்!
ஏன்டா, அவனுக்கு என்ன வரம் வேணும்னு தெரியலை, நீ என்ன சாமி?

ஹி இஸ் எ லையர்!
என்ன லாயரா? இவன் எப்போ படிச்சி லாயர் ஆனான்?

அவ்வளவு தான்! அவ்வளவே தான் அவன்-இவன்!

பத்திரிக்கையாளர்கள், பாலு மகேந்திரா போன்றோர்கள் தொடர்ந்து விமர்சித்து பாலாவை ஒரு வழியாய் அவருடைய அரக்கத்தனமான சினிமாவிலிருந்து மீட்டு விட்டார்கள் என்று நினைத்து சந்தோஷப்பட்டேன். அனால் அதுவே வினையாய் போய் விட்டது! இனிமேல் நான் சினிமாக்காரர்களை நம்பப் போவதில்லை!! படம் எடுக்க ஆரம்பிக்கும்போது முழு நீள காமெடி என்றார்கள். படம் எடுத்து முடிய முடிய கடைசி பதினைந்து நிமிடம் வரை காமெடி தான் என்றார்கள். விஷால் வேறு பேட்டிகளில் எல்லாம் நீங்கள் எதிர்ப்பார்க்கும் பாலா படம் போல் இது இருக்காது, உங்களுக்கு பாலா ஒரு ஷாக் கொடுக்க போகிறார்! நான் ஒன்றரை கண் வைத்தது [மனிதர் அநியாயத்துக்கு உழைத்திருக்கிறார்! ஆனால்....] எல்லாம் சும்மா கெட்டப் சேஞ் என்பதற்காக அல்ல, அது எதற்கு என்று கிளைமேக்சில் தெரியும் என்று ஏகத்துக்கு அள்ளி விட்டார்! அக்மார்க் சினிமா பொய்! 

பசுத்தோல் போர்த்திய புலி போல் காமெடி தடவிய (என்று சொன்னா) வழக்கமான பாலா படம் தான் அவன்-இவன்! நான் நினைக்கிறேன், பாலா மட்டும் பாலுமகேந்திராவிடம் சேர்ந்து ஒரு இயக்குனர் ஆகியிருக்காவிட்டால், நிச்சயமாய் ஆட்டோ ஷங்கர் மாதிரி ஒரு சீரியல் கில்லர் ஆகியிருப்பார்! அவனை போல் இல்லாமல் இவர் அநியாயம் செய்பவர்களை அடித்தே கொன்று ஒரு பெரிய பரபரப்பை உண்டு பண்ணியிருக்கக்கூடும்! மனதில் அத்தனை கொலை வெறி இருக்கிறது! அதனால் தான் படத்தின் கலைஞர்களையும் படாத பாடு படுத்துகிறார் என்று தோன்றுகிறது! சினிமா ஃபைட் எல்லாம் கிடையாது! அடி ஒவ்வொன்னும் நிஜம்மா விழனும்!! ஆமா...அப்படி செய்யும் போது அவருக்கு ஒரு மகிழ்ச்சி, திருப்தி ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறேன். குழந்தைகளை பாலா படத்திற்கு கூட்டிப் போகக் கூடாது! எப்போது யாரை அம்மணமாய் காட்டுவார், யார் தலையில் யார் கல்லை போட்டு கொல்வார்கள் என்று ஒன்றும் சொல்ல முடிவதில்லை! பாலிவுட்டில் அமீர் கான் என்று ஒரு மனிதர், இல்லை கலைஞன்! நிஜமான கலைஞன்!! ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், அமீர் கான் தயாரிப்பில் லகானில் தொடங்கி தோபி கட் வரை எல்லாமே நல்ல தரமான குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படங்கள்! அவர் தற்போது "டெல்லி பெல்லி" என்று ஒரு படத்தை தயாரித்திருக்கிறார்! அதனுடைய Tag line என்ன தெரியுமா? "SHIT HAPPENS!"
இது ஒரு காமெடி படம்! ஆனாலும், படத்தில் பல பச்சை பச்சையான மோசமான வசனங்கள் வருகிறது! தயாரிப்பாளராய் அவர் இந்தப் படத்தை விளம்பரப்படுத்த செல்லும் இடமெல்லாம் இது குழந்தைகளுக்கான, குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமல்ல என்று விடாமல் கூறிக் கொண்டே இருக்கிறார்! நல்ல சுத்தமான படத்தை விரும்புபவர்கள் இதை பார்க்க முடியாது என்று எச்சரிக்கிறார்! பாலா எங்கே இப்படி எல்லாம் சொல்றது, அவர் பேசுறதே, நன்றி வணக்கம் தான்! சரி விடுங்க...எனக்கு அமீர் கான் நேர்மை புடிச்சுருக்கு!

படத்தை பொறுத்தவரை நான் மேல் சொன்னா படி பாலாவின் கிளிஷேக்கள் நிரம்பிய வழக்கமான ஒரு தமிழ் சினிமா தான்! அதாவது கீழ் வரும் கிளிஷேக்கள்:

ஒரு முரட்டு ஹீரோ
ஒரு அழுக்கான பெண் [நாம் நினைத்தே பார்க்க முடியாத ஒரு நல்ல அழகான நடிகையை தேர்ந்தெடுத்து அவளை அழுக்காக்கி, பீடி குடிக்க, பீடா போட, தண்ணி அடிக்க விடுவார்!]
ஒரு சிவப்பான ஒல்லிபிச்சான் லூசு ஹீரோயின் [என்ன கேரக்டராய் இருந்தாலும் ஹீரோவை காதலிக்கும் இந்த லூசு!]
ஒரு வாட்டசாட்டமான அல்லது அழுக்கான வில்லன்
அசிங்க அசிங்கமாய் பேச வேண்டியது! [யதார்த்தம்?]
கடைசியில் காட்டில், மேட்டில், சாணியில், சகதியில் என்று முட்டி மோதி ஒரு ஃபைட்!

அவ்வளவு தான்...

அப்புறம், மிகவும் நெருங்கிய நட்பு/உறவுள்ளவரை வில்லன் கொன்று விடுவான். பாலாவின் வழக்கப் படி, ஹீரோ மிருகமாய் மாறி அவரை அடித்தோ, கடித்தோ, தலையில் கல்லை போட்டோ, உயிருடன் கொளுத்தியோ கொன்று விட்டு ஸ்லோ மோஷனில் நடந்து வருவான்! பாலா படம் என்று டைட்டில் போட்டு படத்தை முடித்து விடுவார்கள்! அதே கதை தான் இதுவும்.

ஏதோ ஒரு பேட்டியில் படித்தேன். பாலா அடிக்கடி இரவு நேரங்களில் வாழ்க்கையை உணர [?] சுடு காட்டுக்குச் சென்று வருவாராம்! இப்போது அவருக்கு மகள் பிறந்த பிறகு அங்கு போவதில்லையாம்! இனிமேலாவது அவருக்கு வாழ்க்கையில், அதன் அழகியல்களில் நம்பிக்கை வரும் என்றும் அதுவே, அவரின் படைப்புகளில் பிரதிபலிக்கும் என்றும் நம்புவோமாக!


சமச்சீர் கல்வியைப் பற்றியும், அதை ஏன் ஒத்தி வைக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் ஒரு சிறந்த அறிக்கை! புராணக் கதையில் பத்மாசுரனுக்கு வரமளித்து விட்டு சிவபெருமான் அவதியுறுவது போல் ஆகிவிட்டது இந்திய ஜனநாயகம்! நாமே ஆட்சியில் அமர்த்திவிட்டு அவதியுற வேண்டியிருக்கிறது! 

"என்று தணியும் இந்த அரசியல் வஞ்சம்!"

இதை எனக்கு அனுப்பிய தோழர் பாண்டியனுக்கு [http://puyarparavai.blogspot.com/] நன்றி!
  
சென்னை,                                                          
மே 24, 2011
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பொதுப் பாடத்திட்டம் என்கிற வடிவில் சமச்சீர்க் கல்வியை இந்தக் கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்த இருந்ததை ஒத்தி வைத்திருப்பதாகப் புதிய அரசு அறிவித்திருப்பது கல்வியில் அக்கறை உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது திட்டமிடப்பட்டுள்ள சமச்சீர்க் கல்விமுறை கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை எனவும் வல்லுனர் குழு ஒன்றை அமைத்துப் பரீசீலித்த பின்பு இதை நடைமுறைப்படுத்தலாம் எனவும் அரசு கூறியுள்ளது.

கோத்தாரி கல்வி ஆணையம் (1964-1966) தொடங்கி ‘பொதுக் கல்விக்கான பொதுப் பள்ளிமுறை’ என்கிற கருத்தாக்கம் இங்கே பேசப்பட்டு வருகிறது. அருகாமைப் பள்ளியுடன் கூடிய பொதுப்பள்ளி முறையே ’ஜி8’ நாடுகள் உட்பட உலகில் பல நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. கல்வி, அதிலும் குறிப்பாக ஆரம்பக் கல்வி எல்லோருக்கும் சமமாகவும், சீராகவும் (தரமாகவும்) கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறையுள்ள அனைவரும் கோத்தாரி ஆணையத்தின் இப்பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை நீண்ட காலமாக வற்புறுத்தி வந்தனர்.

கிட்டத்தட்ட ஐந்து பாடத் திட்டங்கள் வரை நடைமுறையிலிருந்த தமிழகத்திலும் பொதுப் பள்ளி, தாய் மொழியில் பொதுப் பாடத்திட்டம் என்கிற வடிவில் கல்வி அமைய வேண்டும் என்கிற கருத்தைக் கல்வியில் அக்கறையுள்ள பலரும் வற்புறுத்தி வந்தனர். கல்வியாளர்கள் தவிர அடித்தள மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சியினரும் இதை வற்புறுத்தி வந்தனர். இடதுசாரி மாணவர் அமைப்புகள் போராடங்களையும் நடத்தின. கல்வியை வணிகமாக்கி கொள்ளை லாபம் ஈட்டி வந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியினரே இதை எதிர்த்து வந்தனர்.

பொதுக்கல்வியை நடைமுறைப் படுத்த வேண்டுமென மேலெழுந்து வந்த இத்தகைய அழுத்தங்களின் விளைவாக முந்தைய அரசு, கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையில் குழு ஒன்றை 2006ம் ஆண்டில் அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை 2007ல் அளித்தது. அக்கறையுள்ள பலரும் இது தொடர்பாய் விவாதிக்கவும் கருத்துக் கூறவும் தொடங்கினர்.

முந்தைய  அரசு சென்ற ஆகஸ்ட் 26, 2009ல் சமச்சீர்க் கல்விமுறையை அறிவித்தபோது இது குறித்து வற்புறுத்தி வந்த பலரும் ஒருசேர மகிழ்ச்சியையும் ஏமாற்றத்தையும் அடைந்தனர். தாய் மொழி வழிக் கல்வி அடிப்படையிலான அருகாமைப் பொதுப் பள்ளி கைவிடப் பட்டதே வருத்தத்திற்கான காரணம். பல்வேறு பாடத் திட்டங்கள் என்பது போய் பொதுப் பாடத் திட்டம் என்கிற வடிவில் பொதுக்கல்வியை நோக்கி ஓரடி எடுத்து வைக்கப்பட்டது வரவேற்பிற்குக் காரணமாக இருந்தது.
சென்ற கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்குப் பொதுப் பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பாடத் திட்டம் மற்றும் பாட நூல்கள் உருவாக்குவதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டன. இக் குழுக்களில் அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்குபெற்றனர். தேர்வுகள் வைக்கப்பட்டும் உறுப்பினர்கள் தெரிந்து எடுக்கப்பட்டனர். முடிவுகள் அவ்வப்போது இணையத்தளங்களிலும் அறிவிக்கப்பட்டன. பாடத்திட்ட நகல்கள் பள்ளி ஆசிரியர் மாதாந்திரக் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டன. மொத்தத்தில் இந்த அளவு ஜனநாயகபூர்வமாக விவாதிக்கப்பட்டு பாடத் திட்டங்களும், பாட நூற்களும் இதுவரை உருவாக்கப் பட்டதில்லை.

சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புப் பாட நூல்களில் ஒருசில குறைபாடுகள் இருந்தபோதும் மொத்தத்தில் அவை மிகச் சிறப்பாகவே இருந்தன. இன்று இக்குழுவில் பங்கு பெற்றுள்ளவர்களில் சிலருங்கூட இந் நூல்களை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். சில நவீன கல்வி அணுகல்முறைகள் அவற்றில் பயன்படுத்தப் பட்டிருந்தது அனைவராலும் பாராட்டப்பட்டது.

இவ்வகையில் தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரைக்குமான சுமார் ஆறரை கோடி நூல்கள் சுமார் 216 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு மாவட்டங்கள் வாரியாகப் பிரித்து அனுப்பவும் பட்டுவிட்டன. இந்நிலையில் பாடத் திட்டம் தரமாக இல்லை என்கிற ஒரு தரப்புக் கருத்தை ஏற்று அரசு இன்று சமச்சீர்க் கல்வியை நடைமுறைப் படுத்துவதை நிறுத்தி வைத்திருப்பது பெரும் பொருள் இழப்பை மட்டுமல்ல, மாணவர் மத்தியில் பெருங் குழப்பத்தையும்  ஏற்படுத்தும். இதன் மூலம் பயனடையப் போவது மெட்ரிக்லேஷன் ‘லாபி’ மட்டுமே.

பாடத்திட்டத்திலும் படநூல்களிலும் குறைபாடுகள் இருக்கலாம். எவ்வளவு கவனமாகத் தயாரிக்கும்போதும் அத்தகைய குறைபாடுகள் ஏற்பட்டுவிடுவது இயல்பும்கூட. அவை அந்தக் கல்வி ஆண்டிலேயே உரிய ஆணைகள் மூலம் திருத்தப்படலாம். புதிய பாடங்கள் தேவையானால் சேர்க்கப்படலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்வித் திட்டம் மேம்படுத்தப்படலாம். குறைகளைச் சாக்காக வைத்து பலகால விவாதங்கள் மற்றும் கருத்தொருப்பினூடாகக் கொண்டு வந்த ஒரு நடைமுறைக்குத் தடை விதிப்பதை ஏற்க இயலாது.

தவிரவும் இப்பாடத்திட்டமும் நூல்களும் தரமாக இல்லை எனக் கண்டறிய புதிய ஆட்சியாளர்களுக்குப் போதிய அவகாசமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருசில மணி நேரக் கலந்தாய்வில் மூன்று தீர்மானங்களில் ஒன்றாக முடித்துவிடக் கூடிய விஷயமும் இது இல்லை.

முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை மற்றும் அவரது சில எழுத்துக்கள் பாடநூல்களில் இடம் பெற்றிருப்பதே  புதிய அரசின் இம்முடிவுக்குக் காரணம் என இதழ்களில் செய்தி வந்துள்ளன. ஆட்சியாளர்கள் தமது புகழைப் பாடிக்கொள்வதற்கும், தம்மை முன்னிலைப் படுத்திக் கொள்வதற்கும் குழந்தைகளின் பாடநூல்களைப் பயன்படுத்துவதை நாங்களும் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களுக்கும் அதில் உடன்பாடில்லை. தேவையானால் அத்தகைய பகுதிகளை நீக்கி நூல்களை விநியோகிக்கலாம். ஏற்கனவே இவ்வாறு பாடங்களை நீக்கியதற்கான முன்னுதாரணங்கள் தமிழகத்தில் உண்டு.

பழைய பாடத்திட்டத்தைக் கடைபிடிக்கலாம் எனவும் பழைய நூல்களையே பயன்படுத்தலாம் எனவும் அரசு கூறுகிறது. பழைய நூல்கள் இப்போது அச்சில் இல்லை. அச்சிடுவதற்கென பள்ளித் திறப்பு 15 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.  15 நாட்களில் ஆறரை கோடி நூல்கள் அச்சிட்டுவிட முடியுமா எனத் தெரியவில்லை. வசதியுள்ள மாணவர்கள் இணையத்தளங்களிலிருந்து கீழிறக்கம் செய்து கொள்ள முடியும். பாதிக்கப்படப் போவது ஏழை எளிய, கிராமப்புற மாணவர்கள்தான். பயனடையப்போவது பெரு நூல் வெளியீட்டு நிறுவனங்களும் தனியார் பள்ளிகளுந்தான்.

தவிரவும் குறைந்தது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பாடநூல்களை மாற்ற வேண்டுமென்பது கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழுவின் (என்.சி.ஈ.ஆர்.டி) நெறிமுறைகளில் ஒன்று. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்குமான பழைய பாடநூல்கள் என்பன பத்தாண்டுகளுக்குமுன் உருவாக்கப்பட்டவை என்பதையும் இது என்.சி.ஈ.ஆர்.டி நெறிமுறைக்கு எதிரானது என்பதயும் அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.

கல்வித் தரம் குறைந்துவிடும் என அரசு காரணம் சொல்கிறது. கல்வித் தரத்தை நிர்ணயிப்பதில் பாடத்திட்டம் மற்றும் நூல்களின் பங்கு ஒரு குறிப்பிட்ட அளவிலானதே. தவிரவும் கல்வித் தரத்தை உயர்த்துவது ஒரு நீண்ட தொடர்ச்சியான நடைமுறை. பொக்கென ஓர் கணத்தே நடத்திவிடக்கூடிய ஒன்றுமல்ல. காமராசர் காலத்திலிருந்ததைப்போல இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிப்பது, ஆசிரியத் தேர்வு வாரியங்கள் மூலம் தரமான ஆசிரியர்களைத் தேர்வு செய்வது, பள்ளிகளின் அகக் கட்டுமானங்களை உயர்த்துவது எனப் பல கூறுகளை உள்ளடக்கியது இது. கிராமப்புறங்கள் அதிகமாக உள்ள நமது நாட்டில் முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் நடைமுறைப் படுத்தப்பட்டதைப்போல கிராமப்புற  மாணவர்களுக்கு 25 சத ஒதுக்கீடு வழங்குவதும்கூட இதில் உள்ளடங்கும்.
கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள சில விதிமுறைகள் இன்று பல தனியார் பள்ளிகளில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. பள்ளிச் சேர்க்கையில் நுழைவுத் தேர்வுகளை நடத்தாதிருப்பது, 25 சத இடங்களை அருகாமையிலுள்ள மாணவர்களுக்கு கட்டணமின்றி ஒதுக்குவது ஆகியன இதில் அடங்கும். இத்தோடு கட்டாய நன்கொடை வசூலிக்கக் கூடாது என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். கல்வித் தரத்தை உயர்த்த விரும்பும் அரசு இத்தகைய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.

முந்தைய அரசு அறிவித்திருந்த சமச்சீர் கல்வித் திட்டத்தில் பல குறைபாடுகள் இருந்தது  என்பது உண்மையே. அவற்றை நீக்கித் தரத்தை உயர்த்த வல்லுனர் குழு அமைப்பதும் ஏற்கக்கூடியதே. ஆனால் இந்த ஆண்டு பொதுப் பாடத் திட்டத்தைச் செயற்படுத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் அதை நிறுத்தி வைப்பது ஏற்கத்தக்கதல்ல. கல்வி நலனுக்கு உகந்ததுமல்ல. உண்மையான சமச்சீர்க் கல்வியை நோக்கிய பயணத்தை முடக்கும் செயலிது. ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டத்தையே ஒழித்துக் கட்டுவதற்கான முதற் படியோ  என்கிற ஐயத்தையும் இது ஏற்படுத்துகிறது.

நீண்ட விவாதங்களினூடாகப்  பலரும் இணைந்து 216 கோடி ரூ செலவில் உருவாக்கப்பட்டுள்ள பாடநூல்களை ஒரு சில தவறுகளுக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் புறக்கணிப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல. அவசியமானால் தேவையற்ற பகுதிகளை நீக்கியும், தரத்தை உயர்த்தக்கூடிய பகுதிகள் எனக் கருதப் படுபவற்றைச் சேர்த்தும் பயன்படுத்துவதே கல்வி நலனுக்கு உகந்தது.

கல்வித் துறையில் நீண்ட அனுபவமும், கல்விப் பிரச்சினையில் ஆழ்ந்த அக்கறையும் கொண்டுள்ள, கீழே கையெழுத்திட்டுள்ள நாங்கள் நடைமுறைப்படுத்த இருந்த சமச்சீர்க் கல்விமுறையை நிறுத்தி வைத்துள்ளதை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு தமிழக அரசை வற்புறுத்துகிறோம்.

1.பேரா.அ.மார்க்ஸ், முன்னாள் கல்லூரிப் பேராசிரியர்,
2.முனைவர் ப. சிவகுமார், முன்னாள் கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி ஆசிரியர் அமைப்புத் தலைவர்,
3.பேரா. கல்யாணி, முன்னாள் கல்லூரிப் பேராசிரியர் மற்றும் மக்கள் கல்வி இயக்க நிறுவனர்,
4.திரு. பி.பி. பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர்,பொதுக் கல்விக்கான மாநில மேடை,
5.பேரா. கே. ராஜூ, முன்னாள் கல்லூரிப் பேராசிரியர் மற்றும் மதுரைப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத் தலைவர்,
6.பேரா. மு. திருமாவளவன், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர்,
7.திரு.கி. த. பச்சையப்பன், முன்னாள் தமிழக தமிழாசிரியர் சங்கத் தலைவர்,
8.எஸ். ராமசாமி, ஆசிரியர்,
9.கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி,
10. வழக்குரைஞர் ரஜினி, மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், மதுரை,
11.எஸ். ராமானுஜம், எழுத்தாளர்,

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் எகிப்து அரசை எதிர்த்து நடந்த புரட்சியை போல இருக்கிறது! முடியாட்சியை  எதிர்த்து மக்களாட்சி வந்தது போல் அத்தனை பேருக்கும் அத்தனை மகிழ்ச்சி! குடும்ப அரசியலுக்கு ஆப்பு வைத்ததில் அத்தனை பெருமிதம்! ஜனநாயகத்தின் சக்தியை நினைத்து பூரித்துக் கிடக்கிறோம்! அதிலும் அம்மா பதவி ஏற்ற நாளிலிருந்து அம்மா தான் வரும்போது போக்குவரத்தை நிறுத்தி மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுவிட்டார், அமைச்சர்களுக்கு பவர்பாய்ன்ட் மூலம் பாடம் எடுக்கிறார், மூன்று மணி நேரம் ஆய்வு செய்தார், ஏழு கோப்புகளில் கையெழுத்திட்டார் என்று பல செய்திகள்! ஒரு வேலை நாட்டுக்கு நல்ல காலம் வந்து விடுமோ என்று வழக்கமான ஒரு நம்பிக்கை பிறக்கிறது. ஆனால் இது இன்னும் எத்தனை நாட்கள் என்று உள்ளூர ஒரு பயமும் கலந்தே பிறக்கிறது! ஒரு இருபது ஆண்டுகள் தொடங்கி பின்நோக்கிப் பார்த்தால், 91 ல் அதிமுக, 96 ல் திமுக, 2001 ல் அதிமுக, 2006 ல் மறுபடியும் திமுக, 2011 ல் மறுபடியும் அதிமுக என்று ஒரு அமைப்பு/கோலம் தெரிகிறது! இதே ரீதியில் பார்த்தால் 2016 ல் மறுபடியும் திமுகாவா? இது எத்தனை பரிதாபகரமான விஷயம்! தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவை போல் சக்தி வாய்ந்த வேறு ஏதாவது கட்சி இருந்திருந்தால் மக்கள் ஒரு தடவை அவர்களுக்கு வாய்ப்பளித்துப் பார்த்திருப்பார்கள்! அதற்கு தான் நமக்கு வாய்ப்பே இல்லையே![ஒருவேளை அடுத்த முறை தேமுதிக வந்து விடுமோ?] கலைஞர் கொள்ளை அடிக்கிறாரா, அம்மாவுக்கு போடு; அம்மா கொள்ளை அடிக்கிறாரா கலைஞருக்கு போடு என்று மாற்றி மாற்றி வாக்களித்து ஒவ்வொரு தடவையும் சில நாட்கள் விரலில் கரையுடனும் , வாழ்க்கை முழுதும் முகத்தில் கரியுடனும் வாழப் பழகி விட்டோம்! அரசியல்வாதிகளும் வாக்குறுதிகளை கோடி காட்டி விட்டு அவர்களின் கல்லாக்களில் கோடிகளை கட்டிக் கொள்கிறார்கள்! ஐந்து வருடம் ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் ஆற அமர தீர்த்து விட்டு வருவதற்கும், ம்ம்...என்னப்பா பணம் தீந்து போச்சா, இந்தா ஆட்சி! ஜமாய், இந்தாப்பா நீ நல்ல சாம்பாதிச்சியா, கீழே எறங்கு போய் காலி பண்ணிட்டு வா என்று அனுப்பவது மாதிரி இருக்கிறது! என்ன அநியாயம்! இதற்கு பெயர் ஜனநாயகம்! இதற்குப் பெயரா ஜனநாயகம்? இந்த முறையாவது ஏதாவது நல்லது நடக்குமா பார்ப்போம்!

சென்னையில் வெயில் வாட்டி எடுக்கிறது! கடவுள் ஒருவர் இருப்பதாய் கற்பனை செய்து கொண்டால் அவர் சூரியனை ஒரு கயிற்றில் கட்டி வைத்திருப்பதாக கற்பனை செய்து கொண்டால் ஒவ்வொரு கோடை காலத்திற்கும் அவர் கொஞ்சம் கொஞ்சமாய் கயிற்றை சென்னையை நோக்கி இறக்கி விட்டு விடுகிறாரோ என்று தோன்றுகிறது! கயிர் அந்து சூரியன் சென்னையில் விழாமல் இருந்தால் சரி! சாலையில் பதினோரு மணி வெயிலில் வண்டியை ஓட்டினால் ஏதோ பாலைவனத்தில் போவது போல் இருக்கிறது. வெப்பக் காற்றில் மூச்சு முட்டுகிறது! சூரியனார் ஸ்ட்ரா போட்டு ஒவ்வொருத்தனின் ஆற்றலையும் உறிஞ்சி கொண்டிருக்கிறார்! இதில் நாள் முழுதும் வெட்ட வெளியில் வேலை செய்பவர்கள், பஸ் டிரைவர்கள், மெட்ரோ பணியாளர்கள், கட்டட தொழிலாளர்களின் நிலை....நினைக்கவே பயமாய் இருக்கிறது! தப்பித் தவறி ஒரு மரத்தின் கீழ் நிற்கும் போது தான் மரத்தின் பெருமை புரிகிறது! 2011 ல் இப்படி இருந்தால் 2041 ல் நடந்து செல்லும் ஒவ்வொருத்தனையும் சூரியன் சுட்டுக் கொள்ளும் என்று நினைக்கிறேன். மரம் வைக்கலாம் வாங்கப்பா!

வானம் படம் பார்த்தேன். நல்ல படம் என்றாலும் இதே போன்ற பல படங்களை ஏற்கனவே பார்த்து விட்டதால் ஒன்றும் பிரமிப்பாய் இல்லை. "பாசமலர்" சிலாகித்த தலைமுறையினருக்கு இந்தப் படம் புரியவேயில்லை! இது தான் நான் சிம்பு படத்துக்கே வர்றதில்லை என்கிறார்கள்! சிம்புவே இப்போது தான் திருந்திக் கொண்டிருக்கிறார்; இந்த சமயத்தில் இபப்டி ஒரு பேச்சா அவருக்கு! படத்தின் முதல் பாதி மதுரை பட்டர் பன்னை வாயில் போட்டது போல் வழுக்கிக் கொண்டு சென்றது! தப்புத்தாளங்கள் சரசுவையும் வானத்தின் சரோஜாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி புரியும்! அந்தக் கிழவரும் சரண்யாவும் கண்ணிலேயே நிற்கிறார்கள். ஒரு புறம் ஒரு இரவு விருந்துக்காக 40,000 செலவழிக்கும் கூட்டம், மற்றொரு புறம் அதே அளவு பணம் இருந்தால் வாங்கிய கடனை அடைத்தாவது மகனை படிக்க வைக்க வேண்டுமே என்று போராடும் ஒரு குடும்பம்! என்ன ஒரு கேடு கெட்ட சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது! எப்படியாவது இவர்களுக்கு உதவி கிடைத்து விடாதா என்று மனம் ஏங்குகிறது. படத்திலாவது கடைசியில் அவர்களுக்கு நல்லது நடக்கிறது; ஆனால் நிஜத்தில் கடன் கொடுத்தவன் இப்படி மனம் மாறுவானா? இப்படி நம் நாட்டில் கேட்க நாதி இல்லாமல் இருக்கும் எத்தனை பேரை ஏமாற்றி பிழைக்கிறார்களோ என்று நினைக்கும்போது தொண்டையில் ஏதோ உருள்கிறது! படம் பார்த்த எல்லோருக்குள்ளும் இப்படி ஒரு கேள்வி எழுந்திருந்தால் அது தான் வானத்தின் வெற்றி; சினிமாவின் வெற்றி!

இப்போது தான் செய்தி படித்தேன். தனுஷுக்கு ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகர் விருது கிடைத்திருக்கிறது! அதை மலையாள நடிகர் சலீம் குமாருடன் பகிர்ந்து கொள்கிறார்! சரண்யா, வைரமுத்து, வெற்றி மாறன் போன்றோருக்கும் விருது கிடைத்திருக்கிறது! தனுஷ் நன்றாகவே நடித்திருந்தார். ஆனால் தேசிய விருது கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை; விருது கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்! "ஏதோ அண்ணன் சொல்றான்னு ஒரு படத்துல நடிச்சேன்" என்று காதல் கொண்டேன் படம் ஹிட்டான புதிதில் தன்னுடைய சினிமா பிரவேசம் பற்றி அவர் அளித்த பேட்டிகள் ஞாபகம் வருகின்றன. தேசிய விருது வாங்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார். நல்ல வளர்ச்சி! வாழ்க! [அப்படியே உங்க மாமாவையும் ஒண்ணு வாங்க சொல்லுங்க சார்!]

இத்தனை சொல்லிவிட்டு இந்த விஷயத்தை எப்படி விடுவது? நம் சூப்பர் ஸ்டாருக்கு உடல் நலமில்லையாமே...அவருக்குமா நம்மளை மாதிரி உடம்பு சரியில்லாம போகும்? நம்பவே முடியலை...அது தான் ஸ்டீல் பாடி ஆச்சே! எத்தனை தம்மு; எவ்வளவு தண்ணி! அதுவே அவரை ஒண்ணும் செய்யலை; ஏதோ ஃ புட் பாய்சன் என்று சொல்லி ஐ.சி.யு. வரை கூட்டிக் கொண்டு போய் விட்டார்களே! என்ன கொடுமை இது. தலைவா, வேர்ல்ட் கப் உங்களை பாத்த நாள்ல இருந்து நீங்க சரி இல்லை; உங்க மேல எல்லாரும் கண்ணு வச்சுட்டாங்க! குதிரை மாதிரி சட்டுன்னு எந்திரிக்கனும்! கமான்....


இப்போது பார்த்தால் படம் முழுதும் இவரின் கிளிஷேக்கள் நிரம்பி வழிந்து கண்ணையும் கருத்தையும் உறுத்தினாலும் தமிழ் சினிமாவை சிகரத்திரு ஏற்றிச் சென்ற பெருமை இவருக்கு நிச்சயம் உண்டு! இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்! இவர் பால்கே விருது வாங்கிய நாளில் இருந்து ஒரு பதிவு போட வேண்டும் என்று நினைத்து இன்று தான் அது கை கூடி இருக்கிறது! வாழ்த்துக்கள் சார்! எனக்கு சிறு வயதில் இருந்தே மிகவும் பிடித்த இயக்குனர். சென்னையில் ஏதாவது ஒரு டிராபிக் சிக்னலில் என்னை பார்த்து "உன்னைத் தாண்ட தேடிட்டு இருந்தேன், என் படத்துல நடிக்கிறியா" என்று கூப்பிட்டு சான்ஸ் கொடுப்பார்! எப்படியும் சென்னை போய் விட வேண்டும் என்று நான் நினைத்த காலங்கள் உண்டு! [இன்று வரை ஒரு தடவை கூட இவரை எந்த சிக்னலிலும் பார்க்கவில்லை!]

என்னை பொறுத்தவரை இவர் வருவதற்கு முன் கனமான கதைகள் இருந்ததே தவிர சுவாரஸ்யமான திரைக்கதைகள் இருந்ததில்லை. பாவ மன்னிப்பு, பணமா பாசமா ஹிட் படங்கள் என்றாலும் அதில் ஒரு காட்சி கூட அட! கதையை நகர்த்த இப்படிக் கூட காட்சியை வைக்கலாமா என்று தோன்றியதில்லை!  அது இவரின் படங்களில் தான் எனக்குத் தோன்றியது! பாலச்சந்தரின் எல்லா படங்களின் திரைக்கதையும் ஒரு சாமர்த்தியமான சதுரங்க ஆட்டத்தை ஒத்து இருந்தது என்று சொல்லலாம். மிகச் சரியான காய் நகர்த்தலால் நகரும் கதைகள். தமிழ் படத்தில் பாடல்களிலும் கதை நகர்த்தியவர் இவர் தான் என்று நினைக்கிறேன். எந்த ஒரு காட்சியையும் வீணாக்க மாட்டார்! இவரின் படங்கள் சினிமாக்கள் அல்ல வெறும் நாடகங்கள் என்ற விமர்சனம் இருந்தாலும் அவருக்கு முன் வந்த நாடகத் தனமான சினிமாக்களை காட்டிலும் இவரின் படங்கள் சிறப்பானவை தான் என்று நினைக்கிறேன். 

கேபிள் டீவி வரத் தொடங்கிய காலங்களில் ஒரு நாள் இவரின் படம் ஒன்றை பாதியில் இருந்து பார்த்தேன். கவிஞர் வாலி நடித்திருந்தார். அப்போது வாலியையே எனக்கு அவ்வளவாய் தெரியாது என்று நினைக்கிறேன். ஆனால் இது பாலச்சந்தர் படம் என்று மட்டும் என்னால் உணர முடிந்தது! அந்தப் படம் "பொய்க்கால் குதிரை" என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன். நான் ஏழாவது படிக்கும்போது ஒரு வீடு இரு வாசல் வந்தது. அந்தப் படத்தில் இரண்டு வேறு வேறு கதைகள் என்று பத்திரிகையில் செய்தி படித்து பள்ளியில் நண்பர்களுடன் சிலாகித்துப் பேசியிருக்கிறேன். எப்போது? ஏழாவது படிக்கும்போது! எத்தனை அற்புதமான கருக்கள்!

ஒரு சாதாரண சர்வர் நடிகர் ஆனால்...
ஒற்றுமையான ஒரு குடும்பத்தில் ஒரு நடிகை நுழைந்தால்...
இறந்து போய் விட்டாள் என்று நினைத்த காதலி, தனக்கே மேலதிகாரியாக வந்தால்...
ஒரு தாய்க்கு தன் மகன் வயதுடையவன் மேல் காதல்; ஒரு தந்தைக்கு தன் மகளின் வயதுடையவள் மேல் காதல்!
வறுமையின் காரணமாக ஒரு பிராமண பெண் விபச்சாரி ஆனால்
தான் காதலித்த பெண்ணே தனக்கு சித்தியாக வந்தால்
ஒரு ரவுடியும் ஒரு விபச்சாரியும் திருந்தி வாழ நினைத்தால்
தாய் மொழி வேறு, கலாச்சாரம் வேறு..இருவரும் காதலித்தால்
மனைவி சரியில்லாத கணவனும், கணவன் சரியில்லாத மனைவியும் சந்தித்துக் கொண்டால் [எத்தனை சிம்பிளான ஒன் லைன்!]
சங்கீத வித்வான் சறுக்கி விழுந்தால்

சொல்லிக் கொண்டே போகலாம்! இவரின் படங்களில் எனக்கு இன்றும் பிடித்த படங்கள்:

பாமா விஜயம்
எதிர் நீச்சல்
அபூர்வ ராகங்கள்
மூன்று முடிச்சு
ஏக் துஜே கே லியே
தப்பு தாளங்கள்
வறுமையின் நிறம் சிவப்பு
தில்லு முள்ளு
சிந்து பைரவி
உன்னால் முடியும் தம்பி
புது புது அர்த்தங்கள்

எனக்குப் பிடித்த சில காட்சிகள்..





















உழைப்பாளிகளுக்கு என் "மே" தின வாழ்த்துக்கள்!

"கோ" என்றால் அரசன் என்று தானே அர்த்தம். அரசாட்சியை பிடிக்க நடக்கும் போராட்டம் தான் கதைக் களம் என்பதால் தான் இந்தப் பெயரா? தெளிவா புரிஞ்சிக்கிறதுக்காக கேட்டேன்! படத்தைப் பார்க்காதவர்கள், கதை படிக்க விரும்பாதவர்கள் முதல் பத்தியை படிக்க வேண்டாம்!

ஜீவா பத்திரிகை புகைப்படக்காரர். பறந்து பறந்து புகைப்படம் எடுக்கிறார். [கே.வி. ஆனந்த் பத்திரிகையில் இருந்த போது இப்படி தான் படம் எடுத்திருப்பாரோ?] புகைப்படங்களை எடுத்துத் தள்ளி, சில பல அரசியல் அநியாயங்களை அம்பலப்படுத்தி, நேர்மையாய் களத்தில் இறங்கி போராடி அரசியலில் ஜெயிக்க விரும்பும் தன்னுடைய சில நண்பர்கள் ஆட்சியை பிடிக்க பெரும் உதவி செய்கிறார். அதில் ஜெயிக்கிறார். அங்கே தான் ஒரு ட்விஸ்ட்.[அங்கே கொண்டு போயா வச்சீங்க?] அவ்வளவு தான் கதை!

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு புதுப் புதுக் கதைக் களங்களை கொண்டு வந்து தமிழ் சினிமாவிற்கு புது நீர் பாய்ச்சுகிறார் ஆனந்த். அதற்காகவே ஒரு சபாஷ். அதிலும் அயன் படத்தைப் பற்றி அவரே படத்தில் வரும் பியாவின் மூலம் கிண்டலடித்துக் கொள்வது நல்ல ஏளனம். ஜீவா இயல்பாய் நடிக்கிறார்; மனிதர் எந்த பாத்திரத்திலும் பொருந்தி விடுகிறார். அனால் சொங்கி மாதிரி இருக்கிறார். அவர் ஹேர் ஸ்டைல், அரும்பு மீசை, ஆட்டு தாடி, கிரிதா என்று அடம்பிடிக்கும் சில முடிகள்!! முதலில் எண்ணை கிண்ணை போட்டு மீசையை வளத்துக்குங்க பாஸ்! [இல்லை, பிரஷாந்த் கிட்ட ஐடியா கேளுங்க!!] நம் தலையெழுத்து தமிழ் சினிமாவில் தான் தமிழ்நாட்டில் ஹீரோ இருந்தாலும் ஏதோ ரஷ்யா நாட்டில் இருப்பதை போல் 4 சொக்காய் போடறான்! அதை பார்க்கும்போதே கருமம் எங்கே எங்கேயோ வேர்க்குது! அஜ்மல் ஜம்மென்று இருக்கிறார். ஆனாலும் அந்த அமெரிக்க மாப்பிள்ளை லுக் கொஞ்சம் மாற வேண்டும். கார்த்திகாவுக்கு நல்ல கண்கள். உயரத்தில் அடுத்த அனுஷ்கா! கச்சிதமாய் இருக்கிறார். ஆனால் அம்மாவிடம் இருந்த கருப்பு அப்படியே ஒட்டிக் கொண்டிருக்கிறது! ஆனால் ஏதோ ஒன்று குறைகிறது. அழகா? பியா வழக்கமான தமிழ் சினிமாவின் ஒரு லூசு பெண் கதாப்பாத்திரம். தமிழ் சினிமாவில் லூசு பெண் கதாபாத்திரங்களை உடனடியாய் தடை செய்ய வேண்டும். அப்புறம் பாடல்கள்! பியா இறந்து விடுகிறாள். அவளுடன் சேர்ந்து வாழும் கார்த்திகாவிற்கு தனியாய் இருக்க பயமாய் இருக்கிறது. கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்று ஜீவா கண்ணைத் துடைக்கிறார்; கட்! ஃபாரின் லொக்கேஷன்! [அசிலி பிசிலி பாடல் லொகேஷன் அற்புதம்; எந்த இடம் அது? சொர்க்கமா?] ஒரு பாட்டு!! தியேட்டரே உச்சு கொட்டுகிறது! ராமா...பிரகாஷ் ராஜ் தன் பங்குக்கு கையை ஆட்டி ஆட்டி, பல்லைக் கடித்தது விட்டுப் போகிறார்! [நடிப்பை கொஞ்சம் மாத்துங்க சார்!] ஜெகனுக்கு தமிழ் சினிமா இயக்குனர்கள் நல்ல ரோல்கள் கொடுக்க வேண்டும். டாக் ஷோக்களில் பேசிப் பேசி அவரின் பாடி லாங்க்வேஜ் அனாயாசமாய் இருக்கிறது. மனிதர் நடிப்பது மாதிரியே தெரியவில்லை! பையா, அயன் என்று எல்லா படங்களிலும் அவரின் நடிப்பை ரசித்தேன்.

படம் பார்த்து வெளியே வரும்போது எனக்கும் என் மனைவிக்கும் சில கேள்விகள். என்ன தான் அதிரிபுதிரியான திரைக்கதையை இருந்தாலும் லாஜிக்கை மீறாமல் இருந்தால் தான் ரசிக்க முடிகிறது! இல்லையென்றால் அது மதியம் சாப்பிட்ட சின்ன மட்டன் பீஸ் பல்லில் மாட்டிக் கொள்வதை போல் இடையூறு செய்கிறது!! தம்மாத்துண்டு குழந்தையிடம் பியா திறந்து காட்டுவது; முதலமைச்சர் இறந்த இடத்திலிருந்து தப்பித்து வருபவனை காவல் துறை கண்டு கொள்ளாதாது; உள்ளே என்ன நடந்தது என்று விசாரிக்காதது ஒருவேளை அந்த வெடி விபத்துக்கு ஜீவாவே காரணமாய் இருந்திருந்தால் என்று கேள்வி யாருக்கும் வராதது என்று லாஜிக் ஏகத்திற்கு உதைக்கிறது! என்னை பொறுத்தவரை பத்திரிகைத் துறையை சமத்தாய் காட்டியது ஹிந்தியில் வந்த பேஜ் 3 படம் தான்! அதில் இருந்த ஒரு யதார்த்தம் இதில் மிஸ்ஸிங்! அது வாழ்க்கை; இது வெறும் கடைந்தெடுத்த மசாலா சினிமா!

அப்புறம் முக்கியமான ஒன்று திரைக்கதை வடிவமைப்பின் போது அதன் அடிப்படை விதியின் படி ஒரு கதாப்பத்திரத்தின் தன்மையை, அதன் குணாதசியத்தை முதலிலேயே வரையுறுத்த வேண்டும்! அவன் நல்லவனா, கெட்டவனா, புத்திசாலியா, சோம்பேறியா என்பதை தெளிவாய் சொல்லி விட வேண்டும். படத்தின் ஆரம்பத்திலிருந்து ஒருவனை கோழையாய் காட்டி விட்டு க்ளைமேக்ஸில் அவன் எதிரிகளை புரட்டி எடுத்ததற்கு காரணம் அவன் பத்தாவது வயதில் கராத்தே கற்றுக் கொண்டான் என்று ஒரு மொக்கை ஃபிளாஷ் பேக் காட்டினால் சப்பித் தனமாக இருக்கும்! அனால் அந்த விதியை இத்தகைய படங்களில் சரியாய், நாசூக்காய் பயன் படுத்தா விட்டால் பார்ப்பவர்கள் எளிதில் யூகிக்கக் கூடிய அபாயம் உண்டு. பிறகு சுவாரஸ்யம் கெட்டு விடும். இந்தப் படத்தில் அந்த விதியை பற்றி கதாசிரியர்கள் யாரும் கவலைப்படவேயில்லை! படம் பூராவும் அஜ்மலை நல்லவனாய் காட்டி விட்டு திடீரென்று அவரை கெட்டவன் ஆக்கிவிட்டார்கள். அவர் ஏன் அப்படி மாறினார் என்பதற்கு எந்தக் காரணமும் சரியாய் சொல்லப்படவில்லை! ஒரு வேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் நாட்டுக்கு நல்லது தான் செய்திருப்பாரா? அல்லது மற்ற அரசியல்வாதிகளை போல் தான் இருந்திருப்பாரா என்று புரியவில்லை!

அப்படி பார்க்கும் போது, இந்த மாதிரி புலனாய்வு படங்களின் திரைக்கதை என்பது என்ன? கதாசிரியரின் சுதந்திரம் எது வரை? அவர் கதை எழுதுகிறார் என்பதற்காக அவரே ஒருவரை நல்லவர் என்று காட்டுவார்; இந்தப் படத்தில் அஜ்மலை காட்டுவதை போல். ஆங்காங்கே இவர் தான் இந்தக் கதையை திசை திருப்புவார் என்பதை போல சில கதாப்பாத்திரங்களின் பெயரில் நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவார். இந்தப் படத்தில் கோட்டா, பிரகாஷ் ராஜ் மற்றும் அஜ்மல் குழுமத்தில் தாடி வைத்த ஒருவரை காட்டுவது போல்! பிறகு யாரை நாம் அப்பாவி என்று நினைத்தோமோ அவன் பயங்கர கெட்டவன் என்று சொல்லி அதற்கு ஒரு ஃபிளாஷ்பேக் போட்டு விவரித்து படத்தை முடித்து விடுவார். நம்மிடம் பணத்தை வாங்கிக் கொண்டு நம்மை நம்ப வைத்து இப்படி கழுத்தருக்கிறார்களே, இதை நாம் "ஆ" என்று வாய் திறந்து என்ன ட்விஸ்ட் என்று மெய் மறந்து பார்க்கிறோமே என்று தோன்றியது! எல்லா புலனாய்வு படங்களின் அடிப்படை கரு இது தான் என்றாலும், இந்தப் படத்தில் தான் எனக்கு இந்தக் கேள்வி உதித்தது! அது ஏனோ?

முதல் பத்தி மட்டுமில்லை மற்ற எல்லா பத்திகளிலும் கதையை தூவியிருக்கிறேன். முன்னமே சொல்ல வேண்டும் என்று நினைத்து மறந்து விட்டேன். கதை தெரிந்து விட்டதா? சாரி !!
வழி: மடிப்பாக்கம்->வேளச்சேரி->சைதாப்பேட்டை->நந்தனம்->ஆழ்வார்பேட்டை->ராயப்பேட்டை->விவேகானந்தர் இல்லம்.

நடமாடும் விளம்பரம்

வாழ்க தமிழ்!

ஏன் ஆக்சிடென்ட் நடக்காது?

சாலையோர ஓவியங்கள்

மரத்தை வச்சவன்..[போயி சேந்துருப்பான்!]

நகரம்

அசதி? வசதி? சுதி?

வறுமைக் கோட்டின் கீழ்...

தேசிங்கு ராஜா!

காரம்; பலகாரம்!

அணிவகுப்பு

தரை மேல் பிறக்க வைத்தான்...

ஆஞ்சினேயருக்கு இன்று ஒரே ஆனந்தம்!

பட்டம் பறக்கட்டும்

அலையோடு விளையாடி...

உறவுகள்

அறிமுகம்

சகோதரிகள் [எனக்கல்ல!]

வங்கக்கடல்

தனிமை

தோள் கண்டேன்; தோளே கண்டேன்!

சேப்பாக்கம்

வி. இல்லம்

பொழுது போச்சு...


ஜனநாயகத்தில் எனக்கு இருக்கும் ஒரே உருப்படியான உரிமை வாக்களிப்பது; அது இன்று என்னால் முடியவில்லை.
வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லையாம்; நான் ஏன் இந்த அரசாங்கத்துக்கு வரி கட்ட வேண்டும் என்று கேட்கலாம் என்று பார்க்கிறேன்!
"எனி வாலண்டியர்ஸ்" தமிழில்! 

யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை வெளியில் சொல்லக்கூடாது;
ஐ டி கம்பனியில் அப்ரைசில் ரேட்டிங்கை யாரிடமும் சொல்லக் கூடாது என்பதை போல.
இரண்டையும் யாருமே கேட்பதில்லை!

ஒரு கதை எழுத வேண்டும்; சோம்பேறி தனமாய் இருக்கிறது! கருவை மட்டும் சொல்லி விடுகிறேன். 
ஒரு நல்ல சிறுகதைக்கான அனுபவத்தை பெற்றுக் கொள்ளுங்கள்!
[போகிற போக்கில் இன்று நான் வலைபதிந்ததாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று எழுதாமல் இருந்தால் சரி!!] 

"பாவப்பட்டு ஒருவனுக்கு வண்டியில் லிப்ட் கொடுத்தேன். வழியில் ஒரு விபத்தில் நான் தப்பிக்க அவன் இறந்து விட்டான்!" - சுபம்.

மடிப்பாக்கம் அடகு கடைகளாலும் டென்டல் கிளினிக்குகளாலும்  நிரம்பி வழிகிறது! என்ன காரணமாய் இருக்கும்?

முக்குக்கு முக்கு பல பெயர்களில் வீற்றிருக்கும் அம்மன் கோவில்களுக்கும், எல். ஆர். ஈஸ்வரிக்கும், + 2  ரிசல்ட் குறைவதற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்று எனக்குப் படுகிறது!!

அரை கிலோ பொரிகடலை இன்று என்ன விலை தெரியுமா? முப்பத்தி மூன்று ரூபாய்! இதை எதற்கு சொல்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா? இதை வாங்கப் போய் தானே மேல் உள்ள அத்தனையும் பார்த்தது;கேட்டது;சிந்தித்தது!

நிலவு பல்லியின் வாலை ஒத்திருக்கிறது;
அது வெட்ட வெட்ட வளர்ந்து விடுகிறது!
[பொரிகடலை வாங்கினால் ஒரு கவிதை இலவசமாம்!]


சதா அழுது கொண்டே இருந்த
ஒரு குழந்தை தெய்வத்தை
விண்வெளியில் விட்டுச் சென்றது
ஒரு தாய் தெய்வம்

சுற்றிலும் இருள்!
ஆங்காங்கே மினுக்கும்
சிறு சிறு பொறிகளையும், பந்துகளையும்
வேகமாய் நகரும் வெளிச்சங்களையும் 
விநோதமாய் வேடிக்கை பார்த்தது குழந்தை

சுற்றிக் கொண்டிருக்கும் 
சில பந்துகளை
ஆள்காட்டி விரலால் அழுத்தி 
நிறுத்துவதும், மறுபடியும்
அதை சுற்றி விடுவதும்
வேடிக்கையாய் இருந்தது அதற்கு

தெரியாமல் சூரியனில் கை விட்டு
விரலை சுட்டுக் கொண்டது!
கோபத்தில் பலமாய் ஊதிப் பார்த்தது!
இருந்தும் அது அணையாததால்
பூமியிலிருந்து கடலை எடுத்து அதன்
மேல் ஊற்றித் தோற்றது

அடங்காத கோபத்தில் அருகிலிருந்த
செவ்வாயையும் புதனையும்
சூரியனில் எரிந்தது.
அது சூரியனில் புகுந்து 
சாம்பலாவது ஏனோ பிடித்திருந்தது அதற்கு

நேரம் போவதே தெரியாமல்
சுற்றி இருந்த மற்றவைகளையும் 
குழந்தை எரிந்தது; சூரியன் எறித்தது!

இப்படியே நேரம் செல்ல - 
அண்டவெளியில் விளையாடிக் களைத்து
அம்மாவை தேடி அழுதது 
குழந்தை தெய்வம்

இப்படி நடக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. இத்தனை சீக்கிரம் வலை பதிவேன் என்று! அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் தான் போங்கள் (போங்கள் என்று அடித்தால் பொங்கல் என்று வருகிறது!)  சாப்டுங்க!!

பூனை நடை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆமை நடை பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் இந்த சமயத்தில் சென்னையில் இருந்தால் பார்க்கலாம்! "ஆலிவ் ரிட்லே" என்ற கடல் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் நேரம் இது! [இது தான் சென்னை! புதிதாய் ஏதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கும், இப்போ ஆமை!] அதாவது டிசம்பரிலிருந்து ஏப்ரல் வரை! கடலில் மேட்டரை முடித்துக் கொண்டு [ஆஹா, இந்தப் பையன் இந்த மாதிரி விஷயத்தை எத்தனை நாசூக்கா எழுதுறான்!] சமர்த்தாய் கடற்கரையில் வந்து முட்டையிட்டுச் செல்கின்றன. கடல் ஆமைகள் குளிர்ந்த நீரைத் தவிர்த்து உலகெங்கும் சுற்றித் திரிகின்றன. இந்த வகை ஆமைகளை ஆஸ்திரேலியாவில் பார்த்திருக்கிறார்கள். இவைகள் செப்டம்பர் சமயத்தில் இனப் பெருக்கம் செய்ய இந்தியக் கடல் எல்லைக்குள் வருகின்றன. பெரும்பாலும் சென்னை, ஒரிசா ஆகிய நகரங்களின் கடற்கரைகளில் முட்டையிடுகின்றன.


Students sea turtle conservation network (மேலும் விபரங்களுக்கு: http://sstcn.org/) என்னும் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த தன்னார்வலர்கள் இரவு பகலாக இதற்காக உழைக்கிறார்கள். ஆமைகள் முட்டையிட இரவில், ஆள் நடமாட்டம் இல்லாத சமயங்களில் வருகிறது. முட்டைகளை மண்ணில் தோண்டி புதைத்துச் சென்று விடுகின்றன. அதன் பிறகு குஞ்சு பொறித்ததா, குட்டி வெளியே வந்ததா என்று எந்தக் கவலையுமில்லாமல் கடலுக்குள் சென்று விடுகின்றன..இந்தக் குட்டிகள் கடலில் சென்று தன் தாயை கண்டு பிடித்து சேர்ந்து கொள்ளும்! (நம்பி விட்டீர்களா? இது என்ன நம் தமிழ் சினிமாவா?) அந்த முட்டைகளை இவர்கள் ஒவ்வொன்றாய் கண்டெடுத்து, நாய், நரி, மனிதர்கள் (அதை காசாக்கவும் சிலர் இருக்கிறார்களே) என்று பலதரப்பிடமிருந்து காப்பாற்றி ஒரு குஞ்சு பொரிப்பகம் கட்டி பாதுகாப்பாய் வைக்கிறார்கள். குஞ்சு வெளியே வர நாற்பத்தைந்து நாட்கள் ஆகின்றன. ஒரு தடவைக்கு நூற்றுக்கணக்கில் ஆமைகள் வெளி வருகின்றன. அவைகளை மாலை வெளிச்சம் மங்கியதும் கடலில் கொண்டு போய் விடுகிறார்கள். முட்டையிலிருந்து வந்த சில நிமிடங்களில் துரு துருவென வெளிச்சத்தை நோக்கி அது ஓடுவதை பார்க்கவே கண் கொள்ளாக்  காட்சியாக இருக்கிறது! இப்படி ஆயிரம் ஆமைகுட்டிகளை கடலுக்குள் விட்டால் அதில் ஒன்றிலிருந்து ஐந்து தான் கடலோரத்தில் இதற்காகவே காத்திருக்கும் மீன்களுக்கு உணவாகாமல், வலையில் மாட்டிக் கொள்ளாமல், கப்பலின் அடியில் சிக்காமல் எல்லா வித ஆபத்துக்களையும் கடந்து பெரிதாய் வளருமாம்! அது தான் பெரிய சோகம்.



நம் உள்ளங்கையில் தங்கி விடும் அளவுள்ள இவைகளா அலைகள் ஆர்ப்பரிக்கும் இத்தனை பெரிய கடலில் வாழப் போகிறது என்று நமக்கே பயமாய் இருக்கிறது. ஆனால் நம் கண் முன்னே கடல் ஒரு தாயை போல் அவைகளை உள்வாங்கிக் கொள்கிறது. சற்று முன் அங்கே நூறு குட்டி ஆமைகள் இருந்த சுவடே இல்லை. காவலர்கள் துரத்தி வந்த திருடனை வீட்டுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு எதுவுமே தெரியாதது போல் கதவடைத்துக் கொள்கிறது கடல்! கண் விழித்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை. கை பிடித்து கூட்டிப் போக தாயும் கூட இல்லை. பல வருடங்கள் பழகிய நண்பனை போல கடலை நோக்கி அவைகள் ஓடுகின்றன. இயற்கையில் தான் எத்தனை விதமான ஆச்சர்யங்கள்! வாழ்நாளில் எல்லோரும் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று!


தமிழ் கூறும் நல்லுலகிற்கு வணக்கம். இவ்வளவு சீக்கிரம் ஒரு பதிவுடுவேன் என்று நினைக்கவில்லை. அதுவும் மிகச் சரியான நேரத்தில், மிக அருமையான பதிவு இது. தேர்தலைப் பற்றிய ஒரு ஆவணக் குறும்படம்! தேர்தல் களை கட்டியிருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு குறும்படத்தில் வேலை செய்தது மனதுக்கு இதமாய் இருந்தது. அதுவும் டுபுக்காருடன் வேலை பார்ப்பது என்றால் கசக்குமா? முதலில் படத்தைப் பாருங்கள், பிறகு சொல்கிறேன்.


நான் இதுக்கு மேல ஒன்னும் சொல்ல வேண்டியதில்லை. படமே எல்லாம் சொல்லிடுச்சு. என்ன உடனே ஓட்டு போடணும்னு கை அறிக்குதா? இதை தானே எதிர் பார்த்தோம். படம் ரொம்ப நல்ல வந்துருக்கே, நீ வேலை பாத்தேன்னு சொல்றே, எப்படின்னு தானே முழிக்கிறீங்க? சொல்லிடறேன்! நான் இந்தப் படத்துல அப்படி ஒன்னும் பிரதானமா வேலை பாக்கலை! [அதானே கேட்டேன்!] ராமருக்கு அணில் உதவின மாதிரின்னு வச்சுக்கலாம். படம் எல்லாம் முடிஞ்சு டைட்டில் கார்ட்ல என் பேரை பாத்தீங்களா? அதுக்கப்புறம் தான் என் வேலையே வருது! மை வச்ச கை ஒன்னு வருதே? பாத்தீங்களா? என்ன பாக்கவே இல்லையா? ஹலோ, அது தாங்க நான் போட்ட படம்! 

அதாவது, டுபுக்கார் அவரை உன்னால் முடியும் தம்பி கமல்ன்னு அடிக்கடி சொல்லிக்கிறாரே, ஏன் இவருக்கு இந்த விளம்பரம்னு நெனைசுருக்கேன், அவர் கூட வேலை பாக்கும் போது தான் அது தெரியுது! கமல் மாதிரி தான் வேலை வாங்குறாரு! அவ்வளவு டீடைலிங்! லண்டன்ல உக்காந்துட்டு அந்த விரல் மேல என்ன ஒரு கரை, அந்தக் கலர் இல்லையே இதுன்னாரு! உங்களுக்கு பார்வையே இல்லை; ஜோதின்னு சொன்னேன்! எப்படியோ, என்னையும் ஒரு ஆளாய் மதித்து, ஏதோ நான் ஸ்கூல் படிக்கும் போது டிராமால ஒரு ராணி வருவா, அதுக்கு சாவரி போட்ருக்கேன்னு சொன்னதை கேட்டுட்டு எனக்கு இவ்வளவு பெரிய ரோல் கொடுத்துருக்காரு!  எதோ என்னால முடிஞ்சதை செஞ்சுருக்கேன். உங்ககிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்குறேன்னு காதல் பட டைரக்டர் ரேஞ்சுக்கு சொல்லியிருக்கார், மைன்ட்லையும் வச்சுருக்காரு! பாப்போம்!

Jokes apart, படத்தை பார்த்து விட்டு, தங்களின் மேலான கருத்துக்களை சொன்னால் தன்னியர்களாவோம்! எனக்கு கமெண்ட் போடுகிறீர்களோ இல்லையோ, ஒழுங்காய் சென்று ஓட்டாவது போடுங்கள்! சொல்ல மறந்துட்டேன், இந்த குறும்படத்தை தங்களின் வலைதளத்தில், ட்விட்டரில், ஃ பேஸ்புக்கில் தாராளமாய் பகிர்ந்து கொள்ளலாம்!

ஹே!!! எல்லாம் ஜோரா கை தட்டுங்க. அண்ணன் ஒரு போஸ்ட் போட போறேன்!! ம்ம்ம்.... சென்ற வருடம் மார்ச் மாதம் பத்தொன்பதாம் தேதி நான் வலைப்பதிவு ஆரம்பித்து 6 வருடங்கள் ஆகி விட்டதென எழுதி என்னுடைய சின்னத்தையும் சற்று மாற்றி அமைத்திருந்தேன். இந்த வருடம் அதை ஒரு பதிவிட்டுக் கூட என்னால் கொண்டாட முடியவில்லை. போகிற போக்கை பார்த்தால் ஒவ்வொரு மார்ச் மாதம் பத்தொன்பதாம் தேதி மட்டும் தான் பதிவே போடுவேன் என்று நினைக்கிறேன். நான் பதிவிடாததால் உலகம் ஒன்றும் அழிந்து விடவில்லை. ஜப்பான் மற்றும் கொஞ்சம் அழிந்தது! காலையில் ஒரு செய்தி படித்தேன். முற்றிலும் சேதமடைந்த ஒரு சாலையை பத்து நாட்களில் சரி செய்து விட்டார்கள். அசகாய சூரர்களாய் இருக்கிறார்கள். இப்படியே போனால், ஒரு மாதம் கழித்து அப்படி ஒரு பேரழிவு அங்கு நடந்ததா என்றே நமக்கு சந்தேகம் வந்து விடும். நம் நாட்டைப் பற்றி முன்னே தெரிந்து தான் இயற்கை நமக்கு எரிமலைகளையும், பூகம்பங்களையும், சுனாமிகளையும் அதிகம் தரவில்லை என்று நினைக்கிறேன்.

சரி கதைக்கு வருவோம். இதைப் பற்றி இத்தனை நாட்கள் வரை எழுதாமல் இருப்பது எனக்கே ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. முயலாமல் இல்லை. என்ன தான் யோசித்தாலும் அத்தகைய ஒரு படைப்பாற்றலுக்கு, கலை நேர்த்திக்கு அணி சேர்க்கும் வகையில் என்னால் எழுத முடியவில்லை. அது தான் உண்மை! பீடிகை பலமாய் இருக்கிறதோ! சொல்லி விடுகிறேன். இந்தப் பதிவு உலகறிந்த ஒரு தொலைக்காட்சி நாடகத்தைப் பற்றியது. இதை நாடகம் என்று சொல்வது சரியாய் இருக்குமா என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் இதை சிட்காம் என்று கூறுகிறார்கள். 

இது அமெரிக்காவின் தொலைக்காட்சிகளில் வந்த ஒரு நெடுந் தொடர் பற்றியது.  நெடுந்தொடர் என்றால் உண்மையிலேயே நெடுந்த்த்த் தொடர். 1994 லிருந்து 2004 வரை பத்து ஆண்டுகள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி அமெரிக்காவின் அத்தனை பேரையும் கட்டி வைத்திருந்த ஒரு காமெடி தொடர்.  ஃ ப்ரெண்ட்ஸ்! ஆறு நண்பர்களை கொண்டு அவர்களின் வாழ்வினூடே ஒரு உணர்ச்சிப் பூர்வமான கதைக் களத்தை வைத்துக் கொண்டு பார்வையாளர்களுக்கு எந்த விதத்திலும் சலிப்பூட்டாமல் சிரிக்கச் சிரிக்கப் பத்து வருடங்கள் ஜமாய்த்திருக்கிறார்கள்! நண்பர்களின் பேச்சிலர் நாட்களில் உள்ள அத்தனை குதூகலங்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஒரு வழியாய் படித்து முடித்து, அதற்கு ஒரு கும்பிடு போட்டு, நமக்கு ஏற்ற ஒரு வத்தல் தொத்தல் வேலை சிக்கியதும் (முக்கியமாய் சொந்த ஊரிலிருந்து தொலைவில்) அந்த இருபத்தி மூன்றிலிருந்து இருபத்தி ஆறு, இருபத்தி ஏழு வயது வரை (மெல்ல வீட்டில் கல்யாண பேச்சு எடுக்கும் வரை) நண்பர்களுடன் அறை எடுத்துத் தங்கி, பெண்கள், சினிமா, கிரிக்கெட் என்று கழியும் பொன்னான பொழுதுகள் எத்தனை அருமையானவை. அப்படி ஒரு நண்பர்களைப் பற்றிய கதை தான் ஃபிரெண்ட்ஸ். இதை பார்த்தால் போதும், அமெரிக்காவின் கலாச்சாரம், நாகரிகம், வேலை, காதல், வாழ்வியல் தரம் அத்தனையும் உங்களுக்கு ஓரளவுக்கு புரிந்து போகும் என்று நினைக்கிறேன். அதுவும் வயிறு வலிக்க சிரித்துக் கொண்டே! 

சாம்பிளுக்கு சில

இது....மெகா சீரியல்! நம் நாட்டிலும் எடுக்கிறார்களே!! அடுத்தவன் குடியை கெடுக்க வேண்டுமா? பாருங்கள் மெகா சீரியல்ஸ்! திங்கள் முதல் வெள்ளி வரை....தினமும்!! நம் தமிழ் சீரியல்களை பார்த்து விட்டு நம்மால் நிம்மதியாய் தூங்க முடியுமா? க்ளோசப் என்ற பெயரில் கண் இமையில் உள்ள ஒரு முடியை மட்டும் ஐந்து நிமிடம் காட்டுகிறார்கள்! அதற்கு பேரிரைச்சலாக ஒரு பின்னணி இசை(!!??) சாரி, இம்சை வேறு!! நம் நாட்டின் மெகா சீரியல்களை கிண்டலடித்து விவேக் செய்த காமெடி பிரசித்தம்! இதோ பாருங்கள்...


பத்து வருடங்கள் ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவது சாதரணமான விஷயமில்லை. ஏதாவது டாக் ஷோ என்றாலும் பரவாயில்லை, சமாளித்து விடலாம்! இதில் வருவது போல் பல வித திருப்பங்களுடனும், கதைகளுடனும் கொஞ்சம் கூட "சுவாரஸ்யம் குறையாமல்" தொடர்ந்து பத்து வருடங்களை சமாளித்தது என்னை பொறுத்த வரை மிகப் பெரிய ஆச்சர்யம். இதில் ஆறு நண்பர்களில் ஒருவராக (ஃபீபி) நடித்த பெண் உண்மையில் கர்ப்பமடைந்து விட்டார். அதற்கேற்றார் போல் மிகச் சுவாரஸ்யமாக கதையை அமைத்தார்கள். இதனுடைய பிரபல்யத்தை பார்த்து விட்டு, ஒரு காட்சியாக இருந்தாலும் சரி என்று எத்தனையோ ஹாலிவுட் நடிகர்கள் நடிக்க வந்தனர்!  நானும் இதை பார்த்து விட்டு, இதை போல் நாமும் ஒரு எபிசோட் எழுதி பார்க்கலாமே என்று பார்க்கிறேன். ம்ஹும்! சீரியஸ் சீரியல் மொக்கைகள் பத்தாதென்று காமெடி என்ற பெயரில் மொக்கைகள் போட்டு தமிழ்நாட்டு ஜனங்களை நான் சைக்கோவாக மாற்ற விரும்பவில்லை.

ம்ம்ம்....என்னுடைய அனுபவத்தில் இது ஒரு மிகச் சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர்! என்ன கவலையில் இருந்தாலும் அந்த ஆறு பேரையும் அவர்களின் வாழ்க்கையையும் யோசித்தால் போதும், எனக்கு ஒரு ரிலீஃப் கிடைக்கும். நகைச்சுவை தான் எத்தனை சிறந்த மருந்து! அதே சமயம் இவர்கள் நேரத் திருடர்கள்! நேரம் காலம் போவது தெரியாமல் பார்க்கத் தொடங்கி விடுவீர்கள், ஜாக்கிரதை!! இதன் டிவிடிக்கள் ஒன்றிலிருந்து பத்து சீசன் வரை கிடைக்கிறது (சப் டைட்டிலுடன் தான்!) வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். நிதானமாய் பாருங்கள். you will really enjoy it!


பிறை நிலவை பார்க்கிறேன்
அதனுடைய தற்போதைய நிலை...
அமாவாசையை நோக்கியா, 
பௌர்ணமியை நோக்கியா?

விளம்பரப் படத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுதி வெகு நாட்கள் ஆகி விட்டது. யோசித்துப் பார்க்கலாமே என்று தோன்றியது. எனக்கு வள வளவென்று பேச்சும் பாட்டும் கூச்சலும் (ஓரம்போ விலகு விலகு ஓரம் போ வகையறாக்கள்) உள்ள விளம்பரங்கள் பிடிப்பதில்லை. (சினேகா, ஸ்ரேயா வரும் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் இதில் சேர்த்தியில்லை :)  சாமர்த்தியமாய், அழகாய் ஒரு கவிதையாய் கொண்டு வந்து விஷயத்தை பொட்டில் அடித்த மாதிரி சொல்ல வேண்டும் (வோடோஃபோன் வகையறாக்கள்). அப்படி ஒரு யோசனையை ஓட விட்டதில் சிக்கியது: ஒரே சிந்தனை தான்; ஆனால் இரு வேறு வகைகளில் அளிக்கிறேன். இது எதைப் பற்றிய விளம்பரம் என்று நான் வெளிப்படையாய் சொல்லப்போவதில்லை. நீங்களே யூகியுங்களேன். என் பின்னூட்டப் பெட்டி இருக்கவே இருக்கு! 

Presentation 1:

திரையில் கீழ் காணும் வாசகம் தோன்றி மறைகிறது.

Scene 1: These people are lucky...
Scene 2: சிறுவர் முதல் குமரர் வரை வெவ்வேறு மனித முகங்கள், அவர்களின் மகிழ்ச்சியான தருணங்கள், மெல்லிய புன்னகைகள், அட்டகாசமான சிரிப்புக்கள், ஆச்சர்யம் கலந்த பார்வைகள் என்று திரையில் தோன்றி மறைகிறது. [should be classic captures...]
Scene 3: And they are not! என்ற வாசகம் தோன்றி மறைகிறது.
Scene 4: பச்சிளம் குழந்தைகள், மிகவும் வயதான முதியவர்களின் சிந்தனை கலந்த அல்லது சோகம் பொதிந்த முகங்கள் தோன்றி மறைகிறது. 
Scene 5: விளம்பரப் பொருளின் படம். விளம்பர வாசகத்தோடு திரையில் தோன்றுகிறது.

Presentation 2:

Scene 1: ஒரு பெரிய பல் பொருள் அங்காடி! ஒரு குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் இடம். ஒரு தள்ளாத வயதானவர் அந்த இடத்தை நோக்கி அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டே வருகிறார். திடீரென அவரின் பார்வை அந்தப் பொருளில் நிலை குத்தி நிற்கிறது. 
Scene 2: அவரின் முகத்தில் கவலையின் ரேகை! டைட் க்ளோசப்பில். அவரின் கண்களில் கண்ணீர். அடக்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார். 
Scene 3: ஒரு தாய் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு அதே இடத்திற்கு வருகிறாள். அந்தக் குழந்தை அந்தப் பொருளைப் பார்த்ததும் அதை கை காட்டி கதறி அழுகிறது.
Scene 4: அந்த முதியவரும், குழந்தையும் பார்த்த இடம் திரையில் காட்டப்படுகிறது. விளம்பர வாசகம்!

என்ன புரிந்ததா? இப்போது சொல்லுங்கள், இந்த விளம்பரம் எதைப் பற்றியது என்று! விடையை கமண்டுங்கள்! தெரியவில்லை என்றால் அடுத்த பத்தியில் பதில் உள்ளது, வெள்ளை எழுத்துக்களில்...மௌசினால் செலக்ட் செய்து பாருங்கள்!

இது ஒரு பற்பசை விளம்பரம். கண்டுபிடித்தீர்களா? இதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்ததும் பற்களே காட்டாமல் பற்பசை விளம்பரம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை! இருந்தாலும் முடிந்தவரை முயற்ச்சித்திருக்கிறேன். கமண்டுங்கள்!